18 ஜூலை 2018

இணையத் தளங்கள் தயாரிப்பு

அன்பர்களே வணக்கம். இணையத் தளங்கள் தயாரிப்பது முன்பு ஒரு பொழுது போக்காக இருந்தது. ஆனால் இப்போது அதுவே பகுதிநேர பணியாக மாறி உள்ளது. இப்போது தயாரித்து வழங்கப்படும் இணையத் தளங்கள் மிக நவீன இணையப் பயன்பாடுகளுடன் செயல் படுகின்றன. 


அந்த இணையத் தளங்களில் பற்பல தொடர்புச் செயல்பாடுகள் உள்ளன.

தங்களில் எவருக்கும் இணையத் தளம் தேவைப் பட்டால் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் எவருக்கும் தேவைப் பட்டால் தயக்கமின்றி தொடர்பு கொள்ளவும்.

தற்சமயம் மாண்புமிகு குலா அவர்களின் அதிகாரப்பூர்வ இணையத் தளம் தயாரிப்பு நிலையில் உள்ளது.

http://www.ybkulasegaran.org/yb/

இதுவரையில் தயாரிக்கப்பட்ட மற்ற இணையத் தளங்களின் இணைய முகவரிகள்... உங்களின் பார்வைக்கு...

www.smeassist.net

www.data-matriq.com

www.cbn.edu.my

www.i-riang.academy

www.dataqarma.com

www.prospere-solutions.com

www.fsh-logistics.com

www.nsmovertransport.com

இந்தக் கணினிப் பயன்பாட்டு முயற்சிகளுக்குத் தங்களின் ஆதரவைப் பெரிதும் எதிர்பார்க்கின்றேன். நன்றி.

தொடர்பு கொள்ள : www.prospere-solutions.com/web999

 

26 மே 2018

கவிக்கோ அப்துல் ரகுமான்

மனிதம் பாதி மகத்துவம் பாதி என்று சொல்வார்கள். ஆனால் அந்த இரண்டுமே கலந்து செய்த ஒரு கலவை தான் கவிக்கோ. வைகை நதிக் கரையில் மலர்ந்து தமிழ்ப் பொய்கையில் அலர்ந்து தமிழ் மொழியின் ஊற்றில் ஊறித் திளைத்த ஓர் அனிச்ச மலர். 
 

அவர் மனிதத்தில் மகத்துவம் பார்த்த ஒரு மாபெரும் கவிச் சான்றோன்.. அந்த கவிக் கடலை உலகத் தமிழர்கள் இழந்து விட்டார்கள். அவர் இப்போது நம்மிடம் இல்லை.

தமிழர்களைப் பார்த்து அவர் ஒருமுறை வேதனைப்பட்டு எழுதினார். என் நினைவுகளில் இன்றும் நிழலாடுகிறது. அவர் சொன்னார்

உன் சிலம்பம் அதிகாரம் செய்தது அன்று –
இன்றோ அதிகாரக் கால்களில் சிலம்பாகிக் கிடக்கிறாயே

எப்பேர்ப்பட்ட சொல்லாடல்.



2017 ஜூன் மாதம் 2-ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அவருடைய வீட்டில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நினைவு இழந்த நிலையில் அமரர் ஆனார். தமிழ் உலகம் ஓர் அரிய அழகிய அருமையான படைப்பாளனை இழந்து விட்டது.

அதற்கு முன்னர் ஈராண்டுகளுக்கு முன்னால் 2015 ஜனவரி 24-ஆம் தேதி கவிக்கோ அவர்களை உலகத் தமிழ்க் கவிஞர்கள் பெருவிழாவில் சந்தித்தேன். ஈப்போவில் நடைபெற்ற நிகழ்ச்சி. அவருடன் நீண்ட நேரம் உரையாடினேன்.

அந்த நினைவுகள் மனதிற்குள் இன்றும் பசுமை படர்ந்து பாசுரம் பாடுகின்றன. பட்டம் பதவி புகழ் அனைத்திற்கும் அப்பாற்பட்ட மனிதராகத் தெரிந்தார். பேச்சில் அழுத்தமான தாக்கங்கள். சொற்களில் தமிழின் வேர்த் தன்மைகள். சொல் உச்சரிப்பில் தமிழின் தொன்மைகள். பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றியது.



என்னைப் புகழ்ந்து ஒரு கவிதையையும் எழுதிக் கொடுத்தார். மறக்க முடியவில்லை. மாபெரும் கவிதை அரசனின் கவிநயங்கள் என் உள்ளக் கிடக்கையில் இன்றும் அமிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றன.

வார்த்தைகளை ஒடுக்கி மடக்கி எழுதினால் அது கவிதை என்பார்கள். ஆனால் கவிக்கோ அப்படி அல்ல. ஒரு வாசகனின் மனதைச் சொடுக்கி முடுக்கி எழுதத் தெரிந்த வசீகரக் கலைஞன்.

வயதைப் பார்க்காதீர்கள். அந்த வயதிற்குப் பின்னால் நீண்டு நெளிந்து நளினம் காட்டும் ஓர் அரிய தமிழ் ஞானத்தின் அசைவுகளை அசை போட்டுப் பாருங்கள். அது போதும்.

இவருடைய தந்தையும் தாத்தாவும் சிறந்த உருது மொழிக் கவிஞர்கள். கல்லூரியில் கவிக்கோ தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்றார். இலக்கண, இலக்கியங்களை கற்றார். கவிதைகள் எழுதத் தொடங்கினார்.



தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்ற இவர் சமஸ்கிருதமும் பயின்றவர்.

கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அழகிய கவிஞர். ஓர் அருமையான தமிழ்ப் பேராசிரியர். கவிக்கோ என்பது கவியின் கோமகன். ஓர் அற்புதமான கவி மகன்.

மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2-ஆம் தேதி மஹி – ஜைனத் பேகம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கினார். பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாகவே இனம் காட்டிக் கொண்டார்.

அந்தத் தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி ஒரு புதுமையான பதிவு முறையை அமைத்துக் கொண்டார்.

அந்த வகையில் தமிழில் கவிதைக் குறியீடுகள் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களைப் படைப்பதிலும் சரி; பரப்பியதிலும் சரி; தனித்துவம் பெற்றவர். தமிழ்க் கவிதை உலகில் மிக மிக முக்கியமானவர்.

சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவருடைய தனிப் பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி போன்ற இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாகவும் விளங்கியவர். ஆலாபனை எனும் கவிதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

தம் தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அந்தக் கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.

அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழ் அறிஞர்களிடம் பயின்றார்.



சென்னை தரமணியில் அமைந்து உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றியவர் ச. வே. சுப்பிரமணியம். அவரை வழிகாட்டியாகக் கொண்டார். புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சொல்லி இருக்கிறேன்.

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் ஒரு வாய்ப்பு கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் எனப் படிப்படியாக உயர்ந்தார்.

1991-ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார். 20 ஆண்டுகள் அந்தக் கல்லூரியின் தமிழ்த் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

கவிக்கோ பிறந்த நாள் கொண்டாடுவது இல்லை. இருந்தாலும் தமிழுலகம் அவரின் வாழ்ந்த நாட்களை பிறந்த நாட்களாகக் கொண்டாடுகின்றது. என்றைக்குமே அவரை மறக்காது.

