11 அக்டோபர் 2015

காமராஜர்

உலக அரசியலை அலசிப் பாருங்கள். நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக, சில பல தலைவர்கள் தங்கள் சொந்த வீட்டை மட்டுமே வழிநடத்தி வந்த அல்லது வருகின்ற அவலங்கள் தெரிய வரும். 


சுயநலத்துக்காகவும் பதவிப் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அந்த மாதிரியான தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற் போல, ஒரு சில வைரங்களும் தோன்றுகின்றன. பொதுநலத்தை உயிராகப் போற்றி உச்சி முகர்ந்தும் பார்க்கின்றன.

அரசியலில் லஞ்சம், அதிகாரத்தில் ஊழல், சுயநலப் போர்வையில் அவலங்கள்... அப்படிப்பட்ட ஓர் இடத்தில் இப்படியும் ஒரு மாமனிதர் வாழ்ந்து இருக்கிறார் என்பதே பெரிய ஆச்சயரியம். சாமான்ய நான்காம் வகுப்பு வரை கல்வி கற்ற ஒருவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டு இருக்கிறீர்களா!


அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர். மூத்தத் தலைவர்கள் அரசியலில்  பதவி வகிக்கக் கூடாது என்று ஒரு சட்டத்தையே கொண்டு வந்து, அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதிவியையே துறந்து சென்றவர்.


கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும் என்று கூறி... பட்டித் தொட்டிகளில் எல்லாம் பள்ளிக் கூடங்களைக் கட்டியவர். ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்று புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்.

தான் முதலமைச்சராக இருந்த போதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் தராதவர். சினிமாவில்தான் இதுபோன்ற கதாபாத்திரங்களைப் பார்க்க முடியும்.

ஆனால் தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாச்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத மனிதர் தான் காமராஜர்.



காமராசரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து இருந்து இருந்தால்... தரணிப் போற்றும் அளவுக்கு மனிதநேயம் அங்கே உயர்ந்து போய் சிகரம் தொட்டு இருக்கும் என்பது என் கருத்து.

கர்ம வீரர் காமராஜர்... அந்த மனிதர் சாமான்ய ஆசாபாசங்களைக் கடந்து போனவர்... கடைசி காலத்தில் இரண்டே இரண்டு வேட்டிகள் மட்டுமே அவரிடம் இருந்தனவாம்... அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள்.... என்னே மனிதம்... என்னே இலட்சியம்...

கிங் மேக்கர் என்று அழைக்கப்படும் காமராஜர், 1903 ஆம் ஆண்டு ஜீலை 15ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில், குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

ஏழ்மையான குடும்பம். ஏழ்மையின் காரணமாகவும் படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது.

1930ஆம் ஆண்டு ஏபரல் மாதம் வேதாரண்யத்தில் காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை.

அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்து இருக்கிறார். ஏறக்குறைய 8 ஆண்டுகள் அவர் சிறையில் கழித்து இருக்கிறார்.

1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.

கர்ம வீரர் காமராஜர்... இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை.

ஆனால் ஆங்கிலம் தெரியாமல் போனாலும், தலை சிறந்த தலைமைத்துவத்தைத் தமிழகத்திற்கு வழங்கினார். அவருடைய காலக் கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டது தமிழ்நாடு மாநிலம் ஆகும். இப்போது பாருங்கள்.

கர்ம வீரர் காமராஜர்... காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம் எம்.பக்தவத்சலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா....

“பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள். அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. அதனைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள் என்பதுதான்”

அவருடைய நல்லாட்சியில் கல்வித் துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளைக் கட்ட உத்தரவிட்டார்.

பழைய பள்ளிகள் சீர் செய்யப் பட்டன. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி.. ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார்.

எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப் படுத்தினார்.

ஏழைச் சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.

ஜாதி வகுப்பு... ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பினார். எல்லாப் பள்ளி பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார்.

