சாகுவாரோ கற்றாழை கேமரன் மலையில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாகுவாரோ கற்றாழை கேமரன் மலையில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 செப்டம்பர் 2019

சாகுவாரோ கற்றாழை கேமரன் மலையில்

சாகுவாரோ (Saguaro) மலர். கற்றாழை இனத்தைச் சேர்ந்த மலர். அமெரிக்கா அரிசோனா பாலவனத்தில் காணப்படும் அரிதிலும் அரிதான மலர். தற்சமயம் அரிசோனா மாநிலத்தின் மாநில மலராகப் பிரகடனம் செய்து இருக்கிறார்கள்.



இது பாதுகாக்கப்பட்ட அமெரிக்கத் தேசியத் தாவரம். அறிவியல் பெயர் Carnegiea gigantea. 60 அடி உயரம் வரை வளரும். 300 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது.

இந்தக் கற்றாழையைக் கேமரன் மலையில் முதலில் பயிர் செய்து பார்த்தார்கள். அமெரிக்கா அரிசோனாவில் இருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரவே மிகவும் சிரமப் பட்டுப் போனார்கள். 1970-களில் நடந்த நிகழ்ச்சி.

அரிசோனா அரசாங்கமும் மலேசிய அரசாங்கமும் வெள்ளைப் பேபரில் கையெழுத்துப் போட்ட பிறகு தான் கொண்டு வரப்பட்டது. 




முதலில் ரிங்லெட் பகுதியில் வளர்த்துப் பார்த்தார்கள். ஆரம்பத்தில் ஓகே. போகப் போக இந்தச் சாகுவாரோ கற்றாழை, மாவீரர் செகுவாரா மாதிரி அடம் பிடிக்கத் தொடங்கி விட்டது.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐந்தே ஐந்து அடி வளர்ந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் சொல்வது அதாவது அசல் சாகுவாரோ கற்றாழை. அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்றாழை.

மற்றபடி கேமரன் மலையில், டூப்ளிகேட் சாகுவாரோ கற்றாழைகள் நிறையவே உள்ளன. தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் கற்றாழைகள் வழுக்கி வழுக்கி விழுகின்றன.




அமெரிக்காவில் இந்தக் கற்றாழையை வெட்டி எடுப்பதும் குற்றம். தோண்டி எடுப்பதும் குற்றம். இருந்தாலும் அவ்வளவு சுலபத்தில் தோண்டி எடுத்துவிட முடியாது. இதன் எடை சமயங்களில் 500 கிலோ கிராம் வரை தாண்டிப் போகும். அதாவது அரை டன். எப்படி உங்கள் வசதி.

அப்படித் தான் 1982-ஆம் ஆண்டு. டேவிட் குருண்ட்மேன் என்பவர் ஒரு பாலைவனத்தில் இந்த மாதிரி ஒரு கற்றாழையைத் தோண்டி இருக்கிறார். அது ஒரு பெரிய கற்றாழை. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது மாதிரி தான்.

அதன் அடிப்பாகத்தைத் தோண்டிக் கொண்டு இருக்கும் போது, அதன் கிளைப் பாகம் ’படார்’ என்று உடைந்து ’டபார்’ என்று அவர் மேலேயே விழுந்து இருக்கிறது. கற்றாழைக்கு அவர் மீது சரியான கோபம் வந்து இருக்கலாம். சொல்ல முடியாது. ஆள் அபேஸ்.


அதன் எடை 230 கிலோ. அவரையும் நசுக்கி அவரின் காரையும் நசுக்கிப் போட்டு விட்டது. மரத்தின் கிளை விழுந்தே மனுசன் செத்துப் போகிறான் என்றால் மரம் விழுந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும். வெங்காயச் சட்ணி.

தொட்டால் சிணுங்கி என்று சொல்வார்களே அந்த மாதிரி செல்லமாக வளரும் கற்றாழை. மெதுவாகத் தான் வளரும். வெப்பம் குறைந்தாலும் இறந்து விடும். கூடினாலும் இறந்து விடும்.