‘கல்வி’ என்ற சொல்லின் வேர் ‘கல்’. ஆக ‘கல்’ என்றால் தோண்டுதல் என்று பொருள். அதாவது அறிவு என்பது மறைந்து இருக்கும் புதையல். அதைத் தோண்டி எடுப்பது கல்வி.

மண்ணுக்குள் மறைந்து இருக்கும் நீரைப் போல அறிவு மனிதனுக்குள் மறைந்து இருக்கிறது. மண்ணைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்று எடுத்துப் பெருகுவது போல் கற்கக் கற்க அறிவு ஊற்று எடுத்துப் பெருகும் என்கிறார் கவிக்கோ.

கவிதைக்குப் பொய்யழகு என்கிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வகையில் பொய்மைக்கு அழகு சேர்க்கிறார். பொய்க்கே ஓர் அழகு. பாரட்டலாம். ஆனால் வைரமுத்து சொல்வது பொய் என்று நான் நினைக்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம். ஏன் தெரியுங்களா.

நான் பார்த்த வரையில் படித்த வரையில் கவிக்கோவின் கவிதைகள் மட்டும் ஏன் உண்மைகளையே பேச வேண்டும். கவிஞர்கள் எவரும் பொய்யாக உவமானம் காட்டவில்லை. ஓர் எடுத்துக்காட்டு. அவ்வளவு தான்.

கவிதைக்குப் பொய்யழகு என்று வைரமுத்து சொன்னாலும் கவிக்கோ இல்லை என்று சொல்கிறார். கவிதைக்கு உண்மை தான் அழகு என்கிறார்.

கவிக்கோ அப்துல் ரகுமானின் ஆலாபனை கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதை வருகிறது. கொடுக்கிறேன் எனும் தலைப்பில் அந்தக் கவிதை.

அதற்கு முன் ஒரு செய்தி. இந்தத் கவிதைத் தொகுப்பு தான் கவிக்கோவிற்கு சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுத் தந்தது.

கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?

நீ கொடுப்பதாக நினைப்பது எல்லாம்
உனக்குக் கொடுக்கப் பட்டது அல்லவா?

உனக்கு கொடுக்கப்பட்டது எல்லாம்
உனக்காக மட்டும் கொடுக்கப் பட்டது அல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக் கொடுக்கப் படுகிறது

நீ ஒரு கருவியே

கலைஞர் கருணாநிதி ஒரு முறை கவிக்கோவைப் பற்றி இப்படிச் சொன்னார். கவிக்கோ ரகுமானோ கன்னித் தமிழுக்குக் கிடைத்த வெகுமானம். அவரின் நகைச்சுவையோ நமக்குக் கிடைத்த பெருமானம். அதற்கு ஏற்றால் போல ஒரு நிகழ்ச்சி.

இயக்குனர் ஒருவர் கவிஞர் வாலியிடம் கன்னம் எனும் சொல்லுக்கு ஓர் எளிமையான வார்த்தையாகப் போடுங்கள் என்றாராம். கன்னம் என்பதே எளிமையானது தான். அதற்கு ஏன் இன்னும் எளிமை. வாலி சொல்லிப் பார்த்தார். இயக்குனர் கேட்கவில்லை.

என்ன செய்வது என்று புரியாமல் கவிக்கோவிடம் போய் கவிஞர் வாலி சொல்லி இருக்கிறார். அதற்கு கவிக்கோ சிரித்துக் கொண்டே சொன்னாராம். கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியது தானே. இது எப்படி இருக்கு.

சீதையின் அழகைக் கம்பன் பக்கம் பக்கமாக உருகி வடித்தான். கம்ப ராமாயணத்தில் படித்து இருப்பீர்கள். ஆனால் கவிக்கோ இரண்டே வரிகளில் சொல்லி முடிக்கிறார். அதுவும் இராவணன் சொல்வதாக;

இருகண் படைத்தவனே இவள் அழகில் எரிந்திடுவான்
இருபது கண் படைத்த நான் என் செய்வேன்

அம்புட்டுத்தான். வேறு பேச்சே இல்லை. எப்படிப்பட்ட சிந்தனை. பக்கவாட்டுச் சிந்தனை என்று சொல்வார்களே. அது இது தான் போல இருக்கிறது. அப்படித்தான் எனக்கும் தெரிகிறது.

தமிழகத்தின் இன்றைய நிலையை இப்படி நாசுக்காக கவிக்கோ சொல்கிறார்.

கங்கை கொண்டவன் தான் இன்று காவிரியையும் இழந்து விட்டு கையைப் பிசைந்து நிற்கிறான்.

பாரதியாரைப் பற்றி சொல்லும் போது பாவம் பாரதி...

தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம் என்ற பாரதியே
வந்து பார் இப்போது தமிழ் தெருவில் தான் நிற்கிறது

என்கிறார்.

அடுத்து நடிகர்களையும் விட்டு வைக்கவில்லை. கவிக்கோ சொல்கிறார்.

இந்த நாட்டில் நடிப்பவர்கள்தான் தலைவர்கள் ஆகிறார்கள் அல்லது
தலைவர்களாக இருப்பவர்கள் தான் நடிக்கிறார்கள்

கூத்தாடிகளின் உண்மைகளைக் கூத்து ஆடாமலேயே போட்டு உடைக்கிறார்.

சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காப்பியம். கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப் பட்டது. இயற்றியவர் இளங்கோ அடிகள்.

அந்தச் சிலப்பதிகாரத்தை இரண்டே இரண்டு தம்மாந்துண்டு வரிகளில் எழுதியவர் கவிக்கோ.

பால் நகையாள்; வெண்முத்துப் பல் நகையாள்; கண்ணகியாள்; கால் நகையால்; வாய் நகைபோய்; கழுத்து நகை இழந்த கதை

என்று சொல்கிறார். என்னே லாவண்யம்.

கவிக்கோ அன்பரே தமிழ் இலக்கியத்தின் வறுமைக் காலத்தில் உங்களின் மௌன முகாரியைத் துறந்தீர்கள். அப்போது தான் எங்களின் மூத்த மொழிக்கும் மோகனம் பிறந்தது.

அம்மிக் கொத்த மறுத்த சிற்பியே. நீ விட்டுச் சென்ற அழகான கவிச் சிற்பங்கள் எங்களுடன் எப்போதும் கதைகள் பேசும். இன்றும் பேசும். இனி என்றும் பேசும். சொர்க்கத்தின் வாசலில் உங்களின் கவிப் புன்னகையைக் காண்கின்றோம். வாழ்த்துகிறோம் கவிப்பெருமானே.

25 மே 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்

தமிழகத்தின் தென் கோடித் துறைமுக நகரம் தூத்துக்குடி. வரலாற்றுச் சுவடுகளில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடம். கங்கைக் கொண்டான் கல்வெட்டுக்களில் 'தூற்றிக்குடி' என்று சொல்லப் படுகிறது.
 

நீர் நிறைந்த நிலத்தைச் சார்ந்த ஒரு துறைமுகத்தில் தோன்றிய ஊர் என்பதால் அதற்குத் தூத்துக்குடி என்று பெயர் வந்தது.

