மலேசிய ஆய்வாளர் ஜானகிராமன் மாணிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசிய ஆய்வாளர் ஜானகிராமன் மாணிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 மே 2020

மலேசிய ஆய்வாளர் ஜானகிராமன் மாணிக்கம்

தமிழ் மலர் 26.05.2020

அயராத உழைப்பு. அற்ப ஊதியம். அரை வயிற்றில் ஆறிய கஞ்சி. கால் வயிற்றில் புளித்த கூழ். அதைப் பார்த்தவர்களின் வியர்வை சிந்தப் பட்டது. இரத்தம் உறிஞ்சப் பட்டது.

அதுவே மலாயா கித்தா தோப்புகளின் கதை. அதுவே மலாயா இந்தியர்கள் சுவாசித்த மலைகாட்டுக் கதை. மன்னிக்கவும். மலாயா பாசா காடுகளின்  கண்ணீர்க் கதை.


அப்படிப்பட்ட பின்னணியை இப்போது சொன்னால் பிதற்றுவதாகச் சிலர் எள்ளி நகையாடலாம். விடுங்கள். பாத்திரம் அறியாத பத்தாம் பசலிகள்.

நேற்று நாடோடிகளாய் வந்தவர்கள் இன்று செலாயாங் சந்தையில் தைரியமாக இடம் கேட்கிறார்கள். குடியுரிமை கேட்கிறார்கள். அரசியல் பெரிசுகள் வாயடைத்துப் போய் நிற்கிறார்கள். ஆனாலும் அன்று அதே அந்த நாட்டை உழைப்பால் உருமாற்றிய தமிழர்கள் இழந்து போன உரிமைகளைக் கேட்டால் அரசியல் வாரிசுகள் அவர்களின் வாயைப் பொத்துகிறார்கள்.

இப்படி ஒரு சமூக ஆர்வலர் ஆர்ப்பரிக்கின்றார். பகாங் சத்தியா ராமனைப் போல ஜி.பி. குமாரசாமி; பெரியசாமி ராமசாமி; சீமா இளங்கோ; மாணிக்கம் நடேசன்; மங்கள கௌரி; மகாலிங்கம்; தனசேகரன் ரெங்கசாமி; பொன் வடிவேல்; ஷீலா மோகன்; மா.சித்ரா தேவி; கவி கவி; ஜெயபாலன் ராமசாமி; இப்படி இன்னும் எத்தனையோ பேர் கொப்பளித்துக் கொண்டு இருக்கின்றார்கள். 


இருந்தாலும் இதைப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஒரு சமூக ஆர்வலர் கணித்து நூலாகவும் வெளியிட்டு உள்ளார். அற்புதமான வெளியீடு.

மலேசிய இந்தியர்களைப் பற்றி மலேசிய வரலாற்று ஆசிரியர்கள் பலர் ஆய்வுகள் செய்து உள்ளனர். பல வரலாற்று ஆய்வு நூல்களை எழுதி உள்ளனர். அந்த ஆய்வுகளுக்கு எல்லாம் மகுடம் வகிக்கும் ஒரு நூலாக ஒரு நூல் மதிப்பு பெறுகிறது.

இந்த நூல் மலேசியர்களுக்குக் கிடைத்த மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷமாகக் கருதலாம். அத்துடன் மலேசிய இந்தியர்களுக்குக் கிடைத்த அரிய ஆய்வு நூலாகவும் கருதலாம். தப்பு இல்லை. உண்மை.

மலேசிய இந்தியச் சமூகத்தினரின் துயரங்களையும்; துன்பங்களையும்; அவர்கள் பார்த்த சோதனைகளையும்; சாதனைகளையும்; அவர்கள் பட்ட வேதனைகளையும்; வறுமைப் போராட்டங்களையும் இந்த நூல் உச்சி முதல் உள்ளங்கால் வரை அலசி ஆராய்ந்து பார்க்கின்றது.


1800-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து மலாயாவுக்குக் குடிபெயர்ந்த இந்தியர்களின் சமூகம்; பொருளாதாரம்; கல்வி; அரசியல் துறைகளின் பிரச்சினைகளை அடுக்கடுக்காய் இந்த நூல் முன் நிறுத்திப் பார்க்கின்றது. ஆண்டுகளின் கால வரிசையில் அட்டவணைகள் போட்டுக் காட்டுகின்றது. ஏறக்குறைய 200 ஆண்டு கால ஆவணங்களைச் சான்றுகளாகப் பகிர்கின்றது.

