சீனா மிங் வரலாற்றில் பரமேஸ்வரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீனா மிங் வரலாற்றில் பரமேஸ்வரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 ஜூலை 2020

சீனா மிங் வரலாற்றில் பரமேஸ்வரா

தமிழ் மலர் - 04.07.2020

1368-ஆம் ஆண்டு தொடங்கி 1644-ஆம் ஆண்டு வரை மிங் வம்சம் (Ming dynasty) சீனாவின் ஆளும் வம்சமாக இருந்தது. மகா மிங் வம்சம் (Great Ming) என்று அழைப்பது உண்டு. சீனாவின் கடைசி ஏகாதிபத்திய வம்சமாகும். இவர்கள் ஹான் இனத்தைச் சேர்ந்த சீனர்கள். 


Yongle Emperor Ming dynasty

மிங் வம்சாவளியினரில் மிக முக்கியமானவர் யோங் லே (Yongle Emperor). இவருடைய அசல் பெயர் ஜு டி (Zhu Di). இவர் 1402 முதல் 1424 வரை சீனாவை ஆட்சி செய்தார். மிங் வம்சத்தை நிறுவிய ஹொங்வூ (Hongwu) பேரரசரின் நான்காவது மகன்.

யோங் லே ஆட்சிக் காலத்தில் தான் பரமேஸ்வரா சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டார். சீனாவின் மிங் அரச வம்சாவளியினர் மலாக்காவிற்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். அதனால் மலாக்காவிற்கும் சீனாவிற்கும் அரச தந்திர உறவுகள் மேம்பாடு கண்டன. இந்த அரச தந்திர உறவுகள் வெளிநாட்டவரின் தாக்குதல்களையும் தவிர்த்தன.

1400-ஆம் ஆண்டுகளில் பரமேஸ்வரா இரு தடவை சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அவரின் சீனப் பயணத்தின் போது செங் ஹோ (Zheng He); இன் சிங் (Yin Qing) ஆகிய இருவரும் அவருக்குத் துணையாக இருந்து இருக்கிறார்கள்.



தவிர பரமேஸ்வரா மூன்று முறை சீனாவிற்குத் திறை அன்பளிப்புகள் செய்து உள்ளார். திறை அன்பளிப்பு என்றால் காப்பீட்டுத் திறை. சுருங்கச் சொன்னால் பாதுகாப்புத் திறை.

ஒரு சிறிய நாடு தன் பாதுகாப்பிற்காக ஒரு பெரிய நாட்டிடம் செலுத்தும் வரிக்குப் பெயர் தான் திறை அன்பளிப்பு அல்லது கப்பம். 1405, 1407, 1409-ஆம் ஆண்டுகளில் சீனாவுக்கு அந்த அன்பளிப்புகள் செய்யப் பட்டன.

குறிப்பாக சயாம் நாடும் மஜபாகித் பேரரசும் மலாக்காவின் மீது தாக்குதல் நடத்தி மலாக்காவைக் கைப்பற்றிக் கொள்ள காத்து இருந்தன. அதைத் தவிர்ப்பதற்காக பரமேஸ்வரா சீனாவின் உதவியை நாடினார்.

சீனா - மலாக்கா நல்லுறவுகளினால் அந்தத் தாக்குதல்கள் நடைபெறாமல் போயின. மலாக்காவில் அமைதி நிலவியது. அதனால் மலாக்கா ஒரு முக்கிய வணிகக் கேந்திரமாக விளங்கியது. 



சீனாவில் இருந்து இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பா நாடுகளுக்குச் சென்ற வணிகர்கள் மலாக்காவில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் அவர்களின் பயணங்களைத் தொடர்ந்னர்.

சீனாவின் மிங் வம்சாவளியினரின் வரலாற்றுச் சுவடுகளில் பரமேஸ்வராவின் சீனப் பயணத்தைப் பற்றிய குறிப்புகளின் ஒரு பகுதி உள்ளது. அத்தியாயம்: 325-இல் அந்தப் பதிவு உள்ளது.

(Part of original copy of Ming Dynasty history 1368-1644 - chapter 325. Parameswara visits emperor Yongle)

ஆங்கிலத்தில் உள்ளதை தமிழ் மொழியாக்கம் செய்து இருக்கிறேன்.



1405-ஆம் ஆண்டு இன் சிங் தூதர் மலாக்காவிற்கு அனுப்பப் பட்டார். மலாக்கா ஆளுநருக்குத் தங்கப் பட்டுப் பின்னல் ஆபரணங்கள்; தங்கத்தினால் பின்னப்பட்ட ஒரு முகத்திரை வழங்கப்பட்டது.

