கறுப்பு தாஜ்மகால் - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறுப்பு தாஜ்மகால் - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 4

ஷா ஜகான் இறக்கும் தருவாயில் தன் மூத்த மனைவியை அழைத்தார். மூத்த மனைவியின் பெயர் கண்டகாரி மகால். ஜகனாராவைப் நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அப்போது ஜகனாராவிற்கு வயது 52.

மும்தாஜ் மகால் இறக்கும் போது ஜகனாராவிற்கு வயது 17. மும்தாஜ் மகால் இறந்த பின்னர் மொகலாயப் பேரரசை ஜகனாரா தான் கவனித்துக் கொண்டார். முதல் பெண்மணி எனும் சிறப்புத் தன்மை இல்லாமல் மொகலாயப் பேரரசை வழி நடத்தியவர். அந்தக் காலக் கட்டத்தில் சக்தி வாய்ந்த பெண்மணியாகத் திகழ்ந்தவர் ஜகனாரா.



கடைசி வரையில் திருமணம் செய்து கொள்ளாத ஜகனாரா 1681-ஆம் ஆண்டு தன்னுடைய 67-ஆவது வயதில் இறந்து போனார்.  

ஷா ஜகான் இறந்ததும் அவருடைய உடலுக்கு ராஜ மரியாதை செய்ய வேண்டும் என்று ஜகனாரா விரும்பினார். ஆனால் ஒளரங்கசிப் அதை விரும்பவில்லை. ஆடம்பரமாகவும் மக்கள் பணத்தை விரயம் ஆக்கும் எதையும் செய்ய வேண்டாம் என்று தடுத்து விட்டார். இருந்தாலும் சந்தனக் கட்டையால் செய்யப் பட்ட அழகிய பெட்டியில் ஷா ஜகானின் உடல் கிடத்தப் பட்டது.

அப்படியே தாஜ்மகாலுக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அங்கே மும்தாஜ் மகாலின் சமாதிக்குப் பக்கத்தில் ஷா ஜகானுக்கும் ஒரு சமாதி எழுப்பப் பட்டது. அந்தச் சமாதிகள் இன்றும் இருக்கின்றன.

ஷா ஜகான் ஆசை ஆசையாகத் தாஜ்மகாலைக் கட்டினார். ஆனால் கடைசி வரை அவர் உள்ளே போய்ப் பார்க்க முடியாமல் போனதுதான் வேதனையிலும் வேதனையான கதை. ஒரு சாம்ராஜ்யத்து வரலாற்று வேதனைகளில் தாங்கிக் கொள்ள முடியாத வேதனை என்றுகூட சொல்லலாம்.

இருந்தாலும் ஔரங்கசிப் தன்னுடைய கடைசி காலத்தில் நடக்க முடியாமல் ரொம்பவும் கஷ்டப் பட்டு இறந்து போனார் என்பதும் ஒரு கொசுறுச் செய்தி. பதிவு செய்கிறேன்.

ஷா ஜகான் இறப்பதற்கு முன்னால் நடந்த விசயங்கள். சொல்ல மறந்து போனவை. மும்தாஜின் இழப்பை ஷா ஜகானால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மொகலாயப் பேரரசு முழுவதும் ஒரு வருடத்திற்குத் துக்கத்தை அனுசரிக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எல்லாக் கேளிக்கைக் கொண்டாட்டங்களும் நிறுத்தப் பட்டன.



மும்தாஜ் மகால் தன் கடைசி மூச்சை விடுவதற்கு முன் சொன்ன கடைசி வார்த்தைகள் ஷா ஜஹானின் காதினுள் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தன. 'என் நினைவாக ஏதாவது ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும். அது என்னவாக இருக்க வேண்டும் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. அதுதான் என் கடைசி ஆசை.' அவைதான் மும்தாஜின் கடைசி வார்த்தைகள்.

மும்தாஜூக்கு அழகான ஒரு நினைவு மாளிகையைக் கட்ட வேண்டும் என்று ஷா ஜகான் நினைத்தார். மொகலாயர்கள் இதுவரை கட்டிய மாளிகைகளிலேயே மிகவும் பிரும்மாண்டமான மாளிகையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

அதற்காகப் பாரசீக நாடுகளில் இருந்து கட்டடக் கலைஞர்கள் அழைக்கப் பட்டார்கள். அவர்களின் மூலமாகக் கட்டடத்தின் வரைபடங்கள் உருவாக்கப் பட்டன. முழுவதும் பளிங்குக் கற்களாலான கட்டிடம்.

