சோஸ்மா சட்டம் 2012 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோஸ்மா சட்டம் 2012 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 அக்டோபர் 2019

சோஸ்மா சட்டம் 2012

அக்கரைச் சோதனைகளில் இக்கரை வேதனைகள் - 2

சோஸ்மா சட்டம் 2012 என்று அழைக்கப்படும் குற்றச் செயல் பாதுகாப்புச் சட்டம்; (Security Offences Special Measures Act 2012: Sosma) எனும் சட்டத்தின் கீழ், மலேசியாவில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாகக் கைது நடவடிக்கை. 


விசாரணை இல்லாமல் எவரையும் தடுத்து வைக்க சோஸ்மா சட்டம் வழி வகுக்கிறது. இந்தச் சட்டத்தைக் கொடூரமான சட்டம் (Draconian Act) என்றும் மலேசியர்கள் பலர் சொல்வார்கள்.

அந்தச் சட்டத்திற்கு இன்றைய வரைக்கும் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். திருத்தங்கள் செய்யப்பட்ட வேண்டும் எனும் பல்தரப்பு அறைகூவல்கள் தொடர்கின்றன. இருப்பினும் அவை யாவும் விழலுக்கு இறைத்த நீராய் கதை பேசுகின்றன.

மலேசியாவில் (ISA) எனும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Akta Keselamatan Dalam Negeri - Internal Security Act) முன்பு நடைமுறையில் இருந்தது. அதன் புது வடிவமே சோஸ்மா. நஜீப் அவர்களால் மலேசிய நாடாளுமன்றத்தில் 2012-ஆம் ஆண்டு அரங்கேற்றம் கண்ட சாசனம்.
 

முக்கியமான விசயத்திற்கு வருகிறேன். 12 பேர் கைது தொடர்பாகக் காவல் துறையினர் வெளியிட்டு வரும் அறிக்கைகள் உண்மையாக இருக்கலாம். நாம் அவற்றை மறுக்கவில்லை.

காவல் துறையினர் அவர்களின் கடமையைச் செய்கிறார்கள். செய்தும் வருகிறார்கள். வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். அவர்களின் கடமை உணர்வுகளுக்கு மலேசிய இந்தியர்கள் கட்டுப்பட வேண்டி உள்ளது. இது காலத்தின் கட்டாயம்.

அன்றையக் காலக் கட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாய்ப் பயணித்த மலேசியர்கள் சிலர் இருந்து இருக்கலாம். இது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி.
 

இன்றையக் காலக் கட்டத்தில் வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதற்குச் சிலர் திட்டமிட்டார்கள். இது இப்போது இங்கே முன் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு.

இந்த இரு பதிவுகளையும் நாம் மறுக்கவில்லை. மறுபடியும் சொல்கிறேன். இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எதுவும் தீர்க்கமாக ஆராயப்பட வேண்டும். விசாரணை நடத்தப்பட வேண்டும். ஒருவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரையில் அவர் நிரபராதியே.

இருந்தாலும் இந்தக் கைது நடவடிக்கையைச் சுற்றி தேங்கி நிற்கும் சிற்சில சூழல்களையும்; அது தொடர்பான நிகழ்வுகளையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதே சமயத்தில் பாரபட்சம் இல்லாமல் விமர்சிக்க வேண்டிய நிலையிலும் இருக்கிறோம். நினைவில் கொள்வோம்.

கைதானவர்களில் சிலர் பயங்கரவாதத்திற்குத் துணை போனார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு. அதுவே பெரும்பாலான மலேசிய மக்களின் புருவங்களை நெருட வைத்து இருக்கிறது. அதற்கு முக்கியமாக அமைவது ஒரே ஒரு காரணம் தான்.
 

பல்லாண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே உள்நாட்டுப் போர். நடந்து முடிந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஓராண்டு அல்ல; ஈராண்டுகள் அல்ல. பத்தாண்டுகள் முடிந்து விட்டன.

விடுதலைப் புலிகளின் இலக்கு என்ன? அவர்களின் முயற்சிகள் என்ன? உலகம் அறிந்த விஷயம்.

ஆனால் அந்த இலக்கை அவர்களால் அடைய இயலவில்லை. அது தனி ஒரு வரலாறு. அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது என்பதும் உலகம் அறிந்த மற்றொரு வரலாறு.

