கேமரன் மலை இந்தியர்களின் நெருக்கடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேமரன் மலை இந்தியர்களின் நெருக்கடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 டிசம்பர் 2019

கேமரன் மலை இந்தியர்களின் நெருக்கடிகள்

தமிழ் மலர் - 28.12.2019

கேமரன் மலை இந்தியர்கள் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் பயணிக்க வேண்டிய ஒரு காலக் கட்டம். நாளைக்கு என்ன நடக்கும்... என்ன நடக்கலாம் என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அங்கே ஒரு பதற்றமான நிலை. 



நெழிவு சுழிவுகள் நிறைந்த மலைக் காட்டு வழியில் அவர்களின் நகர்வுகள் நனைந்து நலிந்து போய்க் கொண்டு இருக்கின்றன. வேதனை.

மலேசியா முழுவதும் இந்தியர்கள் வாழலாம். ஆனால் கேமரன் மலையில் தான் நம் தமிழர்கள் சற்றே மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள்.

உழைப்பு விடாமுயற்சி வழியாகச் செல்வாக்குடன் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். கொஞ்சம் பணம் காசோடு மனநிறைவோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதுவும் சிலருக்குப் பிடிக்கவில்லை. அதிலும் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். 



எப்படியாவது தமிழர்களின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும்; அவர்களை ஒன்றும் இல்லாமல் செய்ய வேண்டும்; இருப்பதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் அலையவிட வேண்டும் என்று கங்கணம் கட்டுகிறார்கள். அதில் முனைப்பும் காட்டுகிறார்கள்.

நம் நாட்டு அரசியல் பெரிசுகளைத் தான் சொல்கிறேன். அரசியல் மூலமாகத் தங்களின் குடும்பத்தையும் உற்றார் உறவினர்களையும் கோடீஸ்வரர்களாக உயர்த்த வேண்டும் என்பதற்காகவே இனவாதத்திற்கு ஆராதனை செய்கிறார்கள். மதவாதத்திற்கு ஆலாபனை செய்கிறார்கள்.

கடிவாளம் அவர்கள் கையில் இருக்கிறது. அதனால் பிடிமானம் அவர்களிடம் இருக்கிறது. கடிவாளம் இருக்கும் வரையில் பிடிமானம் இருக்கும். இதை நாம் என்றைக்கும் மறந்து விடக் கூடாது. 



ஆக கடிவாளம் கழன்று போகும் வரையில் காத்து இருக்க வேண்டிய நிலை. அட்டகாசமான அநியாயங்களை அமைதியாக ஏற்றுக் கொண்டு அமைதியாய் வாழ்ந்து காட்ட வேண்டிய இக்கட்டான நிலை.

கேமரன் மலையில் பல சிறு கிராம நகரங்கள். அவற்றில் ஒன்று கோலா தெர்லா. இந்த நகரம் கம்போங் ராஜா நகரில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கிறது.

பெரும்பாலானவர்கள் பண்ணை விவசாயிகள். சீனர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் அவர்களின் பண்ணைகளில் கொஞ்சமாய்ப் பாதிப்பு. நம் இந்தியர்களுக்கு ஏற்பட்டது போல பெரும் பாதிப்பு இல்லை. 



இந்தக் கோல தெர்லா பண்ணை அழிப்பில் பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் கே. பெரியசாமி. 70 வயதிற்கும் மேலாகிறது. பூ பண்ணை வைத்து இருந்தார். கடந்த நாற்பது ஆண்டுகளாக, நாடு முழுமைக்கும் பசும் பூக்களை (chrysanthemum flower) அனுப்பி வந்தார்.

இவருடைய பண்ணை கோலா தெர்லாவில் சுங்கை இச்சாட் (Sungei Ichat) ஆற்றுக்கு அருகில் இருந்தது. சாமந்தி, செவ்வந்தி பூக்களைப் பயிரிட்டு வந்தார்.

கடந்த திங்கட் கிழமை (23.12.2019) நிலச் சுரங்க அலுவலகத்தில் (Cameron Highlands Land and Mines Office) இருந்து கன ரக இயந்திரங்கள் வந்தன. இவரின் பூ பண்ணைக்குள் நுழைந்தன. 



அந்தப் பண்ணையை ஒட்டு மொத்தமாக அழித்து நாசம் செய்து விட்டுப் போய் விட்டன. இப்போது இவருடைய எதிர்காலம் கேள்விக் குறியாகத் தொக்கி நிற்கிறது.

