24 மே 2018

அழகிய மகள் அல்தான்தூயா

அல்தான்தூயா ஓர் அழகிய மகள். அற்புதமான உயிரோவியம். மங்கோலிய மண்ணின் மாதுளம் மடந்தை. ஆனாலும் மலேசிய அரசியல் வளாகத்தில் மாபெரும் அமளி துமளியை ஏற்படுத்திய பேரிளம்பெண். அரசியல்வாதிகள் சிலரின் தலை எழுத்துகளைச் சொக்கட்டான் காய்களாக மாற்றிப் போட்டவர்.


அதையும் தாண்டிய நிலையில் கோடிக் கோடியான பணத்திற்கு ஆசைப் பட்டவர். கத்தைகளுக்கு நடுவில் மெத்தையைத் தட்டிப் பார்த்தவர். தலையணைக்கு மேலே மர்மஜாலம் காட்டிய மாபெரும் மனிதப் பெட்டகம். அற்ப வயதிலேயே ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார். அதுவே ஒரு பெண் பாவம்.

அவருடைய வாழ்க்கை வரலாறு வருகிறது. பாரபட்சம் இல்லாமல் எழுதி இருக்கிறேன். எந்த ஓர் அரசியல்வாதியையும் இதில் சம்பந்தப் படுத்திப் புண் படுத்துவது நம்முடைய நோக்கம் அல்ல.

அல்தான்தூயாவின் கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் என்று நம்முடைய புதிய பிரதமர் துன் மகாதீர் சொல்கின்றார். சொன்னது போல செய்யக்கூடிய மனிதர். இங்கே ஒரு பெண்ணின் உயிர் விலை பேசப்பட்டு உள்ளது. அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவுமே அனைத்து நெஞ்சங்களின் எதிர்பார்ப்புகள்.



அல்தான்தூயாவின் பிறப்புப் பெயர் அல்தான்தூயா சாரிபூ பாயாஸ் காலன். மங்கோலியா உலான் பத்தூர் நகரில் 1978 மே மாதம் 16-ஆம் தேதி பிறந்தவர்.

குடும்பத்தின் மூத்த மகள். தந்தையாரின் பெயர் சாரிபூ செத்தெவ். இவர் ஒரு மருத்துவர். மங்கோலியா தேசியப் பல்கலைக்கழகத்தில் தகவல் கல்வித் துறை இயக்குநராகவும் மனோவியல் பேராசிரியராகவும் பணி புரிந்தவர்.

தாயாரின் பெயர் எஸ்.அல்தான் செத்தெக். இவர் மங்கோலியாவில் ரஷ்ய மொழி பயிற்றுவிக்கும் ஓர் ஆசிரியை. பெற்றோர்கள் ரஷ்யாவில் பணி புரிந்தவர்கள். அதனால் அல்தான்தூயாவிற்கு 12 வயதாகும் வரை ரஷ்யாவின் லெனின்கிரேட் நகரில் தங்கி, தொடக்கக் கல்வியைப் படித்து வந்தார்.

மங்கோலிய, ரஷ்ய, சீன, ஆங்கில, பிரெஞ்சு மொழிகளில் அல்தான்தூயா சரளமாகப் பேசக் கூடியவர்.




தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் மங்கோலியாவிற்குத் திரும்பினார். 1996-ஆம் ஆண்டில் மாடாய் எனும் மங்கோலியப் பாடகரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது அல்தான்தூயாவிற்கு வயது 18. மாடாய்க்கு வயது 22.

மங்கோலிய மொழியில் கார் சார்னாய் (தமிழில்: கறுப்பு ரோஜா) எனும் இசைக் குழுவில் அல்தான்தூயாவின் கணவர் மாடாய் ஒரு பிரபலமான பாடகர். இவர்களின் திருமண வாழ்க்கை இரு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

மாடாய் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள். அதனால் குடும்ப உறவில் சலசலப்புகள் கலந்த விரிசல்கள். ஜூன் 1998-இல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு அல்தான்தூயாவிடம் வழங்கப் பட்டது.



விவாகரத்திற்குப் பின் அல்தான்தூயா தன்னுடைய மகனுடன் பெற்றோரின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் அவர் நவநாகரிகச் சமுதாயத்தின் நவீனத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 

சில மாதங்களில் எஸ். குனிக்கூ (S.Khunikhu) எனும் மங்கோலிய வடிவமைப்பாளரின் மகனின் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் மறுபடியும் ஒரு விவாகரத்தில் போய் முடிந்தது. ஆனால் குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை.

அதன் பின்னர் வேறு ஒரு மங்கோலிய ஆடவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் மூலமாக திருமணத்திற்கு அப்பாற்பட்டு இரண்டாவது குழந்தையையும் பெற்றுக் கொண்டார். இரு குழந்தைகளும் அல்தான்தூயாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தனர்.



முதல் திருமணத்திற்குப் பின்னர் 1996 நவம்பர் மாதம் உலான் பத்தூரில் இருக்கும் ஒத்கோண்டெஞ்சர் எனும் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பிற்காகப் பதிந்து கொண்டார். அந்தப் படிப்பையும் தொடரவில்லை.

வகுப்பிற்கு முறையாக வருவது இல்லை. தேர்வுகளையும் சரியாக எழுதுவது இல்லை. அந்தச் சமயத்தில் அவர் தாய்மை அடைந்து இருந்தார். அதனால் 1997 ஜனவரி மாதம் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

இரண்டாவது விவாகரத்திற்குப் பின்னர் அல்தான்தூயா வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்து போனார். அதை மறப்பதற்கு 2000-ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்திற்குச் சென்றார்.

அங்கு ஒரு மாடலிங் பள்ளியில் பதிந்து கொண்டார். இந்த முறை அக்கறையுடன் பயிற்சிகளை மேற்கொண்டு மாடலிங் துறையில் சான்றிதழைப் பெற்றார்.



பாரிஸ் நகரில் இருந்து மங்கோலியா திரும்பியதும் மாடலிங் துறையில் அவர் ஈடுபடவில்லை. மாறாக நெசவுத் துணி வியாபரத்தில் ஈடுபட்டார். சீனாவில் இருந்து துணிமணிகளை வரவழைத்தார்.