இந்தத் தூத்துக்குடியில் தான் இப்போது அனல் கக்கும் அசுரத் தனங்கள் அரங்கேற்றம் கண்டு வருகின்றன. ஒரு சில தினங்களுக்கு முன்னால் அப்பாவி மக்கள் 11 பேர் அட்டகாசமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். ஓர் இளம்பெண் உள்பட பத்து பேர் பலி.

ஸ்டெர்லைட் ஆலை என்று சொல்லப்படும் ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (Sterlite Industries)  தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை. வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
 

இங்கு செப்புக் கம்பி; கந்தக அமிலம்; பாஸ்பரிக் அமிலம் போன்றவை உற்பத்தி செய்யப் படுகின்றன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 23 ஆண்டுகளாக அந்தப் பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தி வந்து இருக்கிறார்கள். ஆனால் இந்த அளவுக்கு நிலைமை மோசம் அடைந்தது இல்லை. அதற்கும் காரணம் உள்ளது.

உயிர்த் தியாகம் செய்யும் அளவுக்கு அவர்கள் ஏன் அப்படி போராட வேண்டும். நிச்சயம் காரணம் இருக்கிறது. சரி. விசயத்திற்கு வருவோம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 23 ஆண்டுகளாகப் பல போராட்டங்களை அந்தப் பகுதி மக்கள் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த அளவுக்கு நிலைமை மோசம் அடைந்தது இல்லை. அதற்கும் காரணம் உள்ளது. உயிர் தியாகம் செய்யும் அளவுக்கு அவர்கள் போராட வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டு உள்ளது.
 

1990-களில் மஹாராஷ்டிரா, கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை கட்டப் படுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டது. 1995-ஆம் ஆண்டு தமிழகத்தின் தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலை வந்து சேர்ந்தது. ஒரு சின்ன விளக்கம்.

1992-ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத் தொழில் வளர்ச்சி நிறுவனம் இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு முதலில் கடலோர ரத்னகிரி கிராமத்தில் 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.

ஆனால் அங்கே தொழிற்சாலை கட்டக் கூடாது என்று உள்ளூர் மக்கள் போராட்டம் செய்தனர். அதன் விளைவாக மஹாராஷ்டிரா மாநில அரசு ஓர் ஆய்வுக் குழுவை அமைத்தது.

அந்தக் குழுவினர் வழங்கிய பரிந்துரையின்படி 1993-ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறுத்தப் பட்டன. அதற்கு பின்னர் தான் அந்த ஸ்டெர்லைட் நிறுவனம் கொல்லைப் புறமாகத் தமிழகத்திற்குப் பொடி நடையாக வந்து சேர்ந்தது.
 

மேலே முடியாது என்று சொல்லி விட்டார்கள். ஆனால் கீழே வாங்க வாங்க என்று சொல்லி வெற்றிலை பாக்கு வைத்து வீர வரவேற்பு கொடுத்தார்கள்.

அப்போதைய தமிழக அரசு ஆலையை அமைக்க அனுமதி அளித்தது மட்டும் அல்ல அவசர அவசரமாகச் சுற்றுச் சூழல் அனுமதிச் சான்றிதழையும் வழங்கியது.

மேசைக்கு அடியில் பணப்பட்டுவாடா என்று சொல்லப் படுகிறது. இருந்தாலும் தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருப்பானா. சொல்லுங்கள். மலேசியாவில் நடந்தது மாதிரி தேன்கூட்டையே கபளீகரம் செய்யவில்லையே.

அப்புறம் என்ன. ஆலை கட்டுவதற்கு அவசரம் அவசரமாகக் கையொப்பங்கள். 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு வாரியம் இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திற்குத் தடையில்லா சான்றிதழையும் வழங்கியது.
 

அப்போது தமிழகத்தின் முதல்வராகச் செல்வி ஜெயலலிதா இருந்தார். அதையும் சொல்லி விடுகிறேன்.

அப்புறம் அதன் பிறகு அங்கு என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள எவருக்கும் அக்கறை இல்லாமல் போய் விட்டது. அரசாங்கம் அடியோடு மறந்து விட்டது. மறக்கவில்லை. மறைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

`வேதாந்தா` உலகின் மிகப் பெரிய உலோகச் சுரங்கத் தொழில் நிறுவனம். அதன் உரிமையாளர் அனில் அகர்வால். பாட்னாவில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்ததும் 1972-ஆம் ஆண்டு தன் தந்தையுடன் அலுமினியத் தொழிலில் ஈடுப்பட்டார்.

அதன் பின்னர் அனில் அகர்வால் மும்பைக்குச் சென்று அங்கு வேதாந்தா எனும் நிறுவனத்தை தொடங்கினார்.
 

வேதாந்தாவின் துணை நிறுவனம் தான் இந்த ஸ்டெர்லைட். தூத்துக்குடியில் உள்ள ஆலை. ஓர் ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. 2017-ஆம் நிதியாண்டில் மட்டும் அதன் வர்த்தகம் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அபரிதமான வளர்ச்சி.

வேதாந்தா நிறுவனத்திற்குப் பல நாடுகளில் தாமிரத் தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலியா பாப்புவா நியூகினியிலும் சுரங்கங்கள் உள்ளன.

அங்கே இருந்து கப்பல்கள் வழியாகக் கொண்டு வரப்படும் தாமிரத் தாதுக்களில் இருந்து தாமிரத் தகடுகளை உருவாக்குவது தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் முக்கியத் தொழிலாகும்.

ஆனால் அந்த மாதிரி தாமிரத் தாதுக்களைத் தாமிரத் தகடுகளாக மாற்றும் போது தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்பரிக் அமிலம் போன்ற ரசாயனப் பொருட்களும் கிடைக்கும். அந்த ரசாயனப் பொருட்களின் மூலமாக அதிக லாபம் கிடைக்கும் என்பது தான் வேதாந்தா நிறுவனத்தின் கணக்கு.

இந்த ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்ததும் அந்த ஆலையில் இருந்து வெளியான நச்சுக் காற்றால் உள்ளூர் மக்கள் நேரடியாகப் பாதிக்கப் பட்டனர். அது உண்மையிலும் உண்மை.
 
அதன் விளைவாக தமிழகத்தின் சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் பலர் போராட்டத்தில் இறங்கினார்கள். ஏறக்குறைய 23 ஆண்டுகளாகப் பல்வேறு சட்டப் போராட்டங்களும் அமைதிப் போராட்டங்களும் அங்கே நடந்து உள்ளன.

ஸ்டெர்லைட் நிறுவனம் சூழலியல் மாசை உண்டாக்குவதாகக் குற்றம் சாட்டப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல தரப்புகளில் இருந்தும் வழக்குகள் பதியப் பட்டன.

1997-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டு வரை அரசு ஒப்புதல்களைப் புதுப்பிக்காமல் ஆலையை நடத்தியது ஒரு பெரிய குற்றம் என்று அந்த நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தை மூடச் சொல்லியது. இருந்தாலும் ஸ்டெர்லைட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வெற்றியும் பெற்றது.