மலேசியாவில் கைதான இந்தியர்களில் சிலர் பயங்கரவாதத்திற்குத் துணை போனார்கள் எனும் குற்றச்சாட்டிற்கு மீண்டும் வருகிறோம்.

இலங்கைக்கு வெளியே உள்ள நாடுகளில் விடுதலைப் புலிகள் தொடர்பான வன்முறைத்  தாக்குதல்கள் என்பது அரிதான நிகழ்வுகள்.

கூகிள்; யாகூ; பிங்; எக்கோசியா; போன்ற தேடல் இயந்திரங்களில் தேடிப் பாருங்கள். தெரியும்.

தாக்குதல்கள் பற்றிய அழுத்தமான பதிவுகள் எதுவுமே இல்லை. பேரணிகள் நடந்து உள்ளன. நினைவு நாட்கள் நடந்து உள்ளன. கொடியேற்றங்கள் நடந்து உள்ளன. ஆனால் வன்முறைச் சம்பவங்கள்; அல்லது வன்முறைத்  தாக்குதல்கள் என்று எதுவும் நடந்ததாகப் பதிவுகள் இல்லை.
 

ஆக கடந்த 10 ஆண்டுகளில், அப்படி ஒரு வன்முறைத் தாக்குதல் எங்கேயும் நடந்ததாகப் பதிவுகள் இல்லை. கூட்டிக் கழித்து இப்படிச் சொல்லலாம். நடக்காத ஒன்றைக் கற்பனை செய்தும் பார்க்கவும் முடியவில்லை.

அடுத்ததாக... மலேசியாவில் அந்த 12 பேரையும் கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்கிற கூற்றையும் விமர்சன ரீதியாகப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களும் ஆதாரங்கள் “திருப்திகரமாக” இருப்பதாகக் கூறி இருக்கிறார். சரி.

போதுமான ஆதாரங்கள் உள்ளன என்கிற அந்தக் கூற்று ஒன்றே போதும். அந்தக் கூற்றே ஒரு முக்கிய முரண்பாட்டுத் தோற்றத்தைத் தோற்றுவிக்கிறது. எப்படி என்பதையும் கவனிக்க வேண்டும்.

அவ்வளவு அதிகமான, அவ்வளவு போதுமான சான்றுகள் இருந்தால்... இருக்குமானால்... அப்புறம் ஏன் அவர்கள் சோஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப் பட வேண்டும்.

மலேசியாவில் பினல் கோட் (The Penal Code) குற்றவியல் சட்ட அமைப்பு இருக்கிறது. (Chapter VIA: Offences Relating to Terrorism). அதன் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கலாம்.

(The Penal Code (Kanun Keseksaan) is a law that codifies most criminal offences and procedures in Malaysia. Throughout Malaysia—31 March 1976, Act A327; P.U. (B) 139/1976).

சோஸ்மாவிற்கு மீண்டும் வருகிறேன். எந்தவித விசாரணையும் இல்லாமல் ஒருவர் தடுத்து வைக்கப் படலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். மலேசியாவில் அது ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது. மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.

முந்தைய ஆட்சிக் காலங்களில் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்ட சட்டம் தான் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம். மிகவும் பிரபலமானது. விளக்கம் தேவை இல்லை. ஏன் என்றால் உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

அந்த உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தைத் தாண்டிய நிலையில் அவசரகாலச் சட்டம் (Emergency Ordinance) இருக்கிறது. அபாயகரமான போதைப் பொருள் சட்டம் (Dangerous Drugs Act) இருக்கிறது.

இந்தச் சோஸ்மா சட்டம்; இந்த உள்நாட்டு பாதுகாப்பு சட்டம்; போன்றவற்றின் பின்னணியில் சில காரணங்கள் உள்ளன.


நன்றாகப் பாருங்கள். சாதாரணச் சட்ட செயல் முறைகளைத்  தவிர்ப்பதற்காக வடிவம் அமைக்கப் பட்டவை போல அந்தச் சட்டங்கள் ஒரு மாயைத் தோற்றத்தை உருவாக்குகின்றன.


மலேசியாவின் சட்ட அமைப்பின்படி ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ், எந்த ஒரு நபரையும் எந்த ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் தடுத்து வைக்கலாம். ஆனால் நம்பகமான; வலுவான சான்றுகளை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும். சான்றுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் சோஸ்மா சட்டம்; உள்நாட்டு பாதுகாப்பு சட்டம்; அப்படி அல்ல. அவற்றுக்குச் சான்றுகள் தேவை இல்லை. அதிகாரிகள் விரும்பும் நபர்களைக் கைது செய்யலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தடுப்புக் காவலில் வைக்கலாம்.