தூதர் இன் சிங் முதன்முதலில் மலாக்காவிற்குச் சென்ற போது அங்கே ஒரு சாம்ராஜ்யம் அமைக்கப்படவில்லை. மலாக்காவில் ஒரு நிரந்தரமான மன்னரும் இல்லை. ஆண்டுதோறும் சயாமிற்கு 40 தங்கக் கட்டிகள் வரிப் பணமாக வழங்கப் படுகிறது என்று எழுதி இருக்கிறார்.

இன் சிங் தூதரைக் கண்டு மலாக்காவின் அப்போதைய தலைவர் பாய்-லி-மி-சுலா (Pai-li-mi-su-la) அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். பரமேஸ்வராவைச் சீனாவிற்கு அழைத்து வந்தார். அவரைச் சீன மாமன்னர் வெகுவாகப் பாராட்டி சிறப்பு செய்தார். பரமேஸ்வராவின் பெயரை பாய்-லி-மி-சுலா என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள்.


பரமேஸ்வராவுக்கு வழங்கப்பட்ட மிங் அரச முத்திரை

மான்-லா-காவின் (Man-la-ka) மன்னராக்கிப் பெருமை செய்தார். அவருக்குச் சீன அரசு முத்திரை; வண்ணம் தோய்ந்த பணத் தாட்கள்; ஓர் ஆடை ஆபரண பெட்டகம்; மஞ்சள் நிற மாட்சிமைக் குடை வழங்கப்பட்டது. மலாக்காவை மான்-லா-கா என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள்.

அதற்கு நன்றி கூறிய மலாக்காவின் தூதர் மன்னர் பரமேஸ்வரா மகிழ்ச்சி அடைந்தார். ஆண்டுதோறும் அன்பளிப்பு வழங்க சம்மதித்தார். மலாக்கா அரசிற்கு சாம்ராஜ்யம் எனும் தகுதி வழங்கப்பட வேண்டும் என்பதே பரமேஸ்வராவின் தாழ்மையான வேண்டுகோள் என்று தூதர் இன் சிங் எழுதி இருக்கிறார்.

மலாக்கா ஒரு சாம்ராஜ்யமாகக் கருதப் படுகிறது எனும் அரசக் கவிதை பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு பரமேஸ்வராவிடம் வழங்கப் பட்டது. 

1411-ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க அதிகாரிகளுடன் சீனாவிற்குச் சென்று இருக்கிறார். யோங் லே மாமன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு பாராட்டி இருக்கிறார். நான்கிங் நகரில் (Nanjing) இரு மாதங்கள் தங்கி இருக்கிறார்.

(சான்று: http://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_1540_2009-07-06.html)


பரமேஸ்வரா பயன்படுத்திய கப்பலின் மாதிரி

யோங் லே மாமன்னர் பரமேஸ்வராவைப் பாராட்டிப் பேசினார். பரமேஸ்வரா தான் மலாக்காவின் உரிமைமிகு ஆட்சியாளர் என ஏற்றுக் கொண்டார். சீனாவின் அங்கீகாரமாகச் சின்னமாக சீன நாட்டு முத்திரை; சீன நாட்டுப் பட்டுத் துணி; சீன நாட்டு மஞ்சள் குடை அன்பளிப்பாக வழங்கப் பட்டன.

பரமேஸ்வரா தான் மலாக்காவின் உரிமை மிக்க ஆட்சியாளர் எனும் அதிகாரப்பூர்வமான கடிதமும் பரமேஸ்வராவிடம் வழங்கப் பட்டது. அதன் பின்னர் மலாக்கா ஒரு சாம்ராஜ்யம் எனும் தகுதியைப் பெற்றது. அந்தத் தகுதியை வழங்கியவர் சீன நாட்டு மாமன்னர் யோங் லே. அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு 1411.

மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது பரமேஸ்வராவிற்குத் துணையாகச் சீனக் கப்பல் படைத் தலைவர்களும் கூடவே வந்து இருக்கின்றார்கள். ஒருவர் செங் ஹோ (Admiral Cheng Ho). இன்னொருவர் இங் சிங் (Admiral Ying Ching). தவிர இருவரும் தனித்தனிக் காலக் கட்டங்களில் மலாக்காவிற்கு வந்து போய் இருக்கிறார்கள்.


ஆக சீனா - மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்கா பேரரசிற்குச் சீனா ஒரு பாதுகாவலராகவே இருந்து இருக்கிறது. அதனால் தான் சயாம் நாடும்; சுமத்திராவின் மஜாபாகித் அரசும் மலாக்காவின் விவகாரங்களில் தலையிடவில்லை. இந்தக் காரணங்களினால் தான் மலாக்காவின் கடல் வழி வாணிகமும் பெருகத் தொடங்கியது. சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு மலாக்கா ஒரு முக்கிய வாணிகத் தளமாகவும் புகழ் பெற்று விளங்கி இருக்கிறது.

