அக்கரை எரிகிறது இக்கரை அழுகிறது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அக்கரை எரிகிறது இக்கரை அழுகிறது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 செப்டம்பர் 2019

அக்கரை எரிகிறது இக்கரை அழுகிறது

பூமத்திய ரேகைக்கு வடக்கே கடக ரேகை. தெற்கே மகர ரேகை. இரண்டு ரேகைக்கும் இடையில் ஒரு மழைக் காட்டு ரேகை. அதுதான் மலேசியா எனும் அழகிய பச்சைத் தாரகையின் ரேகை. 



அங்கே பச்சைப் பசேல் என்று பரந்து விரிந்து கிடக்கும் பசும் காடுகள். சரிகை போன்று சறுக்கி விழுந்து சலசலத்து ஓடும் நதிகள். சப்தக் கன்னிகள் சஞ்சரிக்கும் நீர்நிலைக் காடுகள். நீல நயனங்களில் நிதர்சனமான சத்தியங்கள். அத்தனையும் அங்கே நித்தியக் கல்யாணிகள் இசைக்கும் நயன ராகங்கள்.

அழகிய அந்தப் பசுமைக் காட்டில் அழகு அழகான தாவரங்கள்; அரிதிலும் அரிதான பூச்சிப் புழுக்கள். அற்புதமான விலங்கு இனங்கள்; அதிசயமான பறவை இனங்கள்; அபூர்வமான  பச்சைப் பயிர்கள். இயற்கை அன்னையே ஆசைப்படும் ரம்மியமான பாரிஜாதக் கோலங்கள். சரி.

அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் முன்பு காலத்தில் இரண்டே இரண்டு பருவ காலங்கள் தான் இருந்தன. ஒன்று மழைக் காலம். இன்னொன்று கோடைக் காலம். 




இப்போது அப்படி இல்லையே. எல்லாம் மாறிப் போய் விட்டன. நான்கு பருவ காலங்களாகி விட்டன.

1. மழைக்காலம் 2. டெங்கி காலம் 3. புகைக் காலம் 4. டுரியான் காலம். குழப்பம் வேண்டாமே. ஏன் என்றால் இப்போது அப்படித் தான் போய் கொண்டு இருக்கிறது. வேறு எப்படி சொல்வதாம்.

சமூக ஊடகங்களில் கிண்டல் அடிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. புகை மூட்டப் புகைச்சலைத் தான் சொல்ல வருகிறேன்.

இதில் சரவாக் மாநிலத்தின் துணை முதலமைச்சர் அண்மையில் ஓர் அறைகூவல் விடுத்தார். போர்னியோ காடுகளில் ஏற்பட்டு வரும் காட்டுத் தீ கொடூரங்களுக்கு இந்தோனேசியா தான் பொறுப்பு ஏற்க வேண்டும்; அனைத்துலகச் சமூகம் அந்த நாட்டைக் கண்டிக்க வேண்டும் எனும் அறைகூவல்.




அதே சமயத்தில் இன்னொரு வேண்டுகோளையும் முன்வைத்தார். இந்தோனேசியா அரசாங்கம் மலேசியாவுக்கு 10 இலட்சம் மாசு தடுப்பு முகமூடிகளைக் கொடுக்க வேண்டும். அதை ஓர் அபராதமாக அந்த அரசாங்கம் கருத வேண்டும் என்றும் சொன்னார்.

இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். அதுவே மலேசியர்கள் அனைவரின் ஆதங்கங்களைப் பிரதிபலிக்கும் அறைகூவலாகவும் இருக்கிறது.

தென்கிழக்காசிய நாடுகள் மீது புகைமூட்டப் போர்வைகள் என்பது அழையா விருந்தாளிகள். இன்று நேற்று நடக்கும் சமாசாரம் அல்ல.

1997-ஆம் ஆண்டில் தொடங்கிய ஆராதனைகள். இன்றும் தொடர்கின்றன. ஆனால் மக்களை நோகடிக்கும் அலைகழிப்புகள் எனும் பட்டப் பெயரில் பட்டயம் கட்டுகின்றன. 




காடுகளும் மேடுகளும் மறைந்து போகின்றன. ரோடுகளும் வீடுகளும் தெரியாமல் போகின்றன. நீலவானத்து மேகம் சாம்பல் கூடமாகிறது. பச்சைக் காடுகள் சாம்பல் காடாகின்றன. முகத்தை மூடிக் கொண்டு போகிற நிலைமை.

