18 ஜூலை 2021

லாவோஸ் பல்லவ அரசர் மகாராஜா ராஜாதரனா

தமிழ் மலர் - 16.07.2021

லாவோஸ் நாட்டு வரலாற்றில் பல்லவர்களின் தாக்கங்கள் மிகுதியாய் உள்ளன. குறிப்பாக லாவோஸ் நாட்டு எழுத்து வடிவங்களில் அந்தத் தாக்கங்களைக் காணலாம். அவர்களின் எழுத்து வரிவடிவங்களில் பல்லவ எழுத்து வரிவடிவங்களே இன்றும் பயன்படுத்தப் படுகின்றன. அந்த அளவிற்குப் பல்லவம் அங்கே வேர் ஊன்றி விழுதுகள் பாய்த்து உள்ளது.

Maharaja Brhat Rajadharana Sri Chudhana

லாவோஸ் நாட்டில் மட்டும் அல்ல. பாலி தீவு எழுத்து வரிவடிவங்களில் (Balinese) பல்லவ எழுத்து வரிவடிவங்கள் தான் பயன்படுத்தப் படுகின்றன.

தவிர பேபாயின் (Baybayin) பர்மியம்; ஜாவானியம்; காவி (Kawi); கெமர் (Khmer); லன்னா (Lanna) லாவோ; மோன் (Mon); புதிய தை லூ எழுத்துக்கள் (New Tai Lue alphabet); [14] சுண்டனியம் (Sundanese); தாய்லாந்து நாடுகளின் வரிவடிவங்களிலும் பயன்படுத்தப் படுகின்றன.

லாவோஸ் நாட்டின் அருகாமையில் சீனா நாடு. இருந்தாலும் பல்லவர்களின் தாக்கங்கள் சீனாவில் குறைவு என்று சொல்லலாம். மிக அருகாமையில் வியட்நாம். அங்கேயும் பல்லவத் தாக்கங்கள் குறைவு. 


லாவோஸ் நாட்டில் பெரும்பான்மை மக்கள் மகாபாரதம்; இராமாயணம் இந்தியப் புராண இதிகாசங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அந்த இதிகாசங்களின் தாக்கங்களை இன்றும்கூட லாவோஸ் நாட்டின் கிராமப் புறங்களில் நன்றாகவே உணர முடிகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இந்தோசீனா நாடுகளுக்கு வணிகம் பார்க்கச் சென்ற பல்லவர்கள், இந்து மதத்தையும் தேரவாத புத்த மதத்தையும் கொண்டு சென்றார்கள் (Theravada Buddhism). அதில் புத்தம் மலர்ந்தது. இந்து மதம் சன்னம் சன்னமாய் மங்கியது.


9-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ஆம் நூற்றாண்டு வரை கம்போடியாவின் கெமர் பல்லவ அரசர்கள் லாவோஸ் நாட்டின் பெரும் பகுதியை ஆட்சி செய்து வந்தார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக லாவோஸ் நாடு, பகுதி பகுதிகளாகப் பிரிந்து சிதறிப் போய்க் கிடந்தது. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து ஓர் ஐக்கிய நாடாக உருவாக்கியவர் பா நிகும் (Fa Ngum) எனும் பல்லவர்.

இவரின் அசல் பெயர் ஸ்ரீ சதான கனயுதா மகாராஜா ராஜாதரனா ஸ்ரீ சுத்தான நகரன் (Somdetch Brhat-Anya Fa Ladhuraniya Sri Sadhana Kanayudha Maharaja Brhat Rajadharana Sri Chudhana Negara). ஏன் இவ்வளவு பெரிய நீண்ட பெயர் என்று தெரியவில்லை. 



அந்தக் காலத்து மன்னர்கள் தங்களின் வீர தீரப் பராக்கிரமங்களைப் பறைசாற்றுவதற்கு அப்படி நீண்ட பெயர்களை வைத்துக் கொண்டு இருக்கலாம். சொல்ல முடியாது.

பா நிகும் எனும் ஸ்ரீ சதான கனயுதா மகாராஜா ராஜாதரனா என்பவர் பல்லவ வம்சாவழியைச் சேர்ந்தவர். இருந்தாலும் பின்னாட்களில் இவரின் பெயர் பா நிகும் என்று மாற்றம் கண்டு லாவோஸ் வரலாற்றில் நிலைத்துப் போனது.

இவர் இப்போது பா நிகும் எனும் பெயரில் தான் லாவோஸ் வரலாற்றில் பிரபலம் அடைந்து உள்ளார்.

பா நிகும் எனும் பல்லவ மகாராஜா ராஜாதரனா தான், லாவோஸ் நாட்டில் லான் சாங் (Lan Xang) எனும் பேரரசை 1353-ஆம் ஆண்டில் உருவாக்கினார்.


மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் பெயர் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் (Samdach Brhat-Anya Phya Vath). இவர் ராஜதரணி ஸ்ரீ சுத்தானம் எனும் சிற்றரசின் (King of Rajadharani Sri Sudhana) அரசராக இருந்தார்.

மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் சம்மாத பிரகதிஞ்ச பைவாதத்திற்கு இரு மனைவியர்.

மூத்தவர் கெமர் பேரரசின் இளவரசியார்.

இளையவர் தாய்லாந்தின் அயோத்தியா பேரரசின் இளவரசியார். அயோத்தியா அரசர் ராமாதிபதி (King Ramadipati of Ayudhaya) என்பவரின் மகள். இரு பெண்களும் இரு நாடுகளின் அரசகுலப் பெண்கள்.

மகாராஜா ராஜாதரனாவின் பாட்டனார் பெயர் சௌனா காம்புங் (Souvanna Khamphong). இவர் லாவோஸ் முவாங் சுவா (Muang Swa) நிலப் பகுதியின் ஆட்சியாளர். இந்த முவாங் சுவா நிலப் பகுதிதான் இப்போது லுவாங் பிரபாங் (Luang Prabang) என்று அழைக்கப் படுகிறது.  தாத்தா, மகன், பேரன் இவர்களின் சுருக்கம்.


1. மகாராஜா ராஜாதரனா ஸ்ரீ சுத்தான நகரன். லாவோஸ் நாட்டு மொழியில் பா நிகும் (Fa Ngum).

2. மகாராஜா ராஜாதரனா தந்தையாரின் பெயர் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் (Samdach Brhat-Anya Phya Vath). லாவோஸ் நாட்டு மொழியில் சாவோ நிகியோ (Chao Fa Ngiao).

3. மகாராஜா ராஜாதரனா தாத்தாவின் பெயர் சௌனா காம்புங் (Souvanna Khamphong).

தாத்தா சௌனா காம்புங்கின் வைப்பாட்டிகளில் ஒருவருடன், மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் நெருக்கமாகப் பழகியதற்காகக் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார். 


இந்தப் பக்கம் 1399-இல் சிங்கப்பூரைப் பரமேஸ்வரா ஆட்சி செய்த போது இப்படித் தானே ஓர் அந்தர்ப்புரத்துப் பெண்ணால் பிரச்சினை ஏற்பட்டது. பெரிய போராக உருவெடுத்தது. பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து மலாக்காவிற்குத் தப்பி வந்தது. ஆக லாவோஸ் நாட்டிலும் அப்படித்தான் 1320-இல் நடந்து இருக்கிறது.

மகாராஜா ராஜாதரனாவின் குடும்பம் கம்போடியத் தலைநகரான அங்கோர் வாட்டிற்குத் தப்பிச் சென்றது. கம்போடியாவில் மகாராஜா ராஜாதரனா வளர்க்கப் பட்டார். பின்னர் அவர் ஒரு கெமர் நாட்டு இளவரசியை மணந்தார்.

