இந்தோனேசியாவை ஆட்சி செய்த பல்லவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தோனேசியாவை ஆட்சி செய்த பல்லவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 நவம்பர் 2017

இந்தோனேசியாவை ஆட்சி செய்த பல்லவர்கள்

மயில் - அக்டோபர் 2017
 

மேற்கு ஜாவாவில் கிடைத்த கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் பல்லவர் காலத்திய கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு உள்ளன. அந்தக் கல்வெட்டுகள் ஜாவாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்த தர்மநகரப் பேரரசையும் அந்தப் பேரரசை ஆட்சி செய்த பூரணவர்மன் அரசனையும் குறிப்பிடுகின்றன.

வடக்குச் சுமத்திராவில் சோழர், பாண்டியர், பல்லவர், சேரர் என்னும் பெயர்களில் பழங்குடி மக்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய மூதாதையர்கள் சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளில் இருந்து வந்தவர்களாகக் கருதப் படுகின்றனர்.

கி.பி. 550-750-ஆம் ஆண்டுகளில் கடல் மார்க்கமாக இந்தோனேசியாவிற்குத் தமிழ் வணிகர்கள் சென்றார்கள் என்பதற்கானச் சான்றுகள் இருக்கின்றன. இது தொடர்பாக இந்தோனேசியாவில் சில பல கல்வெட்டுகள் கிடைத்து உள்ளன. 


இராஜசிம்மன் என்பவர் பல்லவ அரசர். பலருக்கும் தெரிந்த அரசர். இவர் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலை எழுப்பியவர். அந்தக் கோயிலின் தெற்குப் பக்கத்தில் பல சிறு கோயில்கள் உள்ளன. அந்தக் கோயிலுக்குப் போனவர்கள் அந்தச் சிறு கோயில்களைப் பார்த்து இருக்கலாம்.

அவற்றுள் மூன்றாவதாக உள்ள கோயிலை இராஜசிம்மனின் மனைவி ரங்கபதாகை என்பவர் கட்டி இருக்கிறார். அதனை அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது. அதில் ரங்கபதாகையின் தந்தையாரின் பெயர் சைல அதிராஜா என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தப் பெயர் இந்தோனேசிய சைலேந்திர அரசனையே சுட்டிக் காட்டுகிறது. இப்படி நான் சொல்லவில்லை. வரலாற்று ஆசிரியர் தி.நா. சுப்ரமணியம் அவர்கள் எழுதி இருக்கும் The Pallavas of Kanchi in Southeast Asia (பக்கம்: 43) எனும் நூலில் சொல்லி இருக்கிறார். 


இன்னும் ஒரு விசயம். சைலேந்திரப் பேரரசு ஜாவாவில் ஆட்சி செய்யும் போது தமிழகத்தில் பல்லவர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். இரண்டுமே சம கால ஆளுமைகள். அதை நினைவில் கொள்ளுங்கள்.

மத்திய ஜாவாவைவும் மேற்கு ஜாவாவையும் ஆட்சி செய்த சைலேந்திர அரசர்களை 'மீனாங்கித சைலேந்திரர்' என்று அழைத்து இருக்கிறார்கள். மீனாங்கித சைலேந்திரர் என்றால் மீனைச் சின்னமாகக் கொண்ட தலைவர் என்று பொருள். அது ஒரு பட்டப் பெயர்.

இந்த மீனாங்கிதச் சைலேந்திரர் எனும் அடைமொழியில் இருந்து தான் மினாங்கபாவ் (Minangkabau) எனும் பெயர் வந்தது. மினாங்கபாவ் மக்கள் மேற்கு ஜாவாவில் இருந்து மத்திய சுமத்திராவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள். 


பின் நாட்களில் இவர்கள் மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் குடியேறினார்கள். இவர்கள் கட்டும் வீடுகள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். மினாங்கபாவ் மக்கள் கட்டும் வீடுகளை Rumah Gadang என்று அழைக்கிறார்கள்.

மஜபாகித் அரண்மனைகளில் ஒரு பாடலைப் பாடுவார்கள். அதன் பெயர் தேசவர்ணா. இந்தப் பாடலுக்கு நாகரத்தகாமா எனும் மற்றொரு பெயரும் உண்டு. கி.பி.1365-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாடல். பிரபஞ்சா எனும் கவிஞர் எழுதியது. அதில் இந்த மினாங்கபாவ் எனும் சொல் வருகிறது.
(சான்று: Robson, S. O., (1995), Desawarnana (Nagarakrtagama) by Mpu Prapanca).