அவர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதன மொழியாக்கினார். அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார்.

அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்களை அறிமுகம் செய்தார். நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.

அவரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை அணை மணிமுத்தாறு; அணை கீழ்பவானி அணை பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப் பட்டன.

 தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி; சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை; சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழில்கள் தமிழகத்தில் உருவாயின.

அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு, இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்

கர்ம வீரர் காமராஜர்... இப்படிப் பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால் தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இவ்வளவும் செய்த அவர், அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது.

காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர், எல்லா மூத்தக் காங்கிரஸ் தலைவர்களும் தங்களின் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு... 

நாட்டு நலனுக்காக கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கினார். பிரதமர் நேருவிடம் பரிந்துரையும் செய்தார்.

அவரைத் தொடர்ந்து, லால் பகதூர் சாஸ்திரி; ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய்; எஸ்.கே. பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர்.

அதே ஆண்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பைக் காமராஜருக்கு ஜவகர்லால் நேரு வழங்கினார்.
அதற்கு அடுத்த ஆண்டே, நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.

இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவினார். அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திரா காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர்.

அந்த இரண்டு தலைமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால்... காமராஜரை  “கிங்மேக்கர்” என்று பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும் அழைத்தனர்.  இப்படி தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியைத் தந்த காமராஜர், தனது கடைசி மூச்சு வரை சமூகத் தொண்டிலேயே குறியாக இருந்தார்.

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தனது 72 ம் வயதில காலமானார்.

அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு இந்தியாவின் மிக உயரிய “பாரத ரத்னா” விருதை இந்திய அரசு வழங்கி கௌரவித்தது.

சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர்.

ஆம். அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. மேலும் சிறு வயதிலேயே கல்வியைக் கைவிட்டதை நினைத்து வருந்திய அவர், தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்கலை வாசிக்க கற்றுக் கொண்டார்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத வீட்டில் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!

தன் குடும்பம் என்பதற்காக, தன் தாய்க்குக் கூட எந்தச் சலுகையும் வழங்கியது இல்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா...

சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தககளும்தான். பதவிக்குரிய பந்தா அவரிடம் இருந்ததே இல்லை.

எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும் கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு.

அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டும் அல்ல... உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?

முறையான கல்வி இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறியாக கொண்ட ஒருவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வளவு செய்து இருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்”. 

நல்லாட்சி என்ற அவருடைய சமதர்ம சிந்தனையும்... நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும்... சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம்

1990களில், சிங்கை வானொலியில், என் நண்பர் அழகிய பாண்டியன் பணியாற்றிய காலத்தில் வானம் வசப்படும் எனும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதில் இருந்து தொகுப்பட்டதே அந்தப் படிக்காத மேதையின் கட்டுரை. வானம் வசப்படும்...

அவர் நமக்கு விட்டுச்சென்ற பாடம் என்ன? முத்தண்ணா... என்று கவிஞர் அருள் கேட்கிறார்... இந்தக் கட்டுரையைப் படித்து முடித்ததும் கண்கள் குளமாகின்றன... அதுதான் அவர் நமக்கு விட்டுச் சென்ற ஒரு பாடம்...

10 அக்டோபர் 2015

இணையம்

இணையம் எனும் சொல் இலக்கியத்தில் இருந்து கிடைத்த சொல் என்றும் சிலர் சொல்வது உண்டு. அது தப்பு. இந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்; பயன்படுத்தியவர் யார் தெரியுமா. மலேசியாவைச் சேர்ந்த ஆதி. இராஜக்குமாரன்.
 

அவர்தான் அந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர். தன்னுடைய ’நயனம்’ வார இதழில் பயன்படுத்தியவர். பின்னர் காலத்தில், இந்தச் சொல் தமிழ் டாட் நெட் எனும் இணையத் தளத்தில் பயன்படுத்தப் பட்டது. அதன் மூலமாக உலகப் பிரபலமானது.

