28 அக்டோபர் 2020

அசாம் தேயிலைக் காடுகளில் மணிப்பூர் தமிழர்கள்

தமிழ் மலர் - 28.10.2020

அசாம் தமிழர்கள் அசாம் தேயிலைக் காடுகளின் அசல் உழைப்பாளிகள். அசாம்  வரலாற்றில் அழியாத வரலாறு படைக்கும் அழகிய ஜீவன்கள். அசாம் பச்சை வெளிகளில் பால்மனம் மாறா அச்சாணித் தமிழர்கள். ஒரே வார்த்தையில் சொன்னால் அசாம் நரம்புகளின் தியாகச் சீலங்கள். உடல், பொருள், ஆவி அனைத்தையும் அசாம் தேயிலைச் செடிகளுக்கு அர்ப்பணிப்புச் செய்தவர்கள்.

தங்களின் ஒவ்வொரு துளி வியர்வையையும் அசாம் தேயிலைச் செடிகளுக்கு பசளைப் பச்சையாகப் பறைசாற்றியவர்கள். இவர்களில் மணிப்பூரில் இருந்து போன மணிப்பூர் தமிழர்களும் உள்ளார்கள். இவர்களும் மணிமணியாய் வரலாறு படைத்தவர்கள். படைத்தும் வருகிறார்கள்.

இந்தியாவின் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள். மிசோரம் (Mizoram); நாகலாந்து (Nagaland); திரிப்புரா (Sikkim Tripura); மணிப்பூர் (Manipur); அருணாச்சலப் பிரதேசம் (Arunachal Pradesh); அசாம் (Assam); மேகாலயா (Meghalaya). இவற்றை ஏழு சகோதரிகள் (Seven Sister) மாநிலங்கள் என்று அழைக்கிறார்கள்.

இந்த மாநிலங்களில் பர்மா எல்லையில் மிக ஒட்டி இருப்பது மணிப்பூர். இந்த மணிப்பூரில் இப்போது 17,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களைத் தான் மணிப்பூர் தமிழர்கள் என்று அழைக்கிறோம். இவர்களில் மூவாயிரம் பேர் அசாம் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்.

மணிப்பூர் தமிழர்கள் அசாம் தேயிலை தோட்டங்களில் வேலைக்குப் போவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் 1840-ஆம் ஆண்டுகளிலேயே அங்கே போய் விட்டார்கள்.

அசாம் தேயிலைத் தோட்டங்களில் சொர்க்க வாழ்வு கிடைக்கும் என்று அழைத்துச் செல்லப் பட்டவர்கள். 1837-ஆம் ஆண்டில் முதல் ஆங்கில தேயிலைத் தோட்டம் வட அசாமில் சாபுவா (Chabua, Upper Assam) எனும் இடத்தில் நிறுவப்பட்டது

ஆனாலும் இவர்கள் ஆங்கிலேய அதிகாரத்தில் மிகவும் கொடுமைப்படுத்தப் பட்டார்கள். இலங்கைத் தேயிலைத் தோட்டத் தமிழர்களுக்கு ஏற்பட்ட அதே வன்முறைகள் தான்.

மலாயா தமிழர்கள் மலாயா ரப்பர் தோட்டங்களில் எப்படி கொடுமை செய்யப் பட்டார்களோ அதே போல அசாம் தமிழர்களும் பற்பல கொடுமைகளுக்கு உள்ளானார்கள். சொல்லில் வடிக்க முடியா வேதனைகள்.

அசாம் தேயிலைத் தோட்டத் தமிழர்கள் கொடுமைப் படுத்தப்பட்ட கதையை பி. ஹெச். டேனியல் (Paul Harris Daniel) என்பவர் ரெட் டீ (Red Tea) எனும் பெயரில் 1969-ஆம் ஆண்டில் ஒரு நாவலில் எழுதினார்.

இந்த நாவலைத் தழுவி ஒரு திரைப்படம் உருவானது. அந்தப் படம் தான் ’பரதேசி’ எனும் தமிழ்ப்படம். 2013-ஆம் ஆண்டு தயாரிக்கப் பட்டது. 1930-ஆம் ஆண்டுகளில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட திரைப்படம்.

தமிழில் இந்த நாவலை "எரியும் பனிக்காடு" என்ற பெயரில் இரா. முருகவேள் மொழிபெயர்த்து இருக்கிறார். இதற்கு முன்பு 1937-ஆம் ஆண்டிலேயே முல்க் ராஜ் ஆனந்த் (Mulk Raj Anand)  என்பவர் ஒரு நாவல் எழுதினார்.

அசாம் தேயிலைத் தோட்டக் கொத்தடிமை வாழ்க்கையை விவரிக்கும் நாவல். அதன் பெயர் இரண்டு இலைகளும் ஒரு மொட்டும் (Two Leaves and a Bud). அந்த நாவல்களைப் படித்து பார்த்தேன். மனம் கலங்கிப் போனது.

மலாயா தமிழர்கள்; அசாம் தமிழர்கள். இந்த இரு இன மக்களும் ஒரே குளத்தில் வாழ்ந்த மீன்கள் தாம். பிரித்துப் பார்க்க முடியவில்லை. மலாயாவில் தமிழர்கள் காண்டா போட்டு ரப்பர் பாலைத் தூக்கினார்கள். அங்கே அசாமில் தமிழர்கள் காண்டா போட்டு தேயிலைச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சினார்கள். அங்கேயும் இடுப்பில் வேட்டிக் கோவணம். இங்கேயும் வேட்டிக் கோவணம் தான்.

ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால், அசாம் நாட்டு மக்களையும் பிரிட்டிஷ் முதலாளித்தும் விட்டு வைக்கவில்லை. அவர்களும் மலாயா தமிழர்களைப் போல அடிமைகளைப் போல பிழிந்து எடுக்கப் பட்டார்கள்.

மணிப்பூர் தமிழர்கலுளுக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது ஒரு சோகமான வரலாறு. இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

பர்மா தமிழர்கள் செல்வச் செழிப்பில் கொழித்தவர்கள். மற்ற மற்ற பர்மிய இனங்கள் மலைத்துப் போகும் அளவிற்கு மலை மலையாய்ச் சொத்துகளைக் குவித்தவர்கள். விருந்தோம்பலில் சிகரம் பார்த்தவர்கள்.

பர்மா தமிழர்கள் ஐம்பது அறுபது கோயில்களைக் கட்டிப் போட்டு அழகு பார்த்தவர்கள். அறுபது எழுபது தமிழ்ப்பள்ளிகளைக் கட்டிப் போட்டு தமிழுக்கு உச்சம் பார்த்தவர்கள். ஊரும் உலகமும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர்கள். ஆனால் ஒரே ஒரு நாளில் நடுத்தெருவிற்குத் தள்ளப் பட்டார்கள்.

அறுபது வருடங்களுக்கு முன்பு நடந்தது. பர்மாவில் இராணுவ ஆட்சி. ஆயிரக் கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு நாடு கடத்தப் பட்டார்கள். தெரிந்த விசயம்.

தாய் மண்ணில் பிச்சைக்காரர்களாகப் போய் நின்றார்கள். அவர்கள் தான் பராசக்தி படக் கதையின் நிஜமான நிழல் பிம்பங்கள். வேதனை விளிம்புகளில் வேர் அறுக்கப்பட்ட விழுதுகள். விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்து கொண்டவர்கள் பலர். வேறு மாநிலங்களுக்கு ஓடிப் போனவர்கள் பலர்.

அவர்களில் சிலருக்குச் சென்னை வாழ்க்கை பிடிக்கவில்லை. செத்தாலும் நாங்கள் பர்மாவிலேயே செத்துப் போகிறோம் என்று சொல்லி பர்மாவிற்கே திரும்பிப் போனார்கள். வங்காள தேசம் வழியாகப் போனவர்கள் காடு மேடுகளையும் ஆறு மலைகளையும் கடந்து மணிப்பூர் - பர்மா எல்லை வரை சென்றார்கள்.

