ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 டிசம்பர் 2019

ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 1

தமிழ் மலர் - 20.12.2019
சஞ்சலத்தில் வந்தாரைத் தாங்கும் முகம் ஒன்று
சாதிமத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று


ஈப்போ கல்லுமலை ஆலயத்தில் அடிக்கடி ஒலித்துக் கொண்டு இருக்கும் பாடல். அந்தப் பாடலைக் கேட்கும் போது எல்லாம் நெஞ்சத்தின் சன்னதிக்குள் கொஞ்சம் நிம்மதி. கரைந்து போகும் இளமைக்குள் கொஞ்சம் அமைதி. 



இந்தப் பாடலுக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடக்கிறது. மலேசியாவில் வாழும் தமிழர்களில் பலருக்கும் தெரியாத வரலாறு. பலருக்கும் தெரியாத ரகசியங்கள்.

சொல்லப் போனால் சின்னதாகத் தெரியும் பெரிய வரலாற்று ஆவணங்கள். மலாயாத் தமிழர்களின் வரலாற்றில் மறைந்து போன ஒரு காலச்சுவடு என்றுகூட சொல்லலாம்.

ஈப்போவிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து பற்பல ஆண்டுகள் பேர் போட்டுவிட்ட பழம் பெரும் பெரியவர்களுக்குகூட கல்லுமலைக் கோயிலின் ஆழமான வரலாற்றுச் சிறப்புகள் தெரியாமல் இருக்கலாம். அதற்காக எல்லாருக்கும் தெரியாது என்று சொல்லவில்லை. சிலருக்குத் தெரிந்து இருக்கலாம். பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். 



அந்த வகையில் ஈப்போ கல்லுமலைக் கோயிலின் வரலாற்று உண்மைகளை வெளியே கொண்டு வருவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஈப்போவைச் சுற்றிலும் சுண்ணாம்புக் குன்றுகள் (Limestone Hills). அந்தக் குன்றுகளுக்குள் மறைந்து நின்று மாயஜாலம் காட்டும் எண்ணற்ற குகைக் கோயில்கள் (Limestone Caves). அவை எல்லாம் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து பாசறைகளாகிப் போன வரலாற்றுப் பொற்குவியல்கள்.

ஈப்போ தமிழர்களின் வரலாற்றில் இருந்து தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாத மண்வாசனைகளாக மாறிவிட்டன. ஏன் என்றால் அந்தச் சுண்ணாம்புக் குன்றுகளினால் நல்லதும் நடந்து இருக்கின்றன. கெட்டதும் நடந்து இருக்கின்றன.



கம்பார் நகரத்தைத் தாண்டி, ஈப்போ நகரத்திற்கு வருகிறவர்களின் கண்களில் முதலில் தென்படுவது என்ன தெரியுங்களா. ஓங்கி உயர்ந்து ஒய்யாரமாய் முறுவலிக்கும் பச்சை வெள்ளைச் சுண்ணாம்புக் குன்றுகள் தான். சில இடங்களில் அந்தக் குன்றுகள் ஆயிரம் அடிகளையும் தாண்டிப் போய் பெரிய பெரிய வான் அசுரங்களாய்க் காட்சி தருகின்றன.

ஈப்போவுக்கு வரும் பாதையில் பார்க்கும் இடம் எல்லாம் பச்சைப் பசேல் பச்சைக் காடுகள். அவற்றைச் சுமந்து நின்று பச்சைப் பசுமைப் பாயிரம் பாடி நிற்கும் சுண்ணாம்புக் குன்றுகள்.

ஈப்போ மாநகர் எல்லையை அடைந்ததும் வேறு மாதிரியான குன்றுகளைப் பார்க்கலாம். நீண்டு நெளிந்து உயர்ந்து நிற்கும் சுண்ணாம்புக் குன்றுகளைப் பார்க்கலாம். அவற்றைப் பார்க்காமல் கண்டிப்பாக ஈப்போவுக்குள் வர முடியாது. 



ஒன்றுவிட்ட சகோதரர்கள் மாதிரி ஏறக்குறைய 250 குன்றுகள். ஈப்போ நகரப் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 45 குன்றுகள் இருக்கின்றன என்று மலேசியப் புவியியல் ஆய்வுக் கழகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

வடக்கே சிம்மோர் கந்தான் பகுதியில் இருந்து தெற்கே கோலா டிப்பாங் (Kuala Dipang) வரையில் அந்தக் குன்றுகள் பரவிக் கிடக்கின்றன. சரி.

