பத்துமலை வரலாறு - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்துமலை வரலாறு - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 பிப்ரவரி 2020

பத்துமலை வரலாறு - 4


தமிழ் மலர் - 10.02.2020

மலேசிய வாழ் இந்து பெருமக்கள் அனைவருக்கும் தைப்பூச நல்வாழ்த்துகள். பத்துமலை வரலாற்றுக் கட்டுரைத் தொடரில் இன்று நான்காம் பகுதி.

வில்லியம் ஹோர்னடே (William Hornaday) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர். அவருக்கு நெருங்கிய ஒரு நண்பர். பெயர் எச்.சி. செயர்ஸ் (H. C. Syers). இவர் 1878-ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்தின் தலைமைப் போலீஸ் அதிகாரியாகப் பணி புரிந்தவர். 



இவர்கள் இருவரும் பத்துமலைப் பகுதிக்கு வேட்டையாடப் போய் இருக்கிறார்கள். அப்போது பத்து குவா (Goa Batu) கிராமத்தில் வாழ்ந்த கிராமத்து மக்கள் பத்துமலையைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

1885-ஆம் ஆண்டில் வில்லியம் ஹோர்னடே தன்னுடைய நாட்குறிப்பில் எழுதியதை எளிய முறையில் தமிழாக்கம் செய்து தருகிறேன். லிஸ் பிரைஸ் (Liz Price) என்பவர் The History of The Caves at Batu Caves எனும் நூலை 1994-ஆம் ஆண்டு எழுதி இருக்கிறார். அதில் வில்லியம் ஹோர்னடேவின் நாட்குறிப்புகள் உள்ளன. அவர் எழுதி இருக்கிறார்…

1878 ஜுலை மாதம் பத்துமலையின் அடிவாரத்தில் இருந்த கிராமத்திற்குச் சென்றோம்.  அப்போது வயதான ஒரு மலாய்க்காரரையும் தெமுவான் பூர்வீகக் குடிமக்களில் சிலரையும் சந்தித்தோம். அவர்களும் எங்களுடைய குகைப் பயணத்தில் சேர்ந்து கொண்டார்கள். மலை அடிவாரத்திற்குச் சென்றோம். அடர்ந்த காட்டுக்குள் பத்துமலை இருந்தது. 



அடிவாரத்தில் 200 அடி உயரத்தில் ஒரு குகை இருந்தது. அங்கே இருந்து மூக்கைத் துளைக்கும் காரமான நெடி வந்து கொண்டு இருந்தது. சுற்றுப்புறக் காற்றுத் தன்மையும் அழுத்தமாக இருந்தது. 

வயதான மலாய்க்காரரிடம் இது என்ன இப்படி ஒரு நெடி வருகிறது. பயங்கரமாக இருக்கிறதே என்று கேட்டேன். அதற்கு அவர் வௌவால் சாணத்தின் நெடி என்றார். எங்கே இருந்து வருகிறது என்று கேட்டேன். மேலே உள்ள குகையில் இருந்து வருகிறது என்று சொன்னார்.

பின்னர் அடிவாரத்தில் இருந்து மலையின் உச்சிக்கு ஒரு காட்டுப் பாதையின் வழியாக ஏறினோம். மலையின் உச்சியில் ஒரு பெரிய வளைவு வடிவத்தில் ஒரு குகை இருந்தது. 



குகையின் உள்ளே போனோம். பிருமாண்டமான அகண்ட வெளி. மூங்கில் விளக்குகளைப் பற்ற வைத்து உள்ளே நுழைந்தோம். இந்தக் குகைக்குக் குவா பெலா (Gua Belah) என்று தெமுவான் மக்கள் பெயர் வைத்து இருந்தார்கள்.

குவா பெலா என்றால் இரட்டைக் குகை என்று பொருள். இந்தக் குகையின் அகண்ட வெளிதான் இப்போதைக்கு பத்துமலையின் அகன்ற ஆலயக் குகை.

குகையின் அகலம் ஏறக்குறைய 150 அடி இருக்கும். நீளம் எப்படியும் 250 - 350 அடி இருக்கும். உள்ளே வடக்குப் பக்கமாக 45 பாகையில் ஒரு பெரிய பாறை. குகையின் உட்பாகம் அழுத்தமான சாம்பல் நிறத்தில் இருந்தது. தரையில் காய்ந்து போன வௌவால் சாணக் குவியல். 



அந்தச் சாணக் குவியல் எத்தனை அடி உயரம் இருக்கும் என்று தெரியவில்லை. வெளியே எடுத்துக் கொட்டினால் ஒரு சின்ன மலையை உருவாக்கி விடலாம். அவ்வளவு வௌவால் சாணம்.

