22 டிசம்பர் 2018

பிரபஞ்சன்


பிரபஞ்சன் (பிறப்பு: ஏப்ரல் 27, 1945 - மறைவு: டிசம்பர் 21, 2018). தமிழ் எழுத்தாளர்; விமர்சகர். இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம்.

1995-ஆம் ஆண்டு அவரின் வரலாற்றுப் புதினமான 'வானம் வசப்படும்' என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப் பட்டது. இந்தப் புதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டு எழுதப் பட்டது.

புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றவர். தன்  வாழ்க்கையைத் தஞ்சாவூரில் ஓர் ஆசிரியராகத் தொடங்கியவர்.

குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தவர். 



இவரது முதல் சிறுகதை *என்ன உலகமடா*. பரணி என்ற பத்திரிக்கையில் 1961-இல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதி உள்ளார்.

இவரின் படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், சுவிஷ் மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரின் நாடகமான முட்டை டெல்லி பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் உள்ளது. 



இவரின் சிறுகதைத் தொகுப்பான *நேற்று மனிதர்கள்* பல கல்லூரிகளில் பாடப் புத்தகமாக்கப் பட்டுள்ளது. இவரின் மனைவியின் பெயர் பிரமிளா ராணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

அவர் சொல்கிறார். சென்னையில் நான் தங்கி இருக்காத வீதிகளே இல்லை. அதன் எல்லா பேட்டைகளும் எனக்குத் தெரியும். அத்தனை பேட்டைகளும் என்னை அறியும்; நான் அதில் வாழ்ந்த மனிதர்களை அறிவேன்.

பிரபஞ்சனின் எழுத்து வாழ்க்கையின் 55-வது ஆண்டு விழா சென்னை ரஷ்யன் கலாசார மையத்தில் ஓர் இலக்கியத் திருவிழாவாக நடந்தேறியது. 



பிரபஞ்சனுக்கு தமிழ் இலக்கிய வாசகர்கள், படைப்பாளிகள், சமூக, கலை, இலக்கிய ஆர்வலர்களிடம் இருந்து திரட்டிய ரூ.10 இலட்சம் நிதியும் அளிக்கப் பட்டது. நடிகர் சிவகுமார் அந்தத் தொகையை ஒரு தாம்பூலத்தில் ஏந்தி வழங்கினார்.

“பிரபஞ்சன் பணத்தைச் செலவழிக்கிற வேகம் எனக்குத் தெரியும். அந்த வேகத்துக்கு இந்த பத்து இலட்சம் ரூபாய் எம்மாத்திரம். ஒரு மாதமோ... ரெண்டு மாதமோ. எனினும் இந்தப் பணத்தை அவர் தாராளமாகச் செலவு செய்யலாம். இன்னும் அவருக்குப் பணம் திரட்டித்தர நாங்கள் இருக்கிறோம்” என்கிறார் எழுத்தாளர் பவா செல்லதுரை.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்கிறார். “பிரபஞ்சன் சென்னைக்கு வந்தததற்குக் காரணம்... இலக்கியத் தாகம் என்று நினைப்போம். அதுவும் ஒரு காரணம்தான். ஆனால் அதைவிட ஒரு முக்கியக் காரணம் அவர் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கத்தான் சென்னைக்கு வந்தார். 



கவிஞர் கங்கைகொண்டான் இயக்கத்தில் ஒரு கதையும் தயாரானது. அந்தக் கதையின் ஹீரோ பிரபஞ்சன். ஆனால் அந்தக் கதை படமாகவே இல்லை. சினிமாவுக்குத் திறமைசாலிகளைவிட வெற்றிகளே முக்கியம். சினிமாவைப் பொறுத்தவரை பிரபஞ்சனுக்கு அது கிடைக்கவே இல்லை’’ என்கிறார்.

பிரபஞ்சனின் ‘ஆண்கள் பெண்கள்’ நாவலில் ஒரு பெண் தேவாலயத்தில் இயேசுவிடம் வேண்டுவாள்... ‘கடவுளே... நான் குளிக்க மறைவாக ஒரு இடம் வேண்டும்’ என்று. அந்த வரி அவரோடு எப்போதும் பயணித்துக் கொண்டே இருந்தது. 



அந்த வரிதான் அவரைக் கம்யூனிஸ்டு ஆக்கியது. அந்த இயக்கத்துக்குள் அவரைத் தள்ளியது. அந்த ஒரு வரியில் பிரபஞ்சனின் மொத்த வாழ்க்கையும், எழுத்துலகமும் இருக்கிறது

*விருதுகள்*

சாகித்திய அகாதமி விருது - வானம் வசப்படும் (1995)

பாரதிய பாஷா பரிஷத் விருது

கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி

இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்

சி. பா. ஆதித்தனார் விருது - சந்தியா

நேற்று மனிதர்கள் - தமிழக அரசின் பரிசு

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் - தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு

கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சில நாள்களுக்கு முன்பு உடல் நிலை கடுமையாக பாதிப்பு அடைந்தது. புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

இந்த நிலையில் நேற்று (21.12.2018) காலை 11:30 மணிக்கு காலமானார். பிரபஞ்சனின் மறைவுக்குப் பலரும் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகத் தமிழர் இனம் ஒரு தமிழ்ச் சகாப்தத்தை இழந்து விட்டது.

07 டிசம்பர் 2018

ஐசெர்ட் என்றால் என்ன

ஐசெர்ட் (ICERD) என்றால் *International Convention on the Elimination of All Forms of Racial Discrimination*

தமிழில் *அனைத்து இனப் பாகுபாடுகளை அகற்றும் அனைத்துலக ஒப்பந்தம்*.


1965 டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி ஐ.நா. சபை முன்மொழிந்த ஒரு திட்டம். 1969 ஜனவரி 4-ஆம் தேதி அமலுக்கு வந்தது.