பரமேஸ்வரா சீனாவிற்குப் போய் சேர்ந்ததும் அவருக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப் பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பைப் பற்றிய குறிப்புகள் மிங் பேரரசின் வரலாற்றுப் பதிவுகளில் காணப் பெறலாம்.

(சான்று: http://www.epress.nus.edu.sg/msl/ - Wade, Geoff (2005), Southeast Asia in the Ming Shi-lu: an open access resource, Asia Research Institute and the Singapore E-Press, National University of Singapore - பக்கம்: 786)

சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப் பட்டதை மேலே காணலாம். அதன் தமிழ் மொழியாக்கம் கீழே:

** அரசராகிய நீங்கள் (பரமேஸ்வராவைக் குறிப்பிடுகிறது) பல பத்தாயிரம் மைல்கள் விரிந்து கிடக்கும் மாக்கடலைத் தாண்டி நம்பிக்கையுடன் கவலை இல்லாமல் வந்து இருக்கிறீர்கள். அந்த விசுவாசத்திற்கும் நேர்மை குணத்திற்கும் நல்லாவிகளின் பாதுகாப்புகளைப் பெறுவீர்களாக. நான் (யோங்லே மன்னரைக் குறிப்பிடுகிறது) உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 



** தாங்கள் இங்கே தங்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறேன். இருப்பினும் உங்களுடைய மக்கள் உங்களுக்காகப் பேராவலுடன் காத்து இருக்கின்றனர். ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே பொருத்தமாக அமையும். வானிலை குளிராகி வருகிறது. தெற்கை நோக்கிக் கடல் பயணம் செய்வதற்கு காற்று மிகச் சரியாகவும் இருக்கின்றது.

** இது தான் மிகச் சரியான நேரம். பயணத்தின் போது நீங்கள் நன்றாகச் சாப்பிட்டு உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுவே நான் உங்கள் மீது காட்டும் அக்கறைக்குப் பிரதிபலனாக அமையும்.

** மன்னனாகிய உங்களுக்குத் தங்கத்திலும் கரும்பச்சை மணிக் கல்லால் ஆன அரைக்கச்சை; சடங்குகளுக்கான அதிகாரச் சின்னம்; சேணம் பூட்டிய இரண்டு குதிரைகள்; 100 லியாங் தங்கம்; 500 லியாங் வெள்ளி; 400,000 குவான் காகிதப் பணம்; 2,600 செப்புக் காசுகள்; 300 பட்டுச் சேலைகள்; 1000 மென் பட்டுத் துணிகள்;


மிங் அரசர் பரமேஸ்வராவுக்கு வழங்கிய இதர அன்பளிப்புகள்: மாணிக்கக் கற்கள், முத்து, கழுகின் அலகுகள், நாரையின் அலகுகள், தங்க நாரையின் அலகுகள், வெள்ளைத் துணிகள், மேற்கத்திய நூலிழைகள், காண்டாமிருகத்தின் கொம்புகள், யானைத் தந்தங்கள், கறுப்புக் கரடி, கருங்குரங்கு, வான்கோழி, கிளிகள், வாசனைப் பொருட்கள், தங்க வெள்ளிக் குச்சிகள் என அந்த வரலாற்றுப் பதிவுகளில் உள்ளன.

பரமேஸ்வராவின் ஆட்சி காலத்தில் மலாக்கா மிகவும் புகழ் பெற்ற வாணிகத் துறைமுகமாக விளங்கியது. அங்கே 80 மொழிகள் பேசப் பட்டன. உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர்.

தமிழ் நாடு, கெய்ரோ, ஏடன், ஓர்முஸ், ரோமாபுரி, துருக்கி, குஜாராத், கோவா. மலாபார், ஒரிசா, ஸ்ரீ லங்கா. வங்காளம், சயாம், கெடா, பகாங், பட்டானி, கம்போடியா, சம்பா, கொச்சின், புருணை, லிங்கா, மினாங்கபாவ், பாசாய், மாலைத் தீவுகள் போன்ற நாடுகள்.

16-ஆம் நூற்றாண்டில் கீழைத் தேச நாடுகளில் மலாக்கா மிகவும் முக்கியமான துறைமுகமாக விளங்கியது. அதன் செல்வ வளப்பத்தைக் கண்டு தோம் பைரஸ் (Tom Pires) என்பவர் “யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ அவர் வெனிஸ் நகரின் கழுத்தின் மீது கை வைத்தது போல் ஆகும்” என்று எழுதி இருக்கிறார்.

(Whoever is lord of Malacca shall have his hands on the throat of Venice.) 


