21 செப்டம்பர் 2020

இந்தோனேசியா கிலிங்கல் பெண்கள் - 1895

இந்தோனேசியாவின் மொலுக்கஸ் தீவுக் கூட்டத்தில் தன்னந்தனியாக ஒரு தீவு. அம்போன் தீவு. அங்கே பல நூறு ஆண்டு காலமாக ஒரு வகையான பூர்வீக மக்கள் வாழ்கிறார்கள். அவர்களைக் கிலிங்கல் மக்கள் (Klingkel) என்று அழைக்கிறார்கள். இவர்களை கிங்கல் அல்லது லும்மல் (Kinkel, Lummel) என்றும் அழைப்பது உண்டு. டச்சுக்காரர்கள் இவர்களை அல்போர் (Alfoer) என்று அழைத்தார்கள்.

Klingel Women 1895

இங்கே கெலிங் என்று சொன்னால் எப்படி நமக்குக் கோபம் வருகிறதோ; அதே போல அந்தக் கிலிங்கல் மக்களைக் கிங்கல் என்று அழைத்தால் அவர்களும் கோபம் அடைகிறார்கள். கிங்கல் எனும் சொல் அவர்களின் இனத்தை அவமதிக்கும் சொல்லாகக் கருதுகிறார்கள்.

அல்போர் என்ற சொல் வெள்ளைக்காரர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இந்தோனேசிய மொழியில் 'கிங்கல்' அல்லது 'லம்மல்' என்பது நாகரிகமற்ற சொல் ஆகும். அந்தச் சொல்லைத் தவிர்த்து வருகிறார்கள்.

(The word Alfoer is only used by white people. In the national language it is a term of abuse such as kinkel or lummel, an uncivilized person in short. It is a coastal population designation for inland residents.)

Ambonese women performing a dance on Queens Day 31 August 1929

இந்தக் கிங்கல் மக்கள் எங்கே இருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? எப்படி வந்தார்கள் எனும் விவரங்கள் சரியாகக் கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்தோனேசியாவைக் கலிங்கா அரசு ஆட்சி செய்த போது அங்கே இருந்து அம்போன் தீவிற்குக் குடிபெயர்ந்து இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. உறுதியாகத் தெரியவில்லை.

கலிங்கா அரசு 6-ஆம் - 8-ஆம் நூற்றாண்டுகளில் ஜாவா தீவை 200 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்த அரசாகும்.

Klingel Girls

கிலிங்கல் மக்கள் ஒரு தனிப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 16 - 18 ஆம் நூற்றாண்டுகளில் அம்போன் தீவு பழங்குடி மக்களுடன் கலந்ததன் விளைவாக கிலிங்கல் இனம் உருவாகி இருக்கலாம் என்றும் மனிதவியலாலர்கள் சொல்கிறார்கள். இந்தக் கலிங்கல் மக்கள் கடற்கரைப் பகுதிகளில் வாழ்கிறார்கள்.

மற்ற மற்ற பூர்வீக மக்களுடன் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம். எதிரிகளின் தலைகளைக் கொய்து வருவதும் இவர்களின் போர் முறை வழக்கம்.

Klingkels were formed in the 16th to 18th century as a result of the mixing of the indigenous population of Ambon Island.

Klingel youths

இங்கேதான் இந்தோனேசியாவின் மிகப் பிரபலமான வனவிலங்கு பூங்கா உள்ளது. அதன் பெயர் மனுசீலா தேசியப் பூங்கா (Manusela National Park). பெயரைப் பாருங்கள். மனுசீலம். பெரும்பாலான கிலிங்கல் மக்கள் இந்த மனுசீலா பூங்காவில் தான் வாழ்கிறார்கள்.

1895-ஆம் ஆண்டு அம்போன் தீவுக்குச் சென்ற நஜோன் (Najoan, P.) எனும் டச்சு நாட்டுப் புகைப்படக்காரர் இந்தப் பெண்களைப் படம் எடுத்து இருக்கிறார். இந்தப் பெண்களின் ஆடைகள்; காலணிகள்; நகை ஆபரணங்கள்; அலங்காரத் துணிகள் எல்லாமே அசல் தமிழர்களின் சாயலைக் கொண்டவை.

இவர்களின் முகத் தோற்றமும்; இவர்களின் வழித்தோன்றல்களின் முகத் தோற்றமும் தமிழர்களின் முகத் தோற்றம் கொண்டவையாக உள்ளன. அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. இந்தக் கிலிங்கல் மக்கள் பாலினேசிய; மாலினேசிய ஆதிக்குடிகளின் வழித் தோன்றலாக இருக்கலாம்.

ஏன் என்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சார்ந்த ஆப்பிரிக்க மக்களும் (எதியோப்பியா); லுமேரியா எனும் குமரிக் கண்டத்தில் இருந்தும் தமிழர் சார்ந்த பரம்பரையினரும் கிழக்கிந்தியத் தீவுகளுக்குப் (Philippine Archipelago; Indonesian Archipelago) புலம் பெயர்ந்து இருக்கலாம்.

Ambon Island

இவர்கள் பலர் போர்னியோ; மொலுக்கஸ்; நியூகினி (Papua New Guinea); நுசந்தாரா (Nusantara) நிலப் பகுதிகளில் நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள். பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளிலும் இவர்கள் கட்டுமரங்கள் வழியாகப் போய் இருக்கிரார்கள். ஹவாய் தீவு மக்கலும் அந்தப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தான்.

அவர்களில் சிலர் ஆஸ்திரேலியாவுக்குள் தஞ்சம் அடைந்தார்கள். அவர்கள் தான் இப்போதைய ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் (Aboriginal Australians).

(Humans are thought to have migrated to Northern Australia from Asia using primitive boats. A current theory holds that those early migrants themselves came out of Africa about 70,000 years ago, which would make Aboriginal Australians the oldest population of humans living outside Africa)

Ambon Girl

கிலிங்கல் மக்கள் அம்போய்னா தீவின் பூர்வீக மக்கள் என்று இந்தோனேசிய அரசாங்கம் வரையறுத்துச் சொல்கிறது. மொலுக்கஸ் தீவுக்கூட்டத்தில் பல நூறு பிரிவுகளைச் சார்ந்த பூர்வீகக் குடிமக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் கிலிங்கல் ஒரு பகுதியினர் என்றும் இந்தோனேசிய அரசாங்கம் சொல்கிறது.