மனித இனப் பாகுபாடுகளைத் தவிர்ப்பது; அனைத்து மனித இனங்களுக்கும் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவது; இனங்களுக்கு இடையே வெறுப்பு உணர்வுகளைத் தூண்டும் பேச்சுகளுக்குத் தடை செய்வது; மனித இனங்களுக்கு இடையில் நிரந்தரமான நட்புறவை வளர்ப்பது; இவற்றையும் தாண்டிய நிலையில்...

இனம், மொழி, கலாசாரம், நிறம் என்று மனித இனத்தைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. மனிதர்களில் எவரும் உயர்ந்தவர்கள் இல்லை; தாழ்ந்தவர்கள் இல்லை. மனிதர்கள் அனைவரும் மனிதர்களே.

மனிதர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு மனிதர் இன்னொரு மனிதரை மதிக்க வேண்டும். அவரின் தனிப்பட்ட மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அவற்றுக்கான ஒரு முன்னோடித் திட்டமே ஐ.நா.வின் ஐசெர்ட் திட்டம் ஆகும்.

ஒரே சொல்லில் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் அனைத்துலகத் திட்டம் என்று சொல்லலாம்.

சான்று: https://www.ohchr.org/EN/ProfessionalInterest/Pages/CERD.aspx

உலகில் 197 நாடுகள் உள்ளன. ஐ.நா. சபை அங்கீகரித்த நாடுகள். அவற்றுள் 179 நாடுகள் இந்த ஐசெர்ட்டில் கையொப்பம் வைத்து உறுதி படுத்தி உள்ளன. 14 நாடுகள் கையொப்பம் வைக்கவில்லை. அவற்றுள் மலேசியாவும் ஒரு நாடு.

மியன்மார், தென் சூடான், வட கொரியா, வானுவாத்து (Vanuatu), கூக் தீவுகள் (Cook Islands), மார்ஷல் தீவு (Marshall Islands), கிரிபாத்தி (Kiribati), சமோவா (Samoa), நியூ (Niue), துவாலு (Tuvalu) ஆகிய நாடுகள் இன்னும் கையொப்பம் வைக்கவில்லை.

அங்கோலா, பூத்தான், நவுரு (Nauru), பாலாவ் (Palau) ஆகிய நாடுகள் கையொப்பம் வைத்து விட்டாலும்; அந்தக் கையொப்பங்களை உறுதி படுத்தாமல் உள்ளன.

1960-ஆம் ஆண்டுகளில் இனப் பாகுபாடு; சமயச் சகியாமை பெருகி வந்தன. அவற்றைச் சரி செய்யவே ஐசெர்ட் ஒப்பந்தம் முன்வைக்கப் பட்டது. 1965-ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் ஐ.நா. சபை நாடுகளால் ஒருமித்தமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மலேசியா; புருணை ஆகிய இரு நாடுகள் ஐசெர்ட் ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்து இடவில்லை.

அரபு கூட்டமைப்பில் உள்ள 22 அரபு நாடுகளும் ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய இஸ்லாமிய நாடுகளும் ஐசெர்ட் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டு உறுதி செய்து விட்டன.

கையொப்பம் வைத்த பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் நாட்டுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாது எனும் கருத்தை முன்வைக்கின்றன. அமெரிக்காவும் சில விதி முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும் கைபொப்பம் வைத்து விட்டது.

உலகின் பல நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வைத்துவிட்டாலும் ஒரு சில விதிமுறைகளுக்குக் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

2017 நவம்பர் மாதம் சிங்கப்பூர் கையொப்பம் வைத்தது. இருப்பினும் தன் சொந்த கொள்கைகளை (வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவகாரத்தில்) விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக இருக்கிறது.

சீனா, இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் சில விதிமுறைகளுக்குக் கட்டுப்படவில்லை. ஐசெர்ட் பிரச்சினைகளை அனைத்துலக நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல இயலாது என்று அந்த நாடுகள் சொல்கின்றன.

பாஸ் கட்டுப்பாட்டில் உள்ள கிளந்தான் அரசாங்கம் டிசம்பர் 8-ஆம் தேதியில் கோலாலம்பூரில் பேரணி நடைபெறுவதால் மறுநாள் டிசம்பர் 9-ஆம் தேதியை ஒரு விடுமுறை நாளாக அறிவித்து உள்ளது.

விடுமுறை அளித்தால் கிளந்தான் மக்கள் கோலாலம்பூர் பேரணியில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும்;  அத்துடன் கூட்டரசு அரசாங்கம் செய்து உள்ள முடிவைக் கொண்டாடுவதற்காக அந்தப் பேரணி நடத்தப் படுவதாகவும் என்று கிளந்தான் மந்திரி புசார் அகமட் யாகூப் கூறி இருக்கிறார்.

ஐசெர்ட் பேரணியில் தெளிவற்ற நோக்கமே புலப் படுகிறது. அரசியல் நோக்கமே பிரதானமாகத் தெரிகின்றது. அரசாங்கம் ஐசெர்ட் மாநாட்டில் கையொப்பமிடாது என்று அறிவித்தும் அதனை எதிர்க்கும் ஒரு சில தரப்பினரின் ஏற்பாடுகள் தேவையற்றவை என்பதே என் கருத்து.

29 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 12

தமிழ்மலர் - 29.11.2018 - வியாழக்கிழமை

1எம்.டி.பி. பிரச்சினையில் ஒவ்வொரு மலேசியரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவே முடியாது. விவரம் புரியாதவர்கள் வேண்டும் என்றால் தெரியாமல் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ஏமாந்து போன வெள்ளந்திகளாக மட்டும் வாழவே கூடாது. ஏன் என்றால் இந்த நாடு உங்களுக்குச் சோறு போட்டு வளர்த்த ஒரு புண்ணிய பூமி. ஆகவே அந்தப் புண்ணிய பூமியின் சுகதுக்கங்களில் உங்களுக்கும் பங்கு உண்டு.




