18 ஜூலை 2010

கணினியும் நீங்களும் - பகுதி 65

அன்புள்ள வாசகர்களே, கடந்த சில நாட்களாக சளியும் காய்ச்சலும் கலந்து ரொம்பவும் தொல்லை கொடுத்து விட்டன. அதனால் இந்த அங்கத்தைச் சரியாகக் கவனிக்கவில்லை. தொடர்ந்து சரி செய்யப் படும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.) 31.07.2010

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 18.07.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்களை Archive 2009, 2010 எனும் பிரிவுகளில் படிக்கலாம்.)

குமாரி. தர்ம ஜெகவர்த்தினி, சிம்பாங் லீமா, கிள்ளான்
கே: வர வர இந்தக் கைப்பேசியால் பெரிய தொல்லைகள் வரும் போல இருக்கிறது. அதிக நேரம் கைப்பேசியைப் பயன் படுத்தினால் மூளைப் புற்று நோய் வரும் என்று சொல்கிறார்கள். உண்மையா?

ப:
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அதைப் போல அண்மைய கண்டுபிடிப்புகள் நமக்கு கவலையைக்  கொடுக்கின்றன. முதலாவது கண்டுபிடிப்பு. கைப்பேசியை வலது காது பக்கம் வைத்துப் பேசினால் மூளைப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இடது காது  பக்கம் வைத்துப் பேசினால் வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள்.

இரண்டாவது கண்டுபிடிப்பு. கைப்பேசியின் அழைப்பு மணி அடிக்கும் போது கைப்பேசியைக் காது பக்கம் கொண்டு போகக் கூடாது என்கிறார்கள். மூன்றாவது. நீங்கள் யாரையாவது அழைக்கும் போது கைப்பேசி இரண்டு வாட் சக்தியை வெளியிடுகிறது. அந்தக் கட்டத்திலும் கைப்பேசியைக் காது அருகே கொண்டு போகக்கூடாது என்கிறார்கள்.

இப்படி நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தொல்லையே வேண்டாம் என்று நினைத்தால் கைப்பேசியே வேண்டாம் என்கிற முடிவுக்கு வர வேண்டும். முடியுமா. முடியாது. அந்தக் காலத்தில் நரி முகத்தில் விழித்தார்கள். இந்தக் காலத்தில் இரண்டு கால் நரிகள் நிறைய இருப்பதால் நாலு கால் நரிக்கு எல்லாம் வேலை இல்லாமல் போய் விட்டது.

இன்றைய இளம் தலைமுறையினர் கைப்பேசியின் முகத்தில் விழிக்கிறார்கள். திருவள்ளுவர் இப்போது இருந்து இருந்தால் "தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே கைப்பேசி அற்ற வடு" என்று பாடி இருப்பார்.

இரா.பார்த்திபன், தாமான் செம்பாக்கா, பகாவ்
கே: ஆங்கிலத்தில் Pixel என்று சொல்வதைத் தமிழில் எப்படி அழைப்பது?

ப:
Pix என்றால் Picture. அடுத்து el என்றால் element. படங்களை இந்த 'பிக்சல்' குறி
கொண்டு தான் அவற்றின் அளவைச் சொல்கிறார்கள். இந்தத் துளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அடுக்கப் படும் போது ஒரு படம் கிடைக்கிறது. ஒரு சின்னப் படத்தில் பல ஆயிரம் ஆயிரம் படத் துளிகள் இருக்கும். Pixel என்பதைச் சிலர் தமிழில் படத் தனிமம் என்கிறார்கள். இது சரியான மொழிப் பெயர்ப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாமே.


அற்புதசாமி பாஸ்கர், பாண்டான் இண்டா, கோலாலம்பூர்
கே: நடிகை அசின் நடித்தப் படங்களைத் தமிழ் நாட்டில் வெளியீடு செய்யக் கூடாது என்று தடை செய்து இருக்கிறார்கள். அவருக்குச் சாதகமாக ஒரு தரப்பினர் இணையத்தில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். நடிகர் சங்கம் செய்தது சரி என்று ஒரு தரப்பினர் போராட்டம் செய்கின்றனர். இணையத்தில் நடைபெற்று வரும் இந்த பனிப் போரில் உங்கள் நிலைப் பாடு என்ன?

ப:
அசின் என்பவர் ஒரு நடிகை. இருந்தாலும் நான் அவரை ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்க்கிறேன். மற்றவர் கண்களுக்கு அவர் தப்பு செய்ததாகப் படலாம். ஆனால் என் கண்களுக்கு அவர் தப்பு செய்ததாகப் பட வில்லை. ஏன் என்று கேட்கிறீர்களா.

இந்தியாவில் உள்ள நடிகர் நடிகையர் யாரும் இலங்கைக்குப் போகக் கூடாது என்று தென் இந்திய நடிகர்கள் சங்கம் தடை போட்டு இருந்தது. அப்படி மீறிப் போனால் அவர்கள் நடித்த படங்கள் தமிழ் நாட்டில் தடை செய்யப்படும் என்றும் சொல்லி இருந்தது. சரி.

அசின் இலங்கைக்குப் போய் இருக்கிறார். ஓர் இந்திப் படப் பிடிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். நடிப்பு என்பது அவருடைய வயிற்றுப் பிழைப்பு. இதுதான் அவர் செய்த பாவம். சரி. இலங்கையில் சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, இன்னும் என்ன என்ன டிவி எல்லாமோ ஒளிபரப்பு செய்கிறார்களே. அதற்கு போய்த் தடை விதிக்க வேண்டியது தானே. இன்னும் ஒன்று. மக்கள் தொலைக்காட்சிக்கு மட்டும் இலங்கையில் தடை விதித்து இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் இருக்கும் நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் இலங்கையில் போய் பிசினஸ் செய்து கொண்டு இருக்கின்றன. அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டியது தானே. அதை விடுங்கள். ஈழத்தில் ஆயிரக் கணக்கானோர் சாகடிக்கப் படும் போது தமிழ் நாட்டுத் தலைவர்கள் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்களே. அவர்களைப் போய் கண்டிக்க வேண்டியது தானே.

அசின் போன்ற இளிச்சவாயர் கிடைத்தால் போதும். அவரைச் சகட்டு மேனிக்கு துவைத்து எடுப்பது. சல்லடை போடுவது. அப்புறம் நொந்து நூலாகிப் போனதைத் தைத்துச் சாயம் பூசுவது. இது என்ன அய்யா வேலை. அசின் என்கிறவர் ஒரு சாதாரண பெண். அவரை இட்லர், இடி அமின் ரேஞ்சுக்கு நினைப்பது தப்பு. உலக மகா மெகா குற்றவாளியாகப் பட்டம் கட்டுவதும் தப்பு. ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து என் தனிப்பட்டக் கருத்தைச் சொன்னேன். ஆக, இதில் எந்த ஒரு நிலைப்பாடும் இல்லை. மன்னிக்கவும். எந்த ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. வயிற்று எரிச்சலைக் கொட்டித் தீர்த்து விட்டேன். சந்தோஷமாக இருக்கிறது.


ரிஷா பாசிர், தாசிக் குளுகோர், பினாங்கு
கே: கணினி நிறுவனங்களில் எந்த நிறுவனத்தின் சின்னம் அழகாகவும் அர்த்தம் உள்ளதாகவும் இருக்கிறது. உங்கள் தேர்வு என்ன?
ப:
உங்கள் கேள்வி சற்று வித்தியாசமாக இருக்கிறது. உலகக் கணினி நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்களே தத்தம் பெயரைப் போடாமல் சின்னத்தைப் பயன் படுத்துகின்றன. அவற்றில் மிக மிக அழகானது ஆப்பிள் கணினி நிறுவனத்தின் சின்னம் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப் 1970 ஆம் ஆண்டுகளில் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பழத் தோட்டங்களில் பழங்கள் பறிக்கும் வேலை செய்து கொண்டு இருந்தார். அந்தச் சமயத்திலேயே கணினி மீது ஆர்வம் ஏற்பட்டது. ஒரு நிறுவனத்தை உருவாக்கினார்.

என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது 'ஆப்பிள்' என்று வைக்கலாமே என்று தோன்றியது. அதையே வைத்தும் விட்டார். உலகில் முதன் முதலில் வெளிவந்த கணினிகளில் ஆப்பிள் கணினியும் ஒன்று.

1970 ஆம் ஆண்டு. 20 ரிங்கிட் சம்பளத்தில் ஒரு தோட்டத்தில் பழங்கள் பறிக்கும் வேலை செய்தார் ஓர் இளைஞர். இப்போது 2010ல் அந்த இளைஞரின் சொத்து மதிப்பு 200 கோடி ரிங்கிட்! கணினி உலகத்திற்கு வாருங்கள். கணினி தேவதை கண் சிமிட்டி மாய ஜாலம் காட்டுவாள்.


இரா.பெரியண்ணன், பூச்சோங்
கே: என்னுடைய கணினியில் You may be a victim of software counterfeiting எனும் எச்சரிக்கை வருகிறது. அதை எப்படி நீக்குவது?