ஆனால் இவர்களுக்கு எப்படி தமிழர்களின் உடல் அமைப்பு; முகச் சாயல் அமைந்து போயின என்பதுதான் பெரும் புதிராக உள்ளது.

இவர்களைப் பற்றிய மேல் விவரங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் பதிவு செய்கிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.09.2020

சான்றுகள்:

புகைப்படக்காரர்:  நஜோன், பி. (Najoan, P.)

படத்தின் தலைப்பு: அல்பர் பெண்கள், அம்பன், மொலுக்காஸ், இந்தோனேசியா (Alfoersche girls, Ambon, Moluccas, Indonesia 1895-1915)

1. Chang Chi-yun. Eastern Asia in the Sui and T'and Period. Historical Atlas of China. Vol. 1. Taipei: Chinese Culture University Press, 1980.

2. https://en.wikipedia.org/wiki/Manusela_National_Park

3. https://en.wikipedia.org/wiki/Maluku_Islands

4. https://youtu.be/PqjF0FIg0PI

5. Alfur, Ambon, Moluccas, Indonesia (1895-1915)

 

பத்தாங்காலி சுங்கை ரீமோ படுகொலை

தமிழ் மலர் - 15.05.2020

வியட்நாமில் ஒரு மை லாய் படுகொலை. அதே மாதிரி மலேசியாவில் பத்தாங்காலி படுகொலை. 24 நிராயுதபாணிச் சீனர்கள் அதிரடிக் கொலை. 1948 டிசம்பர் 12-ஆம் தேதி உலு சிலாங்கூர், பத்தாங் காலியில் பயங்கரமான படுகொலை. பத்தாங்காலி மக்கள் கண்ணீர்விட்டுக் கதறினார்கள். உலக மக்கள் விக்கித்துப் போனார்கள்.

மலாயா அவசரகாலத்தின் போது பிரிட்டிஷ் இராணுவம் செய்த ஓர் அட்டூழிய அட்டகாசம். மலேசியச் சீனர்ச் சமூகம் நீதி ஜெயிக்க வேண்டும் என்கிறது. இன்று வரைக்கும் போராடி வருகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. பற்பல சாக்கு போக்குகள். பற்பல சால்சாப்புகள். தட்டிக் கழித்துப் போய்க் கொண்டே இருக்கிறது.

மலேசியர்களும் விடுவதாக இல்லை. மலேசிய நாடாளுமன்றத்தில் மாண்புமிகு பான் இயூ தெங்கில் இருந்து குலசேகரன் வரை விவாதம் செய்து விட்டார்கள். முன்னாள் ஐ.ஜி.பி. ஹனீப் ஓமார் பக்க பலமாக நின்றார். ஆனால் லண்டன் அசைந்து கொடுப்பதாக இல்லை. சாகடிக்கப் பட்டவர்களின் உறவினர்களுக்கு இன்று வரை நியாயமும் கிடைக்கவில்லை.

மை லாய் (My Lai Massacre) படுகொலையைப் பற்றி முதலில் சொல்லி விடுகிறேன். 1960-களில் வியட்நாம் நாடு இரண்டு நாடுகளாக இருந்தது. கம்யூனிசப் பிடியில் வட வியட்நாம். மக்களாட்சிப் பிடியில் தென் வியட்நாம். வடக்கே இருந்து வியட்கோங் (Vietcong) போராளிகள் தென் வியட்நாமிற்குள் ஊடுருவிக் கொண்டு இருந்தனர். உலகப் போலீஸ்காரர் அமெரிக்கா சும்மா விடுவாரா.

‘நண்பேண்டா…’ என்று உதவிக்குப் போனார். ஆனால், என்ன ஆனது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுதான் மிச்சம். அது ஒரு வியட்நாமிய காப்பியம். ஒரு மாமாங்கத்திற்கு எழுதினாலும் எழுதி முடிக்க முடியாது. இப்போதைக்கு வேண்டாம்.

வியட்கோங்குகள் ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள். போர் உச்சக் கட்டத்தில் இருந்த நேரம். 1968 மார்ச் 16-ஆம் தேதி. அமெரிக்க வீரர்கள் மை லாய் கிராமத்திற்குள் நுழைந்தனர்.

அங்கே கண்ணில் பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிசுக்கள் என்று 504 பேரைப் பாரபட்சம் இல்லாமல் வெட்டிக் கொன்றார்கள். ஒரு பூ புழுவைக்கூட விட்டு வைக்கவில்லை. கண்ணில் பட்டவை எல்லாம் அழித்து ஒழிக்கப் பட்டன. வீடு காடுகள் என்று ஒட்டு மொத்தமாகய்த் தீயிட்டு கொளுத்தப் பட்டன. இளம் பெண்கள் பலர் கற்பழிக்கப் பட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் வெட்டி வீசப் பட்டன.

வியட்கோங் போராளிகளுக்கு கிராம மக்கள் அடைக்கலம் கொடுத்ததாகக் குற்றப் பத்திரிகை வாசிக்கப் பட்டது. விசயம் தெரிந்த உலக மக்கள் கொதித்து எழுந்தனர். ஐ.நாவில் விவாதிக்கிற அளவுக்கு விசயம் முற்றிப் போனது. அந்த மை லாய் படுகொலையைப் பற்றி வரலாறு இன்றும் பேசுகிறது. இனி என்றும் பேசிக் கொண்டுதான் இருக்கும். அது நிச்சயம். அப்பேர்ப்பட்ட ஒரு வரலாற்றுக் கொடுமை.

அதே அந்த மை லாய் படுகொலையைப் போல மலேசியாவிலும் ஒரு படுகொலை (Batang Kali Massacre). சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர் மாவட்டத்தின் பத்தாங் காலியில் நடந்தது.

1948 டிசம்பர் 11-ஆம் தேதி மாலை மணி ஐந்து. பிரிட்டிஷ் இராணுவத்தின் 7-வது பிலாட்டூன் ‘ஜி’ கம்பனியைச் சேர்ந்த (7th Platoon, G Company, 2nd Scots Guards) இராணுவ வீரர்கள், பத்தாங் காலி சுங்கை ரீமோ (Sungai Rimoh) ரப்பர் தோட்டத்திற்கு வந்தார்கள். அங்கு இருந்த சீனத் தொழிலாளர்கள் அனைவரையும் ஓர் ஒதுக்குப் புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ஆண்கள் மட்டும் தனியாகத் தனித்து வைக்கப் பட்டார்கள்.