ஒரு நாட்டில் நடந்து உள்ள ஒரு பெரிய மோசடியைத் தெரிந்து கொள்ளாமல் வாழ்வதும் ஒன்றுதான்; அந்த நாட்டுக் குடியுரிமையை வேண்டாம் என்று சொல்வதும் ஒன்றுதான். வாயில்லாப்பூச்சி போல வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்று சொல்வதும் தப்பு தான்.

தான் உண்டு தன் வேலை உண்டு எனும் தன்மைக்கு ஓர் உவமானம் தேவைப்பட்டது. பாவம் வாயில்லாப் பிள்ளைப்பூச்சி. இடம் தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டது. இப்போது அவஸ்தை படுகிறது. கொட்டக் கொட்டக் குனிபவனும் மடையன்; குனியக் குனியக் கொட்டுபவனும் மடையன் என்று சொல்லாமல் சொல்லிக் கொள்கிறது.

ஒரு நாட்டின் குடிமகன் எப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறார். அந்த நாட்டு அரசியல் புள்ளிகளில் சிலர் அந்த நாட்டு மக்களை எப்படி ஏமாற்றி இருக்கிறார்கள். இதைக் கண்டிப்பாகத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.




என்னவோ பண்ணி எதையோ பண்ணி எடுத்துக் கொண்டு போனார்கள். எடுத்துக் கொண்டு போகட்டும். அதை ஏன் பெரிதுபடுத்தி அலட்டிக் கொள்ள வேண்டும். என் வீட்டிற்கு வந்து என் வீட்டுப் பணத்தை கொள்ளை அடிக்கவில்லையே என்று சிலர் சொல்லலாம். ஏன் சொல்லலாம். சொல்கிறார்கள். சொல்லிக் கொண்டும் வருகிறார்கள். ஆனால் அதையே இப்படி திருப்பிப் போட்டுப் பாருங்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்தக் காசு பணம் இந்த 1எம்.டி.பி.க்குப் போய் இருக்கிறது. அந்த 1எம்.டி.பி.யில் கொட்டப்பட்ட 40 – 50 பில்லியன் ரிங்கிட் பணத்தில் உங்களுடைய காசு பணமும் இருக்கிறது. அப்படிப் பாருங்கள். மேம்போக்காகப் போக வேண்டாம். இந்த 1எம்.டி.பி. வாங்கிய கடனுக்கு நீங்களும் நானும்; மலேசியாவில் வாழும் ஒவ்வொருவரும் கடன்பட்டு இருக்கிறோம்.

மலேசியாவில் இன்று பிறந்த குழந்தையில் இருந்து; நேற்று மறைந்து போனவர் வரை ஒவ்வொருவரும் இந்த 1எம்.டி.பி. நிறுவனத்தின் கடனுக்கு மட்டும் ஆளுக்கு 1400 ரிங்கிட் கடன் கொடுக்க வேண்டும். அது தெரியுமா உங்களுக்கு?




அந்த ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே நீங்களும் நானும் ஆளுக்கு 1400 ரிங்கிட் கடன் பட்டு இருக்கிறோம். அதற்கான வட்டிப்பணம் அதாவது 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு ஒவ்வொருவரும் கட்ட வேண்டிய வட்டித்தொகை ஓர் ஆண்டுக்கு 80 ரிங்கிட். இந்த வட்டியை இன்னும் 20 ஆண்டுகளுக்குக் கட்ட வேண்டும். இந்தக் கணக்கு 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு மட்டும் நீங்கள் பட்ட கடனுக்கான கணக்கு.

ஏன் என்றால் மலேசியர்களின் பெயரைச் சொல்லித்தான் கடன் வாங்கப் பட்டது. அதைத் தெரிந்து கொள்ளுங்கள். கடன் வாங்கி பத்து வருடம் ஆகிறது. இதுவரை 2 பில்லியன் ரிங்கிடிற்கு மேல் வட்டி கட்டியாகி விட்டது. அந்த வட்டிக் காசு சும்மா ஒன்றும் வானத்தில் இருந்து கொட்டவில்லை. மலேசியர்கள் சம்பாதித்த காசு.

ஆகவே அந்தக் காசு எப்படி செலவு செய்யப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது மலேசியர்கள் ஒவ்வொருவரின் பொறுப்பு. வாங்கும் ஒரு கட்டி உப்பில் இருந்து ஒரு கிலோ கோதுமை மாவு வரை ஐந்து காசு பத்து காசு என்று வரி கட்டுகிறீர்கள். 




அந்த ஐந்து காசும் அந்தப் பத்து காசும் நீங்கள் சம்பாதித்த காசு. அந்த காசு தான் ஒரு ரிங்கிட்டாக மாறி; பத்து ரிங்கிட்டாக மாறி; நூறு; ஆயிரம்; இலட்சம்; கோடி; மில்லியன்; பில்லியன்; டிரில்லியன் என்று போய்க் கொண்டு இருக்கிறது. சின்ன ஒரு விளக்கம்.

ஓர் இலட்சம் = 100,000 (5 சுழியங்கள்)

ஒரு மில்லியன் = 1,000,000 (6 சுழியங்கள்)

ஒரு கோடி = 10,000,000 (7 சுழியங்கள்) = 10 மில்லியன்கள்

ஒரு பில்லியன் = 1000,000,000 (9 சுழியங்கள்) = 1000 மில்லியன்கள் = 100 கோடி

 

மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, லக்சம்பெர்க், சிங்கப்பூர், இந்தோனேசியா, ஹாங்காங், சீஷெல்ஸ், கேய்மன் தீவுகள், வெர்ஜின் தீவுகள் போன்ற நாடுகளில் 1எம்.டி.பி. முறைகேடுகள் நடந்துள்ளன.