குனோங் செரோ (Gunung Cheroh) குன்றுத் தொடரின் தாழ்வாரத்தில்தான் கல்லுமலைக் கோயிலும் கம்பீரமாய்க் காட்சி அளிக்கிறது. அந்தக் குனோங் செரோ குன்றுத் தொடரின் சுற்றுப் புறங்களில் சிறிய பெரிய குன்றுகள் உள்ளன. அவை எல்லாமே சுண்ணாம்புக் குன்றுகள்தான். 



ஈப்போ கல்லுமலைக் கோயிலின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் இந்தச் சுண்ணாம்புக் குன்றுகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். ஈப்போ கல்லுமலைக் கோயில் வட்டாரத்தில் உள்ள  சுண்ணாம்புக் குன்றுகள் 250 லிருந்து 350 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.

சிம்பாங் பூலாய் பகுதியில் 400 மில்லியன் ஆண்டுகள் பழமையான சுண்ணாம்புக் குன்றுகளும் இருக்கின்றன. சரி. எப்படி இந்தச் சுண்ணாம்புக் குன்றுகளின் வயதைக் கண்டுபிடிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். நல்ல கேள்வி. விளக்கம் கொடுக்கிறேன்.

பொதுவாகவே கற்பாறைகளுக்குள் ஓரகத் தனிமங்கள் இருக்கும். ஆங்கிலத்தில் ஐஸதோப்ஸ் (Isotopes) என்பார்கள். அந்தத் தனிமங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அழுகிச் சிதைந்து போய் இருக்கின்றன என்பதை வைத்து கற்பாறைகளின் வயதைக் கண்டுபிடித்து விடலாம் (radioactive element decay). 



இப்போது நிறைய நவீனமான சாதனங்கள் வந்துவிட்டன. ரேடியா அலைப் பகுப்பாய்வு அல்லது ரேடியோ மெட்ரிக் ஏஜ் டேட்டிங் (Radiometric Age Dating) மூலமாகக் கற்பாறைகளின் வயதைக் கண்டுபிடித்து விட முடியும்.

ஆக ஈப்போ கல்லுமலைக் கோயிலுக்கு அருகில் நீங்கள் பார்க்கும் அந்தச் சுண்ணாம்புக் குன்றுகள் எல்லாமே 35 கோடி ஆண்டுகள் பழமையானவை. இதை மட்டும் இப்போது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அந்தக் குன்றுகள் அதே இடத்தில் கடந்த 35 கோடி ஆண்டுகளாக நின்று நிதானமாகக் கதைகள் பேசிக் கொண்டு இருக்கின்றன. அங்கே பற்பல கானகத்துச்  சித்தர்கள்; கல்லுமலைச் சித்தர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.

கல்லுமலைக் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் இருண்ட குகைகளில் ஓராங் அஸ்லீ மக்களும் நீண்ட காலமாக வாழ்ந்து இருக்கிறார்கள். 



முன்பு காலத்தில் கல்லுமலைக் கோயில் ஒரு சுண்ணாம்புக் குகைக்குள் இருந்தது. அப்போது அங்கே வாழ்ந்த தெமியான் (Temian) ஓராங் அஸ்லீ மக்களும் வழிபாடு செய்து இருக்கிறார்கள்.

கல்லுமலைக் கோயில் தோன்றுவதற்கு பல மாமாங்களுக்கு முன்னாலேயே சுண்ணாம்புக் குகைகள் இருந்தன. அந்த வகையில் அந்தக் குகைகள் வரலாற்றுக்கு முந்திய கதாமாந்தர்களையும் பார்த்து விட்டன. ஊர்பேர் தெரியாத மக்களின் கதைகளையும் கேட்டு விட்டன.

ஆக அந்தக் குகைகளை மறுபடியும் பார்க்கும் போது மனசுக்குள் பெருமை ஏற்படுகிறது. கையெடுத்துக் கும்பிடுவோம்.

சுண்ணாம்புக் குன்றுகளில் நிறைய குகைகள் இருக்கின்றன. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் குகைகளில், குகை மனிதர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளும் கிடைத்து உள்ளன.



லியோனார்ட் விரேய் (Leonard Wray) என்பவர் 1897-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து மலாயாவுக்கு வந்த ஓர் ஆய்வாளர். அவர் ஒரு வரலாற்று நூலை எழுதினார். அதன் பெயர் தி கேவ் டிவெல்லர்ஸ் ஆப் பேராக் (The Cave Dwellers of Perak). அந்த நூலில் குனோங் செரோ குகைகளில் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்ததாக எழுதி இருக்கிறார்.