இன்னொரு பிரிவில் பெண்களும் குழந்தைகளும் தனியாக நின்றார்கள். அன்றைய தினம் நடுநிசி வரைக்கும் விசாரணைகள். அதற்கு முன்னதாக மாலை மணி ஆறு வாக்கில், லூ குவேய் நாம் என்பவர் சுட்டுக் கொல்லப் பட்டார். அவரிடம் பப்பாளிப் பழங்களை விற்றதற்கான ஒரு ரசீது இருந்தது. அந்த ரசீது போலியானது என்று குற்றம் சாட்டப் பட்டது. அடுத்த விநாடி அவருடைய நெற்றியில் தோட்டா துளைத்தது.

இரவு ஏழு மணிக்கு கிராம மக்கள் அனைவரும் நான்கு ஐந்து கொங்சி வீடுகளில் அடைத்து வைக்கப் பட்டார்கள். விசாரணை செய்யப் போவதாகச் சொல்லி ஆண்களை மட்டும் தனியாகப் பிரித்து ஒதுக்கி வைத்தார்கள்.

ஆண்களுடன் தாங்களும் சேர்ந்து இருக்கப் போவதாகப் பெண்கள் மன்றாடி இருக்கிறார்கள். ஆண்களுக்கு வரப் போகும் ஆபத்தைப் பெண்கள் உணர்ந்து இருக்கலாம். ஆண்களைக் காப்பாற்றுவதற்குப் பெண்கள் எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறார்கள். எதுவும் எடுபடவில்லை. துப்பாக்கி முனையில் பலவந்தம் நடந்ததுதான் மிச்சம்.

பெண்களும் குழந்தைகளும் தனித் தனியாக அடைத்து வைக்கப் பட்டார்கள். மறுநாள் காலையில் ஒரு லாரி வந்தது. அதில் பெண்களும் குழந்தைகளும் ஏற்றப் பட்டார்கள். பெண்கள் சிலர் ஏற மறுத்தார்கள். அவர்களைக் குண்டுக் கட்டாய்த் தூக்கி லாரிக்குள் வீசினார்கள். லாரி நகர்ந்தது.

அந்தச் சமயத்தில் சீனர்கள் வாழ்ந்த கொங்சி வீடுகளில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள். நெட்ட நெடுமரமாய் ஆற்றங் கரையில் ஆண்கள் சாய்ந்து விழுகின்றார்கள். லாரியில் இருந்த பெண்களும் குழந்தைகளும் கத்திக் கதறுகின்றார்கள்.

அவர்கள் வாழ்ந்த வீடுகள் எல்லாம் தீப்பற்றி எரிகின்றது. ஆனால் ஒரு லாரி மட்டும் செம்மண் சாலையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு மறைந்து போகின்றது.

இரண்டு நாட்கள் சென்று வந்து பார்க்கும் போது, ஆண்கள் சிலரின் தலைகள் தனியாக வெட்டப் பட்டு கிடந்தன. அவர்களின் ஆண் விதைகள் நசுக்கப் பட்டு கிடந்தன. உயிர்நாடிகள் அறுக்கப் பட்டுத் தொங்கின. மனிதச் சித்ரவதையின் உச்சக்கட்ட அலங்கோலக் காட்சிகள்.

அந்த நிகழ்ச்சியில் தப்பித்தவர் ஒரே ஒருவர். பெயர் சோங் ஹோங் (Chong Hong). படுகொலையை நேரடியாகப் பார்த்தவர். 2004-ஆம் ஆண்டு பி.பி.சி. வானொலிக்குப் பேட்டி கொடுத்தார்.

‘எங்களை வரிசையாக நிற்க வைத்தார்கள். நான் நடுவில் இருந்தேன். இந்தப் பக்கம் பத்து பேர். அந்தப் பக்கம் பத்து பேர். இரண்டு பக்கத்திலும் ஒரே சமயத்தில் ஒவ்வொருவராகச் சுட்டுக் கொண்டு வந்தார்கள். எல்லாம் நான்கு ஐந்து நிமிடங்களில் முடிந்து விட்டது.

எனக்குப் பக்கத்தில் இருந்தவரைச் சுடும் போது, நான் மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டேன். பக்கத்தில் இருந்தவர் சாயும் போது நானும் அவரோடு சேர்ந்து சாய்ந்து விட்டேன். மயக்கம் தெளிந்து பார்க்கும் போது, என் நண்பர்கள் எல்லோரும் பிணமாகக் கிடந்தார்கள். மனித நடமாட்டம் இல்லை. நான் மெதுவாக எழுந்து காட்டுக்குள் ஓடி விட்டேன்.

ராத்திரி பூராவும் அங்கேயே இருந்தேன். அவர்கள் மறுபடியும் வந்து விடுவார்களோ எனும் பயம். யாரும் வரவில்லை. இரண்டு நாள் கழித்து பெண்களும் பிள்ளைகளும் வந்தார்கள். எல்லாரும் அழுதார்கள்.

கொலை நடந்த இடத்தில் இதுவரையில் யாரும் வீடு கட்டவில்லை. ஆவிகள் உலாவுவதாக்ச் சொல்கிறார்கள்’ என்றார். வயது எழுபதுக்கும் மேல் ஆகிய நிலையில் அண்மையில் இறந்து போனார்.

ஒரு கிராமத்தின் ஆண்கள் எல்லோரும் ஏன் ஒட்டு மொத்தமாகக் கொலை செய்யப் பட்டனர். இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. முதலாவது காரணம்.

அவர்கள் பத்தாங் காலி காடுகளில் வாழ்ந்த கம்யூனிஸ்டுகளின் அனுதாபிகள். கம்யூனிஸ்டுப் போராளிகளுக்கு உணவு உடைகள வழங்கி ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளின் நண்பர்கள் என்பதால் அவர்கள் ஆங்கிலேயர்களின் எதிரிகள் ஆனார்கள்.  

அடுத்து இரண்டாவது காரணம். 1948 ஜூன் 16-ஆம் தேதி, பேராக் சுங்கை சிப்புட்டில் மூன்று பிரிட்டிஷ் தோட்ட நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப் பட்டதின் எதிர்வினை.

