19 அக்டோபர் 2014

ஔவை சண்முகி

சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரித்து வாழ்ந்திடாதே என்று எல்லோரையும் சிரிக்க வைத்தார். இன்றைக்கு அந்த எல்லோரையும் அழ வைத்து விட்டுப் போய் விட்டார். உற்றார் உறவினர்கள் சொந்த பந்தங்கள் என்று அவர்களுடன் சேர்ந்து உலகமே அழுது கொண்டு இருக்கிறது. ஓர் அற்புதமான கலைஞரை உலகம் இழந்து விட்டது. 



மனத்தின் அழுத்தங்கள் ஓர் எல்லைக்குள் அடங்கிப் போக வேண்டும். தாண்டிப் போனால் மன உலைச்சல்கள் விஸ்வரூபம் எடுக்கும். மனிதனை மரணப் படுக்கையில் சாய்த்துவிடும். இதற்கு அமெரிக்க ஔவை சண்முகி நல்ல ஒரு சான்று. கோலிவூட்டிற்கு கமல்ஹாசன் ஓர் ஔவை சண்முகி என்றால் ஹாலிவூட்டிற்கு ரொபின் வில்லியம்ஸ் ஓர் ஔவை சண்முகி. 

சுத்த பத்தமான வெள்ளந்தி

மன அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அந்தக் கலைஞன் தற்கொலை செய்து கொண்டான் என்பது ஒரு வதந்தியாக இருந்துவிட்டுப் போகட்டும். இல்லை என்றால் அதை நம்மாலும் தாங்கிக் கொள்ள முடியாது.


அதிகம் பேசாமலேயே அசட்டுத் தனமான உடல் அசைவுகளினால், உலக மக்களைக் கட்டிப் போட்டவர். நவரச நாயகன் கமல்ஹாசனின் மானசீக குருவாக வலம் வந்தவர். மன்மதலீலைகளை வாசிக்கத் தெரியாத சுத்த பத்தமான வெள்ளந்தியாக வாழ்ந்தவர். 

கலை நகர்வுக்கு புதிய வடிவம்

மிஸ்டர் பீன்ஸ் நிகழ்ச்சி தெரியும் தானே. அதற்கு ஆரத்தி எடுத்து ஆலாபனை செய்தவர் இந்த ரொபின் வில்லியம்ஸ் தான். எதார்த்தமான உடல் கோணங்கித் தனத்தினால் மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்த முடியும் எனும் ஒரு கலை நகர்வுக்கு புதிய வடிவம் கொடுத்த அந்த மனிதரை நினைத்துப் பார்ப்போம். சார்லி சாப்ளின், ரோவன் அட்கின்சன் (மிஸ்டர் பீன்) வரிசையில் ரொபின் வில்லியம்ஸுக்கு இரண்டாம் இடம் கொடுக்கலாம்.


அவருக்கு அதிகமானப் புகழ். அதிகமானச் செல்வாக்கு. இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்தன. துணைக்கு மன உலைச்சலைச் சேர்த்துக் கொண்டன. அடுத்து அவரை மது போதைக்கு அடிமையாக்கின. இப்போது அந்த மனிதரைப் பலிக்கடாவாகவும் ஆக்கி விட்டன. ஒரு நல்ல நடிகரை உலகம் இழந்து விட்டது.

புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகர்

மனிதச் சாமான்ய வாழ்க்கையில் பணம், பெயர், புகழ், செல்வாக்கு போன்றவற்றினால் மன நிம்மதி, மன அமைதி, மன மகிழ்ச்சி, மன நிறைவுகளைப் பெற முடியாது என்பதற்கு ரொபின் வில்லியம்ஸ் நல்ல ஓர் எடுத்துக் காட்டு. 


ரொபின் வில்லியம்ஸ் என்பவர் புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகர். அகடாமி விருதுகளுக்கு மூன்று முறை முன் மொழியப் பட்டவர். ஆனாலும், Good Will Hunting எனும் படத்திற்கு அகடாமி விருது கிடைத்தது. அகடாமி விருது என்பது இந்தியாவின் திரைப்பட தேசிய விருதிற்குச் சமமானதாகும். இரண்டு முறை எமி விருதுகள், இரண்டு முறை அமெரிக்கத் திரைப்பட விருதுகள், நான்கு முறை கோல்டன் குளோப் விருதுகள், ஐந்து முறை கிராமி விருதுகள் பெற்றவர்.

