கொரோனா வைரஸ் கோவிட் 19 - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா வைரஸ் கோவிட் 19 - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 பிப்ரவரி 2020

கொரோனா வைரஸ் கோவிட் 19 - 3

கண்ணுக்கு மை அழகு; கவிதைக்கு பொய் அழகு; கன்னத்தில் குழி அழகு; கார் கூந்தல் பெண் அழகு எனும் பாடலைக் கேட்டு இருப்பீர்கள். எதற்கு எது அழகு என்று அழகு அழகான வரிகள். முத்து முத்தான வரிகள்.

அந்தக் கவிதை வரிகளின் பாவனையில் கொரோனாவைக் கொள்ளை அழகு என்று சொல்லலாம். கொள்ளை எனும் சொல்லில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. அந்த வகையில் சீனாவில் இருந்து கசியும் புள்ளிவிவரங்களும் அழகாகத் தான் இருக்கின்றன. பொய்களுக்கும் அழகு உள்ளது என்பதை நினைவில் கொள்வோம்.



வுஹான் நகரில் என்னதான் நடந்து கொண்டு இருக்கிறது என்பது வெளி உலகத்திற்குச் சரியாகவே தெரியவில்லை. மூடி மறைக்கப் படுவதாக உலகச் சமூக ஊடகங்கள் குற்றப் பத்திரிகைகள் வாசிக்கின்றன. அப்படி மூடி மறைப்பதால் நிலைமை மேலும் மோசம் அடையலாம் என்பதே அந்த ஊடகங்களின் தலையாய ஆதங்கம்.

சீனாவில் வுகான் நகரம் (Wuhan) பெரிய நகரம். ஹுபே (Hubei) எனும் மாவட்டத்தில் உள்ளது. அங்கே ஓர் உயிரியல் சோதனைக் கூடம். அங்கே நடந்த தவறுதான் இவ்வளவிற்கும் காரணமாக இருக்கலாம் என்று உலகின் பல இடங்களில் இருந்தும் புகார்கள் வருகின்றன.

இருப்பினும் இந்த வைரஸ் தாக்குதல் பற்றி சீனா இதுவரைக்கும் தெளிவான விளக்கம் எதையும் கொடுக்கவில்லை. வௌவால், பாம்பு, பூனை, நாய் என்று சொல்லிக் கொண்டு இருந்தது. இப்போது மனிதர்களிடம் இருந்து பரவுவதாகச் சொல்கிறது.

கொரோனா வைரஸ் கிருமிகளை வைத்து அந்த நாடு உயிரியல் ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. அங்கே இருந்து தான் கிருமிகள் தவறுதலாகக் வெளியே பரவி இருக்கலாம். சுருங்கச் சொன்னால் உயிர்கொல்லி வைரஸ்களை உருவாக்கும் சோதனைக் கூடங்களில் இருந்து தான் அந்தக் கிருமி வெளியாகி இருக்கலாம் என்பதே பல உலக நாடுகளின் சந்தேகம். 



இருப்பினும் இந்த வைரஸ் எங்கு இருந்து பரவியது என்று தெளிவாகச் சொல்லாமல் சீனா அமைதியாகவே இருந்து வருகிறது. அதுவே சில பல உலக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

போதுமான சான்றுகள் இல்லாமல் அப்படிச் சொல்ல மாட்டார்கள். ஆகவே அந்தப் பொதுவான குற்றச்சாட்டு அப்படித் தான் பயணிகின்றது.

உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் உளவு நிறுவனங்கள் உள்ளன. பக்கத்து நாட்டில் அல்லது தன்னுடைய எதிரி நாட்டில் என்ன மாதிரியான தில்லாலங்கடி வேலைகள் நடக்கின்றன என்பதைப் பற்றி துப்பு துலக்குவது தான் அவற்றின் வேலை. சரி.

அப்படியே சோதனைக் கூடங்களில் இருந்து நோய்க் கிருமிகள் வெளியாகி இருந்தால்; அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால் ஒரு பழமொழி நினைவிற்கு வருகிறது. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். இன்னொரு பழமொழியும் வந்து போகிறது. தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை வித்தவன் வினை அறுப்பான். 



கொரோனா வைரஸ் பாதிப்பினால் வுகான் நகரம் இப்போது காணாமல் போன மழை போல முடங்கிப் போய்க் கிடக்கிறது. அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பொது இடங்கள், சந்தைகள் என எல்லாமே மூடப்பட்டு கிடக்கின்றன. சாலைகளில் மனித நடமாட்டமே இல்லை. ஆள் அரவமற்றுக் கிடக்கின்றன.

