24 மார்ச் 2022

மலாயா தமிழர்களும் மலாயா கப்பல்களும்

தமிழ் மலர் - 24.03.2022

மலாயாவிற்குத் தமிழர்கள் கப்பல் ஏறி வந்த கதை பெரிய ஒரு கண்ணீர்க் கதை. 250 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு நெடிந்து போகின்ற ஒரு தொடர்கதை.

அந்த நீண்ட கதையில் தமிழர்கள் சிந்திய இரத்தம், கொட்டிய தியாகம், தூவிய அர்ப்பணிப்புகள்; சொற்களில் மாளா. எப்படி எழுதினாலும் எழுதித் தீர்க்கவே முடியாது.

நிலவுக்கே ஏணி வைத்து எழுதினாலும் தமிழர்களின் சோகக் கதைகள் அதையும் தாண்டி உச்சிக்குப் போய் இமயம் பார்க்கும். அப்பேர்ப்பட்ட அர்ப்பணிப்புகளைத் தமிழர்கள் இந்த நாட்டிற்கு வழங்கி இருக்கிறார்கள். சத்தியமாகச் சொல்கிறேன். வாரி இறைத்து இருக்கிறார்கள். திருத்திக் கொள்ளுங்கள்.


அவர்களின் உயிர்களையும் உடல்களையும் சுமந்து வந்த கப்பல்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

மலாயா தமிழர்களின் வரலாற்றில் மிகவும் ஆழமாய்ப் பதிந்து போன ஒரு கடல் காவியம் என்றால் அதுதான் எஸ்.எஸ். ரஜுலா கப்பல். தமிழர்களால் 'ரசுலா கப்ப' என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஓர் அழகிய கடல் ஓவியம்.

அந்தக் கப்பல் மறைந்து போய் விட்டது. இருந்தாலும் அது விட்டுச் சென்ற பல வரலாற்றுத் தடங்கள் மட்டும் இன்னும் மறையவில்லை. சொல்லப் போனால் மலாயா தமிழர்களின் வரலாற்றில் அந்தக் கப்பல் ஒரு ஜீவநாடி. ஒரு சப்தநாடி.


இந்தக் கப்பலைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுங்கள். இப்போது நாம் ஓரளவிற்கு ஒரு மனநிறைவான வாழ்க்கை வாழ்கிறோம். இனவாதத்தையும் மதவாதத்தையும் விட்டுத் தள்ளுங்கள். ஆனால் நம் மூதாதையர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். கண்ணீர் விட்டு இருப்பார்கள். தண்ணீர்க் கப்பல்களில் வேதனைகளோடு வந்து இருப்பார்கள். அதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மலாயா தமிழர்களுக்குப் பரங்கியர் இழைத்தக் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையும் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். அதே போலத் தான் இலங்கையின் மலையகத் தமிழர்களுக்கும் கொடுமைகள். அதைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுத பாரதியார் ஒரு கவிதை எழுதினார்.

கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
தெய்வமே! நினது எண்ணம் இறங்காதோ- அந்த
ஏழைகள் சொரியும் கண்ணீர்!

நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பது என்றே? அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே!


நம் நாடு மலேசியா பெருமைக்குரியது. இந்த 21-ஆம் நூற்றாண்டில் நம்முடைய நாடு மிகக் கம்பீரமாய் எழுந்து வானளாவி நிற்கின்றது. வானத்தை முட்டிப் பார்க்கும் கோபுரங்களைக் கட்டிப் போட்டு அழகு பார்க்கின்றது.


பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என பல துறைகளில் வியக்கத் தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து நிற்கிறது. நல்ல சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர். வெளிநாடுகளில் சென்று பார்க்கும் போது தான் நம்முடைய நாடு எவ்வளவு வளமிக்கது; சுபிட்சமானது என்று உணர முடிகின்றது.

அவை எல்லாம் வரலாறு சொல்லும் உண்மைகள். அந்த உண்மைகளும் சரி; அந்த உரிமைகளும் சரி; அவற்றின் பின்னால் எழுந்து நிற்கும் மலேசிய தமிழர்களின் அர்ப்பணிப்புகளும் சரி. என்றைக்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு சொர்க்க பூமியை சுயநலம் பார்க்கும் ஒரு சில அரசியல்வாதிகள் கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரே வார்த்தையில் சொன்னால், ஒரு கோமாளித் தனமான அரசியலை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

எஸ்.எஸ். ரஜுலா கப்பல்

யானை வந்தால் என்ன. பூனை வந்தால் என்ன. எங்க வீட்டுப் பானை எட்டு வருசத்துக்கு நிறைஞ்சு இருக்கணும். என் குடும்பம் நல்லா இருந்தால் போதும் என்கிற சுயநலக் கூத்துகள்.

என்ன செய்வது. இருந்ததும் சரி இல்லை. வந்ததும் சரி இல்லை. காலம் கெட்டுப் போய்க் கிடக்கிறது. ஊர் பொல்லாப்பு வேண்டாங்க.

ரஜுலா கப்பலுக்கு முன்னர் 1870 - 1900-ஆம் ஆண்டுகளில் சில கப்பல்கள் சென்னைக்கும் பினாங்கிற்கும் ஓடி இருக்கின்றன. அவை வேகமாகச் செல்லவில்லை. சென்னையில் இருந்து பினாங்கிற்கு வந்து சேர இரண்டு வாரங்கள் வரை பிடிக்கும். ஆண்டைக் கவனியுங்கள். 1870-ஆம் ஆண்டுகள்.

நிலக்கரியைப் பயன்படுத்தி நீராவியின் மூலமாகப் பயணச் சேவைகள். அவற்றில் சில கப்பல்கள் பெயர் தெரியாமலேயே மறைந்து போய் விட்டன. 1930-ஆம் ஆண்டிற்குப் பின்னால் ஓடிய கப்பல்கள் எட்டு பத்து நாட்களில் பினாங்கு துறைமுகத்தைப் பிடித்து இருக்கின்றன.

எஸ்.எஸ். ஜல உஷா

எஸ்.எஸ்.ரஜுலா கப்பல் இருக்கிறதே இது ஐந்தே ஐந்து நாட்களில் பினாங்கை வந்து பிடித்து இருக்கிறது.

1870-ஆம் ஆண்டுகளில் தமிழர்களை ஏற்றி வந்த கப்பல்கள்:

1. ரோணா (HMT Rohna)

2. அரோண்டா (SS Aronda)

3. ரஜூலா (SS Rajula)

4. ஜலகோபால் (SS Jala Gopal)

5. ஜல உஷா (SS Jala Usha)

6. திலவரா (MS Dilwara)

7. ஸ்டேட் ஆப் மெட்ராஸ் (SS State of Madras)

8. துனேரா (MS Dunera)

9. எம்.வி.சிதம்பரம் (MV Chidambaram)

இந்தக் கப்பல்கள் இன்னும் மலேசியத் தமிழர் மனங்களில் சம்மணம் போட்டு நிலைத்து நிற்கின்றன. அவற்றை மறக்க முடியுமா. ஆகக் கடைசியாக ஓடியது எம்.வி. சிதம்பரம் கப்பல் ஆகும். 1985-ஆம் ஆண்டில் ஒரு தீ விபத்து. அதோடு அதன் கடல் வாழ்க்கையும் முடிந்தது.

1940-ஆம் ஆண்டுகளில் ரோணாவும் ரஜூலாவும்தான் ஒரே சமயத்தில் இணைந்து பயணித்தன. அதன் பின்னர் ரஜூலாவும் ஜலகோபாலும் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு ஓடின.