கடல் மட்டத்தில் இருந்து 4000 அடி உயரத்தில் நன்றாக வளரும். சரியான தட்ப வெப்ப நிலை தேவை. அது வளரும் காலத்தில் முதல் 75 ஆண்டுகள் வரை அதற்கு கிளைகள் முளைக்காது.

மலேசியாவில் இணையம் மூலமாக (லசாடா) 258 ரிங்கிட்டிற்கு ஆர்டர் செய்து  வாங்கலாம். ஆனால் அது அசலானதா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏன் என்றால் அசல் கற்றாழைக்கு அமெரிக்காவில் தடை செய்து இருக்கிறார்கள்.

இந்தக் கற்றாழையை மரபணு மாற்றங்கள் மூலமாகச் சின்னதாக வடிவம் செய்து விட்டார்கள். தைவான் நாட்டில் முதலில் செய்து இருக்கிறார்கள். அதையே சீனா கடத்திக் கொண்டு போய் பெரிய அளவில் காசு பார்த்துக் கொண்டு இருக்கிறது.




மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட கற்றாழைகளை, கேமான் மலையில் தானா ராத்தா, பிரிஞ்சாங் பகுதியில் விற்கிறார்கள். அங்கே என்ன... மலேசியா பூராவும் விற்கிறார்கள்.  விலை 20 ரிங்கிட்.

எல்லாமே மரபணு மாற்றங்கள் செய்யப் பட்டவை. ஓரிஜினல் உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது. 




மரபணு மாற்றங்கள் என்று சொல்லும் போது ‘எதைத் தான் விட்டு வைத்தார்கள்’ எனும் பொன் மொழி வருகிறது. பணம் என்று வந்தால் மனுசனையே மடித்துச் சுருட்டி... சுருட்டு மாதிரி Buy one Free One என்று விற்று விடுவார்கள்.

நல்ல வேளை. அமெரிக்கா கற்றாழைகள் செய்த புண்ணியம். அரசியல்வாதிகள் கண்களில் படவில்லை. மலேசிய அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை. ரொம்ப ரொம்ப நல்லவர்கலைப் பற்றி விமர்சனம் செய்வது பாவம் இல்லையா?

சான்றுகள்:

1. The IUCN Red List of Threatened Species". IUCN Red List of Threatened Species.

2. (https://en.wikipedia.org/wiki/Saguaro)

3. Life Cycle of the Saguaro" (PDF). Arizona-Sonora Desert Museum.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.09.2019
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
M R Tanasegaran Rengasamy இச்செடியை நட்டவனின் எத்தனையாவது தலைமுறையைச் சார்ந்தவன். அதன் அஸ்தமக் காலத்தைப் பார்க்க இயலும். சாகுவாரா என்பதற்குப் பதிலாக சாகாவேரா எனப் பெயரிட்டு இருக்கலாம்.
 
Muthukrishnan Ipoh சாகாவேரா... நன்றாக இருக்கிறது ஐயா... கற்றாழைகளில் இப்போது மினி மினி கற்றாழைகள் எல்லாம் வந்துவிட்டன... பெரும்பாலும் மரபணு மாற்றங்கள் செய்யப் பட்டவை...
 
Sathya Raman கேமரன் மலையில் நீங்கள் குறிப்பிட்ட கற்றாழை வகைகளை அதிகமாகவே காணலாம். அதுமட்டும் அல்ல. கைக்கு அடக்கமாகச் சின்ன சின்னப் பிளாஸ்டிக் குப்பியில் குட்டி குட்டிக் கற்றாழைகளைப் பேரங்காடிகளில் கூட விற்பனை செய்கிறார்கள்.

நம் தமிழர்கள் வாஸ்துப்படி இருவித குழப்பமான கருத்துக்கள் நிலவுகின்றன.
கற்றாழைச் செடியை வீட்டில் வளர்த்தால் தூயச் சக்திகள் வீட்டிற்குள் வராது எனவும் அதனை வளர்ப்பதால் காத்து கருப்பு, கண் திருஷ்டி,பேய் பிசாசைக் கதிகலங்க ஒட வைக்கும் என்பன போன்ற எதிர்மறையான கருத்துகள்.