ப:
நீங்கள் பயன் படுத்தும் விண்டோஸ் இயங்குதளம் போலியானதாக இருந்தால் அந்த மாதிரி எச்சரிக்கை வரும். விண்டோஸ் இயங்குதளம் என்றால் Windows Operating System. நீங்கள் இணையத்தில் இணைந்ததும் உங்களுடைய கணினி அமெரிக்காவில் உள்ள மைக்ராசாப்ட் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும்.  கணினியின் உண்மை கண்டு பிடிக்கப் பட்டதும் அந்த எச்சரிக்கை வரும்.

சில சமயங்களில், நீங்கள் உண்மையான அசலான விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன் படுத்தினாலும் இந்த அறிவிப்பு வரக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பிரச்னையைச் சமாளிக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.  

http://www.softpedia.com/progDownload/RemoveWGA-Download-42782.html எனும் இடத்திற்குப் போய் Remove WGA எனும் ஒரு சின்ன நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த நிரலியை மைக்ராசாப்ட் நிறுவனம் தான் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணினியில் இருந்து இயக்க  வேண்டும். பிறகு கணினியை அடைத்து விட்டு மறுபடியும் திறக்கவும். மீண்டும் திறக்கும் போது அந்த எச்சரிக்கை வராது. ஒரு பணிவான வேண்டுகோள்.

உங்களுடைய விண்டோஸ் இயங்குதளம் Pirated Copy எனும் கள்ளத் தனமானதாக இருந்தால் தயவு செய்து அசல் விண்டோஸ் இயங்குதளத்தை வாங்கிப் பயன் படுத்த முயற்சி செய்யுங்கள்.

புதிதாக கணினி வாங்கும் போது அசல் விண்டோஸ் இயங்குதளத்தைப் பதிக்கச் சொல்லுங்கள். Windows XP Professional விலை 320 ரிங்கிட்டிற்குள் இருக்கும். கடைக்காரர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா. ஒரே ஒர் இயங்குதளத்தைப் பல கணினிகளில் பதித்து விடுவார்கள். அதனால் கனினியின் விலையும் குறைவாக இருக்கும். அவர்களுக்கும் வியாபாரம் நடக்கும்.

அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. ஏன் என்றால் கணினி வாங்குபவர்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. விலை குறைவாக இருக்க வேண்டும். ஆனால், உலகத்திலேயே மிக நவீனமான கணினி வேண்டும் என்பார்கள். பாவம் கடைக்காரர்கள். அவர்கள்தான் என்ன செய்வார்கள்.

கள்ள மென்பொருள்களைப் பயன் படுத்த வேண்டாம். அதனால் பல பிரச்னைகள் வரும். இன்னும் ஒரு விஷயம். கள்ளத் தனமான விண்டோஸ் இயங்குதளத்தை அசல் இயங்குதளமாக மாற்றிக் கொடுக்க ஓர் எளிய முறை இருக்கிறது.

வசதி இல்லாதவர்களுக்கு வழங்கப் படும் ஓர் உதவி. ஒரு சின்ன சேவைக் கட்டணத்தைக் கட்டி அசல் இயங்குதளமாக மாற்றிக் கொள்ளுங்கள். இந்தச் சலுகை விண்டோஸ் எக்ஸ்.பி பயன் படுத்துபவர்களுக்கு மட்டும் தான். மென்பொருள் காப்புறுதிச் சட்டத்தின் கீழ் இந்தச் சேவை செய்யப் படுகின்றது. ஜூலை மாதம் 28 ஆம் தேதி வரை சலுகை உண்டு.

உதவி தேவைப் படுபவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். கைப்பேசியிலும் அழைக்கலாம். தயவு செய்து SMS குறும் செய்திகள் வழியாகக் கேள்விகள் கேட்க வேண்டாம். நிச்சயமாகப் பதில் கிடைக்காது. சேவைகள் மின்னஞ்சல் வழியாகத் தான் நடக்கும்.


காளியப்பன் ராமசாமி, பெங்காலான் இண்டா, ஈப்போ
கே: உலகச் சந்தையில் எந்த வகையான கைப்பேசிகள் அதிகமாக விறகப் படுகின்றன?

ப:
பட்டியல் வருகிறது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
1. நோக்கியா (பின்லாந்து)
2. மோட்டோரோலா (அமெரிக்கா)
3. சம்சுங் (தென் கொரியா)
4. žமன்ஸ் (ஜெர்மனி)
5. எல்ஜி (தென் கொரியா)
6. சோனி எரிக்ஸ்சன் (ஸ்வீடன்/ஜப்பான்)

குமரன் சுப்பிரமணியம்  manithan82@gmail.com

கே: கணினியின் முகப்புத் திரையில் காணப்படும் Recycle Bin சின்னத்தைத் தவறுதலாக அழித்து விட்டேன். மீண்டும் அதனைக் கொண்டு வர முயன்றால் Shortcut  எனும் குறுக்கு வழியை மட்டுமே செய்ய முடிகிறது. உதவி செய்யுங்கள்.

ப:
Recycle Bin என்பதற்கு தமிழில் மீளகம் எனும் சொல்லை உருவாக்கி இருக்கிறேன். மீள் + அகம் எனும் வேர்ச் சொற்களைக் கொண்டது. இந்தச் சொல் தமிழுக்குப் பொருந்தி வருமா என்பதைப் பற்றி கணினிப் பற்றாளர்கள் கருத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். சரி. உங்கள் பிரச்னைக்கு வருகிறேன். ஒரு முக்கியமான சின்னத்தை அழித்து விடும் அளவுக்கு அப்படி என்ன மறதி சார்.

இனிமேல் எந்தக் கோப்புகள், ஆவணங்கள், படங்களாக இருந்தாலும் சரி. அவற்றை அழிப்பதைப் பற்றி நினைத்த நேரத்திலேயே  செய்ய வேண்டாம். மூன்று விநாடிகள் பொறுத்து இருந்து அப்புறம் அழியுங்கள். அந்தச் நேரத்தில்  உங்கள் மனசு மாறலாம் இல்லையா. ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்.

இந்த மாதிரியான தவறுகள் நடந்து விட்டால் அவற்றைச் சரி செய்ய மைக்ராசாப்ட் நிறுவனம் தனி ஒரு நிரலியைத் தயாரித்து வைத்து இருக்கிறது. அதன் பெயர் Fix it for me. அதைப் பயன் படுத்தி அந்தச் சின்னத்தை முகப்புத் திரையில் வரவழைத்துக் கொள்ளலாம். நிரலி கிடைக்கும் இடம் http://support.microsoft.com/kb/810869 

இந்த மாதிரியான இணையத் தொடர்புகளை நம்முடைய http://ksmuthukrishnan.blogspot.com வலைப் பூவில் இருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை வாசகர்களுக்கும் சுலபமாக இருக்கும்.


ராஜன் ராஜேந்திரன், லங்காவித் தீவு
கே: கணினியில் நாம் வேலை செய்து கொண்டு இருக்கும் போது திடீரென்று கணினி நிலை குத்தி முடங்கிக் போய் விடுகிறது. ஏன் இவ்வாறு ஏற்படுகிறது?

ப:
இதை Blue Screen of Death என்று சொல்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. கணினிக்குள்ளே இருக்கும் சாதனங்களின் பிரச்னை. RAM எனும் தற்காலிக நினைவியின் பிரச்னை. வன் தட்டுப் பிரச்னை. வரைகலை அட்டைப் பிரச்னை. நச்சு அழிவிப் பிரச்னை. பிரிண்டர் எனும் அச்சு சாதனம் சரியாக வேலை செய்யாவிட்டால் ஏற்படும் பிரச்னை.

புதிதாகப் பதிப்பு செய்யப் பட்ட மென்பொருள் கொடுக்கும் பிரச்னை. கணினிக்குள் அதிகம் வெப்பம் உண்டாகி விட்டால் ஏற்படும் பிரச்னை. மின்கலப் பிரச்னை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த முறை கணினிக்குள்ளே இருக்கும் சாதனங்களின் பிரச்னையைப் பற்றி கொஞ்சம் விளக்குகிறேன்.

கணினிக்குள்ளே பல சாதனங்கள் ஒன்று சேர்ந்து செயல் படுகின்றன. சில சமயங்களில் இவற்றுக்குள் பிரச்னை ஏற்பட்டால் கணினி இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் தனக்கு என்று ஒரு வழியை எடுத்துக் கொண்டு அந்த வழியாக அதன் இயக்கத்தை மேற்கொள்ளும். இந்த மாதிரியாக கணினிக்குள் மொத்தம் 16 வழிகள் இருக்கும்.

இதில் ஏதாவது ஒரு வழியை இரண்டு சாதனங்கள் ஒரே சமயத்தில் எடுத்துக் கொண்டால் கணினி இயங்குவது நின்று போகும். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எப்படி? கணினியில் Start >> Settings >> Control Pannel >> System >> Device Manager எனும் இடத்திற்குப் போக வேண்டும்.

கணினியில் பிரச்னை கொடுக்கும் சாதனத்தின் பெயருக்கு முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி இருக்கும். Device Manager ல் Computer என்பதைச் சொடுக்கிப் பார்த்தால் அந்த 16 வழிகளுக்கான IRQ எண்கள் காட்டப்படும். அதில் ஒரே எண் இரண்டு இடங்களில் இருந்தால் பிரச்னை அங்குதான் இருக்கிறது என்று உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.

