ஜாவா மர்மத் தீவில் சிவாலயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாவா மர்மத் தீவில் சிவாலயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஜூலை 2020

ஜாவா மர்மத் தீவில் சிவாலயம்

தமிழ் மலர் - 20.07.2020 - திங்கள்

ஆயிரம் ஆலயங்களின் இதய வாசல் சாவகம் என்று சொல்வார்கள். அந்தச் சாவகத் தீவில் ஒரே ஓர் ஆலயம் மட்டும் 1200 ஆண்டுகளாய்; ஓர் அனாதை போல காட்சி அளிக்கின்றது. அதுவும் நட்ட நடுத் தீவில் ஆயிரம் காலத்துப் பயிராய் நெஞ்சைக் கரைக்கச் செய்கின்றது..



அந்த ஆலயத்தை யார் கட்டியது; ஏன் கட்டினார்கள்; எப்படி கட்டினார்கள்; என்கிற விசயம் இதுவரையிலும் யாருக்கும் எவருக்கும் எதுவும் தெரியாத புதிர்கள். இன்றைய வரைக்கும் மர்மமாகவே உள்ளது. ஆனால் எரிமலைப் பாறைகளைக் கொண்டு கட்டி இருக்கிறார்கள். அது மட்டும் உண்மை.

கார்பன் டேட்டிங் (carbon dating) என்று சொல்லப்படும் கரிமக் காலக்கணிப்பு கொண்டு கணக்கிட்டு இருக்கிறார்கள். 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.


அந்த அனாதை ஆலயம் தான் மேற்கு சாவகத்தில் இருக்கும் சங்குவாங் ஆலயம் எனும் சங்குவாங் சிவாலயம் (Candi Shiva Cangkuang). இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவைத் தான் சாவகம் என்று அழைக்கிறார்கள்.

இந்தோனேசியா, மேற்கு ஜாவா, காரூட் மாவட்டத்தில் (Garut Regency), பூலோ கிராமத்தில் (Kampung Pulo) அந்த ஆலயம் அமைந்து உள்ளது. மேற்கு ஜாவாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சில இந்து - புத்த கோயில்களில் சங்குவாங் கோயிலும் ஒன்றாகும்.

இந்த ஆலயத்திற்கு தெற்காக மூன்று மீட்டர் தொலைவில் அரீப் முகம்மது (Embah Dalem Arief Muhammad) என்பவரின் ஒரு பழங்கால இஸ்லாமிய கல்லறையும் உள்ளது.



17-ஆம் நூற்றாண்டில் சுந்தா நிலப்பகுதியில் இஸ்லாமியம் பரவியது. அப்போது சங்குவாங் கிராமத்தில் வாழ்ந்த ஒரு சமூக மூதாதையரின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

பாண்டுங் (Bandung) நகரில் இருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் சங்குவாங் சிவாலயம் உள்ளது. 16 ஹெக்டர் பரப்பளவு. ஆலயம் இருக்கும் இடம் ஒரு தீவு.

அதற்குப் பெயர் கம்போங் பூலோ (Kampung Pulo). வெகு காலமாக மனித நடமாட்டம் இல்லாமல் இருந்த தீவு. ஓர் ஏரியில் உள்ளது. ஏரியின் பெயர் சிட்டு சங்குவாங் (Situ Cangkuang).



சங்குவாங் சிவாலயம் கண்டுபிடிக்கப் பட்டதும் மக்கள் படையெடுத்துப் போகிறார்கள். குறிப்பாக இந்தோனேசியர்கள் தான் அதிகம். வார இறுதி நாட்களில் 2000 பேர் வரை சுற்றிப் பார்க்கப் போகிறார்கள். அதிகமான சுற்றுப் பய்ணிகள் போக ஆரம்பித்து விட்டதால் தீவிற்குப் போவதற்கு முன்னாலேயே பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி விடுகிறார்கள்.

ஒரே சமயத்தில் அதிகமானோரை அனுமதித்தால் ஆலயத்தின் சுற்று வட்டாரம் பாதிக்கப் படலாம் எனும் முன்னெச்சரிக்கை.

கம்போங் பூலோ ஒரு பாரம்பரியமான கிராமம். 6 குடும்பங்கள்; 6 வீடுகள் மட்டுமே உள்ளன.


மூன்று வீடுகள் வலதுபுறம்; மீதமுள்ள மூன்று வீடுகள் தனித்தனியாக உள்ளன. ஆறு குடும்பங்கள்; ஆறு குடும்பத் தலைவர்கள் என்று பாரம்பரியமாக ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய கட்டிடம் எதுவும் இல்லை. கட்டுவதற்கும் அனுமதி இல்லை.

அங்கு வாழும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்ததும், அவர்களில் சிலர் கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டி இருக்கிறது. அதிகமான மக்கள் தொகை ஆலயத்தின் வளாக கட்டமைப்பைப் பாதிக்கலாம் என்று கருதுகிறார்கள். அது மட்டும் அல்ல. கிராம வழக்கமே அப்படித்தானாம்.

ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டால், திருமணத்திற்குப் பின்னர் இரண்டு வாரங்களில் அவர்கள் தங்கள் அசல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும்.



கோயில் வளாகத்திற்கு வெளியே தூரத்தில் தங்கள் சொந்த வீட்டைக் கட்ட வேண்டும். வளாகத்தில் இருந்து வெளியே போனவர்களின் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் மட்டுமே போனவர்கள் திரும்பி வரலாம். தங்கலாம். இருப்பினும் ஒரு நிபந்தனை. அப்படித் திரும்பி வருபவர் ஒரு பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். அங்கே பெண்களுக்குத் தான் முதல் சலுகை. ஆண்களுக்கு அல்ல. நுருசனை விட்டு வந்தால் தான் அங்கே தங்க முடியும்.

இதனால் கணவனை விட்டு பிரிந்து வர முடியாத பெண்கள் தொலைதூர கிராமங்களிலேயே நிரந்தரமாகத் தங்கி விடுகிறார்கள். ஆனாலும் வந்து தாய் தகப்பனைப் பார்த்து விட்டுப் போவார்கள். கம்போங் பூலோ கிராமத்தில் ஒரு வித்தியாசமான நடைமுறை. வித்தியாசமான பழக்க வழக்கம்.



சங்குவாங் கிராமம் ஒரு குட்டித் தீவு தான். ஆனால் நான்கு பெரிய பெரிய மலைகளால் சூழப்பட்டு உள்ளது. அதாவது ஹருமுன் மலை (Harumun); கலெடோங் மலை (Kaledong); மண்டலவங்கி மலை (Mandalawangi); மற்றும் குண்டூர் மலை (Guntur) என உயரமான மலைகள்.

கம்போங் பூலோ கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் படகில் தான் செல்ல வேண்டும். அங்கே நிறைய மூங்கில் மிதவைகளையும் வைத்து இருக்கிறார்கள். அவற்றில் தான் சுற்றுப் பயணிகள் பயணம் செய்கிறார்கள். ஒரே சமயத்தில் பதினைந்து பேரை ஏற்றிச் செல்லும் மூங்கில் கட்டுமரங்களும் உள்ளன.

கம்போங் பூலோ தீவு மற்றும் ஏரியைச் சுற்றி உள்ள பகுதிகள், ஒரு கலாசாரத் தொல்பொருள் சரணாலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.



முன்பு காலத்தில் தீவு முழுவதும் ஏரியால் சூழப்பட்டு இருந்தது. இருப்பினும் இப்போது தீவின் வடக்கு பகுதி மட்டுமே கிராமமாக உள்ளது. தீவின் தெற்கு பகுதிகள் மீட்கப்பட்டு அங்கே நெல் வயல்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

சங்குவாங் சிவாலயம் ஆண்டிசைட் (andesite stones) எனும் எரிமலை கற்களால் கட்டப் பட்டது. கோயிலின் அடித்தளத்தின் அகலம் 4.5 மீட்டர். நீளம் 4.5 மீட்டர். உயரம் 8.5 மீட்டர். ஆலயத்தின் மையத்தில் கர்ப்பகக் கிரகம் உள்ளது. பிரதான அறைக்குள் 62 செ.மீ உயரம் உள்ள சிவபெருமானின் சிலை உள்ளது.

சங்குவாங் சிவாலயத்தின் சிவன் சிலை சற்று சேதம் அடைந்து உள்ளது. கைகள் உடைபட்டு உள்ளன. முகத்தின் பாகம் சற்றுத் தேய்ந்து இருக்கிறது. சிலையின் பீடத்தில் நந்தியின் தலை செதுக்கப்பட்டு உள்ளது.



மிகவும் எளிமையான தோற்றம் கொண்ட ஆலயம். குறைந்த பட்ச ஆபரணங்களால் அலங்கரிப்புகள். சங்குவாங் சிவாலயத்தின் கூரையில் லிங்கத்தின் வடிவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

சிவன் சிலை உட்பாகத்தில் உள்ள அறையின் மையத்தில் உள்ளது. சிலைக்கு அடியில் 7 மீட்டர் ஆழத்தில் ஒரு சுரங்கம் இருப்பதாகச் சொல்லப் படுகிறது, ஆனால் கர்ப்பக அறைக்குள் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை. அதனால் அதை நிரூபிக்க முடியவில்லை.

கட்டடக் கலையின் பொதுவான அமைப்பு ஜாவானிய இந்து கோயில்களைப் போன்று உள்ளது. ஆலயத்தின் கல் சிதைவுகள்; மற்றும் கோயிலின் எளிய பாணியிலான அமைப்பு முறை; இவற்றை ஆராயும் போது இந்தக் கோயில் 8-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று சொல்கின்றனர். தவிர பிரம்பனான் (Prambanan) கோயில்களை விட சற்றுப் பழமையானது என்றும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.