1350-ஆம் ஆண்டு வாக்கில் மகாராஜா ராஜாதரனாவும் அவருடைய தந்தையாரும் கம்போடியாவில் ஓர் இராணுவப் படையை உருவாக்கினார்கள். மீகோங் நதி பள்ளத்தாக்கில் ஏராளமான சண்டைகள். பற்பல வட்டார ஆளுமைகள் நிர்மூலம் ஆக்கப்பட்டன. பல குட்டி அரசுகள் அட்ரஸ் இல்லாமல் போயின. அந்தச் சமயத்தில் மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் இறந்தார்.

பின்னர் மகாராஜா ராஜாதரனா தன் படைகளைக் கொண்டு தாத்தா சௌனா காம்புங்கைத் தோற்கடித்தார். அவரின் அரசு கைப்பற்றப்பட்டது. மகாராஜா ராஜாதரனா, அவர் கைப்பற்றிய நிலப் பகுதிகளை எல்லாம் ஒன்றிணைத்தார். 1353-ஆம் ஆண்டு லாவோஸ் எனும் நாட்டை உருவாக்கினார்.

பின்னர் காலத்தில் மகாராஜா ராஜாதரனா எனும் பெயர் பா நிகும் (Fa Ngum) என்று மாற்றம் கண்டு நிலைத்துப் போனது. அசல் மகாராஜா ராஜாதரனா எனும் பெயர் கரைந்து போனது. இருந்தாலும் லாவோஸ் மக்கள் தங்களின் பல்லவப் பின்புலத்தையும்; இந்தியப் பின்புலத்தையும் மறக்கவில்லை.

மகாராஜா ராஜாதரனா தான் லாவோஸ் நாட்டின் முதல் அரசர். இவருக்குப் பின்னர் நிறைய 78 அரசர்கள் லாவோஸ் நாட்டை ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

சம்சேனாதி (Samsenethai);

பூமாதா (Phommathat);

மகாராணி பிம்பா (Phimpha);

சக்கபதி (Chakkaphat);

சௌனா (Souvanna);

சோம்பு (Somphou);

விஷன் (Visoun);

போதிசாரதன் (Photisarath);

சீதாதீர்த்தன் (Setthathirath);

சௌளிந்தன் (Soulintha);

கோமான் (Koumane);

வீரவங்சன் (Voravongsa);

சௌரிகனம் (Sourigna);

இவரின் வாரிசுகளில் கடைசியாக வந்தவர் ஸ்ரீ சாவங்ச வதனா (Savangsa Vatthana). இவர்தான் லாவோஸ் நாட்டின் கடைசிப் பல்லவ அரசர். அவருடைய பெயரின் பொருள்: அண்டத்தின் கடவுளார் புத்தர் (The Buddha is the God of the universe).

இவருடைய முழுப் பெயரைக் கேட்டால் மயக்கம் வருகிறது. (Samdach Brhat Chao Mavattaha Sri Vitha Lan Xang Hom Khao Phra Rajanachakra Lao Parama Sidha Khattiya Suriya Varman Brhat Maha Sri Savangsa Vadhana)

அந்த அரசரின் பெயரில் வரும் ராஜநட்சத்திரம்; பரம சித்த சூரியா வர்மன்; மகா ஸ்ரீ வதனம் எனும் சொற்கள் மட்டுமே நமக்குத் தெரிந்த சொற்களாகத் தெரிகின்றன. அவை அனைத்தும் புத்தரைப் புகழ்ந்து உரைக்கும் சொற்களாகும்.

அந்தப் பெயரில் தமிழும் சமஸ்கிருதமும் கலந்து வருகின்றன. அவை லாவோஸ் மொழிச் சொற்கள். அதன் மூலம் இந்தியத் தாக்கத்தை நம்மால் ஓரளவிற்குக் கணிக்க முடிகின்றது.

லாவோஸ் ஓர் அழகிய நாடு. அற்புதமான நாடு. அமைதியின் அணிகலனாய் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு. இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் சீர் சிறப்புகளைச் சீதனமாக வாரி இறைத்துவிட்டுச் சென்று இருக்கும் நாடு. வண்ணங்கள் கொழிக்கும் வசீகர நாடு.

எங்கு பார்த்தாலும் கரும் பச்சையில் கானகத்து மலைகள். இயற்கை எழில் கொஞ்சும் பனிச்சாரல் மேகங்கள். ஆழ்மஞ்சள் மீகோங் நதிக்கரைக் கரைகளின் (Mekong River) அழகிய செம்மண் காடுகள்.

இயற்கை அன்னை நேரம் காலம் பார்க்காமல் செதுக்கியச் சிற்பங்களாய் மலைக் குன்றுகள். சுவர்களில் புத்த ஜாதக ஓவியங்கள். மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள். காடுகளின் பரிசுகள். கானகத்தின் நிறை கொடைகள்.

இடை இடையே கோபுர வாசல்களாய் சுண்ணாம்புக் குகைகள். அக்கம் பக்கத்தில் பச்சை பசேல் கானகத்து ஓவியங்கள். நாடு முழுவதும் தோகை விரித்தாடும் வயல்காட்டுப் புல்வெளிகள். கூடவே தங்க ரத நெல்மணிக் கதிர்கள். வர்ணனை போதுங்களா. நேரில் பார்த்தால் உண்மை தெரியும்.

ஆனாலும் அங்கே வலிமிகுந்த கடந்த கால நினைவுகள். முதலில் பிரெஞ்சுக்காரர்களின் சுரண்டல்கள். அடுத்து ஜப்பானியர்களின் மிரட்டல்கள். அடுத்து வியட்நாம் போரின் வேதனைகள். அடுத்து பாத்தட் லாவோ கம்யூனிஸ்டுகளின் நரபலிகள். அந்த வேதனைகளை லாவோஸ் மக்கள் இன்றும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாவம் அவர்கள்.

உலகில் அதிகமான குண்டுகளைத் தனக்குள் புதைத்துக் கொண்டு வாழும் நாடு லாவோஸ். அந்த நாட்டுத் துயரின் வேதனைத் துளிகள் அன்றாடம் கண்ணீர்க் கடலாய்க் காம்போதிகளைப் பாடிக் கொண்டு இருக்கின்றன. எங்கோ சில இடங்களில் அம்சவர்த்தனிகளைக் கேட்கலாம். சன்னமாய் பைரவிகளையும் கேட்கலாம். சரி.

1975-ஆம் ஆண்டில் பாத்தட் லாவோ (Pathet Lao) கம்யூனிஸ்டுகள் லாவோஸ் நாட்டைக் கைப்பற்றினார்கள். புதிதாக வந்த புரட்சி அரசாங்கம் அரச குடும்பத்தை ஒரு தடுப்பு முகாமில் அடைத்து வைத்தது. அத்துடன் லாவோஸ் நாட்டில் 600 ஆண்டுகால மன்னராட்சியும் முடிவிற்கு வந்தது.

1978-ஆம் ஆண்டில் லாவோஸ் மன்னர் ஸ்ரீ சாவங்ச வதனா; மகாராணி காம்பூய் (Queen Khamphoui); பட்டத்து இளவரசர் சாவாங் ஆகிய மூவரும் மலேரியா நோயினால் இறந்து விட்டதாகக் கம்யூனிஸ்டு அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அந்தச் செய்தி தவறானது என பின்னர் தெரிய வந்தது. கட்டாய உழைப்பு;  பட்டினியால் அவதிப்பட்டு அவர்கள் இறந்து இருக்கலாம்.