நூறு கோடி அபராதம் கட்டிய பின்னர் அந்த நிறுவனம் தொடர்ந்து செயல் படலாம் என அனுமதி வழங்கப் பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் அமிலங்களை முறையாகக் கையாளா விட்டால் அந்த அமிலங்கள் சுற்றுச் சூழலுக்கும்; பொது மக்களுக்கும் பெரும் ஆபத்தை உண்டாக்கும்.

ஆனாலும் எந்த ஒரு சுற்றுச்சூழல் கண்காணிப்பும் இல்லாமல்; பொறுப்பும் இல்லாமல் அந்த நிறுவனம் தன் இஷ்டத்திற்குச் செயல்பட்டு வந்தது. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஏன் இப்போதைக்கு இந்த திடீர் போராட்டம்? அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அங்கு உள்ள மக்கள் அனைத்து வழிகளிலும் போராடி வருகிறார்கள்.
 

கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டம் அந்த நிறுவனத்தின் விரிவாக்கத்தை எதிர்த்து நடந்தது தான். அதாவது அந்தத் தொழிற்சாலையை மேலும் பெரிதாகக் கட்ட திட்டம் போட்டு இருந்தார்கள். இரண்டாவது ஆலையைக் கட்டுவதற்கு பிளேன் போட்டு செய்து கொண்டு இருந்தார்கள்.

அந்த நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் ஆண்டிற்கு 4 லட்சம் டன். அதுவே இப்போதைக்கு மோசமான சூழலியல் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மேலும் கூடுதலாக ஓர் ஆண்டிற்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் அளவுக்கு அந்தத் தொழிற்சாலையை இழுத்துக் கட்டுவது என அந்த நிறுவனம் முடிவு செய்தது.

அது நிச்சயமாக மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். ஆக இரண்டாவது ஆலை கட்டும் பணிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்ட போது தான் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போரட்டத்தில் இறங்கினார்கள்.
 

ஏற்கனவே செயல்பட்ட ஆலையில் 4 லட்சம் டன் தாமிரத் தகடுகள் உற்பத்தி செய்யப் பட்டன. புதிய ஆலையில் அதைவிட நான்கு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப் பட்டது. அதுவே பொதுமக்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அதுதான் கிராம மக்கள் கொந்தளித்துப் போனதற்கு காரணம். அதனால் நடந்த போராட்டங்களின் போது தான் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிர் இழந்து உள்ளனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.

அனுதினமும் செத்துச் செத்துப் பிழைக்கும வகையில் தூத்துக்குடி மக்களின் வாழ்க்கை அமைந்து விட்டது. எதிர்கால சந்ததியினரின் நிலைமை என்னவாகும் என்பதும் அவர்களைச் சுற்றி வரும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
 

அந்தக் கேள்விக்கு விடை காணும் வகையில் தான் தங்கள் உயிரையும் துச்சமாகக் கருதிப் போராட்டத்தில் இறங்கினார்கள். அநியாயமாகப் பலம் உயிர்களைப் பறி கொடுத்தும் இருக்கிறார்கள்.

இந்த ஸ்டெர்லெட் பிரச்சினையில் இருந்து தூத்துக்குடி மக்கள் விடுபட வேண்டும். பழைய சுமுகமான வாழ்க்கை நிலைக்கு திரும்பி வர வேண்டும் என மலேசியத் தமிழர்களாகிய நாம் வேண்டிக் கொள்கிறோம்.

24 மே 2018

அழகிய மகள் அல்தான்தூயா

அல்தான்தூயா ஓர் அழகிய மகள். அற்புதமான உயிரோவியம். மங்கோலிய மண்ணின் மாதுளம் மடந்தை. ஆனாலும் மலேசிய அரசியல் வளாகத்தில் மாபெரும் அமளி துமளியை ஏற்படுத்திய பேரிளம்பெண். அரசியல்வாதிகள் சிலரின் தலை எழுத்துகளைச் சொக்கட்டான் காய்களாக மாற்றிப் போட்டவர்.


அதையும் தாண்டிய நிலையில் கோடிக் கோடியான பணத்திற்கு ஆசைப் பட்டவர். கத்தைகளுக்கு நடுவில் மெத்தையைத் தட்டிப் பார்த்தவர். தலையணைக்கு மேலே மர்மஜாலம் காட்டிய மாபெரும் மனிதப் பெட்டகம். அற்ப வயதிலேயே ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார். அதுவே ஒரு பெண் பாவம்.

அவருடைய வாழ்க்கை வரலாறு வருகிறது. பாரபட்சம் இல்லாமல் எழுதி இருக்கிறேன். எந்த ஓர் அரசியல்வாதியையும் இதில் சம்பந்தப் படுத்திப் புண் படுத்துவது நம்முடைய நோக்கம் அல்ல.

அல்தான்தூயாவின் கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் என்று நம்முடைய புதிய பிரதமர் துன் மகாதீர் சொல்கின்றார். சொன்னது போல செய்யக்கூடிய மனிதர். இங்கே ஒரு பெண்ணின் உயிர் விலை பேசப்பட்டு உள்ளது. அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவுமே அனைத்து நெஞ்சங்களின் எதிர்பார்ப்புகள்.



அல்தான்தூயாவின் பிறப்புப் பெயர் அல்தான்தூயா சாரிபூ பாயாஸ் காலன். மங்கோலியா உலான் பத்தூர் நகரில் 1978 மே மாதம் 16-ஆம் தேதி பிறந்தவர்.

குடும்பத்தின் மூத்த மகள். தந்தையாரின் பெயர் சாரிபூ செத்தெவ். இவர் ஒரு மருத்துவர். மங்கோலியா தேசியப் பல்கலைக்கழகத்தில் தகவல் கல்வித் துறை இயக்குநராகவும் மனோவியல் பேராசிரியராகவும் பணி புரிந்தவர்.

தாயாரின் பெயர் எஸ்.அல்தான் செத்தெக். இவர் மங்கோலியாவில் ரஷ்ய மொழி பயிற்றுவிக்கும் ஓர் ஆசிரியை. பெற்றோர்கள் ரஷ்யாவில் பணி புரிந்தவர்கள். அதனால் அல்தான்தூயாவிற்கு 12 வயதாகும் வரை ரஷ்யாவின் லெனின்கிரேட் நகரில் தங்கி, தொடக்கக் கல்வியைப் படித்து வந்தார்.

மங்கோலிய, ரஷ்ய, சீன, ஆங்கில, பிரெஞ்சு மொழிகளில் அல்தான்தூயா சரளமாகப் பேசக் கூடியவர்.




தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் மங்கோலியாவிற்குத் திரும்பினார். 1996-ஆம் ஆண்டில் மாடாய் எனும் மங்கோலியப் பாடகரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது அல்தான்தூயாவிற்கு வயது 18. மாடாய்க்கு வயது 22.

மங்கோலிய மொழியில் கார் சார்னாய் (தமிழில்: கறுப்பு ரோஜா) எனும் இசைக் குழுவில் அல்தான்தூயாவின் கணவர் மாடாய் ஒரு பிரபலமான பாடகர். இவர்களின் திருமண வாழ்க்கை இரு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

மாடாய் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள். அதனால் குடும்ப உறவில் சலசலப்புகள் கலந்த விரிசல்கள். ஜூன் 1998-இல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு அல்தான்தூயாவிடம் வழங்கப் பட்டது.