ஷாங்காய், பெய்ஜிங், ஹாங்காங், தைவான் போன்ற இடங்களுக்கு அடிக்கடி பயணங்களை மேற்கொண்டார். வணிகப் பிரபலங்களின் தொடர்புகளும் கிடைத்தன. மாடலிங் துறையில் புகழ்பெற வேண்டும் என்று அல்தான்தூயா தொடக்கக் காலத்தில் ஆசைப் பட்டார். ஆனால் கடைசி வரை அது நடக்காமல் போய் விட்டது.

பிரபலங்களின் தொடர்புகளினால் சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று வந்தார். இவர் மலேசியாவிற்கு முதல் முறையாக 1995-ஆம் ஆண்டிலும் இரண்டாவது முறையாக 2006-ஆம் ஆண்டிலும் இரு முறைகள் வந்து இருக்கிறார்.



2004-ஆம் ஆண்டு ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஓர் அனைத்துலக வைரக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக அல்தான்தூயா அங்கு சென்று இருந்தார். 

அந்தக் கட்டத்தில் மலேசிய உத்திப்பூர்வ ஆய்வு மையத்தில் (Malaysian Strategic Research Centre), பாதுகாப்பு பகுத்தாய்வாளராக (Defense Analyst) இருந்த அப்துல் ரசாக் பாகிந்தா என்பவரின் அறிமுகம் கிடைத்தது.  அந்த அறிமுகம் நட்பாக மாறி கடைசியில் ஒரு நெருக்கமான உறவு முறைக்கும் வழிகோலியது.

மலேசியாவின் மூத்த அரசியல்வாதி ஒருவர், அல்தான்தூயாவை அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கு அறிமுகம் செய்து வைத்ததாகச் சொல்லப் படுகிறது. அதன் பின்னர் ரசாக் பாகிந்தாவுடன் அல்தான்தூயா பாரிஸ் நகரத்திற்குச் சென்றார்.

மலேசிய அரசாங்கம் பிரான்ஸ் நாட்டில் இருந்து இரு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் காலக் கட்டம். அப்போது அங்கே நடந்த பேச்சு வார்த்தைகளில் அல்தான்தூயா ஒரு மொழிப் பெயர்ப்பாளராகவும் பணி புரிந்தார். 



பாரிஸில் இருக்கும் போது அல்தான்தூயாவிற்கும் அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கும் மிகையான நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். பின்னர் அல்தான்தூயா, ரசாக் பாகிந்தாவின் வைப்பாட்டியாகவே வாழ்ந்தார்.

1961-இல் பிறந்த அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கு வயது 52. அல்தான்தூயாவிற்கு வயது 25. ’ஐந்தும் இரண்டும்’ எனும் எண்கள் விளையாடிய விளையாட்டைப் பாருங்கள்.

மலேசியாவின் பிரபலமான வலத் தளங்களில் ஒன்றான மலேசியா டுடே தளத்தில் அதன் ஆசிரியர் ராஜா பெத்ரா கமாருடின், அல்தான்தூயாவின் இறப்பில் நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்டு உள்ளார் என்பதை முதன்முதலில் தெரிவித்தார்.



அதை நஜீப் துன் ரசாக் வன்மையாக மறுத்தார். மறுத்தும் வருகிறார். நஜீப் மீதான குற்றச்சாட்டை ராஜா பெத்ரா கமாருடின் பின்னர் மீட்டுக் கொண்டார்.

தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டதும் ராஜா பெத்ரா கமாருடின் தன் மனைவி பிள்ளைகளை மலேசியாவிலேயே விட்டுவிட்டு இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றார்.

மலேசிய அரசாங்கம் 2002-ஆம் ஆண்டில் இரு ஸ்கோர்ப்பின் (Scorpene) நீர்மூழ்கிக் கப்பல்களை 1.2 பில்லியன் யூரோ மதிப்பில் (மலேசிய ரிங்கிட்: 4.7 பில்லியன்) பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கியது. ஒரு பில்லியன் என்றால் ஆயிரம் மில்லியன்கள். அதாவது நூறு கோடி. 

அதில் 114 மில்லியன் யூரோ அதாவது (மலேசிய ரிங்கிட்: 464 மில்லியன்) முகவர் சேவைக் கட்டணமாக அர்மாரிஸ் எனும் ஸ்பானிய நிறுவனம் வழங்கியது. அதாவது கமிஷன்.



அர்மாரிஸ் நிறுவனம் என்பது நீர்மூழ்கிக் கப்பல்களின் விற்பனைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நிறுவனம் ஆகும். அந்த முகவர் சேவைக் கட்டணம் ரசாக் பகிந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்த பெரிமேக்கர் எனும் நிறுவனத்திடம் வழங்கப் பட்டது.

அதை அறிந்து கொண்ட அல்தான்தூயா தனக்கு 500,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்தால் இந்த முகவர் சேவைக் கட்டண விவகாரம் வெளியுலகிற்கு தெரிவிக்கப்பபட மாட்டாது என்று ரசாக் பகிந்தாவை மிரட்டிப் பணம் பறிக்க முயன்று இருக்கிறார்.

2006 அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி அல்தான்தூயா கடைசி முறையாக மலேசியாவிற்கு வந்தார். அவருடன் கூடவே இருவர் வந்தனர். ஒருவர் நமீரா கெரில்மா, வயது 29 (Namiraa Gerelmaa); இன்னொருவர் உரிந்தூயா கால் ஒச்சிர், வயது 29 (Urintuya Gal-Ochir).

இவர்களில் நமீரா என்பவர் அல்தான்தூயாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஆவார். ரசாக் பகிந்தாவைச் சந்தித்துப் பேசவே அல்தான்தூயா கோலாலம்பூருக்கு வருகை புரிந்ததின் முக்கிய நோக்கமாகும். 



கோலாலம்பூர், ஜாலான் ஹாங் லெக்கீர் சாலையில் இருக்கும் மலாயா ஓட்டலில் அவர்கள் தங்கினர். ரசாக் பகிந்தா தங்கி இருக்கும் வீட்டைத் தேடிப் பிடிப்பதற்காக ஆங் சோங் பெங் எனும் தனியார் துப்பறிவாளரையும் சேவையில் அமர்த்திக் கொண்டனர்.