இந்த நூலைப் பற்றி ஓர் கட்டுரை எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் எண்ணம். செய்யத் தவறினால் என் இனத்துக்குச் செய்ய வேண்டிய ஓர் இனக் கடமையில் இருந்து தவறி விட்டதாக மனசாட்சி சொல்லிக் காட்டும். சரி. மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை - நூலுக்கு வருவோம்.


இந்த நூல் 10 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

1. மலேசியாவில் இந்தியர்கள்: பொதுவான தகவல்கள்

2. மலாய்த் தீவுகளுக்கு இந்தியர்கள் வருகை

3. தொடக்கக் காலத்தில் இடம் பெயர்ந்த இந்தியர்களும் அவர்களின் போராட்டங்களும் (1786 - 1940)

4. மலாயா இந்தியர்களின் எழுச்சி (1947 - 1957)

5. மலாயா சுதந்திரத்திற்குப் பின்னர் மலாயாவில் இந்தியர்களின் நிலை (1957 - 1970)

6. புதிய பொருளாதாக் கொள்கையும் மலேசிய இந்தியர்களும் (1970 - 1990)

7. புதிய வளர்ச்சிக் கொள்கையும் மலேசிய இந்தியர்களும் (1990 - 2000)

8. நகர்ப்புற இந்தியர்களின் புதைகுழி

9. தேசியத் தொலை நோக்குத் திட்டமும் மலேசிய இந்தியர்களும் (2000 - 2010)

10. இங்கிருந்து எங்கே? 2010 - 2020


மலேசியாவில் தலைசிறந்த இந்திய ஆய்வாளர்களில் ஒருவரான ஜானகிராமன் மாணிக்கம் இந்த நூலை எழுதி உள்ளார். 17 ஆண்டு கால ஆய்வுகள். அதன் பின்னணியில் இந்த நூல் உருவானது.

இதன் முதல் பதிப்பு 2006-ஆம் ஆண்டு. இரண்டாம் பதிப்பு 2007-ஆம் ஆண்டில் தமிழில் வெளியானது. பின்னர் கூடுதலான தகவல்கள் சேர்க்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பு (The Malaysian Indian Dilemma: The Struggles and Agony of the Malaysian Community in Malaysia) வெளியானது.

2011 ஆம் ஆண்டில் இந்த ஆங்கிலப் பதிப்பு மொழி பெயர்க்கப்பட்டு மூன்றாவது தமிழ்ப் பதிப்பு வெளியானது. இந்தப் பதிப்பு மலேசிய மனித வளர்ச்சி ஆய்வு மையத்தின் சார்பில் வெளியானது.

இரு முக்கிய நோக்கங்களை முன்வைத்து நூலாசிரியர் ஜானகிராமன் மாணிக்கம் இந்த நூலை எழுதி இருக்கிறார். 


முதலாவது நோக்கம்: மலேசியாவின் அரசியல்; சமூகப் பொருளாதாரம்; உளவியல் போன்ற அமைப்புகளில் தேக்க நிலையில் இருக்கும் மலேசிய இந்தியச் சமூகத்தின் உணர்வுகளைத் தட்டி எழுப்புவது.

இரண்டாவது நோக்கம்: மலேசிய இந்தியர் சமூகத்தின் இன்றைய நிலையைச் சமூக அக்கறை கொண்ட அனைவருக்கும் எடுத்துச் சொல்வது.

அந்த வகையில் மேல் இருந்து கீழும்; கீழ் இருந்து மேலுமாக வரலாற்று நிகழ்ச்சிகளும் சான்றுகளும் அழகழகாய்த் தொகுக்கப் படுகின்றன.

வரலாற்றுச் சான்றுகள் ஒவ்வொன்றாக முன்வைக்கப்பட்டு இறுதியில் உறுதியாக அறுதியிடப் படுகின்றன. இவரின் அணுகு முறையை மனமுவந்து பாராட்டாமல் இருக்க முடியாது. சபாஷ்!