ஆக, பிரச்னைக்கு உரிய சாதனத்தை பதிப்பு நீக்கம் செய்யுங்கள். பதிப்பு நீக்கம் என்றால் Uninstall. பின்னர் மறுபடி பதிப்பு செய்யுங்கள். இப்படி செய்தால் வன்பொருள்களினால் ஏற்பட்ட பிரச்னை தீரும்.

12 ஜூலை 2010

கணினியும் நீங்களும் - பகுதி 64

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 11.07.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்களை Archive 2009, 2010 எனும் பிரிவுகளில் படிக்கலாம்.)

ஜீவா கலிய பெருமாள்   jeevaria@yahoo.com

கே: சில சமயங்களில் என்னுடைய Firefox அல்லது Internet Explorer உலவிகள் வேலை செய்யாமல் போய் விடுகின்றன. அவை இல்லாமல் இணையத்திற்குள் நுழைய விண்டோஸ் இயங்குதளத்தில் வேறு வழி இருக்கிறதா?

ப:
உடனடி உதவிக்கு Calculator எனும் கணக்கியைப் பயன் படுத்தலாம். என்ன இது. இணையத்திற்குள் நுழைய கால்குலேட்டரா. இது என்ன புதுக் கதையா இருக்குது என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. Start >> All Programs >> Accessories >> Calculator எனும் இடத்தில் அந்தக் கணக்கி கிடைக்கும். அதில் மேலே வலது பக்கம் இருக்கும் Help >> Help Topics என்பதைச் சொடுக்குங்கள்.

திரையின் ஆக மேலே ஒரு கேள்விக் குறி இருக்கும். அதை வலது சொடுக்கு செய்யுங்கள். Jump to URL... என்பதைச் சொடுக்கியதும் ஒரு வசனப் பெட்டி வரும். அதில் http://ksmuthukrishnan.blospot.com என்று தட்டச்சு செய்யுங்கள். அல்லது உங்களுப் பிடித்தமான வேறு ஓர் இணையப் பக்க முகவரியைத் தட்டச்சு செய்யலாம். 'பளிச்' என்று வலைப் பக்கம் வரும். இப்படியும் முடியுமா என்று  நீங்களே மலைத்துப் போவீர்கள்.  முயற்சி செய்து பாருங்கள்.

கவிச் சூரியா kavisuriyasarvu@gmail.com

கே: ஆங்கிலம்-தமிழ் அகராதி மிகவும் அவசரமாகத் தேவைப் படுகிறது. இணையத்தில் எங்கே கிடைக்கும்?

ப:
பல ஆங்கில-தமிழ் அகர வரிசைகள் இணையத்தில் இருக்கின்றன. ஆனால், நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த ஒன்று இருக்கிறது. தமிழ் நாட்டைச் சேர்ந்த பழனியப்பா சகோதரர்கள் உலகத் தமிழர்களுக்கு இலவசமாகக் கொடுத்து இருக்கிறார்கள். அதன் பெயர் 'பால்ஸ் தமிழ் இ-அகராதி.
http://mayuonline.com/eblog/2009/02/14/download-free-pals-tamil-e-dictionary/எனும் இடத்தில் கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்யுங்கள். பிரச்னை என்றால் எனக்கு அழையுங்கள். என்னுடைய வலைத் தளத்திற்குப் போனால் சிரமம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம்.


மேகநாதன் தனசாமி, கம்போங் கெப்பாயாங், பேராக்

கே: திருப்பதி கோயிலுக்கு போகலாம் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் எனக்கு அடுத்த வருஷம் பிப்ரவரி மாதம் கல்யாணம். மொட்டைப் போட்டு வந்தால் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று என்னவள் பிடிவாதம் பிடிக்கிறார். தயவு செய்து இணையத்தில் போய் திருப்பதியின் உன்னதமானச் சிறப்புகளைப் பார்த்துச் சொல்லுங்கள். என்னவள் மனதை மாற்றுங்கள். திருப்பதி ஆண்டவரின் திருப் பிரசாதம் உங்களை வந்து சேரும்.

ப:
நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் என்பது காலம் காலமாக கரை ஏறி வந்த காவியத் தத்துவம். சொல் பலம் சூடு பலம் என்று ஒன்றைச் சொல்வார்கள். அதில் சொல் என்பது தமிழ்ச் சொல். சூடு என்பது கன்னடச் சொல். இந்த இரண்டும் கலந்தது தான் திருப்பதி என்கிற திருவேங்கடச் சாமியாரின் சன்மார்க்கச் சொல். அவரை நினைத்துப் போங்கள். மொட்டை போடுங்கள். நல்ல படியாக வாருங்கள். எல்லாம் நல்ல படியாக நடக்கும்.

நீங்கள் மொட்டை போடுவது பத்தாவது மாதம். கல்யாணம் பிப்ரவரி மாதம். இடையே ஐந்து மாதங்கள். அந்த ஐந்து மாதத்தில் சகாரா பாலைவனமாக இருந்த உங்களின் தலைக் கவசம்  அமேசான் காடாக மாறி இருக்கும். முடிந்தால் அதில் அனாகோண்டா மனாகோண்டா வேட்டை கூட ஆடலாம்.

இணையத்தில் திருப்பதி சாமியாரைப் பற்றி தேடிப் போனேன். இலட்சக் கணக்கான தகவல்கள். அதைப் பார்த்த பிறகு நானும் மொட்டை போட்டுக் கொள்ளலாம் என்ற ஆசையும் வந்து விட்டது. பின் குறிப்பு: நீங்கள் சொல்கிற அதே அக்டோபர் மாதம் நானும் என்னவர்களும் பெங்களூர் போகிறோம். முடிந்தால் அங்கே சந்தித்துக் கொள்வோம்.


தரணி பாகன்,   dharani.pagan@gmail.com

கே: விண்டோஸ் விஸ்த்தாவிற்கும் விண்டோஸ் 7க்கும் உள்ள நிறை குறைகள் என்ன? ஏன் எல்லோரும் விண்டோஸ் விஸ்த்தா வேண்டாம் என்று விண்டோஸ் எக்ஸ்.பிக்கு போகிறார்கள். விண்டோஸ் 7 நன்றாக வேலை செய்ய வில்லையா? இந்த இரண்டில் எது உங்களுக்குப் பிடித்தது?

ப:
விண்டோஸ் விஸ்த்தா என்பது ஒரு நல்ல திட்டம். அதில் ஒரு சின்ன குளறுபடி நடந்து விட்டது. விஸ்த்தாவின் பழைய பெயர் லோங் ஹார்ன். Longhorn.

மைக்ராசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்த இந்தியர்கள் தான் விண்டோஸ் விஸ்த்தாவை உருவாக்கினார்கள். அதற்கு விஸ்த்தாரா  என்றும் பெயரும்  வைத்தார்கள். அந்தப் பெயர் நன்றாக இல்லை. விண்டோஸ் விஸ்த்தா என்று வைத்தால் நன்றாக இருக்கும் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். அவர்தான் ஜெனிபர் காதரின் கேட்ஸ். இவர் வேறு யாரும் இல்லை. பில் கேட்ஸ’டம் பாசமிகு மகள்.

மக்கள் குரலே மகேசன் குரல் என்பார்கள். ஆனால், பில் கேட்ஸ் அதை மகள் குரலே மகேசன் குரல் என்று மாற்றம் செய்து இருக்கிறார். எல்லாம் அந்த 'ரா' என்கிற ஒரே ஓர் எழுத்து பண்ணிய வேலை.

இந்தக் கட்டத்தில் ஏதோ கொஞ்சம் கெடுபிடி நடந்து இருக்கிறது. அதில் ஓர் ஆயிரம் பேர் இந்தியாவிற்குத் திரும்பி வந்து விட்டார்கள்.

அவர்களில் சிலர் இந்தியாவில் இருந்து கொண்டே கரையான் மாதிரி விஸ்த்தாவின் இயங்கு முறையைக் கடித்துக் கடித்துக் கரைத்தும் இருக்கிறார்கள். வேறு வழி இல்லாமல் அவசரம் அவசரமாக விண்டோஸ் 7ஐ உருவாக்கினார்கள். இது தான் நடந்தது. மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு 375 கோடி டாலர்கள் நட்டம். நம்ப காசிற்கு பத்து பில்லியன் ரிங்கிட். மைக்ராசப்ட் நிறுவனத்தில் வேலை செய்த இந்தியர்களிடம் இருந்து கசிந்த உண்மைகள்.

என்றைக்கும் இந்தியர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் பில் கேட்ஸ் அடிக்கடி இப்போது இந்தியாவிற்கு வருகிறார் போகிறார்.  சந்தனம் குங்குமம் எல்லாம் வைத்துக் கொள்கிறார்.

அடுத்து 2012 ஆண்டு வாக்கில் விண்டோஸ் 8 விற்பனைக்கு வருகிறது. விண்டோஸ்களில் எனக்குப் பிடித்தது விண்டோஸ் எக்ஸ்.பி. இதைத் தான் இன்னமும் பயன் படுத்தி வருகிறேன்.