விவாகரத்திற்குப் பின் அல்தான்தூயா தன்னுடைய மகனுடன் பெற்றோரின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் அவர் நவநாகரிகச் சமுதாயத்தின் நவீனத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 

சில மாதங்களில் எஸ். குனிக்கூ (S.Khunikhu) எனும் மங்கோலிய வடிவமைப்பாளரின் மகனின் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் மறுபடியும் ஒரு விவாகரத்தில் போய் முடிந்தது. ஆனால் குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை.

அதன் பின்னர் வேறு ஒரு மங்கோலிய ஆடவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் மூலமாக திருமணத்திற்கு அப்பாற்பட்டு இரண்டாவது குழந்தையையும் பெற்றுக் கொண்டார். இரு குழந்தைகளும் அல்தான்தூயாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தனர்.



முதல் திருமணத்திற்குப் பின்னர் 1996 நவம்பர் மாதம் உலான் பத்தூரில் இருக்கும் ஒத்கோண்டெஞ்சர் எனும் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பிற்காகப் பதிந்து கொண்டார். அந்தப் படிப்பையும் தொடரவில்லை.

வகுப்பிற்கு முறையாக வருவது இல்லை. தேர்வுகளையும் சரியாக எழுதுவது இல்லை. அந்தச் சமயத்தில் அவர் தாய்மை அடைந்து இருந்தார். அதனால் 1997 ஜனவரி மாதம் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

இரண்டாவது விவாகரத்திற்குப் பின்னர் அல்தான்தூயா வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்து போனார். அதை மறப்பதற்கு 2000-ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்திற்குச் சென்றார்.

அங்கு ஒரு மாடலிங் பள்ளியில் பதிந்து கொண்டார். இந்த முறை அக்கறையுடன் பயிற்சிகளை மேற்கொண்டு மாடலிங் துறையில் சான்றிதழைப் பெற்றார்.



பாரிஸ் நகரில் இருந்து மங்கோலியா திரும்பியதும் மாடலிங் துறையில் அவர் ஈடுபடவில்லை. மாறாக நெசவுத் துணி வியாபரத்தில் ஈடுபட்டார். சீனாவில் இருந்து துணிமணிகளை வரவழைத்தார்.

ஷாங்காய், பெய்ஜிங், ஹாங்காங், தைவான் போன்ற இடங்களுக்கு அடிக்கடி பயணங்களை மேற்கொண்டார். வணிகப் பிரபலங்களின் தொடர்புகளும் கிடைத்தன. மாடலிங் துறையில் புகழ்பெற வேண்டும் என்று அல்தான்தூயா தொடக்கக் காலத்தில் ஆசைப் பட்டார். ஆனால் கடைசி வரை அது நடக்காமல் போய் விட்டது.

பிரபலங்களின் தொடர்புகளினால் சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று வந்தார். இவர் மலேசியாவிற்கு முதல் முறையாக 1995-ஆம் ஆண்டிலும் இரண்டாவது முறையாக 2006-ஆம் ஆண்டிலும் இரு முறைகள் வந்து இருக்கிறார்.



2004-ஆம் ஆண்டு ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஓர் அனைத்துலக வைரக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக அல்தான்தூயா அங்கு சென்று இருந்தார். 

அந்தக் கட்டத்தில் மலேசிய உத்திப்பூர்வ ஆய்வு மையத்தில் (Malaysian Strategic Research Centre), பாதுகாப்பு பகுத்தாய்வாளராக (Defense Analyst) இருந்த அப்துல் ரசாக் பாகிந்தா என்பவரின் அறிமுகம் கிடைத்தது.  அந்த அறிமுகம் நட்பாக மாறி கடைசியில் ஒரு நெருக்கமான உறவு முறைக்கும் வழிகோலியது.

மலேசியாவின் மூத்த அரசியல்வாதி ஒருவர், அல்தான்தூயாவை அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கு அறிமுகம் செய்து வைத்ததாகச் சொல்லப் படுகிறது. அதன் பின்னர் ரசாக் பாகிந்தாவுடன் அல்தான்தூயா பாரிஸ் நகரத்திற்குச் சென்றார்.

மலேசிய அரசாங்கம் பிரான்ஸ் நாட்டில் இருந்து இரு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் காலக் கட்டம். அப்போது அங்கே நடந்த பேச்சு வார்த்தைகளில் அல்தான்தூயா ஒரு மொழிப் பெயர்ப்பாளராகவும் பணி புரிந்தார். 



பாரிஸில் இருக்கும் போது அல்தான்தூயாவிற்கும் அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கும் மிகையான நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். பின்னர் அல்தான்தூயா, ரசாக் பாகிந்தாவின் வைப்பாட்டியாகவே வாழ்ந்தார்.

1961-இல் பிறந்த அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கு வயது 52. அல்தான்தூயாவிற்கு வயது 25. ’ஐந்தும் இரண்டும்’ எனும் எண்கள் விளையாடிய விளையாட்டைப் பாருங்கள்.

மலேசியாவின் பிரபலமான வலத் தளங்களில் ஒன்றான மலேசியா டுடே தளத்தில் அதன் ஆசிரியர் ராஜா பெத்ரா கமாருடின், அல்தான்தூயாவின் இறப்பில் நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்டு உள்ளார் என்பதை முதன்முதலில் தெரிவித்தார்.



அதை நஜீப் துன் ரசாக் வன்மையாக மறுத்தார். மறுத்தும் வருகிறார். நஜீப் மீதான குற்றச்சாட்டை ராஜா பெத்ரா கமாருடின் பின்னர் மீட்டுக் கொண்டார்.

தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டதும் ராஜா பெத்ரா கமாருடின் தன் மனைவி பிள்ளைகளை மலேசியாவிலேயே விட்டுவிட்டு இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றார்.

மலேசிய அரசாங்கம் 2002-ஆம் ஆண்டில் இரு ஸ்கோர்ப்பின் (Scorpene) நீர்மூழ்கிக் கப்பல்களை 1.2 பில்லியன் யூரோ மதிப்பில் (மலேசிய ரிங்கிட்: 4.7 பில்லியன்) பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கியது. ஒரு பில்லியன் என்றால் ஆயிரம் மில்லியன்கள். அதாவது நூறு கோடி. 

அதில் 114 மில்லியன் யூரோ அதாவது (மலேசிய ரிங்கிட்: 464 மில்லியன்) முகவர் சேவைக் கட்டணமாக அர்மாரிஸ் எனும் ஸ்பானிய நிறுவனம் வழங்கியது. அதாவது கமிஷன்.



அர்மாரிஸ் நிறுவனம் என்பது நீர்மூழ்கிக் கப்பல்களின் விற்பனைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நிறுவனம் ஆகும். அந்த முகவர் சேவைக் கட்டணம் ரசாக் பகிந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்த பெரிமேக்கர் எனும் நிறுவனத்திடம் வழங்கப் பட்டது.

அதை அறிந்து கொண்ட அல்தான்தூயா தனக்கு 500,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்தால் இந்த முகவர் சேவைக் கட்டண விவகாரம் வெளியுலகிற்கு தெரிவிக்கப்பபட மாட்டாது என்று ரசாக் பகிந்தாவை மிரட்டிப் பணம் பறிக்க முயன்று இருக்கிறார்.