மக்கள் வீடுகளுக்குள் உள்ளேயே கலங்கிப் போய்க் கிடக்கிறார்கள். கொரோனா நோய் பல்லாயிரம் சீன மக்களை மருத்துவமனைகளிலும்; வீடுகளிலும் முடக்கிப் போட்டு வைத்து உள்ளது. வீதிகள் வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன. மக்களின் முகத்தில் ஒருவித பயம். ஒருவித சோகம்.

தவிர ஹுபே (Hubei) மாநிலத்தில் 15 நகரங்கள் முழுமையாகவும்; பகுதியாகவும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன.

சீனா நாட்டின் பங்குச் சந்தையில் சரிவு என்று சொல்ல முடியாது. பங்குச் சந்தையைத் தற்காலிகமாக மூடி வைத்து இருக்கிறார்கள். கப்பல் பயணங்கள், விமானப் பயணங்கள் பெரும்பாலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

சீனாவில் பல இடங்களில் நகர்ப்புறப் பொதுப் போக்குவரத்துகள்; தொடருந்துச் சேவைகள்; நீண்ட தூரப் பேருந்துப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

கண்காட்சிகள்; கொண்டாட்டக் கூட்டங்கள்; சீனப் புத்தாண்டு நிகழ்வுகள் தடை செய்யப்பட்டு உள்ளன. சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு உள்ளன. ஆங்காங்கே தொற்று நோய்ப் பரவல் எச்சரிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன.



ஆனாலும் சீனா நாட்டு மக்கள் தன்னம்பிக்கையை விடவில்லை. "வுகான் வீழ்ந்து போகாது! மீண்டும் எழுந்து நிற்கும்" என்பதே இப்போது அவர்களின் தாரக மந்திரம். இப்போது இந்த வரிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

2003-ஆம் ஆண்டு உலகையே சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome - SARS) எனும் நோய்த் தொற்று உலுக்கிப் போட்டது. நினைவு இருக்கலாம். அந்த நோயைப் பரப்பிய கிருமிக்குச் சார்ஸ் கோவி (SARS-CoV) என்று பெயர்.

உலகம் முழுமைக்கும் 800 உயிர்களைப் பலி கொண்டது. இந்த நோய் சீனாவின் குவாங்டோங் (Guangdong) மாநிலத்தில் இருந்து பரவியது. ஓர் ஆண்டுக்குள் 26 நாடுகளுக்குப் பரவியது. பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. சார்ஸ் நோய் கடுமையான நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் தொற்று நோய் ஆகும்.

(SARS virus has escaped from high-level containment facilities in Beijing multiple times, notes Richard Ebright, a molecular biologist at Rutgers University in Piscataway, New Jersey.)



இந்தச் சார்ஸ் நோயின் அறிகுறிகளும் இப்போதைய கொரோனா நோயின் அறிகுறிகளும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளன. சார்ஸ் நோய் போன்றே கொரோனா நோய், முதலில் மனிதர்களின் சுவாசப் பாதையின் மேற்பகுதியில் தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து கொரோனா கிருமிகள் நுரையீரல், குடல் பகுதிகளுக்குப் பரவுகின்றன.

சளி, இருமல், சுவாசக் கோளாறு, உயிர்பலி போன்ற அனைத்தும் சார்ஸ், கரோனா இரண்டிற்கும் ஒரே மாதிரியான, ஒரு பொதுவான அறிகுறிகளாகவே காணப் படுகின்றன.

ஆக சார்ஸ் நோய் சீனாவில் இருந்து பரவியது. அதே போல இப்போது கொரோனாவும் அங்கே இருந்து தான் பரவி உள்ளது. இரண்டுமே கொரோனா வைரஸ்கள் தான். பெயர்களில் தான் சற்றே மாற்றம்.

சார்ஸ் காய்ச்சலுக்கான மருந்தைக் கொரோனா காய்ச்சலுக்குக் கொடுத்துப் பார்த்தார்கள். உஹூம். வேலை செய்யவில்லை. இரண்டுமே அண்ணன் தம்பி கிருமிகளாக இருந்தும் மருந்து மாத்திரைகளில் ஒத்துப் போகவில்லை. 



அதனால் தான் புதிய கொரோனாவிற்குப் புதிய மருந்தை உருவாக்கப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். மிகச் சரியான மருந்தக் கண்டுபிடிக்க பல மாதங்கள் பிடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

கொரோனா நோய் என்பது இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஒரு நிகழ்ச்சி. ஆகவே அதைப் பற்றி ஒரு சின்ன மீள்பார்வை. 

