03 அக்டோபர் 2021

பசிபிக் பெருங்கடலில் தாகித்தி தமிழர்கள்

தமிழ் மலர் - 03.10.2021

உலகிலேயே பெரிய கடல் பசிபிக் பெருங்கடல். அந்தக் கடலிலே தன்னந்தனியாக ஒரு தீவு. உலகின் அழகிய பத்து தீவுகளில் அதிசயமான ஒரு தீவு. அழகிலும் அழகான அற்புதமான தீவு. பிரான்ஸ் நாட்டிற்குச் சொந்தமான தீவு.

அதன் பெயர் தாகித்தி. பலரும் அறியாத பெயர். பலரும் கேள்விப்படாத பெயர். மனித நடமாட்டம் என்பது மிக மிகக் குறைவு. மக்கள் போவதும் குறைவு.

ஹவாய் தீவு. தெரியும் தானே. அமெரிக்காவைச் சீண்டிப் பார்த்த தீவு. அங்கே இருந்த அமெரிக்கக் கப்பல்கள் மீது, ஜப்பான்காரர்கள் குண்டுகளைப் போட்டு அமெரிக்காவை வம்புக்கு இழுத்து இரண்டாம் உலகப் போரில் களம் இறக்கி விட்டார்கள்.


அந்த ஹவாய் தீவில் இருந்து தெற்கே 4,400 கி.மீ (2,376 மைல்கள்); தென் அமெரிக்கா சிலி நாட்டில் இருந்து கிழக்கே 7,900 கி.மீ (4,266 மைல்கள்); ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வட மேற்கே 5,700 கி.மீ. (3,078 மைல்கள்). அங்கேதான் தாகித்தி தீவு இருக்கிறது.

அமெரிக்கா கண்டத்திற்கும் ஆசியா கண்டத்திற்கும் நடுவில் மாபெரும் பசிபிக் கடலில் பச்சைப் பிள்ளை போல அப்பாவித் தனமாய் இருக்கிறது தாகித்தி தீவு.

இப்போது இந்தத் தீவில் 20 தமிழர்க் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். இப்படி ஒரு தமிழ்ச் சமுதாயம் இப்படி ஒரு பெருங்கடலில் வாழ்வது உலக அதிசயம் தானே. பலருக்கும் தெரியாத அதிசயம் தான்.


இந்தத் தீவில் 20 தமிழர்க் குடும்பங்கள் மட்டும் அல்ல. உள்ளூர் பூர்வீக மக்களும்; பிற இனத்தவர்களும் 1,89,000 பேர் வாழ்கிறார்கள்.

இந்தத் தாகித்தி தீவின் பரப்பளவு 1044 ச.கி.மீ. முதன்முதலாக கி.பி. 300-ஆண்டுகளில் பாலினேசியர்கள் குடியேறி இருக்கிறார்கள். தாகித்தி தீவின் மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் பாலினேசியர்கள்.

முன்பு காலத்தில் 1500 ஆண்டுகளுக்கும் மேலாக போமாரே (Pomare dynasty) எனும் வம்சாவளியினர் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

அங்கே போன ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் தாகித்தியை அடித்துப் பிடித்துக் கைப்பற்றிக் கொண்டார்கள். பின்னர் டச்சுக்காரர்கள் போனார்கள்; அதன் பின்னர் போர்த்துகீசியர்கள்; அடுத்து ஆங்கிலேயர்கள்; பிரெஞ்சுக்காரர்கள். இப்படி மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டு ஆட்சி செய்து இருக்கிறார்கள்.


கடைசியாக போனவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். இவர்கள் தான் இப்போது ஆட்சி செய்கிறார்கள். பிரான்ஸ் நாட்டின் ஆளுமையில் உள்ளது. அந்த வகையில் அங்கு உள்ள மக்கள் அனைவரும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள். சரி. முக்கியமான ஒரு விசயத்திற்கு வருகிறோம்.