திருவாளர் எஸ்.கே, தாப்பா, பேராக்

கே: ஒரு சில தினங்களுக்கு முன்னால் என் கணினியில் கோளாறு ஏற்பட்டு விட்டது. நான் அழைத்துப் பேசிக் கொண்டு இருக்கும் போது உங்களுடைய கைப்பேசியைத் திடீரென அடைத்து விட்டீர்கள். அப்புறம் நீங்கள் அழைத்து 'பேட்டரி' முடிந்து விட்டது என்று சொன்னீர்கள். ஆனால் பேட்டரி முடிந்து விட்டதாகச் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கைப்பேசியின் மாடலைச் சொல்லுங்கள். ஒரு பேட்டரி வாங்கி அனுப்பி வைக்கிறேன். சேவை செய்தால் சுத்தமாகச் செய்ய வேண்டும். சோமாங்கித் தனமாகச் செய்து பேர் வாங்கிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ப:
நன்றி. குறைகளைச் சுட்டிக் காட்டும் போது அவற்றை ஏற்றுக் கொள்கிற பக்குவம் நமக்கு வேண்டும். பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் கால் என்று நினைத்தால் ரொம்ப கஷ்டம்.

சில சமயங்களில் நம்முடைய நல்ல எண்ணங்கள் மற்றவர் பார்வையில் இருந்து மறைந்து நிற்கலாம். ஓட்டப் பந்தயத்தில் கால்கள் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் கடைசியில் கைகள் தான் பரிசுகளைப் போய் வாங்கிக் கொள்கின்றன.


ஜோசியர், ஸ்ரீ கோம்பாக், கோலாலம்பூர்

கே: என் கணினியில் விண்டோஸ் 7 Starter Edition எனும் விண்டோஸ் இயங்கு தளத்தைப் பயன் படுத்துகிறேன். அதில் ஸ்ரீ ஜாதகா நிரலியைப் பதிப்பு செய்தேன். Runtime Error என்று அறிவிப்பு வருகிறது. பதிப்பு செய்ய முடியவில்லை. அதே போல கோயம்புத்தூரில் இருந்து RM3120 ரிங்கிட் கொடுத்து வாங்கி வந்த ஜாதக நிரலியும் வேலை செய்யவில்லை. முன்பு விண்டோஸ் XP யைப் பயன் படுத்திய போது எல்லாமே நன்றாக வேலை செய்தது. ஏன் இந்தப் பிரச்னை. எப்படி தீர்ப்பது?

ப:
ஒன்றை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன் படுத்துவது விண்டோஸ் 7 Starter பதிப்பு. இதில் விண்டோஸ் இயங்குவதற்கான மிக மிக அடிப்படையான வசதிகள் மட்டுமே இருக்கும். விலை RM100 ரிங்கிட்டுக்குள் இருக்கும். இதைத் தான் பெரும் பாலான கடைகளில் பதித்துக் கொடுப்பார்கள். ஏன் என்றால் அதன் விலை மிகவும் குறைவு.

இதற்கு அடுத்து Windows 7 Basic. அடுத்து Windows 7 Home. அடுத்து Windows 7 Professional. அதற்கு அடுத்து Enterprise. அடுத்து Corporate. அப்புறம் கடைசியாக Ultimate. கடைசியாகச் சொன்னேனே விண்டோஸ் 'அல்டிமேட்'. இதன் விலை RM1500 வரை இருக்கும். அதாவது ஒரு மேசைக் கணினியின் விலையை விட இந்த மென்பொருளின் விலை அதிகம். சரியா.

ஆக, அந்த Starter பதிப்பை வைத்துக் கொண்டு அதில் நீங்கள் பல முக்கியமான நிரலிகளைப் பதிப்பு செய்ய முடியாது. கிண்டர்கார்டன் படிக்கும் பாலகனிடம் போய் யுனிவர்சிட்டி புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொன்னால் எப்படி. அந்த மாதிரிதான் சாதாரண Starter Editionல் பெரிய பெரிய நிரலிகளைப் பதிக்க முடியாது. குறைந்த பட்சம்  Windows 7 Homeக்குப் போய் விடுவது நல்லது.

ஆக, இந்த Starter Edition வைத்துக் கொண்டு நானும் விண்டோஸ் 7 பாவிக்கிறேன் என்று சொல்லலாம். அதனால் உங்களுக்குத் தான் பின்னாளில் கஷ்டம். உங்களின் கணினியும் மீது குறையை வைத்துக் கொண்டு நிரலிகளின் மீது பழியைப் போடாதீர்கள். இந்தப் பிரச்னையைத் தீர்க்க என்ன வழி முறைகள் என்பதைப் பிறகு சொல்கிறேன்.


மாதவன் முத்துக்குட்டி madhu57m@gmail.com

கே: இணையத்தின் வேகத்தை அதிகரிக்க ஏதாவது வழி முறை இருக்கிறதா? என் கணினி மெதுவாக வேலை செய்கிறது?

ப:
கணினியை ஒரு கோயிலாக நினைத்து நடத்த வேண்டும். அதுவும் நம் மேல் ஆசைப் பட்டு நமக்கு தீர்த்தம் திருப் பிரசாதம் எல்லாம் கொடுக்கும். நல்ல படியாகப் பார்த்துக் கொள்ளும். அதில் குப்பைக் கூளங்களைப் போட்டு நிரப்பி வைத்தால் கூவத்தின் நறுமண அலைகள்தான் முட்டி மோதும். கணினியின் உள்ளே இருக்கும் Duplicate Dll கோப்புகளை நீக்கி விட்டால் நம்முடைய கணினி வேகமாக வேலை செய்யும். PC Cleaner எனும் ஒரு நிரலி இருக்கிறது. அதை உங்கள் கணினியில் பதித்துக் கொள்ளுங்கள்.
http://www.softpedia.com/progDownload/Pc-Cleaner-Download-2024.html

04 ஜூலை 2010

கணினியும் நீங்களும் - பகுதி 63

(இந்தக் கேள்வி பதில் அங்கம் இன்று 04.07.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்களை Archive 2009, 2010 எனும் பிரிவுகளில் படிக்கலாம்.)
சிவா முத்து, பாசிர் கூடாங், ஜோகூர் பாரு

கே: Defragmentation எனும் கோப்புகளைச் சீரமைப்பு செய்வதால் விரலி எனும் பென்-டிரைவிற்கு என்ன நன்மை?
ப:
விரலி என்றால் Pen Drive, Flash Drive, Thumb Drive போன்ற சாதனங்களைக் குறிக்கும் ஒரு பெயர்ச் சொல். முன்பு எல்லாம் தகவல்களை ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினிக்கு எடுத்துச் செல்ல சிடி எனும் குறுந்தட்டைப் பயன் படுத்தினார்கள். இதற்கு ஒர் எளிய முறையை இண்டெல் நிறுவனம் உருவாக்கியது.

அந்த முறைக்குப் பெயர்தான் USB முறை. தமிழில் 'உலகளாவிய நேரியல் பாட்டை' என்பார்கள். உலகத்தில் உள்ள எல்லா கணினிகளிலும் இந்த முறை பயன் படுத்தப் படுகிறது. Defragmentation என்றால் துண்டு துண்டாகிப் போன கோப்புகளின் தகவல்களை ஒன்று சேர்க்கும் முறை. இதனால் விரலிகள் வேகமாக வேலை செய்யும்.

அப்துல் சலிகான் முகமது கனி masaligan@gmail.com

கே: தென்னிந்திய நடிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு காற்பந்து குழுவை அமைத்து உலகக் காற்பந்து போட்டிக்கு போய் இருக்கிறார்களாம். இணையத்தில் செய்திகள் வந்துள்ளன. உண்மையா? தயவு செய்து கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.

ப:
அந்தச் செய்தி உண்மை அல்ல. அது ஒரு விளையாட்டுத் தனமான செய்தி. அந்தக் குழுவின் படமும் வந்து இருக்கிறது. பார்த்து ரசியுங்கள். வரைகலை நிரலியைப் பயன்படுத்தி அழகாக ஒரு நிழல் படம் தயாரித்து இருக்கிறார்கள். வேடிக்கை என்ன என்றால் அந்தக் குழுவில் குசும்புத் தலைவர் வடிவேலும் இருக்கிறார். இணையத்தில் கோடிக் கோடியான நக்கல் நையாண்டி படங்கள் உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று.

திருஞான சம்பந்தம், தாமான் மேரு, கிள்ளான்

கே: தெய்வச் சிலைகளைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்கிறோம். ஆனால், அப்படிப் பட்ட புனிதமான சிலைகளைச் செதுக்கும் போது கால்களில் மிதித்துக் கொண்டு செய்கிறார்கள். செதுக்குகிறார்கள். அந்த மாதிரியான படங்களை இணையத்தில் பார்த்ததும் ஆடிப் போய் விட்டேன். உங்களுக்கும் ஒரு படத்தை அனுப்பி வைக்கிறேன். நீங்கள் அந்தப் படத்தைப் பிரசுரிக்க வேண்டும். பிரசுரித்தால் இமய மலையில் இருந்து ஒருவர் உங்கள் வீட்டைத் தேடி வருவார்.

ப:
தவறுகளைக் கண்ணாடி போட்டு பார்த்தால் மனிதம் மனிதமாக இருக்காது. சிலை செதுக்கும் போது அது காலில் படலாம். கையில் படலாம். புனிதத்தின் வழியாக  வியர்வைத் துளிகளும் சிந்தலாம்.