இணையம் (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலை அமைப்புகளின் கூட்ட்ய் இணைப்பான பெரும் வலை அமைப்பைக் குறிக்கும். இணைய நெறிமுறைகளைப் பின்பற்றி தரவுப் பறிமாற்றம் (பாக்கெட் சுவிட்சிங்) மடைமாற்றி மற்றும் திசைவியின் வழி நடைபெறுகிறது.

இணையம் என்னும் சொல்லானது செப்புக் கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டு உள்ள கணினிவலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும்.

உலகளாவிய வலை (world wide web) என்பது உலகளாவிய முறையில் இணைப்பு கொண்ட கட்டுரைகள், எழுத்துகள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு. உலகளாவிய வலை என்பது வேறு.

இப்போது உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் தமிழில் இணையம் எனும் சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் உலகில் ஆதி. இராஜக்குமாரன், கணினிக் கலைச் சொற்களின் முன்னோடி. அவருக்கு நம்முடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

பெண்கள் அதிகம் பேசுவது ஏன்

பெண்கள் அதிகம் பேசுவதாக, அண்மைய கால ஆய்வுகளின் வழி கண்டு அறியப்பட்டு உள்ளது. ஓர் உயிரியின் தோற்றம், செயல், பண்பு போன்றவற்றைக் கட்டுப் படுத்தும் காரணிகளாக அந்த உயிரியின் மரபணுக்கள் அமைகின்றன. இந்த மரபணுக்கள், உடலில் உற்பத்திச் செய்யப்படும் புரதத்தின் மூலம் அமைகின்றன. 


இந்த மரபணுக்கள், பெற்றோர்களிடம் இருந்து பெறப் படுகின்றன. எனவே குழந்தைகளின் செயலும் தோற்றமும் அவற்றின் பெற்றோரைப் போலவே அமைகின்றன. ஆண் பெண்களுக்கு இடையே உடல் ரீதியான அமைப்பு, நடை, குரல் போன்ற பண்புக் கூறுகளில் தெளிவான வேறுபாடுகள் காணப் படுகின்றன.

பொதுவாக பெண்கள், ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுபவர்களாக உள்ளனர். அறிவியலார்கல் அதனை பால் (sex) சார்ந்த பண்பாக ஏற்றுக் கொண்டு உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் அதிகம் பேசுவதற்கான காரணங்களை அறிய அண்மைய காலமாக ஆய்வுகள் செய்யப் பட்டன.

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளர் மார்க்ரட் மெக்கார்த்தி; உளவியலார் ஜெ மைக்கேல் பவ்வர் ஆகிய இருவரும் எலிகளைக் கொண்டு விரிவான சோதனைகளை மேற்கொண்டனர்.

எலிகளில் பெண் எலிகள் அதிகம் பேசுமா என்று தெரியவில்லை. சொல்ல முடியாது. அவற்றின் நயன மொழியை நானும் படித்தது இல்லை. நீங்களும் கேட்டது இல்லை. தனியாக நயனமொழி கல்லூரி ஒன்றைத் தொடங்கலாம். விலங்குகளை விரிவுரையாளர்களாகப் பணிகளில் அமர்த்தலாம்.

அவர்களின் ஆய்வு முடிவின்படி பாக்ஸ்பி2 (Foxp2) என்னும் புரதமே அந்த வேறுபாட்டிற்கு காரணம் எனக் கண்டு அறிந்தனர். பாக்ஸ்பி2 புரதத்தினை “மொழிப் புரதம்” என அறிவியலார் அழைக்கிறார்கள். இந்தப் புரதத்தை உற்பத்தி செய்யும் பாக்ஸ்பி2 மரபணுவை 2001-ஆம் ஆண்டு கண்டு பிடித்தார்கள்.