கணவர் எனக்கு ஒரு நல்ல தோழர்

அவருடைய இறப்புச் செய்தியைக் கேட்டு உலகமே அதிர்ந்து போனது. நேற்று வரை சிரித்துப் பேசிக் கொண்டு நல்லா தானே இருந்தார். திடீரென்று என்ன ஆனது. இத்தனைக்கும் பெரிய வயது இல்லை. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்கலாம். உலக மக்களை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு மகிழ்ச்சிப் படுத்தி இருக்கலாம். அவருடைய மனைவி சூசன் என்ன சொல்கிறார் தெரியுமா. 


என்னுடைய கணவர் எனக்கு ஒரு நல்ல தோழராகவே இருந்தார். வாழ்ந்தார். யாரும் அழக்கூடாது என்று எப்போதும் சொல்வார். அமெரிக்கப் போர் வீரர்கள் ஈராக்கில் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் போது, அவர் அங்கே போனார். ஆடிப் பாடி நகைச்சுவை வழங்கி எல்லாரையும் சிரிக்க வைத்தார். சண்டை வேண்டாம் சமாதானமாகப் போவோம் என்று சொன்னவர் இப்போது அழ வைத்துவிட்டுப் போய் விட்டார் என்று சொல்கிறார்.


1993-ஆம் ஆண்டு மிஸஸ் டவுட்பையர் (Mrs. Doubtfire) எனும்  படத்தில் ஆண் பெண் இரட்டை வேடங்களில் நடித்து உலகத்தையே அசத்திக் காட்டியபர் இந்த ரொபின் வில்லியம்ஸ். 25 மில்லியன் பட்ஜெட் படம். ஆனால், 441 மில்லியன் வசூல் செய்து ‘பாக்ஸ் ஆபிஸ்’ சாதனை படைத்தது. இந்தப் படத்தைத் தழுவி, 1996-ஆம் ஆண்டு, தமிழில் ஔவை சண்முகி படம் எடுக்கப் பட்டது. தமிழ் மக்களிடையே பரிச்சயம் ஆனது. கமல்ஹாசனின் நவரசங்களுக்கு முத்தாய்ப்பு வைத்தது.

கமல்ஹாசன் இரங்கல் செய்தி 

தமிழகத்தைப் பொறுத்த வரையில் ரொபின் வில்லியம்ஸை அதிகமாய்த் தெரிந்து வைத்து இருந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன்.  இறப்புச் செய்தியைக் கேட்டு துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறார். கமல்ஹாசன் தன்னுடைய இரங்கல் செய்தியில் இப்படிச் சொல்கிறார். 

’தொடர்ந்தால் போல வேடிக்கையான முகபாவத்தை வைத்து இருப்பது மன அழுத்தத்தைத் தரும். அந்த வகையில் ரொபின் வில்லியம்ஸ் இயற்கையாகக் கண்ணீர் சிந்தி நடிப்பவர். அவரது படங்களில் அதைத் தெளிவாகக் காண முடியும். ஆணின் அழுகைக்கு ஒரு கண்ணியமான அர்த்தத்தைத் தந்தவர் ரொபின் வில்லியம்ஸ். அவரது திறமைக்காகவே நான் அவரைப் பெரிதும் விரும்புகின்றேன். 

கமலஹாசன் கவலை

ஆனால் அவரது மரணம் தற்கொலை என்பது உறுதியானால், அந்தச் செயலை வெறுக்கிறேன். திறமை வாய்ந்த ஒரு நடிகரான அவரிடம் இருந்து, இப்படிப்பட்ட ஒரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை என்று கமலஹாசன் கவலையுடன் கூறினார். 

ரொபின் வில்லியம்ஸ்க்கு எல்லாம் இருந்தன. ஆனால், மன நிம்மதியும் மன அமைதியும் மட்டும் கிடைக்கவே இல்லை. மாற்றுவழியாக மது போதைக்குப் பாதை மாறினார். ஒட்டு மொத்தமாக அவற்றுக்கு அடிமையாகியும் போனார். கடைசியில் என்ன ஆனது. தன் உயிரையே அடமானம் வைக்க வேண்டி வந்தது. 