சுங்கை சிப்புட், எல்பில் (Elphil Estate) தோட்டத்தின் நிர்வாகி ஏ.இ.வால்கர் (A.E. Walker) என்பவர் அவருடைய அலுவலக அறையில் சுட்டுக் கொல்லப் பட்டார். முப்பது நிமிடங்கள் கழித்து இன்னும் இரு கொலைகள். சுங்கை சிப்புட்டில் இருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் பின் சூன் (Phin Soon Estate) தோட்ட நிர்வாகி ஜே.எம்.எலிசன் (John Alison) என்பவரும், அவருடைய துணை நிர்வாகி இயான் கிறிஸ்டியன் (Ian Christian) என்பவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

இந்தச் சம்பவங்கள் மலாயாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை ஆத்திரத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது. அதன் பின்னர்தான் மலாயாவில் அவசர காலம் பிரகடனம் செய்யப் பட்டது.

மலாயாச் சீனர்கள் மீது ஆங்கிலேயர்களுக்கு இருந்த வெறுப்பு உணர்வு திசை திரும்பியது. வாய்ப்பு கிடைத்தால் பழி வாங்கும் படலமும் கட்டு அவிழ்க்கப் பட்டது. இந்தியர்கள் நிலைமை ஓரளவுக்குப் பரவாயில்லை. அப்போது பெரும்பாலான இந்தியர்கள் தோட்டப் புறங்களிலேயே அடைபட்டு கிடந்தனர். அந்தத் தோட்டங்களை வெள்ளைக்காரர்கள் நிர்வாகம் செய்தார்கள்.

அதனால், அவர்களிடம் ஆதிக்கப் பிடிமானம் இருந்தது. சலாம் போட்டுச் சமாளித்துக் கொண்டார்கள். காலா காலத்திற்கும் இந்தியர்களின் எதிர்காலம் ஒரு கேள்விக் குறியாகவே இருந்து வந்தது.

அதன் பிறகு ஜப்பானியர்கள் வந்தனர். காந்தி நேதாஜி போன்ற பெயர்கள் அவர்களைக் கொஞ்சம் காப்பாற்றி விட்டன. இருந்தாலும் ஆயிரக் கணக்கானத் தமிழர்கள் சயாம் பர்மா காடுகளில் அனாதையாகச் செத்துப் போனார்கள். அதை நாம் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது.

மலேசியாவில் வாழும் அத்தனை இந்தியக் குடும்பங்களிலும், யாராவது ஒருவர் சயாம் பர்மா மரண இரயில் பாதையில் சம்பந்தப் பட்டு இருக்கலாம். அது மறைக்க முடியாத ஒரு வரலாற்று உண்மை. இந்த விசயம் உங்களுக்கே தெரியாமல்கூட இருக்கலாம்.

பத்தாங் காலி படுகொலை சம்பந்தமாக விசாரண நடத்த வேண்டும் என்று லண்டன் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. அப்போது மலாயாவின் தலைமை அரசு வழக்கறிஞராக சர் ஸ்டாபோர்ட் போஸ்டர் என்பவர் இருந்தார். விசாரணை என்ற பேரில் ஒரு கண் துடைப்பு. போதுமான சான்றுகள் இல்லை என்று விசாரணை கைவிடப் பட்டது.

அதன் பின்னர் 1970-இல் மறுபடி ஒரு விசாரணை. அதுவும் பிசுபிசுத்துப் போனது. 1992-ஆம் ஆண்டு பி.பி.சி. வானொலி நிலையம் ஓர் ஆவணப் படத்தைத் தயாரித்தது. உலகம் பூராவும் ஒளிபரப்பு செய்தது.  

அந்தக் கட்டத்தில் மலேசியாவின் தலைமை போலீஸ் அதிகாரியாக ஐ.ஜி.பி. டான்ஸ்ரீ ஹனீப் ஒமார் இருந்தார். அவர் அந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் போலீஸில் புகார் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பூ மோய், தாம் யோங் (Tham Yong), சோங் பூங் என மூன்று பேர் புகார் செய்தார்கள். ஓர் உயர்மட்டப் போலீஸ் விசாரணைக் குழு அமைக்கப் பட்டது.

பிரிட்டிஷ் தூதரகத்திடம் ஒரு புகார் விண்ணப்பம் வழங்கப் பட்டது. அந்த விண்ணப்பத்தின் நகல் எலிசபெத் மகாராணியாருக்கும் அனுப்பி வைக்கப் பட்டது. அவ்வளவுதான். 45 வருடங்களுக்கு மேல் ஆகிறது. விண்ணப்பம் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

2004-ஆம் ஆண்டு, ஜனநாயகச் செயல் கட்சி, இந்தப் பிரச்சினையை மலேசிய  நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றது. மாண்புமிகு குலசேகரன் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். விவாதம் செய்தார்கள். அவ்வளவுதான்.  பாதிக்கப் பட்டவர்களுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பணம் காசு எதையும் கேட்கவில்லை. நஷ்டயீடு எதையும் கேட்கவில்லை. அவர்கள் கேட்பது எல்லாம் நேர்மையான நியாயம் தான். சுடப்பட்டவர்கள் என்ன தப்பு செய்தார்கள். அவர்கள் செய்த அந்தக் குற்றத்தைச் சொன்னால் போதும். ஆக, பிரச்சினை தொடர்கிறது.

எப்போது நியாயம் கிடைக்கும் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அதுவரையில், பத்தாங் காலி படுகொலையில் பாதிக்கப் பட்டவர்களுக்காக அனுதாபப் படுவதைத் தவிர வேறு வழி இல்லை.

சான்றுகள்:

1. Hale, Christopher (1 October 2013). Massacre in Malaya: exposing Britain's My Lai. Stroud: The History Press.

2. Bowcott, Owen (26 January 2012). "Batang Kali relatives edge closer to the truth about 'Britain's My Lai massacre'". The Guardian. London

3. "Malayan 'massacre' families seek UK inquiry". BBC NEWS. 7 May 2012

4.  "British court rules in favour of Batang Kali kin". The Star. 9 September 2011.



20 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள்: நெகிரி செம்பிலான், லின்சம் தோட்டம் - 1878

1870-ஆம் ஆண்டுகளில் நெகிரி செம்பிலான், ரந்தாவ் (Rantau), லின்சம் தோட்டம் (Linsum Estate); அந்த மாநிலத்தின் மிகப் பழமையான தோட்டமாக விளங்கியது. மலாயாவின் முன்னோடித் தோட்டங்களில் ஒன்றாகும்.