இவற்றில் ரோணாவும் அரோண்டாவும் கடலில் மூழ்கி விட்டன. ரோணா கப்பல் மத்தியத்தரைக் கடல் பகுதியில் மூழ்கிப் போனது. அரோண்டா கப்பல் 1940-ஆம் ஆண்டு ஒரு வெடிப்பு சம்பவத்தால் கனடா நாட்டுக்கு அருகில் மூழ்கிப் போனது. சரி.

சஞ்சிக்கூலியாய் மலாயாவுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கைநாட்டுப் போட்டு சத்தியம் செய்து விட்ட ஒருவர் தன்னுடைய கிராமத்தை விட்டுப் புறப்படும் போதே ஒரு கடனாளியாகத் தான் புறப்படுகிறார். கப்பலில் ஏறும் போதே கடன்காரர்தான்.

கிராமத் தலைவரிடம் கைநீட்டி வாங்கிய கடன்.
சொந்த பந்தங்களிடம் வாங்கிய கடன்.
வயல்காட்டை அடகு வைத்த வட்டிக் கடன்.
கிணறு வெட்ட வாங்கிய கடனுக்கு வட்டிக் கடன்.
குடிசைக்கு ஒட்டுப் போட வாங்கிய கடன்.
காளைக்கு விதையடிக்க வாங்கிய கடன்.
ஐயனார் சாமிக்கு அரிவாள் வாங்கிய கடன்.

இப்படி எக்கச்சக்கமான கடன் சுமைகள். அவற்றுக்கு வட்டிக் குட்டிகள். அந்தக் கடன்களுக்குக் கொஞ்சமாவது தண்ணீர் காட்ட வேண்டும். இல்லையா. இல்லை என்றால் சொந்த பந்தங்கள் சும்மா விடுவார்களா? வீணாய்ப் போன அசிங்கமான வார்த்தைகளை அள்ளிக் கொட்டி மானத்தை வாங்கி விடுவார்களே.

அடுத்து கடல் கடந்து போகும் பயணத்துக்கான தட்டு முட்டுச் செலவுகள். வேறுவழி இல்லாமல் வேலைக்கு ஆள் சேர்த்த அதே கங்காணியிடமே கடன் வாங்க வேண்டி இருக்கும். இங்கேதான் ஆரம்பக் கடன்கள் அதிரடியாய் ஆரம்பிக்கின்றன.


ஆக தமிழகத்தை விட்டுப் புறப்படும் போதே ஒரு தொழிலாளி ஒரு கங்காணியின் கடன்காரராகத் தான் புறப்படுகிறார். இந்த முதல் கடன் தான் பின்னர் காலத்தில் முதலைக் கடனாக விஸ்வரூபம் எடுக்கிறது.

அதுவே ஒரு சாமான்ய மனிதனை வெட்டி வீசப் போகும் ஒரு பயங்கரமான சதித் திட்டமாக மாறிப் போகின்றது. அதுவே ஆள் சேர்க்க வந்த ஒரு கங்காணி பயன்படுத்தப் போகும் துருப்புச் சீட்டு. ஆக பிறந்த மண்ணிலேயே அந்தச் சாமான்ய மனிதன் ஒரு கடனாளியாகத் தான் புலம் பெயர்கிறான்.

இது அதோடு முடிந்து போவது இல்லை. மலாயாவில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அங்கேயும் பற்பல சடங்குச் சம்பிராதயச் செலவுகள்.

காத்தமுத்துக்கு காதுகுத்து…
தீத்தம்மாவுக்கு திருமணம்…
ஈச்சப்பனுக்கு ஈமச்சடங்கு…
வாத்தியார் மக வயசுக்கு வந்துட்டா

என்று இப்படி எக்கச் சக்கமான சடங்குச் சங்கதிகள். சம்பிரதாயச் சாணக்கியங்கள். அதே கங்காணியிடம் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை. அதுவும் அதோடு நின்று போவது இல்லை. தொடரும் தொடர்வண்டிச் சரக்காய் மாறிப் போகின்றது. மேலும் ஒரு வரலாற்றுத் தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

சான்றுகள்:

1. Tragic Orphans: Indians in Malaysia" by Carl Vadivella Belle, Publisher: Institute of Southeast Asian Studies

2. Sandhu, Kernial Singh (2006). Indian Communities in Southeast Asia. ISEAS Publishing.

3. Arasaratnam, Sinnappah (1970). Indians in Malaysia and Singapore. London: Oxford University Press

4. Amarjit Kaur, Indians in Malaysia, 1900–2010: Different Migration Streams, One Diaspora In: Tracing the New Indian Diaspora



 

23 மார்ச் 2022

மலாயாவின் முதல் ஒலிம்பிக் வீரர் சின்னையா கருப்பையா

மலேசிய ஒலிம்பிக் வரலாற்றில், மலேசியாவின் முதல் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில், மலேசியாவைப் பிரதிநிதித்த முதல் மலேசியர்; முதல் மலேசிய இந்தியர்; முதல் மலேசியத் தமிழர் *சின்னையா கருப்பையா* (Sinnayah Karuppiah).


66 ஆண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயக் காலனித்துவக் காலத்தில், மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஒரு தமிழர், ஓர் அனைத்துலகப் போட்டியில் மலாயாவைப் பிரதிநிதித்து உள்ளார்.

மணி ஜெகதீசன் அவர்கள் 1960 ரங்கூன் ஒலிம்பிக்கில் ஓடுவதற்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே, சின்னையா கருப்பையா, 1956 மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் தடம் பதித்து உள்ளார்.

1956-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா; மெல்பர்ன் நகரில் 13-ஆவது ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 100 மீட்டர் தகுதிச் சுற்றில் 11.56 விநாடிகளில் ஓடி, சின்னையா கருப்பையா இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். இருந்தாலும் இறுதிச் சுற்றில் 4-ஆம் இடத்தைப் பிடித்தார்.

சின்னையா கருப்பையா 1937-ஆம் ஆண்டில் ரவாங்கில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சிரமப்பட்டு பயிற்சி எடுத்தவர். சப்பாத்து இல்லாமல் வெறுங்கால்களில் ஓடியவர்.

இருப்பினும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தேர்வு செய்யப் பட்டதால், கூட்டரசு மலாயா ஒலிம்பிக் மன்றம் இவருக்கு காலணிகள், ஆடை அணிகலன்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்து உள்ளது.

1956 மெல்பர்ன் 13-ஆவது ஒலிம்பிக் போட்டி நிகழ்ச்சியில் 33 பேர் கொண்ட மலாயா குழுவினர் பங்கு எடுத்துக் கொண்டனர். (32 ஆண்கள்; ஒரு பெண்).


அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தில் (International Olympic Committee) சேர்வதற்கு, புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டரசு மலாயா ஒலிம்பிக் மன்றத்திற்கு (Federation of Malaya Olympic Council) 1954-ஆம் ஆண்டில் அனுமதி கிடைத்தது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 1896-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டாலும், அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு 1954-ஆம் ஆண்டில் தான் மலாயாவுக்கு அனுமதி கிடைத்தது.

அதே அந்த மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் மற்றொரு தமிழர், மாணிக்கவாசம் அரிச்சந்திரா, 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு சாதனை படைத்து உள்ளார். அவரையும் நாம் நினைவில் கொள்வோம்..

1956 மெல்பர்ன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் மலாயாவைப் பிரதிநிதித்த இதர இந்தியர்கள்:

# சுபாத் நடராஜா
# மாணிக்கம் சண்முகநாதன்
# சலாம் தேவேந்திரன்
# ராஜரத்தினம் செல்வநாயகம்
# நோயல் அருள்

மலேசியாவின் ஒலிம்பிக் வரலாற்றில் சாதனை படைத்த முதல் மலேசியத் தமிழர் *சின்னையா கருப்பையா* 1990-ஆம் ஆண்டு தன்னுடைய 53-ஆவது வயதில் ஒரு சாலை விபத்தில் காலமானார்.

