கறுப்பு தாஜ்மகால் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறுப்பு தாஜ்மகால் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 3

தமிழ் மலர் - 13.05.2019

ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மகால். இவரின் 14-வது பிரசவத்தில் இறந்து போனார். பிரவசம் ஒரு பெண்பிள்ளை. அந்தப் பிள்ளைக்குக் கவுகார பேகம் என்று பெயர் சூட்டினார்கள். 


மும்தாஜ் இறந்த தேதி: 17.06.1631. அப்போது அவருக்கு வயது 38. மிக இளம் வயது. ஷாஜகான் எங்கே போனாலும் அவர் கூடவே மும்தாஜும் போய் வருவார். போர் முனைக்குப் போனாலும் கூடவே செல்வார்.

வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த போதுகூட கணவனை விட்டுப் பிரிந்தது இல்லை. இருவரும் 19 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு 14 பிள்ளைகள் கரு தரித்தனர். அவர்களில் எழுவர் இறந்து போயினர்.

இந்தியாவின் கீழ் மையப் பகுதியில் ஒரு சமவெளி. அதன் பெயர் தக்காணச் சமவெளி. இதன் ஆங்கிலப் பெயர் Deccan Plateau. அங்கே புர்கான்புர் எனும் இடத்தில் போர் நடந்து கொண்டு இருந்தது. போர் முனையில் கணவர் ஷா ஜகானுடன் மும்தாஜ் இருந்தார். அப்போது அவர் நிறைமாதக் கர்ப்பிணி. சரியான மருத்துவ சிகிச்சை இல்லாமல் இறந்து போனார். 




அவருடைய உடல் அங்கே அதே புர்கான்புரில் நல்லடக்கம் செய்யப் பட்டது. அங்கே தப்தி எனும் ஒரு பெரிய ஆறு. இன்னும் ஓடுகிறது. அந்த ஆற்றின் ஓரத்தில் ஜைனாபாத் எனும் ஒரு பூங்கா மும்தாஜுக்காக உருவாக்கப் பட்டது.

மும்தாஜ் இறந்து ஆறு மாதங்கள் கழித்து அவருடைய உடலை ஜைனாபாத்தில் இருந்து தோண்டி எடுத்தார்கள். தங்கத் தேரில் டில்லிக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். மூன்றாவது மகன் ஷா ஷூஜா என்பவர்தான் தாயாரின் உடலைக் கொண்டு வந்தார்.

யமுனை நதிக்கரை ஓரத்தில் மும்தாஜுக்காக ஒரு சின்ன நினைவுக் கட்டடம் கட்டப் பட்டது. அங்கே மும்தாஜின் உடல் தற்காலிகமாகப் புதைக்கப் பட்டது. அதற்குப் பின்னர் தான் தாஜ் மகால் கட்டப்பட்டது. 




மும்தாஜ் இறந்த மறு ஆண்டு 1632-ஆம் ஆண்டில் தாஜ் மகால் கட்டும் பணிகள் தொடங்கின. கட்டி முடிக்க 1653-ஆம் ஆண்டு வரை 21 ஆண்டுகள் பிடித்தன.

கட்டுவதற்கு ஆயிரம் யானைகள் பயன்படுத்தப் பட்டன. 22,000 பேர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களில் ஓவியர்கள், சித்திரத் தையல் கலைஞர்கள், சிற்பிகளும் அடங்குவார்கள்.

ராஜஸ்தானில் இருந்து ஒளி ஊடுருவிச் செல்லும் வெண்பளிங்குக் கற்கள்; பஞ்சாப்பில் இருந்து சூரியக் காந்தக் கற்கள்; சீனாவில் இருந்து மணிப் பளிங்குகள்; திபெத்தில் இருந்து பச்சை நீலக் கற்கள்; ஆப்கானிஸ்தானில் இருந்து நிலப் படிகங்கள் (Lapis lazuli); இலங்கையில் இருந்து நீலக்கற்கள்; அராபியாவில் இருந்து கார்னிலியான் கற்கள் (carnelian) கொண்டு வரப் பட்டன.

