30 மார்ச் 2015

தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3


தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 1
தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2
முதல் இரண்டாம் பாகங்களைப் படிக்காதவர்கள் மேலே சொடுக்கவும்
 

........................................................................................................

தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டார்கள். கர்நாடகா, கன்னடா என்பதில் இரண்டும் ஒன்றுதான். குழப்பம் வேண்டாம். ஆக, அவர்கள் போராடினார்கள். விடாமல் முயற்சி செய்தார்கள். வெற்றியை விரட்டிக் கொண்டு போனார்கள். அதனால், அவர்கள் கேட்டது அவர்களுக்கு கிடைத்தது.
 
அழகே உன்னை ஆராதிக்கிறேன்
தட்டுங்கள் திறக்கப்படும் என்று சும்மாவா சொன்னார்கள். வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும். இந்தப் பழமொழியும் சும்மாவா வந்தது. காலம் காலமாக இருந்து வந்த தமிழர்களின் நிலப் பகுதிகளை, தங்கள் மாநிலங்களோடு இணைக்கக் கோரி போராட்டம் செய்தனர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றது கேரளா மாநிலம். 

ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம்

உண்மையிலேயே கேரள அரசியல்வாதிகளைப் பாராட்ட வேண்டும். அந்தச் சமயத்தில் கேரளா ஒரு சின்ன மாநிலமாகத் தான் இருந்தது. இரண்டு மலாக்கா மாநிலங்களை ஒன்று சேர்த்தால் எவ்வளவு இருக்கும். அவ்வளவு பெரியதுதான் அப்போதைய கேரளா. ஆக, அவர்கள் தங்களுக்குக் கூடுதலான நிலம் தேவை என்று ஆர்ப்பரித்ததில் நியாயம் இருக்கவே செய்கிறது. எடுத்த இலட்சியத்தில் வெற்றி அடைந்து இருக்கிறார்கள். பாராட்ட வேண்டும்.


இப்போது கேரளாவில் இருக்கிறது
கர்நாடகா அப்படி இல்லையே. தமிழ்நாட்டில் இருக்கிறதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு போவதில்தானே கண்ணும் கருத்துமாய் இருந்தது. ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெறுவதற்காக, போட்டியாளர்களின்  அறைகளில் நகல் பதக்கங்களைத் தொங்க விடுவார்களாம். அதைப் பார்க்கும் போட்டியாளர்கள் தங்கப் பதக்கம்... தங்கப் பதக்கம் என்று பிதற்றிக் கொண்டே வெறி பிடித்துப் அலைவார்களாம்.

அந்த மாதிரி கர்நாடகா அரசியல்வாதிகளும் நிலம்... நிலம் என்று பித்துப் பிடித்துத் அலைந்து திரிந்து இருக்கிறார்கள். நான் சொல்லவில்லை. ம.பொ.சி., ஜீவா போன்ற தமிழ்த் தலைவர்கள் சொன்னார்கள். சந்தேகம் இருந்தால் அவர்களிடம் போய்க் கேட்டுப் பாருங்கள்.
 
 


மன்னிக்கவும். ஓர் இடைச் செருகல். கட்டுரையாளரின் பூர்வீகம் தமிழகத்திலும் கேரளாவிலும் தொடங்குகிறது. என் தந்தையார் தமிழகத்தைச் சேர்ந்தவர். திண்டுக்கல் பகுதி. தாயார் திருச்சூர் பகுதியில் இருந்து வந்தவர். கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கேள்விப் பட்டேன். நல்ல அழகாக இருப்பார். கச்சான், கடலை வியாபாரம். உள்ளூர் மக்களிடம் மொத்தமாக வாங்கி, கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வந்து இருக்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில் என் தந்தையார், அவர்களிடம் வேலை செய்து இருக்கிறார். பெற்றோர் இருவருக்கும் விருப்பம். ஆனால், தாயார் தரப்பில் தடை. அதனால், சொந்தக்காரர்களிடம் இருந்து தப்பிக்க, நாகப்பட்டினம் வந்து இருக்கிறார்கள். அப்போது என் தாயாருக்கு வயது 16. தந்தையாருக்கு 22.

மலேசியாவிலும் இந்தியர்களின்
உரிமைப் போராட்டம் தொடர்கிறது
கடைசியில், ரஜுலா கப்பலில் ஏறி மலாயாவுக்கு வந்தார்கள். 1940-இல் நடந்தது. வீட்டில் செல்லமாக வளர்ந்த ஒரு பெண்மணி. கடைசியில் இங்கே மலாயா ரப்பர் காடுகளில் சங்கமம். கொசுக்கடி, பாம்புக்கடி, மலேரியா காய்ச்சல். அடிபட்டு தேய்ந்து ஓடாகிப் நார் நாராகக் கிழிந்து போனது தான் மிச்சம். ஆனால், அவர்கள் செய்த நல்ல காரியம். அவ்வளவு பெரிய கஷ்டத்திலும் பிள்ளைகளை படிக்க வைத்து விட்டார்கள். அது ஒரு வரலாறு.


கப்பல் ஏறி வந்த தமிழர்களின் வாரிசுகள்
இன்னும் உரிமைப் போராட்டம் செய்கிறார்கள்
அதன்பிறகு இருவருமே இந்தியாவிற்குத் திரும்பிச் செல்லவில்லை. கடிதப் போக்குவரத்து இருந்து இருக்கிறது. கடைசியில், எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை, அவர்களுடைய பிள்ளைகள் நாங்களே தேடிக் கண்டுபிடித்தோம்.
புதுடில்லி விமானநிலையத்தில் என்னுடைய மனைவியும் தோழியும் - 14.06.2014
தமிழகம், கேரளா, ஆந்திரா, கன்னடா ஆகிய நான்கு மாநிலங்களிலும் இரத்த உறவுகள் பரவிக் கிடக்கின்றன. சொந்த பந்தங்களை மூன்று முறை போய்ப் பார்த்து இருக்கிறோம். சில மாதங்கள் தங்கியும் இருக்கிறோம். உறவுகள் தொடர்கின்றன. அவர்களும் இங்கே வந்து இருக்கிறார்கள்.