மன்னர் யோங் லேவின் மனைவி

தோம் பைரஸ் ஒரு போர்த்துகீசிய வணிகர். ஓர் எழுத்தாளரும் ஆகும். சீனாவில் பல ஆண்டுகள் வாழ்ந்தவர். சீனாவை அரசர் செங்டு (Zhengde Emperor) ஆட்சி செய்த போது அவரின் வரலாற்று ஆசானாகத் திகழ்ந்தவர்.

(சான்று: Cortesao, Armando (1990), The Suma Oriental of Tome Pires, 1512–1515, Laurier Books Ltd, ISBN 978-81-206-0535-0 - p. lxxv)

1414-ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் நெகிரி செம்பிலான், போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் (Tanjung Tuan) எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம். இந்த தஞ்சோங் துவான் எனும் இடம் முன்பு Cape Rachado என்று அழைக்கப்பட்டது.

அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் மலையின் (Bukit Larangan, Fort Canning, Singapore) அடிவாரத்தில் பரமேஸ்வரா புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. இதுவும் இன்னும் உறுதி படுத்தப்பட முடியவில்லை. அதைப் பற்றிய ஆய்வுகளையும் செய்து வருகிறார்கள்.

பரமேஸ்வராவுக்குப் பின் அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா எனும் மெக்காட் இஸ்கந்தர் ஷா மலாக்காவை 1424-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவர் மலாக்காவின் இரண்டாவது ஆட்சியாளர். இவரை ராஜா தெங்ஙா அல்லது ராடின் தெங்ஙா என்றும் அழைத்தனர். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் விருது வழங்கப் பட்டது.

இவர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவினார். முகமது ஷா எனும் விருதைப் பெற்றார். இவர் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டதால் பெயர் மாற்றம் கண்டு இருக்கலாம் என்று கல்வியாளர்கள் நம்புகின்றனர். அவர் இறந்த பிறகு அவருடைய மகனான ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம் அரியணை ஏறினார். ராஜா இப்ராகிம் ஆட்சி காலத்தில் மலாக்காவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

மலாக்காவில் வாழ்ந்த இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கும் பாரம்பரிய இந்து மலாய்க்காரர்களுக்கும் இடையே சச்சரவு உண்டாகியது. இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்ட பின்னர் ராஜா இப்ராகிம் புதிய சமயத்தைத் தழுவவில்லை என்பது ஒரு பெரும் குறைகூறலாக இருந்தது.  அவர் ஸ்ரீ பரமேஸ்வரா தேவா ஷா எனும் பெயரில் ஆட்சி செய்தார் என்பதும் மற்றொரு குறைகூறல்.

புதிய சமயத்தைத் தழுவவில்லை எனும் காரணத்தினால் மலாக்காவில் சமயச் சச்சரவுகள். அதனால் அவரால் நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியவில்லை. அவரால் பதினேழு மாதங்கள் தான் ஆட்சி செய்ய முடிந்தது. பாவம் அவர். 1446-இல் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் ராஜா இப்ராகிமின் ஒன்று விட்ட சகோதரர் ராஜா காசிம் என்பவர் பதவிக்கு வந்தார்.

ராஜா காசிமின் தாயார் ஒரு தமிழ் முஸ்லிம் ஆவார். பதவிக்கு வந்ததும் ராஜா காசிமின் பெயர் சுல்தான் முஷபர் ஷா என்று மாற்றம் கண்டது. அதன் பின்னர் மலாக்கா சுல்தானிய ஆட்சியில் புதிய சகாப்தம் மலர்ந்தது. இந்தக் கட்டத்தில் தான் மலாக்காவில் இருந்த இந்தியர்களின் அரசு அதிகாரங்கள் குறைந்து போயின.

மலாக்காவைப் பரமேஸ்வரா என்பவர் தான் தோற்றுவித்தார். இருப்பினும் அண்மைய காலங்களில் அவருடைய பெயர் வரலாற்றில் இருந்து இரட்டடிப்புச் செய்யப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாட நூல்களில் இருந்தும் பரமேஸ்வரா காணாமல் போய் வருகிறார். உண்மை மறைக்கப்படக் கூடாது என்பதே நம்முடைய ஆதங்கம்.

மலாக்கா என்றால் பரமேஸ்வரா. பரமேஸ்வரா என்றால் மலாக்கா. ஆக ஒரு வரலாற்றுச் சிதைவை நியாயப்படுத்த முன்வருபவர்கள் எந்தக் கல்வி மேடையிலும் நம்மை வரலாற்று வாதத்திற்கு அழைக்கலாம். சான்றுகளை முன் வைக்கத் தயாராக இருக்கின்றோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.07.2020