அப்படிப்பட்ட ஓர் அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங்கப் படுகிறது. இதற்கு நீதித் துறையின் மறுபரிசீலனைகளும் தேவை இல்லை.

இப்போது ஐ.எஸ்.ஏ. என்கிற உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் இல்லை. இருந்தாலும் அதற்குப் பதிலாக ’வந்தேண்டா பால்காரன்’ என்று சொல்லி சோஸ்மா வந்து இருக்கிறது.

அதனால் தான் ஐ.எஸ்.ஏ. என்பதைச் சிலர் Ikut Suka Aku என்று சொல்வார்கள். ஏன் என்றால் இந்தச் சட்டம் அரசாங்கத்திற்கு முழு அதிகாரத்தை வழங்குகிறது.

தங்களுக்கு எந்த ஒரு காரணம் சரியாகப் படுகிறதோ அந்தக் காரணத்தை முன் வைத்து ஒருவரைப் பிடிக்கலாம். பிடித்து கால வரையறை இல்லாமல் அடைத்தும் வைக்கலாம்.

சில நேரங்களில் போதுமான வலுவான சான்றுகள் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் சிலரைக் கைது செய்து காவலில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இப்படியும் சொல்லி நியாயப் படுத்தலாம்.

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் நெருங்கி வருகிறது. மறக்க வேண்டாமே. இப்போது நடந்த அதிரடி நடவடிக்கைகளைப் பார்த்தால்...

நாங்கள் இன்னும் ஒரு "வலுவான" அரசாங்கத்தை வைத்து இருக்கிறோம் என்பதைச் சொல்லிக் காட்டுவதற்கான ஒரு முன்னோட்டமாக அமையலாம். அல்லது அதுவே வரப் போகும் 14-ஆவது பொதுத் தேர்தலுக்கான பின்னூட்டமாகவும் அமையலாம்.

ஒரு சிறுபான்மை இனத்தைப் பலிகடா ஆக்கி பேராண்மை செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

புதிய அரசாங்கம் ஒரு புதிய மலேசியாவை உருவாக்கும் என்று எதிர்பார்த்தோம். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. என்ன செய்வது. இருந்ததும் சரி இல்லை. வந்ததும் சரி இல்லை.

இப்படி எழுதியற்காக, எழுதியவரைக் கொண்டு போய், ரோசாப்பூ சோஸ்மா பூ கொடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.10.2019


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

M R Tanasegaran Rengasamy: பத்து ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இப்போது தான் கண்டுபிடிக்க முடிந்ததா...  இதுநாள் வரை தூக்கத்தில் இருந்தார்களா... நம்ப முடியவில்லை. நஜிப் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்தவர்கள் இன்று நம்மினத்தின் பிரயோகிப்பது பச்சை துரோகம்.

Muthukrishnan Ipoh:
சோஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தாமல் மற்ற குற்றவியல் சட்டங்களில் ஏதாவது ஒன்றைப் பய்ன்படுத்தி இருக்கலாம் என்பதே பலரின் கருத்து... என்ன செய்வது... நாம் சிறுபான்மை இனத்தவர்...

Perumal Thangavelu: தமிழன் ஆளப் பிறந்தவன்... இந்த நாடு வரலாற்றைச் சொல்லும்... இந்திய வம்சாவளி மகாதீர்... இந்த நாட்டை வழி நடத்துவதில் கொஞ்சம் பெருமை. கொஞ்சம் வருத்தம். ஏதோ விட்ட குறை தொட்ட குறை எனது மூத்தோர் ஆண்ட பூமி. இன்று இந்திய வம்சாவளி பயணிக்கிறது..

Muthukrishnan Ipoh: கருத்துகளைப் பதிவு செய்யும் போது மிகவும் கவனமாகப் பதிவு செய்ய வேண்டும்... இனம், சமயம் தொடர்பான கருத்துகளை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது... ஒரு நெருக்கடியான கட்டத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்...