அதிகமான போதைப் பொருட்கள்

இரண்டு முறை மதுப் பழக்கத்தில் இருந்து வெளியாகி புனரமைப்பு மையங்களில் புதிய வாழ்க்கை தேடி இருக்கிறார். பல ஆண்டுகள் அந்தத் தறுதலைகளின் பக்கம் தலை வைக்காமல் பயணித்தும் இருக்கிறார். இருந்தாலும், சில சமயங்களில் தொட்டுக் கொள்ள ஊறுகாய் மாதிரி இருந்தது கடைசியில் கள்ளிக் காயாக மாறிப் போனது.

அவர் அதிகமான போதைப் பொருளைப் பயன்படுத்தித் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று வதந்தி நிலவுகிறது. அதிகமாக மதுவையும் போதைப் பொருட்களையும் பயன்படுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்று இன்னொரு வதந்தியும் நிலவுகிறது. 

அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்பது மூன்றாவது வதந்தி. எது எப்படியோ அவர் இறந்து விட்டார். இப்போது நம்மிடம் இல்லை, மன உலைச்சலின் காரணமாக மது மயக்கத்திற்கு அடிமையாகிப் போனது என்பது என்னவோ உண்மை.  

மனைவியினால் பிரச்சினை தொடங்கியது

ஔவை சண்முகி படத்தில் கமல்ஹாசன் எப்படி நடித்து இருந்தாரோ, அதைவிட மிஸஸ் டவுட்பையர் படத்தில் ரொபின் வில்லியம்ஸ் சிறப்பாகவே நடித்து இருந்தார். அந்தப் படத்தை நானும் பார்த்து இருக்கிறேன். அதனால்தான், ரசிகர்களால் ரொபின் வில்லியம்ஸின் இறப்பை அவ்வளவு எளிதாகக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.

இப்படி உலகத்து மக்கள் எல்லோரையும் சிரித்து மகிழ்வித்த இவருக்கு வீட்டிலே தான் பிரச்சினை ஆரம்பமானது. அவருடைய மனைவியினால் தான் பிரச்சினை தொடங்கியது. மனைவின் பெயர் வாலரி வாலார்டி. 1978-இல் திருமணம். அப்போது அவருக்கு வயது 27. 

மணவாழ்க்கையில் பல சிக்கலகள்

குடும்பம் நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. வாலரி வாலார்டி தன்னைவிட வயது குறைந்த ஒருவருடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த ரொபின் வில்லியம்ஸ் குடிக்க ஆரம்பித்தார். அதனால் பலப் பல சிக்கல்கள். கடைசியில் பத்தாண்டுகள் கழித்து விவாகரத்து செய்து கொண்டார்கள். 

அடுத்து மார்ஷா கார்சே என்பவரை ரொபின் வில்லியம்ஸ் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவின் காலத்தில் தான், ஆங்கில ஔவை சண்முகி (மிஸஸ் டவுட்பையர்) படத்தில் நடித்துப் புகழ் பெற்றார். 19 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் திருமணமும் விவாகரத்தில் போய் முடிந்தது. 

மூன்று ஆண்டுகள் கழித்து சூசன் சினேய்டர் எனும் பெண்னைத் திருமணம் செய்து கொண்டார். இங்கேயும் பிரச்சினைதான். இருந்தாலும் வாழ்க்கையை அமைதியாக ஓட்டிக் கொண்டு வந்தார். ஏற்கனவே வாழ்ந்த மனைவிகள் ஜீவனாம்சம் கோரி வழக்கு மேல் வழக்கு போட்டு, அவரை ரொம்பவும் அலைகழித்து விட்டார்கள். 

மகள் புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகை

மன உலைச்சல்களில் இருந்து அவரால் மீள முடியவில்லை. மறுபடியும் குடிக்க ஆரம்பித்தார். அப்புறம் போதைப் பொருட்களுடன் சகவாசம் ஏற்பட்டது. கடைசியில், இரண்டு நாட்களுக்கு முன்னர் குடி, போதைப் பொருட்களால் தன் வாழ்க்கையையும் முடித்துக் கொண்டார். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது.

இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு மகன்கள். ஒரு மகள். பெயர் செல்டா வில்லியம்ஸ். இவரும் புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகை என்பதைச் சொல்லி விடுகிறேன். இதுவரை 15 படங்களில் நடித்து இருக்கிறார். செல்டா தன் தந்தையுடன் சேர்ந்து ’ஹவுஸ் ஆப் டி’ எனும் படத்தில் நடித்து இருக்கிறார். 

தவிர, தந்தையும் மகளும் சில பாடல்களைப் பாடி தொகுப்பாக வெளியிட்டு இருக்கின்றனர். எமி விருதும் கிடைத்து இருக்கிறது. செல்டா வில்லியம்ஸ் 2007-ஆம் ஆண்டு அமெரிக்க நடிகைகளில் அழகான நடிகையாகத் தேர்வு செய்யப் பட்டவர். தன் தந்தையாரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தவர். தந்தையாரின் மறைவு இவரை மிகவும் பாதித்துவிட்டது. ஒரு மாதத்திற்குத் தன் படப் பிடிப்புகளை நிறுத்தி வைத்து இருப்பதாகக் கேள்வி.

தனிமை வாழ்க்கை

ரொபின் வில்லியம்ஸ், 1951 ஜூலை மாதம் 21-ஆம் தேதி சிக்காகோவில் பிறந்தவர். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பெரிய வீடு. தனிமையிலேயே வாழ்ந்து இருக்கிறார். நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை. சின்னச் சின்ன பொம்மை போர் வீரர்கள் தான் நண்பர்கள். அவர்கள்தான் அவருக்குத் துணை. அம்மாவிடம் அடிக்கடி நகைச்சுவைகளை அள்ளி வீசி அட்டகாசம் செய்வார்.

வில்லியம்ஸின் தந்தையார் எப்போதும் வீட்டில் இருப்பது இல்லை. அப்படியே வீட்டில் இருந்தால் ரொபின் வில்லியம்ஸின் அடிவயிறு கலங்கும். அம்மாவும் வேலைச் செய்தார். அதனால் பெரும்பாலும் வேலைக்காரிகளின் பராமரிப்பிலேயே வாழ்ந்தார். அவர் வளர்க்கப்பட முறைதான் அவரிடம் ஒரு புறக்கணிப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டதாக ரொபின் வில்லியம்ஸ் சொல்கிறார். அந்த உணர்வை ‘லவ் மி சிண்ட்ரோம்’  (Love Me Syndrome) என்று சொல்லி வந்தார்.

1978-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். படிப்படியாக முன்னேறி அமெரிக்காவின் ஔவை சண்முகி எனும் அவதாரத்தையும் எடுத்து விட்டார். எல்லாவற்றையும் பார்த்துவிட்ட அவர், தனக்குத் தானே தண்டனையை விதித்துக் கொண்டது தான் வேதனையான விஷயம். ஓடி ஆடி சிரிக்க வைத்த ஒரு சிரிப்பு ராஜாவை மனுக்குலம் இழந்து விட்டது.

கணினியும் சுட்டிகளும்

கடந்த ஒரு வருடமாக ’சுட்டி மயில்’ மாத இதழில் சுட்டிகளின் கணினி கேள்விகளுக்கு பதில் அளிக்கப் படுகிறது. அக்டோபர்  2014 மாத இதழில் வெளியான கேள்வி பதில்கள். 

