10 ஏப்ரல் 2021

கலிங்கா எனும் சொல் கெலிங் என்று மாறியதா?


தமிழ் மலர் - 10.04.2021

கெலிங் எனும் சொல் மலேசியத் தமிழர்களை இழிவுப் படுத்தும் சொல்லாகப் பார்க்கிறோம். அந்தச் சொல்லைப் பயன்படுத்தும் போது மலேசியத் தமிழர்களுக்கு கோபம் வருகிறது.

அதே அந்தச் சொல்லை 1988; 2012-ஆம் ஆண்டுகளில் டேவான் பகாசா புஸ்தகா (Dewan Bahasa dan Pustaka) தன் அகராதியில் பயன்படுத்தி இருக்கிறது. ஆட்சேபம் தெரிவித்து இருக்கிறோம்.

கலிங்கர் நாணயங்கள்

கெலிங் எனும் சொல் எங்கே இருந்து வந்தது? எப்படி வந்தது? ஏன் வந்தது? அந்தச் சொல்லின் பின்னணியில் என்ன நடந்தது? வரலாற்று ஏடுகளில் கலிங்கா எனும் சொல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இப்போதைய இந்திய மாநிலமான 'ஒடிசா'வின் (Odisha) பழைய காலத்துப் பெயர் கலிங்கம். மகாநதிக்கும் (Mahanadi) கோதாவரி நதிக்கும் (Godavari) இடைப்பட்ட நிலப்பரப்பைக் கலிங்கம் என்று அழைத்து இருக்கிறார்கள்.

இப்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் தான் அப்போதைய கலிங்கத்தின் பெரும்பகுதி அமைந்து இருந்தது. கலிங்கத்தை ஆட்சி செய்த மன்னர்கள், பக்கத்து நாடுகளுடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டார்கள். உலகம் தோன்றியதில் இருந்து காலா காலமாக நம்மவர்களின் பிறவிக் குணம். அவ்வளவு சுலபத்தில் போய் விடாது.

அந்தச் சண்டைச் சச்சரவுகளினால் அவர்களின் எல்லைப் புறங்களும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுருங்குவது உண்டு. ரொம்பவும் இல்லை. ஏன் என்றால் ஒரு மன்னர் சண்டை போட்டு நிலத்தைக் கொஞ்சம் இழந்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  

அவருக்கு அடுத்து இன்னொரு மன்னர் வருவார். அவரும் சும்மா இருக்க மாட்டார். எப்படியாவது சண்டை போட்டு ஆக வேண்டும். இல்லை என்றால் தூக்கம் வராது.

சண்டை போட்டு இழந்த  நிலத்தை மீண்டும் மீட்டு எடுப்பார். இப்படித் தான் கலிங்கத்தின் எல்லை வரலாறுகளும் கொடுக்கல் வாங்கலில் பின்னிப் பிணைந்து சுருங்கிப் பெருகிப் போய் இருக்கின்றன.


முன்பு காலத்தில், ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னால், ஒடிசாவின் வட கிழக்குப் பகுதியில் உத்கலா எனும் பேரரசு (Utkala Kingdom) சீரும் சிறப்புமாய ஆட்சி புரிந்து வந்தது. அந்தச் சிற்றரசின் கீழ்ப் பகுதியில் கலிங்க நாடு செல்வச் செழிப்புடன் இயங்கி வந்தது.

கிருஷ்ணா (Krishna) வைதாரணி (Vaitarani) நதிகள் பாயும் நிலப் பகுதிகளையும் கலிங்கா நாடு என்று அழைத்து இருக்கிறார்கள். ஆனாலும் கலிங்க நாடு முழுமையாக ஒடிசாவில் அமைந்து இருக்கவில்லை. ஒடிசாவின் ஒரு பகுதி தான் கலிங்க நாடு.

சரி. இப்போது மகாபாரதத்திற்குள் கலிங்கம் எனும் பெயர் எப்படி வருகிறது என்று பார்க்கப் போகிறோம். ஒன் மினிட் பிளீஸ். கண்டிப்பாகச் சொல்ல வேண்டி இருக்கிறது.

எங்கு இருந்தோ வந்து ஒட்டிக் கொண்ட பேராண்மைச் சாதி சனங்கள் உலக வரலாற்றில் இருக்கவே செய்கிறார்கள். உலகின் பல இடங்களில் இடுப்புக்குக் கீழே பட்டை மட்டைகளைக் கட்டிக் கொண்டு சம்பான் மிதவைகளில் கரை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

ஆறுகளில் கிடைத்த மீன்களைச் சுட்டுத் தின்று பாதி வாழ்க்கையை ஓட்டியவர்களும் இருக்கிறார்கள்.. மரவெள்ளிக் கிழங்குகளில் மீதி வாழ்க்கையை மிச்சப் படுத்தியவர்களும் இருக்கிறார்கள். சிலருக்கும் பலருக்கும் சுக்கிரத் திசை சுழற்றிச் சுழற்றி அடிப்பதும் உண்டு. மற்றவர்களைப் பார்த்து கிண்டல் கேலி செய்வதும் உண்டு.

கலிங்கம் என்பது 2500 ஆண்டுகளுக்கு முந்திய பேரரசு என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அதனால் தான் இங்கே மகாபாரதத்தைக் கொண்டு வர வேண்டி இருக்கிறது.

மகாபாரதம் பற்றி அனைவருக்கும் தெரியும். இரு பழைமை வாய்ந்த இதிகாசங்கள். ஒன்று மகாபாரதம். மற்றொன்று இராமாயணம்.

மூத்த இதிகாசமாகக் கருதப் படுவது மகாபாரதம். அதை இயற்றியவர் வியாசர். தமிழில் மொழி பெயர்த்தவர்களில் ஒருவர் வில்லிப்புத்தூரார். மகாபாரதம் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப் பட்டது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கும் முன்னால் இயற்றப் பட்டு இருக்கலாம் என்று அண்மைய கால ஆய்வுகள் சொல்கின்றன.