மலாயா தமிழர்கள்: நெகிரி செம்பிலான், லின்சம் தோட்டம்  - 1878


அது மட்டும் அல்ல. கூட்டாட்சி மலாய் மாநிலங்களில் (Federated Malay States) இருந்த காபி ரப்பர் தோட்டங்களில் மிகவும் பிரபலமான தோட்டமாகவும் விளங்கியது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முதன்முதலில் இந்தத் தோட்டத்தில் தான் காபி பயிர் செய்யப் பட்டது.

The Linsum estate, at Rantau, is the oldest estate in Negri Sambilan, and is famous throughout the Federated Malay States because it contains some of the oldest and largest Para trees in the district. Originally it was planted with coffee, but, as that product became unprofitable, the proprietors turned their attention to rubber.

Source: Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Page: 101

Camping and Tramping in Malaya:
Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Page: 84

1876-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களைக் கொண்டு வருவதற்கு  இந்தியாவின் பிரிட்டிஷ் அரசாங்கமும்; மலாயாவின் பிரிட்டிஷ் அரசாங்கமும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டன. இரண்டு ஆண்டுகள் கழித்து 1878-ஆம் ஆண்டில் தமிழர்கள் மலாயா காபி தோட்டங்களில் வேலை செய்ய வந்தனர்.

In 1876 the Secretaries of State for India and the Colonies had both agreed to the principle of allowing natives of India to be employed in the Malayan States, and in 1878 the then Governor of the Straits Settlements requested permission for their direct importation to the native states from India.

இதே காலக் கட்டத்தில் நெகிரி செம்பிலான் லுக்குட் லிங்கி தோட்டம்; பேராக் கோலாகங்சார்; பாடாங் செராய்; புரோவின்ஸ் வெல்லஸ்லி நிபோங் திபால்; மலாக்கோப் தோட்டம் பினாங்கு; போன்ற இடங்களிலும் காபி பயிர் செய்யப் பட்டது. அங்கேயும் தமிழர்கள் போய் இருக்கிறார்கள்.

Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Author: Rathborne, Ambrose B. Place of Publication: London (England). Date of Publication: 1898. Publisher: Swan Sonnenschein.

ஆனால், 1878-ஆம் ஆண்டில், நெகிரி செம்பிலான், ரந்தாவ், லின்சம் காபி தோட்டத்திற்குத் தான் தமிழர்கள் முதன் முதலில் கொண்டு வரப்பட்டார்கள் என்று தெரிய வருகிறது. அந்தத் தோட்டத்தில் காபி உற்பத்தி லாபகரமானதாக அமையவில்லை. அதனால் தோட்ட உரிமையாளர்கள் தங்கள் கவனத்தை ரப்பர் பயிரிடுவதில் கவனம் செலுத்தினார்கள்.

ராத்போர்ன் அம்ப்ரோஸ் (Rathborne, Ambrose) எனும் ஆங்கிலேயர் எழுதி இருக்கும் ’மலாயா தீபகற்பத்தின் மாநிலங்களில் பதினைந்து ஆண்டுகள்’ (Camping and Tramping in Malaya: fifteen years' pioneering in the native states of the Malay peninsula) எனும் நூலில் பக்கம்: 85-இல் இந்தப் படங்கள் உள்ளன. 1898-ஆம் ஆண்டில் தான் அந்தப் புத்தககத்தில் பதிவு செய்யப்பட்டது.

Jungle clearing works at Rantau, Negeri Sembilan 1878

இந்தப் படங்கள் ரந்தாவ் லிங்கி தோட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் எனும் ஒரு கருத்து உள்ளது. எனினும் ரந்தாவ், லின்சம் தோட்டத்தில் காபி பயிர் செய்வதற்காகக் காடுகள் அழிக்கப்படும் படமும் கிடைத்து உள்ளது. ஆகவே இந்தப் படம் லின்சம் தோட்டத்தில் தான் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் ரந்தாவ், லின்சம் தோட்டமும்; ரந்தாவ் லிங்கி தோட்டமும் மிக அருகாமையில் இருக்கும் தோட்டங்கள். ஆக மலாயா தமிழர்கள், 1878-ஆம் ஆண்டில், அந்தப் பகுதியில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிய வருகிறது.

Jungle Clearing at Rantau Negeri Sembilan in 1878. Source: Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Page: 47

ஆக 142 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயாவுக்கு வந்த தமிழர்கள்; மலாயா காபி தோட்டங்களில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி ஆகின்றது.

இந்தக் காலக் கட்டத்திற்கு முன்பாகவே, 1840-ஆம் ஆண்டுகளில்; பினாங்கு, சிங்கப்பூர் தீவுகளில் காடுகளை அழிக்கவும்; சாலைகள் அமைக்கவும் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டார்கள் என்பது பலருக்கும் தெரியாத விசயமாக இருக்கலாம்.

இருந்தாலும் மலாயா தமிழர்கள் என்பவர்கள் மலையூர் மலாயாவிற்கு நேற்று முந்தா நாள் வந்தவர்கள் அல்ல. ஒன்றை நினைவில் கொள்வோம். மனுசர்கள் நுழைய முடியாத பாசா காடுகளின் கித்தா தோப்புகளில் வாழ்ந்தவர்கள் தான் மலாயா தமிழர்கள்.

மலைக் காடுகளை அழித்துத் திருத்திக் காபி, மிளகு, கொக்கோ, ரப்பர் தோட்டங்களைப் போட்டவர்கள். அவர்கள் உருவாக்கிக் கொடுத்த கட்டுமானத்தில் சொகுசு காண்பவர்கள் சிலரும் பலரும் இருக்கிறார்கள்.

மலாயா தமிழர்கள் நேற்று வந்த வந்தேறிகள் என்று சிலர் சொல்கிறார்கள். என்ன சொல்வது? அவர்களை நன்றி கெட்டவர்கள் என்று சொல்ல மனசு வரவில்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.09.2020

1. Source: Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 480.

2. Source: Source: Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula.
Author(s): Rathborne, Ambrose B.
British Library shelfmark: Digital Store 010055.ee.10
Place of publication: London (England)
Date of publication: 1898
Publisher: Swan Sonnenschein




கடாரம் பூஜாங் பள்ளத்தாக்கு நடராஜன்

மலேசிய வரலாற்று ஆசிரியர். பூஜாங் நடா என்று அன்புடன் அழைக்கப் படுகிறவர். டாக்டர் ஜெயபாரதிக்கு அடுத்த நிலையில் கடாரத்து வரலாற்றுக் காற்றைச் சுவாசிக்கும் அழகிய மகனார்.