Preview

சுட்டி மயில்

மரியா சேமந்தா, ஆண்டு 6, தாப்பா தமிழ்ப்பள்ளி, பேராக்
கே: கணினியின் கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
ப: கணினியில் தேவை இல்லாத கோப்புகளை Delete என்பதைத் தட்டி அழித்து விடுகிறோம். அப்படி அழிக்கப் பட்ட கோப்புகள் Recycle Bin எனும் மீள்சுழல் தொட்டியில் சேர்ந்து விடுகின்றன. பின்னர் அங்கேயும் சென்று Empty Recycle Bin என்பதைச் சொடுக்கிச் சுத்தமாகக் காலி செய்து விடுகிறோம். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பிரச்சினை அதோடு முடிந்தது. அப்படித் தான் எல்லோரும் நினைக்கிறோம்.
ஆனால், திறமை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் அழிக்கப் பட்ட அந்த  கோப்புகளை மீட்டு எடுத்து விடுவார்கள். அது தெரியுமா உங்களுக்கு. அப்படி மீட்டு எடுப்பதற்கு சில சிறப்பு நிரலிகள் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னால் ஒருவர் என்னிடம் வந்தார். இந்தியாவில் பிடித்த படங்களை தன் மகள் தெரியாமல் அழித்து விட்டதாகச் சொல்லிக் கண் கலங்கினார். அந்தப் படங்கள் ஒரு வருடத்திற்கு முன் கணினியில் இருந்து சுத்தமாக அழிக்கப்பட்டு விட்டன.
மறுபடியும் சொல்கிறேன். அந்தப் படங்கள் ஒரு வருடத்திற்கு முன்னால் அழிக்கப்பட்டு விட்டன. இருந்தாலும் அழித்த அந்தப் படங்களை மீட்டு எடுத்துக் கொடுத்தேன். ஒரு பத்து நிமிட வேலை. அவ்வளவுதான். அதனால், ஓர் ஆவணத்தை அழித்து விட்டால், அதைக் கணினியில் இருந்து சுத்தமாக அழித்து விட்டதாக மட்டும் நினைத்து விட வேண்டாம். 
அழிக்கப் பட்ட தகவலின் தடயங்களைக் கணினியின் Hard Disk எனும் வன் தட்டகம் மறக்கவே மறக்காது. பத்திரமாக வைத்து இருக்கும். கணினித் திரையில் வெளியே இருந்து பார்த்தாலும் தெரியாது. மறைந்தே இருக்கும். ஏற்கனவே அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் புதிய தகவல்கள் வந்து அமரும் வரையில் அந்தப் பழைய தடயங்கள் அப்படியே இருக்கும்.
ஆக, கணினியின் கோப்புகளை நிரந்தரமாக அழிப்பதற்கு ஒரு நிரலி இருக்கிறது. அதன் பெயர் SDelete (Secure Delete). இந்த நிரலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. கீழ்காணும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கணினியின் தகவல்களை முற்றாக அழிப்பதற்கு இந்த நிரலியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிரலியைப் பன்படுத்தித் தகவல்களை அழித்தால், பின்னர் அவற்றை மீட்டு எடுக்கவே முடியாது.