2006 அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி அல்தான்தூயா கடைசி முறையாக மலேசியாவிற்கு வந்தார். அவருடன் கூடவே இருவர் வந்தனர். ஒருவர் நமீரா கெரில்மா, வயது 29 (Namiraa Gerelmaa); இன்னொருவர் உரிந்தூயா கால் ஒச்சிர், வயது 29 (Urintuya Gal-Ochir).

இவர்களில் நமீரா என்பவர் அல்தான்தூயாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஆவார். ரசாக் பகிந்தாவைச் சந்தித்துப் பேசவே அல்தான்தூயா கோலாலம்பூருக்கு வருகை புரிந்ததின் முக்கிய நோக்கமாகும். 



கோலாலம்பூர், ஜாலான் ஹாங் லெக்கீர் சாலையில் இருக்கும் மலாயா ஓட்டலில் அவர்கள் தங்கினர். ரசாக் பகிந்தா தங்கி இருக்கும் வீட்டைத் தேடிப் பிடிப்பதற்காக ஆங் சோங் பெங் எனும் தனியார் துப்பறிவாளரையும் சேவையில் அமர்த்திக் கொண்டனர்.

ரசாக் பகிந்தாவின் அலுவலகம் கோலாலம்பூர், ஜாலான் அம்பாங் சாலையில் இருந்தது. அவருடைய அந்த அலுவலகத்திற்கு மூவரும் சில முறை சென்று இருக்கின்றனர். ஆனாலும் ரசாக் பகிந்தாவைப் பார்க்க முடியவில்லை. அவர்களைப் பார்ப்பதை ரசாக் பகிந்தா தவிர்த்து வந்தார்.

2006 அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி இரவு 7.20-க்கு அல்தான்தூயா, நமீரா, உரிந்தூயா ஆகிய மூவரும் ரசாக் பகிந்தாவின் இருப்பிடமான டாமன்சாரா ஹைட்ஸ் குடியிருப்பு பகுதிக்கு வாடகைக் காரில் சென்றனர். 

அப்போது ரசாக் பகிந்தாவின் வீட்டிற்கு பி. பாலசுப்பிரமணியம் எனும் தனியார் துப்பறிவாளர் பாதுகாவலராக இருந்தார்.

அவரிடம் ரசாக் பகிந்தாவைப் பற்றி விசாரித்தார்கள். தனக்கு எதுவும் தெரியாது என்று பாலசுப்பிரமணியம் சொன்னார். அவருக்குத் தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு மூவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.



மலாயா ஓட்டலுக்கு திரும்பியதும் நமீரா, உரிந்தூயா ஆகிய இருவரையும் இறக்கிவிட்டு அல்தான்தூயா மட்டும் தனியாக அதே வாடகைக் காரில் ரசாக் பகிந்தாவின் இருப்பிடத்திற்குச் சென்றார்.

அதுதான் அல்தான்தூயாவை அவர்கள் கடைசியாகப் பார்த்தது. அதன் பின்னர் அல்தான்தூயா காணாமல் போய் விட்டார். அல்தான்தூயா காணவில்லை என்று காவல் துறையில் புகார் செய்யப் பட்டது. காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

2006 நவம்பர் மாதம் 7-ஆம் தேதி, சிலாங்கூர், ஷா ஆலாம், புஞ்சாக் நியாகா நீர்த் தேக்கத்திற்கு அருகில் மனித எலும்புகளின் சிதறல்களும் மனிதத் தசைகளின் சிதைவுகளும் கண்டுபிடிக்கப் பட்டன.

மரபணுச் சோதனை செய்யப்பட்டது. (DNA analysis) இறுதியில் அந்தச் சிதறல்களும் சிதைவுகளும் அல்தான்தூயாவிற்கு உடையவை என்று உறுதி செய்யப்பட்டது.



மலேசியக் காவல் துறையைச் சேர்ந்த மூவர், அல்தான்தூயா கொலைத் தொடர்பாகக் கைது செய்யப் பட்டனர். அவர்களில் தலைமை இன்ஸ்பெக்டர் அசீலா ஹாட்ரி (30), கார்ப்பரல் சிருல் அசார் உமார் (35) ஆகிய இருவரும் மலேசிய காவல் துறையின் மேல்தட்டுச் சிறப்பு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் மெய்க்காவலர்கள் ஆகும். கொலை நிகழ்ச்சியின் போது நஜீப் துன் ரசாக், மலேசியாவின் தற்காப்பு அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்தார். அந்தக் காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக ரசாக் பகிந்தா மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

2007 ஜூன் 4ஆம் தேதி, ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்தில் அல்தான்தூயா கொலை வழக்கு தொடங்கியது. 2008 அக்டோபர் 31-ஆம் தேதி, கொலைவழக்கில் இருந்து ரசாக் பகிந்தா விடுதலை செய்யப் பட்டார்.



தலைமை இன்ஸ்பெக்டர் அசீலா ஹாட்ரியும், கார்ப்பரல் சிருல் அசார் உமாரும் எதிர்வாதம் செய்ய அழைக்கப் பட்டனர். ரசாக் பகிந்தாவின் மீது குற்றம் சாட்டப் படுவதற்கு போதுமான சான்றுகள் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாக அரசு தரப்பு தெரிவித்தது. ஆனால் இதுவரையிலும் முறையீடு எதுவும் செய்யப்படவில்லை.

2009 ஏப்ரல் 9-ஆம் தேதி நீதிமன்றம் அல்தான்தூயா கொலைவழக்கின் தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னால் தன்னை விடுதலை செய்யும்படி சிருல் அசார் உமார் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். ஓர் உயர்மட்டக் கொலைவழக்கில் தான் பலிக்கடா ஆக்கப்பட்டதாகவும் சொன்னார்.



283 பக்கங்களில் எழுதப்பட்ட தீர்ப்பின கடைசி நான்கு பக்கங்கள் மட்டும் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் கூடியிருந்த குற்றவாளியின் உறவினர்கள் கதறி அழுதனர். பத்திரிகையாளர்கள் அவர்களிடம் பேசுவதில் இருந்து தடை செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் மங்கோலிய மொழிபெயர்ப்பாளர் எங்ஜார்கால் தெட்ஸ்கி என்பவரும் இருந்தார். தீர்ப்பு வழங்கப்படும் போது, அல்தான்தூயாவின் தந்தையார் மங்கோலியாவில் இருந்தார்.  அவருக்கு நீதிமன்றத் தீர்ப்பு, குறும் செய்திகள் மூலமாகத் தெரிவிக்கப்பட்டன. இந்தக் கொலைவழக்கில் பல சாதனைகள் இடம் பெற்றுள்ளன.

மலேசிய நீதிமன்ற வரலாற்றில், இந்த அல்தான்தூயா கொலைவழக்கு நீண்ட நாட்கள் நடைபெற்ற வழக்கு எனும் சாதனையைப் பதித்தது. 165 நாட்கள் நடைபெற்ற இந்த கொலைவழக்கில், அரசு தரப்பில் 84 பேரும், எதிர்தரப்பில் 198 பேரும் விசாரணை செய்யப்பட்டனர்.