அதன் பின்னர் லாவோஸ் நாட்டில் அரச பரம்பரை மறைந்து போனது. இருந்தாலும் லாவோஸ் மக்கள் தங்களின் இந்தியப் பின்புலத்தை மறக்கவில்லை. இந்திய இதிகாசங்களின் பிரதான மாந்தர்களுக்கு மரியாதை மதிப்பு கொடுக்கும் வகையில் அஞ்சல் தலைகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த நாட்டில் 67 விழுக்காடு புத்த மதம். 30 விழுக்காடு நாட்டுப்புற ஆன்மீகவாதங்கள் (animism). ஒரே ஒரு விழுக்காட்டு தான் இந்து மதத்தினர்.

இருந்தாலும் பாருங்கள்... இந்திய இதிகாசங்களான மகாபாரதம்; இராமாயணம் தொடர்பான கதாமாந்தர்களுக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டு இந்து மதத்திற்குப் பெருமை செய்து இருக்கிறார்கள்.

இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் சரஸ்வதி தேவிக்குத் தான் அதிகமான அஞ்சல் தலைகளை வெளியிட்டு இருக்கிறார்கள். 1955-ஆம் ஆண்டில் இராமர், சீதை, இராவணன், அனுமான் ஆகியோரைச் சித்தரிக்கும் 6 அஞ்சல் தலைகளை வெளியிட்டார்கள்.

1969-ஆம் ஆண்டில் லாவோஸ் மீண்டும் 8 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது. அதில் இராமாயணத்தின் காட்சிகள் இடம் பெற்றன. 1971-ஆம் ஆண்டில் மற்றோர் அஞ்சல் தலையை வெளியிட்டது. அதில் விஷ்ணுவின் மீன் அவதாரம் அனுமனுடன் சண்டையிடுவதைச் சித்தரிக்கிறது.

1974-ஆம் ஆண்டில் சரஸ்வதி, இந்திரன் மற்றும் பிரம்மா ஆகியோரைச் சித்தரிக்கும் 3 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது. 2004-ஆம் ஆண்டில் இராமாயணத்தின் 4 காட்சிகளைக் கொண்ட 4 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது.

2006-ஆம் ஆண்டில் இலவகுசன், இராமர், சீதை, இராவணன் மற்றும் அனுமான் ஆகியோரைச் சித்தரிக்கும் 5 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது. அண்மையில் விநாயகர் படத்தையும் அஞ்சல் தலையாக வெளியீடு செய்து உள்ளது.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல்லவர்கள் லாவோஸ் நாட்டிற்கு வந்தார்கள். வாழ்ந்தார்கள். வரலாற்றில் இருந்து மறைந்தும் போனார்கள். இருந்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற இதிகாசங்களையும்; இதிகாசப் படிமங்களையும்; இதிகாசப் பண்புகளையும் லாவோஸ் மக்கள் மறக்கவில்லை. மறக்காமல் மரியாதை செய்து வருகிறார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
16.07.2021

சான்றுகள்:

1. Coedes, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.

2. Sanda Simms, ch. 3, "Through Chaos to a New Order", in The Kingdoms of Laos (London: Taylor & Francis, 2013).

3. P.C. Sinha, ed., Encyclopaedia of South East and Far East Asia, vol. 3

4. Askew, Marc. (2010) [2007]. Vientiane : transformations of a Lao landscape. Logan, William Stewart, 1942–, Long, Colin, 1966–. London: Routledge.


பின்னூட்டங்கள்

Sathya Raman: வணக்கம் சார். உங்கள் பதிவுகளிலேயே அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு எழுதிய கட்டுரை இதுவாகத்தான் இருக்கும்.

கடந்த நூற்றாண்டுகளில் இந்த பெயர் வைப்பதில் ஏன் இவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. சின்னதாய், சிக்கனமாய் பெயர் வைக்க தெரியாத மனிதர்களே அன்று. அய்யய்யோ எவ்வளவு பெரிய நீளமான பெயர்கள் மனதில் ஒரு மண்ணும் பதியவில்லை போங்கள்.

எதுவாயிலும் லாவோஸ் மக்களின் நன்றியுணர்வை நினைக்கையில் மனம் மெய்சிலிர்க்கவே செய்கிறது.
 
நீண்ட பதிவு அதிக அக்கறை எடுத்து எழுதிய பதிவு. அதே சமயம் சில நீண்ட பெயர்களை சென்சார் செய்யுங்கள். வேண்டும் என்றால் நீங்களே நிக் நேம் வையுங்கள்.

ஒரு வரலாற்று பதிவில் இது கூடாதுதான். விதி மீறிச் செல்லும்தான். உங்கள் வாசகர்களின் ஞாபக சக்தியையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுதல் நல்லது.
இல்லாவிட்டால் "யப்பா இப்பவே கண்ணை கட்டுதேன்னு" வடிவேலு வசனத்தை முணுமுணுப்பார்கள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
உண்மைதான் சகோதரி. இந்த மாதிரியான வரலாற்றுக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்னால் நிறைய சான்றுகளைத் தேடி எடுக்க வேண்டும். இந்தக் கட்டுரைக்கான சில சான்றுகள் வியட்நாமிய மொழியில் இருந்தன.

ஆக வியட்நாமிய மொழியில் இருந்ததை கூகிள் மொழிபெயர்ப்பு கருவியின் மூலமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பின்னர் தமிழ் மொழிக்கு கொண்டு வந்தேன். சிரமம் தான். ஆனால் தமிழர்கள் சார்ந்த வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றால் சிரமத்தைப் பார்க்க இயலாது.

நம் இலக்கு, நம் இனம் வரலாற்றில் பின்தங்கிய இனம் அல்ல என்பதை உலகத்திற்குச் சொல்ல வேண்டும். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்கின்றோம்.

வியட்நாமிய பல்லவ அரசர்களின் பெயர்கள் மிக நீளமானவை. ஏன் அப்படி வைத்துக் கொண்டார்கள் என்று ஆராய்ந்து பார்த்தேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடிகிறது.

எவ்வளவுக்கு எவ்வளவு பெயர் நீளமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடுதலாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்து உள்ளது. அதனால் பெயரை நீளமாக வைத்துக் கொண்டார்கள்.

தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க சகோதரி. மீண்டும் சந்திப்போம்.

Raghawan Krishnan: Awesome Mk..Great.keep up this momentum.

[6:19 am, 19/07/2021] Raghavan SRT 5: Dear SRT friends. Our Beloved Brother Muthu Krishnan has been doing a lot of Research in the field of our Indian History in a GLOBAL Atmosphere. We are very PROUD of him. During our Get together we shall be taking Fruitful Decisions pertaining his Wonderful RESEARCH. God Bless All of Us Long Life. BE SAFE all the time. Be United and be Cheerful SRTV.

[6:20 am, 19/07/2021] Raghavan SRT 5: SRTV is the Best.

[7:14 am, 19/07/2021] Vimala Nair: Wow.. Mr. MK, lots of research on Hindu civilazation. Need to print it in simple  English n Tamil also... Its our history.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: வணக்கம் சகோதரர் ராகவன் அவர்களே...

பல்லவர் என்பவர் தமிழர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் உறுதி செய்து விட்டனர். 650 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள். அந்த வகையில் தமிழர்கள் சார்ந்த உலக வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

வியட்நாமில் பாண்டியர்களும் பல்லவர்களும் பல நூறு ஆண்டுகளாக ஆட்சி செய்து உள்ளனர். பலருக்கும் தெரியாத தகவல். தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் தமிழ்நாட்டைப் பற்றியே தீவிரமாக ஆய்வு செய்கின்றனர். குறை காணவில்லை.

இந்தப் பக்கம் இந்தோசீனா, இந்தேனேசியா போன்ற பகுதிகளைப் பற்றி ஆய்வு செய்வது குறைவு. ஆக மலேசியாவில் வாழும் தமிழர்கள் தான் ஆய்வு செய்ய முன்வர வேண்டும்.