சு. யோகீஷ், ஆண்டு 6, லாடாங் ஜெண்டராட்டா 1 தமிழ்ப்பள்ளி, பேராக் (சுட்டி உறுப்பினர்: 1242)
கே: கணினியின் மூலமாகக் கொசுக்களை விரட்டி அடிக்க முடியும் என்று என் நண்பர் சொல்கிறார். முடியுமா சார்? நம்ப முடியவில்லை.
ப: உண்மைதான். கொசுக்களை விரட்டி அடிக்கும் ஆற்றல் கணினிக்கு உள்ளது. ரொம்ப பேருக்கு இந்த விஷயம் தெரியாது. சத்தத்தை Hertz எனும் அளவைக் கொண்டு அளக்கிறார்கள். ஒரு சத்தத்தின் அளவு 20,000 Hertz-க்கும் மேலே இருந்தால்தான் மனிதர்களின் காதுகளால் கேட்க முடியும்.
கொசுக்களின் காதுகள் 16,000 இருந்து 20,000 ஹெர்ட்ஸ் ஒலி அலைகளைக் கேட்கும் ஆற்றலைப் பெற்றவை. கணினியின் ஒலிபரப்பிகள் 17,000 இருந்து 40,000 வரையிலான ஹெர்ட்ஸ் ஒலி அலைகளை ஒலிபரப்புச் செய்யக் கூடியவை
ஓர் ஒலி 20,000 ஹெர்ட்ஸ் ஒலி அலை வரிசைக்கும் கீழே போனால், மனிதர்களுக்கு அந்த ஒலி கேட்காது. ஆனால் , எறும்பு, கொசு, வண்ணத்துப் பூச்சி, கரப்பான் போன்ற சின்னச் சின்ன ஜீவராசிகளுக்கு மட்டும் கேட்கும். அந்தச் சத்தம் அவற்றின் செவிப் புலன்களுக்கு ஒரு வகையான வலியை உண்டாக்கும். அதனால் அவை அந்த மாதிரியான  சத்தம் வரும் இடங்களுக்குப் போவதைத் தவிர்க்கும். ஆக, அப்படிப் பட்ட ஓர் ஒலியை நம்ப வீட்டுக் கணினியால் உருவாக்க முடியும். அதைக் கேட்டதும் கொசுக்கள் ஓடி ஒளிந்து கொள்ளும்.
கொசுக்கள் இல்லையே என்பது அந்த நேரத்தில் மட்டும் நிம்மதியைக் கொடுக்கும். கணினியை நிறுத்தியதும் மறுபடி கொசுக்கள் வந்து விடும். சரியா. சாருன்யூ புன்யாராத்தாபுண்டுகு (Sarunyou Punyaratabundhu) எனும் ஒரு தாய்லாந்துகாரர் அந்தக் கொசு விரட்டியைக் கண்டுபிடித்து இருக்கிறார். பதிவிறக்கம் செய்து சோதனை செய்து பாருங்கள். நான் பயன் படுத்திப் பார்த்தேன். ஒரே ஒரு கொசு மட்டும் பதுங்கிப் பறந்து வந்து என்னைக் கடிக்காமல் போனது. தைரியம் இல்லாத கொசு. இணைய முகவரி: www.allmosquitos.com/soft/anti-mosquito.rar  
ர. திவ்யா ஸ்ரீ, ஆண்டு 6, செயிண்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி, பேராக் (சுட்டி உறுப்பினர்: 1787)
கே: சிலர் கணினியை அடிக்கடி திறப்பதும் அடைப்பதுமாக இருப்பார்கள். அது நல்லதா?
ப: கணினியை அடிக்கடி அடைத்து திறப்பது, அதாவது On and Off செய்து  கொண்டு இருப்பது தவறு. அந்த மாதிரி செய்தால் கணினி நீண்ட நாட்களுக்கு  நீடிக்காது. சீக்கிரமாகக் கெட்டுப் போக வாய்ப்புகள் உள்ளனகணினியை முடுக்கி விடும் போது, கணினிக்குள் ஒரு வகையான மின் அதிர்வு  ஏற்படும். ஒவ்வொரு முறையும் நீங்கள் கணினியை முடுக்கிவிடும் போது இந்த மின் அதிர்ச்சி உண்டாகும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள் - அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அத்தகைய மின் அதிர்வுகள் ஏற்படும். கணினியின் உள்ளே இருக்கும் சாதனங்கள் அந்த அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை. இப்படியே அடைத்துத் திறந்து விளையாடிக் கொண்டு இருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்துவிட வேண்டும்.
பின்னர் அதற்கு ஒரு மணி நேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும். நீங்களே சொல்லுங்கள். கணினியை நீண்ட நேரம் பல மணி நேரத்திற்கு அடைக்காமல் இருந்தாலும் அதிகமாகச் சூடு ஏறும். அதனால் கணினிக்கு சேதம் ஏற்படலாம். குளிர்சாதன அறையில் கணினி இருந்தாலும் தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்தக் கூடாது. மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அதற்கு சில நிமிடங்கள் ஓய்வு கொடுக்க வேண்டும்.
ப. விக்னேஸ், ஆண்டு: 6, உலு திராம் தமிழ்ப்பள்ளி, ஜொகூர், 
(சுட்டி உறுப்பினர்: 1803) 
கே: Yahoo எனும் பெயர் எப்படி வந்தது?
: ஜோனாதான் ஸ்விப்ட் என்பவர் ஒரு பிரபலமான ஆங்கிலேய எழுத்தாளர். அவர் 1726 -ஆம் ஆண்டில்குலிவர் டிரெவல்ஸ்’ எனும் நாவலை எழுதினார். அதில் ஒரு சொல் தொடர் வருகிறது. Yet Another Hierarchical Officious Oracle எனும் சொல் தொடர். இந்தச் சொல் தொடரில் வரும் சொற்களின் முதல் எழுத்துகளைப் பாருங்கள். Yahoo என்று வரும். ஆக, அந்தச் சொற்களின் முதல் எழுத்துகளைப் பிடித்துக் கொண்டு, அப்படியே இதற்கும் பெயர் வைத்து விட்டார்கள்.
யாஹூ எனும் பெயர் வந்த விதமே கொஞ்சம் வேடிக்கை ஆனது. யாஹூவின் பழைய பெயர் Jerry and David's Guide to the World Wide Web. மிக நீளமான பெயராகத் தானே தெரிகிறது.  யாஹூ உருவாகிய சில மாதங்களுக்கு அப்படித் தான் தொடர் வண்டி வாலைப் போல நீண்டு நெடிய பெயராக இருந்தது. யாஹூவை உருவாக்கியவர்கள் இரு மாணவர்கள். ஜெரி யாங் (Jerry Yang) இன்னொருவர் டேவிட் பிலோ (David Filo).  1994-இல் தோற்றுவிக்கப் பட்டது. யாஹூ இலவசமாக மின்னஞ்சல் சேவையை வழங்கி வருகிறது. தவிர, உலகத் தேடல் இயந்திரங்களில், இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.
கி. விஷ்வலிங்கம், ஆண்டு 6, அம்பாங் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்
(சுட்டி உறுப்பினர்: 1820)
கே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா?
ப: வைரஸ் என்றால் கிருமி. கணினி வைரஸ் என்றால் கணினிக் கிருமி என்று பொருள். மனிதர்களைத் தாக்கும் கிருமி என்பது மனிதக் கிருமி. அதைப் போல கணினியைத் தாக்கும் கிருமிக்குப் பெயர் கணினிக் கிருமி. இருந்தாலும், கணினிக் கிருமி என்பது மனிதனைத் தாக்கும் மனிதக் கிருமி மாதிரி அல்ல. அப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. கணினிக் கிருமி என்பது வேறு. மனிதக் கிருமி என்பது வேறு.

