ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 மே 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 1

தற்காலத் தமிழர் வரலாற்றில் ஒரு வீரமான உயிர்மை வீர வசனம் பேசுகின்றது. அந்த வீர வரலாற்றில் வல்லமை பார்த்த தமிழர்களும் வருகிறார்கள். தமிழச்சிகளும் வருகிறார்கள். தமிழ் இனத்தின் விடுதலை வீரத்தை வையகமே வியந்து பார்க்கச் செய்தார்கள். அவர்கள் தாம் தமிழீழத் தமிழர்கள். ஈழத்தில் அன்றும் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள். 



அதே வரலாற்றில் புலம் பெயர்ந்து தடம் பதித்து விண்மீன்களாய் அவதானிப்புச் செய்கின்றார்கள். புதிதாய் முளைத்த ஆலம் விருச்சங்களாய் விழுதுகள் விட்டு வீரம் பேசுகின்றார்கள். கைகூப்புகிறோம்.

தமிழீழத் தமிழர்கள் தமிழ் மொழியின் மீது உறுதியான பக்தி கொண்டவர்கள். தமிழ் இனத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்கள். தமிழீழத் தமிழர்களின் அந்த வீர வரலாற்றை உலகத் தமிழர்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள். 

நூல்களிலும் ஏடுகளிலும் தான் உலகத் தமிழர்களின் வீர வரலாற்றை வாசித்துப் பார்த்து இருக்க முடியும். காவியம் படைத்த அந்தக் கதாமாந்தர்களைக் கற்பனை செய்து பார்க்க இருக்க முடியும். 




ஆனால் தமிழீழத் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டுமே. எண்ணிலடங்கா வேதனைகள். எண்ணிலடங்கா சோதனைகள். அந்த வேதனை விளிம்புகளில் வீணை வாசிப்பவை மனிதக் குருதிப் புலன்கள். அந்த மாதிரியான வேதனை வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தமிழீழத் தமிழர்கள்.

இந்தக் காலத்து உலகில் தமிழன் என்கிற ஓர் இனத்தை உலகம் அறியச் செய்தது அந்தத் தமிழீழ மண் தான். அந்த மண்ணிலே பிரபாகரன் என்கிற ஒரு தமிழர் பிறந்தார். வாழ்ந்தார். வரலாறு பேசினார். தமிழர்களின் வீரத்தை உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தார். அந்தத் தமிழரை வாழ்த்துகிறோம். வணங்குகிறோம். அவரைப்பற்றித் தான் முதலில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும் இடையே ஏறக்குறைய 26 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர். 1983-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய அந்தப் போர் 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி வரை நீடித்தது. அங்கே ஓர் இனவழிப்பு பல்லவி பாடியது. அதைப் பார்த்து மனித வரலாறே கண்ணீர் விட்டு அழுதது.

அந்த உள்நாட்டுப் போரில் 80,000 - 100,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிர் இழந்தார்கள். ஒட்டு மொத்தத்தில் திட்டமிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள். நீதிக்குப் புறம்பான செயல்பாடுகள். சத்தியத்திற்கு எதிரான அநியாயங்கள்.


போரின் இறுதிக் கட்டம். அமெரிக்கா, இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட 32 நாடுகள் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் சேர்த்தன. ஆக அந்த 32 நாடுகளின் எதிர்ப்பைத் தாக்குப் பிடித்துப் பேர் போட்ட ஒரு விடுதலை இயக்கம் இப்போது மௌனம் சாதிக்கின்றது. மறைந்தும் மறையாமல் மௌன ராகம் பாடிக் கொண்டு இருக்கின்றது.

போர் முடிந்து பத்தாண்டுகளாகி விட்டன. இலங்கைத் தமிழர்களுக்கு இன்னமும் சமநீதி கிடைக்கவில்லை. நியாயம் கிடைக்கவில்லை. அனைத்துலகக் குற்றவியல் விசாரணைகள் நடத்த வேண்டும் என்று உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒருமித்தக் குரல்கள். இன்னமும் சன்னமாய் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. என்ன செய்வது. உலகப் போலீஸ்காரர் ஐ.நா. அதற்கு அமெரிக்காவிற்கு ஜால்ரா போடவே நேரம் போதவில்லையாம்.

