கறுப்பு தாஜ்மகால் - 8 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறுப்பு தாஜ்மகால் - 8 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 8

தமிழ் மலர் - 16.06.2019

ஷா ஜகானின் மூத்த மகன் தாரா. புதிதாக ஒரு மாளிகையை ஆக்ராவில் கட்டி இருந்தார். அதைக் காட்டுவதற்கு தந்தையார் ஷா ஜஹான், அக்கா ஜகனாரா, தம்பி தங்கைகள் அனைவரையும் அழைத்து இருந்தார். வந்தவர்கள் அனைவரும் ஒவ்வோர் அறையாகப் பார்த்து வந்தார்கள். மகிழ்ச்சி அடைந்தார்கள்.



ஓர் அறையில் முழுக்க முழுக்கப் பெரிய நிலைக் கண்ணாடிகள். அந்த அறைக்குள் வரும்படி எல்லோரையும் தாரா அழைத்தார். எல்லோரும் சென்று கண்ணாடி பிம்பங்களைப் பார்த்து மகிழ்ந்தார்கள். ஆனால் ஒளரங்கசிப் மட்டும் அறையின் வாசலிலேயே உட்கார்ந்து விட்டார். உள்ளே போகவில்லை.

அதைப் பார்த்து ஷா ஜகான் சற்றே கோபம் அடைந்தார். ஒளரங்கசிப்பைப் பார்த்து 'உன் மதிப்பையும் மரியாதையையும் நீயே குறைத்துக் கொள்கிறாய். இப்படி இந்த மாதிரி வெளியே தரையில் உட்கார்ந்தால் பார்ப்பவர்கள் என்ன சொல்ல மாட்டார்கள். நீ ஓர் இளவரசன். அதாவது உனக்குத் தெரியுமா என்று கேட்டார்.

அதற்கு ஒளரங்கசிப் இப்படிச் சொன்னார். ‘காரணம் இருக்கிறது. இல்லாமல் இல்லை. அதை இப்போது என்னால் சொல்ல முடியாது. நேரம் வரும். அப்போது கண்டிப்பாகச் சொல்வேன். சரி. பிறகு வந்து உங்களைப் பார்க்கிறேன்' என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டார்.



உடனே குறுக்கிட்ட தாரா 'பார்த்தீங்களா அப்பா. நீங்க இந்த நாட்டின் மாமன்னர். உங்களையே அவமானப் படுத்தி விட்டுப் போகிறான் ஒளரங்கசிப். அவனுக்கு உங்க மீது கொஞ்சம்கூட மாரியாதை இல்லை' என்று கூறிய தாரா, ஷா ஜகானின் கோபத்தை மேலும் தூண்டி விட்டான்.

ஷா ஜகானுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறிவிட்டது. ’மரியாதை தெரியாத அவன் இனி என்னுடைய அரசவைக் கூட்டத்திற்கு வரக்கூடாது.  நீங்களே அவனிடம் சொல்லி விடுங்கள்' என்று தடாலடியாக ஒரு கட்டளை போட்டார் ஷா ஜகான்.

விசயத்தைக் கேள்விப் பட்ட ஒளரங்கசிப்பிற்கு மிக்க வருத்தம். தாரா மீது சொல்லவே வேண்டாம். எக்கச்சக்கமான கோபம். அடுத்து வந்த ஏழு மாதங்களுக்கு அரசவைக் கூட்டங்களுக்கு ஒளரங்கசீப் போகவில்லை. போக முடியாத நிலை.

இது இப்படி இருக்க ஒரு நாள் தன் சகோதரி ரோஷனாராவிடம் தான் ஏன் அந்தக் கண்ணாடி அறைக்குள் போகாமல் வெளியே உட்கார்ந்து இருந்தார் எனும் இரகசியத்தைச் சொன்னார்.