மனிதாபிமான உணர்வுடன் பாருங்கள். நவீன வசதிகள் இல்லாத குடிசைத் தொழில். அவர்கள் அதை நம்பி வாழ்கிறார்கள். சிலை செய்து முடித்ததும் அதற்கு செய்ய வேண்டிய சடங்கு சாங்கியக் கழிப்புகளைச் செய்து விட்டு தான் விற்பனைக்கு வெளியே அனுப்புகிறார்கள்.

மக்கள் பணத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு மகேசன் மறுபடியும் வருவான்  தருவான் என்று மார்தட்டிச் சொல்கிறார்களே. அந்த மாதிரியான வேலைகளையா இவர்கள் செய்கிறார்கள். ஏன் அய்யா இவர்கள் யார் வயிற்றிலும் அடிக்கவில்லையே. சொல்லுங்கள்.

மனைவி மக்கள் என்று பல ஆயிரம் உயிர்களுக்குச் சரஸ்வதியே தாரை வார்க்கிறார். அவளே வந்து அவர்களுக்கு அருள் பாலிக்கிறார். நீங்கள் யார் அந்தப் படத்தைப் போடச் சொல்லிக் கட்சி கட்டிக் கொண்டு நிற்பது.  ஒருவருடைய பிழைப்பைக் கெடுத்து, புண்ணியம் தேட கங்கைக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை சாமி. செய்யும் தொழிலுக்கு மரியாதை செய்யுங்கள். அதுவே சரஸ்வதிக்கும் பிடிக்கும். எமக்கும் பிடிக்கும்.

ஓசில் குமார், திரியாங், பகாங் 
கே: என்னுடைய நண்பர்கள் என்னுடைய அனுமதி இல்லாமல் அவர்களுடைய Pen Drive விரலியை என்னுடைய கனியில் பயன் படுத்துகிறார்கள். அதனால் பல தடவை என் கணினியை அழிவிகள் தாக்கி விட்டன. அவர்களிடம் சொன்னால் ஏற்க மறுக்கிறார்கள். கணினியைப் பயன் படுத்த வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை. என்ன செய்வது?

ப:
பொதுவாக நம்முடைய கணினிகளில் நச்சு அழிவு நிரலிப் பதிக்கப் பட்டிருந்தாலும் Panda USB எனும் விரலிகள் மூலமாக அழிவிகள் கணினிக்குள் நுழைந்து விடும். உங்கள் விஷயத்தில் உங்களுடைய நண்பர்களின் விரலி மூலமாக அழிவிகள் நுழைகின்றன. அதைத் தடுக்க ஒரு வழி இருக்கிறது. Panda USB Vaccine எனும் விரலி தடுப்பு ஊசி இருக்கிறது. அது ஒரு நிரலி தான். அதாவது ஒரு Program.

இதை உங்கள் கணினியில் பதிப்பிக்க வேண்டும். அதில் இரண்டு சேவைகள் கிடைக்கும். ஒன்று கணினியை மொத்தமாகப் பாதுகாத்தல். மற்றொன்று விரலிகளைப் பாதுகாத்தல். நீங்கள் இரண்டாவது சேவையைத் தொடக்க வேண்டும். அவ்வளவுதான். யாராவது உங்கள் கணினிக்குள் நச்சு அழிவிகள் உள்ள விரலியைத் திணித்தால் இந்த Panda USB Vaccine உடனே தன் வேலையைச் செய்ய ஆரம்பித்து விடும். அந்த அழிவிகளைக் கொன்று விட்டுத் தான் மறு வேலை. இது ஓர் இலவசமான நிரலி. கிடைக்கும் இடம்:
http://download.cnet.com/Panda-USB-Vaccine/3000-2239_4-10909938.html

இன்னும் ஒரு விஷயம். பத்திரிகையில் பிரசுரிக்கும் போது சில சமயங்களில் சில  ஆங்கில எழுத்துக் குறி தொடர்பான  பிழைகள் ஏற்பட்டு விடலாம். அதனால் http://ksmuthukrishnan.blogspot.com எனும் வலைத் தளத்தில் நிரலிகளின் நேரடி முகவரிகள் கிடைக்கும். அங்கே இருந்து அப்படியே தொடர்பு கொள்ள முடியும். மிகவும் சுலபமாக இருக்கும். பிழைகள் ஏற்படாது.

செல்வராஜ் குழந்தையன்  skolandayan@hotmail.com

கே: என்னுடைய நண்பர்கள் 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் படித்தார்கள். அவர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது. அவர்கள் அனைவரும் டாக்டர்கள். தயவு செய்து அவர்களுடன் தொடர்பு கொள்ள உதவி செய்யுங்கள்.

ப:
தாங்கள் கொடுத்த தகவலின் படி 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் 2448 டாக்டர்கள் பட்டம் வாங்கி இருக்கிறார்கள். இவர்களில் யார் உங்கள் நண்பர் என்று எப்படி கண்டு பிடிப்பது. அவர்களின் பெயரையும் நீங்கள் சொல்லவில்லை. இடத்தையும் சொல்லவில்லை. இந்த மாதிரி கேள்வி கேட்டால் எப்படி அய்யா உதவி செய்ய முடியும். நீங்களே சொல்லுங்கள்.


தினேஷ்  darshandinesh@yahoo.com
கே: நம்முடைய கணினியில் C Drive, D Drive, E Drive, F Drive என்று பிரிவுகள் உள்ளன. இதில் ஏதாவது ஒரு பிரிவை மற்றவர்கள் பார்க்க முடியாமல் அப்படியே மறைக்க முடியுமா? D Driveல் என்னுடைய தனிப்பட்ட படங்கள் உள்ளன. என்னுடைய கணினியில் மற்றவர்களுக்கு அப்படிப் பட்ட ஒரு பகுதி இருப்பது தெரியவே கூடாது. செய்ய முடியுமா?

ப:
நீங்கள் கேட்பதைப் பார்த்தால் ஏதோ ஒரு நாட்டின் இரகசியங்களை மறைத்து வைத்துக் கொண்டு வித்தை எதையும் காட்டலாம் என்று திட்டம் ஏதும் போட்டு இருக்கிறீர்களோ தெரியவில்லை. யார் கண்டது. நம்ப முடியாது. உங்களுடைய கணினியின் இரகசியங்களை எப்படிதான் மறைத்தாலும் அதைக் கண்டுபிடிக்க பல நவீனமான நிரலிகள் உள்ளன. சரி. இப்போதைக்கு உங்கள் பிரச்னைக்கு வருவோம்.

Drive என்றால் Partition. ஒரு வன் தட்டை இரண்டுக்கும் மேற்பட்ட பகுதிகளாகப் பிரிப்பதைத் தான் 'பார்ட்டிசன்' என்கிறோம். தமிழில் இதை 'பகுதியம்' என்றும் அழைக்கலாம். இந்தப் பகுதியங்களில் ஒன்றை யாருக்கும் தெரியாமல் மறைத்து விட முடியும். எடுத்துக் காட்டாக Drive D என்று ஒரு பகுதியம் கணினியில் இருக்கும். ஆனால் பார்த்தால் கண்ணுக்குத் தெரியாது. இருக்கும் ஆனால் இருக்காது. என்று சொல்வார்களே. அந்த மாதிரி தான். சரி. எப்படி செய்வது.

http://www.blogsdna.com/191/how-to-hide-hard-disk-drive-of-your-computer.htm எனும் இணையப் பக்கத்திற்குப் போய் Download என்பதைச் சொடுக்குங்கள். ஒரு சின்ன நிரலி கிடைக்கும். அதை வைத்து எந்தப் பகுதியத்தை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து விடலாம். வேண்டும் என்கிற நேரத்தில் திருப்பியும் கொண்டு வந்து விடலாம். சோதனை செய்த பிறகு ஒழுங்காக வேலை செய்தால் என்னை அழைத்துப் பேசுங்கள். பிரச்னை என்றால் கூப்பிட வேண்டாம். என்ன யோசிக்கிறீர்கள். பிரச்னை வரும் ஆனால் வராது.

சுபாஷ் சந்திரன் prschandran@gmail.com

கே: சார், குழந்தைகளுக்கு இலவசமான விளையாட்டுகள் கிடைக்கும் ஓர் இடத்தைச் சொல்லுங்கள். என் வீட்டில் கேம்ஸ், கேம்ஸ் என்று சொல்லி என் தம்பிகள் அடம் பிடிக்கிறார்கள்? தொல்லை தாங்க முடியவில்லை.

ப:
சின்னப் பிள்ளைகளுக்கு விளையாட்டுகள் என்றால் உயிர். கனியில் விளையாட்டுகளைக் கொடுத்து அவர்களுக்கு கணினியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தலாம். தப்பு இல்லை. அதற்கு என்று 24 ம நேரமும் பைத்தியம் பிடித்து அலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டுப் பைத்தியங்கள் பல வகைகளில் உள்ளன.

ஒரு வீட்டில் பிள்ளைகளுக்காக அவர்கள் வீட்டுக் கணினியில் விளையாட்டுகளைப் பதித்துக் கொடுத்து விட்டு வந்தேன். கடைசியில் பார்த்தால் அந்த விளையாட்டுகளில் உயிரைக் கொடுத்து  விளையாடிக் கொண்டு இருப்பது பிள்ளைகள் இல்லை. அந்தப் பிள்ளைகளின் அப்பாதான். பொதுவாக விளையாட்டுப் பைத்தியம் புலிக் குட்டிகளுக்குத் தான் வரும் என்பார்கள். ஆனால் இங்கே புலிக்கே தலைகால் தெரியாமல் வந்து விட்டது.

