12 ஜூலை 2015

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3

[பாகம்: 3]

(மலேசியா தினக்குரல் நாளிதழில் 16.06.2015-இல் எழுதப்பட்டது.) 



தமிழீழ விடுதலைத் தலைவர் பிரபாகரன், இந்தியாவின் தலைவர்களுக்காக இரண்டு முறை கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். இந்திரா காந்தி இறந்த போது முதல் முறையாக அழுதார். அடுத்து எம்.ஜி.ஆர். இறந்த போது இரண்டாவது முறையாகக் கண்ணீர் விட்டு கதறி அழுது இருக்கிறார். வேறு யாருக்கும் பிரபாகரன் அந்த மாதிரி கண்ணீர் விட்டு அழுதது இல்லை. ஆக, இந்த இரு தலைவர்களும் எங்கே நிற்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சரி. தமிழீழப் போராட்டக் குழுக்களை இந்தியா ஆதரித்தது என்கிற விஷயத்திற்கு வருவோம். இந்தியா ஆதரித்தது என்கிற விஷயம், தமிழீழ விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்து போனது. இந்தியா என்கிற ஒரு மாப்ரும் வல்லரசே நமது குழுவை ஆதரிக்கும் போது, ஏன் மற்ற மற்றக் குழுக்களுடன் வலிய போய் நாம் சேர வேண்டும். ஏன் நமது கௌரவத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற நினைப்பு. தவிர, கௌரவப் பிரச்சினையும் கூடவே வந்து தொலைத்தது.

தமிழீழப் போராட்டக் குழுக்களுக்கு இடையே பதவிப் போட்டிகள் ஏற்பட்டதற்கு இதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள். கௌரவப் பிரச்சினை என்பது இரண்டாவது பிரச்சினை.

மூன்றாவது பிரச்சினை இப்படி வருகிறது. போராட்டக் குழுக்களுக்குள் சாதிப் பிரச்சினைகள். தொடக்கத்தில் கொஞ்சமாய் இருந்தது. பின்னர் பூதமாய் வெடித்த்து. நீ பெரிசா நான் பெரிசா என்று அடிக்கடி அவர்களின் தலைகளை உருட்டிக் கொண்டார்கள். எல்லோருமே தமிழர்கள் தான். இருந்தாலும், தான் மட்டுமே மற்றவர்களைக் காட்டிலும் கொஞ்சம் ஒசத்தி என்கிற கௌரவப் பிரச்சினை. என்ன செய்வது.

மீனவர்கள் பிரிவைச் சேர்ந்த கரையர்கள்

தமிழன் எங்கே போனாலும் அவனுடைய மீசையும் போகாது. அவன் சுட்ட தோசையும் போகாது. கூடவே அந்த மசாலா தோசை என்கிற சாதியும் போகாது. செம்மறியாடு மாதிரி உரசிக் கொண்டே வரும். உரசிக் கொண்டே போகும்.


மீனவர்கள் பிரிவைச் சேர்ந்த கரையர்கள் ஒரு பக்கம். வசதி படைத்த வன்னியர்கள் ஒரு பக்கம். இவர்களுக்குள் யார் உயர்ந்தவர் என்கிற பிரச்சினை இன்னொரு பக்கம். பிரபாகரன் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர். கருணாகரன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் இடையே பிரிவினை ஏற்பட்டதற்கு மூல காரணமே, இந்தச் சாதி என்கிற பிரச்சினை தான்.

அவர்கள் பிரிந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம். காட்டிக் கொடுத்த கருணா, தமிழர்களை விட்டுப் பிரிந்ததற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அதை அடுத்த அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.

போராட்டக் குழுக்களின் விட்டுக் கொடுக்காத தன்மை

இப்போது, இந்தக் காலத்தில் தமிழீழ மக்களிடையே சாதிப் பிரச்சினைகள் ஏறக்குறைய மறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எந்தக் காலத்திலும் சாதி வந்து சமரசம் பேசாது என்பதை இப்போது புரிந்து கொண்டார்கள். இருந்தாலும் அந்தச் சாதி வாதங்கள் தானே, ஓர் இனம் பாதிக்கப் பட்டதற்கு ஒரு பெரிய காரணமாக இருந்தது. அதை மறந்து விடலாமா. இது மூன்றாவது காரணம்.


ஆக, தமிழீழ மக்களின் விடுதலைக்காகப் புறப்பட்ட தமிழ் ஈழ விடுதலை அமைப்புகள், கொள்கை முரண்பாடு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. 1982 இறுதி வாக்கில் இந்தச் சகோதரப் படுகொலைகள் உச்சத்தை அடைந்தன. இந்த விடுதலைக் குழுக்கள் எப்போதும் பிரிந்தே இருக்க வேண்டும் என்பதற்கு, மேலே இருந்த இந்திய வல்லரசின் உளவுத் துறையும் முக்கியப் பங்கு வகித்தது. எங்கே வருகிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அந்த உளவுத் துறையை ‘ரா’ (Research and Analysis Wing) என்று அழைப்பார்கள். இந்தக் கட்டத்தில் போராட்டக் குழுக்களின் விட்டுக் கொடுக்காத தன்மையும் சேர்ந்து கொண்டது. அடுத்து வந்தது அதிகார மோகம். இந்த இரண்டும் சேர்ந்து அடிமட்ட போராளிகளின் உயிர்களைத் தான் பெரிய அளவில் காவு கொண்டன. ஆக, இவைதான் அந்தக் காரணங்கள்.

தமிழ் விடுதலைப் புலிகளுக்கு முழுமையாக உதவி செய்யத் தொடங்கிய காலக் கட்டத்தில் தான், இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப் பட்டார். விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவரும் இந்திரா காந்தி தான்.


உண்மையிலேயே தமிழீழ மக்களுக்கு உதவி செய்வது என்று அவர் முழு மூச்சாக இறங்கி விட்டார். இறங்கி வேலை செய்யவும் தொடங்கி விட்டார். அதற்குள் அவருடைய மெய்க்காவலர்களே அவரை அநியாயமாகச் சுட்டுக் கொன்று விட்டார்கள்.

தமிழீழப் போராட்டக் குழுக்களை, இந்திரா காந்தி தனித் தனியாகப் பிரித்து வைத்துப் பார்த்தார். உண்மைதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதே சமயத்தில் தமிழீழ மக்களின் விடுதலைக்கு, தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்கினார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

’ரா’ என்பது இந்திய உளவுத் துறை

இந்திய நாட்டின் நலன்களுக்காக, ’ரா’ என்கிற இந்திய உளவுத் துறையை அமைத்தவர் வேறு யாரும் இல்லை. இந்திரா என்கிற இரும்புப் பெண்மணி தான். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால், அதே சமயத்தில் தமிழீழ மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அவசரப் பட்டார் என்பதையும் நாம் மறைத்து வைக்க முடியாது.

எம்.ஜி.ஆர். மாதிரி அவருக்கும் தமிழீழ மக்கள் மீது ஆசாபாசங்கள் நிறைந்து இருந்தன. வாஞ்சை நேயங்கள் நிறைந்து இருந்தன. தமிழீழ மக்களின் அவசர நேரங்களில், இந்தியக் கடல்படை மூலமாக உணவு, மருந்து, அத்தியாவசியத் தளவாடப் பொருட்களை, இந்திரா காந்தி அனுப்பி வைத்து இருக்கிறார்.