பாக்ஸ்பி2 மரபணுவினால் சுரக்கப்படும் பாக்ஸ்பி2 புரதம், பெண்களின் மூளையில் அதிகம் காணப் படுகின்றன. அதனால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகின்றனர் என்று கண்டு அறியப் பட்டது.

பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் விரைவாக அதிக வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதற்கும் அந்தப் பாக்ஸ்பி2 மரபணுக்கள் தான் காரணம். இன்னும் ஒரு கூடுதலான தகவல்.

ஒரு பெண் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 13000 வார்த்தைகளை ஓர் ஆணைக் காட்டிலும்கூடுதலாகப் பேசுகின்றாராம். ஒரு புள்ளி விவரம் சொல்கின்றது.

என் சொந்தக் கருத்து... தப்பாக நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் அந்தத் தொல்லை தரும் பாக்ஸ்பி2 மரபணுவை எப்படியாவது தேடி கண்டுபிடிக்க வேண்டும். அறிவியலாளர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நடைமுறைக்கு வரவில்லை.

அந்த மரபணுவை அழிப்பதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும். அதனால், ஆண்களின் ஆயுட்காலமும் கொஞ்சம் கூடுதலாகும். இது என் கருத்து. புதிய பார்வை நாளிதழில் அடியேன் எழுதிய கட்டுரையின் சுருக்கம். -மலாக்கா.....

09 அக்டோபர் 2015

அருள் ஆறுமுகம்

கவிஞர் அருள் ஆறுமுகம். அவரை இங்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.



பல்லாண்டுகளாக எழுத்துலகில் பவனி வருகிறார். நாடறிந்த கவிஞர், எழுத்தாளர், பன்முகக் கலைஞர். மரபுக் கவிதைத் துறையில் மிகுந்த ஈடுபாடு. சிலாங்கூர், கோலகுபு பாரு நகரில் பிறந்தவர். ஆனால்,

இப்போது அசல் ஈப்போ மண்ணின் மைந்தராகி விட்டார். சமூகப் பணிகளில் ஆர்வம். அதையும் தாண்டிய நிலையில் தமிழ் மொழியின் மீது அளப்பரிய பற்றுதல்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தன்முனைப்பு ஊட்டும் பேச்சு, நன்னெறிக் கோட்பாட்டு உரைகள் வழங்குவதில் அதீத நாட்டம். ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றத் தலைவர். பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். 


2007 ஆண்டு ஈப்போ தமிழர் திருநாள் விழாக் குழுவின் தலைவராகச் செயல் ஆற்றியவர். 2014 ஆம் ஆண்டு அனைத்துலக கவிதைப் பெருவிழாவை ஈப்போவில் நடத்தி சாதனை செய்தவர்.

அண்மையில் ‘மணக்கும் சேவையும் மனித நேயமும்’ எனும் ஓர் அருமையான் தகவல் புதினத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, சில கவிதை தொகுப்புகளையும் வெளியீடு செய்து இருக்கிறார்.

இவர் அரச மலேசியக் காவல் உளவுத் துறையில் ஓர் அதிகாரி (Criminal Investigation).  மின்னியல்-மின்னணுவியல் பட்டயக் கல்வியும், சட்டக் கல்வியும் பெற்றவர். காவல் துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக 12 முறை நற்சான்றிதழ்கள் பெற்றவர்.

கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவர். கவிஞர் ஆறுமுகம் அவர்களுக்கு ‘அருள்’ என்ற அடைமொழியைக் கவிதை பாடி வழங்கியவர் அமரர் சா.சி.குறிஞ்சிக்குமரனார். 