அதனால் தான் அந்தப் பயங்கரமான கார நெடி. அரை மைல் தொலைவில் இருக்கும் போதே அந்த கடும் நெடி மூக்கைத் துளைத்து எடுத்து விட்டது.

ஆனால் இந்தப் பூர்வீகக் குடிமக்கள் எப்படித் தான் அங்கே தங்கி இருக்கிறார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு எந்த நோயும் வரவில்லை. பெரிய அதிசயமாக இருக்கிறது.

அந்த மாதிரியான ஓர் அமில நெடிச் சூழலில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். அங்கேயே அந்தக் குழந்தைகளும் வளர்கிறார்கள். குழந்தைகளுக்கு ஆறு வயதானதும் அவர்களும் வௌவால் வேட்டைக்குப் போய் விடுகிறார்கள். 



வௌவால்களைச் சாப்பிட்டுச் சலித்துப் போய் சமயங்களில் கீழே இறங்கி வந்து மற்றவர்களின் ஆடு மாடு வளர்ப்புப் பிராணிகளையும் திருடிச் சென்று விடுகிறார்கள். இரவோடு இரவாக அந்த நாடகம் நடந்து விடுகிறது.

கேட்டால் புலி வந்து அடித்துத் தின்று விட்டதாகச் சொல்வார்கள். பத்துமலைக்கு கீழே இருக்கும் இந்தியர்களும் சீனர்களும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.

பார்க்கப் போனால் தெமுவான் மக்களை இந்தியர்களும் சீனர்களும் பகைத்துக் கொள்ள விரும்புவது இல்லை என்றே தோன்றுகிறது. ஏன் என்றால் வௌவால் சாணம் எடுக்கச் சீனர்கள் குகைக்குள் போக வேண்டி இருக்கிறதே. அதனால் ஓர் எழுதப் படாத சாசனம் நிலவியது.

இந்தத் தெமுவான் பூர்வீக மக்கள், பத்துமலைக் காடுகளில் அழுங்குகள் (Manis Javanica); காட்டு ஆடுகள் (Capra Aegagrus); செலாடாங் மாடுகள் (Seledang); தப்பீர்கள் (Malayan tapir, Tapirus Indicus) போன்றவற்றை வேட்டையாடிக் கொண்டு வருவது வழக்கம். அப்போது பத்துமலைக் காடுகளில் காட்டு ஆடுகள் நிறைய இருந்தன.



அவற்றைக் கொண்டு வந்து இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் கொடுப்பார்கள். ஒரு பண்டமாற்று வியாபாரம் போல தங்களின் பொருட்களைக் கொடுத்து மாற்றம் செய்து கொள்வார்கள்.

பெரிய குகைக்குப் பக்கத்திலேயே இன்னொரு குகை இருந்தது. அந்தக் குகையின் உள்ளே ஆயிரக் கணக்கான வௌவால்கள் வட்டம் அடித்துக் கொண்டு இருந்தன.

இந்த வகை வௌவால்களுக்கு இயோனிக்தெரிஸ் ஸ்பில்லா (Eonycteris Spilla) வௌவால்கள் என்று பெயர். பூமத்திய ரேகை நாடுகளில் மட்டுமே இந்த வௌவால்களைக் காண முடியும். பொதுவாக இவற்றின் எடை 60 கிராம். நூறு வௌவால்களைச் சேர்த்தால் ஐந்து அல்லது ஆறு கிலோ வரும். சரி.

அருகாமையில் இன்னும் இரு சின்ன குகைகள் இருந்தன. இந்தச் சின்னக் குகைகளின் சுவர் மஞ்சள் நிறத்தில் இருந்தது. 



தெமுவான் வாசிகள் அந்தக் குகைகளுக்குள் நீண்ட குச்சிகளை எடுத்துக் கொண்டு போனார்கள். மேலே தொங்கிக் கொண்டு இருந்த வௌவால்கள்; சுவர் இடுக்குகளில் மறைந்து கொண்டு இருந்த வௌவால்களை விரட்டி அடித்தார்கள். நாங்களும் ஒரு சில வௌவால்களைகளை அடித்துப் பிடித்தோம்.

நாங்கள் போகும் போது இந்த வௌவால்கள் ஓரளவிற்குக் குறைந்து விட்டன. அப்படித் தான் தோன்றியது. ஆதிவாசிகள் ஒரு நாளைக்கு 150 - 200 வௌவால்களைப் பிடித்துச் சாப்பிடுவதாக அவர்களே சொன்னார்கள்.

அதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எத்தனையோ நூறு ஆண்டுகளாக இந்தப் பூர்வீக மக்கள் அங்கே வாழ்கிறார்கள். எவ்வளவு வௌவால்களைச் சாப்பிட்டு இருப்பார்கள். கணக்குச் சொல்ல முடியாது.

பின்னர் கீழே இறங்கி வந்தோம். வரும் வழியில் இன்னும் ஒரு குகை இருந்தது. அதன் பெயர் லம்போங் குகை (Gua Lambong). 



இந்தக் குகைகள் எல்லாமே பத்து எனும் பெரிய கிராமத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் இருந்தன. கோலாம்பூர் நகரில் இருந்து ஒன்பது மைல்கள்.

பத்துமலைக் குகைகளில் வாழ்ந்த பூர்வீகக் குடியினர் எப்போதுமே நிரந்தரமாக அங்கே தங்குவது இல்லை. வெயில் காலம் வந்து விட்டால் பத்துமலைக் காட்டில் உள்ள யானைகளும், புலிகளும், சிறுத்தைகளும், கரடிகளும் குகைகளுக்குள் வந்து விடும்.

அதனால் ஆபத்து. ஒரு சில மாதங்களுக்கு அந்த விலங்குகள் அங்கேயே தங்கிவிடும். பூர்வீக மக்கள் கீழே இறங்கி வந்து விடுவார்கள். பத்து ஆற்று ஓரத்தில் குடிசைகள் கட்டித் தங்கி விடுவார்கள்.

அந்த விலங்குகள் குகைகளை விட்டுப் போனதும் தான் மறுபடியும் அவர்கள் குகைக்குள் போவார்கள். ஏற்கனவே அவர்கள் தங்கிய இடங்களைச் சுத்தம் செய்வார்கள்.

அப்புறம் மறுபடியும் வௌவால் வேட்டையைத் தொடங்குவார்கள். வௌவால்கள் தான் அப்போதைக்கு அவர்களின் முக்கிய உணவுப் பொருளாக விளங்கி இருக்கிறது.



இப்படித்தான் பத்துமலைக்குள் முதன்முதலில் சென்ற வில்லியம் ஹோர்னடே தன்னுடைய நாட்குறிப்பில் எழுதி இருக்கிறார்.

வில்லியம் ஹோர்னடேவின் பத்துமலை கண்டுபிடிப்பிற்குப் பின்னர் சில வாரங்கள் கழித்து மற்றும் ஓர் ஆய்வுக் குழுவினர் குகைக்குள் போய் இருக்கிறார்கள்.

அந்தக் குழுவில் கேப்டன் புளும்பீல்ட் (Captain Bloomfield Douglas), டொமினிக் டேலி (Dominic D. Daly), லெப்டினெண்ட் லிண்ட்ஸ்செல் (Lieutenant R. Lindsell), பூர்வீக வாசிகள் சிலர் இருந்தனர்.

அதைப் பற்றி 1879 ஏப்ரல் 7-ஆம் தேதி டொமினிக் டேலி, அரச ஆசியாட்டிக் கழகத்திற்கு (Straits Branch of the Royal Asiatic Society) ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 



இந்தக் கடிதம் கிடைத்த பிறகு தான் பத்துமலையைக் கண்டுபிடித்தவர் டொமினிக் டேலி என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

அந்த வகையில் முதன் முதலில் பத்துமலைக்குச் சென்ற வில்லியம் ஹோர்னடே; எச்.சி. செயர்ஸ் இருவரின் பெயர்களும் பத்துமலை வரலாற்றில் இருந்து அடிபட்டுப் போயின. இவர்கள் இருவரும் தங்களின் பத்துமலைக் கண்டுபிடிப்பை ஆவணப் படுத்தவில்லை என்பது தான் அவர்கள் செய்த பெரிய தவறு.

முறைப்படி குறிப்புகள் எடுத்து, முறைப்படி தெரிவித்து இருந்தால் இவர்கள் இருவரின் பெயர்கள் தான் இப்போதைக்கு பத்துமலை வரலாற்றில் நிலைத்து நின்று இருக்கும்.

பத்துமலைக்கு இரண்டாவதாகப் போன டொமினிக் டேலியின் ஆய்வுகளைப் பார்த்தால் பத்துமலையில் மூன்று குகைகள் இருந்ததாகத் தெரிய வருகிறது. இது அவருடைய ஆவணத்தில் இருந்தது என்று சொல்ல வருகிறேன்.