'அக்கா... அன்றைக்குத் தாரா நம் எல்லோரையும் அந்த அறைக்குள் அழைத்தான் இல்லையா. அந்தச் சமயத்தில் அவன் மட்டும் அறைக்குள் போவதும் வருவதுமாக இருந்தான். நீங்கள் யாரும் அதைக் கவனிக்கவில்லை. நான் கவனித்தேன். அந்த அறையில் ஒரே ஒரு வாசல்தான் இருந்தது. அவனுடைய செயல் ஒரு மாதிரியாக ஒரு விநோதமாக இருந்தது. அவனுடைய செயல் எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

நம் எல்லோரையும் அந்த அறைக்குள் வரவழைத்து அப்படியே கதவை அடைத்து விடுவது; அந்த அறைக்குள் நம் எல்லோரையும் போட்டு பூட்டி வைத்து அப்படியே சாகடிப்பது. இது அவனுடைய திட்டமாக இருக்கலாம். சொல்ல முடியாது. என் உள்மனம் சொல்லியது. அதுதான் என்னுடைய சந்தேகம்.

அதனால் தான் நான் வெளியே ஒரு காவல்காரனைப் போல உட்கார்ந்து இருந்தேன். அப்பா அதைத் தவறாகப் புரிந்து கொண்டார். என்னை அவமானப் படுத்தியும் விட்டார் என்று ஒளரங்கசிப் மனம் நொந்து போய் சொன்னார்.



ஔரங்கசிப் சொன்னது ரோஷனாரா மூலமாக ஷா ஜகானின் காதுகளுக்கு எட்டியது. அவர் ஒளரங்கசிப்பை நம்பினாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் தாராவின் மீது இருந்த பாசத்தை மட்டும் கொஞ்சம் கூடக் குறைத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒளரங்கசீப்பின் மீது இருந்த கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் குஜராத்தின் கவர்னர் பதவியை ஒளரங்கசீப்பிற்கு கொடுத்தார். இது 1645-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி.

குஜராத்திலும் ஒளரங்கசிப்பின் திறமையான நிர்வாகம் நன்றாகத் தெரிய வந்தது. அந்த நேரத்தில் பால்க், பாடக்சான் போன்ற பாரசீகப் பகுதிகள் மொகலாயர்களின் பிடியில் இருந்து கைநழுவும் நிலையில் இருந்தன.

அப்போது அந்தப் பகுதிகளின் கவர்னராக ஷா ஜகானின் நான்காவது மகன் முராட் இருந்தார். இவர் ஒளரங்கசிப்பின் தம்பி ஆகும். முராட்டிற்குச் சரியான நிர்வாகத் திறமை இல்லை என்பது தான் அதற்குக் காரணம். அந்தச் சமயத்தில் மொகலாய எதிரிகளின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் முராட் திணறிக் கொண்டு இருந்தார்.



இதைப் பார்த்த ஷா ஜகான், முராட்டை பதவியில் இருந்து நீக்கினார். ஒளரங்கசிப்பிடம் பாரசீகப் பகுதிகளின் பொறுப்பை ஒப்படைத்தார். ஒளரங்கசிப்பின் மூலமாக அந்தப் பகுதிகள் மீண்டும் மொகலாயர்களின் ஆட்சிக்குள் வந்தன.

சரி. இதற்கு முன்னர் தக்காணத்தின் கவர்னராக ஒளரங்கசிப் பதவி வகித்தார். தெரிந்த விசயம். சொல்லி இருக்கிறேன். ஆனாலும் கட்டளைகள் எல்லாம் ஷா ஜகானிடம் இருந்துதான் வந்தன. ஷா ஜகானை மிஞ்சி எதையும் செய்ய முடியாத நிலை.

தன்னிடம் முழு அதிகாரம் இருந்தால் மட்டுமே வருமானத்தைப் பெருக்கிக் காட்ட முடியும்; முழுமையாக நிர்வாகம் செய்ய முடியும் என்பது ஒளரங்கசிப்பின் எண்ணம் எதிர்ப்பார்ப்பு.
ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பைக் கண்டு கொள்ளாமல் ஷா ஜகான், ஒளரங்கசிப்பை ஒதுக்கி வைத்தே வந்தார். முழு அதிகாரத்தையும் ஒளரங்கசிப்பிடம் கொடுக்கவில்லை. அது தாராவின் தூண்டுதலாக இருக்கலாம்.