தமிழர்கள் எப்படி அங்கே போனார்கள். அதுதான் பெரிய ஒரு கேள்வி. இரகசியம் நிறைந்த கேள்வி என்றுகூட சொல்லலாம். அதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

1967-ஆம் ஆண்டில் தான் தாகித்தி தீவில் தமிழர்க் குடும்பங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். தாகித்தி தீவைச் சுற்றிப் பார்க்கப் போன தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

வருடத்தைக் கவனியுங்கள். 1967. மிக அண்மையில் தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆனாலும் தாகித்தி தமிழர்கள் சில நூறு ஆண்டுகளாக அங்கே வாழ்ந்து இருக்கிறார்கள்.


தமிழர்களின் பெயர்கள் என்னவோ பழக்கப்பட்ட பெயர்களாகவே உள்ளன. ஆச்சியமா, வள்ளியம்மா, மாரிம்மா, சாமிநாதன், சரஸ்வதி, சாரங்கபாணி என்று இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டுப் போய் ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள். இரகசியங்கள் கசியத் தொடங்கின.

அந்த 20 தமிழர்க் குடும்பங்களின் குடும்பத் தலைவர்களுக்கும்; குழந்தைகளுக்கும் தங்களின் வம்சாவளியைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. காட்டில் கண்ணைக் கட்டி விட்டுத் தொலைந்து போன கதை மாதிரி தான்.

அந்தத் தமிழர்க் குடும்பங்களுக்கு அறவே தமிழ் பேசத் தெரியவில்லை. அங்குள்ள உணவு விடுதிகளில்; கடைகளில் சாதாரண வேலைகள் செய்து வருகிறார்கள்.


தாகித்தி தலைநகரம் பாபிட்டி (Papeete). இந்த நகரத்தின் ஓர் ஒதுக்குப் புறமான இடத்தில் தான் அந்தத் தமிழர்களின் வீடுகள் உள்ளன. இவர்களுக்கு என்று தனியாக ஒரு பொது மண்டபம் உள்ளது.

இவர்களின் பிள்ளைகள் பிரெஞ்சு; கிரியோல் மொழி படிக்கிறார்கள். பேசுகிறார்கள். பெரிதாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. இருந்தாலும் இவர்கள் தமிழர்கள் தான்.

ஆனாலும் இவர்களின் தாத்தா பாட்டிகளின் பெயர்களை நினைவு வைத்து இருக்கிறார்கள். தங்களைத் தமிழர்கள் என்றும் சொல்கிறார்கள். தாங்கள் தமிழர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் எப்படி தமிழர்களாக வாழ்கிறோம் என்பது மட்டும் அவர்களுக்குத் தெரியவில்லை.

தாகித்தி தமிழர்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவ சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். ஒரு சிலருக்கு சமயம் எதுவும் இல்லை. இவர்கள் 'லா லாங்கு' (la langue) எனும் ஒரு கலப்பு மொழியைப் பேசுகிறார்கள். அடிக்கடி அந்த மொழியிலேயே பாடுகிறார்கள்.

சமயங்களில் தங்களின் பூர்வீகத்தை நினைத்துப் பாடி அழுகிறார்கள். அவர்களின் பூர்வீகம் என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை. மீண்டும் சொல்கிறேன். தமிழர்கள் என்று தெரியும். ஆனால் எப்படி தமிழர்கள் என்பது மட்டும் தெரியவில்லை.

அவர்களின் இந்திய வம்சாவளியைப் பற்றிய ஒரே ஒரு பிடிமானம் அவர்களின் பெயர்கள் மட்டுமே. வேறு எந்தத் தகவலும்; எந்தச் சுவடும் கிடைக்கவில்லை.

பவளக் கொடி (Pavalacoddy); மரியசூசை (Mariasoosay); ராயப்பன் (Rayappan); சாமிநாதன்; திவி; வீராசாமி; பார்வதி; லெட்சுமி; மாரியம்மா, ராசம்மா எனும் அழகு அழகான பெயர்கள். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல வேறு எதும் இல்லை.