நாளைய சமுதாயத்திற்கு நல்ல ஒரு வரலாற்று வழிகாட்டி. ’சோழன் வென்ற கடாரம்’ எனும் நூலின் ஆசிரியர். இருபது ஆண்டு கால ஆய்வுகள்.

எந்த நேரத்தில் எங்கே இருப்பார் என்பது அவருக்கே தெரியாது. ஒரு நாள் மாலை நேரம் சுங்கை பட்டாணி அமான் ஜெயாவில் பார்த்தேன். நீண்ட நேரம் பேசினோம். அடுத்த நாள் பினாங்கில் பார்க்கிறேன்.

என்னங்க டத்தோ என்று கேட்டால், அது அப்படித் தான் என்பார். சமயங்களில் அவரின் நகைச்சுவை பேச்சில் ஊசி மிளகாய் உரைப்புகள் வந்து போகும்.

ஒரு தடவை மலேசியத் திரைப்படத் தயாரிப்பாளர் பிரான்சிஸ் சில்வன் அவர்களைப் பார்ப்பதற்குத் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவிற்குச் சென்று இருந்தேன்.

சாட் மசாலா உணவகத்தில் சந்திப்பு. உள்ளே போகிறேன். அங்கே பூஜாங் நடராஜா. தனி ஒரு மேசையில் தனிமையில் அமர்ந்து இருந்தார். அருகில் தேநீர் கோப்பை.

மூக்குக் கண்ணாடியைத் தாழ்த்தி என்னைப் பார்க்கிறார். முகத்தில் மகிழ்ச்சி அலைகள். மலேசிய இந்தியர்கள் சார்ந்த வரலாற்று ஆவணங்களை மீட்டு எடுக்கும் பணிகளில் இருவருமே ஈடுபட்டு வருகிறோம். அந்தச் சுவாசக் காற்றுகளின் அலைகள்.

’இன்று பூஜாங் வரலாறு பற்றி சிலாங்கூர் ஆசிரியர்களிடம் ஒரு மேடைப் பேச்சு. பெரிய இடத்துப் பெரிசுகளைப் பற்றியும் அழுத்தமாகப் பேசப் போகிறேன். வர்றீங்களா மலாக்கா’ என்றார்.

’என் மீது ஒரு கறுப்புப் புள்ளி வைக்கப் படலாம். அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை மலாக்கா. வருவது வரட்டும்’ என்றார். என்னை மலாக்கா என்று அழைப்பார்.

இவர் இன்னும் நிறைய வரலாற்று ஆய்வுப் பணிகளைச் செய்ய வேண்டும். புதைந்து கிடக்கும் மலாயா தமிழர்களின் வரலாறுகளை மீட்டு எடுக்க வேண்டும். அவருடைய ஆய்வுப் பணிகளுக்கு மலாயா தமிழர்கள் அனைவரும் துணையாக இருப்போம்.

மலாயா தமிழர்கள் கண்டு எடுத்த மந்திரப் புன்னகைகளில் ஒருவர் பூஜாங் நடராஜா. நடமாடும் ஒரு வரலாற்றுக் களஞ்சியம். வாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.09.2020




19 செப்டம்பர் 2020

சங்கராமா விஜயதுங்க வர்மன்: சைலேந்திரா பேரரசு

 தமிழ் மலர் - 14.09.2020

இந்தோனேசியா ஓர் அழகான உலகம். ஓர் அதிசயமான பூமி. அங்கே பற்பல புதுமைகள். பற்பல பழைமைகள். அந்தப் பழமைகளில் பற்பல மர்மங்கள். அந்த மர்மங்களில் நீண்ட நெடிய ஒரு வரலாறு. அந்த வரலாற்றில் இந்தியர்கள் 1370 ஆண்டுகள் ஆட்சி செய்ததும் ஒரு துணை வரலாறு.

சைலேந்திரா அரசு வாரிசுகள்: ஜாவானியப் பெண்மணி

இந்தோனேசியா எனும் தனி ஓர் உலகத்தில் மொத்தம் 13,466 தீவுகள். இந்தத் தீவுகளைப் பன்னிராயிரம் தீவுகள் என்று மணிமேகலைக் காப்பியத்தில் சொல்லப் படுகின்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் ஜாவா தீவிற்கு வணிகம் செய்யப் போய் இருக்கிறார்கள். ஜாவா தீவை சாவகம், சாவகத் தீபம், யவத் தீபம் என்று அழைத்து இருக்கிறார்கள்.

அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக இந்தோனேசியத் தீவுகளுக்குப் பழம் பெரும் தமிழர்கள் சென்று இருக்கிறார்கள். இப்போதைய தமிழர்களுக்குப் பெருமையும் சேர்க்கிறார்கள். அப்படிப் போனவர்களில் பல்லவர்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள்.

போன இடங்களில் சின்னச் சின்ன நிலப் பிரபுக்களாக மாறினார்கள். அப்படியே சிற்றரசுகளை உருவாக்கி அழகு பார்த்து இருக்கிறார்கள். அப்படியே பேரரசுகளையும் உருவாக்கி பெரிய பெரிய சகாப்தங்களையும் படைத்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்தோனேசியாவின் வரலாறு இந்தியப் பின்புலத்தில் இருந்து தான் தொடங்குகிறது. அந்தப் பின்புலத்தை இந்தோனேசியர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. பரந்த மனத்துடன் மனதார ஏற்றுக் கொள்கிறார்கள். மலர்ந்த உணர்வுகளுடன் மனதாரப் போற்றுகிறார்கள்.

இந்தோனேசியாவை 16 இந்தியப் பேரரசுகள் ஆட்சி செய்து உள்ளன. கி.பி. 130-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1500-ஆம் ஆண்டு வரை 1370 ஆண்டுகளுக்கு இந்தியப் பேரரசுகளின் ஆட்சிகள்.