ரசாக் பகிந்தாவின் அலுவலகம் கோலாலம்பூர், ஜாலான் அம்பாங் சாலையில் இருந்தது. அவருடைய அந்த அலுவலகத்திற்கு மூவரும் சில முறை சென்று இருக்கின்றனர். ஆனாலும் ரசாக் பகிந்தாவைப் பார்க்க முடியவில்லை. அவர்களைப் பார்ப்பதை ரசாக் பகிந்தா தவிர்த்து வந்தார்.

2006 அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி இரவு 7.20-க்கு அல்தான்தூயா, நமீரா, உரிந்தூயா ஆகிய மூவரும் ரசாக் பகிந்தாவின் இருப்பிடமான டாமன்சாரா ஹைட்ஸ் குடியிருப்பு பகுதிக்கு வாடகைக் காரில் சென்றனர். 

அப்போது ரசாக் பகிந்தாவின் வீட்டிற்கு பி. பாலசுப்பிரமணியம் எனும் தனியார் துப்பறிவாளர் பாதுகாவலராக இருந்தார்.

அவரிடம் ரசாக் பகிந்தாவைப் பற்றி விசாரித்தார்கள். தனக்கு எதுவும் தெரியாது என்று பாலசுப்பிரமணியம் சொன்னார். அவருக்குத் தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு மூவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.



மலாயா ஓட்டலுக்கு திரும்பியதும் நமீரா, உரிந்தூயா ஆகிய இருவரையும் இறக்கிவிட்டு அல்தான்தூயா மட்டும் தனியாக அதே வாடகைக் காரில் ரசாக் பகிந்தாவின் இருப்பிடத்திற்குச் சென்றார்.

அதுதான் அல்தான்தூயாவை அவர்கள் கடைசியாகப் பார்த்தது. அதன் பின்னர் அல்தான்தூயா காணாமல் போய் விட்டார். அல்தான்தூயா காணவில்லை என்று காவல் துறையில் புகார் செய்யப் பட்டது. காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

2006 நவம்பர் மாதம் 7-ஆம் தேதி, சிலாங்கூர், ஷா ஆலாம், புஞ்சாக் நியாகா நீர்த் தேக்கத்திற்கு அருகில் மனித எலும்புகளின் சிதறல்களும் மனிதத் தசைகளின் சிதைவுகளும் கண்டுபிடிக்கப் பட்டன.

மரபணுச் சோதனை செய்யப்பட்டது. (DNA analysis) இறுதியில் அந்தச் சிதறல்களும் சிதைவுகளும் அல்தான்தூயாவிற்கு உடையவை என்று உறுதி செய்யப்பட்டது.



மலேசியக் காவல் துறையைச் சேர்ந்த மூவர், அல்தான்தூயா கொலைத் தொடர்பாகக் கைது செய்யப் பட்டனர். அவர்களில் தலைமை இன்ஸ்பெக்டர் அசீலா ஹாட்ரி (30), கார்ப்பரல் சிருல் அசார் உமார் (35) ஆகிய இருவரும் மலேசிய காவல் துறையின் மேல்தட்டுச் சிறப்பு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் மெய்க்காவலர்கள் ஆகும். கொலை நிகழ்ச்சியின் போது நஜீப் துன் ரசாக், மலேசியாவின் தற்காப்பு அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்தார். அந்தக் காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக ரசாக் பகிந்தா மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

2007 ஜூன் 4ஆம் தேதி, ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்தில் அல்தான்தூயா கொலை வழக்கு தொடங்கியது. 2008 அக்டோபர் 31-ஆம் தேதி, கொலைவழக்கில் இருந்து ரசாக் பகிந்தா விடுதலை செய்யப் பட்டார்.



தலைமை இன்ஸ்பெக்டர் அசீலா ஹாட்ரியும், கார்ப்பரல் சிருல் அசார் உமாரும் எதிர்வாதம் செய்ய அழைக்கப் பட்டனர். ரசாக் பகிந்தாவின் மீது குற்றம் சாட்டப் படுவதற்கு போதுமான சான்றுகள் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாக அரசு தரப்பு தெரிவித்தது. ஆனால் இதுவரையிலும் முறையீடு எதுவும் செய்யப்படவில்லை.

2009 ஏப்ரல் 9-ஆம் தேதி நீதிமன்றம் அல்தான்தூயா கொலைவழக்கின் தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னால் தன்னை விடுதலை செய்யும்படி சிருல் அசார் உமார் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். ஓர் உயர்மட்டக் கொலைவழக்கில் தான் பலிக்கடா ஆக்கப்பட்டதாகவும் சொன்னார்.



283 பக்கங்களில் எழுதப்பட்ட தீர்ப்பின கடைசி நான்கு பக்கங்கள் மட்டும் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் கூடியிருந்த குற்றவாளியின் உறவினர்கள் கதறி அழுதனர். பத்திரிகையாளர்கள் அவர்களிடம் பேசுவதில் இருந்து தடை செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் மங்கோலிய மொழிபெயர்ப்பாளர் எங்ஜார்கால் தெட்ஸ்கி என்பவரும் இருந்தார். தீர்ப்பு வழங்கப்படும் போது, அல்தான்தூயாவின் தந்தையார் மங்கோலியாவில் இருந்தார்.  அவருக்கு நீதிமன்றத் தீர்ப்பு, குறும் செய்திகள் மூலமாகத் தெரிவிக்கப்பட்டன. இந்தக் கொலைவழக்கில் பல சாதனைகள் இடம் பெற்றுள்ளன.

மலேசிய நீதிமன்ற வரலாற்றில், இந்த அல்தான்தூயா கொலைவழக்கு நீண்ட நாட்கள் நடைபெற்ற வழக்கு எனும் சாதனையைப் பதித்தது. 165 நாட்கள் நடைபெற்ற இந்த கொலைவழக்கில், அரசு தரப்பில் 84 பேரும், எதிர்தரப்பில் 198 பேரும் விசாரணை செய்யப்பட்டனர்.



433 சாட்சிப் பொருள்கள் காட்சிப் பொருள்களாகக் காட்சி படுத்தப்பட்டன. முதல் குற்றவாளி அசீலா ஹாட்ரி இப்போது சுங்கை பூலோ சிறைச்சாலையில் இருக்கிறார்.

இரண்டாம் குற்றவாளி சிருல் அசார் உமார் ஆஸ்திரேலியாவிற்குத் தப்பிச் சென்று விட்டார். அல்தாதூயா வழக்கு மறுவிசாரணைக்கு வந்தால் உண்மை நிலவரத்தைச் சொல்லத் தயார் என்கிறார்.