தாஜ்மகால் கட்டுவதற்கு யமுனை நதிக்கரை ஓரமாக ஓர் இடம் தேர்வு செய்யப் பட்டது. அந்த இடம் மகாராஜா ஜெய் சிங்கிற்குச் சொந்தமான இடம். அதை அவரிடம் இருந்து ஒரு கணிசமான தொகை கொடுத்து ஷா ஜகான் வாங்கிக் கொண்டார்.

தாஜ்மகாலைச் சுற்றி அமைய இருக்கும் தோட்டத்தின் அளவு; தாஜ் மகாலுக்கு வெளியே அமையவிருக்கும் நீர் ஊற்றுக்கள்; அவற்றுக்கான இடங்கள் எல்லாம் பாரசீக வல்லுநர்களால் முடிவு செய்யப் பட்டன. தாஜ் மகாலில் இருந்து 15 கி.மீ. தூரத்திற்குச் சாரங்கள் அமைக்கப் பட்டன.

நவீன இயந்திரங்கள் இல்லாத காலத்தில் பிரமிடுகள் அல்லது தாஜ்மகால் போன்ற உயரமான கட்டிடங்களைக் கட்டும் போது அந்த இடங்களுக்கு பணியாட்களையும் பொருட்களையும் கொண்டு செல்ல அமைக்கப்படும் தற்காலிகச் சட்டக அமைப்பிற்குப் பெயர்தான் சாரம்.

தஞ்சைக் கோயிலைக் கட்டுவதற்கு 16 கிலோமீட்டர் தூரம் வரையில் சாரங்கள் அமைத்து கற்பாறைகளை உச்சிக்குக் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள். அந்தப் பாறைகளை மனிதர்கள் இழுத்துக் கொண்டு போய் இருக்கிறார்கள். வெளிநாட்டில் சிறை பிடிக்கப்பட்ட போர்க் கைதிகளே அந்த மனிதர்கள். மன்னிக்கவும்.

அந்தச் சாரங்களின் வழியாக கட்டுமானப் பொருட்கள் உச்சிக்குக் கொண்டு செல்லப் பட்டன. சிறப்பாக உருவாக்கப்பட்ட தேக்குமர வண்டிகள். ஒவ்வொரு வண்டியையும் இழுத்துச் செல்ல 12 எருமை மாடுகள். நவீன இயந்திரங்கள் இல்லாத காலத்தில் தாஜ்மகால் கட்டப்பட்டது. அதையும் நினைவுகூர்கிறேன்.

வேலை செய்ய 22 ஆயிரம் ஆட்கள் தேவைப் படும்; ஆயிரம் யானைகள் தேவைப்படும்; இருபது வருடங்கள் பிடிக்கும்; கோடிக் கணக்கில் செலவாகும் என்பதைப் பற்றி எல்லாம் ஷா ஜஹான் கொஞ்சமும் கவலைப் படவில்லை. ஓர் உலக அதிசயத்தைக் கட்டி முடித்தார். இருந்தாலும் அவர் கட்டிய அந்தத் தாஜ் மகாலின் உள்ளே நுழைந்து பார்க்காமலேயே மறைந்தும் போனார். மொகலாய வரலாற்றுக் கொடுமை.



உலக நாடுகளின் அதிபர்கள் இந்தியாவுக்கு அரசியல் சுற்றுப் பயணம் வரும் போது தாஜ் மஹாலைப் பார்க்காமல் போவது இல்லை. இவ்வளவு பெருமை கொண்ட தாஜ்மஹாலினால் இந்தியாவிற்குத் தான் பெருமை. தாஜ் மஹால் ஓர் உலக அதிசயம்.

சரி. இந்திய மொகலாய மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது. அதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

இந்திய மண்ணில் ஆயிரக்கணக்கான இந்திய ராஜாக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தார்கள். வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள். உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள்.

அந்த ராஜாக்களின் ராஜ வாழ்க்கையில் மதுரசங்கள் ஆறாய்ப் பெருகி ஓடும். மாதுரசங்கள் தேனாய் உருகி வழியும். வண்டுகள் வாசல் வரை வந்து வீணைகளை மீட்டிவிட்டுப் போகும். சின்னஞ்சிறு சிட்டுகள் பட்டுக்குள் சிக்காமல் சிறகடித்துப் பறக்கும்.

மன்னரின் ஒரே ஒரு பார்வையில் ஓராயிரம் ராணிகள் ஓடி வருவார்கள். ஓராயிரம் சுகங்களை அள்ளித் தருவார்கள். அந்தர்புரம் ஒரு கந்தர்வ லோகமாகச் சிணுங்கி நிற்கும். மங்கிய வெளிச்சத்தின் சந்தோஷங்களில் சொர்க்கத்தின் தலைவாசல் கடைவாசல் தெரியாமல் தெரியும்.