தருமநகரா பேரரசு; ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு; சைலேந்திரா பேரரசு; மேடாங் மத்தாரம் பேரரசு; சிங்காசாரி பேரரசு; பாலி பேரரசு போன்றவை புகழ்பெற்ற பேரரசுகள்.

அவற்றுள் ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesari Warmadewa) உருவாக்கிய பாலி பேரரசு (Bali Kingdom). கி.பி. 914-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1471-ஆம் ஆண்டு வரை பாலி பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது. ஏறக்குறைய 550 ஆண்டுகள். பெரிய சாதனை.

கடைசி வருடத்தைக் கவனியுங்கள். கி.பி. 1471-ஆம் ஆண்டு. ஆச்சரியமாக இல்லை. சிங்கப்பூரில் நீல உத்தமனின் வாரிசுகள் ஆட்சி செய்யும் போது பாலி தீவில் ஸ்ரீ கேசரி வர்மதேவாவின் வாரிசுகளின் ஆட்சி.

இருந்தாலும் 1471-ஆம் ஆண்டு தான் பாலி பேரரசு இந்தியர்களின் பிடியில் இருந்து கைநழுவிச் சென்றது. சரி. சங்கராமா விஜயதுங்கவர்மன் வரலாற்றுக்கு வருவோம்.

சைலேந்திரா பேரரசை 18 அரசர்கள் ஆட்சி செய்து இருக்கின்றார்கள். சைலேந்திரா அரசர்களின் பட்டியல்:

1. சந்தானு (Santanu - கி.பி. 650)

2. தபுந்தா சைலேந்திரா (Dapunta Selendra - கி.பி. 674)

3. சீமா (Shima Kalingga - கி.பி. 674 — 703)

4. மந்திமீனா (Mandimiñak - கி.பி. 703 — 710)

5. சானா (Sanna - கி.பி. 710 — 717)

6. சஞ்சயா (Sanjaya - கி.பி. 717 — 760)

7. ராக்காய் பனங்கரன் (Rakai Panangkaran - கி.பி. 760 — 775)

8. தரநீந்தரன் (Dharanindra - கி.பி. 775 — 800)

9. சமகரகவீரன் (Samaragrawira - கி.பி. 800 — 812)

10. சமரதுங்கா (Samaratungga - கி.பி. 812 — 833)

11. பிரமோதவர்த்தனி ராணியார் (Pramodhawardhani  - கி.பி. 833 — 856)     

12. பாலபுத்ரதேவா (Balaputradewa - கி.பி. 833 — 850)

13. உதயாத்தியவர்மன் (Sri Udayadityavarman - கி.பி. 960)

14. இயாட்சே (Hia-Tche - கி.பி. 980)

15. சூடாமணி வர்மதேவா (Sri Cudamani Warmadewa - கி.பி. 988)

16. மாறன் விஜயதுங்கா (Sri Maravijayottungga  - கி.பி. 1008)

17. சுமத்திரபூமி (Sumatrabhumi - கி.பி. 1017)

18. சங்கராமா விஜயதுங்கவர்மன் - கி.பி. 1025)

இவர்களில் இருவர் மிக மிக முக்கியமானவர்கள். ஒருவர் தரநீந்தரன். அடுத்தவர் சங்கராமா விஜயதுங்கவர்மன்.

தரநீந்தரன் என்பவர் சைலேந்திரா பேரரசின் அரசராக இருந்த காலக் கட்டத்தில் சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசு; ஜாவாவில் இருந்த சைலேந்திரா பேரரசு; இரு பேரரசுகளும் இணைந்து ஒரே பேரரசாக வடிவம் பெற்றன. கி.பி. 775-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

அதுவரையிலும் சைலேந்திரா பேரரசு ஓர் இந்து சைவ சமயப் பேரரசாக இருந்தது. தரநீந்தரன் படையெடுப்பிற்குப் பின்னர் சைலேந்திரா பேரரசு புத்தச் சமயத்திற்குப் புலம் பெயர்ந்தது. தரநீந்தரன் ஆட்சியில் தான் போரோபுதூர் (Borobudur) ஆலயம் நிர்மாணிப்புப் பணிகளும் தொடங்கின.

சங்கராமா விஜயதுங்கவர்மன். அவரின் ஆட்சி எந்த ஆண்டு முடிவு பெறுகிறது என்பதையும் பாருங்கள். 1025-ஆம் ஆண்டு. அந்த ஆண்டுடன் சைலேந்திரா அரசும் ஒரு முடிவிற்கு வருகிறது. அந்த ஆண்டில் தான் இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படை எடுத்தார்.

அடுத்து இந்தச் சங்கராமா விஜயதுங்கவர்மன் தான் கடாரம் எனும் பூஜாங் பேரரசையும் ஆட்சி செய்த கடைசி அரசரும் ஆவார்.

(சான்று: https://en.wikipedia.org/wiki/Sangrama_Vijayatunggavarman)

சைலேந்திரா பேரரசிற்கும் சோழர்களுக்கும் நல்ல உறவுகள் தான். ஆனால் மாறன் விஜயதுங்க வர்மனுக்குப் பின்னர் தான் பிரச்சினைகள் தொடங்கின. மாறன் விஜயதுங்க வர்மன் என்பவர் சைலேந்திரா அரசர்களில் 16-ஆவது அரசர்.

ஒரு கட்டத்தில் சைலேந்திரா பேரரசின் அரசராகச் சுமத்திராபூமி (Sumatrabhumi) என்பவர் இருந்தார். கி.பி.1017-ஆம் ஆண்டு அரியணை ஏறினார். இவர் சீனா நாட்டுடன் அதிகமாக நட்பு பாராட்டினார். சோழர்களுடன் உறவுகளைக் குறைத்துக் கொண்டார்.

அடுத்து வந்த சங்கராமா விஜயதுங்கவர்மனும் சோழர்களுடன் அதிகமாக நட்பு வைத்துக் கொள்ளவில்லை. ஒரு மிதமான ஓர் ஏனோ தானோ போக்கு. அத்துடன் சீனாவின் நம்பிக்கையான வார்த்தைகள்.


சீனா இருக்கும் போது ஏன் சோழர்களுக்குப் பயப்பட வேண்டும். அவர்கள் வருவதற்கு முன்னரே நாங்கள் வந்து விடுவோம் எனும் சீனாவின் நம்பிக்கை வாசகங்கள். ஆனால் கடைசி நேரத்தில் சீனா உதவிக்கு வரவில்லை. காலை வாரி விட்டு விட்டது. சங்கராமா விஜயதுங்கவர்மன் ஏமாற்றப் பட்டார்.