முதாலவது குகை  - லம்போங் குகை (Gua Lambong), (இப்போதைய ஆலயக் குகை);

இரண்டாவது குகை - பெலா குகை (Gua Belah);

மூன்றாவது குகை - லாடா குகை (Gua Lada);

டொமினிக் டேலி தன் ஆய்வுகளில் இப்படி சொல்கிறார். பத்துமலைக் குகைகளில் தொல்லுயிர்ப் புதை படிவுகள் (Fossils) எதுவும் கிடைக்கவில்லை. அது ஒரு பெரிய ஆச்சரியமான விசயம். 



ஆனால் ஆயிரக் கணக்கான டன்கள் வௌவால் சாணங்களை மட்டும் தான் பார்க்க முடிந்தது. அதை வௌவால்களின் பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும்.

தொல்லுயிர்ப் புதைப் படிவுகளும்; கடல்வாழ் சிப்பிகளின் ஓடுகளும் கிடைக்காததால் கடல் நீர், பத்துமலைப் பகுதி வரையில் வரவில்லை என்று முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

(From the absence of fossils and shells, it would appear that the sea never reached any part of the Batu Caves hill.)

ஒரு செருகல். 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தீபகற்ப மலேசியா கடலில் மூழ்கியும் மூழ்காமலும் இருந்த ஒரு நிலப் பகுதியாகும். ரொம்ப வேண்டாம். கோலாலம்பூர் நகரும் கடலுக்குள் இருந்து வெளியே வந்த நிலப் பகுதிதான்.

அதனால் தான் முன்பு காலத்தில் பத்துமலையின் சுண்ணாம்புக் குகைகள், கடல் கொண்ட பகுதிகளாக இருந்து இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதினார்கள். சந்தேகப் பட்டார்கள். சரிங்களா.



பத்துமலைக்குச் செல்வதற்கு ஏழு பாதைகள் இருந்தன என்று டொமினிக் டேலி சொல்கிறார். ஆனால் வில்லியம் ஹோர்னடே அப்படிச் சொல்லவே இல்லை. இன்னும் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும்.

வில்லியம் ஹோர்னடே என்பவர் பத்துமலையில் ஆய்வு செய்தது 1878-ஆம் ஆண்டு. டொமினிக் டேலி என்பவர் ஆய்வு செய்தது 1879-ஆம் ஆண்டு. ஒரு வருட இடைவெளி.

டொமினிக் டேலி 1879 ஜுலை 15-ஆம் தேதி, கோலக்கிள்ளான் நகரில் மெம்பாக்குல் (Mempakul) எனும் கிராமப் பகுதியில் காய்ச்சல் கண்டு இறந்து போனார். இவர் தான் பத்துமலையைப் பற்றி அதிகமாக ஆய்வுகள் செய்தவர்.

அடுத்து வருபவர் வில்லியம் ஹோர்னடே. பத்துமலையைப் பற்றி முதன் முதலில் வெளியுலகத்திற்கு அறிவித்தவர். இவர் அமெரிக்காவில் 1937 மார்ச் மாதம் 3-ஆம் தேதி, தன் 82-ஆவது வயதில் காலமானார்.

மற்றும் ஓர் ஆய்வாளர் கேப்டன் எச்.சி. செயர்ஸ் (Captain H. C. Syers). கூட்டரசு மலாயாவில் முதல் போலீஸ் கமிஷனர் (Federated States Police Commissioner). சிலாங்கூர் மாநிலத்தின் முதல் போலீஸ் தலைவர். 



1897-ஆம் ஆண்டு வேட்டைக்குச் செல்லும் போது, காயம் பட்ட செலாடாங் காட்டு எருமையால் கொல்லப் பட்டார். அப்போது அவருக்கு வயது 45.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த மூன்று ஐரோப்பியர்கள் தான் பத்துமலையைப் பற்றி வெளி உலகத்திற்குச் சொன்ன அழகிய முருகதாசர்கள். அந்த வகையில் மலேசிய இந்தியர்கள் என்றென்றும் அவர்களுக்கு கடமைப்பட்டு உள்ளார்கள்.

இசபெல்லா பேர்ட் (Isabella Lucy Bird) எனும் பெண் ஆய்வாளரும் பத்துமலையைப் பற்றி எழுதி இருக்கிறார். 1879-ஆம் ஆண்டு அவர் பார்த்த இந்தியர்கள் பலர் தலைப்பாகை கட்டி இருந்ததாகவும்; அரைக்கால் சிலுவார்களுக்குப் பதிலாகச் சிலர் கோவணங்கள் கட்டி இருந்ததாகவும் சொல்கிறார். அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)