தாகித்தி தீவில் இருந்து வெகு தொலைவில் பிஜி தீவுகள் உள்ளன. இங்கே தான் 1870-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் குடியேற்றம் செய்யப் பட்டார்கள். ஒப்பந்தக் கூலிகளாக அங்கு  கொண்டு செல்லப் பட்டார்கள்.

பிஜி தீவுக்கும் சென்னைக்கும் உள்ள தூரம் பதினோராயிரத்து இருநூற்று நாற்பத்து ஒன்பது கிலோ மீட்டர்கள் (11,249). நம் மலேசியாவில் இருந்து 8,680 கி.மீ. கொஞ்ச நஞ்ச தூரம் அல்ல.

உலகத்தை ஒரு முறை சுற்றிவர எவ்வளவு தூரம் தெரியுங்களா 40,075 கி.மீ. அப்படிப் பார்த்தால் மலாக்காவில் இருந்து பிஜி தீவிற்குப் போவதற்கும் உலகத்தில் கால்வாசி தூரத்தைச் சுற்றி வருவதற்கும் சமமாகி விடுகிறது.

1874-ஆம் ஆண்டு பிஜித் தீவு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பிஜித் தீவில் நிறைய கரும்புத் தோட்டங்கள் இருந்தன. அந்தக் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப் பட்டார்கள்.

தமிழகத்தில் இருந்து கங்காணி முறையில் ஆள் பிடித்துக் கொண்டு போனார்கள். நான் சொல்வது பீஜி தீவைப் பற்றித்தான். தாகித்தி தீவு அல்ல.

1879-ஆம் ஆண்டில் இருந்து 1916-ஆம் ஆண்டுக்கும் இடையில் ஏறக்குறைய 65,800 இந்தியத் தொழிலாளர்கள் பிஜி தீவிற்குக் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.

இந்தப் பிஜி தீவில் இருந்து தான் தாகித்தி தீவிற்கு, அந்த 20 தமிழர்கள் குடும்பங்களும் போய் இருக்கலாம். இது ஒரு பொதுவான கருத்து. ஓர் அனுமானம். ஆனால் எவ்வளவு தூரம் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தாகித்தி தீவிற்கும்; பிஜி தீவிற்கும் இடைப்பட்ட தூரம் 3336 கி.மீ. சும்மா ஒரு கற்பனை பண்ணினாலே மயக்கமே மரி. அதுவும் இந்தக் காலத்தில் விமானத்தில் பயணம் செய்தாலும் எப்படியும் நான்கு ஐந்து மணி நேரம் பிடிக்கும்.

இன்னும் ஒரு விசயம். 1870-ஆம் ஆண்டுகளில் தாகித்தி தீவிற்கும்; பிஜி தீவிற்கும் கப்பல் பயணங்கள் எதுவும் இல்லை. சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து இருந்து இருக்கிறது.

ஆனால் அந்தச் சரக்குக் கப்பல்களில், இந்தத் தாகித்தி தமிழர்கள் ‘தும்பாங்’ பண்ணிப் போய் இருக்க முடியாது. ஏன் தெரியுங்களா. வெள்ளைக்காரர்கள் சும்மா விட்டு இருக்க மாட்டார்கள். தோலை உரித்துத் தொங்கப் போட்டு இருப்பார்கள்.

அப்படியே கப்பலில் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகப் போய் இருந்தாலும், ஒருவர் அல்லது இருவர் அல்லது மூன்று பேர் போய் இருக்கலாம். இப்படி 20 குடும்பங்கள் போய் இருக்க முடியாது.

அப்படியே கப்பலில் போய் இருந்தாலும் இரண்டு வாரத்திற்குச் சோறு தண்ணி இல்லாமல் காயந்து கருவாடாகப் போய் இருப்பார்கள். இறந்து போய் இருக்கலாம்.