ஷா ஜகானுக்கும் ஒளரங்கசிப்பிற்கும் இடையே நிலவிய பனிப் போர் இப்படித்தான் நீண்டு கொண்டே போனது. ஷா ஜகானின் வெறுப்பு ஒளரங்கசிப்பிடம் மட்டும் இல்லை. அவருடைய பிள்ளைகள் மீதும் இருந்தது. ஆனால் தாராவின் பிள்ளைகள் மீது தன்னுடைய பாசத்தைக் கொட்டித் தீர்த்தார்.

மறுபடியும் ஷா ஜகானின் பிள்ளைகளைப் பற்றி சொல்கிறேன். ஷா ஜகானின் மூத்த மகள் ஜஹனாரா பேகம். அடுத்து மூத்த மகன் தாரா ஷீகோ. மூன்றாவது மகன் ஷா ஷூஜா. நான்காவது மகள் ரோஷனாரா பேகம். ஐந்தாவது மகன் ஒளரங்கசிப். ஆறாவது மகன் முராட் பட்ச். கடைசி மகள் கௌகாரா பேகம். சரி. 



இந்தக் கட்டத்தில் கோல்கொண்டா பிரச்சினைக்கு வருகிறோம். கோல்கொண்டா சுல்தான் ஆண்டு தோறும் மொகலாய அரசுக்கு வரி கட்டி வந்தார். கோல்கொண்டா மொகலாய அரசின் கீழ் இயங்கி வந்தது. திடீரென்று கோல்கொண்டா சுல்தான் வரி கட்டுவதை நிறுத்தி விட்டார். 'ஏன் வரி கட்டவில்லை' என்று ஒளரங்கசிப் கோல்கொண்டா சுல்தானுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்திற்குப் பதில் எதுவும் வரவில்லை. 'கட்ட வேண்டிய வரித் தொகையில் பாதியாவது கட்டவும். கட்ட முடியவில்லை என்றால் அதற்குச் சமமாக யானைகளையாவது அனுப்பி வைக்கவும்' என்று ஒளரங்கசிப் மேலும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தார். அதற்கும் பதில் வரவில்லை.

கோல்கொண்டாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு காலத்தில் சாளுக்கிய மன்னர்கள் தென் இந்தியாவின் வட பகுதியை ஆண்டு வந்தார்கள். இது ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.

சோழர்கள் தென் இந்தியாவின் தென் பகுதியை ஆட்சி செய்து வந்தார்கள். இவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள். இந்தச் சண்டைகள் பெரிதாகிப் போய் கடைசியில் ஒரு பயங்கரமான போராக வெடித்தது. அதுதான் சாளுக்கிய-சோழப் போர். கி.பி. 992-ஆம் ஆண்டில் நடந்தது. சோழர்களுக்குத் தலைவராகச் இராஜா ராஜ சோழன். சாளுக்கியர்களுக்குத் தலைவராகச் சத்தியாசிரயன் எனும் சாளுக்கிய மன்னன். 



இதில் சாளுக்கியர்கள் தோற்றுப் போனார்கள். இந்தச் சமயத்தில் சாளுக்கியர்களின் பிரதிநிதியாக இரண்டாம் அம்மா என்கிற ஒரு சிற்றரசர் இருந்தார். அவர் தனக்கு என்று காக்காத்தியா எனும் ஒரு தனி நாட்டை உருவாக்கிக் கொண்டார். அதன் தலைநகரம் வாரங்கல்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஹைதராபாத் நகரைச் சுற்றி இருந்த நிலப் பகுதிதான் அந்தக் காக்காத்தியா நாடு. மலேசியாவின் பேராக் மாநில அளவிற்குப் பெரியது.

அதன் அரசர்கள்தான் கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்கள். இந்தக் கோட்டைக்குப் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது.