மிக அண்மையில் ஜே. எல். புரோக்கிங்டன் (J. L. Brockington) என்பவர் எழுதிய சமஸ்கிருத காவியங்கள் (The Sanskrit Epics) எனும் ஆய்வு நூல்; மகாபாரதம் 2500 ஆண்டுகளுக்கும் முந்தியது என சான்றுகள் சொல்கின்றது. (Literary Criticism - 596 pages, Leiden (1998). மகாபாரதத்தில் நான்கு பேரரசுகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

1. மேகலா பேரரசு (Mekala Kingdom);

2. உத்கலா பேரரசு (Utkala Kingdom);

3. கலிங்கா பேரரசு (Kalinga Kingdom);

4. உத்பாலா பேரரசு (Utpala Kingdom).


இவை அனைத்தும் 2000 ஆண்டுகளுக்கும் முந்திய அந்தக் காலத்துப் பேரரசுகள். 2000 ஆண்டுகளுக்கும் முன்பாகவே இந்தியாவில் கோலோச்சிய பேரரசுகள். இதை முதலில் நினைவில் கொள்வோம். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்பது பின்னர் தெரிய வரும்.

மகாபாரதம் என்று சொன்னாலே சில 'லிபரல்’வாதிகள் அதாவது முற்போக்கான தாராளவாதிகளுக்குப் பிடிக்காது. சிலர் முகம் சுழிப்பார்கள். இதிகாச இலக்கியங்கள் மூட நம்பிக்கையானவை என்றும் சொல்வார்கள்.

பிரச்சினை இல்லை. இப்போது இங்கே சில சான்றுகளை முன்வைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் தான் மகாபாரதத்தைப் பற்றி சொல்ல வேண்டி உள்ளது.

கெலிங் எனும் சொல் ஓர் இனத்தின் மீது அவச் சொல்லாக அடிக்கடிப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சொல் அவமதிப்பான சொல் அல்ல. 2500 ஆண்டுகளுக்கு முன்னால் கோலோச்சிய கலிங்க நாட்டைக் குறிக்கும் சொல்.

அந்தச் சொல்லில் இருந்து தான் கெலிங் எனும் சொல் தோன்றியது. இதை நிரூபிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனால் தான் மகாபாரதத்தை முன் வைக்கிறேன். சரி.

குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்கு ஆதரவாகக் கலிங்கர்கள் செயல்பட்டதாகப் பதிவுகள் உள்ளன. (மகாபாரதம் பருவம் - 8; கர்ண பர்வம் பகுதி – 22)

நகுலனிற்கு எதிராக மேகலர்கள் (Mekalas); உத்கலர்கள் (Utkalas); கலிங்கர்கள் (Kalingas); நிஷாதர்கள் (Nishadas); தாம்ரலிப்தர்கள் (Tamraliptas) களம் இறங்கியதாக மகாபாரதம் சொல்கிறது.

இங்கே கலிங்கர்கள் எனும் சொல் வருவதைக் கவனிக்க வேண்டும். ஆக 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே கலிங்கம் எனும் சொல் பயன்பட்டில் இருந்து இருக்கிறது.

சான்று: https://mahabharatham.arasan.info/2017/02/Mahabharatha-Karna-Parva-Section-22.html

சான்றுகள் ஆங்கிலத்தில் உள்ளன. பதிவு செய்ய வேண்டியது ஒரு கட்டாயம்.

Utkalas were mentioned as taking part in the Kurukshetra War siding with the Kauravas. Many Mekalas and Utkalas, and Kalingas, and Nishadas, and Tamraliptakas, advanced against Nakula, showering their shafts and lances, desirous of slaying him (8:22).

சான்று: https://sacred-texts.com/hin/m08/m08022.htm

மகாபாரதத்தில் குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்கு ஆதரவாகக் கலிங்கர்கள் செயல்பட்டதால் பாதிப்புகள் ஏற்பட்டதாகப் பதிவுகள் உள்ளன. (மகாபாரதம் 07: துரோணபர்வம்; துரோணாபிஷேக பர்வம் – 04)

அதில் 'கௌரவர்களுக்கு ஊக்கம் அளித்த கர்ணன்’ எனும் பகுதியில் உத்கலர்கள், மேகலர்கள், பவுந்திரர்கள், கலிங்கர்கள், ஆந்திரர்கள், நிஷாதர்கள், திரிகர்த்தர்கள், வாலிகர்கள் ஆகியோர் அனைவரும் போரில் வீழ்த்தப் பட்டனர் எனும் வாசகம் வருகிறது.

(சான்று: https://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Drona-Parva-Section-004.html)


இதே சான்றுகள் ஆங்கிலத்தில் உள்ளன.

The Utpalas, the Mekalas, the Paundras, the Kalingas, the Andhras, the Nishadas, the Trigartas, and the Valhikas, were all vanquished by Karna (7:4).

(சான்று: https://sacred-texts.com/hin/m07/m07004.htm)

மீண்டும் சொல்கிறேன். கெலிங் எனும் சொல் எங்கே இருந்து வந்து இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் தான் மகாபாரதத்தையும் மேற்கோள் காட்ட வேண்டி வந்து உள்ளது. அதற்காக மறுபடியும் மகாபாரதத்தின் சில பகுதிகளைப் படிக்க வேண்டி வந்தது.

ஆங்கிலத்தில் உள்ளது தமிழில் சரியாக இருக்கிறதா. தமிழில் உள்ளது ஆங்கிலத்தில் சரியாக இருக்கிறதா. இப்படி இரு புறமும் நிறுத்துப் பார்க்க வேண்டி வந்தது.

இன்னும் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இந்தியாவின் தேசிய கீதமான ஜன கன மன பாடலில் உத்காலா உப்காலா எனும் பெயர்கள் வருகின்றன. நினைவில் கொள்வோம். (India's national anthem, Jana Gana Mana)


இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு வாயாங் கூலிட் (Wayang Kulit)  எனும் நிழல் பொம்மலாட்டம் படைக்கப் படுகிறது. இந்த நிழல் பொம்மலாட்டம் தொடக்கத்தில் ஜாவா, பாலி, லொம்போக் போன்ற இடங்களில் தோன்றியது.