மூச்சு இழுத்து விட்டால் முகத்தில் அறையும் அமில நெடிகள். ஆக நம்ப நாட்டில் புகைமூட்டம் வந்தாலே போதும். இந்தோனேசியாவில் காடுகள் எரிகின்றன என்று பாலர் பள்ளி மாணவர்களே முகம் சுழிக்கிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் மாமியார் வீட்டுக்கு மருமகன் வந்து போவது வழக்க தோசம். அது போல மலேசியாவுக்கு புகைமூட்டம் வந்து போவது பழக்க தோசம். கேட்க ரொம்ப நல்லா இருக்கிறது இல்லீங்களா.

இப்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. இரண்டு மூன்று நாட்களாக மழை. ஒரு மாதத்திற்குப் பிறகு நீலவானம் அதிசயமாய்ச் சிரிக்கிறது.

இந்த காட்டுத் தீ சம்பவங்களுக்கு என்ன தான் காரணம். ஒவ்வோர் ஆண்டும் காடுகள் ஏன் தான் எரிக்கப் படுகின்றன?

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரையில் 328,724 ஹெக்டர் அளவு காடுகள் எரிக்கப்பட்டு உள்ளன. 




மிகவும் அதிகமாகப் பாதிக்கப் பட்டவை மேற்கு மத்திய களிமந்தான் காடுகள். அடுத்து ரியாவ் தீவுகள். அதற்கும் அடுத்து ஜாம்பி; தென் சுமத்திரா காடுகள்.

இந்தோனேசியாவை மட்டும் ஒட்டு மொத்தமாகக் குறை சொல்ல முடியாது. மலேசியாவிற்கும் ஓரளவிற்கு பங்கு உண்டு. நியாயமாகப் பார்ப்போம்.

ஒவ்வோர் ஆண்டும் ஜுலை மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரையில் இந்தோனேசியாவில் வறட்சிக் காலம். இந்தக் காலக் கட்டத்தில் தான், காட்டுத் தீ சம்பவங்களின் உச்சக் கட்டம். இந்தோனேசிய விவசாயிகள் களம் இறங்கி கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள்.

செம்பனை நடுவது; ஆடு மாடுகள் வளர்ப்பது; மீன்குளங்கள் வெட்டுவது. இவை போன்ற சின்னச் சின்ன வேளாண்மைகள். அந்தச் சாக்கில் சின்னதாய்க் காடுகளுக்கு நெருப்பு வைக்கிறார்கள். அதுவே கட்டுக்கு அடங்காமல் காட்டுத் தீயாக விஸ்வரூபம் எடுக்கிறது.




மிகவும் அதிகமாகப் பாதிக்கப் படுவது இந்தோனேசியா தான். நமக்கே இங்கே இப்படி என்றால் அங்கே எப்படி இருக்கும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

போர்னியோ களிமந்தான் பகுதியின் தலைநகரம் பாலங்காராயா. ஒரு வாரத்திற்கு முன்னர் அங்கே காற்று மாசுபாடு குறியீடு (ஏ.பி.ஐ) அளவு எவ்வளவு தெரியுங்களா. சொன்னால் மயக்கம் வந்து விடும்

இரண்டாயிரம் (2000). காற்று மாசுபாடு குறியீடு 200-க்கும் அதிகமானால் இங்கே நாம் பள்ளிக்கூடங்களை மூடி விடுகிறோம். காற்று மாசுபாடு குறியீடு 301 - 500 என்றாலே ஆபத்து. ஆனால் அங்கே பத்து மடங்கு அதிகமாக இருந்தது. மக்கள் எப்படி அவதிப்பட்டு இருப்பார்கள்.

2015-ஆம் ஆண்டில் இந்தோனேசியா படுமோசமான புகைமூட்டத்தை எதிர்க் கொண்டது. 500,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள். 70 பில்லியன் ரிங்கிட் வருமானம் இழப்பு. வேறு வழி இல்லாமல் இந்தோனேசியா அவசர காலத்தைப் பிரகடனம் செய்தது.

https://www.bbc.com/news/world-asia-34265922

மலேசியாவில் நான்கு முறை (1997, 2006, 2013, 2015-ஆம் ஆண்டுகளில்) படுமோசமான புகைமூட்டங்கள். 1997-ஆம் ஆண்டு கூச்சிங் நகரில் காற்று மாசுபாடு குறியீடு 860-ஐ தாண்டியது. 