தமிழ் ஈழப் போர்கள் 26 ஆண்டுகள் நீடித்தன. அத்தனை ஆண்டுகளாக நீடித்த போராட்டம் எதையும் நிறைவாகச் சாதிக்க முடியாமல் தோல்வியில் போய் முடிந்ததை நினைத்துப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. 




வரலாற்றில் சங்கமித்துப் போன அந்தத் தமிழ் ஈழப் போர்களில் பால் மனம் மாறா பச்சைக் குழந்தைகள் வெட்டி வீசப் பட்டார்கள். பருவம் மாறா பெண்கள் துகில் உரியப் பட்டார்கள். கணவர்கள் கண் முன்னாலேயே மனைவிமார்கள் கசக்கிப் பிழியப் பட்டார்கள். நலிந்து நின்ற முதியவர்கள் நடுத்தெருவில் நாசம் செய்யப் பட்டார்கள்.

அதே அந்தப் போர் வாசலில் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் உருவம் தெரியாமல் அழிக்கப் பட்டார்கள். வேடிக்கை பார்த்தது ஒரு தாய் நாடு. விலைபேசியது ஒரு தமிழர் நாடு. வெட்கித் தலைகுனிந்தது உலகத் தமிழர்க் கூட்டம். வெட்கம் வெட்கம் என்று வையகமே இப்போது வஞ்சகம் இல்லாமல் வாரி உமிழ்கின்றது.

அத்தனை ஆண்டுகளாக நீடித்த போராட்டம் எதையும் நிறைவாகச் சாதிக்க முடியாமல் தோல்வியில் முடிந்ததை நினைத்துப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது.

ஈழ மக்களின் இணையற்றத் தலைவராகப் பிராபகரன் அன்றும் வாழ்ந்தார். இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். உலகத் தமிழர்களின் ஊனிலும் உயிரிலும் உரிமை உணர்வுகளைக் கொப்பளிக்கச் செய்து மௌனம் சாதிக்கின்றார். அந்த மாமனிதரின் வரலாற்றைப் பார்ப்போம்.

அதற்கு முன் பல இலட்சம் தமிழர்களின் வாழ்வியலுக்குத் தடைக்கல்லாக அமைந்த ராஜபக்சேவை இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்பவில்லை. காலம் அந்த மனிதரை அப்போதும் இப்போதும் எப்போதும் தண்டிக்கும். 




அன்னாரின் பாவச் செயல்கள் அனைத்தும் நம் நெஞ்சங்களைக் கிழித்துப் பார்க்கும் வேதனை விரிசல்கள். வெந்து போன புண்ணில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளை மறுபடியும் பாய்ச்சாமல் இருப்பதே நம் மனதிற்கு ஆறுதல்.

ஒரு வீரத் தலைமுறையின் வரலாற்றைப் படியுங்கள். படித்து விட்டு மனசுக்குள் மௌனமாக அஞ்சலி செய்யுங்கள். அதுவே மறைந்து போன ஆயிரம் ஆயிரம் வீர ஆத்மாக்களுக்கு நாம் செய்யும் கைமாறு. அதுவே ஒரு வீர வணக்கம்.

பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர் இறக்கவில்லை. எங்கோ மறைந்து வாழ்கிறார். சரியான நேரத்திற்காகக் காத்து நிற்கிறார் என்று பலர் சொல்கிறார்கள். சொல்லியும் வருகின்றார்கள். அப்படியே அமையட்டும். அதுவாகவே இருக்கட்டும்.

2009-ஆம் ஆண்டு மே மாதம் பதினேழாம் தேதி. முன்னிரவு நேரம். போர்ச் சூழல் மிக உச்சத்தில் தீவிரம் காணும் நேரம். போர் முனையில் சார்லஸ் ஆண்டனி என்பவர் நேரடியாகக் களம் இறங்குகிறார். அருகில் இருந்த ஒரு முனையில் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம். ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்காக அவர்கள் கூடி நிற்கிறார்கள். 