அந்த உதவிகள் கன்னியாகுமரி வழியாகப் போய் இருக்கிறது. திரிகோணமலை வழியாகவும் போய் இருக்கிறது. இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா. அப்படி பாச உறவுகளில் பாலம் போடும் போது தான், அவருக்கு இறப்பு என்கிற அகாலத் தந்தியின் அழைப்பு வந்து சேர்ந்தது.

ஆனால், அவருடைய மகன் ராஜீவ் காந்தி அப்படி அல்ல. அம்மா யோசித்துச் செய்தார். மகன் யோசிக்காமல் செய்தார். கேட்பார் பேச்சைக் கேட்டு, தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார். அவ்வளவு தான். சின்ன வயதில் பெரிய பதவி. தமிழர்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லித் திரிந்த சில புல்லுருவிகளும் அவர் கூடவே இருந்தன. அதில் ஒரு முக்கியப் புள்ளி, டிக்சீட். இவரை ஒரு நேபாளி என்று பலர் நினைப்பது உண்டு. அது தவறு.  அவர் ஒரு கேரளாவாசி.

தனி மாநிலம் கிடைப்பதை டிக்சீட் விரும்பவில்லை

1985 ஜூலை 8-ஆம் தேதி, பூட்டான் நாட்டுத் தலைநகர் திம்பு நகரில், இலங்கை அரசாங்கத்திற்கும் ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்கும் இடையே அமைதிப் பேச்சு நடந்தது. அது முக்கியமான பேச்சு. அதில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் டிக்சீட் என்பவர் கலந்து கொண்டார். அவர் ஈழத்துத் தமிழர்களுக்கு உதவி செய்வதாகச் சொன்னாரே தவிர செய்யவே இல்லை. தமிழர்களுக்குத் தனி ஒரு மாநிலம் கிடைப்பதை இந்த மனிதர் விரும்பவே இல்லை. பல குழப்படிகளைச் செய்தார்.


அந்தப் பூட்டான் அமைதிப் பேச்சில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பொது மனிதரை நியமித்து இருக்க வேண்டும். அதுவும் அவர் ஒரு தமிழராக இருந்து இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நடுநிலைமை கிடைத்து இருக்கும். நேபாளப் பெண்ணை மூன்றாம் தாரமாகக் கல்யாணம் செய்த ஒரு மனிதருக்கு தமிழர்களின் தராதரங்கள் எப்படிங்க தெரியும். அந்தப் பட்டியலில் டிக்சீட் போன்ற மூன்றாம் தர இனவெறியர்களையும் சேர்க்கலாம்.

இந்த மனிதர் மீது எல்லாத் தமிழர்களுக்கும் ஆத்திரம். தமிழர்கள் பிரிந்து போனதற்கு இந்த டிக்சீட் ஒரு காரணம். அண்டல் பாலசிங்கத்தைக் காலை வாரி விட்டவர் என்றுகூட சொல்வார்கள்.

திம்பு அமைதிப் பேச்சு தோல்வி அடைந்ததற்கு விடுதலைப் புலிகளின் பிடிவாதமே காரணம் என்று இந்திய நடுவண் அரசு அடம் பிடித்தது. அப்போது இலங்கையின் அதிபராக ஜெயவர்த்தனா இருந்தார். இந்தியாவின் பிரதமராக ராஜீவ் இருந்தார். திம்பு வட்டமேசையில் தமிழர் தரப்பின் ஒற்றுமையை உடைப்பதற்கு சதித் திட்டங்கள் தீட்டப் பட்டன என்பது தான் உண்மை. அது காலம் தாழ்ந்து அறியப் பட்ட ஒரு பெரிய உண்மை.

அமைதிப் பேச்சு கைகூடி இருந்தால்

திம்பு அமைதிப் பேச்சு தோல்வி அடைந்ததற்கு  ராஜீவ் காந்தியுடன் இருந்த சில புல்லுருவிகள் தான் காரணம் என்று நான் உறுதியாகச் சொல்வேன். அந்த அமைதிப் பேச்சு கைகூடி இருந்து இருந்தால், தமிழ் ஈழ மக்களுக்கு விமோசனம் கிடைத்து இருக்கும். சொர்க்கத்தில் இருக்கும் எம்.ஜி.ஆரும் மிகப் பெரிய சந்தோஷம் அடைந்து இருப்பார். இந்திரா காந்தியும் நிம்மதி பெருமூச்சு விட்டு இருப்பார்.

ஆக, தமிழீழத் தமிழர்கள் விஷயத்தில், ராஜீவ் காந்தி தீர்க்கமான ஒரு முடிவை எடுக்காமல் கோட்டை விட்டார். அது அவருடைய பெரிய தவறு. கடைசியில் என்ன ஆனது. ஸ்ரீ பெரம்பலூரில் தன்னையே பலிகடா ஆக்கிக் கொண்டார். சொல்லும் போது மனசிற்கு கஷ்டமாக இருக்கிறது.


ஆனால், அவருடைய அம்மா அப்படி இல்லை. அந்த மனுஷி   இன்னும் கொஞ்ச நாட்களுக்கு உயிரோடு இருந்து இருக்க வேண்டும். நீங்கள் நம்பினாலும் சரி. நம்பாவிட்டாலும் பரவாயில்லை. ஒன்று மட்டும் என் மனதில் படுகிறது. பட்டதைச் சொல்கிறேன். இந்திரா காந்தி மட்டும் உயிரோடு இருந்து இருந்தால், தனி ஈழம் கிடைப்பதற்கு ஏதாவது எப்படியாவது ஒரு வழி செய்து இருப்பார்.

வரிந்து கட்டி, கிழக்குப் பாகிஸ்தானைப் பிடுங்கி எடுத்தது மாதிரி, அந்த மனுஷி, தடி எடுத்து தனி ஈழத்தை அடித்துப் பிடித்து வாங்கி இருப்பார். என் உள்மனம் சொல்கிறது. இத்தனை ஆயிரம் அப்பாவி ஜீவன்களும் செத்துப் போய் இருக்க மாட்டார்கள். பல ஆயிரம் ஜீவன்களும் ஊனமாகிப் போய் இருக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு நல்ல வழி கிடைத்து இருக்கும். என்ன செய்வது. எழுதிச் செல்லும் விதியின் கைகள் வேறு மாதிரி எழுதிச் சென்று விட்டன.

அப்பாவி ஜீவன்களின் வெம்பல்களும் விசும்பல்களும்

அடுத்து வருபவர் எம்.ஜி.ஆர். இவரும் இன்னும் கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்து இருக்க வேண்டும். ஈழ மக்கள் இப்படி இந்த மாதிரி அவதிபட்டு இருக்க மாட்டார்கள். இவ்வளவு பெரிய மோசமான பாதிப்புகளும் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்காது. இவரும் ஏதாவது ஒரு வழி பண்ணி இருப்பார்.

தமிழகத்துச் சகோதரர்கள் கடைசி நேரத்தில் வந்து உதவி செய்வார்கள் என்கிற ஏக்கத்தில், தமிழக மண்ணைப் பார்த்தவாறே பல்லாயிரம் ஜீவன்கள் யாழ்ப்பாணத்தில் உயிரை விட்டு இருக்கின்றன. ஓர் உயிர், இரண்டு உயிர் இல்லீங்க. பல லட்சம் உயிர்கள். அத்தனையும் நம்ப மாதிரி மனித உயிருங்க.