அதற்கு மேல் அவர்களால் போக முடியவில்லை. பர்மிய குடி நுழைவுத் துறையினர் அவர்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி விட்டார்கள். பர்மாவிற்குள் விடவில்லை. மணிப்பூர் - பர்மா எல்லைக் கிராமம் மோரே. அந்த இடத்தில் அப்படியே தங்கி விட்டார்கள். அவர்கள் தான் மணிப்பூர் தமிழர்கள்.

அங்கே தங்கிய தமிழர்களின் சந்ததிகள் தான் மணிப்பூரில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு மினி தமிழகத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். மணிப்பூர் பகுதிகளுக்கு  நிறைய பேர் வருவது இல்லை. ஏதோ அந்த மாநிலம் அண்டை நாடான சீனாவில் இருப்பது போல பலருக்கும் ஒரு பயம். சரி.

இந்த மணிப்பூர் தமிழர்களின் வரலாற்றைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். அதன் பின்னர் அசாம் தேயிலைத் தோட்டத் தமிழர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். மணிப்பூருக்குத் தமிழர்கள் வந்த கதை சோகம் கலந்த வியப்பான கதை. மன்னிக்கவும். கதறக் கதறக் கதை சொல்லும் கதை.

நவீன வசதிகள் வந்துவிட்ட இன்றைய நாளில்கூட மோரே கிராமத்தைச் சென்று அடைவது அப்படி ஒன்றும் சாதாரண விசயம் அல்ல. ஆனால் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் எப்படி எல்லாம் தமிழர்கள் சிரமப்பட்டு மோரே பகுதியைச் சென்று அடைந்து இருப்பார்கள். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

பிரிட்டனைச் சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று வெள்ளைக்காரர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். எங்களைக் கேட்டுத்தான் ஆதவன் வரும் விழும் என்று வீரவசனம் பேசியவர்கள். கொடிகட்டி பறந்த நாடு. இப்போது கொஞ்சம் மங்கி விட்டது.

ஒரு காலக் கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மலாயா, சிங்கப்பூர், பிஜி, மொரிஷியஸ், ரீ-யூனியன் தீவுகள், பர்மா போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள்.

அந்த நாடுகளில் இருந்த கரும்பு, தேயிலை, ரப்பர் தோட்டங்களில் ஆயிரக் கணக்கில் வேலை செய்தார்கள். சிலர் வியாபாரம் செய்தார்கள். சிறு சிறு குழுக்களாக; குடும்பம் குடும்பங்களாகத் தமிழர்கள் பல ஆண்டுகள் அங்கேயே தங்கினார்கள். சிறுகச் சிறுகப் பணம் சேர்த்தார்கள். சொத்துக்களை வாங்கிப் போட்டார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த நாடுகள் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுச் சுதந்திரம் பெற்றன. இரண்டு மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வந்த தமிழர்களுக்குப் பல நாடுகள் குடியுரிமை வழங்கி சிறப்பு செய்தன.

ஆனால் சில வக்கிரப்புத்தி பிடித்த நாடுகளும் இருக்கவே செய்தன. தமிழர்களை அந்நியராக நினைத்தன. தங்கள் வாய்ப்புகளைப் பறிக்க வந்த சண்டாளர்களாகக் கருதின. அவர்களைத் துன்புறுத்தி நாடு கடத்தின. அதில் ஸ்ரீலங்கா, பர்மா போன்றவை தனித்துவம் பெற்ற அசுர புத்திகள்.

பர்மாவில் 1962-ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி. அதிகாரத்திற்கு வந்தவர்கள் தமிழர்களை நசுக்கிப் போட்டு விரட்டத் தொடங்கினார்கள். உழைத்துச் சம்பாதித்த தமிழர்களின் கோடிக் கோடியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டன.  

தமிழர்கள் வலுக்கட்டாயமாக கப்பலில் ஏற்றப் பட்டார்கள். இந்தியாவிற்கு மறு ஏற்றுமதி செய்யப் பட்டார்கள். மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களுக்கு மன உளைச்சல்கள்; அலைக்கழிப்புகள்; அங்கலாய்ப்புகள்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் நிறைய பர்மா தமிழர் காலனிகள் தோற்றுவிக்கப் பட்டன. அவற்றில் ஒன்று தான் இன்றைய பர்மா பஜார். தாய்நாட்டிற்குத் திரும்பி வந்தவர்களில் சிலருக்குத் தங்களின் பழைய வாழ்விடம், சொத்துச் சூழல்களை மறக்க முடியவில்லை. ஒன் மினிட் பிளீஸ்.

அசாம் காட்டில் தொடங்கி பர்மா பஜாருக்கு வந்து விட்டதாகச் சபிக்க வேண்டாம். வரலாற்றைத் தொட்டால் அப்படித்தாங்க வரும். ஆனால் வராது என்று வடிவேலு கணக்கில் எதுவும் வராதுங்க. கொஞ்சம் சிரியுங்களேன். சரி.

மீண்டும் பர்மா செல்லும் முயற்சிகளில் இறங்கினார்கள். கால்நடையாகவும் போகிற வழியில் கிடைக்கிற போக்குவரத்துகளையும் பயன்படுத்திப் பர்மாவிற்குச் செல்வது என்று முடிவு செய்த்தார்கள்.

மூன்று மாதம் நடையாய் நடந்து இந்தியாவின் வடகிழக்கே இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் எல்லையை அடைந்தார்கள். அங்கு இருந்து பர்மாவின் தலைநகரம் ரங்கூனுடன் இணைக்கும் பாலத்தின் வழியாக பர்மாவுக்குள் செல்ல முயற்சி செய்தார்கள்.

ஆனால் பர்மிய இராணுவம் அவர்களைப் பர்மாவிற்குள் விடவில்லை. எல்லையில் இருந்த இராணுவத்தினரும் குடிநுழைவுத் துறையினரும் அவர்களை விரட்டி அடித்தார்கள்.

அங்கு இருந்து திரும்பி மறுபடியும் தமிழ்நாட்டிற்குப் போக பலருக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் ஒரு சிலர் தமிழ் நாட்டிற்கே திரும்பிச் சென்றார்கள். ஒரு சிலர் அந்த நுழைவு பாலத்தை ஒட்டிய மோரே என்கிற பழங்குடியினர் கிராமத்திலேயே தங்கினார்கள். அப்படியே  அவர்களின் பிழைப்பு ஓடியது. இந்த மோரே கிராமத்தின் பரப்புளவு 7.38 சதுர கி.மீ. ஒரு செருகல்.

இரண்டாம் உலகப் போர் நடந்த போது நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் இந்த மோரே கிராமப்புற நகரில் தான் தங்கியது. இந்திய தேசிய இராணுவத்தில் மணிப்பூர் தமிழர்களும் இணைந்து இந்திய விடுதலைக்கு போராடினார்கள். அதை இங்குள்ள பாட்டிகள் இன்றும் கதை கதையாய்ச் சொல்கிறார்கள். சரி அசாம் தேயிலைத் தோட்டத் தமிழர்களின் கதைத் தொடர்ச்சியை நாளை பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.10.2020

சான்றுகள்:

1. William Harrison Ukers, The romance of tea: an outline history of tea and tea-drinking through sixteen hundred years, A.A. Knopf, 1936.

2. Sanyal, S (2008). Tea Tourism: A Concept That's Catching On. The Hindu Business.

3. Thuppakki Mozhi: Marudhan, Mugil, Sa.Na. Kannan, R. Muthukumar

4. Gait E.A. A History of Assam 2nd Edition 1926 Thackar, Spink & Co Calcutta page 303-311
 



27 அக்டோபர் 2020

சயாம் மரணப் பாதையில் தமிழர்களின் முகாம்கள்

தமிழ் மலர் - 27.10.2020

சயாம் மரணப் பாதையில் தமிழர்கள் அனுபவித்த வேதனைகள் கொடுமையிலும் மகா கொடுமைகள். பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்; கணவன்மார்களை இழந்த பெண்கள்; ஒட்டு மொத்த குடும்பத்தையே இழந்த ஆண்கள். கை கால் ஊனமாகிக் காட்டுக்குள் காணாமல் போன தமிழர்கள்; காட்டுப் புலிகளால் அடித்துக் கொல்லப்பட்ட தமிழர்கள்.