நம் மலாயா தமிழர் இனம் வரலாற்றில் பின்தங்கிய இனம் அல்ல என்பதை உலகத்திற்குச் சொல்ல வேண்டும். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்கின்றோம். இயன்ற வரையில் தகவல்களைச் சேகரித்து நம் அடுத்த அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்வோம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் >>>> Vimala Nair: தங்களின் அன்பான ஆதரவான சொற்களுக்கு நன்றிங்க சகோதரி. நூலாக வெளியிடுவோம்.

தனசேகரன் தேவநாதன்: நேற்று இரவு தான் கட்டுரையைப் படித்தேன். ஒரு கேள்வி ஐயா. நம்நாட்டு நிலை நாம் அறிந்ததே. தமிழ் நாட்டில் தற்சமயம் இந்த வரலாறுகள் மாணவர்களுக்கு போதிக்கப் படுகிறதா?

பேச்சாளர்கள் சிலர் இதைத் தொட்டுப் பேசுவது உண்டு. தமிழ்நாட்டுப் பாட நூல்கள் இந்தச் சரித்திரத்தை என்னதான் செய்கிறார்கள். சற்று விளக்க வேண்டுகிறேன் ஐயா. நன்றி.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பதிவிற்கு நன்றி தனா. அங்கே அவர்களுக்கு ஆயிரத்தெட்டு அரசியல் பிரச்சினைகள். இங்கே 74 அமைச்சர்களை வைத்துக் கொண்டு நாம் அவஸ்தை படவில்லையா.

அந்த மாதிரி அங்கே திண்ணைக்குத் திண்ணை அரசியல் வாக்குவாதங்கள். அதற்கே நேரம் சரியாக இருக்கும். இதில் நம்ப மலாயா தமிழர்களை நினைத்துப் பார்க்க நேரம் கிடைக்காது.

தவிர தென்கிழக்காசிய வரலாற்றைப் போதிக்கிறார்களா என்று தெரியவில்லை ஐயா. இருக்கிற தமிழ்ச் சொற்களைத் தூய்மை படுத்துகிறேன் என்று சொல்லி இல்லாமல் செய்வதற்கே அவர்களுக்கு நேரம் போதாமல் இருக்கலாம். பட்சி சொன்னது.

அடியேன் மலாயாவில் பிறந்தவன். மலேசியத் தமிழ்ப்பள்ளிகளும் என்னுடன் பிறந்தவை. என் வீட்டுக் குஞ்சுகள் எப்போதுமே பொன் குஞ்சுகள். நன்றிங்க ஐயா.

 

வியட்நாம் சம்பா பேரரசர் பத்திரவர்மன்

தமிழ் மலர் - 17.07.2021

இந்த உலகில் இந்தியர் அல்லாத இந்து மக்கள், இரண்டே இடங்களில் தான் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியக் கலாசாரப் பின்னணியில் 1,600 ஆண்டுகளாக இந்து மதத்தைப் பின்பற்றி வருகின்றார்கள். இந்து மதத்தை ஏன் பின்பற்றி வருகிறோம் என்று அவர்களுக்கே தெரியாமல் இந்து மத வழிபாடுகளையும் பின்பற்றி வருகிறார்கள். (Two surviving non-Indic indigenous Hindu peoples in the world)
 
Balamon Cham Hindus
 
இந்தோனேசியா பாலி தீவில் ஒரு பிரிவினர். பாலினிய இந்துக்கள் (Balinese Hinduism).

அடுத்த பிரிவினர் வியட்நாம் நின் துன் மாநிலத்தில் (Ninh Thuan Province) பலமான் சாம் (Balamon Cham) எனும் பூர்வீக இந்து மக்கள். இவர்களைச் சாம் இந்துக்கள் (Balamon Cham Hindus) என்று அழைக்கிறார்கள். இவர்களின் பெண்கள், நெற்றியில் பொட்டு வைக்கும் பாரம்பரிய பழக்கம் இன்றும் சில இடங்களில் உள்ளன.

சம்பா அல்லது சியோம்பா அரசு (Champa or Tsiompa) என்பது முன்பு காலத்தில் வியட்நாமில் இருந்த பேரரசு. ஆனாலும் சின்னச் சின்ன அரசுகளின் ஒரு கூட்டு அரசாகும். சம்பா அரசு பாண்டியர்கள் அமைத்த முதல் மூத்த அரசு. அதுவே பின்னாட்களில் பல்லவர்களின் பெரிய பேரரசாக மாறியது.

மறுபடியும் சொல்கிறேன். சம்பா அரசு என்பது பாண்டியர்கள், வியட்நாமில் அமைத்த முதல் அரசு. அதுதான் சம்பா பேரரசு (Kingdom of Champa: கி.பி. 192 – கி.பி. 1832). சம்பா என்றால் சமஸ்கிருத மொழியில் சண்பகம் (campaka) என்று பொருள். முதன்முதலாக அசல் சம்பாவைத் தோற்றுவித்தவர் ஸ்ரீ மாறன் (Sri Mara was the founder of the kingdom of Champa). வியட்நாமிய பெயர் கூ லியன் (Khu Lien). தமிழகப் பதிவுகள் திருமாறன் பாண்டியன் என்று சொல்கின்றன.

கி.பி. 100-ஆம் ஆண்டுகளில், சம்பா நிலப் பகுதிகளைச் சீனாவின் ஹான் வம்சாவழியினர் (Han Dynasty) ஆளுமை அதிகாரம் செய்து வந்தனர். சம்பா மக்களுக்கு வரி வட்டி நெருக்கடிகள். அதனால் ஒரு கட்டத்தில் சீனாவை எதிர்த்து ஸ்ரீ மாறன் போர் செய்தார். வெற்றி பெற்று சம்பாவைக் கைப்பற்றினார். ஸ்ரீ மாறன் தான் சம்பா பேரரசைத் தோற்றுவித்த முதல் பாண்டிய மன்னர்.

அதன் பின்னர் சம்பா அரசு உடைந்து போனது. உடைந்து போன அரசை ஒரு கூட்டு அரசாகத் தோற்றுவித்தவர் பத்திரவர்மன் (Bhadravarman). இவருடைய வீயட்நாமிய பெயர் பாம் ஹோ டாட் (Pham Ho Dat). பட்டப் பெயர் தர்மமகாராஜா பத்திரவர்மன் (Dharmamaharaja Sri Bhadravarman I).

இவரின் ஆட்சிக்காலம் கி.பி. 349 - கி.பி. 361. இவர்தான் சிம்மபுரம் (Simhapura - Lion City) எனும் நகரத்தை உருவாக்கியவர். இப்போது இந்த நகரம் திரா கியூ (Tra Kieu) என்று அழைக்கப் படுகிறது.

பத்திரவர்மன் தன் கடைசி காலத்தில் இந்தியாவிற்குச் சென்று கங்கை நதிக் கரையில் வாழ்ந்ததாகவும் வியட்நாமிய வரலாறு சொல்கிறது.


சம்பா அரசிற்கு முன்பு காலத்தில் செண்பகா என்று பெயர் இருந்து இருக்கலாம். செண்பகம் எனும் சொல் சம்பா என்று மாற்றம் கண்டு இருக்கலாம். வரலாற்று ஆசிரியர்கள் கீழ்க்காணும் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்.

சம்பா எனும் பெயர் சம்பகா எனும் சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது. செண்பகா என்பது செண்பக மலரைக் குறிக்கிறது. மணம் வீசும் மலர்களால் அறியப்படும் ஒரு பூக்கும் தாவரம். பூவின் பெயரைச் சொல்லும் போதே நெஞ்சத்தில் நறுமணத்தை நிறைக்கும் தன்மை இந்த மலருக்கு உண்டு.