ரசாக் பகிந்தாவின் வீட்டிற்கு தனியார் துப்பறியும் பாதுகாவலராக இருந்த பி. பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த 2013 மார்ச் 15ஆம் தேதி, சிலாங்கூர், ரவாங் நகரில் இருக்கும் அவருடைய இல்லத்தில், மாரடைப்பால் காலமானார்.

அதே போல நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதலில், ஊழல் நடந்துள்ளது என்று பிரான்சில் வழக்குத் தொடர்ந்த பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரும் மர்மமான முறையில் இறந்து போனார். தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. எல்லாமே மர்மம். 



அல்தான்தூயா கொலைவழக்கில், மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கிற்கும் தொடர்பு இருக்கிறது என்று பாலசுப்பிரமணியம் 2008 ஜூலை மாதம் 3ஆம் தேதி சத்தியப் பிரமாணம் செய்தார்.

அந்தச் சத்தியப் பிரமாணம் மலேசிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுநாள் அந்தச் சத்திய பிரமாணத்தை மீட்டுக் கொண்டார். இரண்டாவது சத்தியப் பிரமாணம் செய்தார்.

அதை மேலிடத்து ஆணையின் பேரில் செய்ததாகச் சொன்னார். அதைப்பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் கொடுப்பதற்கு முன்னால் அவரும் இறந்து போனார்.

23 மே 2018

கோபிந்த் சிங் டியோ

மலேசிய நாடாளுமன்றத்தில் கர்ப்பால் சிங் ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். ஜெலுத்தோங் புலி என்று புகழாரம் செய்யப் பட்டவர். மலேசிய அரசியல் வானில் முடிசூடா மன்னராக வாழ்ந்தவர். மலேசிய நீதிமன்ற வாதங்களின் தலைமகனாகத் திகழ்ந்தவர்.


பெருமகனார் கர்ப்பால் சிங் அவர்களுக்கு மூன்று ஆண்மகன்கள். மூத்த மகன் ஜக்டீப் சிங் டியோ. பினாங்கு மாநிலத்தில் டத்தோ கிராமாட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இரண்டாவது மகன் கோபிந்த் சிங் டியோ. சிலாங்கூர், பூச்சோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

மூன்றாவது மகன் ராம் கர்பால். மகள் சங்கீத் கவுர். இவர்கள் இருவரும் கர்பால் சிங் வழக்கறிஞர் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். கர்பால் சிங்கின் நான்கு பிள்ளைகள் வழக்குரைஞர்களாகும்.  அவருடைய கடைசி மகன் மான் கர்பால் என்பவர் மட்டும் காப்பீட்டுத் துறையில் (actuarial science) ஈடுபட்டுள்ளார். அரசியலும் வழக்காடும் தொழிலும் வேண்டாம் என்று சொல்லி முற்றிலும் மாறுபட்ட துறைக்கு மாரிக் கொண்டார். சரி.


கோபிந்த் சிங் டியோ மலேசிய அரசியல் வானில் சரித்திரம் படைத்தவர் என்று தான் சொல்ல வேண்டும். மலேசியாவில் இவர்தான் முதல் சீக்கிய அமைச்சர். நாற்பத்தைந்து வயதான கோபிந்த் சிங் டியோ மலேசியாவின் தொடர்பு பல்ஊடக அமைச்சராகப் பொறுப்பேற்றார். 

சென்ற திங்கட்கிழமை பதவியேற்ற புதிய அமைச்சரவையில் இரு இந்தியர்கள் அமைச்சர்கள் இடம் பெற்று இருந்தனர். அந்த இருவருமே தலைப்பாகை அணிந்து பதவி ஏற்றனர். அதை ஓர் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த காலங்களில் ம.இ.கா.வைச் சேர்ந்த இந்திய அமைச்சர்கள் பேரரசர் முன்னால் பதவி ஏற்கும் போது மரியாதைக்காக மலாய் பாரம்பரிய சொங்கோக் அணிந்து பதவி ஏற்பது வழக்கம். 
 

சீக்கியர்களின் வழக்கப்படி சீக்கியத் தலைப்பாகையுடன் கோபிந்த் சிங் டியோ பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அவரைப் போலவே மனித வள அமைச்சராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு  எம். குலசேகரன் அவர்களும் தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இது மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் மறக்க முடியாத காலச்சுவடு.

1957-ஆம் ஆண்டு மலேசியத் தந்தை துங்கு அவர்கள் பிரதமரானதும் அவருடைய அமைச்சரவையில் இருந்த துன் சம்பந்தன் தலைப்பாகை அணிந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டதாகச் சொல்லப் படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். அதையும் ஒரு வரலாற்று ஆவணமாக பதிவு செய்யலாம்.

கோபிந்த் சிங்கின் தந்தை கர்ப்பால் சிங் பொதுவாகவே தலைப்பாகை அணிவது இல்லை. அதே சமயத்தில் கர்ப்பால் சிங் பேரரசரின் முன்னால் விருதுகள் எதையும் வாங்கவில்லை. அல்லது ஓர் அமைச்சர் பதவியை ஏற்கும் நிலைமையும் அவருக்கு ஏற்பட்டவில்லை. 
 

ஒன்று மட்டும் உண்மை. ஒரு காலத்தில் மலேசியாவில் ஆட்சி மாறும். தன் மகன் ஓர் அமைச்சர் ஆவார் என்று கர்ப்பால் சிங் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார். ஆனாலும் தந்தையின் அடிச்சுவட்டில் காலடி வைத்த கோபிந்த் சிங் டியோ இன்று பக்காத்தான் கூட்டணி சார்பில் தொடர்பு மற்றும் பல்ஊடக அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார். வாழ்த்துகிறோம்.

இங்கிலாந்தில் உள்ள லிங்கன்ஸ் இன் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற கோபிந்த் சிங் டியோ 1966-ஆம் ஆண்டு மலேசிய வழக்குரைஞர் மன்றத்தில் அனுமதிக்கப்பட்டார்.