மகாபாரதத்தின் கிருஷ்ணரைப் பற்றிய பொம்மலாட்டங்கள் மத்திய ஜாவாவில் மிகவும் புகழ் பெற்றது. அந்த ஆட்டத்திற்கு ரிங்கிட் (Ringgit) என்று பெயர். அதைவிட பாலித் தீவில் இன்னும் அதிகமான வரவேற்பு. ஏன் என்றால் அங்கே இந்துக்கள் அதிகம். இந்து மதம் முக்கிய மதம்.

இந்த மகாபாரதப் பொம்மலாட்டம் மலேசியாவிலும் புகழ் பெற்றது. கிளந்தானில் கடந்த 250 ஆண்டுகளாக மகாபாரத இராமாயண நிழல் பொம்மலாட்டங்கள் நடைபெற்று வந்தன.

அண்மையில் 1990-ஆம் ஆண்டு கிளந்தானில் மகாபாரத இராமாயண நிழல் பொம்மலாட்டத்திற்குத் தடை விதிக்கப் பட்டது. ஆனால் வேறு வடிவத்தில் இன்றும் நடைபெறுகிறது.

கெலிங் என்று சொல்லப்படும் கலிங்கர்கள் மகாபாரதத்தில் மேற்கோள் காட்டப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அந்தப் பொம்மலாட்டம் வழியாக மலேசியர்கள் உணர வேண்டும். சரி. இப்போது இந்தியாவில் இருக்கும் சடீஸ்கார் (Chhattisgarh) மாநிலத்தின் ஒரு பகுதியும் கலிங்கம் தான்.

இந்தியாவில் நர்மாதா நதி பாயும் அமரகாந்தகம் (Amarakantaka) மலைக்காடுகள் வரை கலிங்க நாடு பரவி இருந்து இருக்கிறது. கிழக்கே அகன்று விரிந்து கிடப்பது வங்காள விரிகுடா.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கிரேக்க தத்துவஞானி மெகாஸ்டீனஸ் (Megasthenes) இண்டிகா எனும் நூலை எழுதி இருக்கிறார். அதில் கலிங்க நாட்டில் வாழ்ந்த மக்களை கலிங்கா (Calingae) என்று எழுதி இருக்கிறார்.

கலிங்க நாடு கலிங்கப் பூர்வீகக் குடிமக்களால் உருவாக்கப்பட்ட நாடு. கலிங்கா என்பது ஒரு பூர்வீக இனத்தின் பெயர். சில பூர்வீகக் குடிமக்கள் குழுவினர் ஒன்று சேர்ந்து கலிங்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

1971-ஆம் ஆண்டு தினேஷ் சந்திரா சர்க்கார் (Dineschandra Sircar) என்பவர் இந்தியாவைப் பற்றி ஓர் ஆய்வு நூலை எழுதி இருக்கிறார். அதில் 168-ஆவது பக்கத்தில் அந்தப் பூர்வீகக் குடிமக்களைப் பற்றி விளக்கம் கொடுக்கிறார். (Studies in the Geography of Ancient and Medieval India)

கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த அங்கவர்கள் (Angas); வாங்கர்கள் (Vangas); பூந்தரர்கள் (Pundras); சுகமர்கள் (Suhmas) ஆகிய பூர்வீக மக்கள் குழுக்கள் ஒன்று சேர்ந்து கலிங்கத்தைத் தோற்றுவித்து இருக்கிறார்கள்.

ஒடிசாவின் பைதரணி நதி (Baitarani) முதல் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வரஹானந்தி (Varahanandi) வரை பரந்து விரிந்த ஒரு நிலப்பரப்பைக் கலிங்கர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பெரிய விசயம்.

பண்டைய காலங்களில் கலிங்க நாட்டின் தலைநகரம் தந்தகுரா (Dantakura). அதை தந்தபுரா நகரம் (Dantapura) என்றும் அழைப்பது உண்டு. இப்போது ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம். அங்கே புகழ்பெற்ற தண்டவக்த்ரா (Dantavaktra) கோட்டை இருக்கிறது. அருகாமையில் லங்குலினி நதி (Langulini) ஓடுகிறது.


கலிங்கத்தின் வரலாறு நீண்ட ஒரு வரலாறு. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு. அந்த வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொண்டால் தான் கெலிங் என்று கிண்டல் செய்பவர்களை எதிர்த்துப் பேச முடியும்.

கட்டுரைகளைப் பத்திரப் படுத்தி வையுங்கள். வரலாற்றுச் சான்றுகளாக அமையும். அடுத்தக் கட்டுரையில் கலிங்க நாட்டின் மாபெரும் மன்னன் கலிங்கா காரவேலன் பற்றி தெரிந்து கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.04.2021

சான்றுகள்:

1. Ganjam area was a part of ancient Kalinga which was occupied by Ashok in 261 B.C. - https://ganjam.nic.in/about-district/

2. Chandramani Nayak (2004). Trade and Urban Centres in Ancient and Early Medieval Orissa. New Academic.

3. R. C. Majumdar (1996). Outline of the History of Kalinga. Asian Educational Services.

4. Mano Mohan Ganguly (1912). Orissa and Her Remains--ancient and Medieval: (District Puri).

5. Snigdha Tripathy (1997). Inscriptions of Orissa. I - 5th-8th centuries A.D. Indian Council of Historical Research







09 ஏப்ரல் 2021

கெலிங் சொல்லுக்கு அமைதி இல்லை

தமிழ் மலர் - 09.04.2021

அலைகள் ஓய்வது இல்லை. அந்த அலைகளில் பொங்கிப் பூக்கும் நுரைகளும் ஓய்வது இல்லை. அலைகள் இருக்கும் வரையில் அலை நுரைகளும் ஓய்வது செய்யும்.