கொரோனா நோயின் புதிய பெயர் கோவிட்-19 (COVID-19). இதுவும் கொரோனா (Coronavirus) கிருமிகளைச் சார்ந்த ஒரு புதிய வகை. 2019-ஆம் ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வுகான் நகரத்தில் உள்ள சிலருக்குக் காரணம் இல்லாமல் நுரையீரல் அழற்சி ஏற்பட்டது. நுரையீரல் என்றால் சுவாசப்பை. அழற்சி என்றால் நோய்க் கிருமிகளுக்கு எதிரான உடலின் எதிர் வினைத் தன்மை (Inflammation).

நுரையீரல் அழற்சி (pneumonitis) அல்லது நிமோனியா (Pneumonia) என்பது நுரையீரலில் அழற்சி விளைவிக்கும் ஒரு நோய் ஆகும். இருமல், நெஞ்சுவலி, சளி, காய்ச்சல், மூச்சு இரைப்பு, மூச்சுவிடக் கடினமாக இருத்தல் போன்றவை இதற்கான அறிகுறிகள். 



நோய்த் தாக்கம் கடுமையாக இருந்தால் பாதிக்கப் பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவார். ஆக்ஸிஜன் எனும் உயிர்க் காற்றின் அளவு குறைவாக இருந்தால் செயற்கை முறையில் சுவாசச் சிகிச்சை அளிக்கப் படலாம்.

ஆனால் கோவிட்-19 அழற்சிக்கு கொடுக்கப்பட்ட தடுப்பு மருந்துகளும் சிகிச்சைகளும் பயன் அளிக்கவில்லை.

2020 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையில், உலகளாவிய நிலையில் 71,323 தொற்றுகள் உறுதிப் படுத்தப்பட்டன. இதில் 11,298 பேருக்கு மோசமான நிலைமை. இந்தப் புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு நாளும் மாற்றம் காண்கின்றன.

உலகம் முழுமைக்கும் 1,770 இறப்புகள். சீனா 1,765; ஜப்பான் 1; ஹாங்காங் 1; தைவான் 1; பிரான்ஸ் 1; பிலிப்பைன்ஸ் 1.



மலேசியாவில் 22 பேருக்குத் தொற்றியது. அவர்களில் 8 பேர் குணமடைந்து விட்டனர்.

(சான்று: https://www.worldometers.info/coronavirus/)

ஊடகங்களில் கிடைத்த செய்திகள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். உண்மையாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். வதந்திச் செய்திகளைத் தவிர்ப்பதே சிறப்பு. வதந்திகள் பீதியை உண்டாக்கும்.

சமயங்களில் வுகான் தெருக்களில் பிணங்கள் கிடப்பது சாதாரணமாகி வருகிறது. விடியற்காலை நான்கு மணிக்கு எல்லாம் ஆம்புலன்ஸ் வண்டிகள் வருகின்றன. அப்படியே உடல்கள் அப்புறப் படுத்தப் படுகின்றன.  

வுகான் நகரில் கடைகள் எல்லாமே மூடப்பட்டு உள்ளன. அங்கு உள்ளவர்கள் அனைவரும் உடல் கவசம் அணிந்தே போகின்றனர் வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு முதியவரின் சடலம் தெருவில் கிடந்தது. அறுபது வயதிற்கும் மேல் இருக்கலாம். அவர் முகத்திரை அணிந்து இருந்தார். இவர் கொரோனாவிற்குப் பலியானவராக இருக்கலாம் என்கிற சந்தேகம். முகத்திரை அணிந்தவரும் கொரோனா நோயில் இருந்து தப்ப முடியாது என்று சொல்கிறார்கள். 

வுகான் நகருக்கு 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ்கள் போய் வந்த வண்ணம் உள்ளன. மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் இரண்டு நாட்கள் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை.



அமெரிக்கா, மேரிலாந்தில் உயிரி பாதுகாப்பு மையம் உள்ளது (University of Maryland Biosafety Research Safety). அதன் ஆலோசகர் டிம் ட்ரெவன் (Tim Trevan). 2017-ஆம் ஆண்டிலேயே சீனாவின் உயிரி ஆராய்ச்சி மையம் (Wuhan Institute of Virology) பற்றி ஓர் எச்சரிக்கையைச் செய்து உள்ளார்.

(Scientists warned in 2017 that a SARS-like world’s most dangerous virus could escape a lab in Wuhan, China)

'வுகானின் ஆய்வு மையத்தில் உலகத் தரத்திலான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. வைரஸ்கள் கசிய அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி வெளியேறினால் உலகம் முழுதும் பாதிக்கப்படும்' என்றார்.

அதை உறுதி செய்யும் வகையில் இஸ்ரேல் இராணுவப் புலனாய்வு (Israeli Military Intelligence) பிரிவு முன்னாள் அதிகாரி டேனி ஷோஹம் (Horsham) சொல்கிறார்.