2008-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்வுசெய்யப்பட்டார். பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் கெராக்கான் (பாரிசான்) கட்சியைச் சேர்ந்த லாவ் யெங் பெங் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கோபிந்த் சிங்கிற்கு 35,079 வாக்குகள் கிடைத்தன. லாவ் யெங் பெங்கிற்கு 15,107 வாக்குகள். வாக்குப் பெரும்பான்மை 19,972.

2013-ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அதே பூச்சோங் தொகுதியில் மீண்டும் நிறுத்தப் பட்டார். அவரை எதிர்த்து கெராக்கானைச் சேர்ந்த கோகிலன் பிள்ளை நின்றார். 
 

இந்தத் தேர்தலில் கோபிந்த் சிங் டியோவிற்கு 62,938 வாக்குகள் கிடைத்தன. கோகிலன் பிள்ளைக்கு 30,136 வாக்குகள். 32,802 வாக்குகள் பெரும்பான்மையில் கோபிந்த் சிங் டியோ வெற்றி பெற்றார்.

கடந்த 2018-ஆம் தேர்தலில் அதே பூச்சொங் தொகுதியில் மும்முனைப் போட்டி. ஜ.செ.க.; கெராக்கான்; பாஸ் ஆகிய மூன்று பெரிய கட்சிகளும் களம் இறங்கின.

பலரும் எதிர்பார்த்தது போல ஜ.செ.க. (பாக்காத்தான்) வெற்றி பெற்றது. கோபிந்த் சிங் டியோவிற்கு 60,429 வாக்குகள். கெராக்கானைச் சேர்ந்த ஆங் சின் தாட் என்பவருக்கு 12,794 வாகுகள். பாஸ் கட்சியைச் சேர்ந்த முகமட் ரோசரிசான் முகமட் ரோஸ்லான் என்பவருக்கு 10,255 வாக்குகள். 47,635 வாக்குகள் பெரும்பான்மையில் கோபிந்த் சிங் டியோ வெற்றி பெற்றார்.

2009 மார்ச் 16-ஆம் தேதி, கோபிந்த் சிங் டியோ நாடாளுமன்றத்தில் இருந்து 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப் பட்டார். பிரதமர் நஜீப்பிற்கும் மொங்கோலிய மாடல் அழகி அல்தாதூயா கொலைக்கும் தொடர்பு உள்ளது. நஜீப் ஒரு ‘கொலைகாரர்’ என்று நாடாளுமன்றத்திலேயே நஜீப்பின் மீது குற்றம் சாட்டினார். அப்போது நஜீப் நாட்டின் துணைப் பிரதமராக இருந்தார்.

நஜீப்பை அவமதித்துப் பேசியதால் கோபிந்த் சிங் டியோவிற்கு அந்த 12 மாத இடைநீக்கம். அத்துடன் அவருக்கு ஓர் ஆண்டு ஊதியமும் வழங்கப்படவில்லை. இருந்தாலும் பின்னர் வழக்குப் போட்டு அவர் அந்த ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது வேறு கதை.
 

கோபிந்த் சிங் டியோ ஒரு வழக்குரைஞராக இருப்பதால் அவர் பணிபுரியும் கர்ப்பால் சிங் நிறுவனத்திடம் இருந்தும் மாதா மாதம் ஊதியம் கிடைக்கிறது. அந்த ஊதியத்தில் ஒரு மாதம் 5000 ரிங்கிட்டில் இருந்து 10 ஆயிரம் வரை பூச்சோங் தொகுதி மக்களுக்காகச் செலவு செய்து வருகிறார்.

ஒரே நாளில் பல திருமணங்கள் வரும். ஒவ்வொரு திருமணச் சடங்கிற்கும் போக வேண்டும். ஏதாவது ஓர் அன்பளிப்புச் செய்ய வேண்டும். அரசாங்கம் கொடுக்கும் ஊதியம் பற்றவே பற்றாது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மான்யம் கிடைப்பது இல்லை. தெரிந்த விசயம் தானே.

பூச்சோங் தொகுதியில் இரு சேவை மையங்களை நடத்தி வருகிறார். அதற்கான செலவுகளை அவரே சொந்தமாகக் கவனித்துக் கொள்கிறார். பாரிசான் அரசாங்கம் மான்யம் எதுவும் கொடுப்பது இல்லை.

ஆனால் சிலாங்கூர் மாநிலத்தை பக்காதான் ஆட்சி செய்வதால் ஓரளவுக்கு மான்யம் கிடைத்து வருகிறது என்று கோபிந்த் சிங் டியோ கூறுகிறார். இனிமேல் பிரச்சினை இல்லை. மத்திய அரசாங்கத்தைப் பக்காத்தான் கைப்பற்றி விட்டதால் மான்யங்கள் சலனம் இல்லாமல் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாத ஊதியமாக 12,500 ரிம கிடைக்கிறது. அதாவது ஓர் ஆண்டிற்கு 150,000. இதில் ஒரு இலட்சம் வெள்ளி பல்வேறு சமூக நிகழ்ச்சிகளுக்குச் சென்று விடுகிறது. மீதம் உள்ள 50,000 சேவை நிலையங்களுக்குப் பயன்படுகிறது என்று கோபிந்த் சிங் டியோ சொல்கிறார்.

கெடிலான் தலைவர் அன்வார் இப்ராகிம் நீதிமன்ற வழக்குகளில் கோபிந்த் சிங் டியோ தான் பிரதான வழக்குரைஞராகச் செயலாற்றி வந்தார். இவரின் அரசியல் வாழ்க்கையிலும் முன்னைய அரசாங்கத்தினால் பற்பல தடைகள்; பற்பல முட்டுக்கட்டைகள். இவர் சரவாக் மாநிலத்திற்குப் போகக் கூடாது என்று ஒரு தடையையே போட்டு வைத்து இருந்தார்கள். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த மறுநாளே அந்தத் தடையை அகற்றி விட்டார்கள்.
 

அது மட்டும் அல்ல. அவருடைய வீட்டில் கற்களை விட்டு வீசி சேதப் படுத்தி இருக்கிறார்கள். அவருடைய காரைச் சேதப்படுத்தி இருக்கிறார்கள். அவருடைய மனைவியைக் கொச்சை வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். அவ்வளவு வேதனைகளையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து இருக்கிறார்.