'சங்குவாங்' எனும் பெயர் ஒரு பாண்டான் வகை தாவரத்தின் பெயரில் இருந்து வருகிறது (Pandanus furcatus). பாண்டான் செடிகள் கோயிலைச் சுற்றி பரவலாகக் காணப் படுகின்றன.

சங்குவாங் கோயிலைப் பற்றி முதன்முதலில் வெளியுலகத்திற்கு அறிவித்தவர் ஒரு டச்சுக்காரர். அவருடைய பெயர் வோர்டர்மன் (Vorderman). இந்தக் கோயிலைப் பற்றி 1893-ஆம் ஆண்டில் படேவியா ஜெனோட்சாப் (Bataviaasch Genotschap) எனும் நூலை எழுதினார். சங்குவாங் கிராமத்தில் ஒரு பழைய ஆலயம் மிகவும் சேதம் அடைந்த நிலையில் இருப்பதாகக் கூறினார்.

1966-ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கின. ஆலயத்தின் மறுசீரமைப்பு 1974-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டது.



பேராசிரியர் ஹர்சோயோ (Prof. Harsoyo), மற்றும் பண்டுங் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் மீட்பு பணிகளில் இறங்கினார்கள்.

கல்லூரி மாணவர் குழுவினரால் சிவன் சிலை கண்டுபிடிக்கப் பட்டது. பழைய ஒரு கல்லறையையும் அங்கே கண்டுபிடித்தார்கள். உள்ளூர் மக்களின் முன்னோர் என கருதப்படும் பெரியவர் முகமட் அரீப் என்பவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை.

அகழ்வாராய்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு கோயிலின் இடிபாடுகள் மற்றும் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையில் ஒரு சிவன் சிலை புதைந்து கிடப்பதைக் கண்டார்கள்.



முழு அசல் பாறைகளில் 40% மட்டுமே கிடைக்கப் பெற்றன. மற்றவை எல்லாம் சேதம் அடைந்த நிலையில் இருந்தன. இருந்தாலும் மீதம் உள்ள ஆலயத்தின் பாகங்களைக் கற்கள், சிமெண்டு, மணல் மற்றும் மண் இரும்புகள் கொண்ட கலவையில் கட்டினார்கள். செய்தவர்கள் இந்தோனேசியா கல்லூரி மாணவர்கள்.

ஆலயத்திற்கு முன்னால் ஒரு சிறிய அலுவலகம் உள்ளது. ஆலயத்தின் மறுசீரமைப்பின் போது முக்கியமான கலைப் பொருட்களை சேமிக்கப் பயன்படுத்தப்பட்ட இடமாகும். மறுசீரமைப்பு முடிந்து விட்டது. ஆக இப்போது அது ஓர் அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகிறது.

ஆலயத்தைக் கண்டுபிடித்ததில் இருந்து, அது முழுமையாக மீட்டு எடுக்கப்படும் வரையிலான ஆவணங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.



முன்பு காலத்தில் சங்குவாங் கிராமத்தில் இந்து மத மக்கள் வசித்து வந்து இருக்கிறார்கள். அங்கு சிவாலயம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதற்குச் சான்றாக அமைகிறது.

முகமட் அரீப் அவர்களின் கல்லறையும் சங்குவாங் ஆலயமும் பக்கத்துப் பக்கத்தில் அமைந்து உள்ளன. ஆக இந்தோனேசிய மக்களிடையே வேறுபட்ட மதங்கள் இருந்து இருந்தாலும்; ஓர் இணக்கமான வாழ்க்கை முறை இருந்து இருப்பதை இது குறிக்கின்றது. ஒரு சுமுகமான மத நல்லிணக்கம் இருந்து உள்ளது. மத அனுசரணைகள் இருந்து உள்ளன.

இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட பழைய மரபுகள்; பழைய பழக்க வழக்கங்கள் இன்னும் அங்கே கடைபிடிக்கப் படுகின்றன. ஓர் எடுத்துக்காட்டு. கிராம மக்களுக்கு புனித நாள் புதன்கிழமை தான். வெள்ளிக்கிழமை அல்ல.



மத நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்கும் இந்தோனேசியாவில் மக்களும் மத இணக்கத்திற்கு முதன்மை செய்கின்றார்கள். மற்ற மதங்களுக்கு மதிப்பு மரியாதை செய்கின்றார்கள். மற்ற மதங்களுடன் இணைந்து போகின்றார்கள். வாழ்த்தப்பட வேண்டிய நன்மாந்தர்கள். சிரம் தாழ்த்துகிறோம். வாழ்க அவர்களின் மத நல்லிணக்கங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.07.2020

சான்றுகள்:

1. https://www.exploresunda.com/cangkuang.html

2. https://en.wikipedia.org/wiki/Cangkuang

3. https://travel.detik.com/domestic-destination/d-3028085/kisah-candi-cangkuang-yang-misterius-di-garut

4. https://candi.perpusnas.go.id/temples_en/deskripsi-west_java-cangkuang_temple_27