ஆங்கிலப் பெயர் (champaca); தமிழ்ப் பெயர் செண்பகம். இரண்டுமே ஜம்பகா என்ற வடமொழிச் சொல்லில் இருந்து உருவானவை தான். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. 


மக்னோலியா குடும்பத்தைச் சார்ந்த இதன் பழைய அறிவியல் பெயர் Michelia champaca. புதிய பெயர் Magnolia champaca. செம்பகம் என்ற பெயரில் ஒரு குயில் இனம் உள்ளது. பிலிப்பைன்ஸ்; தமிழீழம்; ஆகியவற்றின் தேசியப் பறவை செண்பகம் ஆகும். சரி.

சம்பா அரசைத் தோற்றுவித்த பத்திரவர்மனுக்கு முன்னதாகவே பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

அவர்களில் முதலாவதாக ஆட்சி செய்தவர் திருமாறன் பாண்டியன் என்று வியட்நாமிய வோ - கான் கல்வெட்டு (Vo Canh inscription) சொல்கிறது. (The oldest Sanksrit inscription discovered in Vietnam mentions the name of Sri Maran. The inscription is known as the Vo-Canh inscription.) ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.


தென்கிழக்கு ஆசியாவில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான சமஸ்கிருதக் கல்வெட்டு. வோ-கான் கல்வெட்டு ஆகும்.

1885-ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டின் நா திராங் (Nha Trang) நகரில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள வோ - கான் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தக் கல்வெட்டில் இப்படி ஒரு வாசகம் வருகிறது. ”ஆபரணம் ... ஸ்ரீ மாறனின் பேரன் மகளின் குடும்பத்தின் மகிழ்ச்சி... இதன் மூலம் உறுதி செய்யப் படுகிறது.” 


இந்தோனேசியாவின் மஜபாகித்; ஸ்ரீ விஜயம்; சிங்காசாரி; மத்தாரம் போன்று சம்பா பேரரசும் அந்தக் காலக் கட்டத்தில் பெரிய ஓர் அரசு.

இந்தியாவும் சீனாவும் இதனிடம் பிரச்சினை பண்ணாமல் சற்றே ஒதுங்கி இருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

இன்றைய மத்திய வியட்நாம்; தெற்கு வியட்நாம் கடற்கரை முழுவதும் கி.பி 2-ஆம் நூற்றாண்டு தொடங்கி 19-ஆம் நூற்றாண்டு வரையில் சம்பா பேரரசின் அதிகாரம். படர்ந்து விரிந்து ஆளுமை செய்து இருக்கிறது. 


1. சம்பா பேரரசு: முதலாவது தலைநகரம் சிம்மபூரம் (Simhapura - 4th century to the 8th century CE)

2. சம்பா பேரரசு: இரண்டாவது தலைநகரம் இந்திரபுரம் (Indrapura கி.பி 875 – கி.பி 978)

3. சம்பா பேரரசு: மூன்றாவது தலைநகரம் அமராவதி விஜயா (Amaravat Vijaya கி.பி 978 – கி.பி 1485)

4. சம்பா பேரரசு: (கௌதாரம் சிற்றரசு - Kauthara Polity) நான்காவது தலைநகரம் கௌதாரம் (Kauthara கி.பி 757 - கி.பி 1653)

5. சம்பா பேரரசு: (பாண்டுரங்கா சிற்றரசு - Panduranga Polity) ஐந்தாவது தலைநகரம் பாண்டுரங்கா (Panduranga கி.பி 757 - கி.பி 1832)


1832-ஆம் ஆண்டு சம்பா பேரரசு இப்போதைய வியட்நாமிய அரசாங்கத்துடன் இணைக்கப் பட்டது. சுருக்கமாக மீண்டும் சொல்கிறேன்.

சம்பா அல்லது சியோம்பா அரசு கி.பி 1832-ஆம் ஆண்டில் வியட்நாமிய பேரரசர் மின் மங் என்பவரால் இணைக்கப்பட்ட வியட்நாமிய தெற்குப் பகுதி ஆகும்.

வியட்நாமுடன் இணைக்கப் படுவதற்கு முன்பு சம்பா அரசு தனியாக இயங்கி வந்தது., கி.பி. 2-ஆம் நூற்றாண்டு தொடங்கி 1832-ஆம் ஆண்டு வரை, மத்திய வியட்நாம்; தெற்கு வியட்நாம் கடற்கரை முழுவதும் பரவி இருந்தது. சின்னச் சின்ன சாம் அரசுகளின் தொகுப்பு தான் சம்பா அரசு ஆகும்.


இந்தச் சம்பா அரசை, சமஸ்கிருத மொழியில் நகாரா சாம்பா என்றும் கெமர் மொழியில் சாமிக் என்றும் அழைத்தார்கள். வியட்நாமில் சில இடங்களில் இன்னும் அப்படித்தான் அழைக்கப் படுகிறது.

கம்போடிய கல்வெட்டுகளில், சாம் பா என்றும்; வியட்நாமிய மொழியில் சியாம் தான் (Chiêm Thanh) என்றும்; சீனப் பதிவுகளில் 'ஜாஞ்சாங்' என்றும்; குறிப்பிடப்பட்டு உள்ளது.

இப்போதைய நவீன வியட்நாம் மக்களும்; கம்போடியாவின் சாம் மக்களும் இந்த முன்னாள் சம்பா அரசின் எச்சங்கள் ஆவார்கள். அவர்கள் சாமிக் மொழியைப்ப் பேசுகிறார்கள். சரி. இந்து மதம் எப்படி இங்கே வேர் ஊன்றியது. அதையும் பார்ப்போம்.


முன்பு காலத்தில் சம்பா அரசிற்கும் கம்போடியாவிற்கும் இடையில் அடிக்கடி போர்கள். இருந்தாலும், இரு நாடுகளும் வர்த்தகத்தில் சுமுகமாய் ஈடுபட்டு வந்தன. அதனால் கலாசார தாக்கங்கள் இரு திசைகளில் இருந்தும் சுமுகமாய் நகர்ந்தன. இரு நாடுகளின் அரச குடும்பங்களும் அடிக்கடி திருமண உறவுகளைப் பரிமாறிக் கொண்டன.

ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு போன்றவை அந்தக் காலத்தில் சக்தி வாய்ந்த கடல் பேரரசுகள். அவற்றுடன் சம்பா அரசும் நெருக்கமான வர்த்தக, கலாசார உறவுகளைக் கொண்டு இருந்தது.

கி.பி 4-ஆம் நூற்றாண்டில் அண்டை நாடான பூனான் (Funan) அரசு; சம்பா அரசின் மீது தாக்குதல் நடத்தி சம்பாவைக் கைப்பற்றியது. அதன் பின்னர் இந்து மதம், குறிப்பாக சைவம், அரசு மதமாக மாறியது. 

Courtesy of Fine Art America

கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல், வியட்நாம் பகுதியில் அரபு கடல் வர்த்தகம் அதிகரித்தது. அதன் காரணமாக இஸ்லாமிய கலாசார மதத் தாக்கங்கள் கொண்டு வரப் பட்டன. அந்த வகையில் இஸ்லாம் அங்கே பரவியது.

பல நூற்றாண்டுகளாகச் சம்பா பேரரசின் கலை, கலாசாரங்களில் இந்தியச் சாரங்கள் பரிணாமம் பெற்று உள்ளன. சம்பா இந்துக்கள் சிவனை வழிபடும் சைவ சமயத்தைப் பின்பற்றி வந்தார்கள்.

சம்பா அரசின் துறைமுக நகரம் காதிகரம். அங்கு இருந்த சம்பா நிலங்களில் பல இந்துக் கோயில்கள்; பல சிவப்புச் செங்கல் கோயில்கள் கட்டப்பட்டன.