ஆக அப்படியும் இருக்க முடியாது. அந்த வகையில் அவர்கள் கப்பலேறிப் போய் இருக்க முடியாது. அப்புறம் எப்படி?

ஒரு தற்காலிகக் காரணத்தைச் சொல்லலாம். முன்பு காலத்தில் பாலினேசியர்கள் பசிபிக் பெருங்கடல் முழுமைக்கும் கட்டுமரம் கட்டிப் பயணம் செய்து இருக்கிறார்கள். பசிபிக் பெருங்கடலில் அவர்கள் கால் பதிக்காத இடம் என்று எதுவுமே இல்லை.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஹவாய், குவாம், பிஜி, சாலமன் தீவுகள், போர்னியோ, மலாயா என்று எல்லா நாடுகளுக்கும் கட்டுமரம் கட்டி ஐலசா பாடிக் கொண்டு போய் இருக்கிறார்கள்.

மலாயாவை எடுத்துக் கொள்ளுங்கள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே அந்தமான், பர்மா, சுந்தா தீவுக் கூட்டங்கள், வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரோனேசியா போன்ற இடங்களில் இருந்து வந்த பாலினேசியர்கள் மலாயாவிலும் கால் பதித்து விட்டார்கள்.  

செமாங், செனோய், செக்காய், பாத்தேக், தெமியார், தெமுவான், லானோ, ஜகாய், கிந்தாக் போன்றவர்கள் தான் மலாயாவின் பூர்வீகக் குடிமக்கள். இவர்கள் தான் உண்மையிலேயே பூர்வீகக் குடிமக்கள். மண்ணின் மைந்தர்கள். ஆனால் அந்தத் தகுதி ???

ஒன் பில்லியன் டாலர் கேள்வி. இப்போது எல்லாம் மில்லியனுக்கு மவுசு இல்லீங்க. ரோசாப்பூ ரோசம்மா ஒரு மில்லியன் டாலருக்கு ஒரு கைப்பை வாங்கியதில் இருந்து, இப்போது கிண்டர்கார்டன் சிசுக்கள்கூட பில்லியன் என்று தான் கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள். விடுங்கள். ஊர் பொல்லாப்பு வேண்டாம். நம்ப கதைக்கு வருவோம்.

இந்தப் பாலினேசியர்கள் அண்மைய காலங்களில்கூட தீவுகளுத் தீவு கட்டுமரம் கட்டிப் போவது வழக்கம். அப்படிப் போகும் போது பிஜியில் இருந்த தமிழர்களும், பாலினேசியர்களுடன் தாகித்தி தீவிற்குப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது.

ஏன் என்றால் கடல் பயணங்கள் பற்றி அதிகம் தெரிந்து இருக்காத அந்த பிஜித் தமிழர் தொழிலாளர்கள், யாருடைய உதவியும் இல்லாமல், 3336 கி.மீ. தூரம் கட்டு மரங்களில் போய் இருக்க முடியுமா. முடியவே முடியாது.

அதே போல பசிபிக் பெருங்கடலில் இன்னும் ஒரு தீவு உள்ளது. அதன் பெயர் நியூ கலிடோனியா. ஆஸ்திரேலியாவில் இருந்து 1200 கி.மீ. உள்ளது. இந்தத் தீவிலும் 500 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களைப் பற்றி பின்னர் ஒரு நாளில் சொல்கிறேன்.     

தாகித்தி தமிழர்களைப் பற்றி ஒரு முழுமையான ஆய்வு செய்யப்பட வேண்டும். தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால் அந்தத் தமிழனுக்குச் சொந்தமாக ஒரு நாடும் இல்லை. அதுவே தமிழர்களுக்கு வரலாறு எழுதிக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம்.

அந்தக் காலத்தில் உலகத்தின் கால்வாசியைத் தமிழர்கள் கட்டி ஆண்டார்கள். உண்மை தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இப்போது என்ன. தமிழ்நாட்டைத் தமிழர்களா ஆட்சி செய்கிறார்கள். சண்டைக்கு வர வேண்டாம்.