அவருடைய பண்ணை அழிக்கப்படும் போது தொலைவில் இருந்து அந்த அவலத்தை அவரால் பார்க்கத் தான் முடிந்தது. பண்ணையைச் சுற்றி அமலாக்க அதிகாரிகள். அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

கன ரக இயந்திரங்கள் அவருடைய பசுமைக் குடிலை (green house) இடித்து தரைமட்டம் ஆக்கின.

"இனிமேல் அந்தப் பச்சை மண்ணில் பயிர் செய்து கொஞ்சி விளையாட முடியாது. எங்களுடைய பண்ணை அழிக்கப்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை." 



"ஜனவரி முதல் தேதி புத்தாண்டு; அடுத்து வரும் பொங்கல் வரை ஆர்டர்கள் இருக்கின்றன. என்ன செய்யப் போகிறோம்."

"பண்ணையில் எங்களின் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக் கொள்ளக்கூட எங்களுக்கு அனுமதி இல்லை. எங்களின் பச்சைக் குடிலை பெயர்த்து எடுக்கவும் அனுமதிக்கவில்லை. பயிர் பச்சைகளை அறுவடை செய்யவும் விடவில்லை. தடுத்து நிறுத்தப் பட்டோம்."

"வந்தார்கள்... மேய்ந்தார்கள்... போய்ச் சேர்ந்தார்கள்..."

"ரொம்பவும் கஷ்டப்பட்டு உழைத்தோம். நாற்பது ஆண்டுகளாக உழைத்த உழைப்பு ஒரே நாளில் பறி போனது."



"பகாங் மாநில அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் பல இந்திய விவசாயிகள் ஓட்டாண்டியாகிப் போனார்கள். அவர்களால் இனி சம்பாதிக்க முடியாது. அவர்களின் கடன்களை அடைக்க முடியாது."

"பெரும்பாலான விவசாயிகள் பண்ணை மேம்பாட்டிற்காக ஆக்ரோ வங்கியில் கடன் வாங்கி இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஆரம்பத்தில் பிள்ளைகள் வேறு புதிய வகுப்புகளுக்குப் போகிறார்கள்."

"அந்தத் தோட்டம் தான் எங்களின் அன்னப் பாத்திரம். நாற்பது ஐம்பது ஆண்டு காலமாக எங்களுக்கு அன்னம் இட்ட பாத்திரம்." 



"எங்கள் பிள்ளைகள் மேல் படிப்பு படித்து இருந்தாலும் இந்தத் தோட்டங்களில் தான் வேலை செய்து வந்தார்கள். எங்களுடன் இரவும் பகலுமாய் உழைத்தார்கள்."

"விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும் என்று நம் நாட்டுத் தலைவர்கள் வீரவசனம் பேசுகிறார்கள். ஆனால் இந்த மாதிரி விவசாய அழிப்புகளைச் செய்தால் எப்படிங்க விவசாயத் துறை முன்னுக்கு வரும். சொல்லுங்கள்"

மனம் கலங்கி வேதனைப் படுகிறார் கே.பெரியசாமி. இவர் இந்தப் பண்ணையில் தன் சகோதரிகளுடன் உழைத்து தன் வாழ்வாதாரத்தைத் தேடி வந்தார். தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்.

இருப்பதை மற்றவர்களுக்கு கொடுத்து மன நிறைவு அடைந்து வந்தார். இப்போது அவருடைய வாழ்வியல் சாசனத்தையே அழித்து ஒழித்துவிட்டுப் போய் விட்டார்கள்.



கோலா தெர்லாவில் விவசாயப் பண்ணைகள் இடிக்கப் படுவதைத் தவிர்ப்பதற்கு குவாந்தான் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற்று இருந்தனர்.

ஆனால் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி அந்தத் தடை உத்தரவை அவர்கள் மீட்டுக் கொண்டனர். அதன் பிறகு தான் இடிப்பு அழிப்பு ருத்ர தாண்டவங்கள் அரங்கேற்றம் கண்டன.

மாநில அரசாங்கம் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் நடந்ததே வேறு. நீதிமன்றத் தடை உத்தரவை மீட்டுக் கொள்ளச் சொல்லி கழுத்து அறுக்கப்பட்டு விட்டார்கள்.