அந்தப் பல்லாயிரம் உயிர்களின் சப்தநாடிகள் இன்னும் சத்தம் இல்லாமல் சன்னமாய்த் தங்களின் ஈனக் குரல்களைச் எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. வன்னியிலும் மன்னாரிலும் முல்லிவாய்க் கடல்காடுகளிலும் அந்த அப்பாவி ஜீவன்களின் வெம்பல்களும் விசும்பல்களும் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. உங்களுக்குக் கேட்கிறதோ இல்லையோ எனக்கு எப்போதும் கேட்கும்.

சத்தியமாகச் சொல்கிறேன். தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்தவர்களையும், அந்தத் துரோகிகளின் வாரிசுகளையும் தமிழ் ஈழ மக்களின் பாவம் சும்மா விடாது. கூண்டோடு அழித்துவிடும். பாவத்தின் முதல் தூறல்கள் ஆரம்பித்து விட்டன.

உங்களுக்கு ஒருவர் வேண்டப் பட்டவராக இருக்கலாம். ஆனால், அவர் செய்த துரோகத்தை உங்களால் மறக்க முடியுமா. சொல்லுங்கள். அப்படியே அந்தத் துரோகத்தை மறந்து வக்காளத்து வாங்கினால் அதைவிட கேவலம் வேறு எதுவுமே இருக்க முடியாது.

ஆக, தமிழ் ஈழ மக்களின் நெஞ்சங்களில் இன்றும் நிலைத்து வாழ்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் யார் என்றால் ஒருவர் ஈழத்துத் தமிழ்த் தந்தை செல்வா. அடுத்தவர் தமிழகத்து கருணை மனிதர் எம்.ஜி.ஆர். அதற்கும் அடுத்து வருபவர் இரும்பு மனுஷி இந்திரா காந்தி.

எம்.ஜி.ஆர். அளித்த வெளிப்படையான ஆதரவு

ஈழத் தமிழர்களுக்கு, ஒரு தனி நாடு அமைய வேண்டும் என்று எம்.ஜி.ஆர்.  கனவு கண்டவர். எம்.ஜி.ஆருக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையே இருந்த பிணைப்பு இருக்கிறதே அது ஒரு வகையான பாச உணர்வு. ஈழப் போராட்டத்துக்கு எம்.ஜி.ஆர். அளித்த வெளிப்படையான ஆதரவு இருக்கிறதே அது இன்னொரு வகையான வாய்மை உணர்வு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெற்றி பெற ஆயுதங்கள் தேவைப் பட்டன. அதற்கு எம்.ஜி.ஆர். தன் சொந்தப் பணத்தில் முதலில் ஏழு கோடி ரூபாய் வழங்கினார். அதனால் மத்திய இந்திய அரசாங்கத்திடம் இருந்து  தொல்லைகள் வரும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும் அதைப் பற்றி எம்.ஜி.ஆர்.  கொஞ்சமும் கவலைப் படவில்லை.

என் ஆட்சி போனாலும் பரவாயில்லை. ஈழத் தமிழர்களுக்கு ஒரு தனி மாநிலம் கிடைக்க வேண்டும் என்று துணிந்து நின்றார். அப்படியே சொல்லி வந்தார். செய்தும் காட்டினார். நாளைய கட்டுரையில் இன்னும் பல ரகசியங்கள் வருகின்றன. படிக்கத் தவற வேண்டாம்.


முந்திய பதிவுகள்:

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2




 

29 ஜூன் 2015

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2

[பாகம்: 2]

(மலேசியா தினக்குரல் நாளிதழில் 15.06.2015-இல் எழுதப்பட்டது.) 



1980-ஆம் ஆண்டு, தமிழீழப் போராட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட யாழ்ப்பாணக் குழுக்கள் உயிர் கொடுத்துப் போராடின. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு போராட்டக் குழு. ஆனால், அந்தக் குழுக்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாமல் போனது தான் மிக மிக வேதனையான விஷயம். கடைசியில் படுகொலைகளில் போய் முடிந்தது. அதற்குச் சகோதரப் படுகொலைகள் என்று பெயர். விடுதலைக்காகப் போராடப் போன குழுக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டன. அது மனவருத்தங்களைத் தாண்டிய  மன வேதனைகள்.

1981-ஆம் ஆண்டு குழுக்களின் தலைவர் பதவிகளுக்குப் பயங்கரமான போட்டிகள் வந்தன. அதனால் உயர்மட்டத்தில் கொலைகளும் விழுந்தன என்றும் சொல்லப் படுகிறது. இந்தச் சம்பவங்களை எவராலும் மறைக்க முடியாது. ஏன் என்றால் அவற்றைப் பற்றிய தகவல்களை இணைய ஊடகங்களில் பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள்.



விடுதலைப் புலிகளுக்கு கெட்ட பெயர் வரக் கூடாது என்று நாம் எல்லோரும் நினைக்கலாம். அதை மறைக்க நீங்களும் நானும் முயற்சிகள் செய்யலாம். இருந்தாலும்  முடியாதுங்க. இணையம் என்ற மாயை உலகில் இருந்து யாருமே தப்பிக்க முடியாது. இணையப் பதிவுகளை அழிப்பது என்பது ரொம்பவும் சிரமம்.

நீயா நானா போட்டிகள்

சரி. போராட்டக் குழுக்களில் ஏன் இந்தப் பதவிப் போட்டிகள் வந்தன. அதைக் கொஞ்சம் அல்சிப் பார்ப்போம். அதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றில் மிக முக்கியமான ஐந்து காரணங்களை முன் வைக்கிறேன். இன்னும் ஒரு விஷயம். 1984-ஆம் ஆண்டு இந்தக் குழுக்களுக்குள் அடுக்கடுக்காய் நீயா நானா போட்டிகள். அவை பலத்த மோதல்களில் போய் முடிந்தன. பல உயிருடல் சேதங்கள்.

அதைப் பார்த்த எம்.ஜி.ஆர். கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டுச் செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்தார். எல்லாக் குழுத் தலைவர்களையும் சென்னைக்கு வந்து அவரைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். சில நாட்கள் கழித்து கலைஞர் கருணாநிதியும், அதே பாணியில் தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்தார்.

எம்.ஜி.ஆரின் அழைப்புக் கடிதம் பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தான் முதலில் போய் கிடைத்து இருக்கிறது. உடனே பிரபாகரன் அவரைப் பார்க்கச் சென்றார். ஆனால், புளொட் என்கிற தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் (PLOT); டெலோ என்கிற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO); இ.பி.ஆர்.எல்.எவ். என்கிற ஈழ மக்கள் புரட்சிகர விடுதல் முன்னணி (EPRLF); ஈரோஸ் என்கிற ஈழவர் ஜனநாயக விடுதலை அமைப்பு (EROS) போன்ற குழுக்களுக்கு ஒரு நாள் பிந்தி போய் அழைப்பு கிடைத்து இருக்கிறது.

கருணாநிதியைச் சந்தித்த மற்ற குழுக்கள்

அதனால், அவர்களுக்கு எம்.ஜி.ஆர். மீது வருத்தம். எம்.ஜி.ஆரைச் சந்திக்க முடியாது என்று மறுத்து விட்டனர். பாருங்கள். ஒரே ஒரு நாள் லேட். அதற்கு போய் ஒரு பிணக்கு. எம்.ஜி.ஆரைப் பார்க்க முடியாது என்று சொல்லி கலைஞர் கருணாநிதியைப் போய்ப் பார்த்து இருக்கின்றனர்.