முன்பு காலத்தில் வியட்நாமில், மை சான் (My Son) எனும் நகரம் முக்கிய இந்து மத மையமாக விளங்கி உள்ளது. அங்கே நிறைய இந்துக் கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன. 

Ganesh Tempele Po Nagar Nha Trang

அதற்கு அருகாமையில் ஹோய் ஆன் (Hoi An) எனும் ஒரு துறைமுக நகரம். இப்போது இந்த இரு இடங்களுமே உலகப் பாரம்பரியத் தளங்களாக (UNESCO World Heritage Sites) அறிவிக்கப்பட்டு உள்ளன.

மீகோங் ஆறு. கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் வரும் கோங் எனும் கடைச் சொல் கங்கை நதியைக் குறிக்கின்றது. அது தெரியுமா உங்களுக்கு? நான் சொல்லவில்லை. வரலாற்று நூல்கள் சொல்கின்றன.

10-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் பரவியது. அதன் பின்னர் பிரெஞ்சுக்காரர்களின் கிறிஸ்துவ மதம் வந்தது. இருந்தாலும் அங்கு வாழ்ந்த பலர் தங்களின் பழைய இந்து நம்பிக்கைகள், இந்து சடங்குகள், இந்து பண்டிகைகளைக் கைவிடவில்லை. இன்னும் தக்க வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்.

வியட்நாம் நாட்டில் இருக்கும் இந்து மதம்; இந்தியா, மலேசியாவில் இருக்கும் இந்து மதத்தில் இருந்து சற்றே மாறுபட்டு உள்ளது. இருப்பினும் சில அடிப்படை வழிபாடுகள் அழிபடாமல் உள்ளன. 


கற்சிலைகளை வணங்குகிறார்கள். கல்லில் செய்யப்பட்ட லிங்க வடிவங்களை வழிபடுகிறார்கள். பெரும்பாலும் சிவ பக்தர்கள். இங்குள்ள கோயில்களும் சிவாலயங்களாகவே உள்ளன.

வியட்நாம் நாட்டில் இரண்டாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை உள்ளூர் சமுதாயமான 'சம்' பரம்பரையின் ஆட்சி நடைபெற்றது. ’சம்’ சமுதாயத்தில் இந்து மக்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.

ஆனால் பிறகு அவர்களில் பலர் பெளத்தம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறி விட்டனர். இன்று இந்து சமூகம் இங்கே ஒரு சிறுபான்மைச் சமூகமாகக் குறுகி விட்டது.

சம்பா நிலப் பகுதியில் இப்போது நான்கு கோயில்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் இரண்டு கோயில்களில் மட்டும் இந்துமத வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்து மதம் முற்றிலுமாக அழிந்துவிடும் நிலையில் உள்ளது. 


வியட்நாமில் இப்போது 60,000 பூர்வீக இந்துக்கள் வாழ்கின்றார்கள். இவர்களின் திருமணம்; காதணி விழா; திருவிழாக்கள் எல்லாம் இந்து மதம் சார்ந்தவையாக உள்ளன.

சம்பா சமூகம் இன்னும் நிலைத்து இருக்கிறது. ஆனால் அதற்கும் முந்தைய இந்து மதம் இங்கே அழிவின் விளிம்பில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் வியட்நாம் நாடு, இந்து மதத்தின் ஆணிவேராகத் திகழ்ந்தது. அந்த வகையில் இன்றும் சில பாரம்பரியங்கள் அங்கே பராமரிக்கப் படுகின்றன. எச்சம் மிச்சங்களைக் காண முடிகிறது.

சில பாரம்பரியங்கள் இன்று வரை தொடர்ந்தாலும், சில பல மாறுதல்களையும் காண முடிகிறது. அதே சமயத்தில் பல பண்பாடுகள் கால வெள்ளத்தில் தொலைந்து விட்டன. 


’பண்டைய காலத்தில், இந்தோசீனாவின் சம்பா அரசு; இந்து மதத்தின் கோட்டையாகத் திகழ்ந்தது. சம்பாவின் புராதன கோயில்களே அதற்கான சாட்சியங்களாக அமைகின்றன. வேறு சில கோயில்கள் இடிபாடுகளாகவும் எஞ்சி நிற்கின்றன.

ஆனாலும் அந்தச் சம்பா அரசு அண்மைய காலத்து வரலாற்றில் இருந்து சன்னம் சன்னமாய் மறைந்து வருகிறது. வேதனை.
    
ஒருகாலத்தில் தென்கிழக்கு ஆசியாவையே பல்லவர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பாண்டியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். தமிழர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

அவர்களுக்குக் கீழ் கைகட்டி வாய் பொத்தி பேர் போட்ட ’ஐலசா ஐலசா’ மீன்பிடி இனங்கள் எல்லாம்; இன்றைய காலத்தில் பக்காவாக தெனாவெட்டு பேசிக் கொண்டு திரிகின்றன. செல்பி எடுத்து பிரேக் டான்ஸ் ஆடுகின்றன. காலத்தின் கோலம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
16.07.2021

சான்றுகள்:

1. Thurgood, Graham (1999). From Ancient Cham to Modern Dialects.

2. Ralph Bernard Smith (1979). Early South East Asia: essays in archaeology, history, and historical geography. Oxford University Press. p. 447.

3. Chatterji, B. (1939). JAYAVARMAN VII (1181-1201 A.D.) (The last of the great monarchs of Cambodia). Proceedings of the Indian History Congress. - www.jstor.org/stable/44252387

4. Hindus of Vietnam - Hindu Human Rights Online News Magazine". www.hinduhumanrights.info.

5. India's interaction with Southeast Asia, Volume 1, Part 3 By Govind Chandra Pande, Project of History of Indian Science, Philosophy, and Culture, Centre for Studies in Civilizations (Delhi, India).

6. https://en.wikipedia.org/wiki/Võ Cạnh inscription

 

16 ஜூலை 2021

மலர்ந்தும் மலராத மலர் குமுதா இராமன்

தமிழ் மலர் - 15.07.2021
 
இறைவன் இருக்கின்றானா
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்


கவிஞர் கண்ணதாசனின் அழகிய அற்புதமான வரிகள். அந்த வரிகளைப் படிக்கும் போதும் சரி; அந்தப் பாடலைக் கேட்கும் போதும் சரி; மனதிற்குள் ஒரு கேள்விக்குறி வந்து போகிறது.

நல்லது செய்பவர்களும் சரி; நல்லது நினைப்பவர்களும் சரி; சின்ன வயதில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். அதே சமயத்தில் கெட்டது செய்பவர்களும் சரி; கெட்டது நினைப்பவர்களும் சரி; நூறு வயதிலும் பாய்ச்சல் காட்டிக் கொண்டு இருக்கிறார்களே எனும் கேள்விக்குறி தான்.   


நதியில் விளையாடி கொடியில் தலை சீவி, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல ஒரு மலேசியத் தமிழ்ப் பெண். சின்ன வயதிலேயே போய்ச் சேர்ந்து விட்டார். அவர்தான் குமுதா இராமன்.

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக நடந்த இளம் தென்றலாய்க் கலைந்தும் கலையாமல் போய்ச் சேர்ந்து விட்டார். வாழ வேண்டிய வயது. இந்தச் சமயத்தில் இறைவன் இருக்கின்றானா எனும் கண்ணதாசன் பாட்டும் நினைவிற்கு வந்து போகிறது. ஒரு செருகல்.

ஒரு நாட்டில் ஒரு தலைவர் இருந்தார். எந்த நாடு என்று கேட்க வேண்டாம். மஞ்சள் காக்காய்கள் மஞ்சள் கட்டி பறந்த நாடு என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தத் தலைவருக்குத் தலைக்கு மேல் ஏறி நிற்கும் வயது.