மலேசியாவைப் பற்றி பேச வேண்டாம். ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. ஏதாவது எழுதப் போய்… வேண்டாங்க. மலேசியத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக அடிக்கடி போலீஸ் ஸ்டேசன்; நீதிமன்றம் என்று ஏறி இறங்கித் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி நிற்கிறார்கள். பல நாடுகளில் தமிழை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். சில நாடுகளில் தமிழை மறந்து கொண்டு வருகிறார்கள்.

சில நாடுகளில் தமிழர் எனும் அடையாளமே தெரியாமல் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். அவர்களில் தாகித்தி தமிழர்களின் அடையாளம் ஒரு சோகமான வரலாறு. கண்கள் பனிக்கின்றன.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(03.10.2021)

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Indians_in_New_Caledonia

2. Xavier S.Thaninayagam, published by the International Association of Tamil Research, 1968 - https://tamilnation.org/diaspora/newcaledonia.htm

3. Lal, Brij Vilash; Fortune, Kate (2000). The Pacific Islands: An Encyclopedia. University of Hawaii Press. pp. 27

4. Robert C. Schmitt (1962). "Urbanization in French Polynesia". Land Economics. 38 (1): 71–75.





 

02 அக்டோபர் 2021

பாரிட் புந்தார் டெனிசன் கரும்புத் தோட்டம் - 1876

மலாயாவில் ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே கரும்புத் தோட்டங்கள்; காபித் தோட்டங்கள்; மிளகுத் தோட்டங்கள்; மரவள்ளித் தோட்டங்கள் தோன்றி விட்டன. அத்தனையும் அடுக்குமல்லி போல அழகு அழகான பசும் பச்சைத் தோட்டங்கள்.

அந்த வகையில் 1850-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட காபிக் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியர்கள் ஆயிரக் கணக்கில் மலாயாவுக்கு அழைத்து வரப் பட்டார்கள்.

தவிர 1840-ஆம் ஆண்டுகளிலேயே மிளகு, காபித் தோட்டங்களில் ஆயிரக் கணக்கான தென்னிந்தியர்கள் வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள். நினைவில் கொள்வோம். தென்னிந்தியர்கள் என்றால் தமிழர்கள்; தெலுங்கர்கள்; மலையாளிகள்.

பேராக், பினாங்கு, ஜொகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களின் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக மலாயாவுக்கு வந்த தென்னிந்தியர்கள் விவரங்கள்:

# 1840 - 1849-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் 1800 பேர்

# 1850 - 1854-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் 2000 பேர்;

# 1855 - 1858-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் 2500 பேர்;

# 1859 -ஆம் ஆண்டில் 3800 பேர்;

# 1860 - 1864-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் 4000 பேர்;

# 1865 -ஆம் ஆண்டில் 6000 பேர்;

# 1867 -ஆம் ஆண்டில் 6294 பேர்;

# 1868 -ஆம் ஆண்டில் 6949 பேர்;

# 1869 -ஆம் ஆண்டில் 9013 பேர்;

# 1870 -ஆம் ஆண்டில் 5000 பேர்;

டெனிசன் கரும்புத் தோட்டம் 1876-ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது. ஆனால் சில உள்ளூர் ஆவணங்களில் 1890 என்றும் 1910 என்றும் பகிர்ந்து உள்ளார்கள்.  

1870-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் (Parit Buntar) மாவட்டத்தில் டெனிசன் தோட்டம் (Denison Estate) இருந்தது. இப்போது அந்தத் தோட்டத்தில் கொஞ்சம் நிலத்தைப் பிடுங்கி எடுத்து சொகுசு மாடி வீடுகளைக் கட்டி இருக்கிறார்கள்.