அந்த வகையில் மதவாதமும் இனவாதமும் மார்தட்டிப் பிடிவாதம் பிடிக்கும் வரையில் கெலிங் எழும் சொல்லுக்கும் ஓய்வும் இல்லை. ஒழிச்சலும் இல்லை. கொலுசு கட்டி காப்பு கட்டி அழகு பார்க்கவே செய்வார்கள். என்னதான் காட்டுக் கத்தல் கத்தினாலும் சிலரின் காதுகளில் கேட்கப் போவதும் இல்லை. விடுங்கள். திருந்தாத ஜென்மங்கள்.

எப்படியாவது ஓர் இனத்தை இழிவு படுத்த வேண்டும் என்பது அவர்களின் அஜெண்டா. அப்ப்டி இருக்கும் போது நம்முடைய காட்டுக் கத்தலும் கேட்காது. நம்முடைய எதிர் ஒப்பாரிகளும் கேட்காது. வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் சிறுபான்மை இனத்தைச் சீண்டிப் பார்ப்பது ஒரு சிலரின் பொழுது போக்கு.

கெலிங் எனும் சொல் நல்ல ஒரு சொல். நியாயமான சொல். நாணயமான சொல். கலிங்கர்களின் நம்பிக்கைச் சொல். அசோகர் வாழ்ந்த காலத்தில் உருவான சொல். கலிங்கத்தில் அப்போது தொடங்கியது இப்போது இங்கும் தொடர்கிறது.

வரலாறுகள் வரலாறுகளாக இருந்த காலத்தில் கெலிங் எனும் சொல்; வாழ்த்துப் பாவனையில் மலர்ந்து வளர்ந்தது. வரலாறுகள் கோளாறுகளாக மாறிய காலத்தில் வருத்தத்தின் சோதனையில் ஏவுகணைகளாய் மாறிப் பாய்கின்றது. வேதனை.

வெள்ளைச் சாயத்தில் கறுப்புச் சாயம் பூசப் பட்டால் எப்படி இருக்கும். அப்படித்தான் கெலிங் எனும் சொல் கறுப்புச் சாயத்தில் கொச்சைப் படுத்தப் படுகிறது. காலம் செய்த கோலத்தினால் கலிங்கத்தில் களங்கம் கசிகின்றது.

கறையைத் துடைக்க வேண்டியது மலேசியத் தமிழர்களின் வாழ்வியல் கட்டாயம் அல்ல. எதிர்காலச் சந்ததிகளுக்காக இந்தக் காலத்துத் தலைமுறையினர் விட்டுச் செல்ல வேண்டிய தன்மானச் சீதனத்தின் அடையாளம்.

தொடக்கக் கால வரலாற்றில் கெலிங் எனும் சொல் கிழக்கு இந்தியாவின் கலிங்கப் பேரரசுடன் இணைக்கப்பட்டு இருந்தது. அதனால் அந்தச் சொல்லின் பயன்பாடு ஒரு வரையறைக்குள் உட்பட்டதாக இருந்தது. ஒரு நடுநிலையான பாவனையில் நல்ல ஒரு சொல்லாகப் பயன்படுத்தப் பட்டு வந்தது.

ஆனால் பிற்கால வரலாற்றில் அந்தச் சொல்லின் பயன்பாடு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மீது பாயும் ஒரு தரக்குறைவான சொல்லாகத் திரிந்து திசை மாறிப் போனது.

குறிப்பாக மலேசியாவில் அந்தச் சொல்லின் தாக்கம் மிகுதியாகவே வளைந்து நெளிந்து வக்கிரம் பேசத் தொடங்கியது. மன்னிக்கவும். தயிர்ச் சாதத்திற்கு ஊறுகாய் போல அவ்வப்போது தொட்டுக் கொள்ளப் பட்டது.

2015-ஆம் ஆண்டில் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் ஒரு விபத்து. அதில் சிக்கிக் கொண்ட ஒருவருக்கு ஒரு தமிழர் மருத்துவர் உதவி செய்யப் போய் இருக்கிறார். விபத்தில் சிக்கியவர் ’கெலிங் என்னைத் தொட வேண்டாம்’ என்று சொல்லி இருக்கிறார்.

பின்னர் உதவிக்குப் போனவர் ஒரு மருத்துவர் என்று தெரிந்ததும் வருத்தங்களில் திருத்தங்கள். பலருக்கும் தெரிந்த விசயம்.

1960-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் தான், இந்தியர்களை இழிவுபடுத்திப் புண்படுத்தும் கெலிங் எனும் சொல் கொரொனா வைரஸ் போல பரவத் தொடங்கியது. பேராண்மையின் இனவாதத்தில் ஆறாத புண்ணாக மாறி சீழ் பிடிக்கத் தொடங்கியது.

2003-ஆம் ஆண்டில் மலேசிய ஊடகங்களில் கெலிங் எனும் சொல் ஒரு சர்ச்சையாக வெடித்தது. அந்தச் சொல் அவதூறான கேவலமான சொல். அந்தச் சொல்லை டேவான் பகாசா புஸ்தாகா (Dewan Bahasa dan Pustaka (DBP)) தன்னுடைய மலாய் அகராதியில் (Kamus Dewan) சேர்த்தது குற்றம் என்று அந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப் பட்டது.

அந்தச் சொல்லுக்கு எடுத்துக் காட்டுகளாக ’கெலிங் மாபுக் தோடி’ (Keling Mabuk Todi); ’கெலிங் காராம்’ (Keling Karam - சத்தமாக பேசுபவர்) என்று பதிவு செய்து இருந்தது. முட்டாள்தனமான எடுத்துக் காட்டுகள். பின்னர் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டன. காயம் பட்ட கண்களுக்கு சின்ன ஒரு தலைவலி மாத்திரை.

முன்னாள் மூத்த தலைவர் ஒருவரும்; சும்மா சொல்லக் கூடாது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் கெலிங் எனும் ஊறுகாயைத் தொட்டுக் கொள்வது ஒட்டிக் கொண்ட பழக்க தோசம். ஒரு தடவை முன்னாள் பிரதமர் நஜீப்பைப் பார்த்து ’கெலிங் என்ன சொல்வார்... போடா’ என்றார். (What do the ‘keling’ say? Podah!)

