கொரோனா நெருக்கடியில் தும்மல் இரகசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா நெருக்கடியில் தும்மல் இரகசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 மார்ச் 2020

கொரோனா நெருக்கடியில் தும்மல் இரகசியங்கள்

முகத்திற்கு அழகு கொடுப்பது கண்கள். அந்தக் கண்களுக்கு அழகு கொடுப்பது கன்னங்கள். அந்தக் கன்னங்களுக்கு அழகு கொடுப்பது மூக்கு. பார்ப்பவர்களை ஈர்க்கும் அழகிய உறுப்பு.

அந்த அழகிய மூக்கிற்கு முத்திரை பதிப்பது போல பெண்கள் மூக்குத்தி அணிந்து கொள்கிறார்கள். அழகில் மேலும் கூடுதல் அழகு. சரி.




மூக்கின் வெளிப் பாகத்தை மட்டுமே நாம் பார்க்கிறோம். ரசிக்கிறோம். கிளி மூக்கு, கூர் மூக்கு, வளை மூக்கு, குடை மூக்கு, மாங்காய் மூக்கு, கோணல் மூக்கு என்று நிறையவே பெயர்கள் வைத்துக் கொள்கிறோம்.

ஆனால் அந்த மூக்கு எப்பேர்ப்பட்ட வேலைகளைச் செய்கிறது என்பதைப் பற்றி பலர் உணரத் தவறி விடுகிறார்கள். மூக்கு நம் உடலுக்கு மிகப் பெரிய ஒரு பாதுகாப்பு வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது. பலருக்கும் தெரிவது இல்லை. 




காற்றைத் தவிர வேறு எந்த ஒரு சிறு பொருளும் மூக்கிற்குள் நுழைந்தால், மூக்கு அதை ஏற்றுக் கொள்ளாது. அது தூசுவாக இருக்கலாம். துகள்களாக இருக்கலாம். பாக்டீரியாவாக இருக்கலாம். அல்லது புதிய ஒரு மசாலா வாசனையாகக் கூட இருக்கலாம்.

எந்த ஒரு வெளிப் பொருளும் நம் மூக்கில் நுழைந்தாலும் நம்முடைய உடல் உடனடியாக ஓர் எதிர்வினையை உண்டாக்கும். அந்த எதிர்வினையைத் தான் தும்மல் என்கிறோம்.

தும்மல் என்பது நமக்குத் தெரியாமல் நாம் எதிர்பார்க்காமல் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. 




நம்முடைய மூக்குத் துவாரத்தில் சிறிய சிறிய முடி இழைகள் இருக்கும். நாம் உள்ளே இழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள்கள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவது தான் அந்த முடி இழைகளின் வேலை.

அடுத்து, நம்முடைய மூக்கில் ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. அந்தச் சவ்வுப் படலம் எப்போதும் ஒருவிதமான திரவத்தைச் சுரந்து கொண்டே இருக்கும்.

அளவுக்கு அதிகமாகத் தூசி அல்லது துகள்கள் மூக்கில் நுழைந்து விட்டால் அந்தச் சவ்வுப் படலம் சட்டென தூண்டப் படுகிறது.

யாரோ எவரோ ஓர் எதிரி நுழைந்து விட்டார் என்று அந்தச் சவ்வுப் படலம் அதிக அளவில் நீரைச் சுரக்க ஆரம்பிக்கிறது. இந்தச் சமயத்தில் நுரையீரல், தொண்டை, வாய், வயிற்றுத் தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்கின்றன. 




அவை எல்லாம் கூட்டாக ஒன்று சேர்ந்து, மூச்சுப் பாதையில் இருக்கும் காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளியே தள்ள வைக்கின்றன. ஆக அந்தக் காற்று அப்படி வெளியே தள்ளப்படும் போது தான் நமக்குத் தும்மல் வருகிறது. புரியுதுங்களா.

தும்மல் என்பது ஓர் அனிச்சையான செயல் (conditional reflex action). அதாவது நமக்குத் தெரியாமல், நாம் அறியாமல் நடக்கும் நிகழ்ச்சி. வேண்டாத பொருள் உள்ளே செல்லும் போது, அந்தப் பொருளை வெளியே தள்ள நடக்கும் நிகழ்ச்சி.

இருமல் தும்மல் இரண்டுமே இயற்கையான மனித இயல்புகள். நாம் அறியாமல் நடக்கும் நிகழ்ச்சிகள். சரி. 

தும்மும் போது மூக்கு, வாய் வழியாக மிகச் சிறிய உமிழ் நீர்த் துளிகள் வெளியே வருகின்றன. ஏறக்குறைய 10,000 நீர்த் துளிகள். சமயங்களில் 100,000 வரை போகலாம். ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 100 கி.மீ. அவ்வளவு வேகம் தெரியுங்களா.




இந்தத் துளிகளின் அளவு ஏறக்குறைய 3 மைக்ரோ மீட்டர். ஏற்கனவே நானோ மீட்டர் என்றால் என்ன என்று விளக்கி இருக்கிறேன். இப்போது மைக்ரோ மீட்டர் என்றால் என்று பார்ப்போம்.

ஒரு மீட்டரின் ஒரு மில்லியனில் ஒரு பங்கு தான் ஒரு மைக்ரோ மீட்டர் (Micro Meter). இதில் நானோமீட்டர் (Nano Meter) என்பது ஒரு மீட்டரின் ஒரு பில்லியனில் ஒரு பங்கு. இங்கே மில்லியன்; பில்லியன் என இரு வகை எண்ணிக்கை வருகின்றன. கவனத்தில் கொள்வோம்.

நம்முடைய தலைமுடியில் ஒரே முடியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை முப்பது பங்குகளாகப் பிரித்துப் போடுங்கள்.

அதில் வரும் ஒரு பங்குதான் 3 மைக்ரோ மீட்டர். ரொம்பவும் சின்னது. அந்த அளவுதான் நாம் தும்மும் போது வெளியாகும் நீர்த் துளியின் அளவு. ஓர் உவமானத்திற்குச் சொல்கிறேன்.

அதற்கு என்று தலைமுடியைப் பிடுங்கி ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம். நேரம் சரி இல்லை. பார்ப்பவர்கள் பைத்தியம் என்று சொல்லிவிடப் போகிறார்கள்.

மூக்கு என்பது அழகான உறுப்பு மட்டும் அல்ல. மனித உடலுக்குப் பாதுகாப்பு வழங்கும் முதல் காவலன். ஆகவே மூக்கைச் சுத்தமாக வைத்துக் கொள்வோம். சுத்தம் சுகம் தரும் என்பதை நினைவில் கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.03.2020