சிம்மோர் அகத்தியர் வெண்கலச் சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிம்மோர் அகத்தியர் வெண்கலச் சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஜூன் 2020

சிம்மோர் அகத்தியர் வெண்கலச் சிலை

1962-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் (Chemor Valley), ஜாலோங் (Jalong, Chemor, Perak, Malaysia) எனும் இடத்தில் ஓர் அகத்தியர் சிலையைக் கண்டு எடுத்தார்கள். 



அதன் எடை 34 பவுண்டுகள் (15.4 கிலோ கிராம்). உயரம் 1 அடி எட்டரை அங்குலம். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்கலச் சிலை.

இந்தச் சிலைதான் கங்கா நகர சிற்றரசின் வரலாற்றில் ஓர் ஆழமான பிடிமானத்தைக் கொடுத்து உள்ளது. கங்கா நகரம் என்பது இந்து மதம் சார்ந்த ஓர் அரசாக இயங்கி இருக்கிறது என்பதை உறுதி படுத்தியது. 




கி.பி. 1025-ஆம் ஆண்டிற்குப் பின்னர் கங்கா நகரம் ஆட்சி செய்த பகுதிகளின் அருகாமையில் சின்னச் சின்ன ஆளுமைகள் உருவாகின. அவை புத்த மதம் சார்ந்தவை.

சீனாவில் இருந்து வந்த சீனர்கள் கங்கா நகரப் பகுதிகளில் புத்த மதத்தைப் பரப்பினார்கள்.

புத்த மதம் வருவதற்கு முன்னர்; கங்கா நகர சிற்றரசு இந்து மதம் சார்ந்த அரசாக இயங்கி வந்து உள்ளது. அந்தக் கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கில் இந்து கோயில்கள் இருந்து உள்ளன.

1900-ஆம் ஆண்டுகளில் கிந்தா பள்ளத்தாக்கில் மேடுகள் காடுகள் அழிக்கப் பட்டன. ஈய லம்பங்கள் தோன்றின. ஈயம் விளையாடினார்கள். 




கிந்தா பள்ளத்தாக்கின் கானகங்களில் இருந்த கோயில்களும் மண்ணுக்குள் புதந்து போய் இருக்கலாம். அந்தக் கோயில்களில் இருந்த சிலைகளும் மண்ணுக்குள் புதைந்து போய் இருக்கலாம்.

சிம்மோர் பள்ளத்தாக்கின் பல இடங்கள் ஈயம் தோண்டி எடுப்பதற்காக,  அப்போதைய மலாயா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டு இருந்தன.

சிலை கிடைத்த நிலம் தே செங் சியூ (Teh Seng Chew) என்பவருக்குச் சொந்தமான நிலமாகும். ஈயம் தோண்டுவதற்காகக் கிடைத்த நிலம். இவர் சுங்கை சிப்புட் நகரைச் சேர்ந்தவர்.

அந்தச் சீனருக்கு கிடைத்த இடத்தில் ஈயம் இல்லை என்று பின்னர் தெரிய வந்தது. அதனால் அந்த இடத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. அதற்காக நிலத்தைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள்.




ஒரு டிரக்டர் மூலமாக நிலத்தில் மண்டி இருந்த காட்டுப் புதர்களை அழிக்கும் போது அந்த அகத்தியர் சிலை தென்பட்டு இருக்கிறது. கறுமை நிறத்தில் இருந்த அந்தச் சிலையைப் பார்த்து அனைவரும் பிரமித்துப் போனார்கள்.

அதன் பின்னர் தொழிலாளர்கள் வேலை செய்ய விருப்பப்படவில்லை. அந்தச் சிலையை ஓர் அபச குணத்தின் அறிகுறி என நினைத்தார்கள்.

அந்தச் சிலையைப் பற்றிய செய்தி நிலத்தின் சொந்தக்காரருக்குப் போய் இருக்கிறது. அப்போது அவர் சுங்கை சிப்புட்டில் இருந்தார்.

அவரும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்.  அந்தச் சிலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கும் போது டத்தோ (துன்) சம்பந்தன் அவர்களின் நினைவு வந்தது.

அப்போது அவர் ஓர் அமைச்சர். கோலாலம்பூரில் இருந்தார். அந்தச் சிலை கோலாலம்பூருக்கு எடுத்துச் செல்லப் பட்டது.

துன் சம்பந்தன் அவர்கள் அந்தச் சிலையைப் படம் பிடித்து மலேசிய அரும் காட்சியகங்களின் இயக்குநருக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படங்கள் உலகளாவிய நிலையில் நான்கு வல்லுநர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டன. அவர்களின் விவரங்கள்:

1. டாக்டர் கிரிஸ்வோல்ட் - Dr. A.B. Griswold of Thonburi, Thailand and the Breezewood Foundation, Maryland, U.S.A.

