பிலிப்பைன்ஸ் பிபிங்கா தமிழர்கள் - 1762 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிலிப்பைன்ஸ் பிபிங்கா தமிழர்கள் - 1762 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 மே 2020

பிலிப்பைன்ஸ் பிபிங்கா தமிழர்கள் - 1762

சென்னையில் இருந்து மணிலாவிற்குச் சென்ற சென்னைச் சிப்பாய்கள் (Indian Sepoy) அங்கே ஒரு தமிழர் வம்சாவழியினரை உருவாக்கி இருக்கிறார்கள். 250 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. உலகத் தமிழர்கள் பலரும் அறிந்திராத செய்தி. ஆனாலும் உலகத் தமிழர்களின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் செய்தி. 



இருக்கு ஆனால் இல்லை என்று சொல்வார்கள். அது போல மணிலாவில் ஒரு தமிழர்ச் சமுதாயம் இருப்பதாக இருக்கிறது. இல்லாமலும் இருக்கிறது. வெளியுலகத்திற்குத் தெரியாமலும் இருக்கிறது. 

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா. அந்த மாநகரத்திற்கு அருகில் இந்தப் பிபிங்கா தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏறக்குறைய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர் - பூர்வீகப் பிலிப்பினோ கலப்புச் சமூகத்தவர்கள். இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களைப் பிபிங்கா தமிழர்கள் என்று அழைக்கிறார்கள். 




இட்லி தோசை இடியப்பம் போன்ற அரிசி மாவு உணவுப் பொருள்களைப் பிபிங்கா (bibingka) என்று இதர பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் அழைக்கிறார்கள். இந்த உணவுப் பொருள்கள் பிலிப்பைன்ஸில் மிகவும் புகழ்பெற்றவை. பிபிங்கா என்று ஒரு கிராமமே மணிலாவில் இருக்கிறது. அந்தப் பெயரைச் சொல்லி மணிலாவில் பல உணவுக் கடைகள் கல்லா கட்டுகின்றன.

250 ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த கதை. கொஞ்சம் சுவராசியமான கதைதான். ஆனாலும் உலகத் தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுக் கதை. இப்படி ஒரு தமிழர்ச் சமுதாயம் இருக்கிறதே என்று பெருமைப் படுவோம்.




1762-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் மணிலாவில் ஸ்பானியர்களின் ஆட்சி. உள்ளூர் மக்களின் உழைப்பில் நன்றாகவே அவர்கள் குளிர் காய்ந்து கொண்டு இருந்தார்கள். அதைப் பார்த்த வெள்ளைக்காரர்களுக்கு சும்மா இருக்க முடியவில்லை. சூரியனே அவர்களைக் கேட்டுத் தானே உதிக்கும்.

வெள்ளைக்காரர்களுக்கு வயிற்றெரிச்சல் தொண்டை வர எகிறிப் பாய்ந்தது. மணிலாவை அடித்துப் பிடிக்க ஆசைப் பட்டார்கள். ஏற்கனவே இருவருக்கும் ஏழாம் பொருத்தம். ஒத்துவராது.

இந்தக் கட்டத்தில் ஐரோப்பாவில் ஏழு ஆண்டுகள் போர் (Seven Years' War) நடந்து கொண்டு இருந்தது. அதனால் ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் உலகம் முழுமைக்கும் காட்டுமிராண்டிப் புகைச்சல்கள்.




ஆங்கிலேயர்களுக்கு உதவியாக தமிழ்நாட்டில் இருந்து மெட்ராஸ் சிப்பாய்களைப் போருக்கு அழைத்துப் போனார்கள். 610 தமிழர்ச் சிப்பாய்கள். எத்தனைச் சிப்பாய்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நம்ப சிப்பாய்கள் என்றால் சும்மாவா. சகலகலா மன்னவர்கள் ஆச்சே.

அந்தப் போருக்குப் பெயர் மணிலா போர் (Battle of Manila). ஆங்கிலேயப் படைகளுக்கு வில்லியன் டிரப்பர்  (Brigadier-General William Draper) என்பவர் தலைமை வகித்தார். ஸ்பானியர்களுக்கு சைமன் டி அண்டா (Simon de Anda) என்பவர் தலைமை வகித்தார். சைமன் டி அண்டா அப்போது மணிலாவின் கவர்னராகவும் இருந்தார்.

மணிலாவைப் பிடிப்பதற்கு ஒரு சின்னக் கப்பல் படையுடன் ஆங்கிலேயர்கள் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்கள். 1762 ஆகஸ்டு மாதம் முதல் தேதி. பதினைந்து கப்பல்கள் மணிலா கடல்கரையில் நங்கூரம் பாய்ச்சின. 




பெரிய எதிர்ப்புகள். ஆங்கிலேயர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. இருந்தாலும் ஸ்பானியர்கள் பயங்கரமாக எதிர்த்துப் போரிட்டார்கள். இரு தரப்பிலும் பெரும் சேதங்கள். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்கள் பின்வாங்கும் நிலைமை.

பத்து பன்ணிரண்டு நாட்களில் போர் முடிந்தது. மணிலா நகரம் ஆங்கிலேயர்களின் கைகளில் வீழ்ந்தது. அதன் பின்னர் பத்து பதினெட்டு மாதங்களுக்கு கொஞ்சம் ஓய்வு.