தமிழகத்தை இயற்கை அன்னை வஞ்சிக்கவில்லை
அதற்காக, எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கும் சப்போர்ட் செய்வதாக நினைக்க வேண்டாம். எங்கே நியாயம் இருக்கிறதோ அங்கேதான் நியாயம் பேச வேண்டும்.

ஆக, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இனம் சார்ந்து பார்க்கவில்லை. அரசியல் நிலைமையும் அப்படித்தான் இருந்தது. காமராசர் ஒரு தமிழர்தான். ஆனால், அவருக்குத் தமிழ்நாட்டைவிட இந்தியாதான் பெரிதாக தெரிந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அதனால், அடுத்த மாநிலங்களுடன் அனுசரித்துப் போக வேண்டிய கட்டாய நிலை. திரிசங்கு நிலை என்றுகூட சொல்லலாம்.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீர்மேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு போன்ற இடங்கள் இப்போது கேரளாவில் இருக்கின்றன. ஆனால், இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியில் பார்த்தால், அவை தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவை. அந்த வகையில் அவை தமிழகத்துடன் தான் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே.



மலேசிய இந்தியர்களைப் போல கேரளத் தமிழர்களின் உரிமைப் போராட்டமும் தொடர்கிறது
இப்படியும் பார்க்க வேண்டும். கன்னியாகுமரியில் தமிழர்களைவிட கேரளத்தவர்கள் தான் அதிகம். அந்த வகையில் அவை கேரளத்துடன் தான் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே. ஏன். எல்லாமே அரசியல்வாதிகள் போட்ட தாறுமாறான கணக்குகள்.

1956-ஆம் ஆண்டு பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்தக் கமிஷனிடம் மேலே சொன்ன அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீர்மேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகளை எல்லாம் கேரளா கேட்டது. தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி பகுதிகளையும் சேர்த்துக் கேட்டது.

மற்றவை எல்லாம் கிடைத்தன. ஆனால், நீலகிரி, கூடலூர், ஊட்டி பகுதிகள் கிடைக்கவில்லை. நீலகிரியையும்  ஊட்டியையும் கொடுத்து இருந்தால், ஒரு கப் தேயிலைத் தூளுக்கு தமிழ்நாடு அடுத்த மாநிலத்தைக் கெஞ்ச வேண்டிய நிலை வந்தாலும் வந்து இருக்கலாம்.


இந்த நிலங்கள் எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறது. வேறு ஒரு நாட்டுக்காரன் வந்து பிடுங்கிக் கொண்டு போகவில்லையே. அப்புறம் ஏன் இப்படி அடித்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கலாம். காரணம் இருக்கிறது. அந்த மாதிரி இடுக்கியைக் கொடுத்ததால் தானே பெரியாறு பிரச்சினை பெரிய கோளாறு பண்ணுகிறது. கொடகு நாட்டைக் கொடுத்ததால் தானே காவேரிப் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது.

அதனால் தானே இலட்சக் கணக்கான தமிழர்களின் நிலங்கள் வானம் பார்த்த பூமியாய்க் கிடக்கின்றன. தண்ணீர் இல்லாமல், தங்களின் பயிர்பச்சைகள் வாடி வதங்கிச் செத்துப் போவதைப் பார்த்து, ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கு எல்லாம் யார் காரணம். ஆரம்பத்திலேயே கொஞ்சம் பிடிவாதமாக இருந்து இருந்தால் இந்த நிலை வந்து இருக்குமா?

1956-ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், செல்வாக்கு காரணமாகக் கேரளாவுக்கு மாற்றப் பட்டது. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போடப் பட்டது.


தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அந்தத் தீர்மானத்தை எதிர்க்கவில்லை. கட்சிக் கட்டுப்பாடு என்று சொல்லி ஆமாம் சாமி போட்டனர்.

தமிழ்நாட்டு நிலங்களை மற்ற மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததில் இந்தத் தேவி குளம், பீர்மேடு பிரச்சினைதான் பெரிய பிரச்சினை. என்ன ஏது என்று பார்ப்போம்.

தேவிகுளம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. மூணார் என்ற இடத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலைப்பிரதேசம். நம்ப கேமரன்மலை மாதிரி அழகிய மலைக்காடுகள் நிறைந்த இடம்.



இராமாயணத்தில் சீதா தேவியின் பெயரில் இருந்தே தேவிகுளம் என்ற பெயர் இந்த இடத்திற்குச் சூட்டப் பட்டதாக ஐதீகம். கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்கள், சிகப்பும் நீளமும் கலந்த அரக்கு மரங்கள் தேவிகுளத்தின் சிறப்புகள்.

இதற்கு அருகில் இருப்பது பீர்மேடு. இதுவும் அழகிய ஒரு நந்தவனச் சோலை. பெருமேடு எனும் தமிழ்ச் சொல்தான், காலப் போக்கில் பீர்மேடு ஆனது. இது ஒரு மலைவாழிடமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 915 மீட்டர் உயரம். கோட்டயத்தில் இருந்து தேக்கடி செல்லும் வழியில் அமைந்து உள்ளது.


பீர்மேடு அழகிய அருவிகளுக்கும், பரந்த புல்வெளிகளுக்கும், நெடிய ஊசி இலை மரங்களுக்கும் பெயர் போனது. பீர்மேட்டில்  மிளகு, ஏலம் போன்ற வாசனைப் பொருட்கள் நிறையவே பயிர் செய்யப் படுகின்றன.

ஒரு காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் கோடை கால தங்கும் இடமாக இருந்து இருக்கிறது. பீர்மேட்டில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில், இந்தியாவின் பெரிய கானுயிர்க் காப்பகங்களில் ஒன்றான பெரியார் கானுயிர்க் காப்பகம் உள்ளது.

அது என்ன கானுயிர்க் காப்பகம் என்று கேட்பது தெரிகிறது. கானகத்தில் வாழும் உயிரினங்களைக் காக்கும் ஒரு காட்டுப் பகுதிக்குத் தான் கானுயிர்க் காப்பகம் என்று பெயர்.