இப்படி ஒரு நீண்ட நெடிய கொடுமையின் வரலாறு. இந்தத் தமிழர்களின் வேதனைக் குமுறல்களின் சன்னக் குரல்கள் அடங்குவதற்கு நீண்ட காலம் பிடித்தது.

Ellan Kannian from Kuala Selangor was one of thousands from then Malaya
who were forcibly recruited by the Japanese army to work on the
Death Railway during World War II. Image Courtesy: Star Malaysia

சயாம் மரண இரயில்பாதை என்பது உருக்குலைந்த மனித உரிமைகளில் இரத்தம் வடியும் ஆழமான காயங்கள். அதுவே மலேசியத் தமிழர்களின் நெஞ்சங்களைக் கீறிப் பார்க்கும் ரணச் சுவடுகள்; அவர்களின் நெஞ்சங்களைப் பிளந்து பார்க்கும் மரணச் சுவடிகள். இரண்டுமே மௌன மொழிகளின் வக்கர ராகங்கள்.

சயாம் மரண இரயில் பாதையில் மிகவும் புகழ்பெற்றது 277-ஆவது பாலம். கவாய் ஆற்றுப்பாலம் என்று பெயர். ஆங்கிலத்தில் தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் குவாய் (The Bridge on the River Kwai). இந்தக் குவாய் ஆற்றுச் சகதியில் மனித இரத்தமும், உயிரற்ற மனித உடல்களும் ஒன்றாகக் கலந்து ஓடி இருக்கின்றன. அதைப் பார்த்து பர்மா சயாம் காடுகளே கண்ணீர் வடித்து இருக்கின்றன.

இந்தியா - பர்மா எல்லையில் இம்பால் எனும் புகழ்பெற்ற இடம். இங்கேதான் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தினர் உயிரைப் பணயம் வைத்துப் போர் புரிந்து இருக்கிறார்கள்.

நேதாஜி தன் படை வீரர்களைப் பார்க்க அங்கே நான்கு முறை போய் இருக்கிறார். ஆனாலும் இரயில் கட்டுமானத்தில் பணிபுரிந்த மலாயா தமிழர்கள் மட்டும் நேதாஜியைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை.

ஒரு முகாமிற்கு நேதாஜி வருகிறார் என்றால் அங்கு வேலை செய்த தமிழர்கள் எல்லோரையும் ஜப்பானியர்கள் காட்டுக்குள் அனுப்பி விடுவார்கள். நேதாஜிக்கு உண்மை தெரிந்துவிடும் எனும் அச்சமாக இருக்கலாம்.

The Death Railway. Image Courtesy: Varnam MY

சயாம் மரண இரயில்பாதை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆசியத் தொழிலாளர்கள்; போர்க் கைதிகள் பலர் தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள கிரா குறுநிலத்தில் கால்வாய் (Kra Isthmus)  அமைக்க அனுப்பப் பட்டனர்.

Arumugam sent at the age of 15 years old as interpreter

இன்னும் பலர் சுமத்திராவின் பலேம்பாங் இரயில் பாதையை அமைக்கவும் அனுப்பப் பட்டனர். ஆனால் கிரா குறுநிலக் கால்வாய்த் திட்டம் தோல்வியில் முடிந்தது. இன்னும் ஒரு தகவல்.

சயாம் மரண இரயில்பாதை கட்டி முடிக்கப்படும் கட்டத்தில் 50,000 அமெரிக்கப் போர்க் கைதிகள் ஜப்பானுக்கு அனுப்பப் பட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் பிலிப்பைன்ஸ், பசிபிக் தீவுகளில் பிடிபட்ட அமெரிக்கர்கள்.

S. Shanmugam. One of the survivirs

ஜப்பானில் இருந்த தொழிற்சாலைகள், கப்பல் துறைமுகங்கள்; நிலக்கரி நிலவடிச் சுரங்கங்கள் மிட்சுபிசி, மிட்சுய், காவாசாக்கி, நிப்போன் ஸ்டீல் நிறுவனங்களின் தொழிற்சாலைக; இவற்றில் அடிமைத் தொழிலாளர்களாக வேலை செய்தார்கள்.

தவிர சீனா மஞ்சூரியாவில் இருந்த தொழிற்சாலைகளுக்கு 15,000 அமெரிக்கர்கள் அனுப்பப் பட்டார்கள். தவிர யூனிட் 731 எனும் ஜப்பானிய மனிதப் பரிசோதனை மையத்தில் பல நூறு அமெரிக்கர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டு கொல்லப் பட்டார்கள்.

இரயில் பாதை கட்டுமானத் தொழிலாளர்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டனர். இந்தப் பிரிவுகளை ஆங்கிலத்தில் ’போர்ஸ்’ (Force) என்று அழைத்தார்கள். இது ஒரு நீண்ட பட்டியல். அதனால் தமிழர்கள் தொடர்பான விவரங்களை மட்டும் தருகிறேன். தமிழர்கள் தங்கி இருந்த முகாம்கள்:

Dharmalingam. One of the survivors

1. தாடேயின் 90 கி.மீ.

2. 98-ஆம் கிலோமீட்டர் முகாம் 317.

3. பாயா தான்சூ தாவுங் 307. தாய்லாந்து பர்மா எல்லை.

4. காஞ்சனாபுரி 115.

5. மேல் கொன்குய்தா 145.

6. சுவிந்தன் முகாம் 166. நோய் முற்றிய தமிழர்கள் தனித்து விடப்பட்ட முகாம்

7. டோப்ஸ் முகாம் 169.

8. ஜான்சன் முகாம் 171.

9. தா மாயோ ஊட் 176.

10. தா மாயோ 178.

11. நாம் சோன் யாய் 186.

12. வட கானும் தா 190.

13. தா கானும் முகாம் 192.

14. தா கானுன் 193.

15. பாங்கான் 201.

16. வாங் ஹின் 223.

17. கின்சாயோக் காட்டு முகாம் 1 – 256.

18. ஹிந்தோக் சிமெண்ட் 258. சிமெண்ட் மூட்டைகள் முகாம்

19. ஹிந்தோக் ஆறு 260.

20. ஹிந்தோக் சாலை 261. காலரா நோயினால் நூற்றுக் கணக்கான தமிழர்கள் இறந்த இடம்

Death Railway Interest Group chairman P. Chandrasegar

21. மேல் கான்யூ 264.

22. கீழ் கான்யூ 264.

23. யஜென் கான்யூ 265.

24. தாம்பி 267.

25. தார்சோ மருத்துவமனை 290.

26. வாங் தாக்ஹாயின் 334.

27. வாங் யென் 340.

28. வாங் லான் 346.

29. சூங்காய் 355. தாய்லாந்துப் போர்க்கைதிகள் - போர்க் கல்லறை

30. குவாய் ஆற்றுப் பாலம் 359.

31. தா ரூவா    389. சிங்கப்பூரில் இருந்து வந்த சிறைக் கைதிகளுக்கான மாற்று முகாம்

32. பான் போங் 412. சிங்கப்பூர் சிறைக் கைதிகள். முதல் முகாம்

33. நோங் பிலாடுக் 415. ஜூன் 1942 - சிங்கப்பூர் போர்க் கைதிகள் முகாம்.

மேலே சொல்லப்பட்ட முகாம்களில் தான் தமிழர்கள் தங்கி இருந்தார்கள்.

சயாம் மரண இரயில்பாதை கட்டுமானத்தில் இறந்தவர்கள் (தொழிலாளர்கள்); நாடுகள் வாரியாக -

மலாயா தமிழர்கள் இறந்தவர்கள் 175,000

பர்மா தொழிலாளர்கள் இறந்தவர்கள் 90,000.

ஜாவா தொழிலாளர்கள் இறந்தவர்கள் 7,500.

சிங்கப்பூர் தொழிலாளர்கள் இறந்தவர்கள் 5,200.