அந்த ஆண்டில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, புருணை ஆகிய நாடுகளைப் புகை மூட்டங்கள் ஒட்டு மொத்தமாக மூடி விட்டன. 2013-ஆம் ஆண்டில் மலேசியா, மூவார் நகரத்தில் இரண்டு நாட்கள் அவசரகால நிலை.

2015-ஆம் ஆண்டில் இந்தோனேசியா நாட்டையே புகைமூட்டம் மூடிக் கொண்டது. 196 பில்லியன் ரிங்கிட் நட்டம்.

காடுகளில் உள்ள மரங்களை வெட்டிச் சாய்த்து விவசாயம் செய்வது என்றால் செலவு அதிகமாகும். வெட்டிய மரங்கள் சிதைந்து போக அதிக காலம் பிடிக்கும். ஓர் ஏக்கர் காட்டை அழிப்பதற்கு 500 ரிங்கிட் பிடிக்கும்.

அதற்குப் பதிலாக ஒரேயடியாக நெருப்பு வைத்து விட்டால் ஓர் ஏக்கருக்கு 6 ரிங்கிட் மட்டுமே செலவு. ஆக 494 ரிங்கிட் மிச்சம். அதனால் தான் நெருப்பு வைப்பது சுலபமாகப் போகிறது. அது அடிப்படைச் செலவு தான். இன்னும் இருக்கிறது.




சதுப்பு நிலங்களில் காடுகள் அழிக்கப் பட்டதும் அங்கே இருக்கும் கரிய நீர் வெளியேற்றப் படுகிறது. இருந்தாலும் விவசாயம் செய்வதற்குச் சரியாக அமையாது. உரச் சத்து குறைவாக இருக்கும். அமிலத் தன்மையும் (pH) அதிகமாக இருக்கும்.

சில இடங்களில் உரம், இரசாயனம், சுண்ணாம்புக் கலவை போன்றவை மண்ணில் கலக்கப்பட வேண்டும். அதற்கு நிறைய செலவாகும்.

ஓர் ஏக்கருக்கு எப்படியும் 1000 ரிங்கிட்  செலவாகும். இந்தச் செலவுகளைத் தவிர்க்க ஒட்டு மொத்தமாக நெருப்பு வைத்து விடுகிறார்கள்.

இப்படி பெரிய அளவில் நெருப்பு வைப்பதைப் பெரிய பெரிய நிறுவனங்கள் தான் செய்கின்றன. ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கர்களில் நெருப்பு வைத்துக் கொளுத்தித் தள்ளுகிறார்கள்.

சின்னச் சின்ன விவசாயிகள் அஞ்சு பத்து ஏக்கர் என்று சின்னதாக முடித்துக் கொள்வார்கள். பாதிப்புகள் மிகவும் குறைவு. 




பெரிய பெரிய முதலைகள் தான் ஆயிரக் கணக்கான ஏக்கர் காடுகளில் நெருப்பு வைக்கும் சடங்குகளுக்குச் சூடம் சாம்பிராணி போடுகிறார்கள்.

இந்தப் புகை மூட்டங்களுக்கு அவர்கள் தான் தலையாய காரணம். ஏழை விவசாயிகள் அல்ல.

இப்படி காடுகளுக்கு நெருப்பு வைத்து மிச்சப் படுத்தும் காசு பணத்தில் நல்ல ஒரு கணிசமான தொகை அரசியல்வாதிகளின் சுகவாசத்திற்குச் சகவாசமாய்ப் போய்ச் சேர்கிறது.

அவர்களும் சந்தோஷமாய்ச் செலவு செய்கிறார்கள். இது ஒன்றும் கற்பனை அல்ல. உண்மை. உண்மை.

இந்தக் கட்டத்தில் டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே எனும் பாடல் நினைவுக்கு வருகிறது. பட்டுக்கோட்டையாரின் வரிகள். 




கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சி போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்

எனும் வரிகளும் சரியாகப் பொருந்தி வருகின்றன.

எரியும் காட்டில் இருந்து மில்லியன் கணக்கில் காசு கள்ளத் தனமாய் வருகிறது. அந்தக் காசில் சில மேல் ஆதிக்கங்கள் தொலை தூரத்தில் உள்ள ஒரு கடற்கரைச் சொர்க்கத்தில் கும்மாளம் போட்டுக் கொண்டு இருப்பார்கள்.