433 சாட்சிப் பொருள்கள் காட்சிப் பொருள்களாகக் காட்சி படுத்தப்பட்டன. முதல் குற்றவாளி அசீலா ஹாட்ரி இப்போது சுங்கை பூலோ சிறைச்சாலையில் இருக்கிறார்.

இரண்டாம் குற்றவாளி சிருல் அசார் உமார் ஆஸ்திரேலியாவிற்குத் தப்பிச் சென்று விட்டார். அல்தாதூயா வழக்கு மறுவிசாரணைக்கு வந்தால் உண்மை நிலவரத்தைச் சொல்லத் தயார் என்கிறார்.

ரசாக் பகிந்தாவின் வீட்டிற்கு தனியார் துப்பறியும் பாதுகாவலராக இருந்த பி. பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த 2013 மார்ச் 15ஆம் தேதி, சிலாங்கூர், ரவாங் நகரில் இருக்கும் அவருடைய இல்லத்தில், மாரடைப்பால் காலமானார்.

அதே போல நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதலில், ஊழல் நடந்துள்ளது என்று பிரான்சில் வழக்குத் தொடர்ந்த பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரும் மர்மமான முறையில் இறந்து போனார். தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. எல்லாமே மர்மம். 



அல்தான்தூயா கொலைவழக்கில், மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கிற்கும் தொடர்பு இருக்கிறது என்று பாலசுப்பிரமணியம் 2008 ஜூலை மாதம் 3ஆம் தேதி சத்தியப் பிரமாணம் செய்தார்.

அந்தச் சத்தியப் பிரமாணம் மலேசிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுநாள் அந்தச் சத்திய பிரமாணத்தை மீட்டுக் கொண்டார். இரண்டாவது சத்தியப் பிரமாணம் செய்தார்.

அதை மேலிடத்து ஆணையின் பேரில் செய்ததாகச் சொன்னார். அதைப்பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் கொடுப்பதற்கு முன்னால் அவரும் இறந்து போனார்.

23 மே 2018

கோபிந்த் சிங் டியோ

மலேசிய நாடாளுமன்றத்தில் கர்ப்பால் சிங் ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். ஜெலுத்தோங் புலி என்று புகழாரம் செய்யப் பட்டவர். மலேசிய அரசியல் வானில் முடிசூடா மன்னராக வாழ்ந்தவர். மலேசிய நீதிமன்ற வாதங்களின் தலைமகனாகத் திகழ்ந்தவர்.


பெருமகனார் கர்ப்பால் சிங் அவர்களுக்கு மூன்று ஆண்மகன்கள். மூத்த மகன் ஜக்டீப் சிங் டியோ. பினாங்கு மாநிலத்தில் டத்தோ கிராமாட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இரண்டாவது மகன் கோபிந்த் சிங் டியோ. சிலாங்கூர், பூச்சோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

மூன்றாவது மகன் ராம் கர்பால். மகள் சங்கீத் கவுர். இவர்கள் இருவரும் கர்பால் சிங் வழக்கறிஞர் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். கர்பால் சிங்கின் நான்கு பிள்ளைகள் வழக்குரைஞர்களாகும்.  அவருடைய கடைசி மகன் மான் கர்பால் என்பவர் மட்டும் காப்பீட்டுத் துறையில் (actuarial science) ஈடுபட்டுள்ளார். அரசியலும் வழக்காடும் தொழிலும் வேண்டாம் என்று சொல்லி முற்றிலும் மாறுபட்ட துறைக்கு மாரிக் கொண்டார். சரி.


கோபிந்த் சிங் டியோ மலேசிய அரசியல் வானில் சரித்திரம் படைத்தவர் என்று தான் சொல்ல வேண்டும். மலேசியாவில் இவர்தான் முதல் சீக்கிய அமைச்சர். நாற்பத்தைந்து வயதான கோபிந்த் சிங் டியோ மலேசியாவின் தொடர்பு பல்ஊடக அமைச்சராகப் பொறுப்பேற்றார். 

சென்ற திங்கட்கிழமை பதவியேற்ற புதிய அமைச்சரவையில் இரு இந்தியர்கள் அமைச்சர்கள் இடம் பெற்று இருந்தனர். அந்த இருவருமே தலைப்பாகை அணிந்து பதவி ஏற்றனர். அதை ஓர் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த காலங்களில் ம.இ.கா.வைச் சேர்ந்த இந்திய அமைச்சர்கள் பேரரசர் முன்னால் பதவி ஏற்கும் போது மரியாதைக்காக மலாய் பாரம்பரிய சொங்கோக் அணிந்து பதவி ஏற்பது வழக்கம். 
 

சீக்கியர்களின் வழக்கப்படி சீக்கியத் தலைப்பாகையுடன் கோபிந்த் சிங் டியோ பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அவரைப் போலவே மனித வள அமைச்சராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு  எம். குலசேகரன் அவர்களும் தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இது மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் மறக்க முடியாத காலச்சுவடு.

1957-ஆம் ஆண்டு மலேசியத் தந்தை துங்கு அவர்கள் பிரதமரானதும் அவருடைய அமைச்சரவையில் இருந்த துன் சம்பந்தன் தலைப்பாகை அணிந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டதாகச் சொல்லப் படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். அதையும் ஒரு வரலாற்று ஆவணமாக பதிவு செய்யலாம்.

கோபிந்த் சிங்கின் தந்தை கர்ப்பால் சிங் பொதுவாகவே தலைப்பாகை அணிவது இல்லை. அதே சமயத்தில் கர்ப்பால் சிங் பேரரசரின் முன்னால் விருதுகள் எதையும் வாங்கவில்லை. அல்லது ஓர் அமைச்சர் பதவியை ஏற்கும் நிலைமையும் அவருக்கு ஏற்பட்டவில்லை. 
 

ஒன்று மட்டும் உண்மை. ஒரு காலத்தில் மலேசியாவில் ஆட்சி மாறும். தன் மகன் ஓர் அமைச்சர் ஆவார் என்று கர்ப்பால் சிங் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார். ஆனாலும் தந்தையின் அடிச்சுவட்டில் காலடி வைத்த கோபிந்த் சிங் டியோ இன்று பக்காத்தான் கூட்டணி சார்பில் தொடர்பு மற்றும் பல்ஊடக அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார். வாழ்த்துகிறோம்.

இங்கிலாந்தில் உள்ள லிங்கன்ஸ் இன் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற கோபிந்த் சிங் டியோ 1966-ஆம் ஆண்டு மலேசிய வழக்குரைஞர் மன்றத்தில் அனுமதிக்கப்பட்டார்.

2008-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்வுசெய்யப்பட்டார். பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் கெராக்கான் (பாரிசான்) கட்சியைச் சேர்ந்த லாவ் யெங் பெங் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கோபிந்த் சிங்கிற்கு 35,079 வாக்குகள் கிடைத்தன. லாவ் யெங் பெங்கிற்கு 15,107 வாக்குகள். வாக்குப் பெரும்பான்மை 19,972.

2013-ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அதே பூச்சோங் தொகுதியில் மீண்டும் நிறுத்தப் பட்டார். அவரை எதிர்த்து கெராக்கானைச் சேர்ந்த கோகிலன் பிள்ளை நின்றார். 
 