மனிதர்களைத் தாக்கும் கிருமிக்கு உயிர் இருக்கிறது. ஆனால், கணினியைத் தாக்கும் கிருமிக்கு உயிர் இல்லை. கணினிக் கிருமி அல்லது கணினி வைரஸ் என்பது ஒரு வகையான சின்ன மென்பொருள். அதாவது சின்ன ஒரு நிரலி. (Program)

கணினி வைரஸ் கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்து இருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக நாசம் செய்துவிடும். அதனால் கணினிக் கிருமிக்கு தமிழில் கணினி அழிவி அல்லது நச்சுநிரல் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்தக் கணினி அழிவியைக் கணினிக்குள் வரவிடாமல் தடை செய்யும் ஒரு நிரலிக்குப் பெயர்தான் Anti Virus. தமிழில் நச்சுநிரல் தடுப்பி என்று அழைக்கலாம். அல்லது கணினிக் கிருமித் தடுப்பி என்றும் அழைக்கலாம்.

இந்த அழிவிகள் எப்படி உருவாக்கப் படுகின்றன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு கணினியைச் செயல் படுத்துவதற்கு செயலிகள் தேவை. அதாவது Programs.  இந்தச் செயலிகளை எழுதித் தயாரிக்கும் கணினி நிபுணர்களே, இந்தக் கணினி அழிவிகளையும் எழுதுகிறார்கள். தங்களுடைய திறமைகளைக் காட்ட வேண்டும் என்பதற்காக அப்படி செய்கிறார்கள். சிலர் விளையாட்டுக்காகவும் எழுதுவார்கள்.

எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று உங்களுக்கே தெரியாது. அதனால் உடனடியாக Anti Virus எனும் தடுப்பு நிரலியைக் கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். AVG, Avast, Avira, Comodo, Kaspersky, Trend Micro, Panda, Eset, Ashampoo, Zone Alarm, BitDefender, McAfee போன்ற தடுப்பு நிரலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன.


இந்தத் தடுப்பு நிரலிகளின் இணைய முகவரிகள் நீளமானவை. இங்கே எழுத முடியாது. அதனால், கூகிள்’ தேடல் இயந்திரத்தில் ksmuthu என்று தட்டச்சு செய்தால் போதும். நிறைய இணையத் தொடர்புகள் கிடைக்கும். ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, என்னுடைய வலைப் பதிவிற்குச் செல்லுங்கள். அங்கே நேரடியான தொடர்புகள் உள்ளன. நிறைய கணினித் தகவல்களும் உள்ளன.