டெனிசன் எஸ்டேட் கம்பெனி (Denison Estate Company Ltd) எனும் நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது. 750 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப் பட்டது. அதன் பின்னர் 310 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு, ரப்பர் பயிரிடப் பட்டது. தவிர 175 ஏக்கர் தேங்காய் சாகுபடியும் செய்யப்பட்டது.

நிறையவே கால்வாய்களை வெட்டி இந்தத் தோட்டத்தை வடிகட்டி பக்குவப்படுத்தி இருக்கிறார்கள். வளப்பம் நிறைந்த மண். ரப்பர், தேங்காய் இரண்டுக்கும் மிகப் பொருத்தமான மண்.

டெனிசன் தோட்டத்திற்கு 1910-ஆம் ஆண்டில் தாமஸ் பாய்ட் (Thomas Boyd) என்பவர் வருகை தரும் முகவராக இருந்தார். இவரின் பார்வையில் கூலா தோட்டமும் (Gula estate) இருந்தது. இந்தத் தோட்டங்களைப் பினாங்கைச் சேர்ந்த மெசர்ஸ் கென்னடி (Messrs. Kennedy e Co., Pinang) எனும் கம்பெனியார் நிர்வாகம் செய்து வந்தனர்.

மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இந்த நாட்டிற்கு வருவதற்கு முன்னதாகவே தென்னிந்தியர்கள் மலாயாவுக்கு வந்து விட்டார்கள். நேற்று வந்தவர்கள் முந்தாநாள் வந்தவர்களை நோட்டம் பார்க்கிறார்கள். விவஸ்தை இல்லை.

படத்தில் நம்மவர்கள் வேட்டியை இழுத்துக் கோவணமாகக் கட்டிக் கொண்டு வேலை செய்வதைப் பாருங்கள். 150 ஆண்டுகளுக்கு முன்னால் நம் தென்னிந்தியர்கள் காடு மேடுகளில் மட்டும் வேலை செய்யவில்லை. கால்வாய், வாய்க்கால், கழனிகளிலும் இறங்கி வேலை செய்து இருக்கிறார்கள். அடுத்து வரும் நம் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் படத்தை எடுத்தவர் விவரங்கள்:

# கார்ல் ஜோசப் கிலெயின்குரோத் - Carl Josef Kleingroth

# ஜெர்மன் நாட்டுக்காரர் (German photographer)

# பிறப்பு இறப்பு (1864 - 1925)

# வாழ்ந்த இடம் மேடான் சுமத்திரா (Medan, Sumatra)

# படம் எடுக்கப்பட்டது 1899

# படம் பாதுகாக்கப்படும் இடம் லெய்டன் பல்கலைக்கழக நூலகம், நெதர்லாந்து (Leiden University Library, KITLV institute, Netherlands)

எவ்வளவுக்கு எவ்வளவு இந்தியர்கள் சார்ந்த ஆவணங்களைச் சிதைக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சிலர் சிதைக்கின்றார்கள். சிதைத்துவிட்டுப் போகட்டும். இருந்தாலும் மீட்டு எடுக்க பலர் இருக்கிறார்கள்.

விடுங்கள். கிணற்றுத் தவளைகள் கத்துவதால் மழை வரப் போவது இல்லை. மழை வருவதால் தான் அவை கூச்சல் போடுகின்றன.

இந்தப் பதிவை எந்த ஊடகத்திலும் பகிர்ந்து கொள்ளலாம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.10.2021

சான்றுகள்:

1. Kernial Singh Sandhu. (1969). Indian in Malaysia immigration and settlement 1784-1957. Singapore: Cambridge University Press.