கி.பி.1143-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. ஓர் இடையன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருக்கும் போது ஓர் அழகான சிலையைக் கண்டு எடுத்தான். அந்தச் சிலையைக் கொண்டு போய் மன்னரிடம் கொடுத்தார்கள். அதன் அழகில் மயங்கிப் போன மன்னர், சிலை கண்டு எடுக்கப் பட்ட இடத்திற்கு கோலா கொண்டா என்று பெயரைச் சூட்டினார்.

கோலா கொண்டா என்றால் ஆடு மேய்க்கும் ஓர் இடையனின் குன்று என்று பொருள். அந்த இடத்தின் பழைய பெயர் மங்களவரம். இப்படித்தான் கோலா கொண்டா என்பது கோல்கொண்டா எனும் பெயராக மாறி சரித்திரம் படைத்தது.

ஒரு முக்கிய விசயம். கட்டுரை கொஞ்சம் நீளமாகப் போகிறதே என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். ஷா ஜகானை அவருடைய மகன் ஔரங்கசிப் ஏன் கைது செய்தார். ஆக்ரா கோட்டையில் ஏன் அடைத்து வைத்தார் என்பதே நம்முடைய இலக்கு. அதை நோக்கித் தான் நாம் போய்க் கொண்டு இருக்கிறோம். ஆக அதற்கான காரணங்களைச் சரியாகச் சொல்லியாக வேண்டும் இல்லீங்களா.



சரி. மொகலாய அரசின் கீழ் சந்திரகிரி எனும் ஒரு சமஸ்தானம் ஆந்திராவில் இருந்தது. சமஸ்தானம் என்றால் முடியாட்சி. அந்தச் சமஸ்தானத்தை ரங்க ராயலு என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவர் ஒளரங்கசிப்புக்கு ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தார்.

சந்திரகிரி என்பது பழைய விஜயநகரப் பேரரசின் ஒரு சிறிய பகுதி. கிருஷ்ணா நதிக்கு அருகில் அமைந்து இருந்தது. கோல்கொண்டா, பிஜப்பூர் சுல்தான்கள் இருவரும் ரங்க ராயலுவின் அரசைக் கைப்பற்றத் திட்டமிட்டு வந்தார்கள். அவர்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றினால் மொகலாயப் பேரரசுக்கு என்றைக்கும் கடமைப்பட்டு கட்டுப்பட்டு நடப்பதாக உறுதி கூறினார்.

ரங்க ராயலுவிற்கு உதவி செய்யலாம் என்று ஒளரங்கசிப் நினைத்துக் காய்களை நகர்த்தினார். அந்தச் சமயத்தில் 'ரங்க ராயலுவின் சந்திரகிரியைக் கைப்பற்று’ என்று ஷா ஜகானின் கட்டளை கோல்கொண்டா, பிஜப்பூர் சுல்தான்களுக்குப் போகிறது. ஒளரங்கசீப் நினைத்தது வேறு; நடப்பது வேறு. இப்படி ஷா ஜகான் ஏறுக்கு மாறாகச் செய்து வந்த செயல்களினால் பொறுமை இழந்தார் ஒளரங்கசீப்.

'கவர்னர் என்பது சும்மா பெயர் அளவில் மட்டும்தான் பதவி. மற்றபடி முழுமையான அதிகாரம் எதுவும் ஒளரங்கசிப்பின் கையில் இல்லை. எதையும் அவரால் தன்னிச்சையாக முடிவு எடுத்துச் செய்ய முடியவில்லை. அப்படியே செய்தாலும் ஏகப்பட்ட தடைகள். ஷா ஜகான் என்னதான் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கு மேலும் பணிந்து போவது என்பது நல்லது அல்ல என்று ஒளரங்கசிப் முடிவு எடுத்தார்.

அப்படி முடிவு எடுத்த ஒளரங்கசிப் முதலில் கோல்கொண்டாவைக் கைப்பற்ற படைகளோடு கிளம்பினார். இது ஷா ஜகானை மீறிச் செய்யும் செயலாகும். ஷா ஜகானைப் பகைத்துக் கொள்ளும் செயல். இப்படித்தான் அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை வந்தது. 