1எம்.டி.பி. பண மோசடிகள் பல நாடுகளின் தோற்றத்தை உடைத்து சந்தேகத்தை உண்டுபண்ணி விட்டன. அந்த நாடுகள் மீது மலேசியர்கள் வைத்து இருந்த நம்பிக்கையையும் சிதைத்து விட்டன. அந்த வகையில் அந்த நாடுகளின் நேர்மைத் தன்மையையும் கேள்விக் குறியாக மாறிப் போயின.

1எம்.டி.பி. களேபரத்தில் முதன்முதலில் களம் இறங்கிய நாடு அமெரிக்கா. 1எம்.டி.பி. நிறுவனத்தில் மோசம் செய்யப்பட்ட பணத்தில் பெரும் அளவு அமெரிக்காவில் தான் புழங்கி உள்ளது. 




தவறாகக் கொண்டு வந்த பணத்தில் தவறுகள் நடந்து வருகின்றன என்று அமெரிக்க நீதித்துறை தீவிரமாக புலன் விசாரணைகள் செய்தது. இங்கே மலேசியாவில் மூடி மறைக்கும் வேலை மும்முரமாக நடந்து கொண்டு இருக்கும் போது அங்கே அமெரிக்காவில் தீவிரமாக விசாரணை நடந்து இருக்கிறது. ஒரு பக்கம் மோடி மஸ்தான் வேலை. இன்னொரு பக்கம் அலிபாபாவின் நாற்பது திருடர்களையும் விரட்டிப் பிடிக்கிற வேலை.

அமெரிக்கா நீதித்துறை இதுவரையில் 231 பக்கங்களைக் கொண்ட அறிக்கையைத் தயார் செய்து உள்ளது. இது அமெரிக்கத் தரப்பு விசாரணையின் முடிவு.

அந்த 231 பக்க விசாரணை அறிக்கையில் முதன்மைக் குற்றவாளியாக வந்து நிற்பவர் ஜோக்கர் ஜோலோ. அடுத்து வருபவர் நஜிப்பின் மாற்றான் மகன் ரீஷா அசீஸ். அதாவது ரோசாப்பூ ரோசம்மாமாவின் முதல் கணவருக்குப் பிறந்தவர். 




அடுத்து வருபவர் மலேசிய அரசாங்கத்தின் முதல் நிலை அதிகாரி. பெயரைச் சொல்லாமலேயே ‘நம்பர் ஓன்’ அதிகாரி என அந்த அறிக்கையில் சொல்லப்பட்டு வந்தார்.

இந்த ‘நம்பர் ஓன்’ அதிகாரி யாராக இருக்கும் என்று அப்போதைக்கே பெரிய ஒரு விவாதம் நடந்தது. மலேசியப் பிரதமரைச் சுட்டிக் காட்டுவதாகப் பலரும் சந்தேகப் பட்டார்கள். சில வெளிநாட்டு ஊடகங்களும் சாடை மாடையாகச் சொல்லி வந்தன.

இங்கே மலேசியாவில் தான் மூடுமந்திர வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. அப்புறம் எப்படி உண்மை தெரிய வரும். மலேசிய ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டு இருந்தது. அதனால் இங்கே உள்ள ஊடகங்களும் அதிகமாக எதையும் வாசிக்க முடியவில்லை.

சில வெளிநாட்டு ஊடகங்கள் அவரின் பெயரைப் பதிவு செய்து வந்தன. இருந்தாலும் இங்கே அந்தப் பெயர் பயன்படுத்தப் படவில்லை. வெளிநாட்டுச் செய்திகளை இங்கே பிரசுரித்தாலும் அந்தத் தலைவரின் பெயரை மறைத்து ‘நம்பர் ஓன்’ அதிகாரி என்றே பிரசுரித்து வந்தார்கள்.

அமெரிக்காவில் மட்டும் சிக்கிக் கொண்ட 1எம்.டி.பி. பணத்தின் மொத்த தொகை 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 1எம்.டி.பி. பணத்தில் கொள்ளை அடிக்கப்பட்டு அமெரிக்காவில் வாங்கப்பட்ட பல சொத்துகளின் விபரங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.




அமெரிக்க முதலீட்டு வங்கிகளான ஜே.பி.மோர்கன் சேஸ்; டச்சு வங்கி; வெல்ஸ் பார்கோ வங்கிகளில் போடப்பட்ட 1எம்.டி.பி. பணத்தை முடக்கி வைக்குமாறு கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டன. அந்த வங்கிகளில் பல கோடிகள் சிக்கிக் கொண்டன. ஏறக்குறைய 35 கோடிகள்.

வழக்கு எல்லாம் முடிந்த பின்னர் அந்தப் பணம் வட்டியும் முதலுமாய்ப் பத்திரமாக மலேசியாவிற்கு வந்து சேரும். கடலில் கரைத்த பெருங்காயத்தில் ஒரு துண்டு என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் செலவழிக்கப்பட்ட 1எம்.டி.பி. பணத்தின் இதர விவரங்கள்: 

 

* 155 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - ரெட் கிரைனைட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ’தி ஊல்ப் அப் வால் ஸ்டீரிட்’ எனும் ஹாலிவூட் படம் (2013). டைட்டானிக் புகழ் டி காப்ரியோ நடித்த படம். இந்த நிறுவனம் ரோஸ்மாவின் மகன் ரீஷா அசீஸுக்குச் சொந்தமானது.

* 215 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - கலிபோர்னியா லாஸ் ஏஞ்சலஸ் பெவர்லி ஹில்ஸ் ஆடம்பர வீட்டு மனைப் பகுதியில் ஒரு சொகுசு மாளிகை. 34 மில்லியன் டாலர்களில் நியூயார்க்கில் ஒரு சொகுசு மாளிகை.

* 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - நியூயார்க் நகரில் சோகோ சொகுசு மாளிகை. (2014)

* 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - லாஸ் ஏஞ்சலஸ் பெவர்லி ஹில்ஸ் சொகுசு மாளிகை. (2010)




* 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - லாவ்ரெல் பெவர்லி ஹில்ஸ் சொகுசு மாளிகை. (2014)

* 38 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - ஓரியோல் பெவர்லி ஹில்ஸ் சொகுசு மாளிகை. (2013)

* 36 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - பொம்பார்டியர் ஜெட் விமானம். (2010)

* 130 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - கிளாவுடே மேனேட்; வின்செண்ட் வான் கோவ் ஓவியங்கள்.