அவர் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற வரலாற்றுச் சாதனை மமேசிய வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.03.2022

*மலேசியாவின் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள்*

சான்றுகள்:

1. Olympedia – Sinnayah Karuppiah Jarabalan - Competed in Olympic Games. www.olympedia.org.

2. Evans, Hilary; Gjerde, Arild; Heijmans, Jeroen; Mallon, Bill; et al. "Sinnayah Karuppiah Jarabalan Olympic Results". Olympics at Sports-Reference.com. Sports Reference LLC.

 

27 பிப்ரவரி 2022

மலேசிய அரசியலமைப்பு

(தமிழில் மொழிபெயர்த்து விக்கிப்பீடியாவில் பதிவு செய்து இருக்கிறேன். எதிர்காலத்தில் பலருக்கும் பயனளிக்கும். மொழிபெயர்க்க மூன்று நாட்கள் பிடித்தன.)

இணைய முகவரி: https://ta.wikipedia.org/s/az02



மலேசிய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of Malaysia; மலாய்: Perlembagaan Malaysia;) என்பது மலேசியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். 1957-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. மொத்தம் 183 சட்டப் பிரிவுக் கூறுகளைக் கொண்டுள்ளது. மலேசிய அரசியலமைப்பு என்பது ஓர் உச்சக்கட்ட சட்ட ஆவணமாகும்.

# மலாயா ஒப்பந்தம் 1948
# சுதந்திர அரசியலமைப்பு 1957


ஆகிய இரண்டு ஆவணங்களும் ஏற்கனவே மலாயாவில் உருவாக்கப்பட்ட சட்ட ஆவணங்கங்களாகும்.

மேலே குறிப்பிடப்பட்ட முந்தைய சட்ட ஆவணங்களைச் சார்ந்த நிலையில் தான் புதிய மலேசிய அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது.

தொடக்கத்தில் மலாயா கூட்டமைப்பு (ஆங்கிலம்: Federation of Malaya; மலாய்: Persekutuan Tanah Melayu;) என்று அழைக்கப்பட்டது. சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் மலாயா மாநிலங்கள், கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இணைந்த போது, ’மலேசியா’ எனும் பெயர் உருவானது.
பொருளடக்கம்

    1 பொது
    2 வரலாறு
        2.1 ரீட் ஆணையம்
        2.2 அரசியலமைப்பு
    3 கட்டமைப்பு
        3.1 பாகங்கள்
        3.2 அட்டவணைகள்
    4 அடிப்படை சுதந்திரங்கள்
        4.1 பிரிவு 5 – வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை
        4.2 பிரிவு 6 – அடிமைத்தனம் இல்லை
        4.3 பிரிவு 7 – பின்னோக்கிய குற்றவியல் சட்டங்கள்; தண்டனையில் அதிகரிப்பு; மீண்டும் குற்றவியல் விசாரணைகளை
        4.4 பிரிவு 8 – சமத்துவம்
            4.4.1 சிறப்பு நிலைகள் பாதுகாப்பு
        4.5 பிரிவு 9 – நாடு கடத்தல் தடை; நடமாடும் உரிமை
        4.6 பிரிவு 10 – பேச்சு உரிமை, ஒன்றுகூடல் மற்றும் சங்கம்
        4.7 அரசியலமைப்பு பகுதி: III, பிரிவு: 152, 153, 181
        4.8 ஒன்று கூடும் உரிமை பற்றிய சட்டங்கள்
            4.8.1 கடுமையான குற்றங்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனைகள்
        4.9 பிரிவு 11 - மதச் சுதந்திரம்
    5 மேலும் காண்க
    6 மேற்கோள்கள் - குறிப்புகள்

பொது

மலேசிய அரசியலமைப்பு மலேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியலமைப்பு முடியாட்சியாக நிலை நிறுத்துகின்றது. அதே வேளையில் யாங் டி பெர்துவான் அகோங் எனும் மாமன்னர் அவர்களை மலேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் உறுதிபடுத்துகின்றது.[3]

அரசாங்கத்தின் மூன்று முக்கிய கிளைகளை நிறுவுவதற்கும்; முறையாகச் செயல்படுவதற்கும் மலேசிய அரசியலமைப்பு வழி வகுக்கின்றது. அந்த மூன்று கிளைகள்:

முதலாவது: டேவான் ராக்யாட் எனப்படும் மக்களவை; டேவான் நெகாரா எனப்படும் செனட்டர் அவை; ஆகிய இரு அவைகளைக் கொண்டுள்ள நாடாளுமன்றம்,

இரண்டாவது: பிரதமர் மற்றும் அவரின் அமைச்சரவை தலைமையிலான நிர்வாகப் பிரிவு.

மூன்றாவது: கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமையிலான நீதித்துறைப் பிரிவு.

வரலாறு

அரசியலமைப்பு மாநாடு: 1956 ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கி 1956 பிப்ரவரி 6-ஆம் தேதி வரை இங்கிலாந்து, லண்டனில் ஓர் அரசியலமைப்பு மாநாடு நடைபெற்றது.

அதில் மலாயா கூட்டமைப்பின் முதல்வர் துங்கு அப்துல் ரகுமான்; மற்றும் மூன்று அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் மலாயாவின் அப்போதைய பிரித்தானிய உயர் ஆணையர் மற்றும் அவரின் ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.[5]
ரீட் ஆணையம்

மலாயாவை சுயமாகச் சுதந்திரமாக ஆளும் ஒரு கூட்டமைப்புக்கு ஓர் அரசியலமைப்பை வகுக்க வேண்டும்; அதற்கு ஓர் ஆணையத்தை நியமிக்க வேண்டும்; என அந்த அரசியலமைப்பு மாநாடு முன்மொழிந்தது.[6] அந்த முன்மொழிவை இரண்டாம் எலிசபெத் ராணியாரும்; மலாயா மலாய் ஆட்சியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.

அத்தகைய ஓர் உடன்படிக்கைக்கு இணங்க, காமன்வெல்த் நாடுகளின் அரசியலமைப்பு வல்லுநர்களைக் கொண்டு ஓர் ஆணையம் அமைக்கப் பட்டது. அதற்குப் பெயர் ரீட் ஆணையம். புதிய அரசியலமைப்பிற்குப் பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்காக வில்லியம் ரீட் (Lord William Reid) என்பவரின் தலைமையில் அந்த ஆணயம் அமைக்கப் பட்டது.

ரீட் ஆணையத்தின் அறிக்கை 11 பிப்ரவரி 1957-இல் தயாரித்து முடிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரித்தானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு பணிக்குழு; மலாயா ஆட்சியாளர்களின் சம்மேளனம்; மலாயா கூட்டமைப்பு அரசாங்கம்; ஆகிய மூன்று தரப்பினரால் ரீட் ஆணையத்தின் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் இவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மலாயாவின் அரசியலமைப்பு இயற்றப்பட்டது.

அரசியலமைப்பு

அரசியலமைப்புச் சட்டம், 1957 ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஆனாலும் மலாயாவிற்கு முறையான சுதந்திரம் 1957 ஆகஸ்ட் 31-ஆம் தேதி தான் கிடைக்கப் பெற்றது.[8]

1963-ஆம் ஆண்டில் சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை மலாயா கூட்டமைப்பில் கூடுதல் உறுப்பு நாடுகளாக ஏற்றுக் கொள்வதற்கும்; மலேசியா ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்கும்; அந்த அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டது. அந்தத் திருத்தத்தின் வழி மலாயா கூட்டமைப்பின் பெயர் "மலேசியா" என்று மாற்றம் செய்யப் பட்டது.