இந்த இரண்டு இடங்களிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர். 100-க்கு 95 பேர் தமிழர்கள். இவை இப்போது கேரளாவிடம் இருக்கிறது. 1956-இல் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்குப் பிரித்துக் கொடுக்கப் பட்டது. இவற்றை மறுபடியும் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று தமிழர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இதுதான் தேவி குளம், பீர்மேடு பிரச்சினை.


மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப் பட்டபோது, தமிழகத்தின் எல்லைகளை வரையறுக்க மூன்று பேர் கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தில் கே.மா. பணிக்கர் (கேரளா) ஓர் உறுப்பினர். இன்னோர் உறுப்பினர் இந்திக்காரரான குன்ஸ்ரூ (குஜராத்). அதன் தலைவர் பசல் அலி (பீகார்).

இந்த ஆணையத்தை, அப்போதைய பிரதமர்  நேருதான் நியமித்தார். இதில் ஓர் ஐயப்பாடு என்ன தெரியுமா. கேரளாவைச் சேர்ந்த பணிக்கரை அந்த ஆணையத்தில் சேர்த்து இருக்கக் கூடாது என்பதே என்னுடைய வாதமும் கூட.

ஏன் என்றால், வாதியாக கேரளா நிற்கிறது. ஒரு நடுநிலையான ஆணையத்தில் ஒரு வாதிக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கலாம் இல்லையா.

பசல் அலி ஆணையம் தனது அறிக்கையை 1955 அக்டோபர் 10-ஆம் தேதி வெளியிட்டது. அதன் பரிந்துரைகள்:

•    சென்னை மாநிலத்தில் உள்ள  மலபார் மாவட்டத்தைக் கேரளாவில் இணைக்க வேண்டும். மைசூர் மாவட்டத்தை கர்நாடகாவில் சேர்க்க வேண்டும்.

•    திருவாங்கூர் மாநிலத்தில் உள்ள கல்குளம் விளவங்கோடு, தோவாளை அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய தமிழ் தாலுகாக்களை சென்னை மாநிலத்துடன் இணைக்க வேண்டும். சென்னை மாநிலம் என்கிற பெயர் நீடிக்க வேண்டும்.

•    சென்னை நகரம் தமிழ் மாநிலத்திற்கே உரியது. அதன் தலைநகரமாய் இருக்க வேண்டும்.

•    தேவிகுளம், பீரிமேடு, பாலக்காடு, நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, கொச்சின், சித்தூர் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படவில்லை. அதே போல் கோலார் தங்கவயல், கொள்ளேகாலம் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட வில்லை.

இவைதான் அந்தப் பரிந்துரைகள். இப்படி சேர்க்கப் படாத பகுதிகளைக் கேட்டு, தமிழ் நாட்டுத் தமிழ்த் தலைவர்கள் ஆத்திரம் அடையவில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் போர்க் கோலம் பூணவும் இல்லை. அமைதி நிலவியது.

பசல் அலி ஆணையம், செங்கோட்டை தாலுக்கா முழுவதையும் தமிழகத்திற்கு வழங்கி இருந்தது. ஆனால், நடந்தது வேறு. தமிழகத்தின் அமைதியான நிலையைப் பார்த்த கேரளாவிற்கு மகிழ்ச்சி. மேல்மட்ட அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில், வளமான காட்டுப் பகுதிகளைக் கொண்ட செங்கோட்டை தாலுக்கா கேரளத்திற்குச் சொந்தமானது. செங்கோட்டை நகரம் மட்டும் தமிழகத்திற்குச் சொந்தம் என்றும் மாற்றம் செய்யப் பட்டது. அதன் பிறகும் தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை. அமைதியாகவே இருந்தது.

பசல் அலி ஆணைய அறிக்கை வெளிவந்த அன்றே, பெரியாரிடம் தினத்தந்திச் செய்தியாளர் ஒரு பேட்டி நடத்தினார். தேவிகுளம், பீரிமேடு தொடர்பான செய்தியாளர் கேள்வியும் பெரியார் அளித்த பதில்களும் வருமாறு:

நிருபர்: பசல் அலி ஆணையம், தமிழ் தாலுகாக்களாக இருந்த தேவிகுளம், பீர்மேடு, நெய்யாத்தங்கரை, கொச்சின், சித்தூர் தாலுக்காக்களைக் கேரளாவுடன் சேர்த்து விட்டதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஈ.வெ.ரா: இதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. கேரளாவுடன் அவற்றைச் சேர்க்க வேண்டியது தான்.

நிருபர்: கவலை இல்லை என்கிறீர்கள். ஆனால், அவை தமிழ் தாலுகாக்கள் தானே.

ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார் பணிக்கர் வந்து இருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன். அவர் சொன்னார் ‘தொழிலுக்காகத் தான் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் கேரளாவுக்குத்தான் சொந்தம்’ என்று பணிக்கர் சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.

இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார். திருச்சியில் உள்ள பெரியார் மாளிகையில் இந்தப் பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)

பசல் அலி அறிக்கை வெளியானது. தி.மு.க. (அண்ணாதுரை) குறிப்பிடும் படி எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. காமராசரும் காங்கிரசும் அமைதி. அங்கேயும் எதிர்ப்புகள் இல்லை. அது ஒரு பெரிய செய்தியே.

இருந்தாலும் ம.பொ.சி. விடவில்லை. பசல் அலி அறிக்கை தமிழ் இனத்திற்கு அநீதி இழைத்து விட்டது என்று ம.பொ.சி. கொந்தளித்தார். அதோடு அவர் நிற்கவில்லை. பெரியார், அண்ணாதுரை மற்ற மற்ற தலைவர்களையும் தனித்தனியே போய்ச் சந்தித்துப் பேசினார். எப்படியாவது தேவிகுளம், பீர்மேடு தாலுக்காகளை மீட்க வேண்டும் என்று துடியாய்த் துடித்தார்.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஓர் அதிர்ச்சி. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் வர்கீஸ். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக - கேரள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.