1657-ஆம் ஆண்டு ஒளரங்கசிப் கோல்கொண்டாவைக் கைப்பற்றினார். அதற்குப் பின் பிஜப்பூர் மீதும் போர் தொடுத்தார். அப்போது ஔரங்கசீப்பிற்கு உதவியாக இருந்தவர் யார் தெரியுமா. அவர்தான் மராட்டிய வீரர் சிவாஜி. பிஜப்பூரைக் கைப்பற்றும் நேரம். டில்லியில் இருந்து ஒரு செய்தி வந்தது.

ஷா ஜகானின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பதே அந்தச் செய்தி. வேறு வழி இல்லாமல் ஒளரஙகசிப் தன் படைகளுடன் பிஜப்பூரை விட்டு வெளியேறினார்.

அந்தச் சமயத்தில் ஷா ஜகான் இறந்து விட்டார் என்கிற வதந்தி இந்தியா முழுமையும் காட்டுத் தீயைப் போல பரவியது. இனிமேல்தான் ஷா ஜகானின் தலையெழுத்தே மாறப் போகிறது.

ஷா ஜகான் இறந்து விட்டார் என்கிற செய்தி இந்தியாவையே ஓர் உலுக்கு உகுக்கியது. உண்மையில் அவர் இறக்கவில்லை. அது ஒரு வதந்தி. ஷா ஜகானின் மூத்த மகன் தாராவினால் தெறிக்க விட்ட வதந்தி.

தன் தந்தையார் ஷா ஜகானுக்குப் பிறகு மொகலாயப் பேரரசை எப்படியாவது தன் வசம் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் தாரா போட்டத் திட்டம். தாரா கிளப்பி விட்ட வதந்தி.



எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஷா ஜகானின் மூன்றாவது மகன் ஷா ஷூஜா (வயது 41), தன்னை வங்காளத்தின் அரசராக அறிவித்துக் கொண்டார்.

வங்காளம் என்பதை வங்காள தேசம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். வங்காளம் என்பது வேறு. வங்காள தேசம் என்பது வேறு.

முன்பு காலத்தில் இந்தியாவில் இருந்த ஒரு நிலப்பகுதி தான் பஞ்சாப் வங்காளம். தக்காணத்திற்கு மேலே வடக்கே இருக்கிறது. நம் தீபகற்ப மலேசியாவில் பாதிக்கும் பெரியது. இப்போது பாகிஸ்தானின் ஒரு பகுதி.

இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கித் தருகிறோம் என்று சொல்லிப் பாக்ஸ்தானுக்குத் தானம் செய்யப் பட்ட புண்ணிய பூமிதான் இந்த வங்காளம். இந்த மாதிரி இந்தியாவின் மண்ணையும் பொன்னையும் எவ்வளவோ தானம் செய்து விட்டார்கள். இனிமேல் செய்யாமல் இருந்தால் சரி.



சரி. நம்ப கதைக்கு வருவோம். ஷா ஜகானின் மூன்றாவது மகன் ஷா ஷூஜா. தன்னுடைய பார்வையில் இருந்த வங்காளத்திற்குத் தன்னை முழு அரசராக அறிவித்து அதன் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். தன் பெயரிலேயே புதிய நாணயங்களை வெளியிட்டார். ஆக்ராவை விரைவில் கைப்பற்றப் போவதாகவும் அறிவித்தார். 

இது தகப்பனார் ஷா ஜகானைக் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஷா ஜகானின் மூத்த மகன் தாராவின் படைகளும், டில்லியில் இருந்த ஷா ஜகானின் படைகளும் வங்காளம் நோக்கிச் சென்றன. வங்காளத்தில் நடந்த போரில் ஷா ஷூஜா அடக்கி ஒடுக்கப் பட்டார். இனிமேல்தான் ஔரங்கசிப் தன் சுயரூபத்தைக் காட்டப் போகிறார். தொடர்ந்து படியுங்கள்.

(தொடரும்)