இதற்குப் பின்னர்தான் விடுதலைப் புலிகளின் மேல் எம்.ஜி.ஆருக்கு மதிப்பும் மரியாதையும் கூடியது. சொன்ன சொல்லைப் பிரபாகரன் கட்டிக் காக்கிறாரே என்கிற மன நிறைவு. அதன் பிறகுதான் பண உதவிகள் செய்ய ஆரம்பித்தார். முதன் முதலாக இரண்டு கோடி ரூபாய் கொடுத்து அனுப்பினார்.

கலைஞர் கருணாநிதியைச் சந்தித்த மற்ற குழுக்களுக்கு ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். இந்தக் குழுக்கள் சென்னைக்குப் போய் தமிழகத் தலைவர்களைச் சந்தித்து திரும்பிய சில வாரங்களில் யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய இனப் படுகொலையே நடந்து முடிந்தது.

வவுனியாவில் கென்பாம் டாலர்பாம் எனும் இடங்களில் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் பயங்கரமான கைகலப்பு. தமிழர்களுக்குச் சொந்தமான பூர்வீக மண்ணில் சிங்களர்கள் குடியேறி ஆக்கிரமிப்புச் செய்தார்கள். அதனால் நடந்த கைகலப்பில் 119 பேர் பலி. அதிகம் பாதிக்கப் பட்டது சிங்களர்கள். 





அதற்குப் பதிலடியாக இலங்கை இராணுவம் முல்லைத் தீவு ஒதியமலை கிராமத்தில் நுழைந்து 27 தமிழ் இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது. கொதித்துப் போன விடுதலைப் புலிகள், ஒரு போலீஸ் முகாமையே ஒட்டு மொத்தமாக அழித்து ஒழித்தனர். அதற்கு அடுத்து பலப் பல கைகலப்புகள். பலப் பல மோதல்கள். அவை ஒரு தொடர்கதையாகவே மாறிப் போயின. அதன் பின்னர் யாழ்ப்பாணத்தின் பெரும் பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

இளைஞர்களின் முகவரிகள் தொலைக்கப் பட்டன

இதை இதோடு நிறுத்திக் கொள்வோம். போராட்டக் குழுக்களில் ஏன் பதவிப் போட்டிகள் வந்தன என்பதைப் பார்ப்போம். இந்தியாவிலும் உலக நாடுகளிலும் வாழ்ந்த தமிழர்கள், ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்கிற நோக்கத்தில் பாரபட்சம் இல்லாமல் பணத்தை வாரி வழங்கினார்கள்.

அப்படி கிடைக்கும் நிதியுதவியை போராட்டக் குழுவின் தலைவர் மட்டுமே கண்காணிக்க முடியும். நிர்வாகம் செய்ய முடியும். அப்படி ஓர் எதேச்சையான அதிகாரம். அந்த அதிகாரம் குழுத் தலைவருக்கு மட்டுமே என்பதும் எழுதப் படாத ஒரு சாசனமாக உருவானது.  





அதனால், அவருக்கு கீழே இருந்த மற்ற மற்றத் தளபதிகளுக்கும் தலைவராக வேண்டும் என்கிற ஆசை வந்தது. தலைவர் மட்டுமே எல்லா சுகபோகங்களையும் அனுபவிக்கிறார் என்கிற ஆதங்கமும் வெளியே வந்து கொட்டியது. அதுவே நாளடைவில் பேராசையாக மாறி வெறிபிடித்துப் போனது. அதைத் தொடர்ந்து உள்ளுக்குள்ளேயே சில பல களையெடுப்புகள். அதன் விளைவு, நன்றாகப் படித்த, அறிவு சார்ந்த பல இளைஞர்களின் முகவரிகள் இரவோடு இரவாக அழித்துத் தொலைக்கப் பட்டன. இது முதலாவது காரணம்.

அடுத்து, தமிழீழப் போராட்டத்தைப் பிரதமர் இந்திரா காந்தி ஆதரித்து வந்தார். அதனால் இந்திய வல்லரசு தங்களின் பின்னால் எப்போதும் துணை நிற்கும் என்கிற எதிர்ப்பார்ப்பும் இருந்தது. ஆபத்து வந்தால் இந்தியா களம் இறங்கும் என்கிற ஒரு நம்பிக்கை. அந்த அசட்டு நம்பிக்கையினால் அசட்டுத் துணிச்சல்கள் வேறு. அதனால் குழுத் தலைமைத்துவங்களில் பதவிப் போராட்டங்கள் உச்சம் பார்த்தன. இது இரண்டாவது காரணம்.

கொரில்லா வன்முறையை விரும்பாத இந்திரா காந்தி

தமிழீழப் போராட்டத்தைப் பிரதமர் இந்திரா காந்தி ஆதரித்தார். உண்மைதான். ஆனால், அவர் எல்லாக் குழுக்களையுமே ஆதரித்து வந்தார் என்பது தான் சூசகமான உண்மை. எம்.ஜி.ஆரைப் போல அவர் ஒரே ஒரு குழுவை மட்டும் ஆதரிக்கவில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது.

ஒரே ஒரு குழுவை ஆதரித்தால், அந்தக் குழு முதன்மை பெற்று, மற்றக் குழுக்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும். அப்புறம் அந்தக் குழு பிரபலம் அடையும். காலப் போக்கில் பெரிய ஒரு சக்தியாகவும் மாறி விடும். ஆக, கொரில்லா போரினால் தான் ஓர் இனத்திற்கு விடுதலை கிடைத்தது என்கிற அங்கீகாரமும் பிரசித்திப் பெற்று விடும். இல்லையா. 





விடுதலை கிடைப்பது நல்ல விஷயம் தான். தமிழீழத்திற்கு விடுதலை கிடைப்பதில் இந்திரா காந்திக்கு மாறுபட்ட கருத்து எதுவும் இல்லை. ஆனாலும் இந்த மாதிரி வன்முறையில் விடுதலை கிடைப்பதை இந்திரா காந்தி விரும்பவில்லை. கொரில்லா முறையில் விடுதலை வாங்குவது அவருக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தது. பேச்சு வார்த்தையின் மூலமாக விடுதலை கிடைப்பதையே அவர் விரும்பினார்.

இந்திரா எதற்காக பயந்தார்

சரி. அதே அந்தக் கொரில்லா வன்முறையை இந்தியாவில் உள்ள பிரிவினை வாதிகளும் பயன்படுத்தத் தொடங்கினால் என்ன ஆகும். சொல்லுங்கள். மூலைக்கு மூலை பூஞ்சைக் காளான்கள் மாதிரி கொரில்லா அமைப்புகள் கொடிகளைப் பறக்க விடும். கிழக்கே குச்சிப்புடி என்றால் மேற்கே ஒடிசி. வடக்கே பரத நாட்டியம் என்றால் தெற்கே கதக்கலி. அப்புறம் சொல்லவும் வேண்டுமா. அடுத்து ராஜஸ்தான் ஒட்டகங்களைக் களம் இறக்கினாலும் இறக்கி விடுவார்கள். சொல்ல முடியாது. அப்புறம் இந்தியாவின் நிலைமை கட்டவிழ்த்த களிறுக் கதையாகி விடும்.