2. New Mandala. asiapacific.anu. edu.au/ newmandala /2013/ 02/20/aliens-in-the-land-indian-migrant-workers-in-malaysia/

3. Aliens in the Land – Indian Migrant Workers in Malaysia - https://apmigration.ilo.org/news/aliens-in-the-land-indian-migrant-workers-in-malaysia
 




01 அக்டோபர் 2021

கோலாகங்சார் சங்காட் சாலாக் தோட்டம் - 1906

சங்காட் சாலாக் தோட்டம், கோலாகங்சார் அரச நகரில் இருந்து ஒன்பது மைல் தொலைவில் உள்ளது. 1906-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. இங்கிலாந்தில் கிலாஸ்கோ (Glasgow) நகரில் இருந்த சங்காட் சாலாக் நிறுவனத்திற்குச் (Chungkat Salak Syndicate) சொந்தமானது. 3,900 ஏக்கர் பரப்பளவு.


1906-ஆம் ஆண்டு மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் ஹில் (Mr. Hill) என்பவருக்கு 10,000 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அந்த நிலம் சாலாக் இரயில்வே நிலையத்திற்கு (Salak North railway station) அருகில் இருந்தது. அந்த நிலத்தில் தான் சங்காட் சாலாக் தோட்டம் (Changkat Salak Estate) உருவாக்கப் பட்டது.

இந்தத் தோட்டத்திற்கு 1907 பிப்ரவரி மாதம், டே (E. H. F. Day) என்பவர் நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்றார்.

1906-ஆம் ஆண்டில் 120 ஏக்கரில் முதன்முதலாக ரப்பர் நடவு. முதலில் 23.000 இளம் ரப்பர் கன்றுகள். இந்தக் கன்றுகள் 15 மாதங்களில் 25 அடி உயரத்திற்கு வளர்ந்து விட்டன.

1907-ஆம் ஆண்டு மேலும் 1000 ஏக்கரில் ரப்பர் நடவு. தவிர 380 ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு. சங்காட் சாலாக் தோட்டத்தைச் சுற்றிலும் நிறைய ஈய லம்பங்கள் திறக்கப் பட்டன. நூற்றுக் கணக்கான சீனர்கள் வேலை செய்தார்கள்.


பின்னர் 1907-ஆம் ஆண்டில் நான்கு மைல் தூரத்திற்கு அரசாங்கம் மாட்டு வண்டிச் சாலையை உருவாக்கிக் கொடுத்தது. இந்தச் செம்மண் சாலை சங்காட் சாலாக் தோட்டத்தையும் சாலாக் இரயில் நிலையத்தையும் இணைத்தது.

நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்ற டே என்பவர், இலங்கை, இந்தியாவில் விவசாய அனுபவம் பெற்றவர். அங்கு அவர் பதினைந்து ஆண்டுகள் தேயிலை, காபி, மிளகு, சிஞ்சோனா (cinchona) தோட்டங்களில் பணியாற்றியவர்.

சிஞ்சோனா தெரியும் தானே. மலேரியா காய்ச்சலுக்கு இந்த மரத்தின் பட்டைகளில் இருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது.

சங்காட் சாலாக் தோட்டம் திறக்கப்பட்ட போது 90 தமிழர்கள் வேலை செய்தார்கள். பின்னர் மேலும் தொழிலாளர்களை ஆள் சேர்ப்பு செய்வதற்காக ஓர் ஐரோப்பியத் துணை நிர்வாகி இந்தியாவுக்கு அனுப்பப் பட்டார்.

கங்காணி எவரும் அனுப்பபடவில்லை. ஏன் என்றால் கங்காணி முறை அந்தக் கட்டத்தில் மலாயாவில் அமல்படுத்தப் படவில்லை.

தமிழ் நாட்டுக்குப் போன அந்த வெள்ளைக்காரர் 1907-ஆம் ஆண்டில் 350 தமிழர்களைச் சங்காட் சாலாக் தோட்டத்திற்குக் கொண்டு வந்தார். நான்கே மாதங்களில் அந்தத் தோட்டத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 90--இல் இருந்து 430-ஆக உயர்ந்தது.