2. சி. சிவராமமூர்த்தி - Shri C. Sivaramamurthi, Keeper of the National Museum, Janpath, New Delhi.

3. டாக்டர் டி காஸ்பாரிஸ் - Dr. de Casparis from the School of Oriental and African Studies, University of London

4. டாக்டர் பி.எச். போட் - Dr. P.H. Pott, the Director of the Rijksmuseum, Leiden, Netherlands

அந்தச் சிலை 11-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிலை என்பதை நால்வரும் உறுதிபடுத்தினார்கள். அதன் மூலமாக தீபகற்ப மலாயாவின் மேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றி இருக்கிறார்கள் என்று உறுதி செய்யப்பட்டது.

டாக்டர் கிரிஸ்வோல்ட் (Dr. A.B. Griswold) கருத்துகள்: அந்த ஜாலோங் வெண்கலச் சிலை (Jalong Bonze) மலாயாவில் செய்யப் பட்டு இருக்க வேண்டும். அந்தச் சிலை கிடைத்த இடத்திற்கு மிக அருகாமையில் தான் அந்தச் சிலையும் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

7-ஆம் - 9-ஆம் நூற்றாண்டு காலத்தில் செய்யப்பட்டு இருக்கலாம். இந்தச் சிலைக்கும் ஸ்ரீ விஜய பேரரசில் கண்டு எடுக்கப்பட்ட சிலைகளுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன.

சி. சிவராமமூர்த்தி (C. Sivaramamurthi): இது அகத்திய முனிவரின் சிலை.

டாக்டர் டி காஸ்பாரிஸ் (Dr. de Casparis): அகத்திய முனிவரின் தோற்றம் என்பது மிகச் சரி. ஆனாலும் சிலையின் உதடுகள் ஓர் இந்தோனேசியர் அல்லது ஒரு மலாய்க்காரரின் உதடுகளின் சாயலில் உள்ளன. ஒரு ரிஷியின் தோற்றமும் உள்ளது. மஜபாகித் பேரரசில் காணப் பெற்ற சிலைகளுக்கு ஒத்துப் போகிறது.

டாக்டர் பி.எச். போட் (Dr. P.H. Pott): இந்து ஜாவானிய வெண்கலைச் சிலைகளில் சிவகுரு (Siva-Guru) சிலைகள் உள்ளன. அந்தச் சிலைகளில் ஒன்றைப் போல ஜாலோங் வெண்கலச் சிலை அமைந்து உள்ளது.

என்னுடைய தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவு: சிம்மோர் ஜாலோங் வனக் காப்பகப் பகுதியின் மலை அடிவாரத்தில் காடுகள் நிரைந்த சுண்ணாம்புக் குகைகள் உள்ளன. அந்தப் பகுதியில் ஓராங் அஸ்லி மக்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள். 

அவர்களை விசாரித்துப் பார்த்ததில் காட்டுக்குள் ஒரு பெரிய கோயில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களின் மூதாதையர்கள் தலைமுறை தலைமுறையாக அந்தக் கோயிலைப் பற்றி சொல்லி வந்து இருக்கிறார்கள். காட்டுப் பகுதியில் எங்கோ ஓர் இடத்தில் ஒரு பழமையான இந்து கோயில் உள்ளது.

அத்துடன் ராயல் ஆசியாட்டிக் வரலாற்றுப் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அவற்றுள் Royal Asiatic Society. Vol. XVIII 1940 தொகுதியில் தான் இந்தக் கோயிலைப் பற்றிய விவரங்கள் உள்ளன.

அந்தப் பகுதிக்குச் சென்று களப்பணியில் ஈடுபட முடிவு செய்து உள்ளேன்.
போதுமான அனுமதிப் பத்திரங்கள் தேவை. ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்.

Sources:
1. Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society. Vol. XVIII 1940, Singapore Printers Limited 1940.

2. Art, archaeology and the early kingdoms in the Malay Peninsula and Sumatra: c.400-1400 A.D. Vol: 1. Nik. Hassan Shuhaimi. (Thesis submitted for the degree of Doctor of Philosophy, University of London. School of Oriental and African Studies, May, 1984)

3.. "Treasure Trove Among the Tapioca: A Tenth Century Malayan Bronze”, MH, 8, 1 (1962) 11-13;

4. A.B. Griswold, ”The Jalong Bronze”, FMJ, 7, 1962, 64-66.