மினாங்கபாவ் மக்கள் சுமத்திராவில் வாழ்ந்த இடத்தின் பெயர் மினாங்கபாவ் பெருநிலம் (Minangkabau Highlands).

இந்தோனேசியாவை ஆட்சி செய்த சிங்காசாரி பேரரசிற்கும் மஜபாகித் பேரரசிற்கும் நெருக்கமாக இருந்த ஆதித்தியவர்மன் (Adityawarman) எனும் அரசர்தான் மினாங்கபாவ் சிற்றரசை உருவாக்கினார்.


மினாங்கபாவ் சிற்றரசு 1347-ஆம் ஆண்டு பாகாருயூங் (Pagaruyung) எனும் இடத்தில் உருவாக்கப்பட்டது.
(சான்று: Coedès, George (1968). Walter F. Vella, ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. பக்கம்: 232)

இவர்களின் கலாசாரம் தாய்வழி மரபைச் சேர்ந்தது (Matrilineal). பெண்களே ஒரு குடும்பத்தின் தலைவருக்குரிய தகுதியைப் பெறுகிறார்கள். சொத்துடைமையும் நிலவுடைமையும் ஒரு தாயிடம் இருந்து ஒரு மகளிடம் போய்ச் சேர்கிறது. அதே சமயத்தில் அரசியல் சமய தொடர்பான காரியங்களுக்கு ஆண்கள் பொறுப்பு வகிக்கிறார்கள்.

இவர்களின் இத்தகைய கலாசார மரபை அடாட் பெர்பாத்தே (Adat Perpatih) என்று அழைக்கிறார்கள். இந்தோனேசியாவில் லாரே புடி கானியாகோ (Lareh Bodi Caniago) என்று அழைக்கிறார்கள்.


மேற்கு சுமத்திராவில் மட்டும் 40 இலட்சம் மினாங்கபாவ் மக்கள் வாழ்கின்றனர். இந்தோனேசியாவின் மற்ற பகுதிகளிலும் மலேசியாவிலும் ஏறக்குறைய 30 இலட்சம் மினாங்கபாவ் மக்கள் வாழ்கின்றனர்.

அந்த வகையில் மினாங்கபாவ் இனத்தவர் சைலேந்திர பேரரசைச் சார்ந்தவர்கள். சைலேந்திர பேரரசு பல்லவர்களின் பின்னணியைக் கொண்டது. மீனாங்கித எனும் சொல்லில் இருந்து தான் மினாங்கபாவ் எனும் சொல் மருவி வந்தது.

இன்னும் ஒரு விசயம். பாண்டியர்களின் கொடியில் இரட்டை கயல் மீன்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். அனைவரும் அறிந்த உண்மை. இந்தோனேசியாவை ஆட்சி செய்த சைலேந்திரர்களுக்கும் கயல்மீன் சின்னமாக இருந்தது.

அதனால் சைலேந்திரர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்படும் மலையத்துவச பாண்டியன் வழி வந்தவர்களாக இருக்கலாம் என அறிஞர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுகின்றார். (The Minangkabau adat was derived from animist and Hindu-Buddhist beliefs before the arrival of Islam. சான்று: https://en.wikipedia.org/wiki/Minangkabau_people)

ஆதித்தியவர்மன்
மினாங்கபாவ் எனும் சொல் எப்படி உருவானது என்பதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு. வரலாற்றை ஆய்வு செய்யும் போது எல்லாத் தரப்புகளையும் சமநிலையில் இருந்து நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

அதன்படி மெனாங் கெர்பாவ் எனும் சொற்கள் திரிந்து மினாங்கபாவ் ஆனது என்றும் சொல்கிறார்கள். மினாங்கபாவ் என்பது மினாங், கபாவ் ஆகிய இரு சொற்களில் இருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். மெனாங் (Menang) என்றால் வெற்றி. கெர்பாவ் (Kerbau) என்றால் எருது. வெற்றி பெறும் எருது என்று பொருள் படுகிறது. (சான்று: https://www.saudiaramcoworld.com/issue/199104/on.culture.s.loom.htm)

புராணக் கதை என்ன சொல்கிறது என்று பார்ப்போம். மினாங்கபாவ் மக்களுக்கும் அண்டை மாநிலத்தின் இளவரசருக்கும் எல்லைத் தகராறு. இரண்டு எருதுகளை மோத விட்டால் தகராறு தீர்க்கப் படலாம் என்று மினாங்கபாவ் மக்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். அண்டை மாநிலத்தின் இளவரசரும் ஒப்புக் கொண்டார்.