 

ஆக 28 வகையான நவரத்தினக் கற்கள் தாஜ் மஹால் முழுவதுமான வெண்பளிங்குக் கற்களில் பதிக்கப்பட்டு உள்ளன. இந்தக் கற்களைக் கொண்டு வந்து சேர்க்க ஐந்து ஆண்டுகள் பிடித்தன.

பாரசீக மொகலாயக் கட்டிடக்கலை மரபுகளில் தாஜ் மஹால் கட்டப்பட்டு உள்ளது. 42 ஏக்கர் நிலப்பரப்பில் 3 கோடி 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அது 1632-ஆம் ஆண்டு கணக்கு.

அண்மையில் 2015-ஆம் ஆண்டில் அதன் மதிப்பு 827 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது 344 கோடி மலேசிய ரிங்கிட். ஒவ்வோர் ஆண்டும் 90 இலட்சம் பேர் போய் பார்க்கிறார்கள்.

அங்கே தான், அந்தத் தாஜ் மஹாலில் தான் மும்தாஜின் பூதவுடல் அமைதி படுத்தப் பட்டது. அது ஒரு காலச் சுவடு.

உலக அதிசயங்களில் ஒன்றாகப் பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. தாஜ் மஹால் கட்டுவதற்குத் தலைமை வகித்தவர் உஸ்தாஸ் அகமட் லாகூரி. Ustad Ahmad Lahauri. 




தாஜ் மஹாலைக் கட்டிய சிற்பிகளின் விரல்கள் துண்டிக்கப் பட்டதாக ஒரு தகவல் உள்ளது. அது ஒரு வதந்தி. தாஜ் மஹாலில் இருந்து நவரத்தினக் கற்களைத் திருடியவர்களின் விரல்கள் துண்டிக்கப் பட்டன. அதுதான் உண்மை. சரி. 

தாஜ் மகாலைப் பற்றிய ஒரு நீண்ட வரலாற்று ஆவணம் இந்தக் கட்டுரைக்குப் பின்னர் இடம் பெறும். நிறைய ஆய்வுகள் செய்யப்பட்ட ஓர் ஆவணம்.

மும்தாஜ் இறக்கும் போது அவரிடம் பத்து மில்லியன் ரூபாய்கள் இருந்தன. அது அப்போதைக்கு பெரிய காசு. அந்தப் பணத்தில் பாதிப் பணம் மூத்த மகள் ஜகனாராவிற்குக் கொடுக்கப் பட்டது. மீதிப் பணத்தை மற்ற பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார்கள். சரி.

தாஜ் மஹால் என்றாலும் தாஜ் மகால் என்றாலும் இரண்டும் ஒன்றுதான். குழப்பம் வேண்டாமே. 





ஷா ஜகானைப் பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன. இருந்தாலும் அவருடைய மகன் ஔரங்கசிப்பின் செய்திகள்தான் அதிகமாகவே தெரிகின்றன. அதற்கு முன்னர் ஆக்ரா கோட்டையில் சிறை வைக்கப்பட்ட போது ஷா ஜகான் தன்னுடைய கடைசி  காலத்தை எப்படிக் கழித்தார். அதை முதலில் பார்ப்போம். அங்கே தான் ஒரு பெரிய வேதனையான செய்தியும் வருகிறது.

ஆக்ரா கோட்டையில் ஓர் உயர்ந்த கோபுரம். அதன் பெயர் ஷா புர்ச். (Shah Burj of Agra Fort). அங்கே இருந்து பார்த்தால் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் இயற்கையின் பரிமாணங்கள். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பொன் வடிக்கும் தாஜ் மகால்.

அழகின் ஓவியமாய்க் கதைகள் பேசும் அழகு ஓவியம். அந்த ஷா புர்ச் கோபுரத்திற்கு கீழேதான் ஷா ஜகானின் சிறை அறை இருந்தது. அந்த அறையில் தான் ஷா ஜகான் தன்னுடைய கடைசி எட்டு ஆண்டுகளைக் கழித்தார். 