* 3.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - நடிகர் டி காப்ரியோவிற்கு அன்பளிப்பு. பிக்காசோ ஓவியம் 




* 660 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - நியூயார்க் பார்க் லேன் ஓட்டல் (2013)

* 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - இக்குவானிமிட்டி ஆடம்பர கப்பல். (2014)

* 24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - பார்க் லாவ்ரெல் சொகுசு மாளிகை. (2010)

* 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - நியூயார்க் கிரீன் சொகுசு மாளிகை. (2010) 




இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சுருக்கி விட்டேன். இது அமெரிக்காவில் செலவழிக்கப் பட்ட பணம். மலேசிய மக்களின் பணத்தில் வாங்கப்பட்டு பின்னர் தனிநபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்ட சொத்துகளைப் பற்றிய புள்ளீவிவரங்கள்.

தனிப்பட்ட ஒரு சின்ன செருகல். 1எம்.டி.பி. பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஒரு நாளைக்கு ஏறக்குறைய ஆறு மணி நேரம் செலவு செய்கிறேன். தாராளமாக ஒரு புத்தகம் எழுதி முடித்து விடலாம். அவ்வளவு மர்மமான விசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நம்ப முடியாத ரகசியங்கள். ஒரு கட்டத்தில் மயக்கமே மரி... மன்னிக்கவும் மலாய் மொழியில் வந்துவிட்டது. மயக்கமே வந்துவிட்டது.

எப்படித்தான் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் மக்களின் பணத்தை இப்படி செல்வு செய்தார்களோ. அமெரிக்காவில் வாங்கப்பட்ட அனைத்துச் சொத்துகளும் ஜொல்லுவாய் ஜோலோவால் வாங்கப் பட்டவை.




அமெரிக்க நீதித்துறை இதுவரை ரொக்கமாக 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கைப்பற்றி உள்ளது. (565 கோடி ரிங்கிட்). இறைவா. இந்தப் பணம் மலேசியாவுக்கு வந்து சேர்ந்தால் மலேசிய மக்களின் சுமை கொஞ்சம் குறையுமே.

1எம்.டி.பி. பணத்தின் பல கோடி ரிங்கிட் எப்படி சிங்கப்பூர் பால்கன் வங்கிக்கு வந்தது; அப்படியே கோலாலம்பூர் ஆம் வங்கிக்கு வந்தது; அப்படியே மலேசியாவின் முன்னாள் மூத்த அரசியல் தலைவரின்  கணக்கில் வரவு வைக்கப்பட்டது; அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)


மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7

மலேசியா 1MBD மோசடி - 8
மலேசியா 1MBD மோசடி - 10
மலேசியா 1MBD மோசடி - 11
மலேசியா 1MBD மோசடி - 12

சான்றுகள்

1. Hope, Bradley; Fritz, John R. Emshwiller And Ben (1 April 2016). The Secret Money Behind - The Wolf of Wall Street – Wall Street Journal.

2. These are traitors to the people, God and the country - Former Malaysian official asks Hong Kong police to investigate 1MDB scandal - https://www.scmp.com/news/hong-kong/law-crime/article/1854950/these-are-traitors-people-god-and-country-former-malaysian

3. Malaysia Leader Najib Razak’s Assets Probed by U.S.  - https://www.wsj.com/articles/malaysia-leader-najib-razaks-assets-probed-by-us-1442844760?tesla=y

4. U.S. lawsuits link Malaysian leader to stolen money from 1MDB fund - https://www.reuters.com/article/us-malaysia-scandal-usa/u-s-lawsuits-link-malaysian-leader-to-stolen-money-from-1mdb-fund-idUSKCN10009X

Tamil Quotes 29.11.2018


தவறுகள் அனுபவங்களைக் கொடுக்கும்
அனுபவங்கள் தவறுகளைக் குறைக்கும்



28 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 11

தமிழ்மலர் - 28.11.2018 - புதன்கிழமை

ஆயக் கலைகள் அறுபத்து நான்கு. நரியை நனையாமல் குளிப்பாட்டும் கலை என்பது அந்தக் கலைகளில் இல்லாத ஒரு கலை. 1எம்.டி.பி. நிறுவனத்திற்குத் தண்ணீர் காட்டி நனையாமலேயே குளிப்பாட்டிய கலை. 1எம்.டி.பி. நிறுவனத்தின் அரிய பெரிய தில்லுமுல்லுச் சாதனைகளைப் பார்த்த பின்னர் நரிக் குளியல் எனும் ஒரு கலையை உருவாக்க வேண்டும் என்பது என் பணிவான கருத்து. 




அறுபத்து ஐந்தாவது கலையாக அந்தக் கலைக்குத் தகுதி உயர்த்திச் சிறப்புச் செய்ய வேண்டும். காலம் எல்லாம் மலேசிய மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுக் கண்ணீர் வடிக்க வேண்டும் என்று அடியேன் சிபாரிசு செய்கிறேன்.

பட்டப் பகலில் கொள்ளை அடிப்பது ஒரு கலை. அர்த்த ராத்திரியில் கொள்ளை அடிப்பதும் ஒரு கலை. இருந்தாலும் மலேசியாவின் பணத்தைக் கொள்ளை அடிப்பதற்காகவே 1எம்.டி.பி. நிறுவனம் தோற்றுவிக்கப் பட்டது. 

கொல்லைப் புறமாக வந்து கொள்ளை அடிப்பது தான் பிரதான நோக்கமாகவும் இருந்து இருக்கிறது. அப்படித்தான் ஒருவர் சொல்கிறார்.