(The Southwestern Historical Quarterly. 95 (3): 297–319)

(The Japanese Thrust – Australia in the War of 1939–1945. Canberra: Australian War Memorial. p. 568)

இந்த மரண இரயில் பாதையினால் ஆயிரக் கணக்கான தமிழர்களின் குடும்பங்கள் சின்னா பின்னமாயின. ஆயிரக் கணக்கான தமிழர்களின் குடும்பங்கள் காணாமல் போயின.

சயாம் பர்மா இரயில் பாதை முகாம்களில் தமிழர்களின் பிள்ளைகள் ஏறக்குறைய 1000 பேர் அனாதைகளாகக் கைவிடப் பட்டார்கள். உள்ளூர் மக்கள் அந்தப் பிள்ளைகள் பலரைத் தத்து எடுத்துக் கொண்டார்கள்.

தமிழர்கள் வாரிசுகளின் இரத்தம் அங்கே இன்னும் ஓடிக் கொண்டு இருக்கிறது. 75 ஆண்டுகளாகி விட்டன. வாரிசுகள் யார் எவர் என்று அடையாளம் தெரியாத ஓர் அவல நிலையில் மலாயா தமிழர்களின் ஒரு பாரம்பரியம் அங்கே இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

இதைப் படித்துவிட்டு அந்தப் பிள்ளைகளை அடையாளம் காட்டுங்கள் என்று சிலர் குண்டக்க மண்டக்க மாதிரி எதிர்க் கேள்விகள் கேட்கலாம். வேண்டாமே.  நெருப்பு இல்லாமல் புகை வராது.

ஜப்பானியர்கள் எப்படி எப்படி எல்லாம் தமிழ் மக்களை வேதனைப் படுத்தி இருக்கிறார்கள்; சயாம் மரண இரயில் பாதைக்குக் கொண்டு செல்லப்பட்ட போர்க் கைதிகளும் சரி; தமிழர்களும் சரி; எப்படி எப்படி எல்லாம் மரணத் துயரங்களை அனுபவித்து இருக்கிறார்கள்.

படிக்கும் போதும் வேதனை. படித்த பின்னரும் வேதனை. அவர்கள் அனுபவித்த வேதனைகளை அசை போடும் போதும் வேதனை. நெஞ்சம் வெடித்துவிடும் போல இருக்கிறது.

சயாம் மரண இரயில் பாதையின் கொடூரங்கள் மறக்கப்பட்ட ஒரு வரலாறாக மாறி வருகிறது. இனிவரும் காலங்களில் அந்த வரலாறு மறக்கப்படக் கூடாது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.10.2020

ஆய்வு நூல்கள்

1. Boulle, Pierre (1954). Bridge on the River Kwai. London: Secker & Warburg.
Commonwealth War Graves Commission (2000). The Burma-Siam Railway and its Cemeteries. England: Information sheet.

2. Daws, Gavan (1994). Prisoners of the Japanese: POWs of World War II in the Pacific. New York: William Morrow & Co..

3. Gordon, Ernest (1962). Through the Valley of the Kwai: From Death-Camp Despair to Spiritual Triumph. New York: Harper & Bros..

4. Hardie, Robert (1983). The Burma-Siam Railway: The Secret Diary of Dr. Robert Hardie, 1942–1945. London: Imperial War Museum.

5. Kinvig, Clifford (1992). River Kwai Railway: The Story of the Burma-Siam Railway. London: Brassey’s. ISBN 0-08-037344-5.


 

மலாயா தமிழர்கள்: மரணப் பாதையில் மறக்கப்பட்டவர்கள்

தமிழ் மலர் - 26.102020

1945 ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி. ஜப்பான் சரண் அடைந்தது. தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானியரின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சில நாட்களில் தாய்லாந்து, பர்மா மரண இரயில் பாதை முகாம்களில் இருந்த அமெரிக்கா; ஆஸ்திரேலியா; நியூஸிலாந்து; பிரிட்டன்; டச்சு நாட்டுப் போர்க் கைதிகள் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப் பட்டார்கள்.

போர்க் கைதிகளை மீட்டுக் கொண்டு வருவதில் அவர்களின் நாடுகள் விரைவாகவும் சிறப்பாகவும் உடனடியாகவும் செயல் பட்டன. அரசதந்திர உறவுகளைப் பயன்படுத்தி முழுமூச்சாக ஈடுபட்டன.

1945 அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி,
தாய்லாந்து கின்சாயோக் (Kinsaiyok, Thailand) எனும் இடத்தில் தமிழ்ப் பெண்கள்

ஒரே வார்த்தையில் சொன்னால் கூட்டுப் படைகள் கூட்டு சேர்ந்து கொண்டன. இரண்டாம் உலகப் போரின் போது கூட்டுச் சதியில் வீடு கட்டி வாழ்ந்தவர்கள் ஆயிற்றே. சும்மா இருப்பார்களா.

கஷ்டமோ நஷ்டமோ இஷ்டம் தான் பெரிசு. ஒன்றாகச் செயல் படுவோம்; வெள்ளைதான் எனக்கு புடிச்ச கலரு என்று சொல்லி என்று மீண்டும் ஒன்று சேர்ந்து கொண்டார்கள். விமானங்கள் பறந்தன. கப்பல்கள் வந்தன. போர்க் கைதிகளும் ஐலசா பாடிக் கொண்டே அவரவர் நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

ஆனால் மலாயாவில் இருந்து போன தமிழர்களின் கதிதான் அதோகதியானது. அவர்களுக்கு உதவி செய்ய ஒரு நாதி இல்லாமல் போனது. சயாமுக்குப் போன தமிழர்கள் ஜப்பான்காரனை ரொம்பவுமே நம்பி இருந்தார்கள்.

ஜப்பான்காரன் கொண்டு போனான். அவனே திருப்பிக் கொண்டு வந்து விட்டு விடுவான் என்ற ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலேயே சயாம் பர்மா காடுகளில் சில ஆண்டுகள் வாழ்ந்து விட்டார்கள்.

அந்த வகையில், இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்ததும் ஆயிரக் கணக்கான தமிழர்கள் அங்கேயே அப்படியே அனாதையாக்க கைவிடப் பட்டார்கள். சுருக்கமாகச் சொல்லலாம். சயாம் பர்மா கொலைக் காட்டுச் சமாதிகளில் கழற்றி விடப் பட்டார்கள்.

எங்கே போவது; என்ன செய்வது என்று தெரியாமல் சிக்கித் தவித்துத் தடுமாறிப் போனார்கள். வெள்ளைக்காரனும் வரவில்லை. ஜப்பான்காரனும் வரவில்லை. இந்தியாக்காரனும் வரவில்லை. என்ன செய்வார்கள்.

ஜப்பான்காரன் ஓடிட்டான். வெள்ளைக்காரன் வந்துட்டான். சரி. ஆனால் உதவிக்கு எவனும் வரலையே என்று ஏங்கிக் கொண்டு இருந்தார்கள். எந்தக் காட்டில் நுழைந்து எப்படிப் போவது. பாதையும் சரிவரத் தெரியாது.

ஆக திக்கு தெரியாமல் தவித்த தமிழர்களை மலாயாவுக்குத் திருப்பிக் கொண்டு வருவதற்கு உடனடியாக முயற்சிகள் எதுவும் செய்யப் படவில்லை. மலாயா அரசாங்கமும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இந்தியா நாட்டு அரசாங்கமும் அவர்களைப் பற்றி கவலைப் படவும் இல்லை. ஒரு செருகல்.

எப்படியாவது வந்து விடுவார்கள் அல்லது எப்படியாவது தொலைந்து போய் விடுவார்கள் என்று நினைத்து இருக்கலாம். சொல்ல முடியாதுங்க. இது என் மனதில் பட்டது. அதுதான் ஒன்றரை இலடசம் தமிழர்களைக் காவு வாங்கியாச்சே. அப்புறம் என்ன. மிஞ்சி இருக்கிற சில ஆயிரம் பேரைப் பற்றி ரொம்பவும் கவலை வேண்டாமே என்று நினைத்து இருக்கலாம்.