இருந்தாலும் அவரின் மஞ்சளாட்டம் கரகாட்டம் இன்றும்கூட ஓய்வதாக இல்லை. நான் இல்லாமல் நாடு இல்லை எனும் அவரின் அலைகளும் ஓய்வதாக இல்லை. அந்த மனிதருக்குத் தள்ளாத வயதிலும் பதவி ஆசைகள் விடுவதாகவும் இல்லை. விடுங்கள். நம்முடைய தமிழ்ப்பெண் குமுதா இராமன் கதைக்கு வருவோம்.

குமுதா இராமன், பாஸ் கட்சியின் ஆதரவாளர் தான். இருந்தாலும் அவர் ஒரு தமிழ்ப்பெண். பாஸ் கட்சியின் அரசியல் கொள்கைப் பாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தமிழ்ப்பெண் என்று தாராளமாகச் சொல்லலாம்.

பாஸ் கட்சியின் சார்பில் மூன்று பொதுத் தேர்தல்களில் போட்டியிட்ட முதல் முஸ்லிம் அல்லாதவர் எனும் சிறப்பும் இவரிடம் உண்டு.

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்; 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்’ இரு தேர்தல்களில் ஜொகூர் திராம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜொகூர் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அப்போதைய கிளந்தான் மந்திரி பெசார் நிக் அசீஸ் அவர்களின் வாழ்த்துகளையும் ஆசீர்வாதத்தையும் பெற்று திராம் தொகுதியில் தேர்தலில் நின்று போட்டியிட்டார். அப்போது நிக் அசீஸ் கூறியதை நினைவு படுத்துகிறேன்.

’குமுதா ராமன் ஒர் இந்துவாக இருந்தாலும் பாஸ் கட்சி அவரைத் தன் கட்சியின் செல்லப் பிள்ளையாகப் பார்க்கிறது’ என்று கூறி இருக்கிறார்.

2008-ஆம் ஆண்டு தேர்தல் அவரின் முதல் தேர்தல். பி.கே.ஆர். சின்னத்தில் போட்டியிட்டார். அம்னோ வேட்பாளர் மாவ்லிசான் பூஜாங்கிடம் 8,178 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஸ் ஆதரவாளர் மன்ற மகளிர் பிரிவுத் தலைவி எனும் தகுதியில் திராம் தொகுதியில் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் குமுதாவுக்கு 2,605 வாக்குகள்; பாரிசான் நேசனல், ம.சீ.ச.வைச் சேர்ந்த தான் செர் புக் (Tan Cher Puk) என்பவருக்கு 16,777 வாக்குகள்; பக்காத்தான் ஹரப்பான், ஜ.செ.க.வைச் சேர்ந்த லியோவ் சாய் துங் (Liow Cai Tung) என்பவருக்கு 32,342 வாக்குகள்.

குமுதா ராமன், மலேசியாவின் மகளிர், குடும்ப, சமூக நலத் துறை துணை அமைச்சர் சித்தி சைலா யூசோப் அவர்களின் சிறப்பு அதிகாரி. அதே வேளையில் பாஸ் கட்சி ஆதரவாளர் பிரிவின் மகளிர் அணி தலைவி. (Pegawai Khas at Kementerian Pembangunan Wanita,Keluarga Dan Masyarakat, Putrajaya and Ketua Wanita Dhpp Pusat dan Ketua Dhpp Negeri Johor at Parti Islam Semalaysia (PAS).

பாஸ் கட்சியைப் பிரதிநிதித்தாலும் அனைத்து மலேசிய மக்களின் ஒற்றுமை குறித்து நல்ல நல்ல சேவைகளைச் செய்து வந்தார்.

அவர் தம் சேவையின் போது இனம் பார்க்கவில்லை. மதம் பார்க்கவில்லை. பெண்களின் கிளிக் கூட்டத்தில் ஒரு பைங்கிளியாய் பறந்து திரிந்தவர்.

பத்து மலாய்க்காரப் பெண்கள் அமர்ந்து இருக்கும் கூட்டத்தில் இவர் மட்டும் தனித்து நின்றார். பச்சை நிற கெபாயா உடைகளில் தனித்து நின்றார். பத்து பெண்கள் பேசும் கூட்டத்தில் இவருடைய பேச்சு மட்டும் தனித்து நின்றது.

காரணம் குமுதா இராமனின் பேச்சுத் தன்மை. மலாய் ஆங்கிலம் இரு மொழிகளிலும் தன் கருத்துகளை முன் வைப்பதில் சிறந்து விளங்கினார்.

இரு வாரங்களுக்கு முன்னர் அவருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது. புத்ராஜெயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார். இரண்டு வாரங்கள் போராட்டம். இரு தினங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார்.

குமுதா இராமன், 1979 மே 19-ஆம் தேதி பிறந்தவர். வயது 42. திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்கான முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கும் போது கோவிட் 19 கதவைத் தட்டி இருக்கிறது.

இந்தக் கோவிட் 19 வந்ததும் போதும். உலகமே கிடுகிடுத்துப் போய் நிற்கிறது. உலகம் முழுமைக்கும் 4,065,804 உயிரிழப்புகள். மலேசியாவில் 6,260 உயிரிழப்புகள். அந்த இழப்புகளில் ஒருவர் குமுதா இராமன்.

மலேசியாவின் தென் கோடி மாநிலம் ஜொகூர். அந்த மாநிலத்தின் தலைநகர் ஜொகூர் பாரு. அங்கு ஒரு புறநகர்ப் பகுதி ஜொகூர் ஜெயா. அங்கு வளர்ந்தவர்.  ஜொகூர் ஜெயா (Sekolah Menengah Taman Johor Jaya 1) உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம். சுல்தான் இப்ராகிம் பெண்கள் பள்ளியில் (Sultan Ibrahim Girls School) ஆறாம் படிவம்.

அதன் பின்னர் இங்கிலாந்திற்குச் சென்றார். நியூகாசல் எனும் இடத்தில் இருக்கும் நார்த்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பின்னர் மலேசியாவுக்குத் திரும்பி ஒரு வங்கியில் சட்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.

இந்தக் கட்டத்தில் தான் பொதுச் சேவையில் அவர் ஈடுபட்டார். அப்படியே அரசியலில் காலடி எடுத்து வைத்தார். சில சமூகப் பொது அமைப்புகளிலும் தொடர்ந்து சேவைகள் செய்து வந்தார்.

பாஸ் கட்சி அண்மையில் தனது ஆதரவாளர் மன்றத்தை கட்சியின் ஒரு பிரிவாக தரம் உயர்த்தியது. பாஸ் சின்னத்தில் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வகை செய்வதே அதன் நோக்கமாகும். ஜோகூர் தொகுதியில் பாஸ் கட்சி, இஸ்லாம் அல்லாத வேட்பாளர்களை நிறுத்துவதில் முனைப்பு காட்டி வருவது

திராம் சட்டமன்றத் தொகுதியில், பாஸ் கட்சி வேட்பாளர் குமுதா ராமன், கடந்த 2008, 2013 இரண்டு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இருப்பினும் முயற்சிகளைக் கைவிடவில்லை. தொடர்ந்து போராட்டம்.

2013 பொதுத்தேர்தலில் நகர்புறங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் பெல்டா பகுதிகள் தான் கைகொடுக்கவில்லை. அப்போது குமுதா ராமன் சொன்னவை:

“மலேசியா ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு. மலேசியாவில் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள்; சபா சரவாக் பூர்வக் குடியினர் வாழ்ந்து வருகின்றனர். மலேசியாவில் பல மதங்களையும் கலாசாரங்களையும் பின்பற்றி வாழும் பல இன மக்கள் தங்கள் மனதில் "நாங்கள் மலேசியர்கள்" என்ற எண்ணத்தோடு ஒன்றிணைந்தால் ஓர் ஐக்கிய மலேசியாவை உருவாக்கலாம்.