யார் மீட்கச் சொன்னார்கள் என்பது பாதிக்கப்பட்ட பண்ணை விவசாயிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 



ஒருக்கால் மாநில அரசு ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி நீதிமன்றத் தடை உத்தரவை மீட்கச் சொல்லி இருக்கலாம். அதில் அவர்கள் ஏமாந்து போய் இருக்கலாம்.

அரசியல்வாதிகள் ஒருவர் மீது ஒருவர் பழி போடுவது இன்றைக்கு நேற்றைக்கு நடக்கிற விசயம் அல்ல. கம்ப ராமாயணத்துக் காலத்தில் இருந்தே கதை கதையாய் வருகிறது.

கோலா தெர்லா விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி வாக்குத் தவறி விட்டதாக ம.சீ.ச. உதவித் தலைவர் டி லியான் கெர் கருத்து தெரிவித்து உள்ளார். 



மத்திய அரசு, பகாங் மாநில அரசுக்கு வழங்கிய அறிவுரையின் அடிப்படையில் பண்ணை அழிப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டதாக ம.சீ.ச. உதவித் தலைவர் சொல்கிறார்.

துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் (Wan Rosdy Wan Ismail) இருவரும் சேர்ந்து அந்த முடிவை எடுத்ததாகவும் சொல்கிறார். என்ன நடந்தது என்கிற உண்மை நமக்கு தெரியாது.

ஜனநாயகச் செயல் கட்சி, ம.இ.கா. மீது பழி போடுவதும்; ம.சீ.ச. கட்சி அம்னோ மீது பழி போடுவதும்; பக்காத்தான் கூட்டணி பாரிசான் கூட்டணியின் மீது பழி போடுவதும் தொடரும் அனுபல்லவிகள். 



அதனால் பாதிக்கப் பட்ட இந்தியர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்கள் ஏமாந்து போனது தான் மிச்சம்.

அரசாங்கத்தை எதிர்த்து எதையும் சாதிக்க முடியாது என்பதை நினைவில் கொள்வோம். பொறுமையாகவும் விவேகமாகவும் நடந்து கொண்டால் நஷ்டயீடு கேட்டுப் பெறலாம்.

இருந்தாலும் ஓர் அதிசயம் நடக்கலாம். அரசாங்க உயர்மட்டங்கள் ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்ய முன்வரலாம். ஆனால் என்ன உதவி என்பதை மட்டும் வரையறுத்துச் சொல்ல இயலவில்லை.

பல்லினச் சமுதாயத்தில் நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் விதைக்கும் வழக்கம் மட்டுமே நலம் பயக்கும். அதுவே சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வுகளைக் காண பெரிய உதவியாகவும் அமையும்.

அரசியலமைப்பு உரிமைகள்; அடிப்படை மனித உரிமைகள் எனும் இந்த இரண்டு உரிமைகளும் மீறப் படாமல்... ஒரு சமநிலையில் இருக்க வேண்டும்.

கேமரன் மலையில் சிறுபான்மை இனத்தவரின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு உள்ளன. ஆகவே இதில் அவர்களின் வாழ்வாதார உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளன.

நீதிக் கொள்கைகள் என்பது இயற்கையாகவே அமைந்துவிட்ட மனிதக் கொள்கைகள். மனிதம் பேசும் மனசாட்சிக் கொள்கைகள்.

என்னதான் வந்தாலும் போனாலும், அந்த இயற்கையின் நீதி நியாயமானக் கொள்கைகள் நிலை நாட்டப்பட வேண்டும்.

அதே சமயத்தில் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் என்றைக்கும் மீறப்படக் கூடாது. சரி.

கேமரன் மலையில் பல பத்து இந்தியர்க் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கின்றன. இதைத் தான் நாம் இப்போது பெரிதாகக் கருத வேண்டும். ஒருவரை ஒருவரைக் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கும் நேரம் இது அல்ல.

கோல தெர்லா இந்திய விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவே நம்முடைய தலையாய நோக்கம். அது வரையில் நம்முடைய இனப் பூர்வமான முன்னெடுப்புகளும் தொடரும்.

கடைசியாக ஒரு விசயம். மலேசிய இந்தியர்களிடம் இருப்பதை எல்லாம் பிடுங்காமல் விட மாட்டார்கள் என்று சிலர் விளையாட்டாகச் சொல்வார்கள். அந்த நக்கல் நையாண்டிகள் நடக்காமல் இருந்தால் அதுவே கோடி புண்ணியம்.