தவிர 60 ஜாவானியர்களும் கொண்டு வரப் பட்டார்கள். ஜாவானியர்கள் அதிகம் இல்லை. அத்துடன் அவர்களைக் கொண்டு வருவதற்கு செலவுகள் அதிகம். ஒரு ஜாவானிய தொழிலாளரைக் கொண்டு வருவதற்கு 50 டாலர்கள்.

ஆனாலும் ஜாவானிய தொழிலாளரிடம் இருந்து 21 டாலர்களை மட்டுமே அவரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய முடிந்தது. அதனால் தமிழர்களை அதிகமாகக் கொண்டு வந்தார்கள். அத்துடன் ஜாவானியர்கள் அக்கம் பக்கத்தில் இருந்த கம்பங்களில் தங்க ஆரம்பித்தார்கள்.


வேலைக்கு நினைத்தால் வருவது எனும் போக்கைக் கடைப் பிடித்தார்கள். ஆனால் தமிழர்கள் அப்படி அல்ல. தாங்கள் உண்டு; தங்கள் வேலை உண்டு என்று தோட்ட நிர்வாகத்திற்கு விசுவாசமாக இருந்தார்கள். அதுவே வெள்ளைக்காரர்களுக்கு அதிகமாய்ப் பிடித்துப் போனது.

பின்னர் அந்தத் தோட்டம் கத்தரி நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்தத் தோட்டத்திற்குப் பக்கத்தில் காமிரி (Kamiri) தோட்டம் உள்ளது.

2002-ஆம் ஆண்டில் இந்தத் தோட்டங்கள் விற்கப் பட்டன. அதனால் அங்கு உள்ளவர்கள் வேலைகளை இழந்தார்கள். நஷ்டயீடு கோரி வழக்கு தொடர்ந்தார்கள். ஒரு சமரசம் செய்யப் பட்டது.

சான்றுகள்:

1. Wright, Arnold; Twentieth century impressions of British Malaya; Page 384. Britain Publishing Company, 1908, pg 384

2. http://seasiavisions.library.cornell.edu/catalog/seapage:233_390

3. https://www.malaysiakini.com/opinions/21820

தயாரிப்பு:

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
01.10.2021

Notes: Twentieth century impressions of British Malaya; Page 384.

CHUNGKAT SALAK ESTATE. The Chungkat Salak rubber estate, situated about nine miles from Kuala Kangsa, and half a mile from Salak North railway station, forms part of a grant of 10,000 acres made by the Government to a Mr. Hill.

It has an area of 3,900 acres of undulating land free from Crown rent. It was acquired in June, 1906, by the Chungkat Salak Syndicate, a company formed in Glasgow, and Mr. E. H. F. Day was appointed manager in February, 1907.

When the estate was opened up, 120 acres were planted with Para rubber, and 380 more have since been placed under cultivation. There are now some 23,000 young trees on the estate. Some of these have attained a height of 25 feet in fifteen months from plants which were grown from seed planted in the nurseries five months previously.

A special officer sent from England to report on the estate declared that. he had never known such quick or vigorous growth. In about a year's time a further 1,000 acres of rubber will have been planted, and the prospects of the company are very bright.

The land is believed to be rich in tin, and mines are being opened by Chinese. The Government are about to construct a cart road, four miles in length, through the property, to connect Salah North railway station with the River Plus.

Mr. Day received his planting experience in Ceylon and India, where he was for some fifteen years engaged on well-known tea, coffee, pepper, and cinchona plantations.

In addition to him, there are on the estate a European mining superintendent and a European assistant. The coolies employed are mostly Tamils. A European assistant has been sent to India for the purpose of recruiting this class of labour, and the force has been increased from 90 to 350 coolies in four months.

There are also sixty Javanese at work on the estate, but Javanese are not largely employed owing to the cost of recruiting them'

This cost amounts to over 50 dollars per head, and only 21 dollars of this sum is recoverable from the coolie's wages.

Amongst the directors of the company, the capital of which is A35,000, are Sir William Treacher and the Hon. Mr. John Anderson, of Messrs. Guthrie e Co., of Singapore.