இவரின் சேவைகளைப் பாராட்டி பேரா மாநில மன்னர் 2006 ஆம் ஆண்டில் பி.ஜே.கே பதக்கத்தையும், 2009 ஆம் ஆண்டில் B.P.P. எனும் சிறப்பு வீரப் பதக்கத்தையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

தமிழ் மொழி, கல்வி, சமுதாயம், கலை, பண்பாடு, ஒற்றுமை என பல்முனைச் சேவை ஆற்றி வரும் கவிஞர் அருள் ஆறுமுகம் அவர்களுக்கு தமிழ் முத்துகள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

(தனிப்பதிவு: அவருடைய உணவகத்தில் சாப்பிட்ட பின்னர் பணம் கொடுத்தால் வாங்க மறுக்கிறார். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னிடம் மட்டும் தான்.)

ஒளிச்சேர்க்கை

ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பு (Photosynthesis) என்பது தாவரங்கள், பாசிகள் மற்றும் சிலவகை பாக்டீரியாக்கள் போன்றவற்றில் நிகழும் ஒரு உயிர்வேதியியல் நிகழ்வு ஆகும். 

 

தாவரங்களின் எல்லா இலைகளிலும் ஓர் உணவுத் தொழிற்சாலை உள்ளது. இலைகளின் செல்களில் உள்ள பச்சையம் (குளோரோபில்) சூரிய ஒளியில் இருந்து பெறும் சூரியனின் ஆற்றலை, காற்றில் உள்ள கரியமில வாயு மற்றும் வேரில் இருந்து உறிஞ்சப் பட்டு இலையை அடையும் நீரின் நுண்துளிகளையும் (மாலிக்யூல்கள்) பயன்படுத்தி, சர்க்கரைச் சத்தாக மாற்றுகிறது. இதைத் தான் ஒளிச்சேர்க்கை என்கிறோம். 

சர்க்கரை அல்லது மாவுச்சத்தின் உபரிப் பொருளாக ஆக்சிஜன் (பிராண வாயு) என மாற்றம் காண்கிறது. இந்த உயிர்க்காற்று இலைகளின் அடிப்பகுதியில் உள்ள ஸ்டோமேட்டா செல்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

கூடவே நீரும் ஆவியாக வெளியேறுகிறது. அதனால் தான் நாம் வெயில் நேரத்தில் மரத்தடியில் ஒதுங்கும்போது புத்துணர்வு பெறுகிறோம். குளிர்ச்சியும்
பெறுகிறோம். 



இதே ஸ்டோமேட்டா செல்கள்தான் ஒளிச்சேர்க்கை நிகழாத சமயங்களில் அல்லது சூரியஒளி இல்லாத பகல் பொழுதிலும், இரவு நேரங்களிலும் ஏனைய உயிரினங்களைப் போல காற்றைச் சுவாசிக்கின்றன.

அதாவது காற்றிலுள்ள பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. அதனால் இரவு நேரங்களில் மரத்தடியில் இளைப்பாறும் போது புத்துணர்வு தோன்றாது.

அதாவது ஒளிச்சேர்க்கையின் மூலம் இந்த உயிரினங்கள் ஒளியின் ஆற்றலைப் பயன்டுத்திக் கொள்கின்றன.

தாவரங்களில் உள்ள பச்சையம் என்ற நிறமி பெரும்பாலும் இதற்கு உதவுகிறது. ஒளிச்சேர்க்கை வழியாகத் தாவரங்களும், பாசிகளும் கரியமில காற்றைக் கிரகித்து உயிர்க் காற்றை (அல்லது ஆக்சிசனைக்) கழிவுப் பொருளாக வெளிவிடுகின்றன.

ஒளிச்சேர்க்கையின் வழி சூரியனில் இருந்து பற்றப் படும் (பிடிக்கப் படும்) ஆற்றல் மிக மிகப் பெரியது. ஓர் ஆண்டிற்கு ஏறத்தாழ 100 டெரா வாட் (100,000,000,000,000 வாட்) மின் ஆற்றல் பிடிக்கப் படுவதாகக் கணக்கிட்டு இருக்கின்றார்கள். உலக முழுவதும் மக்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் மொத்த மின் ஆற்றலின் அளவைப் போல் ஏழு மடங்கு கூடுதல் ஆகும்.