அங்கு இருந்து அவர் வெளியே போக முடியாது. அறை எப்போதும் பூட்டியே கிடக்கும். அந்த அறைக்குள் யாரும் போகக் கூடாது. ஷா ஜகானைப் பார்க்கவும் கூடாது. மகள் ஜகனாரா ஒருவர் மட்டும்தான் உள்ளே போக முடியும்.

ஷா ஜகான் மேலே கோபுரத்திற்குப் போகலாம். தாஜ் மகாலைப் பார்த்துவிட்டு திரும்பவும் சிறை அறைக்கே வந்துவிட வேண்டும். வெளியே போவதற்கும் அவருக்கு வழி இல்லை. ஷா ஜகானை அந்த அறையில் சிறை வைக்கும் போது அவருக்கு வயது 66. அவர் இறக்கும் போது வயது 74. ஆக எட்டு ஆண்டுகளுக்கு அங்கே தனிமைச் சிறைவாசம்.

ஷா ஜகான் தன் அறையின் ஜன்னல் இரும்புக் கம்பிகளை இறுக்கப் பிடித்துக் கொள்வார். தாஜ்மகால் தெரியும். ஆசை ஆசையாய்க் கட்டிய தாஜ்மகாலைத் தொட்டுப் பார்க்கக் கைகளை நீட்டுவார். முடியாது.

எட்டாத தூரத்தில் அந்த அழகுப் பேழை. இருந்தாலும் தொலை தூரத்தில் இருந்து பார்க்க முடிந்தது. தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டே ஷா ஜகான் அழுவாராம். பௌர்ணமித் தூறலில் பவள முத்துகளாய்க் கண்ணீர்த் துளிகள்.

எட்டு ஆண்டுகள் அப்படி அழுது கொண்டே இருந்து இருக்கிறார். இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னால் அவருக்கு மாரடைப்பு. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தாஜ் மகாலையே வெறித்துப் பார்த்து இருக்கிறார். 




உதவிக்கு யாரும் இல்லை. அவரால் சத்தம் போட்டு யாரையும் கூப்பிடவும் முடியாது. அந்த இரவு ஒரு பிரகாசமான ஒளி. தாஜ் மகாலில் இருந்து அவருடைய சிறை அறைக்குள் ஊடுருவி வந்து இருக்கிறது.

என்ன ஏது என்று தெரியவில்லை. அவருக்கும் என்ன என்று தெரியவில்லையாம். கொஞ்ச நேரத்தில் நெஞ்சுவலி போய் விட்டது. அது மும்தாஜின் ஆத்ம ஒளியாக இருக்கலாம். அதைப் பற்றி தன்னுடைய மகள் ஜகனாராவிடம் சொல்லி இருக்கிறார்.

ஷா ஜகானுக்குப் பல மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என்கிற மூன்றாவது மனைவியை மட்டுமே அதிகமாக நேசித்து இருக்கிறார். கடைசியில் தாஜ் மகாலைப் பார்த்துப் பார்த்து அழுது கொண்டே இறந்தும் போனார். அவருடைய வாழ்க்கையில் விதி எப்படி விளையாடி இருக்கிறது பார்த்தீர்களா.

ஷா ஜகானின் மனைவிமார்களின் சரியான விவரங்களைத் தேடித் தேடிப் பார்த்து நேற்றுதான் சரியான தகவல்கள் கிடைத்தன.

பொதுவாகவே மொகலாய அரசப் பெண்களுக்கு இரண்டு மூன்று பெயர்கள் இருக்கும். அந்தப் பெண் சாதாரணப் பெண்ணாக அப்பா அம்மாவுடன் இருக்கும் போது ஒரு பெயர். அது பிறப்புப் பெயர். அவர் ஓர் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டதும் இன்னொரு பெயர். 