கட்டமைப்பு

மலேசிய அரசியலமைப்பு, அதன் 2010 நவம்பர் 1-ஆம் தேதி வடிவத்தில், 230 தொகுப்புகள்; 13 அட்டவணைகள்; 57 திருத்தங்கள்; 15 பகுதிகளைக் கட்டமைப்பாகக் கொண்டுள்ளது.

பாகங்கள்

    பகுதி I - மாநிலங்கள், மதம் மற்றும் கூட்டமைப்பின் சட்டம்
    (Part I – The States, Religion and Law of the Federation)

    பகுதி II - அடிப்படைச் சுதந்திரங்கள்
    (Part II – Fundamental Liberties)

    பகுதி III - மலேசியக் குடியுரிமை
    (Part III – Malaysian nationality law; Citizenship)

    பகுதி IV - கூட்டமைப்பு
    (Part IV – The Federation)

    பகுதி V - மாநிலங்கள்
    (Part V – The States)

  பகுதி VI - கூட்டமைப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள்
    (Part VI – Relations Between the Federation and the States)

    பகுதி VII - நிதி ஒதுக்கீடுகள்
    (Part VII – Financial Provisions)

    பகுதி VIII - மலேசியத் தேர்தல்கள்
    (Part VIII – Elections in Malaysia)

    பகுதி IX - நீதித்துறை
    (Part IX – The Judiciary)

    பகுதி X - மலேசியாவில் பொதுச் சேவைகள்
    (Part X – Civil Service in Malaysia|Public Services)

  பகுதி XI - பொது; மற்றும் அவசரக்கால அதிகாரங்களுக்குப் பாதகமான செயல்கள்; மற்றும் குற்றங்களுக்கு எதிரான சிறப்பு அதிகாரங்கள்; திட்டமிட்ட வன்முறைகள்
    (Part XI – (Special Powers Against Subversion, Organised Violence, and Acts and Crimes Prejudicial to the Public and Emergency Powers)

    பகுதி XII - பொது
    (Part XII – (General and Miscellaneous)

    பகுதி XIIA - சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான கூடுதல் பாதுகாப்புகள்
 
(Additional Protections for States of Sabah and Sarawak)

    பகுதி XIII - தற்காலிக மற்றும் இடைநிலை ஏற்பாடுகள்
    (Part XIII – (Temporary and Transitional Provisions)

    பகுதி XIV - ஆட்சியாளர்களின் இறையாண்மைக்கான பாதுகாப்பு
    (Part XIV – (Saving for Rulers' Sovereignty, etc.)

    பகுதி XV - யாங் டி பெர்துவான் அகோங் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான செயல்முறைகள்

    (Part XV – (Proceedings Against the Yang di-Pertuan Agong and the Rulers)

அட்டவணைகள்

அரசியலமைப்பின் அட்டவணைகளின் பட்டியல்:

    முதல் அட்டவணை - First Schedule [Articles 18(1), 19(9)] – பதிவு அல்லது இயற்கை மயமாக்கலுக்கான விண்ணப்பங்களின் உறுதிமொழி

    (Oath of Applications for Registration or Naturalization)

    இரண்டாம் அட்டவணை - Second Schedule [Article 39] – மலேசியத் தினத்திற்கு முன்; மலேசியத் தினத்தில்; அல்லது மலேசியத் தினத்திற்குப் பிறகு பிறந்த நபர்களின்; சட்டத்தின் செயல்பாட்டின் மூலம் குடியுரிமை மற்றும் குடியுரிமை தொடர்பான துணை விதிகள்

    (Citizenship by operation of law of persons born before, on or after Malaysia Day and supplementary provisions relating to citizenship)

    மூன்றாவது அட்டவணை - Third Schedule [Articles 32 and 33] - யாங் டி பெர்துவான் அகோங் மற்றும் துணை யாங் டி பெர்துவான் அகோங் தேர்தல்

    (Election of Yang di-Pertuan Agong and Timbalan Yang di-Pertuan Agong)

    நான்காவது அட்டவணை - Fourth Schedule [Article 37] - யாங் டி பெர்துவான் அகோங் மற்றும் துணை யாங் டி பெர்துவான் அகோங் பதவிப் பிரமாணங்கள்

    (Oaths of Office of Yang di-Pertuan Agong and Timbalan Yang di-Pertuan Agong)

    ஐந்தாவது அட்டவணை - Fifth Schedule [Article 38(1)] – ஆட்சியாளர்களின் மாநாடு

    (The Conference of Rulers)

    ஆறாவது அட்டவணை - Sixth Schedule [Articles 43(6), 43B(4), 57(1A)(a), 59(1), 124, 142(6)] – உறுதிமொழிகள் மற்றும் உறுதிமொழிகளின் படிவங்கள்

    (Forms of Oaths and Affirmations)

    ஏழாவது அட்டவணை - Seventh Schedule [Article 45] - செனட்டர்களின் தேர்தல்

    (Election of Senators)

    எட்டாவது அட்டவணை - Eighth Schedule [Article 71] - மாநில அரசியலமைப்புகளில் சேர்க்கப்பட வேண்டிய விதிகள்
    (Provisions to be inserted in State Constitutions)

    ஒன்பதாவது அட்டவணை - Ninth Schedule [Articles 74, 77] – சட்டமன்றப் பட்டியல்கள்

    (Legislative Lists)

    பத்தாவது அட்டவணை - Tenth Schedule [Articles 109, 112C, 161C(3)] – மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியங்கள் மற்றும் வருவாய் ஆதாரங்கள்

    (Grants and Sources of Revenue assigned to States)

    பதினொன்றாவது அட்டவணை - Eleventh Schedule [Article 160(1)] – விளக்கம் மற்றும் பொது உட்பிரிவுகள் கட்டளைச் சட்டம் 1948 (மலாயன் யூனியன் ஆணை எண். 7, 1948), அரசியலமைப்பின் விளக்கத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது

    (Provisions of the Interpretation and General Clauses Ordinance 1948 (Malayan Union Ordinance No. 7 of 1948), Applied for Interpretation of the Constitution)

    பன்னிரண்டாவது அட்டவணை - Twelfth Schedule - 1948-ஆம் ஆண்டு மலாயா ஒப்பந்தக் கூட்டமைப்பு விதிகள், மெர்டேகா நாளுக்குப் பிறகு சட்டம் இயற்றும் குழுவிற்குப் பயன்படுத்தப்பட்டது (நிறுத்தப்பட்டது)

    (Provisions of the Federation of Malaya Agreement, 1948 as Applied to the Legislative Council after Merdeka Day (Repealed)

    பதின்மூன்றாவது அட்டவணை- Thirteenth Schedule [Articles 113, 116, 117] – தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான விதிகள்

    (Provisions relating to delimitation of Constituencies)

அடிப்படை சுதந்திரங்கள்

மலேசியாவில் அடிப்படை சுதந்திரங்கள், அரசியலமைப்பு பிரிவுகள் 5 முதல் 13 வரை, பின்வரும் தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டு உள்ளன:

ஒரு நபரின் சுதந்திரம்; அடிமைத்தனம்; மற்றும் கட்டாய உழைப்புத் தடை; பின்னோக்கிய குற்றவியல் சட்டங்கள் (retrospective criminal laws); மீண்டும் மீண்டும் விசாரணைகள்; சமத்துவம்; நாடு கடத்தப் படுவதைத் தடை செய்தல் (prohibition of banishment); நடமாட்டச் சுதந்திரம்; பேச்சு சுதந்திரம்; ஒன்றுகூடல் சுதந்திரம்; மதச் சுதந்திரம்; கல்வி தொடர்பான உரிமைகள்; மற்றும் சொத்து உரிமைகள்.