அந்த வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் அன்புப் பரிசாக இப்போது அமைச்சர் பதவி கிடைத்து உள்ளது. பொறுமைசாலிகளுக்குப் பெருமை தானாக வந்து சேரும் என்பதற்கு கோபிந்த் சிங் டியோ நல்ல ஒரு சான்று.

கோபிந்த் சிங் டியோ அமைச்சர் பதவி ஏற்ற முதல் நாளே மக்களுக்கு ஓர் இனிப்பான செய்தியைச் சொல்லி இருக்கிறார். இணையத்தின் வேகம் இரு மடங்காகக் கூட்டப்படும். (doubling the country’s internet speed) இப்போதைய இணையச் சேவைக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழி வகைகள் காணப்படும். எல்லோருடைய வீட்டிலும் மலிவான இணையச் சேவைகள் இருக்க வேண்டும்.
 

எங்கு எல்லாம் இணைய அலைகள் சரியாக கிடைக்கவில்லையோ அங்கு எல்லாம் முதன்மை பார்வை வைக்கப்படும். கிடைப்பதற்கான வழி வகைகள் உடனடியாகச் செய்யப்படும்.

தந்தை எப்படியோ தனயனும் அப்படியே என்று சொல்வார்கள். அந்த வகையில் தன் தந்தையைப் போல நீதிக்கும் நேர்மைக்கும் போராடி வருகிறார். ஜெலுத்தோங் குட்டிப்புலி என்று பெயர் பெற்ற இவர் மலேசிய மனங்களில் ஒரு போராட்டவாதியாக தடம் பதித்து வலம் வருகிறார். வாழ்த்துகிறோம்.

22 மே 2018

மலேசியா ஆட்சி மாற்றத்தின் ரகசியங்கள்

தமிழ் மலர் - 16.05.2018

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் அண்மையில் நடந்த ஆட்சி மாற்றமும் ஒரு காலச்சுவடு. அந்த ஆட்சி மாற்றத்தில் மலேசியத் தமிழர்கள் மிக மிக முக்கியமான பங்கு வகித்தார்கள். ஆகவே அதுவும் மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு காலச்சுவடி. சரி. விசயத்திற்கு வருவோம்.


நடந்து முடிந்த தேர்தலில் பக்காத்தானுக்கு கிடைத்த வெற்றி அல்லது ஆட்சி மாற்றம் என்பது மலேசிய மக்களினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு புரட்சி. மலேசிய மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடு. அதைக் கண்டிப்பாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் மகாதீர் எனும் மகா சாணக்கியர் இல்லாமல் அந்த ஆட்சி மாற்றம் நடந்து இருக்காது. நடந்து இருக்கவே முடியாது. வேறு யாராலும் நடத்தி இருக்க முடியாது. இந்த ஒன்றை மட்டும் நாம்  அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றாக உற்றுக் கவனியுங்கள். தேர்தல் நடந்து முடிந்த இரவு 1.30 வரைக்கும் எந்த ஓர் அறிக்கையும் வெளியிடப் படவில்லை. வெளிவந்த தேர்தல் முடிவுகள் எல்லாமே அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளாகவே (tidak resmi) வந்து கொண்டு இருந்தன.

தேர்தல் காலத்தில் அரசாங்கத்தைப் பராமரிப்பு செய்து வந்த குழுமம் (care takers) தேர்தல் முடிவுகளை அன்றிரவு 12 மணிக்குள் அறிவித்து இருக்க வேண்டும். ஆனால் பராமரிப்பு அரசாங்கம் அப்படிச் செய்யவே இல்லை.

அன்றிரவு 1.30-க்கு துன் மகாதீர் ஒரு பேட்டி கொடுக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் சொல்கிறார்: ஏன் இன்னும் பாரம் 14-ஐ வெளியிடாமல் இருக்கிறீர்கள். அதுதான் எண்ணி முடிந்தாகி விட்டதே. அந்தப் பாரத்தை வெளியாக்குங்கள். ஏன் நிறுத்தி வைக்கிறீர்கள். உடனடியாக முடிவைத் தெரியப் படுத்துங்கள் என்று சொல்கிறார்.

ஒரு செருகல். தேர்தல் வாக்குகள் எண்ணும் ஒவ்வோர் இடத்திலும் ஒரு தலைமை அதிகாரி இருப்பார். அவரைத் தேர்தல் நிலைய தலைமை அதிகாரி (KPT) என்று அழைப்பார்கள்.

வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்ததும் அந்தத் தலைமை அதிகாரி பாரம் 14-ஐ (Form 14) தயார் செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் ஏஜெண்டுகளிடம் கொடுத்து கையொப்பம் வாங்க வேண்டும்.

அந்தப் பாரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியாக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி தோல்வி யாருக்கு என்று தெரிய வரும். அப்போது தான் அந்த இடத்தின் தேர்தல் முறைப்படி செல்லுபடியாகும். பாரம் 14 வெளியாக வரையில் எந்த முடிவையும் சொல்ல முடியாது.

அடுத்து என்ன நடந்தது தெரியுங்களா. துன் மகாதீர் பேட்டி கொடுத்து ஐந்து நிமிடங்கள் ஆகி இருக்காது. டி.வி.3 டி.வி. 1, டி.வி.1 என்று அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் கடகடவென்று தேர்தல் முடிவுகள். சரம் சரமாய் வந்து கொட்டத் தொடங்கின. இங்கே ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும்.

மறுநாள் காலையிலேயே 8.30க்குள் துன் மகாதீர் அவர்கள் மாட்சிமை தங்கிய பேரரசரைப் போய் பார்த்து இருக்க வேண்டும். ஆனாலும் பேரரசரைப் பார்க்க முடியவில்லை. பார்க்கவும் விடவில்லை. சூழ்நிலை சரியாக அமையவும் இல்லை. இஸ்தானாவிற்குச் செல்லும் சாலை நெடுகிலும் போலீசாரின் தடுப்புகள்.

திடீரென்று ஓர் அறிவிப்பு வருகிறது. பேரரசர் நம் நாட்டில் இல்லை எனும் அறிவிப்பு. சரி.

அன்று மாலை 2 மணிக்கு துன் மகாதீர் ஒரு செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டுகிறார். ஓர் அறிவிப்பு செய்கிறார். இன்று மாலை 5 மணிக்குள் ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும். இப்போது நம் நாட்டில் ஓர் அரசாங்கம் என்பது இல்லவே இல்லை. இப்போது இந்த நாடு ஓர் அனாதையாகக் கிடக்கிறது. உடனே ஓர் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். நான் பேரரசரைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனும் அறிவிப்பு.