அப்போது வர்கீஸ், அந்தப் பகுதிகளைக் கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்துப் போட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் நீங்கள் எப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போட முடியும்?’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு அவர் ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார். அப்புறம் என்னதான் நடந்தது. பிறகு வேறு ஒரு  கட்டுரையில் பார்ப்போம். 

29 மார்ச் 2015

தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2

தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 1
முதல் பாகத்தைப் படிக்க மேலே சொடுக்கவும்
 

........................................................................................................

தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே  - 2

பெங்களூரைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள கர்நாடகத்தினர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அபாரம், அற்புதம். மிகவும் புத்திசாலித் தனமாகக் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள்.




1956-இல், இந்தியாவின் மாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டன. ஒரு மாநிலத்துடன், வேறொரு மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு இருக்க வேண்டும். அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும். அதுதான் நடுவண் அரசு சொன்ன விதி முறை. தமிழகத்துக்குச் சொந்தமான பெங்களூரு எப்படி கன்னடத்திற்குத் தாரை வார்க்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

சரி. பெங்களூரு பிரச்சினை ஓசூரில் ஆரம்பிக்கிறது. ஓசூர் என்பது இப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பகுதி. வடக்கே தமிழக - கன்னட எல்லையில், பெங்களூருக்கு அருகில் இருக்கிறது. 




இந்த ஓசூரில், 1950-களில் தெலுங்கு பேசுவோர் 45 சதவிகிதம் இருந்தனர். அடுத்து, கன்னடம் பேசுவோர் 40 சதவிகிதம் இருந்தனர். தமிழ்மொழி பேசுபவர்கள் 10 சதவிகிதம். எஞ்சியவர்கள் வடநாட்டுக்காரர்கள்.

ஓசூர் வேண்டாம் பெங்களூரு வேண்டும்

ஓசூரில் தெலுங்கு பேசும் மக்களே அதிகமாக இருந்தனர். இருந்தாலும் அவர்கள், பல நூறு ஆண்டுகளாக ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லாமல் இருந்தனர். அதனால், மொழி வாரியாக நிலப்பகுதிகள் பிரிக்கப்படும் போது, ஓசூர் எங்களுக்கு வேண்டாம் என்று ஆந்திரா கைகழுவியது.

இதில் ஒரு சூசகமான ரகசியம் என்ன தெரியுமா. ஓசூர் என்பது ஒரு வறண்ட பூமி. நிறைய பொட்டல் காடுகள். மொழுக்கையான குன்றுகள். வழுக்கலான மலைகள். மொட்டையான தாவரங்கள். இயற்கையான முறையில் பச்சைகள் வளர்வது கடினம். அதனால், விவசாயமும் விளைச்சலும் மிகக் குறைவு. இதுதான் வெளியே சொல்லப்படாத காரணம். அதுதான் உண்மையிலும் உண்மை.





ஆந்திராவோடு நிலத் தொடர்பு இல்லை என்பதால், அது எங்களுக்கு வேண்டாம் என்று ஆந்திரா சொல்லி விட்டது. சரி. அடுத்து எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அப்படிப் பார்த்தால் கன்னடர்கள் வருகிறார்கள். 40 விழுக்காட்டு மக்கள் கன்னடர்கள். ஆக, கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதைக் கர்நாடகா மாநிலத்துடன் தானே இணைத்து இருக்க வேண்டும். அதுதானே நியாயமும்கூட.

ஆனால், கர்நாடகா வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டது. தமிழகத்திற்கு மனமுவந்து கொடுக்கிறோம் என்று சொல்லி ஓசூரை விட்டுக் கொடுத்தது. ஆனால், கன்னடம் அங்கேதான் தன் சதுரங்கக் காய்களை நல்லபடியாக நகர்த்தியது. அப்போது  பெங்களூரு நிலப்பகுதி, தமிழகத்திற்குச் சொந்தமாக இருந்தது. தொடர்ந்து படியுங்கள்.

பெங்களூரு கர்நாடகாவிற்குப் போன கதை

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, பெங்களூரு விவகாரம் வந்தது. அதாவது  பெங்களூருவை யாருக்கு கொடுப்பது என்கிற விவகாரம். அப்போதுதான் கன்னடம் தன் துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டது. 





கன்னடம் என்ன சொன்னது தெரியுமா. நாங்கள் ஓசூரைப் கொடுத்து விட்டோம். ஓசூரில் கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும், நாங்கள் பெரும்தன்மையுடன் ஓசூரைத் தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதே மாதிரி, பெங்களூருவில் அதிகமான தமிழர்கள் இருந்தாலும்,  பெங்களூருவைத் தமிழகம் எங்களுக்குத் தர வேண்டும். கர்நாடகா நல்ல ஒரு கொடுக்குப் பிடி போட்டது.

மறுபடியும் சொல்கிறேன். பெங்களூரில் கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்களே அதிகம். கன்னட மக்கள் அதிகம் உள்ள ஓசூரை நாங்கள் கொடுக்கும் போது, தமிழர்கள் அதிகம் உள்ள பெங்களூரை ஏன் எங்களுக்குக் கொடுக்கக் கூடாது. பிடி எங்கே விழுந்தது பார்த்தீர்களா. 





உண்மையிலேயே பெங்களூரு நிலப்பகுதி தமிழகத்திற்குச் சொந்தமானது. வேறுவழி இல்லாமல் பெங்களூருவைத் தமிழகம் கன்னடத்திற்குத் தானம் செய்தது. இப்படித்தான் பெங்களூரு, தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்குப் போனது.

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டன

தமிழகம் அதற்குச் சொந்தமான நிலப் பகுதிகளை இழந்ததற்கு, முக்கியக் காரணம் வெறு யாரும் இல்லை. அப்போது தமிழகத்தில் இருந்த வாய்ச்சவடால் அரசியல்வாதிகள் தான். அவர்களிடம் மண் சார்ந்த உணர்வு கொஞ்சம்கூட இல்லாமல் போனதுதான் வேதனை.

இப்போது அழுது புலம்பி என்ன பயன. கொஞ்சம் கெட்டிக்காரத் தனமாக இருந்து இருந்தால், காவிரிப் பிரச்சினையும் வந்து இருக்காது. முல்லைப் பெரியாறு பிரச்சினையும் வந்து இருக்காது. மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.





தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டன. அவை ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப் பட்டன. இதனால், தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது. தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கிய 9 வட்டங்களும் ஆந்திராவுடன் இணைக்கப் பட்டன.

தெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே ஆந்திரா உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள், அதிகமாக வாழும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன என்பது வருத்தமான செய்தி. இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்கள் போராட்டம் செய்தனர். ஆர்ப்பாடங்களில் இரங்கினர்.

அதன் விளைவாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப் பட்டன. மீதமுள்ள 8 வட்டங்களும், இன்று வரை ஆந்திராவில் ஓர் அங்கமாகவே இருந்து வருகின்றன.

ஆந்திர மாநிலம் பிரிக்கப் படுவதற்கு முன்


ஆந்திராவில், தெலுங்கு மொழியைத் தாய் மொழியாக கொண்டவர்களுக்கே கல்வி வாய்ப்பு. வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை. இந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழர்கள். இருந்தாலும்,  ஆந்திர சட்டச் சபைக்கு தமிழர்கள் போட்டியிட முடியாது. அதே போல நடுவண் மக்களவைக்கும் போட்டியிட முடியாது. 





ஆந்திர மாநிலம் பிரிக்கப் படுவதற்கு முன்பு வரை, இந்தப் பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளாகத் தமிழர்களே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இப்போது தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளை இழந்து விட்டனர். இதை ஏன் சொல்கிறேன் என்றால், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டதால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் என்ன என்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும். இது ஓர் இந்திய வரலாற்று ஆவணம். அதை இங்கே ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு.

ம.பொ.சி, மார்சல் நேசமணி போன்ற தலைவர்கள் அரும்பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனால் சென்னை, திருத்தணி, செங்கோட்டை, கன்னியாகுமரி போன்ற பகுதிகள் மீட்கப்பட்டன. இல்லை என்றால் அவையும் போய் இருக்கும். கதையும் வேறு மாதிரியாகப் போய் இருக்கும்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள். அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு ஏறக்குறைய 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவை இருந்து இருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்து இருக்கும். மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாகவும் மாறி இருக்கும்.





தமிழகம் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை இழந்தது. அதற்கு காரணமாக இருந்தவை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தான். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்று பேதம் பார்க்காமல், எல்லோருமே கைகோர்த்து அந்த இழப்புக்கு துணை போனார்கள். இது தமிழக வரலாறு சொல்லும் கசப்பான உண்மைகள்.

விடுதலைப் போராட்ட தியாகி சங்கர்ராவ் தேவ்

இந்தியா சுதந்திரம் பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று மூலைக்கு மூலை ஆர்ப்பாட்டக் குரல்கள். அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. சுதந்திரப் போராட்டவாதிகள் தான். என்ன யோசிக்கிறீர்கள். அதுதான் உண்மை. குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள் தான் முழுமூச்சாக களம் இறங்கினார்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் என்று போராட்டம் தொடங்கியது. ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட தியாகி சங்கர்ராவ் தேவ் தலைமை தாங்கினார். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பு வந்தது. அதன் மூலம் அதன் தலைவர் இந்துலால் யக்னிக் போராடத் தொடங்கினார்.





அதன் பிறகு, எல்லாவற்றையும்விட பெரிய அளவில், தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. அப்போது அங்கு இருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வுகள் முக்கியக் காரணங்கள்.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த போது, சென்னை ராஜதானி என்ற பெயரில் சென்னைப் பெருநிலம் இருந்தது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்கலும் சென்னை நிர்வாகத்தின் கீழ் தான் இருந்தன. அதனால், சென்னையும் சென்னை சார்ந்த தமிழ் மண்ணும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பேதம் பார்க்கவில்லை.

கேரளா கேட்ட நிலங்கள்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்கத் தொடங்கினர். காலம் காலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை, தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராட்டம் செய்தனர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றது கேரள மாநிலம்.





அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு போன்றவை இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியில் தமிழகத்துடன் தொடர்புடையவை. அப்படிப் பார்த்தால் அவை தமிழகத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

1956-ஆம் ஆண்டு பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்தக் கமிஷனிடம் கேரளா மேலே சொன்ன பகுதிகளைக் கேட்டது. தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி பகுதிகளையும் கேட்டது.

அந்தக் காலக் கட்டத்தில், அரசியலிலும் நிர்வாகத்திலும் கேரளா செல்வாக்கோடு விளங்கியது. அன்று நேருவின் அமைச்சரவையின் முக்கியப் பதவிகளில் கேரளாவின் பங்கு தலையாயது. தூதரகப் பதவிகள், மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரள மாநிலத்தவர் அங்கம் வகித்தனர்.





தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்பவர் பொறுப்பில் இருந்தார். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தின் சார்பில் யாரும் இல்லை. தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது என்று சொன்னதே கே.எம். பணிக்கர் தான்.

குளமாவது மேடாவது - இந்தியாவில்தானே இருக்கிறது

இந்த விஷயத்தில் கேரளாவைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் உரிமையை அவர்கள் கேட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் தமிழ் மண்ணைவிட, தங்களின் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆக, அவர்களைத் தான் குறை சொல்ல வேண்டும்.

பி.எஸ்.மணி என்பவர் அந்தக் காலக் கட்டத்தில் தமிழகப் போராட்டவாதி. தேவிகுளம், பீரிமேடு பகுதிகளைக் கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடியவர். அவர் அப்போதைய தலைவர் காமராசரைப் போய்ப் பார்த்தார். ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்று கேட்டு இருக்கிறார். அதற்கு காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது. காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

அப்போது ‘தினமணி’  பத்திரிகையின் ஆசிரியராக ஏ.என். சிவராமன் என்பவர் இருந்தார். அதைக் கேட்டு கோபம் அடைந்தார். அவர் ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கமே எழுதினார். அதனால், காமராசரின் கண்டனத்திற்கும் உள்ளானார்.

தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி சென்னையில் எல்லாக் கட்சிகளும் சேர்ந்து கூட்டம் நடத்தின. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்று தெரிந்ததும், பெரியார் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். இந்தக் கூட்டத்தைப் பற்றி ம.பொ.சி. அவருடைய ‘எனது போராட்டங்கள்’ எனும் நூலில் இப்படி எழுதி இருக்கிறார்.

தமிழகக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பல்டி

‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்ட சோசலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’. இது ம.பொ.சி.யின் கருத்து.

1956-ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், செல்வாக்கு காரணமாகக் கேரளாவுக்கு மாற்றப் பட்டது. அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போடப் பட்டது. தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். அப்புறம் என்ன நடந்தது என்பதையும் தேவி குளம், பீரிமேடு என்றால் என்ன என்பதையும் அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம். 

(தொடரும்)

26 மார்ச் 2015

தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 1

மலேசியா தினக்குரல் நாளிதழில் 17.03.2015, 18.03.2015, 19.03.2015 தேதிகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. மூன்று பகுதிகள்.
..................................................................................................................................
பாகம்: 1

என்றைக்குத் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் காலை எடுத்து வைத்தார்களோ அன்றைக்குப் பிடித்தது தமிழர்களுக்கு கஷ்டகாலம். 1639-ஆம் ஆண்டில், சென்னையில் கிழக்கிந்தியக் கம்பெனியை ஆங்கிலேயர்கள் நிறுவினார்கள். அதன் பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய ஒரு சகாப்தம். புதிய ஒரு பரிமாணம். தீராத தலைவலி. 



ஆங்கிலேயர்கள் வலதுகாலை எடுத்து வைக்கவும் இல்லை. இடது காலை எடுத்து வைக்கவும் இல்லை. இரண்டு காலையும் சேர்த்து வைத்துதான் குதித்து வந்து இருக்கிறார்கள். அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் நாட்டில் மூலைக்கு மூலை சிற்றரசர்கள், ஜமீன்தாரர்கள். பாளையக்காரர்கள். நவாப்புகள். மேட்டுக்குடி பஞ்சாயத்துகள். அவர்களிடம் எக்கச் சக்கமான கருத்து வேறுபாடுகள். சண்டைச் சச்சரவுகள். ஆங்கிலேயர்கள் அவற்றை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள்.

பிரித்துவிடு வரித்துவிடு

ஆங்கிலேயர்களிடம் ஒரு தாரகமந்திரம் இருந்தது. அதன் பெயர் பிரித்துவிடு வரித்துவிடு (Divide and Rule). உலகம் முழுமைக்கும் நன்கு அறியப்பட்ட நல்ல ஒரு வாசகம். எங்கே அடித்தால் எப்படி வலிக்கும் என்பதற்கு இலக்கணம் எழுதியவர்களே ஆங்கிலேயர்கள் தான். அர்த்த சாத்திரத்தை எழுதிய சாணக்கியர் தோற்றுப் போவார்... போங்கள். ஒருக்கால் அந்த சாத்திரத்தை இவர்கள் படித்து மனப்பாடம் செய்து இருக்கலாம். சொல்ல முடியாது.



நவீன காலத்துச் சாணக்கியவாதி மாக்கியவெல்லி. அவரின் கருத்துகளில் நையாண்டி, கேலி, பரிகாசம், கிண்டல், ஏளனம் எல்லாமே இருக்கும். இதை சார்க்கஸம் (Sarcasm) என்று சொல்வார்கள். அவற்றின் மொத்தச் சாகுபடியாக, ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். இருக்கிறதை எல்லாம் அடித்துப் பிடித்தார்கள். பிழிந்து எடுத்தார்கள். இப்போது இருக்கும் தலைவர்கள் சிலர், மிச்சம் மீதியை உறிஞ்சி எடுக்கிறார்கள்.

அந்தக் காலத்து தமிழ்ச் சிற்றரசர்கள் தொட்டதற்கு எல்லாம் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று சொன்னேன். உண்மைதான். அந்த வகையில் தமிழர்களின் பலகீனத்தை, ஆங்கிலேயர்கள் நன்றாகப் பற்றிக் கொண்டு காயை நகர்த்தினார்கள். தமிழர்களின் எதார்த்த வெள்ளந்தித் தனத்தின் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள்.




முதலில் தமிழ்நாடு விழுந்தது. அடுத்து தென் இந்தியத் துணைக் கண்டம் விழுந்தது. அப்புறம் ஒட்டு மொத்த இந்தியத் துணைக் கண்டமே சரிந்து விழுந்தது. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்கள் பலரின் முகவரிகள் தொலைந்து போயின.

மெட்ராஸ் நிலப்பகுதி மெட்ராஸ் மாநிலம் ஆனது
 

அனந்த பத்மநாபன் நாடார், புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது பாண்டியர், வாண்டாயத் தேவன், மாவீரன் அழகு முத்துக்கோன், மருதநாயகம், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலாடி, பெரிய காலாடி, தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்ற ஆட்சியாளர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டனர். இருந்தாலும் இடம் தெரியாமல் அழித்து ஒழிக்கப் பட்டனர்.


சரி. 1947-ஆம் ஆண்டில் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. மெட்ராஸ் நிலப்பகுதி (The Madras Province) மெட்ராஸ் மாநிலம் ஆனது. இருந்தாலும், 1948-ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும், தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்து வந்தது. இதுவே இந்தியாவில் சேர்ந்த கடைசி சமஸ்தானம் ஆகும்.

தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை முன்பு மெட்ராஸ் மாநிலத்தில் இருந்தன.



இருந்தாலும், 1953-இல் மெட்ராஸ் மாநிலத்தின் வட பகுதிகள், தெலுங்கு பேசும் மக்களுக்கு ஆந்திர மாநிலமாகப் பிரித்துக் கொடுக்கப் பட்டது. தமிழ் பேசும் தென் பகுதிகள் மெட்ராஸ் மாநிலத்தில் சேர்க்கப் பட்டது.