என்ன செய்வது. புருஷன் பெண்ஜாதிக்குள் சண்டை வரும் அளவுக்கு நிலைமை மோசமாகிப் போனது. அப்புறம் ஒரு வகையாகச் சமாளித்து ஆகி விட்டது. ஆக, அப்பா அம்மாக்களே, கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்களேன். பிள்ளைகள் உங்கள் மீது பட்டாசு கொளுத்திப் போட்டு தீபாவளி கொண்டாடாமல் இருந்தால் சரி. http://www.bestoldgames.net/eng/ எனும் இடத்தில் நிறைய விளையாட்டுகள் இலவசமாகக் கிடைக்கின்றன. போய்ப் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.


மன்சயா அரசு mansya91@yahoo.com

கே: உலகத்திலேயே மலேசியாவில் தான் மிக மலிவாகக் கணினிகள் கிடைப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். இது எந்த அளவுக்கு உண்மை?

ப:
கேட்கெட் ரிவியூ நிறுவனம் ஆய்வுகள் செய்து கண்டுபிடித்த உண்மை இது. ஆசியாவிலும் மலேசியா முதல் இடத்தில் வகிக்கிறது. அடுத்து சீனா, தைவான் வருகின்றன. கணினியின் விலை அதிகமாக உள்ள நாடுகள் ஹாங்காங், ஜப்பான். இந்தியாவில் கணினிகள் மலிவாகத் தயாரிக்கப் பட்டாலும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பெரும் அளவில் தயாரிக்கப் பட வில்லை.

மலேசியாவைக் காட்டிலும் தமிழ் நாட்டில் கணினிகளின் விலை சற்றுக் கூடுதலாகவே இருக்கின்றது. பொதுவான ஆய்வுக் கருத்து கள் தான் இங்கே சொல்லப் படுகின்றன. இந்த நிறுவனம் செய்த ஆய்வில் தமிழ் நாட்டில் கொடுக்கப் பட்ட இலவசத் தொலைக் காட்சிப் பெட்டிகள் பற்றியும் செய்திகள் வெளி வந்துள்ளன.

தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச டி.வி. பெட்டிகள் கேரளா திருவனந்தபுரம், பாறசாலை எனும் நகரங்களில் உள்ள கடைகளில் விற்கப் படுகின்றன. விலை 1800 ரூபாய். மலேசிய ரிங்கிட்டிற்கு RM125. தமிழக அரசு வழங்கும் இந்த இலவச டி.விக்களின் விலை 4000 ரூபாய். இவை பெரும்பாலும் மதுரை, நாகர் கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து போய் இருக்கின்றன. ஆமாம். டிவியைக் கொடுத்து விட்டார்கள். அதைப் பார்க்க அலை வரிசை தொடர்புகள் வேண்டாமா. அதற்கு மாதாமாதம் 150 ரூபாய் வேறு கட்ட வேண்டி வரும். அதனால் ஏழை விவசாயிகள் வழி இல்லாமல் விற்று விடுகிறார்கள்.

27 ஜூன் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 62

இன்று  04.07.2010 நண்பனில் வெளியாகின்ற கேள்வி பதில்களைக் காலை 10.30க்கு மேல் படிக்கலாம்.

(இந்தக் கேள்வி பதில் அங்கம்  27.06.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)

ஜெயக்குமார் கதிர்வேல், சிம்பாங் அம்பாட், தைப்பிங்

கே: நான் இப்போது Intel Pentium 3 வகையைச் சேர்ந்த கணினியைப் பயன் படுத்தி வருகிறேன். அதில் விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளம் இருக்கிறது. போன வாரம் விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் பதித்தேன். பதிக்க முடியவில்லை. Install செய்ய முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை. எப்படி பதிப்பது. உதவி செய்யுங்கள்.


ப:
மலேசியா சுதந்திரம் அடைந்த கொண்டாட்டத்தைப் பார்க்க மாட்டு வண்டியில் ஏறி மலாக்கா கடல் கரைக்குப் போய் இருக்கிறேன். 1957ல் நடந்த வரலாறு. அது ஒரு கனா காலம். இப்போது மாட்டு வண்டிகளைப் பார்க்க முடிவதில்லை. அரும் காட்சியகத்தில் கூட பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது. இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் அந்த மாதிரியாகக் காலம் மாறிப் போய் விட்டது.

அப்படி இருக்கும் போது நீங்கள் என்னடா என்றால் கறுப்பு வெள்ளை தொலைக் காட்சிப் பெட்டியை வைத்துக் கொண்டு அதில் கலர் கலரா படம் வர மாட்டேங்குதே என்கிறீர். நீங்கள் பயன்படுத்தும் இண்டல் பெந்தியம் 3 இருக்கிறதே இது 1996 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த இரண்டாம் தலைமுறைக் கணினி வகை.

அதற்குப் பிறகு இண்டல் பெந்தியம் 4, இண்டல் டுவல் கோர், இண்டல் டிரிபள் கோர் என்று நவீனமான நளினமான கணினி வகைகள் வந்து விட்டன. விலையும் ரொம்ப குறைவு. இதுவரை உங்கள் கணினி வேலை செய்கிறதே அதுவரைக்கும் அதற்கு முதலில் மாலை கட்டிப் போடுங்கள். விண்டோஸ் 7 இயங்குதளம் என்பது இப்போது உள்ள நவீனக் கணினிகளில் தான் வேலை செய்யும். புரிகிறதா?

உலகத்திலேயே மலேசியாவில்தான் கணினிகள் மிக மிக மலிவாவான விலையில் கிடைக்கின்றன. புரிந்து கொள்ளுங்கள். முன்னூறு நானூறு ரிங்கிட்டிற்கு மறுப் பயனீடு கணினிகள் கிடைக்கின்றன.

இயங்குதளம் என்றால் Operating System. கணினியை இயக்குகின்ற அடிப்படைச் செயல் முறை. விண்டோஸ் விஸ்த்தாவும் அப்படி தான். பழைய கணினிகளில் வேலை செய்யாது. காலத்திற்கு ஏற்றவாறு கணினியைத் தயாரித்துக் கொண்டு வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு நாமும் மாறிக் கொள்ள வேண்டும். என்ன இருந்தாலும் பழைய வண்டியை 'பார்முலா 1' கார் பந்தயத்திற்கு இழுத்துக் கொண்டு போக னைப்பது தப்பு இல்லையா.

நந்தக்குமார் அழகிரி, சுங்கை பெரானாங், மந்தின்

கே: இணையத்தில் உலா வரும் போது நடிகை சிம்ரனுக்கு தான் பேஸ்புக் இணையத் தளத்தில் அதிகமான விசிறிகள் இருப்பது தெரிய வருகிறது. வேறு எந்த நடிகைக்கும் அந்த மாதிரியான ஆதரவு இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. தப்பாகத் தவறாக நினைக்காமல் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

ப:
உத்தியோகம் புருஷ இலட்சணம் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த மாதிரியான ஆராய்ச்சிகளைச் செய்து உங்களுடைய உத்தியோகத்தை நல்ல படியாக பார்க்கிறீர்கள். சந்தோஷம். சிம்ரனுக்கு சிலை வடித்தாலும் சரி சிக்கன் குனியா கடித்தாலும் சரி கருத்துச் சொல்ல வேண்டியது அவருடைய கணவர்தான். ஆக, நாம் தப்பாகவும் நினைக்கவில்லை. தவறாகவும் நினைக்கவில்லை. நாளைய தலைமுறை நிமிர்ந்து பார்க்கிற மாதிரி கேள்வி கேளுங்கள். நன்றாக இருக்கும். ஏன் என்றால் இந்தக் கேள்வி பதில் இணையத்திலும் போகிறது. உலகில் உள்ள எல்லா தமிழர்களும் படிக்கிறார்கள்.



பால் மோகன்

கே: வணக்கம் சார், நான் கணினியைத் திறந்ததும் There are unused icons on your desktop எனும் அறிவிப்பு வந்து கொண்டே இருக்கிறது. எரிச்சல் உண்டு பண்ணும் இந்த அறிவிப்பை எப்படி  நிறுத்துவது?

ப:
கணினி எனும் சாதனம் கடமை தவறாமல் அதன் வேலையைச் செய்கிறது. சில சமயங்களில் இந்த மாதிரியான அறிவிப்புகள் எரிச்சலைக் கொடுக்கும். சிலர் சகித்துக் கொள்கிறார்கள். சிலரால் முடியாது. சரி. எப்படி அதை நிறுத்தி விடுவது. உங்கள் சுழலியை Desktop எனும் முகப்புத் திரையில் வைத்து வலது சொடுக்கு செய்யுங்கள். அடுத்து Properties என்பதைச் சொடுக்குங்கள்.

மேலே தெரியும் வரிசையில்  Desktop என்பதைச் சொடுக்குங்கள். அப்புறம் ஆகக் கீழே Customize Desktop என்று ஒரு பட்டை இருக்கும். அதைச் சொடுக்குங்கள். அங்கே Run Desktop Cleanup Wizard every 60 days என்ற அறிவிப்பு இருக்கும். அதன் தொடக்கத்தில் இருக்கும் 'சரி' எனும் குறியை அப்புறப் படுத்துங்கள். அப்புறம் Apply, OK பொத்தான்களைத் தட்டி வெளியே வாருங்கள். பிரச்னை தீர்ந்தது.