அந்த நிறுவனத்திற்கு ஆரத்தி எடுத்த பெரும் புள்ளிகள் எல்லாம் எவ்வளவு சீக்கிரத்தில் கோடீஸ்வரர்கள் ஆக முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் கோடீஸ்வரர்கள் ஆக வேண்டும்; கொள்ளை அடித்தப் பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடிப் போய் செட்டில் ஆக வேண்டும். அது தான் 1எம்.டி.பி.யின் இலக்கு.




அப்படி ஓர் அலிபாபா மாஸ்டர் பிளேன் போட்டுத் தான் 1எம்.டி.பி.யின் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள். அதற்குத் தலைமை வகித்தவர் மலேசியாவின் முன்னாள் நம்பர் ஓன் அதிகாரி. உதவியாக இருந்தவர் தீராத விளையாட்டு பிள்ளை ஜோலோ. அந்தப் பரங்கி மூஞ்சி ஜோலோவுக்குப் பக்கவாத்தியம் வாசித்தவர் ரோச்சாப்பூ ரோசம்மா.

அதுதான் அந்தத் திட்டத்தை உருவாக்கியவர்களின் தலையாய நோக்கமாக இருந்தது. அதுதான் நடந்தும் இருக்கிறது. பெட்ரோ சவூதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சேவியர் அண்டிரு ஜுஸ்தோ சொல்கிறார்.

JOINT VENTURE - PetroSaudi International Ltd (PetroSaudi) and 1Malaysia Development Berhad (1MDB)

ஜாயிண்ட் வெஞ்சர் என்றால் கூட்டுத் திட்டம். இரு தரப்பினர் இணைந்து ஒரு முதலீட்டுத் திட்டத்தை உருவாக்குவது. அதன் மூலம் பணம் சம்பாதிப்பது. கிடைக்கின்ற பணத்தை இரு தரப்பும் பகிர்ந்து கொள்வது. இது எல்லா நாடுகளிலும் நடக்கிறது. அனைத்துலகச் சட்டத் திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறது.

ஆனால் 1எம்.டி.பி. நிறுவனத்தில் அப்படி எல்லாம் இல்லை. கிடைத்த பணத்தை எல்லாம் சுருட்டி சுருட்டி வாயில் போட்டுக் கொண்டார்கள். அதுதான் அவர்கள் செய்த ஜாயிண்ட் வெஞ்சர்.




கூட்டுத் திட்டம் என்று சொல்லிக் கூட்டுக் களவாணித் திட்டத்தை அரங்கேற்றம் செய்து இருக்கிறார்கள். முதலீடு செய்த பணத்தைப் போட்ட இடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு நகர்த்துவது; அங்கே இருந்து அல்வாத் துண்டுகளாகப் பிரித்துக் கொள்வது. 

அப்படியே அந்தப் பணத்தை வேறொரு வங்கியில் போடுவது; அங்கே இருந்து இன்னும் ஒரு வங்கிக்கு மாற்றுவது; அந்த வங்கியில் இருந்து சொந்தக் கணக்கில் போட்டுக் கொள்வது. அப்படியே மாற்றி மாறிக் கடைசியில் மலேசிய மக்களை எல்லாம் எமாந்த சோணகிரிகளாக மாற்றி இருக்கிறார்கள்.

மலேசியாவின் அப்பாவி மக்களும்; அன்றாடக் காய்ச்சிகளும் அந்தத் திட்டத்தினால் ரொம்பவுமே பாதிக்கப் பட்டுப் போனார்கள். அந்தக் கூட்டுச் சதித் திட்டதினால் ஏற்பட்ட கடனையும் அந்தக் கடனுக்குக் கட்ட வேண்டிய வட்டியையும் 2039-ஆம் ஆண்டு வரை மலேசிய மக்கள் கட்ட வேண்டும்.

அதாவது இன்னும் இருபது ஆண்டுகளுக்கு மலேசிய மக்கள் உழைத்து உழைத்து அந்தக் கடனைக் கட்ட வேண்டும். இன்றைக்குப் பிறந்த குழந்தை; அது வளர்ந்து படித்து ஓட்டுப் போடும் வயது வரும் வரையில் 1எம்.டி.பி. கடனை அடைக்க வேண்டும்.

இப்போது வாழும் அப்பா அம்மாக்கள் போய் விடுவார்கள். அரசியல்வாதிகள் போய் விடுவார்கள். ஆனால் மாட்டிக் கொண்டது இன்றைய இளைஞர்கள். பள்ளிக்கூடம் போகும் பால் வடியும் முகங்கள். 

 

இவர்கள் தான் அந்தக் கடனைக் கட்ட வேண்டும். பணத்தைக் கொள்ளை அடித்தவர்களும் போய் விடுவார்கள். ஆனால் கொள்ளை அடித்த பணத்தின் வாரிசுகளாகக் கொள்ளைக் கும்பலின் வாரிசுகள் இருப்பார்கள்.

மலேசிய மக்களிடம் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் மலேசிய மக்களுக்கே திரும்பி வந்து கிடைக்க வேண்டும். அந்தப் பணத்தை வரி கட்டியவர்களின் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும். 

சேவியர் அண்டிரு ஜுஸ்தோ என்பவர் ஒரு சுவிஷ் நாட்டுக்காரர். மலேசியாவின் பணத்தைக் கொள்ளை அடிப்பதற்காகவே 1எம்.டி.பி. நிறுவனம் தோற்றுவிக்கப் பட்டது என்று ஓர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டு இருக்கிறார்.

அந்த உண்மையை எந்த நீதிமன்றத்திலும் சொல்லத் தயாராக இருக்கிறேன் என்கிறார். 1எம்.டி.பி. நிறுவனத்தின் ரகசியங்களை வெளி உலகத்தில் கசிய விட்டவர். அதனால் தாய்லாந்து சிறையில் மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.