இந்தச் சுதந்திரங்கள் மற்றும் உரிமைகளில் சில வரம்புகள் அல்லது விதிவிலக்குகளுக்கு உட்பட்டவை. மற்றும் குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும் சில சுதந்திரங்களும் உள்ளன. (எடுத்துக்காட்டாக, பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம்).

பிரிவு 5 – வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை

(Article 5 – Right to Life and Liberty)

பிரிவு 5 - பல அடிப்படை மனித உரிமைகளை உள்ளடக்கியது:

    சட்டத்திற்கு உட்பட்டதைத் தவிர, மற்றபடி எந்த ஒரு நபரின் உயிரையும் அல்லது அவரின் தனிப்பட்ட உரிமையையும் பறிக்க முடியாது.
    (No person may be deprived of life or personal liberty except in accordance with law.)

    சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டு உள்ள ஒரு நபர் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப் படலாம் (ஆட்கொணர்வு மனு உரிமை).
    (A person who is unlawfully detained may be released by the High Court (right of habeas corpus)

    ஒருவர் கைது செய்யப் பட்டதற்கான காரணங்களைத் தெரிவிக்கவும்; அவர் விரும்பும் வழக்கறிஞரால் சட்டப் பூர்வமாகப் பிரதிநிதித்துவப் படுத்தப் படவும்; அவருக்கு உரிமை உண்டு.
    (A person has the right to be informed of the reasons of his arrest and to be legally represented by a lawyer of his choice.)

    மாஜிஸ்திரேட் அனுமதியின்றி ஒருவரை 24 மணி நேரத்திற்கு மேல் கைது செய்யக் கூடாது.
    (A person may not be arrested for more than 24 hours without a magistrate's permission.)

பிரிவு 6 – அடிமைத்தனம் இல்லை

(Article 6 – No Slavery)


எந்த ஒரு நபரையும் அடிமைத் தனத்தில் வைக்கக் கூடாது என்று பிரிவு 6 கூறுகிறது. அனைத்து வகையான கட்டாய உழைப்பும் தடைசெய்யப் படுகிறது.

ஆனால் தேசிய சேவை சட்டம் 1952 போன்ற கூட்டாட்சி சட்டம், தேசிய நோக்கங்களுக்காகக் கட்டாயச் சேவையை வழங்கலாம். நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் போது ஒருவர் செய்யும் வேலை கட்டாய உழைப்பு அல்ல.

பிரிவு 7 – பின்னோக்கிய குற்றவியல் சட்டங்கள்; தண்டனையில் அதிகரிப்பு; மீண்டும் குற்றவியல் விசாரணைகளை

(Article 7 – No Retrospective Criminal Laws or Increases in Punishment and no Repetition of Criminal Trials)

குற்றவியல் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளில், இந்தப் பிரிவு பின்வரும் பாதுகாப்புகளை வழங்குகிறது:

    சட்டத்தால் தண்டிக்கப் பட முடியாத ஒரு செயலுக்காக அல்லது ஒரு தவறுக்காக எந்த நபரும் தண்டிக்கப்பட மாட்டார்.

    எந்த ஒரு நபரும் ஒரு குற்றத்திற்காக, அது செய்யப்பட்ட நேரத்தில், சட்டத்தால் பரிந்துரைக்கப் பட்டதை விட பெரிய தண்டனையை அனுபவிக்கக் கூடாது.

    ஒரு குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நபர், அல்லது தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர், நீதிமன்றத்தால் மறு விசாரணைக்கு உத்தரவிடப் பட்டால் தவிர, அதே குற்றத்திற்காக மீண்டும் விசாரிக்கப்பட மாட்டார்.

    * (பின்னோக்கிய குற்றவியல் சட்டங்கள்: (Retrospective Criminal Laws)

பிரிவு 8 – சமத்துவம்

(Article 8 – Equality)


சட்டப் பிரிவு (1)-இன் பிரிவு 8: சட்டத்தின் முன் அனைத்து நபர்களும் சமம்; மற்றும் அவர்களின் சமமான பாதுகாப்பிற்கும் உரிமை வழங்குகிறது.

சட்டப் பிரிவு (2): “இந்த அரசியலமைப்பால் வெளிப்படையாக அங்கீகரிக்கப் பட்டவை தவிர, குடிமக்களுக்கு எதிராக மதம், இனம், வம்சாவளி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தச் சட்டத்திலும் அல்லது எந்த ஓர் அலுவலகம் அல்லது வேலை வாய்ப்பின் கீழ் பணி அமர்த்தப் படுவதிலும் பாகுபாடு இருக்கக் கூடாது.

சிறப்பு நிலைகள் பாதுகாப்பு

பொது அதிகாரம் அல்லது சொத்தைக் கையகப் படுத்துதல்; சொத்தை வைத்து இருப்பது; அல்லது அகற்றுவது; அல்லது எந்த ஒரு வணிகம், தொழில், அல்லது வேலை வாய்ப்பை நிறுவுதல்; அல்லது செயல் படுத்துதல்; இவை தொடர்பான எந்த ஒரு சட்டத்தின் நிர்வாகத்திலும் பாகுபாடு இருக்கக் கூடாது.

அரசியலமைப்பின் கீழ் வெளிப்படையாக அனுமதிக்கப்படும் விதிவிலக்குகளில், தீபகற்ப மலேசியாவின் மலாய்க்காரர்கள் மற்றும் சபா மற்றும் சரவாக் பழங்குடியினருக்கான சிறப்பு நிலையைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளும் அடங்கும். (மலேசிய அரசியலமைப்பு பிரிவு 153 - Article 153 of the Constitution of Malaysia).

பிரிவு 9 – நாடு கடத்தல் தடை; நடமாடும் உரிமை

(Article 9 – Prohibition of Banishment and Freedom of Movement)


இந்தப் பிரிவு மலேசிய குடிமக்களை நாட்டில் இருந்து வெளியேற்றப் படாமல் பாதுகாக்கப் படுவதை உறுதி செய்கிறது. கூட்டமைப்பு நிலப் பகுதிகளில் முழுச் சுதந்திரமாக நடமாட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்பதையும் வலியுறுத்துகின்றது.

ஆனாலும் தீபகற்ப மலேசியா குடிமக்கள், சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்குச் செல்வதற்கு நாடாளுமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

பிரிவு 10 – பேச்சு உரிமை, ஒன்றுகூடல் மற்றும் சங்கம்

(Article 10 – Freedom of Speech, Assembly and Association)


மேலும் காண்க: 13 மே இனக்கலவரம்; லாலாங் நடவடிக்கை

பிரிவு 10(1): ஒவ்வொரு மலேசிய குடிமகனுக்கும் பேச்சு சுதந்திரம்; அமைதியான முறையில் ஒன்று கூடும் உரிமை; மற்றும் சங்கங்களை அமைக்கும் உரிமை போன்றவற்றுக்கு இந்தச் சட்டப் பிரிவு அனுமதி வழங்குகிறது.

ஆனால் அத்தகைய சுதந்திரம் மற்றும் உரிமைகள் முழுமையானவை அல்ல. மலாயா கூட்டாட்சியின் பாதுகாப்பு; பிற நாடுகளுடனான நட்புறவு; பொது ஒழுங்கு; ஒழுக்கம்; நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளைப் பாதுகாப்பது; நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது தூண்டுதல் ஆகியவற்றுக்கு எதிராக கட்டுப்பாடுகளை விதிப்பது; போன்றவற்றுக்கு அரசியலமைப்பு பிரிவு 10-இன் துணைப் பிரிவுகள் (2), (3), (4), மூலமாக நாடாளுமன்றத்திற்கு அனுமதி வழங்கப் படுகிறது.

