புலாவ் பெசார் புண்ணியம் பேசுகிறது - 6 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலாவ் பெசார் புண்ணியம் பேசுகிறது - 6 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 நவம்பர் 2019

புலாவ் பெசார் புண்ணியம் பேசுகிறது - 6

தமிழ் மலர் - 05.11.2019

புலாவ் பெசார் தீவில் கோடிக் கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள், தங்கச் சின்னங்கள், தங்க நாணயங்கள், வைரங்கள், வைடூரியங்கள், நவரத்தினக் கற்கள், என ஒரு பொற் குவியல் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.


இருந்தாலும் அவை மாயஜாலம் காட்டி வந்தன. இங்கே அங்கே எங்கே என்று சொல்லி மக்களைத் தீவு முழுவதும் தேடி அலைய வைத்தன.

ஒரு கட்டத்தில் புலாவ் பெசார் தீவில் இருந்த பாறைகளை, டைனமைட் வெடி மருந்துகளை வைத்துத் தகர்த்தும் இருக்கிறார்கள். பெரும் பெரும் பாறைகளுக்கு அடியில் தோண்டியும் பார்த்து விட்டார்கள்.

கடலுக்குள் இருந்த பாறைகளைக்கூட விட்டு வைக்கவில்லை. அவற்றையும் நகர்த்திப் பார்த்து இருக்கிறார்கள். ஆனால், என்ன செய்வது.

அந்த ஜீபூம்பா புதையல் புலாவ் பெசாரிலும் இல்லை. புலாவ் நங்காவிலும் இல்லை. இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும், தேடும் முயற்சிகள் கைவிடப் படவில்லை. இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

புலாவ் நங்காவின் ஆழ்நிலக் குகைகளில் அந்தப் புதையல் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது.

1800 - 1900களில், மலாக்கா நீரிணையில் கடல் கொள்ளைக்காரர்கள் கொடி கட்டிப் பறந்த காலம். இருந்தாலும் இதற்கு முன்னரே கடற் கொள்ளையர்கள் மலாக்கா நீரிணையில் பேர் போட்டு விட்டனர்.

மலாக்காவை பரமேஸ்வரா உருவாக்கிய காலக் கட்டத்தில், அவருக்கு உதவியாக இருந்தவர்கள் ஓராங் லாவுட் என்பவர்களும் ஓரளவிற்குக் கடற் கொள்ளையர்களும் தான். அதை நாம் மறந்துவிடக் கூடாது. 


சுமத்திராவில் ஸ்ரீ விஜய பேரரசு வீழ்ச்சி அடைந்ததும் அதன் தலைநகரமாக இருந்த பாலேம்பாங், கடற் கொள்ளையர்களின் சொர்க்கபுரியாக மாறியது. மலாக்கா நீரிணையில் பயணம் செய்த கப்பல்களைக் கொள்ளை அடித்து வந்தனர்.

இவர்களுக்கு மலாக்கா ஆளுநர்கள் ஓரளவிற்கு ஆதரவு அளித்து வந்தனர். இதுவும் வரலாற்றில் ஒரு திருப்புமுனை.

இந்தக் கொள்ளையர்களும் புலாவ் பெசார் புதையலைப் பற்றி தெரிந்து வைத்து இருந்தார்கள். இவர்களும் போதுமான தகவல்கள், வரைபடங்களை வைத்துக் கொண்டு அலசிப் பார்த்து விட்டார்கள். அவர்கள் கண்களிலும் தென்படவில்லை. மலாக்கா அரசாங்கமும் அண்மைய காலங்களில் முழுமூச்சாய்க் களம் இறங்கி இருக்கிறது.

புலாவ் நங்காவில் ஏதோ ஓர் அனாமதேய சக்தி இருக்கிறது. அதுதான் புதையலை மறைத்து வைத்துக் கொண்டு இருக்கிறது என்று மலாக்கா முதல்வரே சொல்லி இருக்கிறார். பத்திரிகைகளுக்குப் பேட்டியும் கொடுத்து இருக்கிறார்.

சரி. வரலாற்றைக் கொஞ்சம் திருப்பிப் பார்ப்போம். 1511-இல் போர்த்துக்கீசியர்கள் மலாக்காவின் மீது படை எடுத்தார்கள். இது தெரிந்த விஷயம். ஒரே மாதத்தில் மூன்று தாக்குதல்கள் நட்த்தினார்கள். இது தெரியாத விஷயம்.