சார்லஸ் ஆண்டனி என்பவர் வேறு யாரும் இல்லை. பிரபாகரனின் மூத்த மகன். அவரைப் பாதுகாப்பாகப் போர் முனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று மற்றத் தலைவர்கள் விரும்புகிறார்கள். சார்லஸ் ஆண்டனியைப் போர் முனைக்கு அனுப்பலாமா வேண்டாமா என்றும் தலைவர்கள் விவாதம் செய்கின்றனர்.

ஒரு நீண்ட நெடிய மௌனத்துக்குப் பிறகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்படிச் சொல்கிறார். ’விடுதலைக்காகப் போராடும் போது என் பிள்ளைகளுக்கு மட்டும் தனியாகச் சிறப்பு சலுகைகள் எதையும் கொடுக்க விரும்பவில்லை. அவனைக் கடைசியாகப் பார்ப்பதாக இருந்தாலும் கூட நான் கொஞ்சமும் கவலைப் படவில்லை. அவன் போர்க் களத்தில் இறந்து போவதை யாரும் தடுக்க வேண்டாம்’ என்கிறார்.

அதுதான் பிரபாகரனின் தன்னலமற்ற மனப்பான்மை. தியாகம், எளிமை, அடக்கம் ஆகியவை காந்திய யுகத்தின் அடிப்படைப் பண்புகள். தன் வாழ்நாளின் கடைசி விநாடி வரையில் பிரபாகரன் அந்தக் கொள்கைப் பண்புகளில் இருந்து இம்மியும் நழுவிச் செல்லவில்லை.

தன்னுடைய ஒட்டு மொத்தக் குடும்பத்தையே தமிழ் இனத்திற்காகத் தாரை வார்த்துக் கொடுத்தவர். அவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

இலங்கையின் வடக்கில் வல்வெட்டிதுறை துறைமுகப் பட்டினம்.  திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழ்ந்த பூமி. அங்கேதான் 1954 நவம்பர் 26-ஆம் தேதி வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார். குடும்பத்தில் கடைசி மகன்.




தகப்பனாரின் பெயர் திருவேங்கடம் வேலுப் பிள்ளை. இலங்கை அரசாங்கத்தின் மாவட்ட நில அதிகாரியாகப் பணி புரிந்தவர். தாயாரின் பெயர் பார்வதியம்மாள். பிரபாகரனுக்கு ஓர் அண்ணன். இரு அக்காள்மார்கள்.  

அரிகரன். இதுதான் பிரபாகரனின் அசல் பெயர். அவருடைய தந்தையார் பிரபாகரனுக்கு முதலில் வைத்த பெயர். வீட்டில் கடைக்குட்டி. அதனால் துரை என்று எல்லாரும் அழைத்தார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் வைக்கப் பட்டது.

ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பரா கல்லூரியில் 10-ஆம் வகுப்பு வரை படித்தார். தந்தையுடன் வெளியூர்களுக்குச் செல்லும் போது எல்லாம் சிங்களக் காவல் துறையினர் அப்பாவி ஈழத் தமிழர்களை அடித்துத் துன்புறுத்துவதைப் பார்த்துப் பார்த்து மனம் கலங்கினார் பிரபாகரன். சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அந்தச் சித்ரவதைகள் அதிர்ச்சிகளையும் அலைகழிப்புகளையும் ஏற்படுத்தின.

1958-ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் சிங்களர்கள் பெரும் அளவில் தாக்குதல் நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நான்கு வயதுச் சிறுவனான பிரபாகரனின் மனதில் ஆழமான வெறுப்பு வடுக்களை அழுத்தமாகவே பதித்துச் சென்றன.

பாணந்துறையில் இந்துக் குருமார் ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம். கொதிக்கும் தார் அண்டாக்களில் தமிழ்ச் சிறுவர்களைப்  போட்டுக் கொன்ற கோரச் சம்பவங்கள். இந்த இரு நிகழ்ச்சிகளும் பிரபாகரனைப் பெரிதும் பாதித்து விட்டன. 