கி.பி 960-ஆம் ஆண்டிலேயே சீனா நாட்டுடன் சைலேந்திரா பேரரசு தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. அந்த உறவை முதன் முதலில் ஏற்படுத்தியவர் ஸ்ரீ உதயாத்திய வர்மன் (Sri Udayadityavarman).

அதன் பின்னர் வந்த சைலேந்திரா அரசர்கள் இயா சே (Hia-Tche), ஸ்ரீ சூடாமணி வர்மதேவா (Sri Cudamani Warmadewa), மாறன் விஜயதுங்க வர்மன் (Maran Vijaya Ttunga Varman), சுமத்திராபூமி (Sumatrabhumi), சங்கராமா விஜயதுங்கவர்மன்.

சீனாவுடன் நெருக்கமானதும் சோழர்களுடன் நட்பு குறைந்து போனது. அது மட்டும் இல்லை. சோழர்களுக்கு எதிராகவே சைலேந்திரா அரசர்கள் செயல்படத் தொடங்கினார்கள். அதனால் வந்த வினைதான் இராஜா ராஜ சோழனின் படையெடுப்பு.

கடாரத்தைக் கடைசி கடைசியாக ஆட்சி செய்த சங்கராமா விஜயதுங்கவர்மனின் அசல் பெயர் ராமா விஜயா துங்கா வர்மன் (Rama Wijaya Tungga Warman). இவர் சுமத்திரா பலேம்பாங்கில் இருந்து கடாரத்தை ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.

Sangrama Vijayatunggavarman or Sangramavijayottunggavarman or Sang Rama Wijaya Tungga Warman was an emperor of Srivijaya of Sailendra dynasty.

சங்கராமா விஜயதுங்கவர்மன் ஸ்ரீ விஜய பேரரசின் கடைசி அரசராக இருந்தாலும், இவர் சைலேந்திரா அரச பரம்பரையைச் சேர்ந்தவர்.

சைலேந்திரா பேரரசின் வழியாக வந்தவர்கள் தான் சைலேந்திர அரசப் பரம்பரையினர். இவர்கள் தான் ஸ்ரீ விஜய பேரரசைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர்கள்.

சைலேந்திரா அரசப் பரம்பரையினர் இல்லாமல் ஸ்ரீ விஜய பேரரசு என்பதும் இல்லை. மஜபாகித் பேரரசும் இல்லை. ஆக சைலேந்திரா பேரரசு என்றால் அது ஒரு வகையில் ஸ்ரீ விஜய பேரரசைச் சார்ந்ததே.

சைலேந்திரா பேரரசுடன் ஸ்ரீ விஜய பேரரசுடன் இணைக்கப் பட்டதால் ஸ்ரீ விஜய பேரரசின் பெயர் தான் முன்னிலைப் படுத்தப் படுகிறது. எப்படிப் பார்த்தாலும் ஸ்ரீ விஜய பேரரசிற்கு முன்னோடியாக இருந்தது சைலேந்திரா பேரரசு ஆகும்.

சங்கராமா விஜயதுங்கவர்மனின் பெயர் தஞ்சை பெரிய கோயிலின் கல்வெட்டுகளிலும் பதிக்கப்பட்டு இருக்கிறது. 1030-ஆம் ஆண்டு கல்வெட்டுகள். கடாரம் கொண்ட இராஜேந்திர சோழனின் வெற்றிகளைப் பற்றிய ஒரு மெய்க்கீர்த்தி. அதில் சங்கராமா விஜயதுங்கவர்மனின் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது.

மெய்க்கீர்த்தி என்பது அரசர்களின் புகழ், கொடை, போர்ச் சிறப்புக்களைப் பற்றிக் கதை கூறும் பாடல் வகையாகும். பெரும்பாலும் அவை அகவல்பாவில் அமைந்து உள்ளன.

பூஜாங் பள்ளத்தாக்கில் சங்கராமா விஜயதுங்கவர்மன் நடை பயின்ற இடங்கள் எல்லாம் இப்போது காடு மேடுகளாய்க் காட்சி அளிக்கின்றன. ஓர் ஆயிரம் ஆண்டுகளாகப் புழுதிப் படலங்கள்.

அந்தப் புழுதிப் படர் மலைகளில் வானுயர்ந்து நிற்கும் வானகத்து நெடு மரங்கள். கதிரொளியைக் காணாமல் கலங்கி நிற்கும் சின்னச் சின்னச் செடி கொடிகள். அந்தப் பச்சைகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் ஓராயிரம் கடாரத்து வரலாற்றுப் பொக்கிஷங்கள்.

இப்போது சிலர் வேறு மாதிரியாகக் கதை சொல்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பூஜாங் பள்ளத்தாக்கில் எங்கள் பாட்டி வடை சுட்டார்; எங்கள் தாத்தா இட்லிக்கு சாம்பார் விற்றார். எங்கள் மூதாதையர் குமரிக் கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்று சிலர் கதை சொல்கிறார்கள்.

கேட்க நன்றாக இருக்கிறது. அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே எனக்கும் படுகிறது.

1370 ஆண்டுகளாக இந்திய வம்சாவழியினர் இந்தோனேசியாவின் சுமத்திரா ஜாவா தீவுகளையும்; கடாரத்தையும் ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆக கணிசமான அளவிற்கு அங்கே இந்திய இரத்தம் கலந்து இருக்கலாம். வாய்ப்புகள் உள்ளன. எனக்குள் ஒரு கேள்வி.

அங்கு இருந்து பக்கத்து பக்கத்து நாடுகளுக்குப் பல இலட்சம் பேர் குடியேறி இருக்கிறார்கள். அவர்களின் உடலில் என்ன மாதிரியான இரத்தம் ஓடலாம் அல்லது ஓடிக் கொண்டு இருக்கலாம். தெரியவில்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

சான்றுகள்:

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.09.2020

1. Muljana, Slamet (2006). F.W. Stapel, ed. Sriwijaya. PT. LKiS Pelangi Aksara.

2. Coedes, George (1996). The Indianized States of Southeast Asia. University of Hawaii Press. pp. 142&143.

3. Boechari (1966). "Preliminary report on the discovery of an inscription at Sojomerto". MISI. III: 241–251.