1956-இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டன. அந்த வகையில் மெட்ராஸ் மாநிலமும் பிரிக்கப் பட்டது. மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் பிரித்துக் கொடுக்கப் பட்டன. இங்கு இருந்துதான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. அவை என்ன என்று பார்ப்போம். அதுதான் நம்முடைய இன்றைய கட்டுரையின் நோக்கமும் ஆகும்.

நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல

1956-ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதனால் பெரிதும் பாதிக்கப் பட்டது தமிழ்நாடு தான். அதை யாராலும் மறுக்க முடியாது. மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப் பட்டதாக உள்ளது. அதை வைத்து சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றுதான் முடிவும் செய்யப் பட்டது.



அதன்படி கேரள எல்லையை ஒட்டி இருக்கும் தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப் பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவைப் பிரிக்கும் போது நடந்தது என்ன தெரியுமா? அந்தச் சமயத்தில், தெலுங்கு மொழி பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் கணிசமான எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் தமிழர்களாகவே இருந்தனர். இருந்தாலும், சட்ட விதிகள் தலைகீழாக மாறிப் போயின. அந்தப் பகுதிகள் ஆந்திராவுக்குக் கொடுக்கப் பட்டது.

அப்போது அமைக்கப்பட்ட படாஸ்கர் கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம்’ என்று சொல்லி எல்லாப் பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது. முதலில் சொன்னது என்ன. நிலத்திற்கு யாரிடம் அதிகமாக உரிமை இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அது நடுவண் அரசு போட்ட கட்டளை. ஆனால், பிரிக்கும் போது கதையே வேறு மாதிரியாகப் போனது. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம் என்று சொல்லி, தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நிலத்தை எல்லாம் அண்டை மாநிலங்களுக்குத் தாரை வார்த்தார்கள்.

தமிழகத்துக்கு திருத்தணி வள்ளிமலை திருவாலங்காடு

மங்கலங்கிழார், ம.பொ. சிவஞானம் போன்றோர் மட்டுமே படாஸ்கர் கமிஷனின் முடிவை எதிர்த்து தீவிரமாகப் போராடினார்கள். இராஜாஜியும் இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். இருந்தாலும், தமிழத்தின் அப்போதைய திராவிடக் கழக அரசியல்வாதிகள், (அண்ணாதுரை, கருணாநிதி) இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. அதுதான் உண்மையிலும் உண்மை. தமிழகத்துக்கு திருத்தணி, வள்ளிமலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே கிடைத்தன.



1960-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி, புதிதாக வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி தமிழ்நாட்டுக்குச் சொந்தமான 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது. எல்லையில் இருந்து எங்கேயோ இருக்கிற சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் 525 சதுர கிலோமீட்டர் பகுதி ஆந்திராவுக்கு வழங்கப் பட்டது. இதில் ஆரணியாறு அணைக்கட்டும் ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது. ஆக, அப்படி நடந்த கொடுக்கல் வாங்கலில் திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலையும் போனது.

நந்தி மலை மட்டும் தமிழ்நாட்டுடன் இருந்து இருந்தால், இப்போது தலைவிரித்தாடும் பாலாற்றுப் பிரச்சினை வந்து இருக்கவே இருக்காது.

சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று முதலில் ஆந்திரா கேட்டது. முடியாது என்று தமிழர்கள் மறுத்து விட்டார்கள். அதனால் பல நிலப் பகுதிகளை தமிழர்கள் இழக்க வேண்டி வந்தது. 





திருப்பதியைக் கொடுக்கிறோம், அதற்குப் பதிலாக, எங்களுக்குச் சென்னையைக் கொடுங்கள் என்று ஆந்திரா பிடிவாதம் பிடித்தது. தமிழர்கள் முடியவே முடியாது என்று மறுத்து விட்டனர். திருப்பதியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். சென்னையை நாங்கள் வைத்துக் கொள்கிறோம் என்று சென்னை நகரத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள். இல்லை என்றால் சென்னை போய் இருக்கும். அப்போதைய தலைவர்கள் செய்த ஒரு காரியம். நல்லதா கெட்ட்தா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் அண்ணன் தம்பி உறவுகள்

இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று இங்கே எவரையும் நாம் பிரித்துப் பேசவில்லை. எல்லோருமே ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அண்ணன் தம்பி உறவுகள். எவரையும் உயர்வு தாழ்வுடன் பார்க்கவும் இல்லை.



மலாயாவுக்கு இங்கே வந்தவர்கள் கூட, ஒரே கப்பலில் வந்தவர்கள் தான். ஒரே படுக்கையில் படுத்துப் புரண்டவர்கள் தான். மாமன் மச்சான் என்று துருப்புச் சீட்டு விளையாடியவர்கள் தான். ஆக, தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதைத் தான் வரலாற்று ரீதியில் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டைப் பிரிக்கும் போது ஆளாளுக்கு பெரிய பெரிய தொடைச் சப்பையாக வேண்டும் என்று அடித்துப் பிடித்துக் கொண்டார்கள். பிய்த்துக் கொண்டும் போனார்களே என்றுதான் சொல்ல வருகிறேன். மற்றபடி அது ஒரு வரலாற்று ஆவணம். இந்திய வரலாற்றைப் படிப்பதற்கு மட்டும், பத்து ஆண்டுகள் பிடித்தன என்பதைச் சொல்லிக் கொண்டு கட்டுரையைத் தொடர்கிறேன்.   



சென்னை விவகாரத்தில் அரசியல் தமிழ்நாட்டு கட்சிகள் சிலபல போராட்டங்களை நடத்தின. பரவாயில்லை. ஆனால், கர்நாடகா விஷயத்தில் உஹூம். தூங்கி விட்டார்கள். செம தூக்கம். திருடு போனதுகூட தெரியாமல் தூங்கி இருக்கிறார்கள். அப்பேர்ப் பட்ட தூக்கம். வயிறு எல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது என்று இப்போது தமிழர்கள் அங்கலாய்த்து என்ன பயன். சொல்லுங்கள்.