இந்த ஒளிச்சேர்க்கையால் மரங்கள், செடிகள், கொடிகள், பாசிகள், பாக்டீரியாக்கள் போன்றவை 100,000,000,000 டன் கரியமிலக் காற்றைக் கிரகித்து உயிரகப் பொருளாக (biomass), மற்ற உயிர்ப் பொருட்களுக்கு மாற்றிக் கொடுக்கின்றன. கையெடுத்துக் கும்பிட வேண்டும். 

 புளிய மரமும் பேயும்

கொஞ்சம்கூடக் காற்றின் அசைவு இல்லாத சமயங்களில், பெரிய அடர்ந்த புளியமரம் போன்ற மரத்தடியில் உறங்கினால் உங்களைப் பேய் அடித்துக் கொல்லும் என்று பாமர மக்கள் இன்றும் நம்புகிறார்கள்.

                               அறிவியல் அடிப்படையிலான விளக்கம்

காற்று அசைவு இல்லாவிட்டாலும் இலைகள் சுவாசிக்கும் போது வெளியேறும் கரியமிலவாயு காற்றைவிடச் சற்று கனமானது. நாம் சுவாசிக்கும் காற்றில் கரியமில வாயு 0.5 விழுக்காடுதான் உள்ளது. 

ஆனால், இரவு நேரங்களில், அதுவும் காற்றின் சலனம் இல்லாவிட்டால் மரத்தடியில் கரியமிலவாயுவின் அளவு அதிகரிக்கும். அதனால் நமக்கு மூச்சு அடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து இருப்பவர்களின் உயிரை எடுப்பது இந்தப் பேய்தான்.

      ஒவ்வொரு மரத்திலும் பொறியியல் கட்டிடக்கலை தொழில்நுட்பம்
ஆஸ்திரேலியா நாட்டில் வளரும் சில தைல மரங்கள் (யூக்கலிப்டஸ்) 300 அடி உயரம் வளரக் கூடியவை. அமெரிக்க கண்டத்தில் வளரும் சேக்கோவியா மரங்கள் 400 அடிக்கும் கூடுதலாக வளர்கின்றன. அவற்றை நாம் பார்த்தது இல்லை.

பெரிய புளியமரம் அல்லது வேப்ப மரம் அல்லது ஆல மரங்கள் 60-70 அடி உயரம் வரை வளர்கின்றன. 20-30 அடி தடிமன் கொண்ட அடிமரம். அவற்றில் இருந்து பிரிந்து செல்லும் கிளைகள், கொப்புகள். அவற்றில் வளரும் இலைகள், காய்க்கும் காய்கள், பழங்கள். இவை எல்லாம் 60-79 டன்களுக்கு மேல் எடை கொண்டவை. காற்றுக்கும் வளைந்து கொடுத்து அதே சமயம் உறுதியாகவும் நிற்பவை.

 http://siragu.com/wp-content/uploads/2013/10/puvi-veppamayamaathal-7.jpg
 
இந்த ஒட்டுமொத்த எடையையும், பூமிக்கு அடியில் இருக்கும் வேர்கள், ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் போல் தாங்கிக் கொள்கின்றன. அடிமரத்தில் இருந்து பிரியும் கிளைகள், கோப்புகள் எல்லாமே ஒரு ஜியோமிதி கணித அடிப்படையில் பிரிந்து செல்கின்றன. அதாவது கட்டிடக்கலை வல்லுநர் திட்டமிடுவது போல மரமும் ஒரு திட்டத்துடன்தான் கிளைகளைப் பரப்புகிறது.

அதே சமயம் இலைகளுக்குப் போதுமான அளவில் சூரிய ஒளி கிடைப்பதையும் உறுதி செய்து கொள்கிறது. அப்போதுதான் நாம் முன்பே குறிப்பிட்ட ஒளிச்சேர்க்கை உணவு தயாரிப்பு எல்லாமே நிகழ முடியும்.