சமயங்களில் சிலருக்கு ரொம்பவும் வயதாகி விட்டால் இப்படித்தான். சொந்த ஊரின் அக்கம் பக்கத்துச் சொந்தங்களை மறந்து விடுகிறார்கள். என்ன செய்வது. மனித இயல்புகளில் புத்திக் கோளாறுகள் ஏற்படுவது சகஜம் தானே.

முன்பு காலத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா எனும் சொல் இல்லை. இந்தியர் எனும் சொல்லும் இல்லை. அந்த இரு சொற்களும் மலாயா நாட்டிலும் இந்தோனேசியா நுசந்தாரா பகுதியிலும் புழக்கத்திலும் இல்லை.

இந்தியர்களைக் குறிப்பிடுவதற்குக் கலிங்கா எனும் சொல்லை மட்டுமே பயன்படுத்தப்படுத்தி வந்தார்கள்.

அந்தக் காலத்தில் இந்தியர்கள் கலிங்கா நாட்டில் இருந்து வந்தவர்கள் எனும் பொதுவான கருத்து நிலவி வந்தது. அதனால் இந்தியாவில் இருந்து வந்தவர்களை ஓராங் கலிங்கா (Wang Kalinga) என்று அழைத்து வந்தார்கள்.

எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்பார்கள். அது போல கலிங்கா எனும் சொல்லும் காலப் போக்கில் தேய்ந்து நலிந்து கலிங் என்று காய்ந்து போனது. அப்புறம் நாளாக நாளாக கலிங் எனும் சொல் கெலிங் என்று மாறிப் போனது.

15-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள்; டச்சுக்காரர்கள்; ஆங்கிலேயர்கள் போன்றோர் வணிகம் செய்வதற்கு மலாயாவிற்கும் நுசந்தாரா பகுதிகளுக்கும் வந்தார்கள். நுசந்தாரா என்றால் தென் திரை நாடுகள்.

மஜபாகித் அரசு ஜாவாவை ஆட்சி செய்யும் போது நுசந்தாரா (Nusantara) எனும் சொல் உருவானது. மஜபாகித் அரசிற்கு கப்பம் கட்டிய நாடுகளை நுசந்தாரா நாடுகள் என்று அழைத்து இருக்கிறார்கள்.

பொதுவாகச் சொன்னால் சுமத்திரா, ஜாவா, மலாயா தீபகற்பம், போர்னியோ, சுந்தா தீவுகள், சுலாவசி, மொலுக்கஸ் தீவுகள் போன்றவை நுசந்தாரா என்று அழைக்கப் பட்டன.

அந்த நுசந்தாரா தீவுக் கூட்டத்தில் (Maritime Southeast Asia) வாழ்ந்த மக்கள், இந்தியாவில் இருந்து வியாபாரம் செய்ய வந்த இந்தியர்களை ஓராங் கலிங்கா (Wang Kalingga) என்று அழைத்து இருக்கிறார்கள்.
 
ஐரோப்பியர்கள் தென் திரை நாடுகளுக்கு வந்த பின்னர் தான் இந்தியா; இந்தியர் எனும் சொற்கள் பரவலாகிப் புழக்கத்திற்கு வந்தன. ஆனாலும் கலிங்கா எனும் சொல் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து போனதால் இந்தியா எனும் சொல் அழுத்தமாகப் படரவில்லை.

ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் இந்திய நாட்டு வணிகர்கள்; அரபு நாட்டு வணிகர்கள்; சீனா நாட்டு வணிகர்கள் மலாயாவுக்கு வந்து போய் இருக்கிறார்கள். பண்டமாற்று வணிகத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஏறக்குறைய 2000 - 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அவர்கள் மலாயா தீபகற்பத்திற்கு வந்து போய் இருக்கிறார்கள்.

ஆனால் அரபு, சீனா நாட்டு வணிகர்கள் இந்தியா எனும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. இந்தியர்கள் எனும் சொல்லையும் பயன்படுத்தவில்லை.

இந்தியாவைக் குறிப்பிட்டுச் சொல்ல கலிங்கா எனும் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தியர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல கலிங்கர்கள் எனும் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஒருவரைச் சுட்டிக் காட்ட கெலிங்கா (Kelinga) எனும் சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் அந்தச் சொல் பயன்படுத்தப் பட்டது.

தென் திரை நாடுகளில் இந்தியா எனும் ஆங்கிலச் சொல் அறிமுகம் ஆவதற்கு முன்பு, இந்தியா எனும் நாட்டைக் குறிப்பதற்கு கெல்லிங் (Keling) எனும் சொல்லையும் ஜம்பு தீவு (Jambu Dwipa) எனும் சொல்லையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மலாய், இந்தோனேசிய மொழிகளில் தான் அந்தச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்திய துணைக் கண்டத்தைக் குறிப்பிடுவதற்கு பெனுவா கெலிங் (Benua Keling) எனும் சொல் தொடரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மற்ற மற்ற நாடுகளில் அந்தச் சொல்லின் பயன்பாட்டைப் பார்ப்போம். கம்போடியாவின் கெமர் மொழியில் கிளெங் (Kleng) எனும் சொல் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பொருள் வேறு. ’அக்குள்’ என்று பொருள் படுகிறது.

அதே போல தாய்லாந்தின் தாய் மொழியில் கெலிங் எனும் சொல் பயன்பாட்டில் உள்ளது. கெய்க் (Khaek) என்று அழைக்கிறார்கள். ’விருந்தினர்’ என்று பொருள் படுகிறது.

இருந்தாலும் கிளேங் எனும் மூலச் சொல்லில் இருந்து தான் அந்த இரு மொழிகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.

மலாய் வரலாற்று இலக்கியமான செஜாரா மெலாயு (Sejarah Melayu) கெலிங் எனும் சொல்லை எடுத்துக் காட்டுகின்றது. அதன் புராணக் கதைகளில் ராஜா சூலானை (Raja Shulan) கலிங்காவின் மன்னன் என்று குறிப்பிடுகிறது. அவர் தன் சந்ததியினரான ராஜா சுலானுடன் (Raja Chulan) சீனாவைக் கைப்பற்றச் சென்றதாகச் சொல்கின்றது.