அண்டை மாநிலத்தின் இளவரசர் ஒரு பெரிய திடகாத்திரமான எருதைக் கொண்டு வந்தார். மினாங்கபாவ் மக்கள் பசியால் வாடி நின்ற ஓர் எருது கன்றுக் குட்டியைக் கொண்டு வந்தனர். வயற்காட்டில் பெரிய எருதைப் பார்த்த கன்றுக் குட்டி, பால் குடிப்பதற்காக அதை நோக்கி ஓடியது. சின்னக் கன்றுக் குட்டி தானே என்று பெரிய எருது அசட்டையாக இருந்து விட்டது.

பெரிய எருதின் மடியில் பால் குடிக்க முயற்சி செய்த போது கன்றுக் குட்டியின் கூரிய கொம்புகள் பாய்ந்து பெரிய எருமை இறந்து போனது. அந்த வகையில் மினாங்கபாவ் மக்கள் வெற்றி பெற்றனர். எல்லைத் தகராறும் தீர்ந்து போனது. அது ஒரு புராணக் கதை.

14-ஆம் நூற்றாண்டில் ஜாவாவை ஆட்சி செய்த சிங்காசாரி, மஜபாகித் பேரரசுகளுடன் நட்புறவு கொண்டிருந்த ஆதித்தியவர்மன் என்பவர் மினாங்கபாவ் பேரரசைத் தோற்றுவித்தார். மினாங்கபாவ் பீடபூமியில் மினாங்கபாவ் பேரரசைத் தோற்றுவித்த ஆதித்தியவர்மன் புத்த சமயத்தைச் சார்ந்தவர். 1347-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை மினாங்கபாவ் பேரரசை ஆட்சி செய்தார்.


மத்திய சுமத்திராவில் ஒரு மாநிலமாக இருந்த மலையபுரத்தின் அரசராக இருந்தவர் அந்த ஆதித்யவர்மன். இந்த மலையபுரம் (Malayapura) இப்போது பாகாருயூங் (Pagarruyung) என்று அழைக்கப்படுகிறது.
(சான்று: An Indonesian Frontier: Acehnese and Other Histories of Sumatra/ Adat: An Examination of Conflict in Minangkabau)

1309-இல் இருந்து 1328 வரை மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த ஜெயா நெகாரா என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரர்தான் ஆதித்தியவர்மன். இவர் திரிபுவனராஜா எனும் பேரரசரின் பேரனும் ஆவார். மஜபாகித் பேரரசின் மூத்த அமைச்சராக ஆதித்யவர்மன் இருந்த போதுதான் மினாங்கபாவ் பேரரசைத் தோற்றுவித்தார்.

ஆதித்யவர்மன் மறைந்த பிறகு மினாங்கபாவ் பேரரசு மூன்று சிற்றரசுகளாகப் பிரிந்து போயின. மூன்று அரசர்கள் தனித்தனியாக ஆட்சி செய்தனர். ராஜா ஆலாம், ராஜா ஆடாட், ராஜா இபாடாட் எனும் மூன்று அரசர்கள். சுருக்கமாக ராஜா தீகா செலோ (Rajo Tigo Selo) என்று அழைக்கப் பட்டார்கள். 


இந்தோனேசியாவைப் பற்றிய பல செய்திகள் சங்க கால நூல்களில் உள்ளன. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மொலுக்காஸ் போன்ற தீவுப் பகுதிகள் முந்நீர்ப் பழந்தீவு என அந்த நூல்களில் சொல்லப் படுகின்றன.

தமிழர்கள் ஜாவாவைச் சாவகம், சாவகத் தீபம், யவத் தீபம் என்று அழைத்து இருக்கிறார்கள். சுமத்திராவை ஸ்ரீ விசயம், சொர்ணதீபம் என்றும் அழைத்து இருக்கிறார்கள்.

பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளில் தமிழ் வணிகர்களும், தமிழ்ப் பெருமக்களும் சங்க காலத்திற்கு முந்திய காலத்தில் இருந்தே அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக இந்தோனேசியத் தீவுகளுக்குச் சென்று இருக்கிறார்கள். ஜாவாவுடன் தொடர்பு வைத்து இருக்கிறார்கள்.