1எம்.டி.பி. பிரச்சினையில் ஜுஸ்தோ மிக முக்கியமான வி.ஐ.பி. இவர் தான் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தின் ஆசிரியை கிளேர் ரியூகாசல் பிரவுன் என்பவருக்கு 1எம்.டி.பி. ரகசியங்களைச் சொன்னவர். 

 

ஜுஸ்தோ தான் நஜிப் வங்கி கணக்கில் 2.6 பில்லியன் பணம் போடப் பட்ட இரகசியத்தைக் கசிய விட்டவர். ஜுஸ்தோ இல்லை என்றால் 1எம்.டி.பி.யின் திருகுதாளங்கள் இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து இருக்காது.

ஆனால் அந்த விசயத்தைப் பெரிது படுத்தி வெளிச்சம் போட்டுக் காட்டியது சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம். இன்றைய காலக் கட்டத்தில் 1எம்.டி.பி. முறைகேடுகள் பலரால் பகிரங்கமாகப் பேசப் படுகின்றன. எழுதப் படுகின்றன. 

ஆனால் நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே 1எம்.டி.பி. முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் கிளேர் ரியூகாசல் பிரவுன். அதை யாரும் மறந்து விட வேண்டாம்.

ஜுஸ்தோவும்  கிளேர் ரியூகாசல் பிரவுனும் இல்லாமல் இருந்து இருந்தால் 1எம்.டி.பி. விவகாரம் இந்த அளவிற்குப் பெரிதாக தெரிய வந்து இருக்காது. ஆர்டிக் பனித் துருவத்தில் காணாமல் போன பனிக்கரடி மாதிரி காணாமல் போய் இருக்கும். பனிச்சுவடு இல்லாமல் கரைந்து போய் இருக்கும்.

பெட்ரோ சவூதி நிறுவனத்தில் சேவியர் அண்டிரு ஜுஸ்தோ ஓர் உயர்நிலை அதிகாரியாக வேலை செய்தவர். கணினித் தொழில்நுட்பத் துறையில் வல்லுநர். பெட்ரோ சவூதி நிறுவனத்தின் கணினித் தொழில்நுட்பத் துறையைக் கண்காணிக்கும் பொறுப்பு இவரிடம் வழங்கப் பட்டது.

அரேபிய வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது ஒரு குட்டி நாடு. தலைநகரம் அபு தாபி. இதை ஐக்கிய அரபு அமீரகம் என்றும் அழைப்பார்கள். இந்த நாட்டில் பெட்ரோ சவூதி எனும் முதலீட்டு நிறுவனம் இயங்கி வந்தது. 




மலேசியாவின் 1எம்.டி.பி. நிறுவனம் அபு தாபியில் இருந்த அரசு சார்ந்த முதலீட்டு நிறுவனங்களுடன் இணைந்து முதலீடு செய்தது. அந்த நிறுவனங்களில் ஒன்றுதான் பெட்ரோ சவூதி.

1எம்.டி.பி. நிறுவனத்தின் பெட்ரோ சவூதியின் உறவுகள் ஆறே மாதத்தில் ஒரு முடிவிற்கு வந்தன. அதாவது ஒப்பந்தம் முறிந்து போனது. அந்த ஆறு மாதத்திற்குள் பற்பல குளறுபடிகள். அதற்குக் காரணமாக இருந்தவர் ஜோக்கர் ஜோலோ.

பெட்ரோ சவூதியில் முதலீடு செய்யப்பட்ட பணமும்; அதன் மூலம் கிடைத்த வருமானமும் முறைப்படி மலேசியாவுக்கு வந்து இருக்க வேண்டும். அல்லது 1எம்.டி.பி. நிறுவனம் வாங்கிய கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. 




இந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி சேவியர் அண்டிரு ஜுஸ்தோவைப் பேட்டி கண்டது. அந்தப் பேட்டியில் அவர் சொன்னார். 1எம்.டி.பி. நிறுவனத்திற்கும் பெட்ரோ சவூதி நிறுவனத்திற்கும் 2009 செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அப்போது பெட்ரோ சவூதி நிறுவனம் பெயரளவில் மட்டுமே இயங்கி வந்தது. பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இன்றைக்கு நாளைக்கோ என்று ஊசலாடிக் கொண்டு இருந்த நிறுவனம்.

தாரேக் ஒபாயிட் என்பவர் உருவாக்கிய நிறுவனம். ஜுஸ்தோவும் தாரேக் ஒபாயிட்டும் நண்பர்கள். பெட்ரோ சவூதிக்கு சொத்து இருந்தது என்றால் ஒரே ஒரு சொத்துதான் இருந்தது. அதனுடைய பெயர் தான் அதனுடைய சொத்து.

சவூதி என்கிற பெயர் சவூதி அரசாங்கத்தைக் குறிப்பிடும் சொல்லாக இருந்தது. சவூதி அரேபியா அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனம் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள். 




அதுதான் இல்லை. பெயர் தான் சவூதி. மற்றபடி அது ஒரு தனியார் நிறுவனம் பெயரளவில் மட்டுமே இயங்கி வந்தது. அது தான் பெட்ரோ சவூதிக்கு கிடைத்த பிளஸ் பாயிண்ட்.

பெட்ரோ சவூதி நிறுவனம் 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். 2009-ஆம் ஆண்டு 1எம்.டி.பி. நிறுவனத்தின் பணம் பெட்ரோ சவூதிக்குப் போகும் வரையில் பெட்ரோ சவூதி ஓர் அன்னக் காவடி நிறுவனம் என்று தான் சொல்ல வேண்டும்.

But from 2006 until the 1MDB money went into PetroSaudi account, it was almost a non-existence company.

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரம் ஜெனிவா. ஜுஸ்தோ ஓர் அறை எடுத்து வேலை செய்து கொண்டு இருந்தார். அந்த அறையில் ஒரு மேசையைப் போட்டு; பெட்ரோ சவூதிக்கு ஓர் இடம் ஒதுக்கப் பட்டது. பகுதி நேரமாக ஒருவர் வேலை செய்து வந்தார். அந்த அறைக்கான வாடகையை ஜுஸ்தோ தான் கட்டி வந்தார். 