இங்கே ஒன்றைக் கவனியுங்கள். ராஜா சூலான் எனும் பெயரும் ராஜா சுலான் எனும் பெயரும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளன. செஜாரா மெலாயு இலக்கியத்தில் அப்படித்தான் சொல்லப் படுகிறது. ஆனால் வேறு வெறு அர்த்தங்கள் கொண்டவை. வேறு வேறு நபர்களின் பெயர்கள்.

அந்தப் பதிவுகள் உண்மையாக இருக்குமானால் கெலிங் எனும் சொல்லை வேறு மாதிரியாகவும் பார்க்க வேண்டி உள்ளது.

கி.பி 1025-ஆம் ஆண்டில் ஸ்ரீ விஜய பேரரசின் மீது இராஜேந்திர சோழரின் படையெடுப்பு நடந்தது. அதைப் பற்றி செஜாரா மெலாயுவில் சொல்லப் படுகிறது. அங்கே கெலிங் எனும் சொல் வருகிறது. அந்தச் சொல் சோழர்களைக் குறிப்பிடுவதாக இருக்கலாம். கலிங்கத்தைக் குறிப்பிடுவதாக அமையாது.

செஜாரா மெலாயுவில் சில குறிப்புகள் மிக அண்மைய கால நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றன. மலாக்கா சுல்தானகத்தின் (Melaka Sultanate) காலத்தில் ஹாங் நாடிம் (Hang Nadim) என்பவர் கலிங்கத் துணைக் கண்டத்திற்கு (Benua Keling) வருகை மேற்கொண்டதாகச் சொல்கிறது.

ஹாங் நாடிம் என்பவர் இளம் மலாய்ச் சிறுவன். சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் தெமாசெக்கை வாள்மீன்கள் தாக்கிய போது கிராம மக்களை ஹாங் நாடிம் காப்பாற்றியதாக வரலாறு. அதைத் தான் செஜாரா மெலாயு சுட்டிக் காட்டுகிறது.

செஜாரா மெலாயுவில் சொல்லப்படும் கலிங்கத் துணைக் கண்டம் என்பது ஒட்டு மொத்த இந்தியாவைக் குறிப்பிடுவதாக அமைகின்றது. ஏன் என்றால் அப்போது கலிங்க நாட்டின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்து போய் விட்டது.

அசோகரின் படையெடுப்பு; அதன் பின்னர் மொகலாயர்களின் படையெடுப்பு. அதனால் கலிங்கம் பலகீனமான நிலையில் இருந்தது. கலிங்க நாடு பெரிய ஒரு சக்தியாக விளங்கவில்லை.

ஹிக்காயாட் ஹங் துவா (Hikayat Hang Tuah) எனும் வரலாற்றுப் படிவத்தில் ஹங் துவாவின் இந்தியப் பயணம் பற்றி ஒரு முழு அத்தியாயமே உள்ளது. அந்த அத்தியாயத்தில் கலிங்கா எனும் சொல் பயன்படுத்தப் படவே இல்லை. கலிங்கம் என்பதற்குப் பதிலாக ‘பெனுவா கெலிங்’ (Benua Keling) எனும் சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன.

சான்று: http://www.sabrizain.org/malaya/keling.htm

'கெலிங்' எனும் சொல் கலிங்க நாட்டில் இருந்து வந்த சொல்லாக இருக்கலாம். கலிங்கா நாடு ஒரிசா பகுதியில் உள்ளது. இருந்தாலும் ஆரம்ப காலத்தில் இருந்தே தென்னிந்தியர்களைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அது ஒரு வகையில் தென்னிந்தியர்களின் துரதிர்ஷ்டவசமே!

மலாய் மொழியில் 'பெங்காலி' என்ற சொல்லிலும் அதே போன்று ஒரு தவறு நடந்து உள்ளது. பஞ்சாபியர் என்பவர்களைப் பெங்காலிகள் என்று மலாய் மொழியில் சொல்லப் படுகிறது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. பஞ்சாபியர்கள் வங்காளிகள் அல்ல. அவர்கள் சீக்கிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள்.

அதே போல ஒரு தவறுதான் தென் இந்தியர்களுக்கும் நடந்து இருக்கிறது. செஜாரா மெலாயு, தென் இந்தியர்களைக் கலிங்கர்கள் என்று தவறாகச் சுட்டிக் காட்டுகிறது. உண்மையில் அவர்களைத் தென் இந்தியர்கள் என்றே பதிவு செய்து இருக்க வேண்டும்.  

செஜாரா மெலாயுவின் சிற்சில முரண்பாடுகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் மேலும் விளக்கம் தருகிறேன். சரி.

மிக மிகப் பழங்காலத்தில் இந்தியா முழுவதும் ஐம்பத்தாறு நாடுகள் இருந்ததாக வரலாற்றுப் புராணங்கள் சொல்கின்றன. அங்கம், வங்கம், கலிங்கம், அவந்தி, அயோத்தியா, கோசலம், காந்தாரம், காம்போஜம், பாஞ்சாலம் என்று நீண்ட ஒரு பட்டியல். அதில் கலிங்கம் எனும் சொல் வருகிறது. கவனியுங்கள்.

கெலிங் எனும் சொல் எப்படி உருவானது. அந்தச் சொல்லின் பின்னணி என்ன? வரலாற்று ஏடுகளில் கெலிங் எனும் சொல் எப்படி வந்தது? கடந்த நூறாண்டுகளில் தமிழர்கள் ஏன் கெலிங் என்று அழைக்கப் பட்டார்கள்?