தாய்லாந்து கின்சாயோக் தமிழ்ப் பிள்ளைகள். 1945 அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி. புகைப்படங்களை எடுத்தவர் புருஸ் அல்பர்ட் (Bruce Albert Reddaway). ஓர் ஆஸ்திரேலியர். அந்த ஆஸ்திரேலியருக்கு அந்தத் தமிழ்ப் பிள்ளைகள் தாங்கள் வளர்த்த கோழிகளை அன்பளிப்பு செய்தார்கள்


சில மாதங்கள் கழிந்தன. மலாயாவில் இருந்த சமூக அரசியல் தமிழர்த் தலைவர்கள் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். சிலர் முயற்சி செய்தார்கள். அப்போதைய தமிழ் நேசன்; தமிழ் முரசு பத்திரிகைகள் தலையங்கங்கள் எழுதின. துன் சம்பந்தன், ஜான் திவி, சுப. நாராயணசாமி, ப. பவளகாந்தம், கோ. சாரங்கபாணி, ஐ.என்.ஏ அணியின் தலைவர்கள்.

இப்படி சிலர் ஆர்வம் காட்டினார்கள். அதன் பின்னர் தான் அவர்களுக்கு விமோசனம். கட்டம் கட்டமாக மீட்டுக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப் பட்டன.

ஒரு முக்கியமான விசயம். தாய்லாந்து அரசாங்கம் தான் அங்குள்ள தமிழர்களைத் திருப்பி அனுப்பி வைக்க முன்னெடுப்புச் செய்தது. அக்கறை எடுத்துத் தீவிரமும் காட்டியது. அதை நாம் மறந்துவிடக் கூடாது.


20.10.1945-ஆம் தேதி எடுக்கப்பட்ட படம். ஓர் ஆஸ்திரேலியர்; இராணுவ வரலாற்றுக் குழுவைச் சேர்ந்த ஒரு டச்சு அதிகாரி வார்மென்ஹோவன் (Warmenhoven); ஒரு ஜப்பானிய கைதி; கிராமவாசிகள்; நான்கைந்து தமிழர்கள்


அதற்கும் காரணம் இருக்கிறது. சில ஆண்டுகள் தமிழர்கள் தாய்லாந்து மக்களுடன் ஐக்கியமாகி இருந்தார்கள். அதனால் அப்போது அங்கு வாழ்ந்த தமிழர்களைப் பற்றி தாய்லாந்து அரசாங்கம் நன்றாகவே அறிந்து வைத்து இருந்தது.

அதன் பிறகுதான் மலாயா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குக் கொஞ்சம் சொரணை வந்தது போலும். தாய்லாந்து அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

அந்த வகையில் 1945-ஆம் ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் தமிழர்கள் பலர் மீண்டும் மலாயாவுக்குத் திரும்பி வந்தார்கள். ஒரு முக்கியமான விசயம்.

சில ஆயிரம் தமிழர்கள் திரும்பி வரவே இல்லை. தாய்லாந்து, பர்மாவிலேயே தங்கி விட்டார்கள். பெரும்பாலும் கால் கைகள் ஊனமாகிப் போன தமிழர்கள். மனநோய் பிடித்த தமிழர்கள். ஏற்கனவே அங்குள்ள பெண்களைக் கலயாணம் செய்து கொண்ட தமிழர்கள். மலாயாவில் இருந்த சொந்த பந்தங்கள் இறந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டு; திரும்பிவர மனம் இல்லாமல் போன தமிழர்கள்.

மலாயாவில் ஒட்டு மொத்தமாகக் குடும்பங்களை இழந்த தமிழர்கள். குடும்பத்தோடு சயாம் காட்டுக்குப் போய் அங்கே மனைவி மக்கள் எல்லோரையும் கூண்டோடு இழந்த தமிழர்கள்.

இப்படி திரும்பி வராமல் அங்கேயே தங்கிய தமிழர்கள் சிலர் அங்குள்ள தாய்லாந்து, பர்மா பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு சிலர் சின்னச் சின்னக் கடைகளைக் கட்டி வியாபாரம் பார்க்கத் துணிந்தவர்கள்.

இன்னும் சிலர் வியட்நாம் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் சிலர் கம்போடியாவுக்கு காட்டு வழியாகப் போய்ச் சேர்ந்து இருக்கிறார்கள்.

இவர்களின் வாரிசுகள் இன்றும் இந்தோசீனாவின் சில பகுதிகளில் இருக்கிறார்கள். தேடிப் பிடிப்பதுதான் சிரமம். வியட்நாமில் இப்போது 9700 தமிழர்கள் வாழ்கிறார்கள். இதில் ஓர் அதிசயம். அவர்களின் வாரிசுகளில் பெரும்பாலோர் தமிழ் மொழி பேசுகிறார்கள்.

தற்போது தாய்லாந்து தென்பகுதிகளில் வாழும் மக்கள் சிலரின் தோல் நிறம், நெற்றி, புருவம், கண்ணிமை அமைப்புகள், கண்கள், மூக்கு, காதுகள் முதலிய அங்கங்களின் அமைப்பு; தமிழர்களின் முகத் தோற்றங்களைப் போல அமைந்து இருப்பதைக் காணலாம்.

வடகிழக்குத் தாய்லாந்தில் கம்போடியா எல்லை அருகே வாழும் சில தாய்லாந்து மக்களில் சிலருக்கும், இந்த மாதிரி தமிழர்களின் அங்க அமைப்புகள் இருப்பதைக் காணலாம். அவர்கள் இரயில் பாதை போட போன தமிழர்களின் வாரிசுகளாக இருக்கலாம். மகிழ்ச்சி அடைவோம்.

இந்தக் கட்டுரையில் காட்சிப் படுத்தப்படும் படங்கள் 1945 அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி, தாய்லாந்து கின்சாயோக் (Kinsaiyok, Thailand) எனும் இடத்தில் எடுக்கப் பட்டவை. ஜப்பானியர் சரண் அடைந்த பின்னர், இரயில் பாதை போன தமிழர்கள் சிலர் கின்சாயோக் நகரில் தஞ்சம் அடைந்தார்கள்.

படத்தில் உள்ள தமிழ்ப் பெண்களைப் படம் எடுத்த போது அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டார்கள். புகைப்படங்களை எடுத்தவர் புருஸ் அல்பர்ட் (Bruce Albert Reddaway). ஓர் ஆஸ்திரேலியர். அப்போது அந்த ஆஸ்திரேலியருக்கு அந்தத் தமிழ்ப் பிள்ளைகள் அவர்கள் வளர்த்த கோழிகளையும் அன்பளிப்பு செய்து இருக்கிறார்கள்.

இன்னொரு படம் மறுநாள் 20.10.1945-ஆம் தேதி எடுக்கப்பட்டது. ஓர் ஆஸ்திரேலியரும்; இராணுவ வரலாற்றுக் குழுவைச் சேர்ந்த ஒரு டச்சு அதிகாரி வார்மென்ஹோவன் (Warmenhoven) என்பவரும் ஒரு கிராமத்திற்குச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு ஜப்பானிய கைதி; கிராமவாசிகள் சென்றார்கள். கிராமவாசிகளில் நான்கைந்து தமிழர்களும் இருந்தார்கள்.

Comfort women brought by Japanese at Death Railway Camps

சயாம் மரண இரயில் பாதையின் கொடூரங்கள் மறக்கப்படும் ஒரு வரலாறாக மாறி வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கும் அதைப் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. சொன்னாலும் புரியவில்லை. இனிவரும் காலங்களில் அந்த வரலாறு மறக்கப்படக் கூடாது. அந்த வரலாறு காலா காலத்திற்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும்.