அரசியலமைப்பு பகுதி: III, பிரிவு: 152, 153, 181

அரசியலமைப்பின் 10-ஆவது பிரிவு: பகுதி II; மலேசியாவில் உள்ள நீதித்துறை சமூகத்தால் "மிக முக்கியமானதாக" கருதப் படுகிறது. இந்தப் பிரிவின் மூலமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் உயர் கொள்கைகளில் பெரும்பாலானவை இழக்கப் படுவதாகவும் சொல்லப் படுகிறது.[10]

அரசியலமைப்பின் பகுதி III, பிரிவு 152, 153, 181: இந்தப் பிரிவின் விதிகளால் உருவாக்கப்பட்ட அல்லது பாதுகாக்கப்பட்ட தகவ்ல், உரிமை, தகுதி, பதவி, சிறப்புரிமை, இறையாண்மை அல்லது தனிச்சிறப்பு போன்றவற்றைப் பற்றி கேள்வி கேட்பதைத் தடை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றலாம் என்று 10-ஆவது பிரிவின் துணைப்பிரிவு (4) கூறுகிறது.

(Article 10 (4) states that Parliament may pass law prohibiting the questioning of any matter, right, status, position, privilege, sovereignty or prerogative established or protected by the provisions of Part III, Article 152, 153 or 181 of the Constitution.)
ஒன்று கூடும் உரிமை பற்றிய சட்டங்கள்

பொது ஒழுங்கு (பாதுகாப்பு) சட்டம் 1958 - (Public Order (Preservation) Act 1958): பொது ஒழுங்கு கடுமையாகச் சீர்குலைக்கப்படும்; அல்லது கடுமையாக அச்சுறுத்தப்படும் எந்த ஒரு பகுதியையும், ஒரு மாதக் காலத்திற்கு "பாதுகாக்கப்பட்ட பகுதி" ("proclaimed area") என்று சம்பந்தப்பட்ட அமைச்சர் தற்காலிகமாக அறிவிக்கலாம்.

பிரகடனப் படுத்தப்பட்ட பகுதிகளில் பொது ஒழுங்கைப் பராமரிக்க காவல் துறைக்கு சட்டத்தின் கீழ் விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

கடுமையான குற்றங்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனைகள்

சாலைகளை மூடுவதற்கும்; தடைகளை அமைப்பதற்கும்; ஊரடங்கு உத்தரவை விதிப்பதற்கும்; ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களைத் தடை செய்வதற்கும்; அல்லது ஒழுங்குபடுத்துவதற்கும் காவல் துறைக்கு அதிகாரங்கள் உள்ளன. .

இந்தச் சட்டத்தின் கீழ் பொதுவான குற்றங்களுக்கு ஆறு மாதங்களுக்கும் மேல் போகாத சிறைத் தண்டனையை விதிக்கலாம். ஆனால் கடுமையான குற்றங்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனைகள் கொடுக்கப் படலாம். அதில் சவுக்கடியும் அடங்கும். (எ.கா: தாக்குதல் ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்களைப் பயன்படுத்தி இருந்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை).[11]

பிரிவு 11 - மதச் சுதந்திரம்

(Article 11 – Freedom of religion)


பிரிவு 11: ஒவ்வொரு நபருக்கும் தன் சொந்த மதத்தைப் பின்பற்றுவதற்கும் வெளிப் படுத்துவதற்கும் உரிமை உள்ளது. ஒவ்வொரு நபருக்கும் தன் மதத்தைப் பிரசாரம் செய்யவும் உரிமை உண்டு.

ஆனாலும் மாநிலம் மற்றும் கூட்டாட்சி சட்டப் பகுதிகளைப் பொறுத்தவரை, அந்தச் சட்டங்கள் எந்த ஒரு மதக் கோட்பாட்டையும் கட்டுப் படுத்தலாம். அல்லது எந்த ஒரு மத நம்பிக்கையைப் பரப்புவதையும் கட்டுப் படுத்தலாம். இருப்பினும், முஸ்லிம் அல்லாதவர்கள் இடையே அவர்களின் சமயப் பணிகளை மேற்கொள்வதற்குச் சுதந்திரம் உள்ளது.

 

05 பிப்ரவரி 2022

கோலா சிலாங்கூர் வரலாறு

கோலா சிலாங்கூரின் வரலாறு 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்குகிறது. ஜொகூர் ஆட்சியின் கீழ், கோலா சிலாங்கூர் இருந்தது. ஜொகூரில் இருந்து துன் முகமட் எனும் அரசப் பிரதிநிதி, கோலா சிலாங்கூர் நிலப் பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்.


18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கோலா சிலாங்கூர் நகரம், சிலாங்கூர் சுல்தானகத்தின் தலைநகரமாகக இருந்தது. பின்னர் 1827-ஆம் ஆண்டில் கோலா லங்காட் பகுதியில் உள்ள ஜுக்ரா நகரத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர், 1870-களில் சிலாங்கூர் சுல்தானகம், கிள்ளான் நகரத்திற்கு மாற்றப்பட்டது.

மெலாவத்தி கோட்டை

சிலாங்கூர் ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கும் முகத்துவாரத்தில், கோலா சிலாங்கூர் நகரின் மேற்குப் பகுதியில், ஒரு குன்று உள்ளது. அதன் பெயர் சிலாங்கூர் குன்று. அங்கு ஒரு பெரிய கோட்டை உள்ளது. அதை மெலாவத்தி கோட்டை (Kota Malawati) என்று அழைக்கிறார்கள்.

16-ஆம் நூற்றாண்டில் மெலாவத்தி கோட்டை கட்டப்பட்டது. மலாக்காவின் கடைசி சுல்தானாக இருந்த சுல்தான் முகமட்டின் (Sultan Mahmud) மகன் துன் முகமட் (Tun Mahmud) கட்டியது.

ராஜா லூமு

17-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் இருந்து பூகிஸ்காரர்கள் சிலாங்கூரில் குடியேறினார்கள். கி.பி. 1756-ஆம் ஆண்டு ராஜா லூமு (Raja Lumu) என்பவரைத் தங்களின் முதல் சுல்தானாக நியமித்தார்கள். ராஜா லூமுவின் பெயர் சுல்தான் சலிஹுடின் ஷா (Sultan Salehudin Shah) எனப் பெயர் மாற்றம் கண்டது.

இவர் தான் மெலாவத்தி கோட்டைக்கு ஒரு புது வடிவம் கொடுத்தவர். கருங்கற்களைக் கொண்டு கோட்டைச் சுவர்களுக்கு வலிமை கொடுத்தவர். கோட்டையைச் சுற்றிலும் பீரங்கிகளையும் நிறுத்தி வைத்தவர்.

சுல்தான் இப்ராகிம் ஷா


சுல்தான் சலிஹுடின் ஷாவிற்குப் பின்னர் அவருடைய மகன் சுல்தான் இப்ராகிம் ஷா பதவிக்கு வந்தார். இவர் மேலும் அந்தக் கோட்டையின் தற்காப்பு அரண்களுக்கு வலு சேர்த்தார்.

மெலாவத்தி குன்றின் அடிப்பாகத்தில் மேலும் கூடுதலாகப் பீரங்கிகளைச் சேர்த்தார். அதில் ஒரு பெரிய பீரங்கியின் பெயர் ஸ்ரீ ரம்பாய் (Seri Rambai).