இது இப்படி இருக்க அங்கு போன நம்முடைய தமிழர் மன்மதக் குஞ்சுகளால் சும்மா இருக்க முடியவில்லை. ஓய்வு நேரத்தில் பிலிப்பைன்ஸ் காடுகளில் வாழ்ந்த காயிந்தா பூர்வீகப் பெண்களுடன் (Cainta natives) பழக ஆரம்பித்தார்கள். பழக்கம் நெருக்கமாகி கல்யாணத்தில் போய் முடிந்தது.


திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருவர் இருவர் அல்ல. ஆளாளுக்கு நீயா நானா போட்டிப் போட்டுக் கொண்டு காதலித்துக் கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் காயிந்தா பூர்வீகப் பெண்கள் சற்று அழகானவர்கள். நம்ப தமிழர் மன்மதக் குஞ்சுகள் சொக்கிப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது.

எது எப்படியோ நூற்றுக் கணக்கான பிலிப்பைன்ஸ் பெண்களைக் காதலித்துக் கிராமத்துக் காட்டுக்குள்ளேயே செட்டில் ஆகி விட்டார்கள்.

இரண்டு வருடம் கழித்து ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையே ஒரு சமரச உடன்படிக்கை (Treaty of Paris - 1763). ஆங்கிலேயர்கள் மணிலாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டம். சென்னைச் சிப்பாய்களில் முக்கால்வாசி பேர் மீண்டும் சென்னைக்குத் திரும்பிப் போக மறுத்து விட்டார்கள். 




ஏன் என்றால் அவர்கள் மணிலாவில் தங்கி இருந்த அந்த இரண்டு ஆண்டு காலத்தில் முக்கால்வாசி சிப்பாய்களுக்குக் குடும்பம் குடித்தனமாகி விட்டன. பிள்ளைகளும் பிறந்து விட்டார்கள்.

அத்துடன் மெட்ராஸில் இருக்கும் போதே ஆங்கிலேயர்களின் கெடுபிடிகள் சென்னைச் சிப்பாய்களுக்குப் பிடிக்கவில்லை. இதுதான் சமயம் என்று காட்டுக்குள் ஓடி விட்டார்கள். ஆங்கிலேயர்களும் எவ்வளவோ மிரட்டிப் பார்த்தார்கள். உஹும்... ஒன்றும் நடக்கவில்லை.

இராணுவச் சட்டவிதிகளின்படி பெரிய குற்றம். இருந்தாலும் 610 சிப்பாய்களில் 550 பேர் புரட்சி செய்தால் என்ன செய்வதாம். எப்படியாவது தொலைந்து போங்கள் என்று அங்கேயே விட்டுவிட்டு ஆங்கிலேயர்களும் சென்று விட்டார்கள்.




சென்னைச் சிப்பாய்கள் தப்பித்து ஓடிய காட்டுப் பகுதி ஒரு பெரிய கடல்கரை சமவெளி. அதன் பெயர் மோரோங் (Morong). அங்கு இருந்த தாய்தாய் (Taytay); காயிந்தா (Cainta) எனும் இரு நகர்ப் புறங்களில் நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள். இந்த நகரங்கள் இப்போது மணிலா தலைநகரத்திற்குக் கிழக்குப் பகுதியில் உள்ளது.

(When the British withdrew, many of the Sepoys mutinied and refused to leave. Virtually all had taken Filipina brides. They settled in what is now Cainta, Rizal, just east of Metro Manila. The region in and around Cainta still has many Sepoy descendants.)




தமிழர்ச் சிப்பாய்களின் வாரிசுகள் பலரின் பெயருக்குப் பின்னால் இந்தியப் பெயர்கள் தொடர்கின்றன. சாமி; ராஜு; கண்ணா; கருணா; கிருஷ்ணா; ராஜா; பாலா; வாசு; ராமா எனும் பெயர்கள். 250 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இருந்தாலும் பெயர் பழக்கங்கள் தொடர்கின்றன. அனைவரும் பிலிப்பைன்ஸ் மக்களுடன் ஒன்றாய்க் கலந்து விட்டனர். தமிழர்களின் முகஜாடை இலட்சணங்கள் இருக்கின்றன.

(This could possibly explain why there are few Cainta natives bearing Sepoy or Indian surnames. The children took on the last names of their mothers. In due time, the Sepoys and their mixed-race families were assimilated into the mainstream Cainta community).




மணிலாவின் பாரியோ (Barrio Dayap) பகுதியிலும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களும் தமிழை மறந்து விட்டார்கள். பாதி பேர் மதம் மாறி விட்டார்கள். இருந்தாலும் ஆண்களில் சிலர் தலைப்பாகை கட்டுகிறார்கள். பெண்களில் சிலர் சேலை அணிவதும் உண்டு. இந்து கோயில்கள் உள்ளன.

ஆனால் உணவுப் பழக்க வழக்கங்கள் மாறவில்லை. இடியப்பம்; இட்லி; தோசை; பூரி போன்ற தமிழர்களின் உணவு வகைகள் இன்றும் தொடர்கின்றன. புட்டு மாதிரி அவித்த உணவிற்கு பிபிங்கா (bibingka) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

மறக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றில் சென்னைச் சிப்பாய்களின் வாரிசுகளும் இடம் பெறுகிறார்கள். அவர்களின் எதிர்காலம் பிலிப்பைன்ஸ் எனும் நான்கு சுவர்களுக்குள் இன்றுவரை அடக்கி வாசிக்கப் படுகிறது. வாழ்த்துவோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.05.2020