அதற்காகத் தான் இந்திரா காந்தி பயந்தார். அவர் பயந்து நின்றதிலும் நியாயம் இருக்கிறது. அந்தச் சமயத்தில் பஞ்சாப், கேரளா, நாகாலாந்து, மணிப்பூர், அந்தமான், தமிழ்நாடு, ஆந்திரா பிரதேசம் போன்ற மாநிலங்கள் தனிநாடு அல்லது தனியாட்சி கேட்டு இந்திரா காந்தியின் சிண்டு முடியைப் பிடித்துப் பேன் பார்த்துக் கொண்டு நின்றன. அது அவருக்கு ஒரு பெரிய தலைவலி.

ஆக, இந்திரா காந்தி இப்படி நினைத்தார். தமிழீழத்தில் ஒரே ஒரு போராட்டக் குழு மட்டும் தனித்து நின்று வெற்றி பெற்றால், இந்தியப் பிரிவினைவாதிகளுக்கு குளிர்விட்டுப் போகும். அப்புறம் அந்த வெற்றி இந்தியாவிற்குள்ளும் ஊடுருவும். பயங்கரமான எதிர்விளைவுகளைக் கொண்டு வரும். நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. அப்படித்தான் இந்திரா காந்தியின் மூளை வேலை செய்தது.

இந்திரா காந்தி எல்லாக் குழுக்களையும் ஆதரித்தார்

அதனால், இந்திரா காந்தி என்ன செய்தார் தெரியுமா. அவர் எந்த ஒரு போராட்டக் குழுவையும் தனித்து ஆதரிக்கவில்லை. எல்லாக் குழுக்களையுமே ஆதரித்தார். அதை இப்படியும் சொல்லலாம். ‘நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தர உதவி செய்கிறேன். ஆனால், உங்களுக்கு உள்ளேயே நீங்கள் அடித்துக் கொண்டால் அது உங்களுடைய பசால். என்னிடம் மட்டும் வரவேண்டாம். அது தான் எனக்கும் நல்லது என் இந்தியாவுக்கும் நல்லது. அப்படித்தான் இந்திரா காந்தி நினைத்தார்.

தயவு செய்து இதை இந்திரா காந்தியின் ஒரு சதித் திட்டம் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். அப்படி ஒரு நினைப்பு வரலாம். வேண்டாங்க. தப்புங்க. அதை வேறு மாதிரி நினைத்து அரசியல் சாணக்கியம் என்று சொல்லிப் பாருங்கள். நன்றாக இருக்கும். பிரகாசமாக இருக்கும். நல்லா சூப்பராகவும் இருக்கும்.





அந்தச் சாணக்கியத்திற்குச் சாணைப் பிடிக்க இந்திய உளவுத் துறையையும் (Research and Analysis Wing) யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். சும்மா சொல்லக் கூடாது. அந்த உளவுத் துறையும் தங்கள் வேலைகளை இம்மியும் பிசகாமல் இடுப்பும் நகராமல் நன்றாகவே செய்து முடித்தன.

கடைசியில் என்ன ஆனது. விடுதலைக் குழுக்களுக்குள் கூடுதலாகத் தான் சண்டைகள் வந்தன. அப்புறம் அவை மூலைக்கு ஒன்றாய்ச் சிதறிப் போயின என்பது வரலாறு. இங்கேயும் இந்திரா காந்தியின் அரசியல் சாணக்கியம் அரிச்சுவடி படித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இலங்கையின் மீது இந்திராவுக்கும் கோபம்

தவிர, இந்திரா காந்தியிடம் இன்னொரு காரணமும் இருந்தது. 1970-களிலேயே இலங்கையின் மீது இந்திரா காந்திக்குக் கோபம் தொடங்கி விட்டது. கிழக்கு பாக்கிஸ்தான் மீது இந்தியா படையெடுத்தது. வங்காள தேசத்தை உருவாக்கியது. அந்தக் கதை உங்களுக்குத் தெரியும் தானே. அப்போதே அந்தச் சமயத்தில் இருந்தே இலங்கையின் மீது இந்திராவுக்கும் கோபம். இந்தியாவுக்கும் கோபம்.





மேற்கு பாக்கிஸ்தானில் இருந்து விமானங்கள் கிழக்கு பாக்கிஸ்தானுக்கு போக வேண்டும் என்றால் இந்தியாவின் அனுமதியைப் பெற வேண்டும். அதன் பின்னர்தான் இந்தியாவின் மேலே பறக்க முடியும். ஆக, வங்காள தேச விடுதலைப் போர் நடக்கும் போது, பாக்கிஸ்தானிய விமானங்கள் இந்திய வான்பரப்பில் பறக்க முடியவில்லை. அதனால், அவை இந்தியத் துணைக் கண்டத்தைச் சுற்றிக் கொண்டு கிழக்கு பாக்கிஸ்தானுக்குப் போக வேண்டி வந்தது.

அப்படி நெடும் தூரம் பயணித்த பாக்கிஸ்தானிய விமானங்களுக்கு, எண்ணெய் எரிபொருள் நீர் உணவு கொடுத்து ராஜ உபசாரம் செய்தது இலங்கை. அது  இந்திரா காந்திக்குக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் அவருக்கு இலங்கையின் மீது அப்போது இருந்தே கோபம். இரு… ஒரு நாளைக்குப் பார்த்துக்கிறேன்  என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தார். 


பிரபாகரன் இரண்டு முறை கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்
 
அந்த வகையில் தமிழீழப் போராட்டமும் சரியாக, கணக் கச்சிதமாக வந்து அமைந்தது. பழி தீர்க்கிற மாதிரி போராட்டக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கினார். பணத்தைக் கொடுத்தார். ஆயுதங்களை வழங்கினார். தமிழீழப் போராளிகளுக்கு பயிற்சிகள் கொடுக்க இந்தியாவில் முகாம்களையும் அமைத்துக் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்களில் பத்துக்கும் மேற்பட்ட பயிற்சித் தளங்கள் இருந்தன. ஆனால், எந்த ஒரு குழுவும் தனித்து நின்று மாபெரும் சக்தியாக விளங்குவதைத் தவிர்ப்பதிலும் ரொம்பவும் எச்சரிக்கையாக இருந்தார். இதுதான் நடந்த விஷயம். அரசியல் என்றால் சும்மா இல்லீங்க. உள்ளே ரொம்ப விஷயம் இருக்கிறது.

தமிழீழ விடுதலைத் தலைவர் பிரபாகரன், இந்தியாவின் தலைவர்களுக்காக இரண்டு முறை கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். இந்திரா காந்தி இறந்த போது முதல் முறை. அடுத்து எம்.ஜி.ஆர். இறந்த போது இரண்டாவது முறை. வேறு யாருக்கும் பிரபாகரன் அந்த மாதிரி கண்ணீர் விட்டு அழுதது இல்லை என்று தமிழ்ப் பெரியவர் பழ.நெடுமாறன் சொல்கிறார். அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம். போதுமான சான்றுகளுடன் இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது.