அதே சமயத்தில் நஜீப் அவர்களும் ஒரு செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டுகிறார். அந்தக் கூட்டத்தில் நஜீப் சொல்கிறார். நாங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் முடிவு எடுக்கும் அதிகாரம் பேரரசரிடம் மட்டும் தான் உள்ளது. அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அந்த முடிவிற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று ஒரு ’செக்’ (சூசகமான அறிவிப்பு) வைக்கிறார்.

இவர் என்னங்க செக் வைப்பது. இவர் தான் தோற்று விட்டாரே. முடிஞ்சு போச்சு. வீட்டிற்குக் கிளம்ப வேண்டியது தானே. பேரரசர் என்ன சொல்கிறாரோ அதற்குக் கட்டுப்பட வேண்டுமாம். என்னங்க இது.

அதே சமயத்தில் பாருங்கள். நஜீப் இந்த நாட்டின் பிரதமரும் அல்ல. தேர்தல் நேரத்தில் நாட்டைப் பாராமரித்த காபந்து அரசாங்கத்தின் தலைவரும் அல்ல. ஆக பேரரசர் என்ன சொல்கிறாரோ அதற்கு கட்டுப்பட வேண்டும் என்று சொல்வதற்கு நஜீப்பிற்கு அதிகாரமே கிடையாது.

ஏன் என்றால் அவரின் கட்சிதான் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதே. அவர் ஓர் எதிர்க் கட்சியின் தலைவரும் அல்ல. அப்புறம் எப்படிங்க சொல்ல முடியும். சரிங்களா.

ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் திரை மறைவில் இருந்து கொண்டு நஜீப் ஏதோ திட்டம் போட்டு காய்களை நகர்த்திக் கொண்டு இருந்தார் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது. இந்த நேரத்தில் அட்டர்னி ஜெனரல் குறுக்கிட்டுச்  சொல்கிறார்;

இந்த இக்கட்டான நேரத்தில் நான் அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கப் போகிறேன் என்றார். ஏங்க ஒன்று கேட்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம். அரசாங்கமே இல்லை. பழைய அரசாங்கமும் இல்லை. புதிய அரசாங்கமும் உருவாக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது அட்டர்னி ஜெனரல் யாருக்குப் போய் எந்த அரசாங்கத்திற்குப் போய் அட்வைஸ் பண்ணப் போகிறாராம்.

ஆக இந்தச் செயல்பாடுகள் ஒன்றுக்குப் பின் முரணாக இருக்கின்றன. நாடே அப்போது ஒரு நிலையான திடமான நிலையில் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் பொதுமக்களை மேலும் மேலும் குழப்பி இருக்கக் கூடாது.

மக்கள் குழம்பிப் போய் இருந்தார்கள். நாட்டில் அரசாங்கம் இருக்கிறதா இல்லையா. பேரரசர் வேறு இல்லை. எல்லாமே பதற்றத்தில் சிதறிப் போய்க் கிடக்கின்றது. என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. அப்படி இருக்கும் போது அட்டர்னி ஜெனரல் எந்த அரசாங்கத்திற்கு அட்வைஸ் பண்ணப் போகிறாராம்.

அந்தச் சமயத்தில் ஜொகூர் சுல்தான் ஒரு காணொளிச் செய்தியை வெளியிடுகிறார். அவர் சொல்கிறார். இனிமேல் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒரு முடிவு எடுங்கள் என்று சொல்கிறார். அந்தக் கட்டத்தில் பேரரசர் இன்னும் நாட்டுக்குத் திரும்பி வரவில்லை. சரி. ஒரு முக்கியமான கட்டத்திற்கு வருகிறோம்.

நம் நாட்டில் அவசரகாலம் என்பதைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்றால் அந்த அதிகாரம் பேரரசருக்கு மட்டுமே உள்ளது. வேறு யாரும் பிரகடனம் செய்ய முடியாது. பிரதமருக்கும் இல்லை. மற்ற எவருக்கும் இல்லை.

தேர்தல் நடந்த முடிந்த பிறகு ஒரு வதந்தி வேறு. அதாவது நாட்டில் அவசரகாலம் வரப் போகிறது. தேவையற்ற உண்மை இல்லாத ஒரு வதந்தியை ஒரு சிலர் பரப்பிக் கொண்டு இருந்தார்கள்.

நஜீப் தன் செய்தியாளர் கூட்டத்தில் சொல்கிறார்: ‘இந்த நாட்டில் உள்ள எதிர்க் கட்சிகள் பொய்யான செய்திகளையும் பொய்யான பரப்புரைகளையும் செய்து வருகின்றன.

அந்தக் காரணத்தினால் தான் நாங்கள் தோற்றுப் போனோம். அது ஓர் அவதூறு (Fitnah). நேற்று ராத்திரிகூட ஒரு பொய்யான செய்தியைப் பரப்பினார்கள். தேசியப் பாதுகாப்பு மன்றம் (Majlis Keselamatan Negara) எனும் ஒரு மன்றத்தை நான் உருவாக்கப் போகிறேன் என்றும் பதவியை விட்டு வெளியாக மாட்டேன் என்றும் பொய்யான செய்தியைப் பரப்பினார்கள்.

ஆனால் அது உண்மை அல்ல. நாங்கள் எங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நீங்கள் அனைவரும் பேரரசர் முடிவைத் தான் ஏற்க வேண்டும்’ என்று நஜீப் கூறினார்.

அனைவரும் பேரரசர் முடிவை ஏற்க வேண்டும் என்று ஒரு மேடையில் நஜீப் சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம். சொல்லுங்கள்.

அன்று இரவு அதாவது 12 மணிக்கு இராணுவப் படையினர் புத்ரா ஜெயாவிற்குச் சென்றனர். ஆக இரவு 12 மணிக்குள் நஜீப் தன் அலுவலகத்தைக் காலி செய்யவில்லை என்றால் இராணுவம் நஜீப்பின் அலுவலகத்தை எடுத்துக் கொண்டு இருக்கும்.

ஏன் என்றால் இரவு 12 மணிக்கு மேல் அரசாங்கம் என்ற ஒன்று இல்லையே. பிரதமரும் இல்லையே. நாட்டில் பேரரசரும் இல்லையே.