தஞ்சோங் கிராமாட் கோட்டை

டச்சுக்காரர்கள் எழுதி வைத்தக் குறிப்புகளின்படி மெலாவத்தி கோட்டையில் 68 பீரங்கிகள் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. இந்தச் சமயத்தில் தான் தஞ்சோங் கிராமாட் குன்றில் மேலும் ஒரு கோட்டை கட்டப் பட்டது.

கி.பி. 1784-ஆம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானகம் மலாக்காவை ஆட்சி செய்த டச்சுக்காரர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. அதற்கு மறு தாக்குதலாக 11 டச்சுக் கப்பல்கள் கடலில் இருந்து கோலா சிலாங்கூரைத் தாக்கின.

ராஜா முகமட் அலி

கோலா சிலாங்கூர் மீதான டச்சுத் தாக்குதலுக்கு டிர்க் வான் கோகன் (Dirk van Hogen) என்பவர் தலைமை வகித்தார். சிலாங்கூர் சுல்தானகத்திற்கு எதிராக இந்தோனேசியாவின் சியாக் (Siak) அரசும் களம் இறங்கியது. ராஜா முகமட் அலி (Raja Muhammad Ali of Siak) என்பவர் தலைமை தாங்கினார். பயங்கரமான போர்.

கி.பி. 1784-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ஆம் தேதி டச்சுப் படைகள் கோலா சிலாங்கூர் கடற்கரையில் தரை இறங்கின. மெலாவத்தி குன்றை முற்றுகை இட்டன.

கோலா சிலாங்கூர் சுல்தான் இப்ராஹிம் ஷாவின் படைகள் காட்டுக்குள் தஞ்சம் அடைந்தன. கோலா சிலாங்கூரில் இருந்த இரு கோட்டைகளும் டச்சுக்காரர்களின் கரங்களில் வீழ்ந்தன.

அல்திங்பர்க் கோட்டை

அதன் பின்னர் மெலாவத்தி கோட்டை அல்திங்பர்க் (Altingburg) கோட்டை என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. தஞ்சோங் கிராமாட் கோட்டை உத்ரேட் (Utrecht) என்று பெயர் மாற்றம் கண்டது.

மலாக்காவை டச்சுக்காரர்கள் கி.பி 1641-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1825-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்கள். 183 ஆண்டுகள். இடை இடையே டச்சுக்காரர்களுக்கு ஆங்கிலேயர்களின் தொல்லைகள். ரியாவ் தீவுகளில் இருந்து பூகிஸ்காரர்களின் தொந்தரவுகள்.

அந்தக் காலக் கட்டத்தில் மலாயா தீபகற்பத்தின் தென் பகுதியில் ஜொகூர் சுல்தானகம் உச்சத்தில் இருந்தது. கி.பி. 1606-ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தானகத்துடன் டச்சுக்காரர்கள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தினால் ஜொகூர் சுல்தானகம் இந்தோனேசிய வாணிகத்தைத் தன்னகப் படுத்திக் கொண்டது.

டச்சுக்காரர்கள் மீது தாக்குதல்கள்

வெகு நாட்களாகவே கோலா சிலாங்கூர் ஆளுநர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் பிணக்குகள். பெரும்பாலானவை வணிகம் தொடர்பானவை.

இந்தோனேசிய - கோலா சிலாங்கூர் வர்த்தகத்தை ஜொகூர் சுல்தானகம் தன்னகப் படுத்திக் கொண்டதும், மலாக்கா டச்சுக்காரர்கள் மீது கோலா சிலாங்கூர் ஆட்சியாளர்களுக்கு கோப தாபங்கள். அதனால் டச்சுக்காரர்கள் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தினார்கள்.

கோலா சிலாங்கூர் கடல் கொள்ளையர்கள்

அந்தச் சமயத்தில் இந்தியா, இலங்கை, பாரசீக நாடுகளில் இருந்து வரும் கப்பல்களைக் கடல் கொள்ளையர்கள், மலாக்கா நீரிணையில் சூறையாடி வந்தார்கள். அந்தக் கடல் கொள்ளையர்களுக்குக் கோலா சிலாங்கூர் அடைக்கலம் தருவதாக டச்சுக்காரர்களின் குற்றச்சாட்டு.

அந்தக் காலக் கட்டத்தில் மலாயா தீபகற்பத்தில் ஈய வணிகம் கொடி கட்டிப் பறந்தது. அந்த வணிகத்திற்கு கோலா சிலாங்கூர் தடையாக இருந்தது. டச்சுக்காரர்கள் ஒட்டு மொத்த வியாபாரத்தையும் தங்கள் பிடிக்குள் கொண்டுவர ஆசைப் பட்டார்கள்.

கோலா சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் ஷா


கோலா சிலாங்கூர் போரில், கோலா சிலாங்கூரில் இருந்த இரு கோட்டைகளும் டச்சுக்காரர்களின் கைகளில் வீழ்ந்தன. அதன் பின்னர் அவர்கள் கோட்டைகளுக்குப் பலமான சுவர்களை எழுப்பினார்கள்.

பீரங்கிக் குண்டுகள் ஊடுருவிச் செல்ல முடியாத அளவிற்கு வலுவான சுவர்த் தடுப்புகளைப் போட்டார்கள். இருந்தாலும் அந்தத் தற்காப்பு அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

காட்டுக்குள் தஞ்சம் அடைந்த கோலா சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் ஷாவின் படைகள் மறுபடியும் தாக்குதல்கள் நடத்தின. இந்த முறை பகாங் பகுதியில் இருந்து 2000 பேர் மலாய்க்காரர்கள் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

கோலா சிலாங்கூர் உத்ரேட் கோட்டை

1785 ஜுன் 28-ஆம் தேதி டச்சுக்காரர்களிடம் இருந்து இரு கோட்டைகளும் மீட்கப் பட்டன. அல்திங்பர்க் (Altingburg) கோட்டையும் உத்ரேட் (Utrecht) கோட்டையும் கோலா சிலாங்கூர் ஆட்சியாளர்களின் கைகளுக்குள் வந்தன்.

அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து டச்சுக்காரர்கள் இன்னொரு முறை தாக்குதல் நடத்தினார்கள். கடலில் இருந்தே பீரங்கிகளால் மெலாவத்தி கோட்டையைத் தாக்கினார்கள்.

கோலா சிலாங்கூர் கற்பாறைச் சிதைவுகள்

ஆனால் மெலாவத்தி கோட்டையைத் தரை மார்க்கமாக வந்து தாக்குதல் செய்ய முடியவில்லை. அந்தக் கோட்டை 1871-ஆம் ஆண்டு வரை மலாய்க்காரர்களின் பிடியில் இருந்தது. அதன் பின்னர் அந்தக் கோட்டைகளை ஆங்கிலேயர்கள் உடைத்துப் போட்டு விட்டனர்.

கோலா சிலாங்கூர் நகரில் வரலாறு படைத்த அல்திங்பர்க் கோட்டையும்; உத்ரேட் கோட்டையும்; இப்போது அங்கே இல்லை. அந்த இடங்களில் கற்பாறைச் சிதைவுகள் மட்டுமே காட்சிப் பொருள்களாகக் காணக் கிடைக்கின்றன.