இந்த நூலில் மலேசிய இந்தியர்களின் வரலாறு தொடர்புடைய 250 அரிய படங்கள்; 11 வரைபடங்கள்; புள்ளிவிவரங்கள் அடங்கிய 100 அட்டவணைகள் உள்ளன. அத்துடன் பல்வேறு மூலங்களில் இருந்து எடுக்கப்பட்ட 44 பெட்டிச் செய்திகளும் சேர்க்கப்பட்டு உள்ளன.

உலகத்திற்கே ரப்பரைப் பற்றி சொல்லிக் கொடுத்தது மலேசியா எனும் புண்ணிய பூமி. உலகம் முழுமைக்கும் ரப்பரை ஏற்றுமதி செய்து சாதனை செய்தது இந்தப் பச்சைப் பசும்பூமி.

பல்லாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகச் சாணக்கியம் பேசியது இந்த அழகிய பூமி. புலம் பெயர்ந்து கரை தாண்டும் மனிதர்களையும் கட்டிப் போட்டது இந்தச் செம்மண் பூமி.

ரப்பர் எனும் அட்சயப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி காசு பணத்தை வாரி இறைத்த அந்தப் புண்ணிய பூமியின் கனவுகள் நனவாகின. ஆனால் அந்த நனவுகள் இப்போது வேறு மாதிரியான வடிவத்தில் கனவுகளாகிப் பரிணமிக்கின்றன.


அதே அந்தப் பூமியில் ரப்பர் மரத்தைத் தொட்டு வளர்த்தவர்கள் ஓரங்கட்டப் படுகிறார்கள். இரண்டாம் தரத்தில் இருந்து மூன்றாம் தரத்திற்குப் பின் தள்ளப் படுகிறார்கள்.

அந்த மாதிரியான ஒரு காலக் கட்டத்தில் தான் மலேசிய இந்தியர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அது மட்டும் அல்ல.

நாடு விட்டு நாடு வந்தாலும் இந்தப் பூமிக்கு வாழ்வு அளித்த ரப்பர் எனும் அந்த மந்திரப் புன்னகையைப் பலரும் மறந்து வருகிறார்கள். ரப்பர் என்றால் என்ன என்று தெரியாமல் பலர் வாழ்ந்து கொண்டும் வருகிறார்கள்.

அதையும் தாண்டிய நிலையில் ரப்பர் என்றால் என்னங்க என்று நம்மையே கேள்வி கேட்கிறார்கள். இதைப் போய் எங்கே சொல்லி எப்படி முட்டிக் கொள்வதாம். சொல்லுங்கள்.


கித்தா தோட்டங்களில் நம் இனம் பட்ட பாடுகள்... அப்பப்பா... பால் கொண்டு வந்த வாளிகளிலேயே குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்தார்கள். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

அந்தக் கித்தா வாளித் தண்ணீரைப் பருகும் போது, அதில் கிடைத்த மணத்தில் இன்பம் கண்டவர்கள் தமிழர்ச் சமூகம்.

முப்பது நாள் வேலைக்குச் சென்றாலும் கைக்கும் வாய்க்கும் ஒட்டாமல் வாழ்ந்த குடும்பங்கள் ஆயிரமாயிரம். அந்தக் குடும்பங்கள் அல்லல்பட்ட கதைகளை எல்லாம் நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சம் கனக்கவில்லை. கழன்று கீழே விழுகிறது.

அன்று நம் இனத்தவர்கள் பட்ட துன்பங்களையும் துயரங்களையும், இப்போது இந்த நாட்டில் வாழும் பலர் மறந்து விட்டார்கள். கால் மேல் கால் போட்டு வாழும் அவர்கள் நம் இனத்தவர்களை மறக்கலாம். 


ஆனால் இந்த நாட்டின் இயற்கை அன்னை அந்த மூதாதையர்களை மறக்க மாட்டாள். அத்துடன் இந்த நாட்டின் கித்தா காடுகள் மறக்காது. அந்தக் கித்தா காடுகளில் இருந்த பாசா காடுகளும் மறக்காது.

’மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை’ எனும் இந்த நூலுக்கு இணையான ஒரு நூல் மலேசியாவிலும் சரி; அனைத்துலக அளவிலும் சரி; இதுவரையிலும் வெளியிடப்படவில்லை என்பதே பொதுவான கருத்து. வேறு எங்கும் காணக் கிடைக்காத கலங்கரை விளக்கமாக அந்த நூலுக்குத் தகுதி வார்க்கப் படுகிறது. அதுவே நிதர்சனமான உண்மையாகவும் உச்சம் பார்க்கப் படுகிறது.

ஜானகிராமன் மாணிக்கம் அவர்களின் ஆய்வு முறை ஓர் அறிவியல் அடிப்படையில் பயணிக்கின்றது. இவர் கூறும் வாதங்கள் அளவை நூல் முறையிலும் பயணிக்கின்றது. இவரின் இந்த நூல் மலேசிய இந்தியர்களைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று நம்பலாம்.

ஜானகிராமன் மாணிக்கம் நல்ல ஒரு நண்பர். இவர் ஒரு சமூகச் செயல்பாட்டாளர்; சிந்தனைச் சுதந்திரம் கொண்ட சார்பற்ற எழுத்தாளர்.

சிலாங்கூர், பத்தாங் பெர்ஜூந்தைப் பகுதியில் உள்ள ஜாவா சிலாங்கூர் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் தாய் தந்தையர் தோட்டத் தொழிலாளர்கள்.

மலேசியாவில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்தவர். அத்துடன் அந்தப் பிரச்சினைகளை அவரே அனுபவித்து உணர்ந்தவர். அதன் பின்னணியில் அவரே ஒரு சமூகச் சிந்தனை கொண்ட எழுத்தாளராக உருவாக்கம் பெற்றார்.

இந்த ஆய்வு நூலுக்காக இவருக்குச் சின்னப்பபாரதி அறக்கட்டளையின் சிறப்பு விருது 2013-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

1970களில், சிலாங்கூர் பத்தாங் பெர்ஜூந்தை பாத்திமா சமூக மேம்பாட்டு மையத்தில், ஆய்வுத் துறையில் தேர்ச்சி பெற்றார். மலேசியாவில் தோட்டப்புறங்கள், குடிசைப் பகுதிகள், மற்றும் சமூகப்பணிகள் தேவைப்படும் இடங்களில் 35 ஆண்டுகள் சேவை செய்து உள்ளார்.

1984-ஆம் ஆண்டில் புது டெல்லியில் நடைபெற்ற ஊரக மேம்பாடு பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கு பெற்று தம் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து உள்ளார்.

ஜானகிராமன் மலேசிய இந்தியர்களின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்தவர். ஓர் ஆய்வாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறவர்.

அடக்கம் அமைதி; ஆர்ப்பாட்டம் இல்லாத சாமானியத் தோற்றம். மலேசியா கண்டெடுத்த ஓர் அரிய ஆய்வியல் அறிஞர். மலேசிய இந்தியர்கள் பெற்ற ஓர் அரிய பொக்கிஷம்.

இந்த நூல் 2009-ஆம் ஆண்டு மாணிக்கவாசக விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்டது. ஆனாலும் 17 ஆண்டுகால உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. வேதனையான செய்தி.

நம் முன்னோர்கள் என்ன கனவுகளோடு வந்தார்களோ தெரியவில்லை. கொசுக் கடிகளுக்கும், பாம்புக் கடிகளுக்கும், தேள் கடிகளுக்கும், சிலந்தி பூச்சிக் கடிகளுக்கும் பஞ்சமே இல்லாத கித்தா தோப்புகளில் கனவு கண்டு இருக்கிறார்கள். அவர்களின் அந்தக் கனவுகள் எல்லாம் மலாயா கித்தா தோப்புகளுக்கு மட்டுமே தெரியும்.

அந்தக் கதைகளையும் அந்தக் கனவுகளையும் ஆவணப் படுத்திய ஜானகிராமன் மாணிக்கம் அவர்களுக்குப் பாராட்டுகள்.

ஜானகிராமன் மாணிக்கம் ஒரு சிறந்த ஆய்வுத் தூரிகை. மலேசிய இந்தியர்களின் வரலாற்று ஆய்வுத் துறையில் ஒரு கொடுமுடி. அந்தப் பயணப் பாவனையில் மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் தடம் பதிக்கின்றார். வாழ்த்துகள்.