அதே நேரத்தில் இங்கே ஏழைப் பாமர மக்கள் மூச்சுத் திணறி மூர்ச்சையாகிச் செத்தும் போகிறார்கள்.

இந்தப் பிரச்சினை மலேசியா இந்தோனேசியா (Indonesia vs Malaysia) இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை இல்லை. பணக்கார முதலைகளுக்கும் பாமரச் சாமானியர்களுக்கும் இடையிலான பிரச்சினை.

பல பத்தாண்டுகளாக இந்தப் பிரச்சினைகள் தொடர்கின்றன. துவைத்துக் காயப் போட்டு மீண்டும் துவைத்துக் காயப் போடும் பிரச்சினையாகவே பயணித்துக் கொண்டு இருக்கிறது. 
 

அதிசயத்திலும் அதிசயமாகச் சின்னச் சின்ன மாற்றங்கள். அவற்றை எதையும் வரலாற்றுச் சுவடுகளில் பதிவு செய்து விட முடியாது.

அங்கே இந்தோனேசியக் களிமந்தான் காடுகளில் நெருப்பு பிடித்து எரிகிறது. ஆனால் இங்கே அப்பாவி மலேசிய மக்கள் அவற்றின் வேதனைகளை தேவை இல்லாமல் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்களே... அக்கரை எரிகிறது. இக்கரை அழுகிறது. சுத்தமான அவமானம். 

அரசியல் நடிகர்களின் அடிப்படைப் போக்கு மாற வேண்டும். அதுவரை நாம் இந்த அலங்கோலத்தை ஏற்றுத் தான் ஆக வேண்டும்.

மக்களிடம் வருமானத்தைப் பெருக்கிக் காட்டுவது ஒரு அரசியல் பாவனையாக இருக்கலாம். புகை மூட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். நம் நாட்டின் மற்ற மற்ற புகைப் பிரச்சினைகளையும் பார்க்க வேண்டி உள்ளது.

உலகின் பல நாடுகள் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் (renewable energy) துறைகளில் இறங்கி தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் இங்கே மூன்றாவது கார் தயாரிப்புத் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.

தவறாக நினைக்க வேண்டாம். அதிக வாகனங்கள் அதிகப் புகைச்சல். அதிகப் புகைமூட்டம். 1980-ஆம் ஆண்டு தொழில்துறை நினைவுகளைத் தவிர்க்கலாமே.





அடுத்து இந்த கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு. நீண்ட காலத்திற்கு லாபம் தரும் திட்டமாக அமையுமா. அந்தத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் சொல்லி இருக்கிறார். நினைவு கூர்கிறேன்.

2002-ஆம் ஆண்டில், எல்லை கடந்த காற்றுத் தூய்மைக் கேடு ஒப்பந்தத்தை (Asean Agreement on Transboundary Haze Pollution) மலேசியா கொண்டு வந்தது.

பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 2014-ஆம் ஆண்டில் இந்தோனேசியா வேண்டா வெறுப்பாகக் கையொப்பம் போட்டது. அதோடு சரி. கும்பகர்ணனுக்குச் சகலைபாடியாக அந்த ஒப்பந்தம் தூங்கி வழிகிறது.

இப்போது நடக்கும் புகைமூட்டக் கூத்துகளுக்கு இந்தோனேசியாதான் காரணம் என்று மலேசியா விரல் நீட்டுகிறது. அது எல்லாம் ஒன்றும் இல்லை.

உங்கள் நாட்டைச் சேர்ந்த நான்கு பெரிய கம்பெனிகள் தான் எங்கள் நாட்டில் எரித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று இந்தோனேசியா பதிலடி கொடுக்கிறது.

ஒப்பந்தங்களை எல்லாம் கடுதாசிகளில் எழுதி வைத்ததோடு சரி. அப்புறம் அதைப் பற்றி யாரும் கவலைப் படுவதாக இல்லை. தூசு தட்டி எடுக்க இன்னொரு அரசாங்கம் வர வேண்டி இருக்கிறது.

அப்படியே வந்தாலும் புதுசாக ஒன்றும் வாசிக்காது. பழைய குருடி கதவைத் திறடி கதை தான். அரசியல் பிளேட்டைத் திருப்பிப் போட சொல்லியா தரணும்?