(இந்தக் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவிலும்; மலாக்கா முத்துக்கிருஷ்ணன் வலைத் தளத்திலும் பதிவாகி உள்ளது.)

https://ta.wikipedia.org/s/ay96


சான்றுகள்:

1. SEJARAH DAERAH KUALA SELANGOR - http://kualaselangor.selangor.gov.my/kualaselangor.php/pages/view/99?mid=210

2. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, vol. 69, no. 2 (271)

3. Bukit Melawati, or Melawati Hill, is also an important historical site that offers interesting insights into Kuala Selangor’s fascinating history. - https://www.visitselangor.com/bukit-melawati/

4. Kota Kuala Selangor - Located near the mouth of the Selangor River, the fort complex at Kuala Selangor actually consists of two forts – the larger stone fort of Kota Malawati on Bukit Selangor and a smaller earthworks fort on Bukit Tanjong Keramat about a kilometre and a half to the northeast. - http://www.sabrizain.org/malaya/sgor5.htm

5. Kuala Selangor as the Selangor earliest administration centre and also the beginning of the Royal Selangor Institution created by Raja Lumu (Sultan Salehuddin) in 1766. - https://selangor.travel/listing/kuala-selangor-district-historical-museum/

6. Kuala Selangor was conquered by Dutch in 1784 while attempting to expand their base in Malacca (Melaka) for a share in the tin trade of Perak and Selangor. Bukit Melawati is a hill overlooking Kuala Selangor and the Strait of Malacca. The Dutch destroyed the existing fortifications on the hill during their 1784 invasion, and built a European-style castle, naming it Fort Atlingsburg after their commander. By the end of the 17th century, the Bugis conquered it and in 1857, the Selangor government was formed. - https://www.kuala-selangor.com/

7. On 17 May 1606, Raja Bongsu, accompanied by 3,000 men and 50 galleys met Matelieff de Jonge.18 A treaty, known as the Dutch-Johor agreement of 1606, was signed. - https://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_2014-07-14_095636.html



















 

04 பிப்ரவரி 2022

நேதாஜியின் குடும்பத்தினர்

சுபாஷ் சந்திரபோஸ். மனுக்குலம் பார்த்த வரலாற்று மாந்தர்களில் ஓர் அற்புதமான அவதாரம். இந்தியர்களின் உயிர் ஊன்களில் ஈரமான விழுதுகளை விளைத்துச் சென்ற மாபெரும் மனிதர்.

நேதாஜியின் அரசியல் வாழ்க்கை சுனாமிகளும், சூறாவளிகளும், சுழற்சிகளும், கொந்தளிப்புகளும் நிறைந்தவை. ஏறக்குறைய இருபது ஆண்டு கால அரசியல் வாழ்க்கை. அவற்றில் ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம்.

நேதாஜியின் பேத்தி அனிதா

விடுதலை உணர்வுகளில் வீரமான வசனங்களை எழுதிச் சென்ற ஒரு சகாப்தம். ஆங்கிலேய அடிமைத் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, போராட்ட வேள்வியில் இறங்கி, முரசு வாகை மழையில் முழுமையாய் நனைந்தவர்.

_எனக்கு இரத்தம் கொடுங்கள்... இந்தியாவிற்குச் சுதந்திரத்தைக் கொடுக்கிறேன்_ என்று மாபெரும் புரட்சி செய்த ஒரு விடுதலைக் கலசம்.

நேதாஜி  - அவரின் மனைவி எமிலி

1943 பிப்ரவரி 8-ஆம் தேதி, கடலுக்கு அடியில் ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக ஜப்பானுக்குப் பயணமானர். 24000 கி.மீ தூரம். 91 நாட்கள் சாகசப் பயணம்.

ஜெர்மனி கால்சபாட் எனும் இடத்தில்
நேதாஜி; அவரின் மனைவி எமிலி (1935)

மலாயாவில் பயணம் என்றால் பினாங்கு, ஈப்போ, கம்பார், ரவாங், கோலாலம்பூர், சிரம்பான், மலாக்கா, மூவார், பத்து பகாட், ஜொகூர் பாரு போன்ற நகரங்களுக்கு வருகை செய்து உள்ளார். பெரும்பாலும் சிங்கப்பூரில் அவரின் விடுதலைப் பணிகள்.

நேதாஜியின் மகளும் மனைவியும்

அவரின் குடும்பத்தினர் தற்போது ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் வாழ்ந்து வருகின்றனர்.

2022 ஜனவரி 22-ஆம் தேதி, பெர்லினில் உள்ள இந்திய தூதரகத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, *போஸ் 125* எனும் சிறப்புக் கண்காட்சி நடத்தப் பட்டது.

நேதாஜியின் அரிய படங்கள், அரிய தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் அடங்கிய கண்காட்சி. இந்தியத் தூதரக வளாகத்தில் ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் அரிஷ் பர்வதனேனி மற்றும் நேதாஜியின் மகள் பேராசிரியர் டாக்டர் அனிதா போஸ் (Prof. Dr. Anita Bose Pfaff) ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நேதாஜியின் குடும்பத்தினர் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டனர். அவர்களின் குடும்பப் படம்.


1. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் பேராசிரியர் டாக்டர் அனிதா போஸ் (Prof. Dr. Anita Bose-Pfaff; University of Augsburg). வயது 79.
2. நேதாஜியின் பேத்தி மாயா கரினா (Maya Carina)
3. நேதாஜியின் மூத்த கொள்ளுப் பேத்தி
4. நேதாஜியின் பேரன்
5. ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் அரிஷ் பர்வதனேனி

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.02.2022

குறிப்பு:

இந்தியா கல்கத்தாவில் நேதாஜி ஆவணக் காப்பகம் இருக்கிறது (Netaji Research Bureau). நேதாஜியைப் பற்றியும், இந்திய தேசிய இராணுவத்தைப் பற்றியும், பல அரிய தகவல்களை ’டிஜிட்டல்’ முறையில் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள்.

நேதாஜியின் பேரன் பீட்டர் அருண்

முனைவர் பட்டத்துக்காக நேதாஜியைப் பற்றி ஆய்வு செய்வதாகப் பதிந்து கொண்டு, காப்பகத்தின் உள்ளே செல்ல முடிந்தது. நேதாஜியைப் பற்றி அரிதிலும் அரிதான தகவல்கள் கிடைத்தன.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நேதாஜி தன் மனைவியையும் மகளையும் ஐரோப்பாவில் விட்டுச் சென்ற போது மகள் அனிதாவுக்கு வயது சில மாதங்கள்தான். அனிதா தன் தாயால் வளர்க்கப் பட்டார். அனிதா, பேராசிரியர் மார்ட்டின் பிபாப் (Professor Martin Pfaff) என்பவரை மணந்தார்.

நேதாஜியின் மகள் அனிதாவிற்கு பீட்டர் அருண் (Peter Arun), தாமஸ் கிருஷ்ணா (Thomas Krishna), மாயா கரினா (Maya Carina) எனும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  அனிதா, ஜெர்மன் நாட்டில் உள்ள ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் (University of Augsburg) பேராசிரியராகவும், ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியில் (Social Democratic Party of Germany) அரசியல்வாதியாகவும் இருந்து உள்ளார்.

நேதாஜியின் பேரப் பிள்ளைகள்:

1. பீட்டர் அருண் (Peter Arun);

2. தாமஸ் கிருஷ்ணா (Thomas Krishna);

3. பேத்தி மாயா கரினா (Maya Carina).

நேதாஜி. நம் நினைவுகளில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டு இருப்பவர். அவர் ஒரு கனல் கோபுரம். சாகாவரம் பெற்ற சரித்திர நாயகன்.

சான்றுகள்:

1. https://www.republicworld.com/india-news/general-news/netaji-subhas-chandra-bose-honoured-by-indian-embassy-in-germany-exhibition-inaugurated-articleshow.html

2. Bose, Sarmila (2005), "Love in the Time of War: Subhas Chandra Bose's Journeys to Nazi Germany (1941)

3. Gordon, Leonard A. (1990), Brothers against the Raj: a biography of Indian nationalists Sarat and Subhas Chandra Bose, Columbia University Press

4. Hayes, Romain (2011), Subhas Chandra Bose in Nazi Germany: Politics, Intelligence and Propaganda 1941-1943, Oxford University Press