முந்திய பதிவுகள்:

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1






 

24 ஜூன் 2015

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1

[பாகம்: 1]

(இது ஒரு தொடர் கட்டுரை. மலேசியா தினக்குரல் நாளிதழில் 14.06.2015 தொடங்கி 19.06.2015 வரை ஆறு நாட்களுக்கு எழுதப்பட்டது. அதை அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.)
- மலாக்கா முத்துக்கிருஷ்ணன்



செத்தும் கொடுத்தார் சீதக்காதி. ஆனால், செத்துக் கொண்டு இருக்கும் போதும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். மரணத்தின் விளிம்பில் நின்ற போதும் மனிதநேயத்தை மறுக்கவில்லை.  மரணத்தை அணைத்துக் கொண்ட போதும் தமிழ் ஈழ மக்களை மறக்கவில்லை. அவர்களின் விடுதலைக்காக, கடைசி வரை நின்று போராடியவர். தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே ஈழத்துச் சோகம் நீங்கும் என்று அசை போட்டு வாழ்ந்த ஒரு நல்ல மனிதர். அவர் தான் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் கடைசி மூச்சு நிற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, தான் சம்பாதித்த தன் சொந்தப் பணத்தில் பல கோடி ரூபாய் தரத் தயாராக இருந்தார். பிரபாகரனை வரச் சொல்லி ஆளையும் அனுப்பி இருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆரால் அதிகமாகப் பேச முடியவில்லை. மூச்சுத் திணறல். மருந்து கொடுத்து இருக்கிறார்கள். மயக்கமான நிலை. இருந்தாலும் கடைசி நிமிடம் வரை ஈழத் தமிழர்களை அவர் மறக்கவில்லை. 



பிரபாகரன் போர் முனையில் இருந்தார். அதனால் அவர் வரமுடியவில்லை. அவர் சார்பில் தளபதிகளில் ஒருவரை அனுப்பி இருக்கிறார்கள். வழக்கமாக எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவித் தொகைப் பெற்றுச் செல்பவர், அந்தச் சமயத்தில் இல்லை. அவரும் போர்முனையில் இருந்தார். அதனால் எம்.ஜி.ஆருக்குப் பழக்கம் இல்லாத வேறோர் ஆளை அனுப்பி இருக்கிறார்கள்.

மனிதநேய மாந்தராக மறைந்து போனார்

அவரிடம் பணம் கொடுக்க எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை. கொடுக்கப் போவது பெரிய தொகை. எப்போதும் வாங்கிச் செல்வாரே, அவரையே அனுப்பி வையுங்கள் என்று எம்.ஜி.ஆர். சொல்லி இருக்கிறார். கடைசியில், அந்தப் பழைய ஆளைத் தேடிப் பிடித்து சென்னைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அவர் வந்து சேர்வதற்குள் காலதேவன் எம்.ஜி.ஆரைக் கொண்டு சென்று விட்டான்.

இருந்தாலும் அவருடைய உதவியாளர் மூலமாகப் பணம் போய்ச் சேர்ந்து இருக்கிறது. மொத்தம் 21 கோடி ரூபாய். அந்தக் காலத்துப் பணம் எவ்வளவாக இருக்கும். அதைக் கணக்குப் போட்டுப் பாருங்கள். இந்தப் பணத்தைக் கொண்டுதான் 18 முதியோர் காப்பகங்கள், நான்கு மருத்துவமனைகளைக் கட்டி இருக்கிறார்கள். மேலும் இரண்டு கப்பல்களையும் வாங்கினார்கள் என்பது ஒரு கூடுதலான தகவல். இந்த விஷயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். இது மட்டும் இல்லை. இன்னும் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.




எம்.ஜி.ஆர். ஒரு சாமான்யராகப் பிறந்தார். மூன்றாம் வகுப்பு வரை தான் படித்தார். ஒரு கலைஞராக வளர்ந்தார். ஒரு நடிகராக உயர்ந்தார். உண்மைதான். இருந்தாலும், ஒரு நடிகர் என்பதைத் தாண்டிய நிலையில், ஒரு மனிதநேய மாந்தராக மறைந்து போனார் என்பது தான் பெரிய விஷயம்.

அரசியலை விட்டு விடுங்கள். ஆயிரத்தில் ஒருவன். சினிமாவையும் விட்டு விடுங்கள். இரண்டையும் சேர்க்க வேண்டாம். தமிழ் மக்களுக்கு அவர் செய்த நல்லவற்றை மட்டும் மனிதத் தன்மையோடு பார்ப்போம். ஈழத் தமிழ் மக்கள் மீது வற்றாத வாஞ்சை காட்டிய பொன்மனச் செம்மலாக வாழ்ந்தாரே. அதைப் பார்ப்போம்.

தமிழ் ஈழ மக்களுக்கு சிவாஜியின் படம் என்றால் உயிர்

பிறப்பால் அவர் தமிழர் அல்ல. இருந்தாலும், தமிழராய்ப் பிறக்காமலேயே அவர் ஒரு தமிழராக வாழ்ந்து காட்டினாரே; தமிழர்களின் சரித்திரத்தில் சாதனை படைத்துக் காட்டி இருக்கிறாரே; வேறு என்னய்யா வேண்டும். அது தானே மிகப் பெரிய விஷயம். இன்றைக்கு அவரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால் அதற்கு அவர் செய்த நல்ல காரியங்கள் தானே முன் வந்து நிற்கின்றன. அந்த நல்ல செய்கைகள் தானே அவரை முன் நிறுத்தி அடையாளப் படுத்துகின்றன. 




எம்.ஜி.ஆரை ஒரு மலையாளி என்று சொல்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். ஒரு தமிழன் செய்யாததை எம்.ஜி.ஆர். செய்து காட்டி இருக்கிறாரே. அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள். என்னய்யா தமிழன், என்னய்யா மலையாளி, எல்லாருமே ஒரே தாய்மடி உறவுகள் தான். ஒரே இரத்தத்தில் ஊறிய மட்டைகள் தான். சில ஆளவந்தான்களும் சில சோளவந்தான்களும் செய்த குசும்புகள் குறும்புகள். அதனால் வந்த குளறுபடிகள். எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு, எல்லாரும் சேர்ந்து பிரபாகரனைக் கழற்றி விட்டார்களே. அதுதான் இப்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.

இந்த நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது. அவர் நடித்த ஒரு படத்தின் ஊதியத்தை அப்படியே தமிழ் ஈழ மக்களுக்கு கொடுத்து இருக்கிறார். தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் உதவிகள் செய்யச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். தமிழ் ஈழ மக்களுக்கு சிவாஜியின் படம் என்றால் உயிர். அவர் நடித்த வசந்த மாளிகை திரைப்படம் யாழ்ப்பாணத்தில் ஒரே தியேட்டரில் ஒரு வருடம் ஓடி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 




அடுத்து ஒரு சின்னக் கேள்வி. தமிழ்நாட்டின் தமிழ்த் தலைவர்களில் எத்தனைப் பேர், எம்.ஜி.ஆரைப் போல ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்து இருக்கிறார்கள். சொல்லுங்கள். விரல்விட்டு எண்ணி விடலாம். ஆரம்பத்தில் கலைஞர் உதவி செய்தார். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதிலே சொந்த நலன்கள் கொஞ்சமாய் மறைந்து நின்றன. சான்றுகள் இருக்கின்றன. எம்.ஜி.ஆரைப் போல நிறைவு நலன்கள் இல்லை.

கலைஞரின் பார்வை மற்ற தலைவர்களின் பக்கம் திரும்பியது

ஒரு சில கட்டங்களில் எம்.ஜி.ஆர். ஒரு சர்வாதிகாரியைப் போல நடந்து இருக்கிறார். தன்னைச் சீண்டிய சினிமாக்காரர்களையும், அரசியல் சித்துகளையும் தீண்டிப் பார்த்தார். இது எல்லாம் அரசியலிலும் சினிமாவிலும் சகஜமுங்க என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதான். ஆனால், நாம் இங்கே எம்.ஜி.ஆரின் மனித நேயத்தைத் தான் பார்க்கின்றோம்.