மரண இரயில் பாதை போடுவதற்குப் போன 100 தமிழர்களில் 65 பேர் அங்கேயே இறந்து விட்டார்கள். ஓர் இலட்சம் அல்லது ஒன்றரை இலடசம் மலாயா தமிழர்கள் இறந்து இருக்கலாம். தப்பிப் பிழைத்தவர்கள் 1945-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் மலாயாவுக்குத் திரும்பி வந்தார்கள். ஏறக்குறைய 20,000 பேர் இருக்கலாம். சரியான கணக்கு தெரியவில்லை. வித்த கணக்கை எழுதிய ஜப்பான்காரன் செத்த கணக்கை எழுதவே இல்லை.

சயாம் மரண இரயில் பாதை அமைக்கப் போனவர்களில் பெரும்பாலோர் வயது காரணமாக இப்போது இல்லை. காலமாகி விட்டார்கள். நடுக்காட்டில் நாதி இல்லாமல் தவித்த அந்த அப்பாவி மக்களை என்றும் நினைத்துப் பார்ப்போம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் இறுதி மரியாதை ஆகும்.

மலாயா வரலாற்றில் மரண இரயில் பாதை மறக்க முடியாத ஓர் இதிகாசம். மலாயா இந்தியர்களின் நெஞ்சங்களைக் கீறிப் பார்க்கும் இரணத்தின் சுவடுகள். மலாயா தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து பார்க்கும் மரணத்தின் சுவடிகள். இரண்டுமே மௌன மொழிகளின் வக்கர ராகங்கள்.

சயாம் மரண இரயில் பாதையின் கொடூரங்கள் மறக்கப்படும் ஒரு வரலாறாக மாறி வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கும் அதைப் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. சொன்னாலும் புரியவில்லை. இனிவரும் காலங்களில் அந்த வரலாறு மறக்கப்படக் கூடாது. அந்த வரலாறு காலா காலத்திற்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும்.

1940-ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் யூதர்களுக்கு நாஜிக்கள் இழைத்தது கொடுமையிலும் கொடுமை. அதே போல இங்கே மலாயாவில் தமிழர்களுக்கு ஜப்பானியர்கள் இழைத்தது மாபெரும் கொடுமை. ஜப்பானியர்களின் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் பலிக்கடாக்களான அப்பாவிச் செம்மறியாடுகள்.

என்பது அந்தக் காலத்துத் தமிழர்களின் வாய்மொழிச் சொற்கள். அவற்றில் கசிந்து வழிவது எல்லாம் வரலாற்றின் வேதனை விசும்பல்கள். வரலாற்றின் வேதனை வலிகள். அந்த வேதனை வலிகளில் சாத்துயர் மரண ஓலங்கள் ஓங்காரமாய் ஒப்பாரி வைப்பதை நன்றாகவே கேட்க முடிகின்றது.

மனித வரலாற்றில் இது மிகவும் துயரம் தோய்ந்த ஓர் இரயில்பாதை முயற்சியாகும். அந்த முயற்சி கடைசியில் பெரும் அதிர்ச்சியிலும் பெரும் சோகத்திலும் பெரும் தோல்வியிலும் போய் முடிந்தது. வரலாறு பேசுகிறது.

நம் தமிழர்கள் அங்கே கொடும் வேதனைகளை அனுபவித்து இருக்கிறார்கள். 1943-ஆம் ஆண்டு கான்புரி (Kanburi) எனும் இடத்தில் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு பாலியல் கொடுமை இழைக்கப்பட்டது. பயங்கரமான பச்சைக் கொடுமை. அதைப்பற்றி நாளைய கட்டுரையில் பதிவு செய்கிறேன்.  

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.102020

சான்றுகள்:

1. Yoji Akashi and Mako Yoshimura; New perspectives on the Japanese occupation in Malaya and Singapore, 1941-1945, Singapore:  NUS Press, c2008, ISBN: 9971692996.

2. Hugh V. Clarke; "A Life for Every Sleeper: A Pictorial Record of the Burma-Thailand Railway" (Allen & Unwin, 1986), p.49.

3. Robert Hardie; "The Burma-Siam Railway: The Secret Diary of Dr. Robert Hardie, 1942-1945" (Quadrant Books & Imperial War Museum 1983), p.l09.

4. Eric Lomax; "The Railway Man" (W. W. Norton, 1995), p.l05.
 

No part of this content may be reproduced, republished, or retransmitted by any means without the expressed written consent of author. Please email: ksmuthukrishnan@gmail.com for permission.

 
 

மலாயா தமிழர்களும் அசாம் மக்களும் 1860

இந்தியா, அசாம் (Assam) மாநிலத்தில் சர் சாமுவேல் கிளெலாண்ட் டேவிட்சன் (Sir Samuel Cleland Davidson) எனும் தேயிலை தோட்ட நிர்வாகியால் 1860-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். மலாயாவில் எடுக்கப் பட்டதாகப் பலர் கருதுகிறார்கள். இந்தப் பதிவு மலாயா தமிழர்களின் அன்றைய வாழ்க்கையுடன் ஒத்துப் போகிறது. அதனால் அந்த ஒற்றுமைத் தாக்கம்.

இருப்பினும் இந்த இரு இன மக்களும் ஒரே குளத்தில் வாழ்ந்த மீன்கள் தாம். பிரித்துப் பார்க்க முடியவில்லை. மலாயாவில் காண்டா போட்டு ரப்பர் பாலைத் தூக்கினார்கள். அங்கே அசாமில் காண்டா போட்டு தேயிலைச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சினார்கள். அங்கேயும் இடுப்பில் வேட்டிக் கோவணம். இங்கேயும் வேட்டிக் கோவணம் தான்.

ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால், அசாம் நாட்டு மக்களையும் பிரிட்டிஷ் முதலாளித்தும் விட்டு வைக்கவில்லை. அவர்களும் மலாயா தமிழர்களைப் போல அடிமைகளைப் போல பிழிந்து எடுக்கப் பட்டார்கள். அசாம் மணிப்பூரில் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் வாழ்கிறார்கள். 1950-ஆம் ஆண்டுகளில் குடியேறிய தமிழர்கள்.

புகைப்படம்: அசாம்  தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 1860

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.10.2020

சான்றுகள்:

1. Jayeeta Sharma, 'Lazy' Natives, Coolie Labour, and the Assam Tea Industry, Modern Asian Studies, Vol.43, No.6 (Nov., 2009), pp.1287–1324.

2. Coolies watering the tea bushes (c. 1870): http://wiki.fibis.org/index.php?title=File:Carrying_ water_for_tea_coolies.jpg

3. Photographie de Sir Samuel Cleland Davidson (1846–1921), planteur de thé en Assam (de 1864 à 1874), inventeur de patented machinery pour la manufacture du thé et fondateur de la compagnie Davidson à Belfast en 1881.

4. http://ginger.tessitures.site/lien-politique-entre-les-vivants/coolies-dans-les-plantations

 

26 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: வால்டோர் தோட்டம் 1842

தமிழ் மலர் - 25.10.2020

வால்டோர். மலாயா வரலாற்றில் மிகப் புகழ் பெற்ற பெயர். பெரிய பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய பெயர். அந்தக் காலத்து ரேடியோ மலாயாவில் அடிக்கடி கேட்கப் பட்ட பெயர். இடைக் காலத்து இந்தியன் மூவி நியூஸ் இதழில் அடிக்கடி வாசிக்கப் பட்ட பெயர். தற்காலத்து தமிழ் முரசு பத்திரிகையில் அடிக்கடி பார்க்கப் பட்ட பெயர். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மலாயா தமிழர்களின் வரலாற்றில் ஒரு வாழ்வியல் அங்கமாக உயிர்த்துவம் பெற்ற பெயர்.

1842-ஆம் ஆண்டில் மலாயாவில் பிரெஞ்சுக்காரர்கள் அமைத்த முதல் வேளாண்மைத் தோட்டம். வால்டோர் தோட்டம் (Valdor Estate).

மலாயாவில் முதல் முன்னோடிக் கரும்புத் தோட்டம். பின்னர் காபித் தோட்டமாக மாறியது. பின்னர் மரவெள்ளித் தோட்டம். அதன் பின்னர் ரப்பர் தோட்டம். இப்போது செம்பனைத் தோட்டம்.

இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த வளர்ச்சி இந்த வளர்ச்சி என்று சொல்லி இந்தத் தோட்டத்தையும் ஒரு பண்ணி விடுவார்கள் போலும். ஏன் என்றால் அண்மைய காலங்களில், இந்தத் தோட்டத்தைச் சுற்றிலும் அபரிதமான கட்டுமானங்கள். அமிதமான நவீன வளர்ச்சித் திட்டங்கள். அசுரமான நகர்ப்புற மேம்பாடுகள். சரி.

சமகாலத்தில் என்னதான் வளர்ச்சி என்றாலும் வரலாறு என்றைக்கும் வரலாறு தான். அந்த வகையில் மலாயாவில் தோன்றிய முதன்மைத் தோட்டங்களில் வால்டோர் தோட்டம் மூத்தத் தோட்டமாக விளங்குகின்றது. வரலாறு பேசுகின்றது.

180 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தத் தோட்டம் செபராங் பிறை மாநிலத்தில் சுங்கை பாக்காப் - சிம்பாங் அம்பாட் பகுதியில் இன்றும் வரலாறு பேசிக் கொண்டு வருகிறது.

வால்டோர் (val d'or) ஒரு பிரெஞ்சு சொல். தங்கப் பள்ளத்தாக்கு என்று பொருள். 1840-ஆம் ஆண்டுகளில் மலாயா வந்த பிரெஞ்சு தோட்டக்காரர்களின் முதல் தலைமுறைத் தோட்டம் என்றும் சொல்வார்கள்.

கரும்பு உற்பத்தியில் பிரெஞ்சுக்காரர்கள் காட்டிய ஈடுபாடுகள் அப்போதைய மலாயாவில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்திச் சென்று உள்ளன.

1842-ஆம் ஆண்டில் டோனடியூ எனும் பிரெஞ்சுக்காரர் மலாயா பினாங்கு தீவிற்கு வந்தார். அந்தக் காலத்தில் மலாயாவில் மூன்று நான்கு துறைமுகங்கள் தான் இருந்தன.

பினாங்கு, தெலுக்கான்சன், கோலக்கிள்ளான், மலாக்கா, சிங்கப்பூர். இவை தான் அப்போதைக்கு முக்கியமான துறைமுகங்கள். பெரும்பாலும் பினாங்கில் தான் கரை இறகுவார்கள். அதுதான் முதல் எடுப்பில் உள்ளது.

பினாங்கு தீவிற்கு வந்த டோனடியூ பினாங்குத் தீவிலேயே ஒரு கரும்புத் தோட்டத்தை உருவாக்கத் திட்டம் கொண்டு இருந்தார். அதனால் வேலையாட்களைத் தேடி சுங்கை ஜாவி; செபராங் பிறை பகுதிகளுக்கு வந்தார்.

கடைசியில் பார்த்தால், பினாங்குத் தீவை விட வால்டோர் நிலப் பகுதிகள் அவருக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. கரும்பு பயிரிடுவதற்கு நல்ல மண் வளம். காட்டுப் பகுதியாக இருந்தாலும் நல்ல மணல் பரப்பு. அப்புறம் என்ன. தன் திட்டத்தை மாற்றிக் கொண்டார்.

(In 1841, Joseph Donadieu arrived from France and obtained a concession from the British authorities in Province Wellesley. His intention was to recruit coolies but decided to settle down and he acquired an estate in Jawi.)

செபராங் பிறையில் இருந்த உள்ளூர்வாசிகளையும் சீனர்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு கரும்புத் தோட்டத்தை உருவாக்கினார். உள்ளூர்வாசிகள் சரிபட்டு வரவில்லை. மீன் பிடிப்பது; காய்கறிகள் பயிர் செய்வது அவர்களின் காலா காலத்து வழக்கம்.

சீனர்கள் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. சொந்தமாகத் தொழில் நடத்துவது. பணம் சம்பாதிப்பது. இரத்தத்தில் ஊறிப் போன பழக்கம். அந்தக் கட்டத்தில் வட சுமத்திரா பகுதியில் இருந்து காரோ இன மக்கள் 50 பேர் கொண்டு வரப் பட்டார்கள்.

காரோ இன மக்கள் மலாய், தமிழ் மற்றும் ஆச்சே ஆகியவற்றின் கலவை கொண்ட மக்கள். இராஜேந்திர சோழன் இந்தோனேசியாவின் மீது படை எடுத்த வரலாறு தெரியும் தானே.

காரோ இனமக்கள்

1025-ஆம் ஆண்டில் அவரின் படைவீரர்களில் ஒரு நூறு பேர் தற்காப்புக்காக வட சுமத்திராவில் விடப்பட்டார்கள். அப்படியே மறக்கப் பட்டார்கள். அது ஒரு சோகமான வரலாற்றுச் சுவடு.

இராஜேந்திர சோழன் அவர்களை மறந்து அவசரத்தில் திரும்பிச் சென்றதும் அந்தப் போர் வீரர்கள் காடுகளில் அப்படியே நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள். பின்னர் அந்தப் போர் வீரர்கள் உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள்.

அதனால் தான் காரோ இன மக்களிடம் தமிழர்க் கலவை உள்ளது; தோற்றத்தில் தமிழர்களைப் போல இருப்பார்கள் என்று சொல்ல வருகிறேன். நம்பவில்லை என்றால் படத்தைப் பாருங்கள்.

Karo Batak Girl

காரோ இனமக்கள் வேட்டைக்குப் போவதில் ஆர்வம் கொண்டவர்கள். ஆனால் நல்ல உழைப்பாளிகள். கொஞ்சம் முரட்டுத் தனமான மக்கள். இவர்களும் சரிபட்டு வரவில்லை.

வேறு வழி இல்லாமல் பாண்டிச்சேரியில் இருந்து சொந்தச் செலவில் தமிழர்களைக் கொண்டு வந்தார்கள். கறுப்புக் கங்காணி சிவப்புக் கங்காணி என்று யாரையும் ஆள்பிடிக்க அனுப்பவில்லை. அனுப்பி இருந்தால் நல்லாதான் இருக்கும். பாண்டிச்சேரி தமிழர்கள் இரத்தக் கண்ணீர் வடித்து இருப்பார்கள். இது 1842-ஆம் ஆண்டில் நடந்தது.

அந்தக் கட்டத்தில் பாண்டிச்சேரி, தமிழ்நாட்டில் பிரெஞ்சுக்காரர்களின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கியது. ஆங்கிலேயர்களுக்கு எப்படி மெட்ராஸ் முக்கியமோ அந்த மாதிரி பிரெஞ்சுக்காரர்களுக்கு பாண்டிச்சேரி முக்கியம்.


Pondicherry in 1800s

தமிழர்கள் பாண்டிச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் வந்து அங்கே இருந்து  கப்பல் ஏறி இருக்கிறார்கள். முதல் கட்டமாக 50 அல்லது 60 தமிழர்கள் வால்டோர் தோட்டத்திற்கு வந்து இருக்கிறார்கள்.

டோனடியூ ஒரு கரும்பு தோட்டத்தை நிறுவினார். சொல்லி இருக்கிறேன். பின்னர் லியோபோல்ட் சேசெரியாவ் (Léopold Chasseriau) எனும் இரண்டாவது பிரெஞ்சுக்காரர் அவருடன் இணைந்து கொண்டார். இரண்டு பேரும் சேர்ந்து நல்லபடியாக நிர்வாகம் செய்து வந்தார்கள்.

Tapioca and its many uses: a rice substitute for Malaya

இருப்பினும் 1843-ஆம் ஆண்டு டோனடியூ, கடல் கொள்ளையர்களால் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் அவர்களின் பிள்ளைகள் அந்தத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டார்கள். அடுத்து ஒரு வரலாற்றுத் தகவல்.

1844-ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து 1800 தமிழர்கள் மலாயாவுக்கு கொண்டு வரப் பட்டார்கள். எந்த ஆண்டு என்பதைக் கவனியுங்கள். அவர்களில் 50 - 60 பேர் வால்டோர் கரும்புத் தோட்டத்திற்குப் போய் இருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, 1844-ஆம் ஆண்டு வால்டோர் முதலாளிகள் டோனடியூ; லியோபோல்ட் சேசெரியாவ் ஆகிய இருவரும் சேர்ந்து வால்டோர் தோட்டத்தில் ஓர் அழகான மாளிகையைக் கட்டினார்கள்.