அதே அந்த இளவரசர் பேரரசராகத் தகுதி உயரும் போது அந்தப் பெண்ணுக்கும் மற்றொரு பெயர். இப்படி சில சமயங்களில் நான்கு ஐந்து பெயர்கள் வருவதும் உண்டு. அதனால் வரலாற்றைப் படிக்கும் போது நமக்கும் கொஞ்சம் குழப்பமாக இருக்கும்.

ஷா ஜகானின் முழுப் பெயர் அல் அசாட் அப்துல் முஷபர் சஹாபுடின் முகமது குராம். (A'la Azad Abul Muzaffar Shahab ud-Din Mohammad Khurram).

1592 ஜனவரி 5-ஆம் தேதி லாகூரில் பிறந்தவர். இந்த நகரம் இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது. அவர் இறந்தது 1666 அக்டோபர் 1-ஆம் தேதி. ஆக்ரா கோட்டையில் இறக்கும் போது அவருக்கு வயது 74.

ஷா ஜகான் 30 ஆண்டுகள் 193 நாட்களுக்கு மொகலாயப் பேரரசின் மாமன்னராக மகுடம் சூட்டி அழகு பார்த்தவர்.

ஷா ஜகானும் ஒரு மிதமான சமயவாதி. புதிதாக இந்துக் கோயில்களையும், கிறிஸ்துவத் தேவாலயங்களையும் கட்ட அனுமதிக்கவில்லை. சமய வழிபாட்டு இல்லங்களைச் சீரமைப்பு செய்வது என்றால் வழிபாட்டு வரி விதிக்கப் பட்டது.

 

அவருடைய அனுமதி இல்லாமல் புதிதாகக் கட்டப்பட்ட சமயத் தளங்களைத் தகர்த்து எறியுமாறு கட்டளை போட்டவர் அதே அந்த ஷா ஜகான் தான்.

அவரின் ஆட்சி காலத்தில் நிறைய பூங்காக்களை உருவாக்கி இருக்கிறார். காஷ்மீரில் மட்டும் 999 பூங்காக்கள் உருவாக்கப் பட்டன. அவற்றில் இன்னும் சில பூங்காக்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. காஷ்மீருக்கு இன்றும் அழகு கொடுப்பதே அவர் உருவாக்கிய அந்த அழகுப் பூங்காக்கள் தான்.

ஷா ஜகானின் தந்தையார் பெயர் ஜகாங்கீர். தாயாரின் பெயர் தாஜ் பிபி பில்கிஸ் மக்கானி. (Taj Bibi Bilqis Makani). இவர் இந்து சமயத்தைச் சார்ந்தவர். ராஜபுத்திர பரம்பரையைச் சேர்ந்தவர்.

ஷா ஜகானுக்குப் பத்து மனைவிகள் என்று சொல்லி இருக்கிறேன். அவருடைய மனைவியின் பெயர்களைத் தயவு செய்து திருத்திக் கொள்ளவும்.
https://openlibrary.org/
எனும் முகவரியில் இருந்து புதிய தகவல்கள் கிடைத்தன. 

1. கந்தகாரி பேகம்.

2. அக்பர்பாடி மகால்.

3. மும்தாஜ் மகால்.

4. ஹசினா பேகம்.

5. முல்தி பேகம்.

6. குட்சியா பேகம்.

7. பாத்தேபுரி மகால்.

8. சார்ஹிந்தி பேகம்.

9. ஸ்ரீமதி மன்பவாவதி.


இதில் ஒரு பெயர் காணவில்லை. கவனித்தீர்களா. நானும் தேடிப் பார்த்தேன்.  எனக்கும் கிடைக்கவில்லை.

1607-ஆம் ஆண்டு ஷா கானுக்கும் மும்தாஸுக்கும் நிச்சயதார்த்தம் செய்யப் பட்டது. அப்போது ஷா ஜகானுக்கு வயது 15. மும்தாஸுக்கு வயது 14. மும்தாஸ், பாரசீக வம்சாவளியைச் சேர்ந்தவர். நிச்சயதார்த்தம் செய்யப் பட்டாலும் ஐந்து ஆண்டுகள் வரை திருமணம் நடைபெறவில்லை.