சரவணன் சாரா sarasarawanan55@yahoo.co.uk

கே: என்னுடைய மேசைக் கணினியின் RAM 128MB. மிகவும் மெதுவாக வேலை செய்கிறது. என்னுடைய தாய்ப் பலகை பெந்தியம் 3. நான் இன்னும் அதிக சக்தியுள்ள நினைவியைப் பொருத்த முடியுமா. எவ்வளவு சக்தி உள்ளதைப் போடலாம்?

ப:
RAM என்றால் தற்காலிக நினைவி. கணினியின் வேலைகளை அப்போதைக்கு அப்போது நினைவில் வைத்துக் கொள்ளும் ஒரு சின்ன சாதனம். நீள் சதுரத்தில் ஒரு பட்டை மாதிரி பச்சை நிறத்தில் இருக்கும். கணினியின் Hard Disk எனும் வன் தட்டில் தகவல்கள் நிரந்தரமாகச் சேமிப்பு செய்யப் படுகின்றன. அதற்கு முன்னால், இந்தத் தற்காலிக நினைவியில் தான் அனைத்து தகவல்களும் தற்காலிகமாகச் சேர்த்து வைக்கப் படுகின்றன. கணினியை அடைத்ததும் தற்காலிக நினைவியில் உள்ள தகவல்களும் அழிந்து போகும். சரி. உங்கள் கேள்விக்கு வருகிறேன். நீங்கள் பயன் படுத்துவது பெந்தியம் 3 வகையைச் சேர்ந்த கணினி வகை. இதற்கு முன் வந்த கேள்வியைப் பாருங்கள்.

பெந்தியம் 3 ன் வேகம் 800MHz ஐத் தாண்டி போகாது. சில சமயங்களில் 300MHz வரை கிடைக்கும். கணினியின் செயல் வேகம் மிகக் குறைவான நிலையில் இருக்கும் போது நீங்கள் எவ்வளவுதான் தற்காலிக நினைவியின் சக்தியைக் கூட்டினாலும் பலன் இல்லை. வேகம் அதிகரிக்காது. அடுத்து வரும் பதிலையும் படியுங்கள்.

பவா முனியாண்டி  bawanymuniandy@yahoo.com

கே: என் கணி
னியும் சில சமயம் என்னிடம் பூச்சாண்டி காட்டுகிறது. முக்கியமான கடிதம் தட்டச்சு செய்யும் போது திடீரென்று தானாகவே அடைத்துக் கொண்டு திரும்பவும் தானாகவே திறந்து கொள்கிறது. என்ன காரணமாக இருக்கக் கூடும்?

ப:
இதற்கு காரணம் கணினிக்குள் இருக்கும் காற்றாடி தான். காற்றாடி ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் இந்தப் பிரச்னை வரும். கணினிக்குள் வெப்பம் அதிகரித்து விட்டால் அதைச் சமமான லைக்கு கொண்டு வர கணினி தானாகவே அடைத்துக் கொண்டு மறுபடி திறக்கும். அந்த மாதிரி கணினியின் இயக்கத்தைச் செய்து வைத்து இருக்கிறார்கள். ஆக, காற்றாடியை மாற்றலாம். அல்லது கூடுதலாக இன்னும் ஒரு காற்றாடியைச் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு காற்றாடியின் விலை பத்து ரிங்கிட்.  

நாராயணன் வெங்கட சுப்பிரமயம்  naribala03@gmail.com

கே: சில தினங்களுக்கு முன்னால் You Tube பதிவிறக்கம் செய்ய எளிய முறை கேட்டிருந்தேன். மலேசிய வாசிகளுக்கு மட்டும்தான் பதிலா? எனக்கு ஜோசியத்திலும் ஆர்வம் இருக்கிறது. அது சம்பந்தமாகக் கேள்விகள் கேட்கலாமா?

ப:
வணக்கம் அய்யா வணக்கம். தமிழ் நாட்டில் இருந்து கேள்வி கேட்கிறீர்கள். நன்றி. தமிழ் நாட்டில் மலேசிய நண்பன் நாளிதழை வாங்கிப் படிக்க முடியவில்லை என்றாலும் இணையம் வழியாகப் படிக்கிறீர்கள். நீங்கள் கேட்கும் கேள்விகள் இணையத்திலும் பிரசுரம் ஆவதால் உலகம் முழுமையும் உள்ளவர்கள் படிக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து நான்கு ஐந்து  கடிதங்கள் வந்திருக்கின்றன. விரைவில் பதில் கிடைக்கும்.

You Tube ல் இருந்து படங்களைப் பதிவிறக்கம் செய்ய புதிய பதிவிறக்கி வந்து விட்டது. அதன் பெயர் YouTube Downloader 2.5.6 அதை http://youtubedownload.altervista.org/ எனும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதுவரை 37 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள்.

ஜோதிடம் தொடர்பாக உங்கள் முழுப்பெயர், பிறந்த இடம், தேதி, நேரம் ஆகியவற்றைத் தெரிவியுங்கள். சேவைக் கட்டணம் எப்படி? பரவாயில்லை. வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இலவசமாகச் செய்து விடுகிறோம். மலேசியத் தமிழர்களைப் பற்றி கொஞ்சம் பெருமையாகப் பேசுவார்கள் இல்லையா. எல்லாம் சரி. தமிழ் நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? அதைச் சொல்லவில்லையே.

மதன் ராஜ்  rajesmathanraj@yahoo.com

கே: இண்டல் பெந்தியம் 3ன் வேகத்தைக் கூட்டுவது எப்படி?

ப:
முதலில் கணினியைச் சுத்தப் படுத்துங்கள். சுத்தப் படுத்துதல் என்றால் கணினியைக் கழற்றிப் போட்டு குளிப்பாட்டுவது அல்ல. அப்படி எதையும் செய்து விடாதீர்கள். முதலுக்கே மோசமாகி விடும். உள்ளே உள்ள தேவை இல்லாத ஆவணக் கழிசல்களைத் துப்புரவு செய்வதைத் தான் சுத்தப் படுத்துதல் என்று சொன்னேன். http://www.ccleaner.com/ எனும் இடத்திற்குப் போய் CCleaner எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

கணினியில் பதிப்பு செய்து நிரலியை ஓட விடுங்கள். அடுத்து தேவை இல்லாத நிரலிகளை அகற்றி விடுங்கள். பெரிய பெரிய விளையாட்டுகள் இருந்தால்  எடுத்து விடுங்கள். இப்போது கணினி வேகமாக வேலை செய்யும்.
ஊர் பெயர் வெளியிடப் படவில்லை

கே: உங்களின் வழி காட்டுதலின் படி Blogger எனும் வலைப் பூ அமைத்து விட்டேன். ஆனால், முகப்பு பக்கம் மட்டுமே அமைக்க முடிந்தது. ஆனால், தலைப்புகள் கொடுத்து பக்க வாரியாக அமைப்பது எப்படி? சிரமம் பாராமல் வழிகாட்டவும்.

ப:
இதற்கு மேல் நாம் எப்படி உதவி செய்யலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள். இலையைப் போட்டு சாதம் போட்டு சாம்பாரும் ஊற்றி ஆகிவிட்டது. எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறீர்கள். உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா! அதற்குப் பதிலாக நானே வலைப்பூவைத் தயாரித்து உங்கள் பெயரைப் போட்டு விட்டால் பிரச்னையே இல்லாமல் போய் விடும். முயற்சி செய்யுங்கள் அய்யா முயற்சி செய்யுங்கள். காலா காலத்திற்கும் வெள்ளிக் கிண்ணத்தில் வெற்றிலை பாக்கு இடித்துத் தர முடியுமா.

20 ஜூன் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 61

(20.6.2010 ஞாயிற்றுக்கிழமை மலேசியா நண்பன் நாளிதழில் வெளியான கேள்வி பதில் அங்கம்)
கணினியும் நீங்களும் - பகுதி 61
ராஜ் சுதன்  
கே: Facebookல் ஒரு நச்சு அழிவி வேகமாகப் பரவி வருகிறதாம். அதை எப்படி தடுப்பது சார்?

ப:
Facebook என்பது ஒரு சமூகச் சேவைத் தளம். இணையத்தில் உலா வரும் கோடிக் கணக்கான பேர் அந்தச் சேவையில் கணக்கு வைத்து இருக்கிறார்கள். அதில் பல இலட்சம் பேர் Like எனும் நச்சு அழிவி Virus ஆல் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து வரும் வாசகங்களைப் படியுங்கள்.


'ஒரு பெண் உங்களுக்காக காத்து இருக்கிறாள்';
'ஒருவன் தன்னைத் தானே 8 வருடங்கள் படம் பிடித்துக் கொள்கிறான்';
'ஒரு மாணவி குட்டைப் பாவாடை அணிந்ததால் பள்ளியில் இருந்து நீக்கப் பட்டாள்';
'இந்தப் பெண் வாழைப் பழத்தைச் சாப்பிடும் விதமே அலாதியானது'


எனும் ஆசையைத் தூண்டும் அறிவிப்புச் செய்திகள் வரும்.