A Manager's Bungalow and a Temple

அந்த மாளிகையில் தமிழர்கள் சேவகம் செய்து இருக்கிறார்கள். தமிழர்கள் மீது பிரெஞ்சுக்காரர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட நம்பிக்கை இருதந்து.

மலாயாவில் குடியேறிய முதல் பிரெஞ்சு தோட்டக்காரராக ஜோசப் டோனடியூ இருந்து இருக்கலாம். அவர்களின் மகன்கள் இருவரும் தங்கள் தொழிலில் மிகச் சிறப்பாக வெற்றி பெற்று இருக்கலாம்.

ஒரு சிறிய விவசாய வம்சத்தை விட்டுச் சென்று இருக்கலாம். இருப்பினும் மலாயா தமிழர்களின் வரலாற்றில் ஒரு தடயத்தை விட்டுச் சென்று இருக்கிறார்கள். அதுதான் பெரிய விசயம்.

19-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள் மலாயாவில் ரப்பர் மரங்களை நடவில்லை. மாறாக்க கரும்பு உற்பத்தியைப் பன்முகப் படுத்துவதில் தான் தீவிரம் காட்டி இருக்கிறார்கள். அவர்கள் வருவதற்கு முன்பு மலாயாவில் மரவள்ளிக் கிழங்கு, தேங்காய், அரிசி, பழம் மரங்கள் பயிரிடப்பட்டு வந்தன.

1843-ஆம் ஆண்டில் வால்டோர் தோட்டத்தை உருவாக்கிய ஜோசப் டோனடியூவை பிரிட்டிஷ் அதிகாரி ஹென்றி கெப்பல் (Henry Keppel) என்பவர் சந்தித்தார். அவர் சுங்கை ஜாவி வால்டோர் தோட்டத்தைப் பற்றி இப்படி எழுதி இருக்கிறார்.

"அடர்த்தியான காடு. பல மைல்களுக்குள் ஊடுருவிச் செல்ல வேண்டும். அங்கே ஒரு கரும்புத் தோட்டம். விவசாயத்தில் ஆர்வம் கொண்ட ஒரு பிரெஞ்சுக்காரர் உருவாக்கியத் தோட்டம்.

Jules Claine

அவரைப் பார்க்க நாங்கள் ஒரு சிறிய நீராவி கப்பல் மூலமாகச் சென்றோம். கப்பலின் பெயர் டயானா. ஒரு சிறிய சிற்றோடையின் கரையில் இறங்கினோம். அதன் பின்னர் மேலும் எட்டு மைல் தூரத்திற்குக் காட்டுப் பாதையில் செல்ல வேண்டி இருந்தது.

நாங்கள் முதன்முதலில் கரை இறங்கியதும் அங்கே ஒரு யானை எங்களுக்காக காத்து இருந்தது, இரண்டு தமிழர்கள். யானைப் பாகன்களாக இருந்தார்கள். எங்களை டோனடியூவும் அவருடைய மனைவியும் வரவேற்றார்கள். தரை இறங்கும் இடத்தில் இருந்து 12 அடி அகலத்திற்கு ஒரு குறுகிய சாலை. அதன் பின்னர் எல்லாமே பச்சைக் காடுகள்.

வால்டோர் தோட்டத்தில் காட்டுப் புலிகளின் நடமாட்டம் அதிகம். காட்டுப் புதர்களுக்குள் புலிகள் இருப்பது நமக்குத் தெரியவே தெரியாது. அசையாமல் அப்படியே இருக்கும். அருகில் போனதும் சரி.

நம் மீது பாய்ந்து அடித்துக் கொன்று அப்படியே காட்டுக்குள் இழுத்துச் சென்றுவிடும். இந்த மாதிரி நான்கைந்து தமிழர்களைப் புலிகள் அடித்துக் கொன்று இருக்கின்றன.

வால்டோர் தோட்ட முதலாளி டோனடியூவின் பங்களா உயர்ந்த மேட்டுத் தரையில் அழகாக அமைந்து இருந்தது. சுற்றிலும் அடர்த்தியான காடுகள். கால் மைல் தூரத்திற்கு சுற்றுப்புற காடுகளைச் சுத்தப்படுத்தி இருந்தார்கள். மாளிகையைச் சுற்றிலும் பாதுகாப்பிற்குப் பலமான இரும்பு வேலியைப் போட்டு இருந்தார்கள்.

வால்டோர் மாளிகையில் டோனடியூ ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் வாழ்க்கையில் சிக்கல். ஒரு துன்பகரமான முடிவு. காரோ தொழிலாளர் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு. பின்னர் விடுவிக்கப் பட்டார்.

இருப்பினும் சில ஆண்டுகளுக்குப் பிறகு 1850-ஆம் ஆண்டில் அவருடைய தோட்டத்திற்கு அருகிலேயே கடல் கொள்ளையர்களால் கொலை செய்யப் பட்டார். காரோ இனத்தவர்களாக இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது.

1890-ஆம் ஆண்டு ஜூல்ஸ் கிளெய்ன் (Jules Claine) எனும் பிரெஞ்சுக்காரர் அந்த மாளிகைக்குப் போய் இருக்கிறார். இவர் ஒரு புகைப்படக்காரர். மாளிகையில் வேலை செய்த தமிழ்ப் பெண்களைப் படம் எடுத்து இருக்கிறார். அந்தக் காலத்துப் பெண்கள். அழகாக அம்சமாக இருக்கிறார்கள். அழகே அழகு.

(Julies Claine left Paris in May 1890, and arrived in Singapore a month later. Then he went to Penang Island and arranged a trip to Sumatra. He arrived at the Deli. Then he contacted the Dutch authorities at that time to get a picture of the life of the local community.)

அடுத்து ஒரு முக்கியமான விசயம். 1842-ஆம் ஆண்டு மலாயாவில் குடியேறியவர்களை வந்தேறிகள் என்று அழைக்கலாமா. எப்படிங்க அழைக்க முடியும்? வரலாறு பொய் சொல்லுங்களா. எப்படிங்க சொல்லும்.

ரவிக்கையும் சேலையும் தங்களின் பூர்வீகச் சொத்து என்று சொல்பவர்கள் எதை வேண்டும் என்றாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் வந்தேறிகள் எனும் சொல்லைப் பயன்படுத்தும் போது நன்றாக யோசித்துச் சொல்லட்டும். ஏன் என்றால் தமிழர்களின் ரவிக்கை பொய் சொல்லாது. சேலையும் பொய் சொல்லாது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.10.2020

References:

1. Maxime Pilon, Danièle Weiler (2011). The French in Singapore: An Illustrated History (1819). Editions Didier Millet.

2. The New Malaysian Sugar Plantation Industry: P. P. Courtenay, Vol. 69, No. 4 (October 1984), pp. 317.

3. French planter at Bukit Tambun photo by Jules Claine, 1890s. Jacques de Morgan
Bibliothèque Nationale de France / Gallica collection.

4. Fonds Jules Claine: https://mediatheque.epernay.fr/Default/fonds-jules-claine.aspx

பின்குறிப்புகள்:


Meanwhile, in 1852, Kee Lye Huat, an ethnic Chinese, landed in Province Wellesley (now Seberang Perai). Starting out as a coolie, he gradually became a successful sugar planter and the owner of the Val d'Or sugar cane estate; he is now credited as the founder of the town.[2] Kee also played an instrumental role in the development of nearby Sungai Bakap. In 1872, he established the Kee Poh Huat Kongsi in Sungai Bakap, where his descendants still reside to this day.[3]

The person credited to founding Valdor was a Teochew named Kee Lye Huat, who arrived in Seberang Perai in 1852. He was one of the many 19th century stories of rags to riches. Through living a frugal life, Kee managed to become a successful sugar planter.