(சான்று: Leonard Wray, "The Caves dwellers of Perak", Journal of the Royal Anthropological Institute of Great Britain & Ireland, Vol. 1, No. 1, 1897, him. 13-15.) 

1886-ஆம் ஆண்டு கல்லுமலைக் கோயிலுக்கு அருகாமையில் உள்ள குகைகளில் லியோனார்ட் விரேய் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்லுமலைக் கோயில் அங்கே இருந்து இருக்கிறது. எந்த ஆண்டு என்பதையும் பாருங்கள். ஆய்வின் போது ஆதிகால மனிதர்கள் பயன்படுத்திய இரும்புத் துண்டுகளையும் கிளிஞ்சல்களையும் குண்டுமணிகளையும் தோண்டி எடுத்தார். 



தவிர மனித எலும்புகள் உட்புற குகைகளுக்குள் புதைக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அறிந்தார். பின்னர் இவர் பாடாங் ரெங்காஸ் பகுதியில் இருக்கும் குனோங் போண்டோக் குகைகளிலும் ஆய்வுகள் செய்தார். இவர் மேற்கொண்ட அரிய ஆய்வு முயற்சிகளுக்காகப் பின்னர் பேராக் அருங்காட்சியகத்தின் தலைவராக நியமிக்கப் பட்டார்.

சரி. விசயத்திற்கு வருவோம். இந்தக் குகை மனிதர்கள் எங்கே இருந்து வந்தார்கள்; எப்படி வந்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது. இருந்தாலும் பேராக்கில் இருக்கும் கிரிக், லெங்கோங் பகுதியில் இருந்து குடியேறி இருக்கலாம் என்று மட்டும் அனுமானிக்கப் படுகிறது. இன்றுவரை உறுதியாகத் தெரியவில்லை.

இந்த லெங்கோங்கில் தான் 1938-ஆம் ஆண்டில் மலாயாவின் முதல் மனித எலும்புக் கூடு கிடைக்கப் பெற்றது. அதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த எலும்புக் கூட்டுக்கு பேராக் மனிதனின் எலும்புக்கூடு என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.



மறுபடியும் நினைவு படுத்துகிறேன். பேராக் மனிதன் (Perak Man) என்பது மலேசிய வரலாற்று ஆசிரியர்கள் வைத்த பெயர். அது அந்த மனித எலும்புக் கூட்டுக்கு உரிய மனிதனின் பெயராகும். அந்த எலும்புக் கூட்டைக் கண்டுபிடித்த போது அது உட்கார்ந்த நிலையில் இருந்தது. அதன் வயது 40 லிருந்து 45 க்குள் இருக்கும் என்றும் கணக்கிட்டுச் சொல்லப் படுகிறது. அதன் எலும்பு உறுப்புகள் சற்றும் சிதைவுகள் அடையவில்லை. நல்ல நிலையில்தான் இருந்தன.

பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது. அதற்கு அருகாமையில் 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தப் பெண்ணின் எலும்புக் கூட்டை 2004-ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்தார்கள். முதல் எலும்புக்கூடு 1938-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

தீபகற்ப மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக்கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை. சரவாக் மூலு குகையில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக்கூடு இருக்கிறதே அது இன்னும் மிகப் பழமையானது. அதைப் பற்றி பின்னர் தெரிந்து கொள்வோம்.

லெங்கோங்கில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடுகள், ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் இனமான ஆஸ்திரேலோ மெலனசோயிட் (Australomelanesoid) எனும் இனத்துக்கு உரியது என்று ஆய்வாளர்கள் உறுதியாகச் சொல்கின்றனர்.

இந்த இனத்தைச் சார்ந்த மனிதர்கள் இப்போது பசிபிக் மாக்கடல் தீவுகளில் வாழ்கின்றனர். மலேசியாவில் இருக்கும் மலேசியப் பழங்குடியின மக்களும் அந்த இனத்தைச் சார்ந்தவர்கள்தான்.

(தொடரும்)

சான்றுகள்:

1. I.H.N. Evans, "A Rock Shelter on Gunong Cheroh, Perak", FMS, Vol. 9 Part 4, 1922, him. 267-270.)

2.  P.D.R. William Hunt, 'Note on archaeology from the air in Malaya,' JMBRAS, Vol. 21, Part 1, 1949, him. 150-158.)