இதைப் பற்றி ஓர் ஆய்வே இந்தக் கட்டுரைத் தொடர். கெலிங் எனும் சொல் நல்ல ஒரு சொல் என்பதை இந்தத் தொடரின் மூலம் உலகத்திற்குத் தெரியப் படுத்துவோம். அதுவே நம் அடுத்த தலைமுறைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் சீதனமாக அமையும் என்று நம்புவோம். இதன் தொடர்ச்சி நாளை இடம் பெறும்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.04.2021

சான்றுகள்:

1. Singaravelu Sachithanantham (2004). The Ramayana Tradition in Southeast Asia. Kuala Lumpur: University of Malaya Press.

2. Sastri, Nilakanta (1 January 1939). Foreign Notices of South India: From Megasthenes to Ma Huan. University of Madras.

3. Malaysian Indians - https://www.wdl.org/en/item/555/

4. Definisi 'keling'" (in Indonesian). Arti Kata - http://artikata.com/arti-333898-keling.html

5. ‘Keling’ and proud of it - https://www.thestar.com.my/opinion/columnists/along-the-watchtower/2016/08/10/keling-and-proud-of-it-the-k-word-deemed-to-be-derogatory-and-offensive-to-the-indian-community-sinc/





 

05 ஏப்ரல் 2021

தீர்ப்பும் தீர்வும் மக்கள் கையில்

இன்று உலகத்தில் நடக்கும் அத்தனை அநீதிகளுக்கும் அநியாயங்களுக்கும் மதவெறியே மூல காரணம். இதைப் பலரும் அறிவார்கள். ஆக எந்த ஒரு நாட்டில் மதம் பெரிதாகப் பேசப் படுகிறதோ; அன்றே அந்த நாட்டின் தலைவிதியும் வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. இது அரசாண்மைக் கலைத் தத்துவங்களில் ஒன்றாகும்.

மலேசியா நல்ல நாடு. சுபிட்சம் நிறைந்த பூமி. புண்ணிய பூமி. எல்லா வளங்களையும் பெற்ற வற்றாத பூமி. ஆனால் அரசியல் அல்பத்தால்; இன வெறியால்; மத மயக்கத்தால்; அந்தப் புண்ணிய பூமியின் அற்புதங்களைச் சீரழித்துச் சின்னா பின்னமாக்கி வருகிறார்கள்.

முந்தைய அரசாங்கத்தின் மிகப் பெரிய ஊழல் நடவடிக்கைகளால் வெறுப்பு அடைந்த மக்கள் வேறோர் அரசாங்கத்தை மாற்றி அமைத்தார்கள்.

அப்படி வந்தர்களும் மக்கள் ஏற்படுத்திய புரட்சியைக் கொஞ்சம்கூட மதிக்காமல் கட்சிக்கு உள்ளேயே காலை வாரி விட்டுக் கொண்டார்கள். சேரக் கூடாத இடத்தில் சேர்ந்தார்கள். பதவிக்காகப் பல துரோகங்களைச் செய்தார்கள். அது அவர்களின் கையாலாகாத் தனங்கள்.

ஓட்டுப் போட்ட மக்கள் பிரதிநிதிகளாகப் பிரகடனம் செய்யப் பட்டவர்களின் அஜாக்கிரதையால், அலட்சியத்தால், அசட்டையால் பின் வாசல் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களும் பல குளறுபடிகளுக்கு இடையில் ஒரு வருடத்தைக் கடந்து வந்து விட்டார்கள்.

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற நினைப்பில்; பதவிக்கு வருகிறவர்களிடம் நாம் எந்த எதிர்பார்ப்பையும் எதிர்பார்க்கக் கூடாது. அதே சமயத்தில் இருபது வருடங்களுக்கு முன்னர் மலேசிய இந்திய மக்களின் கொஞ்ச நஞ்ச சொத்து உடைமைகள் பறிபோனதை மறக்க இயலுமா. காலத்தின் கோலம்.

இந்த அரசியல் சித்து விளையாட்டில் ம.இ.கா. மட்டும் நம் இந்திய மக்களின் நலங்களைக் காக்கும் என்கிற கனவு எல்லாம் காணக் கூடாது. இயலாத காரியம்.

ஒரு தரமான கொள்கை இல்லாத அரசியல்; ஒரு தார்மீகக் கோட்பாடு இல்லாத அரசாங்கம்; எந்த ஒரு நன்மையையும் எந்த ஒரு நலத்தையும் பொதுமக்களுக்குப் பெற்றுத் தரப் போவது இல்லை.

நாட்டின் பெரும்பாலான கருவூலத்தைக் கொள்ளை அடித்தவர்களுக்குச் சட்டம் தண்டனையைக் கொடுத்தது. இருந்தாலும் இன்னமும் அவர்களும் சுதந்திரமாக, சுகமாக வெளியே சுற்றி வருகிறார்கள்.

அதே சமயம் மூக்குக்கு கீழே முகக் கவசத்தை இறக்கி விட்டால் அதற்கு அபதாரமாக ஆயிரம், பத்தாயிரம் என்று எளிய மக்களிடம் பிடுங்கிக் கொள்கிறார்கள்.

பொது மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தான், இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் அவ்வப்போது மாற்றி அமைக்கப் படுகின்றன. தவிர அதிகாரத்தில் உள்ளவர்களுக்காக அல்ல.

எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று நம்மவர்களைப் பற்றிக் கணித்து வைத்து இருக்கிறார்கள். ஏமாந்த சோணகிரிகள் நம்மில் இருக்கும் வரை இனிப்பு என்ன... தேனாறும், பாலாறும் பாசாவில் ஓடுகிறது என்று பாட்சா கட்டுவார்கள். அதையும் நம்பி நம்ம பயப் பிள்ளைகள் பாத்திரம் ஏந்திப் படை எடுப்பார்கள்.

தன்மானம் தன்னில் உணர்த்தாத வரை தமிழன் இந்த நாட்டில் தலை எடுப்பது எங்கணம்?