எம்.ஜி.ஆருக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால் பிரபாகரனைத் தன் மகனாக நினைத்தார். பழகினார். எம்.ஜி.ஆர். என்பவர் பிரபாகரனை ஒரு முதலமைச்சராக நின்று பார்க்கவில்லை. தகப்பன் ஸ்தானத்தில் நின்று ஒரு மகனாகத் தான் பார்த்துப் பழகி இருக்கிறார். ஆக, பிரபாகரனுக்குப் பண உதவிகள் செய்தார் என்றால், அதைத் தனிப்பட்ட வகையில் ஒரு மகனுக்கு ஒரு தகப்பன் செய்யும் உதவியாகவே நினைத்துப் பார்க்க வேண்டும்.

கலைஞரின் பார்வை உமா மகேஸ்வரன், சபாரத்தினம் போன்ற மற்ற மற்றப் போட்டித் தலைவர்களின் பக்கம் திரும்பியது. பிரபாகரன் சென்னைக்கு வரும் போது எல்லாம் எம்.ஜி.ஆரைச் சந்திப்பார். ஆனால், கலைஞரைச் சந்திப்பது இல்லை. ஒரே ஒரு முறைதான் சந்தித்துப் பேசி இருக்கிறார். அதனால், கலைஞருக்குப் பிரபாகரன் மீது வருத்தம். இரண்டு பேருக்கும் இடையே லேசான விரிசல். கலைஞரிடம் நல்ல நோக்கம் இருந்து இருக்கிறது.

தமிழ் ஈழ் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்து இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே தொங்கி நின்ற அரசியல் பிணக்குகள் தான் விரிசலுக்கு மூலகாரணம். அதனால் பிரபாகரன் ஒரு சொக்கட்டான் காயாக மாறிப் போனது தான் மிச்சம்.

யாழ்ப்பாண போராளிக் குழுக்களுக்குள் போட்டிப் பூசல்கள்

ஆக, தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த கலைஞர் கழகத் தோழர்களிடம் நன்கொடைகளைத் திரட்டினார். திரட்டிய தொகையை அப்படியே கொண்டு போய், உமா மகேஸ்வரன், சபாரத்தினம், பாலக்குமார் போன்ற போட்டித் தலைவர்களிடம் கொடுத்து இருக்கிறார். எவ்வளவு தொகை என்று தெரியவில்லை. ஆனாலும், 60 இலட்சம் ரூபாய் என்று நம்பகரமான வட்டாரங்கள் சொல்கின்றன. இந்தக் கட்டத்தில் எம்.ஜி.ஆர். இரண்டு கோடி ரூபாயைப் பிரபாகரனுக்கு கொடுத்து இருக்கிறார்.



சரி. அடுத்து தமிழகத்தின் மற்ற மற்றத் தலைவர்கள் ஈழ விடுதலைக்கு தொடர்ந்து உதவிகள் செய்தார்களா. இல்லை என்றுதான் பதில் வருகிறது. ஏன் என்றால், போட்டிக் குழுத் தலைவர்களும் அவர்களைத் தேடி வரவில்லை. இவர்களும் ஆள் அனுப்பிப் பார்க்கவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. விடுதலை குழுக்களுக்கு இடையே பிளவுத் தன்மை தோன்றுவதற்கு, தமிழகத் தலைவர்களின் போட்டி மனப்பான்மையே ஒரு காரணமாக இருந்தது. அதை யாரும் மறுக்க முடியாது. தமிழர்கள் கவலைப்பட வேண்டிய விஷயம்.

ஆக, யாழ்ப்பாண போராளிக் குழுக்களுக்குள் போட்டிப் பூசல்கள் வளர்ந்து போனதற்கு தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தான் மூல காரணமாக இருந்தார்கள். இது என் கருத்து. அதை யாராலும் மறுக்க முடியாது என்று என்னால் சொல்லவும் முடியாது. எம்.ஜி.ஆருக்கு யார் நண்பனோ அவன் எனக்கு எதிரி. கலைஞருக்கு யார் நண்பனோ அவன் உனக்கு எதிரி.

இப்படித் தான் போட்டியும் பொறாமைகளும் பரத நாட்டியம் ஆடி இருக்கின்றன. ஆக யாழ்ப்பாணத்து அரசியலில் தமிழ்நாட்டு அரசியலும் நுழைந்து கண்ணாமூச்சி விளையாடி இருக்கிறது. அதனால் பாதிக்கப் பட்டது ஒட்டு மொத்த ஈழத்துத் தமிழர்கள். சந்தோஷப் பட்டது தமிழகத்தின் சில தானைத் தலைவர்கள். இப்போது வருந்தி என்ன பயன். வெள்ளம் அணையை உடைத்துக் கொண்டு போய் விட்டது.

யாழ்ப்பாணத்து வரலாற்றை மாற்றி எழுதி இருக்கலாம்

தமிழகத்துச் சகோதரர்கள் கடைசி நேரத்தில் வந்து உதவி செய்வார்கள் என்கிற ஏக்கத்தில், தமிழக மண்ணைப் பார்த்தவாறே பல்லாயிரம் ஜீவன்கள் யாழ்ப்பாணத்தில் உயிரை விட்டு இருக்கின்றன. அப்போது எம்.ஜி.ஆர். மேலே இருந்தார். கீழே இறங்கி வர முடியாது. கலைஞர் கீழே இருந்தார். ஆனால் அவர் இறங்கி வரவே இல்லை. பிடித்த முயலுக்கு மூனே முக்கால கால் என்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வது. துயிலரங்கில் ஓர் உண்ணாவிரதம். இது உலகம் அறிந்த விஷயம். என் மீது வழக்குப் போடலாம். ஆனால் எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்க முடியாது. 




அந்த மனுஷன் நினைத்து இருந்தால்… மறுபடியும் சொல்கிறேன். அந்த மனுஷன் நினைத்து இருந்தால் யாழ்ப்பாணத்து வரலாற்றை மாற்றி எழுதி இருக்கலாம். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. பரவாயில்லை. என்ன செய்வது. அவரால் முடியவில்லை. அவருக்கு அந்த மாதிரியான கிடுக்குப்பிடி. ஒன்று மட்டும் உண்மை. பல்லாயிரம் உயிர்களின் சப்தநாடிகள் இன்னும் ஈனக் குரல்களை எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. அந்தப் பாவம் யாரையும் சும்மா விடாது. துரோகம் செய்தவர்களையும் அவர்களின் வாரிசுகளையும் அழித்துவிடும். ஓர் உயிர் இல்லை. இரண்டு உயிர் இல்லை. ஒரு லட்சம் உயிர்கள். அத்தனையும் மனித உயிர்கள். ஆக, உலக இரத்தங்கள் ஒன்று சேர்ந்து அழுகின்றன.

1970-களின் இறுதிக் காலத்திலும், 1980-களின் தொடக்கக் காலத்திலும், ஈழ விடுதலைக்காகப் பலப் போராட்டக் குழுக்கள் யாழ்ப்பாணத்தில் தோன்றின. அவை விடுதலை உணர்வுகளின் தாக்கங்கள். ஏறக்குறைய 30 குழுக்கள். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு போராட்டக் குழு. எல்லாமே ஈழத்துத் தமிழர்களின் நலன்களின் அக்கறை காட்டியவை. இல்லை என்று சொல்லவில்லை.