இப்படித்தான் அந்தக் காலத்து ராஜாக்கள் வாழ்ந்தார்கள் என்று பலர் இன்றுவரை நினைக்கிறார்கள். நினைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அது தப்புங்க. பாவம் ராஜாக்கள்.

அவர்கள் ஒவ்வொரு நாளும் செத்து செத்துப் பிழைத்து வாழ்ந்தவர்கள். இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாது. இன்றைக்குத் தெரிந்து கொள்வோம்.

அக்பரைப் பற்றி அபுல் பாசல் என்பவர் எழுதிய 'அக்பர்நாமா’; ஔரங்கசிப் பற்றி அப்துல் ஹமீத் லாஹுரி எழுதிய 'பாதுஷாநாமா’;  ஜஹாங்கீர் பற்றிய 'மாஆத்திரி ரஹிமீ’ போன்ற நூல்களைப் படித்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.



'தாரீக் இ ஷா ஜஹானி’ எனும் ஒரு வரலாற்று நூல். சாதிக் கான் என்பவர் ஷா ஜகானைப் பற்றி எழுதி இருக்கிறார். அதைப் படித்த பிறகுதான் எனக்கும் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ராஜ வாழ்க்கை என்பது காளிக் கோயிலில் பலிக்கடாவாக மாறப் போகும் ஓர் ஆட்டுக் கடாவின் வாழ்க்கை போன்றது. மஞ்சள் பூசுவார்கள். பன்னீர் தெளிப்பார்கள். குங்குமம் வைப்பார்கள். சந்தனம் தடவுவார்கள். ரோசாப்பூ மாலை போடுவார்கள். கை எடுத்துக் கும்பிடுவார்கள்.

அடுத்து அம்புட்டுத்தான். கத்தியைக் கழுத்தில் வைப்பார்கள். கொஞ்ச நேரத்தில் கூறு போட்ட ஆடுக்கடா சட்டியில் வேகும். அதைச் சாப்பிட ஒரு படையே திரண்டு வந்து நிற்கும். பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

அந்த மாதிரிதான் அந்தக் காலத்து ராஜாவின் வாழ்க்கையும். எந்த நேரத்திலும் கத்தி கழுத்திற்கு வரும் என்று பயந்து பயந்து வாழ வேண்டிய ஒரு வாழ்க்கைதான் அந்தக் காலத்து ராஜாக்களின் வாழ்க்கை.

முக்கால் வாசி இந்திய நாட்டை ஆட்சி செய்த சக்கரவர்த்திகளுக்கும் கடைசி காலத்தில் ஒரு நல்ல அமைதியான சாவு கிடைக்கவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

இதற்கு ஜூலியஸ் சீசர், நெப்போலியன், ஜெங்கிஸ்கான், ஷா ஜகான், ஹுமாயூன் போன்றவர்களின் சரித்திரங்களே சான்றாக அமையும்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ஓர் உவமானம் நினைவிற்கு வருகிறது. காட்டிலே உயரமாக வளர்ந்துவிட்ட ஒரு மரத்தை நன்றாகப் பாருங்கள். மற்ற தாவரங்களில் இருந்து அது தனிமைப் பட்டுத் தனியாக நிற்கும். அந்த மரத்தைப் பார்ப்பவர்கள் விண்ணைத் தொட்டுப் பார்க்கும் விருச்சகம் என்று பெருமையாகப் பேசிக் கொள்வார்கள்.

ஆனால் உணர்வுப் பூர்வமாகப் பார்த்தால் அது தனிமையில் வாடுவது தான் தெரிய வரும். கீழே இருக்கும் தாவரங்கள் ஒன்றோடு ஒன்று குலவிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அந்த உயரமான மரம் மட்டும் மற்ற தாவரங்களுடன் கொஞ்சிக் குலாவ முடியாத தனிமை நிலை. அதுதான் உண்மை.

உங்களுக்குத் தெரிந்த இந்தக் காலத்து அரசர்களை எடுத்துக் கொள்ளுங்கள். மேலை நாட்டு அரசர்களைத்தான் சொல்கிறேன். அவர்களின் அதீத ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து இன்றைய சாமான்ய மக்கள் நொந்து நூலாகிப் போகிறார்கள். நமக்கு அந்த மாதிரி ஒரு வாழ்க்கை கிடைக்கவில்லையே என்று வேதனைப் படுவார்கள். கவலை வேண்டாம். 



ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஓர் இந்திய அரசர் எப்படி வாழ்ந்தார் என்று கேட்கலாம். தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்கள் ஒரு நல்ல காரியம் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். தூங்கி எழுந்ததில் இருந்து இரவில் சிருங்காரப் பாடல்களைக் கேட்பது வரையில் நடந்த எல்லா முக்கிய நிகழ்ச்சிகளையும் எழுதி வைத்துச் சென்று இருக்கிறார்கள்.

அவர்கள் ஒன்றும் எழுதவில்லை. எழுத அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது. யாராவது ஒரு நம்பிக்கையான ஆளைக் கூப்பிட்டு குறிப்பு எடுக்கச் சொல்லி இருக்க வேண்டும். அதுவே நாட்குறிப்பாகிப் பின்னர் புத்தகமாக மாறிப் போய் இருக்கலாம்.

அப்போதைய பெரும்பாலான இந்திய மன்னர்களுக்குப் பயம் ஒன்று தான் சாகும் வரை உற்றத் தோழனாக தொடர்ந்து வந்து இருக்கிறது. ஆனால் அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் வாழ்ந்து மறைந்து போனது தான் வரலாறாகவும் இப்போது பரிணமிக்கிறது.

நண்பர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள். எதிரிகளை மிகவும் பக்கத்தில் வைத்துக் கொள். இந்த இருவர் மீதும் மிக் ககவனமாக இரு. இருவரில் யார் வேண்டுமானாலும் உன்னைக் கொல்லலாம் என்று மன்னர்களுக்கு பட்டி, பீர்பால், இபுன் பாத்துத்தா போன்ற அறிவுரைஞர்கள் ஆலோசனை சொல்வார்களாம். அதுதான் சரித்திரத்திலும் நடந்து இருக்கிறது.

மொகலாய அரசர்களில் ஜகாங்கீர் என்பவர் மிக முக்கியமானவர். இவர்தான் அக்பருக்கு மகன். ஷா ஜகானுக்குத் தந்தையார். அவர் ஒரு நாளைக்கு காலையில் இருந்து இரவு படுக்கும் வரை என்ன என்ன செய்வார் என்பதைப் பார்ப்போம்.

அதிகாலை 4 மணிக்கு கோழி கூவுவதற்கு முன்னாலேயே ஜகாங்கீர் எழுந்து விடுவார். அவரை எழுப்பி விடுவதற்கு என்றே மன்னருக்குப் பிடித்த ஒரு ராணி இருந்தார். மன்னர் எந்த மனைவியோடு எந்த அறையில் தூங்கினாலும் சரி வழக்கமாக அவரை எழுப்பிவிடும் அதே ராணிதான் ஒவ்வொரு நாளும் வந்து எழுப்ப வேண்டும்.

அந்த ராணியின் முகத்தில் விழித்தால்தான் காரியங்கள் நல்லபடியாக நடக்கும் என்பது அவருடைய ஐதீகம். இன்னும் ஒன்று. அந்தக் காலத்து சில இந்திய ராஜாக்களுக்கு எத்தனை மனைவிகள் என்று அவர்களுக்கே தெரியாதாம். பாவம்.

ஒரு கொசுறுச் செய்தி. கி.பி. 993-ஆம் ஆண்டு இலங்கையில் அநுராதபுரம் பேரரசுடன் போர் பொருந்திய ஒரு இராஜாதி ராஜ மன்னர் அங்கே இருந்து இரண்டாயிரம் பெண்களைக் கடத்தி வந்து இருக்கிறார். அதில் பாதி பேரைத் தன் அந்தர்புரத்தில் வைப்பாட்டிகளாகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக் கொண்டார்.

மிச்சம் பாதி பேரைப் பெரிய கோயிலுக்குத் தேவர்களின் அடியார்களாகத் தானம் செய்தார். இந்தத் தேவரடியார்கள் தான் பின் நாட்களில் தேவதாசிகளாக மாறினார்கள்.

பின்னர் நாட்களில் அந்தத் தேவதாசிகள் தான் கோயில் தர்ம கர்த்தாக்களுக்கும் ஊர்ப் பெரியவர்களுக்கும் வைப்பாட்டிகளாக மாறினார்கள். இது வரலாற்று உண்மை. 


(தொடரும்)

சான்றுகள்

1. "UNESCO Taj Mahal". UNESCO Culture World Heritage Centre, World Heritage List. UNESCO. 2016.

2. Alvi, Sajida S. (1989). "Religion and State during the Reign of Mughal Emperor Jahangir (1605–27).

3. Rajaraja invaded Sri Lanka in 993 CE. The Thiruvalangadu copper-plate inscriptions mention that Rajaraja’s army destroyed Anuradhapura,
https://en.wikipedia.org/wiki/Rajaraja_I#Conquest_of_Sri_Lanka