பயப்படாதீர்கள்... பிரதமர் தந்த இனிப்பான செய்தியால் மயக்கம் எல்லாம் வர வாய்ப்பு இல்லை. தேர்தல் முடிந்ததும் அவர் செய்யும் அதிரடியில் தான் நம் சமூகத்திற்குப் பெரும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

யானையைக் கண்டால் ஆயிரம் அடி நகர்ந்து விட வேண்டும். குதிரையைக் கண்டால் நூறு அடி விலகிவிட வேண்டும். நம்பிக்கைத் துரோகிகளைக் கண்டால் எப்போதுமே எட்டி ஒதுங்கிப் போய் உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் இந்த அரசியல்வாதிகளின் வாய்ப் பந்தல்களையும், வஞ்சனை எண்ணத்தையும் வேரோடு அறுத்துச் சாய்க்கிற அறிவு வேண்டும்.

வாழைப்பழத் தோல்களாக; சோளக் கதிரின் சருகுகளாக; தேவையற்றக் கழிவாக; இந்த நாட்டுத் தமிழர்களை எண்ணி எள்ளி நகையாடும் இந்த நாட்டு அதிகார வர்க்கத்தை நினைத்தால் குமட்டல் வருகிறது.

பிரிட்டிஷ் காலனித்துவத்தில் தென்னிந்தியத் தமிழர்களை இங்கு அழைத்து வந்து அவர்களிடம் பெற வேண்டியதை எல்லாம் பெற்று விட்டார்கள். உறிஞ்ச வேண்டியதை எல்லாம் உறிஞ்சி விட்டார்கள்.

மலாயாவைத் தங்களின் உழைப்பால், உதிரத்தால் உருமாற்றம் செய்து மலேசியாவாக இன்று மலர்ச்சிப் பாதையில் வலம் வருவதற்கு இன்று இந்த நாட்டில் இன்று குவிந்துக் கிடக்கும்... மியான்மர்காரர்களோ, இந்தோனேசியர்களோ, பாகிஸ்தானியர்களோ, பங்காளதேசிகளோ அல்ல.

சத்தியமாக எம் தமிழர்கள் தாம். இந்த நாட்டின் வாரிசுகள் என்று வாய்ச் சவடால் பேசும் பூமி புத்ராக்களும் இல்லை. இது எல்லோருக்கும் தெரியும்.

ஓர் இனம் உழைக்கத் தயாராக இல்லாத போது மற்றோர் இனம் இந்த நாட்டில் எருமை மாடுகளாய், நேரம் காலம் இன்றி, சூடு சொரணை இல்லாமல் அனைத்தையும் பொறுத்து, அடக்கி, அடங்கி, உழைத்து... இன்று நன்றி கெட்ட அரசியல் வாதிகளின் பார்வையில் உதவாக் கரைகளாக உதாசீனப் படுத்தப் படுகிறோம்.

உலகில் மூத்த இனம் இன்று சொந்த நாடு இல்லாமல் உழைப்பைக் கொட்டிய நாட்டிலும் இன்றும் கொத்தடிமைகளாக நடத்தப்படும் கொடூரம்.

இந்த நாட்டில் ஏற்படுகின்றன அரசியல் மாற்றங்களிலும் நம் இந்தியர்களின் மனங்களையே சதா புண்படுத்தி புளங்காகிதம் அடையும் அவலம்.

இதற்கும் நாம் தான் காரணம். நம்மிடையே இல்லாத ஒற்றுமை. சொந்த இனத்தின் மீதே இல்லாத அக்கறை. கூடவே நமக்காக துணிந்து எதையும் கேட்டுப் பெற துணிவு இல்லாத நமது பிரதிநிதிகள்.

அப்படியே கேட்டது கிடைத்தாலும் அவற்றைச் சொந்தத்திற்கும், சுயத்திற்கும் அனுபவிக்கும் சுயநலச் சொருபர்கள்.

தேர்தல் வரும் பின்னே, இனிய செய்திகள் வரும் முன்னே. இந்நாட்டு இந்தியர்களை இளித்த வாயர்களாக நினைத்து, நினைத்து ஒவ்வொரு தேர்தல் வரும் போது எல்லாம் இந்த சோழியன் குடுமிகளின் சொகுசு வார்த்தைகளை, பசப்பு, பித்தலாட்டம் நிறைந்த உரைகளை உதிர்க்கும்... உச்சரிக்கும்.

இந்த நயவஞ்சக நாலாந்திர ஆலாபனைகளில் ஆட்கொள்ளாமல், அறிவு மயங்காமல் இந்த அறிவிப்புகளுக்குப் பின்னால் மறைந்து இருக்கும் மர்ம முடிச்சுகளை ஆழ்ந்த அறிவோடு அவிழ்த்து... இதுநாள் வரை இந்நாட்டில் நம்மவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அத்தனை துரோகத்தையும், திறந்த மனதோடு சீர்தூக்கிப் பார்த்து பாடம் கற்றுக் கொள்வோமாக.

இனிமேலாவது நாமும் சுயநலமாக வாழப் பழகுவோம். ஏகாந்த வார்த்தைகளில் ஏமாந்தது போதும். தேனான அறிவிப்புகளில் நம் தன்மானம் தேய்ந்தது போதும். இனியாவது சுயத்தோடு அறத்தோடும் நமக்கான வாழ்வாதாரத்தில் வாழ்வோம்.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இத்தகைய காரணங்களையும் சொல்லிக் கவலைப் பட்டுக் கொண்டு இருக்கப் போகிறோம். ஒரு ஹிண்ராப்பை உருவாக்கிய நம்மால் இந்த குள்ள நரிகளையும் அடையாளம் கண்டு அலர வைக்க முடியும். மனதில் தீரம் இருந்தால்...

இது ஓர் அட்வைசோ அறிவுறுத்தலோ இல்லை. நம் சமூகம் இந்த நாட்டில் நடத்தப் படும் ஆதங்கத்தின் வெளிப்பாடுதான். அதுவே என்னுடைய இந்தப் பதிவு.

கூடிய விரைவில் 15-ஆவது பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். இதில் யார், யார் சந்தி சிரிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கப் போகிறோம். எல்லாத் தீர்ப்பும் தீர்வும் மக்கள் கையில்.

(சத்யா ராமன்)
05.04.2021