Muthukrishnan Ipoh: ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்... ஆகவே நம்முடைய பதிவுகள் எவரையும் புண்படுத்துவதாக அமையக் கூடாது. அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப் படுவோம். அதே சமயத்தில் நம்முடைய கருத்துகளையும் நியாயமான முறையில் பதிவு செய்வோம். உணர்ச்சிக்கு அடிமைப் பட்டு எதையும் பதிவு செய்ய வேண்டாமே...

Vijikrish Krishnasamy >>> Muthukrishnan Ipoh:  noted sir.

Murugan Rajoo: ஆட்சி மாறினால் SOSMA ரத்து என்று ஒரு கருத்து. அந்தக் கருத்தை ஆதரித்து தமிழர்கள் பிரச்சாரம தொடரும்... SOSMA பெரும் ஆபத்து... ஏன் தமிழர்களுக்கு இத்தனை இக்கட்டு.இத்தனை நாள் தமிழன் என்ற போர்வையில் வாழ்ந்தவர்கள் பலர், ஓடிவிட்டார்கள்... தமிழனைக் காட்டிக் கொடுத்து... நான் தமிழன் அல்ல இந்தியன் என்று கூச்சலிட்டு... சிந்தித்தெழுவாய் தமிழா இனி வாழ்வதற்கு...

Ravindran Tamil Selvan: எத்தனை ஆட்சி மாறினாலும் "மிதிக்க" படுவது தமிழர்கள் மட்டுமே

Dorairaj Karupiah >>> Ravindran Tamil Selvan: ஆமாம் நண்பரே... அவர்கள் கண்களுக்கு நம் இனம் தான் முதலில் தென்படுவது...

Ravindran Tamil Selvan: வஞ்சகமும் துரோகமும் கை கூடிவிட்டது... பிறகு ஏன் நம் கழுத்தை நெரிக்காது...

Ravi Purushothaman: இம்ரான் கான் விடுதலைப் புலிகள் பற்றி பேசியதும் மலேசியாவில் நடப்பதும்... கூட்டிக் கழித்துப் பார்த்தால்...

Kumar Murugiah Kumar's: சிறுபான்மை மக்கள் தொகையில் ஒற்றுமை குறைவு ஐயா!

Sri Kaali Karuppar Ubaasagar: சபாஷ் அண்ணா... சரியான நேரத்தில்... மிகச் சரியான பதிவு... வாழ்த்துக்கள்...

Varusai Omar: அவலை நினைத்து உரலை இடித்த கதைதான் இந்த கைது நாடகம். "அதுஉயிர் நீத்து" பல யுகங்கள் ஆன நிலையில் நம்ம காவல் துறை மிகச் "செம்மையாக" செயல் படுகிறார்கள். அதனால் தான் இந்திரா காந்தியின் கடத்தப்பட்ட 11 மாதக் குழந்தை, கடத்திய மதம் மாறிய தந்தை (இப்போது குழந்தைக்கு 12 வயது?) ஆகக் கூடி இன்னும் தான் தேடோ தேடென்று வலை வீசி தேடிக் கொண்டு இருக்கிறார்கள்! நொண்டிக் குதிரைக்குச் சருக்கியது சாக்கு என்ற கதைதான்!!

Varusai Omar: ஆம் நண்பா முத்து... மிக கவனமாக பதிவுகளை இட வேண்டும் தான்.

Varusai Omar: எதற்கு Sosma சட்டம்? விசாரணை என்று வரச் சொன்னால் வந்து விடப் போகிறார்கள்.

Dorairaj Karupiah: பசுத்தோல் போர்த்திய நரி அன்று கால் கடுக்க காத்து இருந்தாமே... அதற்கு நல்ல பலன்... இந்த நடவடிக்கைக்கு உள் நோக்கம் இருக்கிறது.  நம் இனத்தைக் கண்டால் இளக்காரம்... என்ன செய்வது குச்சி அவன் கையில்...

Varusai Omar >>> Dorairaj Karupiah: அதற்கு காரணம் நம் இனம் தானே... எட்டப்பனா ஆகி விட்டானே நண்பா? எங்கு போய் முட்டிக் கொள்வது?

Vijikrish Krishnasamy: Neengal sholvathu muttrilum unmaiye. (நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே)

Sai Dev: Ehllaavatraiyum kaivittu vittom... (எல்லாவற்றையும் கைவிட்டு விட்டோம்)

Kannan Kannan:
அவன் நாடகம்... இன்னும் மதிமயக்கம்...