அப்பாவி ஈழத் தமிழர்கள் கொடூரமானத் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்பதை அறிந்த போது பிரபாகரனுக்கு அவர்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் பரிதாபமும் ஏற்பட்டன. சிங்களர்களின் இனவெறியில் இருந்து தமிழ் மக்களை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் ஆயுத வலிமையைப் பயன்படுத்த வேண்டும் என்னும் ஓர் உத்வேகம் அவருக்குள் அப்போதுதான் உருவானது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். அப்போது அந்த இயக்கத்திற்குப் பெயர் எதையும் வைக்கவில்லை.

அந்த அணியில் பிரபாகரன் மட்டும் மிக மிக இளையவர். அதனால் அவரை எல்லோரும் ‘தம்பி’ என்றே அழைத்தார்கள். பிரபாகரன் எனும் ஒரு சாமான்ய மனிதர் அப்படித்தான் எல்லோருக்கும் தம்பியானார். அவர்களுடன் சேர்ந்து கையெறிக் குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்.

ஒருமுறை எதிர்பாராத விதமாக ஒரு குண்டு வெடித்தது. அவரது காலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறிப் போனது. அதனால் ’கரிகாலன்’ என்னும் புனைப்பெயரும் அவருக்கு ஒட்டிக் கொண்டது.



பிரபாகரன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதைக் குடும்பத்தார் அறிந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி வீடு தேடி வந்தது. போலீஸ்காரர்கள் ஒருமுறை அதிகாலை மூன்று மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடன் போலீஸ்காரர்கள் தான் வந்து இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் ரகசியமாகத் தப்பி விட்டார்.

மறுநாள் பிரபாகரனைத் தேடிச் சென்று கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தார் அவருடைய தந்தையார். அப்போது அவரிடம் பிரபாகரன் கூறியது, ’என்னால் உங்களுக்கு எந்தத் தொல்லையும் வேண்டாம். என் போக்கில் விட்டு விடுங்கள். நான் போய் விடுகிறேன்’ என்று கூறி வீட்டை விட்டு வெளியேறியவர் தான், அதன் பிறகு வீட்டுப் பக்கமே திரும்பவே இல்லை. குடும்பத்தார் தான் அவரைப் போய் பார்த்து வந்தார்கள். 




பதினாறு வயதாக இருக்கும் போதே சிங்களர்கள் ஏறிச் சென்ற பேருந்தை எரித்தவர் பிரபாகரன். அப்படித்தான் தன் போராட்டத்தைத் தொடங்கினார். அதன் விளைவாக சிங்களப் போலீசார் பல மாணவர்களைக் கைது செய்தனர்.  கொழும்புச் சிறையில் போட்டு அடைத்து வைத்துச் சித்திரவதைகள் செய்தனர்.

சிங்களர்களிடம் இருந்து தப்பித்த பிரபாகரன் தமிழகம் வந்து சேர்ந்தார். காந்தியம் சரிபட்டு வராது. ஆயுதம் ஏந்தினால் தான் தமிழீழ இனப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று ஒரு தீர்க்கமான முடிவையும் எடுத்தார்.

பின்னர் 1972-ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிய அவர் ’புதிய தமிழ்ப் புலிகள்’ என்ற பெயரில் ஓர் இயக்கத்தைத் தொடக்கினார்.

1974-ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரில் ஒரு தமிழ் மாநாடு. அந்த மாநாட்டில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் ஒன்பது பேர் பலியானார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பழி தீர்க்கும் வகையில் மற்றும் ஒரு நிகழ்ச்சி அரங்கேற்றம் கண்டது.

(தொடரும்)

சான்றுகள்

1. சி. புஸ்பராஜா. 2003. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்
2. Balasingham, Adele: The Will to Freedom – An Inside View of Tamil Resistance. Fairmax Publishing Ltd
3. Rajasinghan, K.T.: Sri Lanka: The Untold Story. 2001–2002.