இந்தத் தேர்தலில் கோபிந்த் சிங் டியோவிற்கு 62,938 வாக்குகள் கிடைத்தன. கோகிலன் பிள்ளைக்கு 30,136 வாக்குகள். 32,802 வாக்குகள் பெரும்பான்மையில் கோபிந்த் சிங் டியோ வெற்றி பெற்றார்.

கடந்த 2018-ஆம் தேர்தலில் அதே பூச்சொங் தொகுதியில் மும்முனைப் போட்டி. ஜ.செ.க.; கெராக்கான்; பாஸ் ஆகிய மூன்று பெரிய கட்சிகளும் களம் இறங்கின.

பலரும் எதிர்பார்த்தது போல ஜ.செ.க. (பாக்காத்தான்) வெற்றி பெற்றது. கோபிந்த் சிங் டியோவிற்கு 60,429 வாக்குகள். கெராக்கானைச் சேர்ந்த ஆங் சின் தாட் என்பவருக்கு 12,794 வாகுகள். பாஸ் கட்சியைச் சேர்ந்த முகமட் ரோசரிசான் முகமட் ரோஸ்லான் என்பவருக்கு 10,255 வாக்குகள். 47,635 வாக்குகள் பெரும்பான்மையில் கோபிந்த் சிங் டியோ வெற்றி பெற்றார்.

2009 மார்ச் 16-ஆம் தேதி, கோபிந்த் சிங் டியோ நாடாளுமன்றத்தில் இருந்து 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப் பட்டார். பிரதமர் நஜீப்பிற்கும் மொங்கோலிய மாடல் அழகி அல்தாதூயா கொலைக்கும் தொடர்பு உள்ளது. நஜீப் ஒரு ‘கொலைகாரர்’ என்று நாடாளுமன்றத்திலேயே நஜீப்பின் மீது குற்றம் சாட்டினார். அப்போது நஜீப் நாட்டின் துணைப் பிரதமராக இருந்தார்.

நஜீப்பை அவமதித்துப் பேசியதால் கோபிந்த் சிங் டியோவிற்கு அந்த 12 மாத இடைநீக்கம். அத்துடன் அவருக்கு ஓர் ஆண்டு ஊதியமும் வழங்கப்படவில்லை. இருந்தாலும் பின்னர் வழக்குப் போட்டு அவர் அந்த ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது வேறு கதை.
 

கோபிந்த் சிங் டியோ ஒரு வழக்குரைஞராக இருப்பதால் அவர் பணிபுரியும் கர்ப்பால் சிங் நிறுவனத்திடம் இருந்தும் மாதா மாதம் ஊதியம் கிடைக்கிறது. அந்த ஊதியத்தில் ஒரு மாதம் 5000 ரிங்கிட்டில் இருந்து 10 ஆயிரம் வரை பூச்சோங் தொகுதி மக்களுக்காகச் செலவு செய்து வருகிறார்.

ஒரே நாளில் பல திருமணங்கள் வரும். ஒவ்வொரு திருமணச் சடங்கிற்கும் போக வேண்டும். ஏதாவது ஓர் அன்பளிப்புச் செய்ய வேண்டும். அரசாங்கம் கொடுக்கும் ஊதியம் பற்றவே பற்றாது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மான்யம் கிடைப்பது இல்லை. தெரிந்த விசயம் தானே.

பூச்சோங் தொகுதியில் இரு சேவை மையங்களை நடத்தி வருகிறார். அதற்கான செலவுகளை அவரே சொந்தமாகக் கவனித்துக் கொள்கிறார். பாரிசான் அரசாங்கம் மான்யம் எதுவும் கொடுப்பது இல்லை.

ஆனால் சிலாங்கூர் மாநிலத்தை பக்காதான் ஆட்சி செய்வதால் ஓரளவுக்கு மான்யம் கிடைத்து வருகிறது என்று கோபிந்த் சிங் டியோ கூறுகிறார். இனிமேல் பிரச்சினை இல்லை. மத்திய அரசாங்கத்தைப் பக்காத்தான் கைப்பற்றி விட்டதால் மான்யங்கள் சலனம் இல்லாமல் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாத ஊதியமாக 12,500 ரிம கிடைக்கிறது. அதாவது ஓர் ஆண்டிற்கு 150,000. இதில் ஒரு இலட்சம் வெள்ளி பல்வேறு சமூக நிகழ்ச்சிகளுக்குச் சென்று விடுகிறது. மீதம் உள்ள 50,000 சேவை நிலையங்களுக்குப் பயன்படுகிறது என்று கோபிந்த் சிங் டியோ சொல்கிறார்.

கெடிலான் தலைவர் அன்வார் இப்ராகிம் நீதிமன்ற வழக்குகளில் கோபிந்த் சிங் டியோ தான் பிரதான வழக்குரைஞராகச் செயலாற்றி வந்தார். இவரின் அரசியல் வாழ்க்கையிலும் முன்னைய அரசாங்கத்தினால் பற்பல தடைகள்; பற்பல முட்டுக்கட்டைகள். இவர் சரவாக் மாநிலத்திற்குப் போகக் கூடாது என்று ஒரு தடையையே போட்டு வைத்து இருந்தார்கள். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த மறுநாளே அந்தத் தடையை அகற்றி விட்டார்கள்.
 

அது மட்டும் அல்ல. அவருடைய வீட்டில் கற்களை விட்டு வீசி சேதப் படுத்தி இருக்கிறார்கள். அவருடைய காரைச் சேதப்படுத்தி இருக்கிறார்கள். அவருடைய மனைவியைக் கொச்சை வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். அவ்வளவு வேதனைகளையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து இருக்கிறார்.

அந்த வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் அன்புப் பரிசாக இப்போது அமைச்சர் பதவி கிடைத்து உள்ளது. பொறுமைசாலிகளுக்குப் பெருமை தானாக வந்து சேரும் என்பதற்கு கோபிந்த் சிங் டியோ நல்ல ஒரு சான்று.

கோபிந்த் சிங் டியோ அமைச்சர் பதவி ஏற்ற முதல் நாளே மக்களுக்கு ஓர் இனிப்பான செய்தியைச் சொல்லி இருக்கிறார். இணையத்தின் வேகம் இரு மடங்காகக் கூட்டப்படும். (doubling the country’s internet speed) இப்போதைய இணையச் சேவைக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழி வகைகள் காணப்படும். எல்லோருடைய வீட்டிலும் மலிவான இணையச் சேவைகள் இருக்க வேண்டும்.
 

எங்கு எல்லாம் இணைய அலைகள் சரியாக கிடைக்கவில்லையோ அங்கு எல்லாம் முதன்மை பார்வை வைக்கப்படும். கிடைப்பதற்கான வழி வகைகள் உடனடியாகச் செய்யப்படும்.

தந்தை எப்படியோ தனயனும் அப்படியே என்று சொல்வார்கள். அந்த வகையில் தன் தந்தையைப் போல நீதிக்கும் நேர்மைக்கும் போராடி வருகிறார். ஜெலுத்தோங் குட்டிப்புலி என்று பெயர் பெற்ற இவர் மலேசிய மனங்களில் ஒரு போராட்டவாதியாக தடம் பதித்து வலம் வருகிறார். வாழ்த்துகிறோம்.