வேறுபட்ட கலை கலாசாரங்களையும்; வாழ்க்கை முறையையும் பின்பற்றினாலும் பல்லின மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்.

ஒற்றுமை, தேசியவாதம் மற்றும் நாட்டின் மீது பற்று போன்ற சிறந்த குணங்கள் முந்தைய தேசிய தலைவர்களால் மக்களின் மனதில் பதியப்பட்டு விட்டன. துங்கு அப்துல் ரகுமான், துன் தன் செங் லோக்; துன் சம்பந்தன் போன்ற தலைவர்களின் கூட்டு முயற்சியினால் மலேசிய நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது.

நான் மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டால், பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவேன். நான் மட்டும் அல்ல. அனைத்து அரசியல் தலைவர்களும் செய்ய வேண்டும். இனம் மதம் பார்க்காமல் செயல்பட வேண்டும்.

“முன்னாள் அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா. இவர் ஒரு சிறும்பான்மை இனத்தவராக இருந்தாலும், தன் நாட்டிற்காக நல்ல முறையில் செயலாற்றினார். உலகமே போற்றும் மனிதராக இன்றும் வாழ்கின்றார்.

“எனவே பொதுமக்கள், ஒரு தொகுயில் தேர்தலில் நிற்கும் ஒரு வேட்பாளர்களின் செயல் திறனை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வேட்பாளர்களால் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பதை உணர்ந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்.

உதவிகளும் சரி; வசதிகளும் சரி; எல்லா மலேசிய மக்களுக்கும், சரி சமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மலேசியரும் தன் இனம், தன் மதம் என்ற போக்கை விடுத்து பிற இனத்தவருக்கு உதவ முன் வர வேண்டும் என்று குமுதா சொல்லி இருக்கிறார். அவர் எங்கே நிற்கிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாஸ் சமயக் கட்சியின் ஆதரவாளராக இருந்தாலும்; அந்தக் கட்சியின் சார்பில் தேர்தலில் நின்று போட்டிப் போட்டு இருந்தாலும்; அவர் மதங்களைத் தாண்டிப் போய் நின்றார். ஒரே மலேசியா எனும் கொள்கையில் திடமாய் தீர்க்கமாய்ப் பயணித்து இருக்கின்றார். வாழ்த்துகிறேன் மகளே குமுதா.

தோல்விகளே வெற்றியின் அறிகுறிகள் என பல தோல்விகளைச் சந்தித்தவர் குமுதா ராமன். அந்தத் தோல்விகளை வெற்றிப் படிகளாக மாற்றும் கட்டத்தில் இறைவன் அழைத்துக் கொண்டார்.

நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு. ஆனால் குமுதாவின் நினைவுகளுக்கு ஒருபோதும் ஓய்வுகள் இல்லை. அந்த வகையில் ஒவ்வோர் இதயமும் மற்றோர் இதயத்தை நினைத்து நேசித்து கொண்டுதான் இருக்கும் அவரைப் பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு நம்முடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் மறைந்தாலும் அவரின் நினைவுகள் எப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும். மலேசிய மண்ணில் மறைந்தும் மறையாத ஓர் அழகிய தமிழ்ப்பெண் குமுதா ராமன். இறைவன் அடிகளில் அவர் அமைதி கொள்வாராக!

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.07.2021

பின்னூட்டங்கள்

Sathya Raman: வணக்கம் சார். இது தாமதமான பதிவு. கண்ணதாசனின் பாடல் வரிகளை ஒரு தலைப்பாக கொடுத்து ஏதோ சாதனை பெண்ணின் சரித்திரம் பற்றி எழுதி இருப்பீர்கள் என்று நினைத்தேன்.

குமுதா ராமனுக்கான கட்டுரை என்று புரிந்தது. மிக இளவயதில் இறைவனடி சேர்வது பெரிய இழப்பே. சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

கடைசி வரை அவர் எப்படி காலனுக்கு பலியானர் என்று குறிப்பிடவில்லையே?

பாஸ் கட்சியில் ஒரு நல்லவர் இருந்தார் என்றால் அது காலஞ்சென்ற நிக் அஸிஸ் அவர்கள்தான். இன்றைய பாஸ் கட்சியை நினைக்கையில் பற்றிக் கொண்டு வருகிறது. கொள்கையே இல்லாத சந்தர்ப்பவாதிகள்.

Muthukrishnan Ipoh >>>> Sathya Raman தொடர்ந்து பின்னூட்டங்கள் வழங்கி வரும் அன்பர்களில் ஒருவர்... வாழ்த்துகள் சகோதரி.

பொதுவாகக் கட்டுரையைத் தயாரித்த பின்னர் இரண்டு முறை படித்து விட்டுத்தான் அனுப்புவேன். நேரமாகி விட்டால் சமயங்களில் படிக்காமல் அவசரம் அவசரமாக அனுப்புவதும் உண்டு. நாளைய பத்திரிகையில் வர வேண்டுமே! (சிரிக்க வேண்டாம்)

ஆங்கிலத் தகவல்களைத் தமிழுக்கு கொண்டு வந்து தொகுக்கும் போது சில கருத்துகள் நம்மை அறியாமல் விடப் படுவதும் உண்டு.

எல்லாம் சரி என்று உறுதி படுத்திய பின்னர் தான் மின்னஞ்சலுக்குச் செல்லும்.

சமயங்களில் ஆசிரியர் குழுவினரும் நம் மீது உள்ள நம்பிக்கையில் எழுதிய கட்டுரையை அப்படியே போட்டு விடுவார்கள். என்ன ஏது என்று கேட்கவும் மாட்டார்கள். அச்சில் ஒரு சில எழுத்துப் பிழைகள் வருவதையும் கவனிக்கலாம். மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் போன் போட்டு அனுமதி கேட்பார்கள். நல்ல பழக்கம்.

தவறுகள் நடந்து இருந்தால் மறுநாள் பத்திரிகையில் படித்த பின்னர் தெரிந்து கொள்வேன். அந்த மாதிரி விடுபட்ட போவதில் நீங்கள் கேட்டதும் ஒன்றுதான். அவர் கோவிட் நோயினால் உயிர் துறந்தார். நன்றிங்க சகோதரி. தொடர்ந்து பயணிப்போம். வாழ்த்துகள்

Elan Ada: பாஸ் அரசியல் கட்சி நாட்டை நாசமாக்கி விடும் ஆட்சிக்கு வந்தால். "சேரிடம் அறிந்து சேர்" எனும் தெளிவு வேண்டும்.

Arjunan Arjunankannaya: நாட்டின் குழப்பத்திற்கு காரணம் பாஸ் கட்சியின் அரசியலும் அம்னோவின் அரசியலும்.

Selva Mani: கர்ணன் நல்லவன்" தான், இருந்தாலும் அவன் சேர்ந்த இடம்தான் சரியில்லை!

கதிர்காமநாதன் சே: இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அளித்த பங்களிப்பு என்ன?

MP Tarah: மலர்ந்தும் மலராத குமுதா இராமனின் கட்டுரையை படித்தேன் கண்கள் குளமாகியது, வேதனையிலும் வேதனையானது. இது போன்று இனி வேறு யாருக்குமே வரவேண்டாம்.

Poovamal Nantheni Devi: நல்ல பதிவு. குமுதா ராமனுக்கு ஆழ்ந்த இரங்கல்.