ஆனாலும்
கற்றாழையைப் பற்றிய உங்கள் பதிவு பிரமிக்க வைக்கிறது சார். 500 கிலோ வரை அதன் பாரம் என்பது எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.

குளோனிங் முறையைத் தாவரங்களுக்கும் பயன்படுத்தும் படுபாதகச் செயல் எல்லாம் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். ஒட்டு கட்டிப் பழக்கப் பட்டவர்கள் அடுத்த கட்டமாய் மரபணு முறையைச் செய்தால் தான் நிறைய பணம் பண்ணலாம். மனிதன் மாறி விட்டான்... பணத்தில் மூழ்கி விட்டான்.

எதுவாயினும் உலக சட்டாம் பிள்ளையான அமெரிக்க இந்த ஒரிஜினல்
கற்றாழைச் செடியைப் பாதுகாக்கும் செய்தியைச் சொன்னதற்கு நன்றி சார்.

சீனாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். மெலாமைன் (Melamine) என்ற இரசாயனத்தைக் குழந்தைகளின் பால்பவுடரில் கலந்து 150-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற வியாபாரிகள் மலிந்து விட்ட நாடு. அங்கே நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

250 கிலோ
கற்றாழை மரம் ஆளையே அபேஸ் பண்ணும் செய்தி எல்லாம் அதிர்ச்சி அளிக்கிறது சார். மற்றும் ஓர் இயற்கையின் இம்சையை இந்தக் கற்றாழை ஏற்படுத்திய விதத்தைக் கட்டுரையாக்கிய தங்களுக்கு... 🙏🙏🙏
 
Muthukrishnan Ipoh நல்ல அருமையான பதிவு... இந்தப் பின்னூட்டம் வலைத் தளத்தில் இணைக்கப் படுகிறது. உலகளாவியத் தகவல்களை நிறையவே தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்.

சீனாவில் மெலாமைன் பயன்படுத்தி உலகத்தையே கதிகலங்கச் செய்த ஊழல் விவகாரத்தை ’சீனாவின் பால் ஊழல் 2008’ - (2008 Chinese milk scandal) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

சீனாவில் மட்டும் 300,000 பேர் பாதிப்பு அடைந்தார்கள். ஆறு குழந்தைகளுக்குச் சிறுநீரகக் கற்களினால் இறப்பு. 54 ஆயிரம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள்.
நன்றிங்க.. சகோதரி...

(Nearly 53,000 Chinese children sick from milk. Associated Press. 10 February 2014.)

(China seizes 22 companies with contaminated baby milk powder". Xinhua News Agency. 16 September 2008)
 
Sathya Raman Muthukrishnan Ipoh சீனாவில் பால் பவுடர் ஊழல் சம்பந்தப்பட்ட கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றிங்க சார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம். இதயத்தை உறைய வைத்த சம்பவம்.

"மனித நாகரீகங்கள் இயந்திரங்களால் உருவாக்கப் பட்டவை அல்ல. மாறாக நற்பண்பாளர்களால் ஏற்படுத்தப் பட்டவை"

இந்தக் கேடு கெட்ட பணத்தாசை மனித ஜென்மங்களுக்கு பச்சிளம் குழந்தைகளின் உயிரை எடுக்கும் அளவிற்கு பண்பு கெட்ட தனத்தை எந்த வேதத்தில் அறிவுறுத்தி இருக்கிறார்கள்?

"பேராசை ஒருவித அமிலம். அது விழும் இடத்தைவிட இருக்கும் இடமே ஆபத்தானது. பெரிய அளவில் பணம் பண்ண எண்ணும் பேராசைக்காரர்கள் அத்தோ பொம்மையைவிட ஆபத்தானவர்கள் சார்.
  
Muthukrishnan Ipoh பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை... இந்த மூன்று ஆசைகளும் நியாயமான ஆசைகளாக இருக்க வேண்டும். எதுவும் வரம்பு மீறிப் போகக் கூடாது. ஆசைகள் மிஞ்சினால் ஆபத்து.

போதும் என்பதே ஆசைகளின் அளவுகோலாக இருக்க வேண்டும்... கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க.