தயவு செய்து அவற்றைச் சொடுக்க வேண்டாம். Click Here to Continue என்பதைச் சொடுக்கினால் போதும். அவ்வளவுதான். நாசம் செய்யும் நச்சு அழிவிகளுக்கு வெண் சாமரம் வீசியது போல ஆகி விடும். கரும்புக் கொல்லையில் காட்டு மாடுகள் நுழைந்த மாதிரி உங்கள் கணக்கு நொறுங்கிப் போகும். அந்த மாதிரியான வாசகங்கள் வந்தால் ஒன்றும் செய்ய வேண்டாம். சும்மா விட்டு விடுங்கள். ஆபத்து வராது.

இரா.செல்வகணேஷ், லோபாக், சிரம்பான்

கே: பில் மெலிண்டா கேட்ஸ் அற நிறுவனம் கைப்பேசி நிறுவனங்களுக்கு 33 மில்லியன் ரிங்கிட்டை பரிசுகளாக வழங்க முன் வந்து இருக்கிறது. பரிசு விவரங்களைத் தெரிவியுங்கள். நானும் கலந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.

ப:
உலகக் கணினி வித்துவான் பில் கேட்ஸ். இவர் சம்பாதித்த கோடிக் கோடியான பணத்தில் ஒரு பகுதியை ஓர் அற நிறுவனத்திற்கு எழுதி வைத்தார். அந்த அற நிறுவனத்தின் பெயர் பில் மெலிண்டா கேட்ஸ் அற நிறுவனம். பல கோடி டாலர்கள் ஆப்ரிக்க நாடுகளில் ஏயிட்ஸ் நோயைக் கட்டுப் படுத்த வழங்கப் பட்டுள்ளன. இன்னும் பல வகைகளில் உதவிகள் செய்யப் பட்டும் உள்ளன.

சரி. உங்கள் விஷயத்திற்கு வருகிறேன். ஒரு சில மாதங்களுக்கு முன்னால் மத்திய அமெரிக்காவில் இருக்கும் ஹாயித்தி தீவை ஒரு பயங்கரமான நில நடுக்கம் உலுக்கியது. அதனால் பல்லாயிரம் உயிர்கள் பலியாயின. மக்களுக்கு சரியான வகையில் உதவிகள் போய்ச் சேரவில்லை. இதைக் கவனித்த பில் மெலிண்டா கேட்ஸ் அற நிறுவனம் அந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தது.

அங்குள்ள மக்கள் தங்களுடைய கைப்பேசிகளைப் பயன்படுத்தி பணத்தை அனுப்பவும் கிடைக்கவும் செய்ய ஒரு திட்டத்தை யாராவது உருவாக்க வேண்டும். அந்த மாதிரியான மென்பொருள் திட்டத்தை யார் முதலில் உருவாக்கிக் கொடுக்கிறார்களோ அவர்களுக்குச் சன்மானமாக 80 இலட்சம் ரிங்கிட் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இரண்டாவதாகச் செய்து கொடுப்பவருக்கு 50 இலட்சம். மூன்றாவதாக வருபவருக்கு 20 இலட்சம் கொடுக்கப் படும். சரியா.

சில உலக நிறுவனங்கள் தீவிரம் காட்டி உள்ளன. செய்து முடிக்க சில மாதங்கள் பிடிக்கும் என்கிறார்கள். இருந்தாலும் நீங்கள் தனி மனிதராகப் பங்கு கொள்ள ஆசைப் படுகிறீர்கள். வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக ஹாயித்தி தீவிற்குப் போய் ஆக வேண்டும்.

இல்லை என்றால் இந்தத் திட்டத்தில் இடம் பிடிப்பது கஷ்டம். இப்போதைக்கு அந்த நாட்டில் விமான வசதிகள் எதுவும் இல்லை. கப்பல் வசதிகளும் இல்லை. ஒன்று செய்யலாம். அந்தத் தீவிற்கு வேண்டும் என்றால் நீச்சல் அடித்துப் போகலாம். உங்கள் வசதி எப்படி?

கா.மஞ்சரி, சாலாக் செலாத்தான், கோலாலம்பூர்
கே: குங்குமப் பொட்டு அளவுக்கு கைக்கணினி வந்து விட்டதாமே. அதனால் சென்னை விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டுப் பெண்கள்  பெரிய பெரிய குங்குமப் பொட்டுகளை வைத்து இருந்தால் சந்தேகப் படுகிறார்களாம். இந்தியாவில் உள்ள நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள். என்ன சார் கதை?

ப:
கைக்கணினி என்றால் PDA. அதாவது Portable Digital Assistant. அதே போல I Phone என்றால் Internet Phone. இணையத்துடன் தொடர்பு கொள்ளும் கைப்பேசி. இதற்கு இணையக் கைப்பேசி என்று பெயர்.

குங்குமப் பொட்டு அளவுக்கு கைக்கணினி அல்லது இணையக் கணினி இன்னும் வரவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் வந்து விடலாம்.

பெரிய பெரிய பொட்டுகளை வைத்துக் கொண்டு வரும் பெண்களைச் சந்தேகப் படும் அளவிற்கு நிலைமை இன்னும் மோசம் ஆகவில்லை.

குங்குமப் பொட்டின் தடிப்பு ரொம்பவும் மொத்தமாக இருந்தால் விமான நிலைய அதிகாரிகளுக்குச் சந்தேகம் வருவது இயல்பது தான்.

அதில் கொஞ்சம் கஞ்சா அல்லது கொஞ்சம் போதைப் பொருள் மறைக்கப் பட்டு இருக்கலாம் இல்லையா. அது எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு வகையான சந்தேகம் தான். பத்து காசு பொட்டாக இருந்தால் பரவாயில்லை. அதற்காக ஐம்பது காசு பொட்டை ஒட்டிக் கொண்டு போனால் எப்படி ஐயா? நீங்களே சொல்லுங்கள்.

சென்னை விமான நிலைய அதிகாரிகள், அவர்களுடைய வேலைகளை அவர்கள் பாட்டிற்குச் செய்கிறார்கள்.அவர்களை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும். ஒன்று உங்களுக்குத் தெரியுமா. உலகத்திலேயே மிகவும் கெட்டிக்கார போலீஸ்காரர்கள் தமிழ் நாட்டில்தான் இருக்கிறார்கள். அதே போல அவர்களுக்குத் தண்ணி காட்டும் படு மோசமான தாதாக்களும் அங்கே தான் இருக்கிறார்கள். இதை நாம் மறந்து விடக் கூடாது.

இன்னும் ஒரு விஷயம். ரகசியக் காமிராக்கள் குங்குமப் பொட்டு அளவிற்கு வந்து விட்டன. அந்த மாதிரியான காமிராக்கள் மேலை நாடுகளில் சர்வ சாதாரணம். மலேசியாவிலும் கிடைக்கிறது. அதன் விலை RM1620. இந்தக் காமிராக்கள் கம்பித் தொடர்புகள் எதுவும் இல்லாமல் இயங்கும் கம்பியில்லா காமிராக்கள். காமிராவை நெற்றியில் பொட்டு மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

நீங்கள் பார்ப்பதைக் காமிராவும் பார்க்கும். பார்த்ததைப் படம் பிடித்துக் கொள்ளும். அல்லது வீடியோ ஒளி அலையாகவும் மாற்றிக் கொள்ளும். இந்தக் காமிரா கடுகு அளவுள்ள ஒரு மின்கலத்தால் இயங்குகிறது. பிடித்தப் படங்களை உங்களுடைய கைப்பையில் இருக்கும் சேமிப்புத் தட்டுக்கு அனுப்பி விடும்.

தவிர நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உங்கள் வீட்டிற்கும் அனுப்பிவிடும். இன்னும் கொஞ்ச நாட்களில் குங்குமப் பொட்டு ரகசியக் காமிராக்கள் எல்லா வீடுகளுக்கும் வந்துவிடலாம். அதனால் அதிகமான பிரச்னைகள் வரலாம். கணினித் தொழில் நுட்பத்தால் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது.


குலேபகாவலி கல்யாணம், தஞ்சோங் சிப்பாட், சிலாங்கூர்
கே: UPS என்பதற்கும் AVR என்பதற்கும் என்ன என்ன வேறுபாடுகள்?
ப:
உங்கள் பெயர் சற்று வித்தியாசமாக இருக்கிறது. பழைய ஞாபகங்களை நினைவு படுத்துகிறது. சரி. UPS என்றால் Uninterrupted Power Supply. இதைத் 'தடையற்ற மின்சார வழங்கி' என்பார்கள். விலை RM150 க்குள் இருக்கும். இதை வாங்கி உங்கள் கணினியுடன் பொருத்திக் கொள்ள வேண்டும்.

வீட்டுக்கு வரும் மின்சாரம் திடீரென்று நின்று போனால் இந்தச் சாதனம் உடனே உயிர் பெற்று உங்கள் கணினிக்கும் உயிர் கொடுக்கும். கணினியில் செய்து கொண்டு இருந்த வேலைகள் அழிந்து போகாது. பாதுகாப்பாக இருக்கும். சரி.

AVR என்றால் Automatic Voltage Regulator. இந்தச் சாதனம் கணினிக்கு எவ்வளவு மின்சாரத்தைக் கொடுக்கலாம் என்பதை நிர்ணயம் செய்யும். விலை RM68 லிருந்து RM90 வரை இருக்கும்.