'வுகான் உயிரியல் ஆய்வு மையத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பது என் உறுதியான கருத்து' என்கிறார்.

சார்ஸ், எபோலா போன்ற கொடிய வைரஸ்கள் இந்த ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதை ஏற்கனவே உலக ஆய்வாளர்கள் உறுதிபடுத்தி உள்ளனர். எச்சரிக்கையும் செய்துள்ளனர்  

வுகானில் தொடங்கிய கொரோனா கிருமிகளின் பயணம் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்கள் வரை தொடர்ந்து போகிறது. இதனால் ஒட்டு மொத்த சீனா நாடே கதிகலங்கி உறைந்து போய் நிற்கிறது. 



அமெரிக்கா, தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், தைவான், ஹாங்காங் போன்ற நாடுகளிலும் கொரோனா பரவி நிற்கிறது. இதில் நம் நாடு மலேசியாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அபாய நிலையில் இல்லை. இருந்தாலும் விழிப்புணர்வு, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கொரோனா தாக்குதலுக்கு எதிராக நம்மை நாமே தயார் படுத்திக் கொள்வதற்கு ஓர் எளிய முறை

மனித உடலில் கொரோனா வைரஸ் வளர்ச்சி பெற்றுத் தாக்குதல் நடத்துவதற்கு 1 முதல் 24 நாட்கள் வரை பிடிக்கும். அந்தக் காலக் கட்டத்தில் நோய்த் தொற்றியதற்கான அறிகுறி எதுவும் நமக்குத் தெரியவே தெரியாது. சாதாரணமாகவே இருக்கும்.

அதனால் கொரோனா நோயினால் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்பது அவருக்கே தெரியாது.

அப்படியே ஒருவருக்கு வறட்டு இருமல் வந்து; கொரோனா காய்ச்சல் வந்து; அவர் மருத்துவமனைக்குச் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவருடைய நுரையீரலில் இழைமத் தடிப்பு (Fibrosis) எனும் நார்ப் பெருக்கம் 50% ஏற்பட்டு இருக்கும்.

அதாவது அவரின் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருக்கும். 50% விழுக்காட்டுப் பாதிப்பு என்பது முதியவர்களுக்கு ஆபத்தான நிலைமை என்றுகூட சொல்லலாம். 



இதற்கு ஒரு முன் எச்சரிக்கையான சோதனை. இது ஒவ்வொரு நாளும் காலையில் நீங்கள் செய்யக் கூடிய ஓர் எளிமையான சுயப் பரிசோதனை. மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.

ஆழமாக ஒரு மூச்சு இழுத்துக் கொள்ளுங்கள். அப்படியே ஒரு 10 வினாடிகளுக்கு மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இருமல் இல்லாமல், மூச்சுத் திணறல் இல்லாமல்; இறுக்கம் இல்லாமல்; அழுத்தம் இல்லாமல்; இதை நீங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்தால்... கவலை வேண்டாம்.

உங்கள் நுரையீரலில் Fibrosis எனும் இழைமத் தடிப்பு இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் உங்களுக்குத் தொற்று இல்லை. அத்துடன் நிமோனியா உங்களைத் தாக்கவில்லை என்பதையும் அது குறிக்கிறது.

நீங்கள் செய்யும் பரிசோதனை முழுமையாக இருக்க வேண்டும். பத்து விநாடிகளுக்கு மூச்சை ‘தம்’ கட்ட வேண்டும். மறக்க வேண்டாம். மறுபடியும் சொல்கிறேன். பத்து விநாடிகளுக்கும் மேல்... மூச்சை இழுத்துப் பிடிக்க வேண்டும்.

சுத்தமான காற்று கிடைக்கும் இடத்தில் இந்தச் சோதனையைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும்  காலையில் இந்தச் சுய பரிசோதனையைச் செய்து பாருங்கள். மறுபடியும் சொல்கிறேன். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து சோதிக்க வேண்டும். சரி.

மனித வரலாற்றில் தன்னுடைய மனித இனத்தையே அழிக்கின்ற ஒரு கபட நாடகத்தைக் காலம் காலமாக மனிதன் கற்றுக் கொள்கிறான். அதனால் அவனுடைய அந்த மனித இனத்திற்குத்தான் பேரழிவு. 

கொரோனா வைரஸ் பற்றி எல்லா தகவல்களையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, உலகம் ஓர் அபாயக் கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது என்பது தெரிய வருகிறது. மேலும் சில புதிய தகவல்களுடன் நாளை சந்திக்கிறேன்.

(தொடரும்)