மறுநாள் காலையில் பார்த்தீர்கள் என்றால் துன் மகாதீரின் பின்னாலேயே மலேசிய இராணுவத் தளபதியும் உடன் வலம் கொண்டு இருந்தார். நல்ல வேளை. வேறு பக்கம் போகவில்லை.

அப்படியே இராணுவத் தளபதி அந்தப் பக்கம் போய் இருந்தால் தேசியப் பாதுகாப்பு மன்றம் உருவாக்கப்பட்டு இருக்கும். நாட்டின் தலைவிதியே மாறிப் போய் இருக்கும்.

அதனால் தான் துன் மகாதீர் கெட்டிக்காரத் தனமாக இராணுவத் தளபதியை வேறு பக்கம் போக விடாமல் தன் பக்கமாகத் தக்க வைத்துக் கொண்டார்.

ஒன்று மட்டும் உண்மை. இராணுவத் தளபதி நஜீப்பின் பக்கம் போய் இருந்தால் அந்த இராணுவத் தளபதியை வைத்துக் கொண்டு தேசியப் பாதுகாப்பு மன்றத்தை நஜீப் உருவாக்கி இருப்பார். இருந்தாலும் அங்கேயும் நஜீப்பிற்கு ஒரு முட்டுக்கல் இருந்தது.

தேசியப் பாதுகாப்பு மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றால் பேரரசர் அனுமதிக்க வேண்டும். பேரரசர் ஒப்புதல் வழங்க வேண்டும். அப்படியே தேசியப் பாதுகாப்பு மன்றம் அமைக்கப்பட்டு இருந்தால் அதற்கு நஜீப் தான் தலைவர் ஆவார். தன்னுடைய அதிகார ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு இருப்பார். மீண்டும் பாரிசானே ஆளும் அரசாங்க ஆட்சியில் அமர்ந்து இருக்கும்.

பேரரசர் தான் வெளிநாட்டில் இருக்கிறாரே. அவருடைய ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாதே.

ஆனால் பாருங்கள். இறைவன் வேறு மாதிரியாகப் பயணித்து விட்டார். தேசியப் பாதுகாப்பு மன்றம் அமைக்கப் படுவதற்கு பேரரசரின் அனுமதி கிடைக்காத பட்சத்தில் நஜீப் தடுமாறிப் போய் நின்றார்.

உண்மையில் பார்க்கப் போனால் பேரரசரின் விமானம் கோலாலம்பூர் வந்து சேர தாமதமாகி விட்டது. அதுதான் உண்மையான காரணம்.

அன்று மாலை 4.00 மணிக்கு மகாதீர் செய்தியாளர் கூட்டத்தில் உடனடியாக அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். இல்லை என்றால் நாட்டிற்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்கிறார். அப்போது அரண்மனையில் இருந்து செய்தி அறிக்கை வெளியாகிறது.

இன்று மாலை 5.00 மணிக்கு மகாதீர் அரண்மனைக்கு வந்து பதவி ஏற்றுக் கொள்ளலாம் எனும் அறிக்கை. ஆனால் அதற்கு முன்னால் அரண்மனையில் இருந்து ஒரு செய்தி. அதாவது பேரரசர் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார் எனும் அறிவிப்பு.

இந்தக் கட்டத்தில் தான் நஜீப், எதையாவது பண்ணி அரசாங்கத்தைக் கைப்பற்றிவிட வேண்டும். எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று பலவகைகளில் போராடி இருக்கிறார். ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் எனும் நம்பிக்கையிலும் இருந்தார்.

அந்த தைரியத்தில் தான் நஜீப் நாட்டை விட்டு வேறு நாட்டிற்குப் போவதற்கோ; அல்லது ரோஸ்மா நாட்டை விட்டு கிளம்புவதற்கோ அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. புரியும் என்று நினைக்கிறேன்.

மாலை மணி ஐந்திற்கு மகாதீர் அரண்மனையில் பதவி ஏற்க வேண்டும். ஆனால் பேரரசர் வந்து சேரவில்லை. மாலை 4.40க்கு எல்லாம் மகாதீர் அரண்மனைக்குச் சென்று விட்டார். மகாதீர் கோபமாக இருந்தால் வேறு மாதிரியாக இருப்பார். பார்த்து இருப்பீர்கள்.

ஆனால் அப்போது மகாதீர் மிகக் கவலையுடன் காணப் பட்டார். பேரரசர் வந்துவிட வேண்டும். நாடு வேறு கேட்பாரற்று கிடக்கிறது. புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமே. எனும் கவலையில் மகாதீர் இருந்தார். பார்த்து இருப்பீர்கள். அவர் முகத்தில் கலையே இல்லை.

இரவு 9.50க்கு பேரரசர் வந்து சேர்ந்தார். அதன் பின்னர் அனைவருக்கும் தெரிந்த கதை. துன் மகாதீர் நாட்டின் 7-வது பிரதமர் ஆனார். அதன் பின்னர் பேரரசர் ஒரு சின்ன விருந்து வைத்தார். அந்த விருந்தின் போது தான் அன்வாருக்கு மகாதீர் அரச மன்னிப்பு கேட்டார். பேரரசரின் கையொப்பத்தையும் வாங்கிக் கொண்டார்.

மலேசிய இராணுவத் தளபதி மகாதீர் பக்கமாக இல்லாமல்; நஜீப் பக்கமாய் போய் இருந்தால்; பேரரசர் வெளிநாட்டிற்குப் போகாமல் இருந்து இருந்தால்; தேசியப் பாதுகாப்பு மன்றத்தை நஜீப் உருவாக்கி இருப்பார். அதற்கு நஜீப் தலைவர் ஆகி இருப்பார். பாரிசான் கட்சி அதிகார ஆட்சியைத் மீண்டும் தக்க வைத்துக் கொண்டு இருக்கும்.

மலேசிய மக்கள் இலவு காத்த கிளியாக இன்னும் பல தலைமுறைகளுக்கு ஏங்கித் தவித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

(இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு கோலாலம்பூர் மதியழகன் நிறைய தகவல்களை வழங்கி உதவி செய்தார். அவர் நடமாடும் ஓர் அரசியல் கலைக்களஞ்சியம். அவருக்கு நன்றி.)