காந்திய அகிம்சா முறையில் போராடிப் பார்த்தார்கள்

ஆனால், அவர்களிடம் ஒன்று மட்டும் இல்லை. அதுதான் ஒற்றுமை. ஆளாளுக்குப் பதவிகள் வேண்டும் என்கிற ஆசைகள், திமிர் பிடித்த இறுமாப்புகள். அதனால், புற்றீசல்கள் மாதிரி உட்பூசல்கள்.  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம், நம்பிக்கை போன்றவை எல்லாம் அடிபட்டுப் போய் கிடந்தன.

இந்தக் கட்டத்தில், யாழ்ப்பாணப் போராட்டக் குழுக்களை ஒன்றிணைத்து ஒரு பெரிய சக்தியாக உருவாக்க வேண்டும் என்பதே பிரபாகரனின் இலட்சியமாக இருந்தது. ஆரம்பத்தில் காந்திய அகிம்சா முறையில் போராடிப் பார்த்தார்கள் சரிபட்டு வரவில்லை. சிங்களச் செறுக்குகள் சிரித்துக் கொண்டே கழுத்தை அறுத்தன. இலங்கைத் தமிழர்களின் தந்தை என்று போற்றப்படும் தந்தை செல்வா அவர்களும் மனம் உடைந்து போனதற்கு சிங்களர்களின் அடக்கு முறைதான் காரணம்.

சிங்களர் அடுக்கடுக்காய்ச் செய்த கொலைகள். பெண்மை நாசங்கள். தமிழர் உடைமைச் சேதங்கள் போன்றவை தந்தை செல்வாவிடம் இருந்து பிரபாகரன் பிரிந்து போனதற்கு மூல காரணங்களாக அமைந்தன. அமைதியாகப் போனால் ஒன்றும் நடக்காது. காந்தியீய முறை சரிபட்டு வராது என்று தோன்றியது. வேறுவழி இல்லாமல் தான் பிரபாகரன் ஆயுதங்களைத் தூக்கினார்.

இந்தக் கட்டத்தில் வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் இந்தக் குழுக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் பண உதவி செய்தனர். அதிலே சுகம் கொண்ட போராளிக்குழுத் தலைவர்கள் சிலர், தலைமைப் பதவிக்குச் சவாலாக இருந்தவர்களை ராத்திரியோடு ராத்திரியாக மூட்டைக் கட்டி மேலோகத்திற்கு அனுப்பி வைத்தனர். ராத்திரிக் களையெடுப்புகள் என்று சொல்வார்கள்.

சிங்களர்களை எதிர்ப்பதே தமிழர்களின் நோக்கமாக இருந்தது

அவை 1981, 1982, 1983 ஆம் ஆண்டுகளில் நடந்த பதவி மோகக் கொலைகள். ’நீ தாழ்ந்த சாதி நான் மேல்சாதி’ என்கிற சாதிப் பிரச்சினையும் வந்து தொலைத்தது. அதற்குத் தூபம் போட்டது தமிழகத்துத் தலைவர்கள் தான். பெயர்கள் வேண்டாம். சணடைக்கு வருவார்கள். உடம்பு தாங்காது. ஆக, நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

போராட்டக் குழுக்களுக்கு இடையே நடந்த களையெடுப்புகளில் எல்லாக் குழுத் தலைவர்களுமே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். பிரபாகரனும் சம்பந்தப்பட்டு இருக்கிறார். இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. ஆனால், பிரபாகரனை மட்டும் தனித்துப் பார்க்க வேண்டாம் என்பதே என் கருத்து.

என்ன தான் அசிங்கமான களையெடுப்புகள் நடந்து இருந்தாலும், சிங்களர்களை எதிர்ப்பதே தமிழர்களின் நோக்கமாக இருந்து இருக்கிறது. அப்படி நினைத்து வாழ்ந்தவர் தான் பிரபாகரன். மற்றத் தமிழ்க் குழுக்களை அடித்துப் பிடித்து இழுத்து ஒன்றாகச் சேர்த்து வைத்தாரே அதுதான் பெரிதாகப் படுகிறது. இந்த விஷயத்தில் பிரபாகரன் என்கிற ஒரு தனி மனிதரை மட்டும் தனிப் பிரித்துக் காட்டுவது நல்லது அல்ல.

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. புளொட் (PLOT) எனும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்த உமா மகேஸ்வரனும், விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரனும் சென்னை பாண்டி பஜாரில் துப்பாக்கிச் சண்டைப் போட்டுக் கொண்டார்கள். அதற்கு யார் காரணம். தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தான் காரணம்.  அதை இங்கே விரிவாகவும் எழுத முடியாது. எழுதவும் நான் விரும்பவில்லை. இருந்தாலும் கட்டுரையைத் தொடர்ந்து படித்தால், அந்தத் தலைவர் யாரென்று உங்களுக்கும் தெரிய வரும்.

சிங்களர்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கலம் இறங்கின

1980-களில், சிங்களரின் கொலைவெறி நாடகங்களைத் தாங்க முடியாமல், பல ஆயிரம் கல்லூரி மாணவர்கள், தங்கள் படிப்பைப் பாதிலேயே நிறுத்திவிட்டு தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளில் சேர்ந்தனர். எல்.டி.டி.இ. என்கிற தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE); புளொட் என்கிற தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் (PLOT); டெலோ என்கிற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO); இ.பி.ஆர்.எல்.எவ். என்கிற ஈழ மக்கள் புரட்சிகர விடுதல் முன்னணி (EPRLF); ஈரோஸ் என்கிற ஈழவர் ஜனநாயக விடுதலை அமைப்பு (EROS) போன்றவை தனித்துவம் வாய்ந்து விளங்கின. அவை முக்கியமான குழுக்கள் ஆகும்.

1980-1982 ஆம் ஆண்டுகளில், சிங்களர்களுக்கு எதிராக வட்டாரத் தமிழீழ விடுதலைப் புலிகள் கலம் இறங்கின. கொரில்லாத் தாக்குதல்கள் தீவிரம் அடைந்தன. இந்தக் காலக் கட்டத்தில் தான் சகோதரப் படுகொலைகளும் நடந்தன. ஒரு கைதியின் டைரி நூலில், எழுத்தாளர் கே. கீதைப்பிரியா அதைப் பற்றி விளக்கமாக விரிவாக எழுதி இருக்கிறார். ஓர் அருமையான ஆய்வுப் புதினம். அந்த நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள். இலங்கைத் தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள், அநீதியின் அநியாயங்கள் மிக மிகத் தெளிவாக விளக்கப்பட்டு இருக்கின்றன.

நாளைய கட்டுரையில் இந்திரா காந்தி என்ன உதவிகள் செய்தார். இந்திய உளவுத் துறையின் ஊடுருவல்கள் எப்படி இருந்தன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். இவை எல்லாம் ரகசியங்கள் இல்லை. உலகம் பூராவும் தெரிந்து விட்டது. அதனால், பயம் இல்லாமல் எழுதலாம். படிக்கலாம். நாளைய கட்டுரையைப் படிக்கத் தவற வேண்டாம். (தொடரும்)