தமிழர்களுக்கும் கூர்க் மக்களுக்கும் சுமுகமான உறவு

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்பது தெரியுமா. குடகு மலையில் உற்பத்தியாகிறது. குடகு மலை எங்கே இருக்கிறது தெரியுமா. முன்பு தமிழ்நாட்டில் இருந்தது. இப்போது கர்நாடகாவில் இருக்கிறது. ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஒன்று சொல்லத் தோன்றுகிறது. வயிற்றுப் பிள்ளையைத் தத்து கொடுத்துவிட்டு, அது நடந்து போகிற அழகை இப்போது பார்த்து ஒப்பாரி வைப்பது மாதிரி இருக்கிறது.

தமிழில் குடக்கு என்றால் மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்திற்கு கன்னடர்களுக்கும் கூர்க் மக்களுக்கும் அரசியல் ரீதியாக விரோதங்கள். அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்கள். அப்படி சண்டை போடும் போது தமிழர்களும் கூர்க் மக்களுடன் சேர்ந்து கொள்வார்கள். அதனால், தமிழர்களுக்கும் கூர்க் மக்களுக்கும் நல்ல சுமுகமான உறவு முறைகள் இருந்தன. இப்போதும்கூட இருக்கின்றன. கலப்பு கல்யாணம் காட்சி எல்லாம் நடந்து இருக்கின்றன. நடந்தும் வருகின்றன.

நீலகிரி மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள்

இன்னும் ஒரு விஷயம். தமிழ், மலையாளம், இருளா, கொடகு, கோடா, தோடா, கன்னடம், படகா, துளு ஆகிய இந்த ஒன்பது மொழிகளும் தென் திராவிட மொழிகள் ஆகும். அதை நாம் மறந்துவிடக் கூடாது. திராவிட மொழிகளில் தமிழுக்கு அடுத்து வரும் மொழி மலையாளம். சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் சேர நாட்டில் உருவானவை. சேர நாடு என்றால் கேரளம். சிலப்பதிகாரத்தைப் பற்றி நாம் எவ்வளவு பெருமையாகப் பேசினாலும், அது கேரள மண்ணில் இருந்து வந்தது. அதை மறந்துவிடக் கூடாது.

கன்னட மொழி, கர்நாடக மாநிலத்தில் பேசப்படும் மொழி. கர்நாடகம் எனும் வடசொல் திரிந்து கன்னடம் ஆனது. இருளர்கள் பேசும் மொழி இருளா. நீலகிரி மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள்தான் இந்த இருளர்கள்.

கொடகு மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. அந்த மொழியில் இலக்கியங்கள் இல்லை. நீலகிரி மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி இனத்தினர் கோடர்கள். இவர்கள் பேசும் மொழி கோடா மொழி. ஏறக்குறைய 900 பேர் கோடா மொழியைப் பேசுகின்றனர்.

நீலகிரி மலைப் பகுதிகளில் வாழும் மற்றொரு பழங்குடி இனத்தவர் தோடர்கள். இவர்கள் பேசும் மொழி தோடா மொழி. 800 பேர் பேசுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர்ப் பகுதிகளில் வாழும் படகர்கள் பேசும் மொழி படகா மொழி. 70 ஆயிரம் மக்கள் இந்த மொழியைப் பேசுகின்றனர். படகா மொழி கன்னட மொழியோடு நெருங்கிய தொடர்பு உடையது. 

சந்திரகிரி கல்யாணகிரி ஆறுகள்

மைசூர் மாவட்டத்தில், சந்திரகிரி, கல்யாணகிரி ஆறுகள் ஓடுகின்றன. அந்த இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் துளு மொழி பேசப் படுகிறது. ஐந்து இலட்சம் பேர் துளு மொழி பேசுகின்றனர். தென் திராவிடக் கிளையில் இருந்து துளு, கன்னடம், கோடா, தோடா, கொடகு, மலையாளம் போன்றவை படிப்படியாகப் பிரிந்து சென்ற மொழிகளாகும்.

சரி. கூர்க் மக்கள் விஷயத்திற்கு வருவோம். மொழிவாரி மாநிலப் பிரிவினை வந்த போது ‘மொழி, கலாச்சார அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு நாங்கள் சேர்ந்து கொள்கிறோம்’ என்று கூர்க் மக்கள் பகிங்கரமாகச் சொன்னார்கள். அதை அப்போதைய தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் என்றால் கூர்க் மக்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. இந்தச் சின்ன அல்வாத் துண்டுகள் தேவை இல்லை என்று நினைத்து இருக்கலாம். அங்கேதான் காவிரிபிரச்சினைக்கு ஊதுபத்தி கொளுத்தி வைக்கப்பட்டது.

கூர்க் மக்கள், தமிழ்நாட்டுடன் இணைய ஆசைப்பட்டு, கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தினர். போராட்டம் செய்தனர். அந்த நேரம் பார்த்து, தமிழர்கள் கொஞ்சம் கண் காட்டி இருந்தால் போதும். கூர்க் மக்கள் ஓடோடி வந்து தமிழர்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பார்கள்.

அவர்கள் அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், தமிழ்நாட்டு வரலாற்றையே திருப்பிப் போட்டு இருக்கலாம். குடகு நாடு தமிழ்நாட்டுடன் வந்து சேர்ந்து இருக்கும். காவிரித்தாய் கண்கலங்கி இருக்க மாட்டாள். காவிரிப் பிரச்சினை என்கிற ஒரு பிரச்சினையே வந்து இருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகிப் போய் இருக்காது.

கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம்

ஆனால், கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடினார்கள். அதனால், முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூர் மாவட்டத்தின் ஒரு சில இடங்கள், கோலார் தங்கவயல் போன்ற பொன்னான பூமிகள் கர்நாடகாவுக்குத் தாரை வார்க்கப் பட்டன. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார்களே அந்த மாதிரிதான் இங்கேயும் நடந்தது.

பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம் இருக்கிறதே, சும்மா சொல்லக் கூடாது. அற்புதம். அந்தச் சொக்கட்டான் நகர்த்தல்களிலேயே அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள்; எவ்வளவு திறமைசாலிகள் என்பதைத் புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பெங்களூரு எப்படி பறிபோனது என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம். 


(தொடரும்)