ஷா ஜகானுக்கு 20 வயதாகும் போது தான் மும்தாஸுடன் திருமணமே நடந்தது. மும்தாஸைத் திருமணம் செய்யும் போது ஷா ஜகானுக்கு மும்தாஸ் ஒரு கட்டளை போட்டார்.

‘மற்ற மனைவிமார்களிடம் இருந்து குழந்தைகள் எதுவும் பெற்றுக் கொள்ளக் கூடாது’ என்பதுதான் அந்தக் கட்டளை. அந்தக் கட்டளையை ஷா ஜகான் மீறவே இல்லை.

அதனால்தான் மும்தாஸுக்கு 14 பிள்ளைகள். எல்லாப் பிள்ளைகளையும் ஒரே ஒரு மனைவியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அதுதான் உண்மையிலும் உண்மை. மும்தாஸ் போட்ட கட்டளையினால் தான் மற்ற மனைவிகளிடம் இருந்து அவருக்கு குழந்தைகள் கிடைக்கவில்லை.

மும்தாஸிற்கு 40 வயதாகும் போது கடைசிப் பிரசவத்தில் இறந்து போனார். முப்பது மணி நேரப் பிரசவ வேதனை. தாயாரின் பிரசவ வேதனையைப் பார்த்த மூத்த மகள் ஜகனாரா ரொம்பவுமே மனம் நொறுங்கிப் போனார். அப்போது ஜகனாராவுக்கு வயது 17.

தன் தாயாருக்குத் தெய்வத்தின் கருணை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏழை மக்களுக்குப் பொன்னும் மணிகளையும் அன்பளிப்பு செய்தாராம். வரலாறு சொல்கிறது. மும்தாஸின் இழப்பு மொகலாய சாம்ராஜ்யத்திற்கு ஒரு மாபெரும் இழப்பாகும். 

மும்தாஸ் இறந்த பிறகு மேலும் இரு பெண்களை ஷா ஜகான் திருமணம் செய்து கொண்டார். ஒருவர் அக்பர்பாடி மகால். இன்னொருவர் கந்தகாரி மகால். இன்னும் சிலரைத் திருமணம் செய்து கொண்டாலும் அவை அரசியல் காரணங்களுக்காக நடைபெற்ற திருமணங்கள் ஆகும். மற்றபடி மும்தாஸிற்குப் பிறகு எவரும் ஷா ஜகானின் மனதில் நிலைத்து நிற்கவில்லை.
 
ஜகனாரா மட்டும்தான் எட்டு ஆண்டுகள் ஷா ஜகானுடன் ஆக்ரா சிறையில் இருந்து இருக்கிறார். தந்தைக்கு வேண்டிய எல்லாப் பணிவிடைகளையும் செய்து இருக்கிறார். ஷா ஜகானின் மற்ற மனைவிகள்  யாருமே ஷா ஜகானைப் போய் பார்க்கவில்லை. பார்க்கக் கூடாது என்று ஔரங்கசிப் கட்டளை போட்டு இருந்தார்.

அதுதான் பாருங்கள். அத்தனை மனைவிகள் இருந்தும் அவர்களில் ஒருவரின் அரவணைப்பு கூட கிடைக்காமல்… பாவம் ஷா ஜகான், கடைசியில்  ஓர் அனாதையாக இறந்து போனார். இதுவும் ஒரு வரலாற்றுக் கொடுமை.

(தொடரும்)

சான்றுகள்

1. Richards, John F. (1993). The Mughal Empire. The New Cambridge History of India. Volume V. Cambridge University Press. ISBN 978-0-521-56603-2.

2. Findly, Ellison Banks (1993). Nur Jahan: Empress of Mughal India. Oxford University Press. ISBN 978-0-19-536060-8.

3. Syad Muhammad Latif, Agra: Historical and descriptive with an account of Akbar and his court and of the modern city of Agra (2003)

4. Soma Mukherjee, Royal Mughal Ladies and Their Contributions (2001)