பெட்ரோ சவூதிக்கு தலைமையகம் சவூதி அரேபியா. அங்கேயும் ஒருவர் தான் வேலை செய்தார். வருகிற தொலைபேசி அழைப்புகளை எடுத்துப் பேசுவது தான் அவருடைய வேலை. மற்றபடி கணக்கு வழக்கு எழுதுகிற வேலை எல்லாம் எதுவும் இல்லை. கணக்கு இருந்தால் தானே எழுதுவதற்கு!

1எம்.டி.பி. நிறுவனம் பணத்தை முதலீடு செய்த பின்னர் தான் பெட்ரோ சவூதி கம்பெனிக்கே உயிர் கிடைத்தது. 1எம்.டி.பி. நிறுவனத்துடன் பெட்ரோ சவூதி ஒப்பந்தம் செய்து கொண்ட போது ஜுஸ்தோ அங்கு அப்போது இல்லை. 

அந்தச் சமயத்தில் ஜுஸ்தோ தன் மனைவியுடன் தாய்லாந்தில் இருந்தார். அங்கே ஒரு தங்கும் விடுதியைக் கட்டுவதற்காக ஒரு நல்ல இடத்தைத் தேடிக் கொண்டு இருந்தார்.

ஒப்பந்தம் நடந்து முடிந்த சில மாதங்களில் பெட்ரோ சவூதியின் நிறுவனர் தாரேக் ஒபாயிட்டிடம் இருந்து ஜுஸ்தோவிற்கு ஓர் அழைப்பு வந்தது. லண்டனுக்குப் போய் அங்கே உள்ள பெட்ரோ சவூதி அலுவலகத்தில் வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டார். 

அப்போது 1எம்.டி.பி. நிறுவனத்தின் கோடிக் கணக்கான பணம் லண்டனில் புரண்டு கொண்டு இருந்தது. 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெட்ரோ சவூதியில் ஜுஸ்தோ வேலைக்குச் சேர்ந்தார்.

பெட்ரோ சவூதியில் நூறு கோடி ரிங்கிட்டை 1எம்.டி.பி. நிறுவனம் முதலில் முதலீடு செய்தது. ஆனால் பெட்ரோ சவூதியால் முதலீடு செய்ய முடியவில்லை. இங்கே தான் ஆபீஸிற்கே வாடகை கட்ட முடியாமல் டிங்கிரி டிக்கான் அடிக்குதே. இந்த இலட்சணத்தில் கோடிக் கணக்கில் முதலீடுகள் செய்வதா? நடக்கிற காரியமா?

கூட்டுத் திட்டம் என்றால் என்ன. நான் கொஞ்சம் பணம் போடுகிறேன். நீயும் கொஞ்சம் போடு. அது தான் கூட்டுத் திட்டம். அது தான் கூட்டு ஒப்பந்தம். 

 

1எம்.டி.பி. நிறுவனம் நூறு கோடி ரிங்கிட்டை முதலீடு செய்ததும் அந்தப் பணத்தைத் துருக்மனிஸ்தான் நாட்டில் இருக்கும் எண்ணைய் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் என்று பெட்ரோ சவூதி அறிவித்தது. இதுதான் நரியை நனையாமல் குளிப்பாட்டுகிற கதை. நல்லா கேட்டுக்குங்கோ.

2019-ஆம் ஆண்டில் பிப்ரவரி வந்து போய் ஆகஸ்டு மாதமும் வந்தது. ஒரு எண்ணெய்க் கம்பெனியும் இல்லை. ஒரு ஒல்லிபிச்சான் கம்பெனியும் இல்லை. அட பெயருக்கு ஒரு அவட்டா கம்பெனிகூட இல்லைங்க. எல்லாமே ஜோலோ பின்னால் இருந்து சாவி கொடுத்த ஜிங்கு ஜிக்கான் ஆட்டங்கள்.

ஆனாலும் 1எம்.டி.பி. பணம் தொடர்ந்து முதலீடு செய்யப் பட்டு வந்தது. ஊர் பேர் ஆள் அட்ரஸ் இல்லாத முதலீடுகள். ஜோக்கர் ஜோலோ மலேசிய மக்களின் பணத்தை நன்றாகவே நனைத்துக் காயப் போட்டுக் கொண்டு இருந்தார். 

அந்தப் பணத்தில் மில்லியன் கணக்கில் எடுத்து பிளேபாய் ஆட்டங்களைத் தொடங்கினார். அமெரிக்கக் குறத்தி கெளுத்திகளுடன் சேர்ந்து கொண்டு ராத்த்திரி பூரா ஆட்டம் பாட்டங்கள். யாருடய பணம்? உங்க பணம். எங்க பணம். மலேசிய மக்களுடைய பணம். நாம் கட்டின வரிப் பணம்.

கோடிக் கோடியான 1எம்.டி.பி. பணம் லண்டனில் இருந்து கரிபியன் கடலில் இருக்கும் கேய்மென் தீவுகளுக்குப் போனது. பிறகு அங்கே இருந்து சுவிட்ஸர்லாந்து நாட்டுக்குப் போனது. அங்கே இருந்து லக்சம்பெர்க் நாட்டுக்குப் போனது. பின்னர் அங்கே இருந்து அமெரிக்காவுக்குப் போனது. 

அங்கே இருந்து சிங்கப்பூருக்குப் போனது. அப்புறம் கோலாலம்பூருக்கு வந்தது. அப்படியே மலேசியாவின் நம்பர் ஓன் அதிகாரியின் வங்கிக் கணக்கிலும் பதுங்கிக் கொண்டது. அப்படியே ரோச்சாப்பூ ரோசம்மாவைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டியது. நாளைக்கும் கண் சிமிட்டல்கள்…

(தொடரும்)



மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7

மலேசியா 1MBD மோசடி - 8