•    முதல் தாக்குதல் - 1511 ஜுலை 25-ஆம் தேதி.
•    இரண்டாவது தாக்குதல் - 1511 ஆகஸ்டு 10-ஆம் தேதி.
•    மூன்றாவது தாக்குதல் - 1511 ஆகஸ்டு 24-ஆம் தேதி.


கடைசி தாக்குதலில், அதாவது மூன்றாவது தாக்குதலில் மலாக்கா வீழ்ச்சி அடைந்தது. போர்த்துக்கீசியப் படைகளுக்கு அபான்சோ டி அல்புகர்க் (Afonso de Albuquerque) என்பவர் தலைமை வகித்தார். 


இங்கே ஓர் இடைச் செருகல். இவருடைய பெயரை அல்பான்சோ டி அல்புகர்க் என்றே உச்சரிக்கின்றனர். பள்ளிக்கூடத்திலும் அப்படித் தான் சொல்லியும் தருகின்றனர். அது தவறு. அபான்சோ டி அல்புகர்க் என்று தான் உச்சரிக்க வேண்டும். அபான்சோ டி அல்புகர்க்.

அப்போது மலாக்காவின் சுல்தானாக முகமட் ஷா இருந்தார். அவர் அந்தச் சமயத்தில், தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் பெரிய பணக்கார அரசராகவும் இருந்தார்.

அவருடைய செல்வங்கள் அனைத்தும், மலாக்கா, செயிண்ட் பால் குன்றில் இருந்த சுரங்கத்தில் பத்திரமாகப் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தன. போர்த்துக்கீசியர்கள் இரண்டாவது தாக்குதல் நடத்திய போதே முகமட் ஷா உஷாராகி விட்டார். கண்டிப்பாக ஏதாவது நடக்கலாம் என்று அனுமானித்து விட்டார்.

இந்தக் கட்டத்தில் தான் மலாக்காவின் செல்வங்கள் எல்லாம் இடம் மாறிச் சென்றன. அவை எங்கே கொண்டு போய் வைக்கப் பட்டன என்பது தான், இன்று வரை பரம ரகசியமாக இருந்து வருகிறது. 


முகமட் ஷா தன்னுடைய செல்வங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய், புலாவ் நங்காவில் வைத்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கணிப்பு செய்கின்றனர்.

போர்த்துக்கீசியர்கள் மலாக்காவின் மீது தாக்குதல் நடத்தும் போது, இரு பிரிவுகளாகப் பிரிந்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

ஒரு பகுதியினர் திரேங்கேரா பக்கம் இருந்து வந்தனர்.

இன்னொரு பிரிவினர் பண்டார் ஹிலீர் பக்கமாய் இருந்து வந்தனர். அவர்களுடைய தலையாய் நோக்கம் மலாக்கா ஆற்றுப் பாலத்தைப் பிடிப்பது.

ஏற்கனவே, 1509-ஆம் ஆண்டில், போர்த்துக்கீசியத் தளபதி லோபேஸ் டி செக்குயிரா மலாக்காவிற்கு வந்து இருந்தார். ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய முகமட் ஷா கடைசியில் அவர்களை எதிர்த்தார். அதனால் பெரிய ஒரு கலவரம். அதில் 19 போர்த்துக்கீசியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களை மீட்கத் தான் அபான்சோ டி அல்புகர்க் களம் இறங்கினார்.


முதல் தாக்குதலுக்கு 18 கப்பல்களில், 1200 போர்த்துக்கீசிய வீரர்கள் பயன்படுத்தப் பட்டனர். அந்தத் தாக்குதலில் 70 பேருக்கு காயம். அவர்களைப் படகுகளில் ஏற்றிக் கொண்டு, புலாவ் பெசார் தீவிற்குக் கொண்டு சென்று இருக்கிறார்கள்.

அங்கேதான் போர்த்துக்கீசிய வீர்ர்களுக்குச் சிகிச்சைகள் செய்யப் பட்டன. இங்கேயும் பாருங்கள். புலாவ் பெசார் தீவு வந்து நிற்கிறது. எப்பேர்ப்பட்ட வரலாற்றை இந்தத் தீவு பார்த்து இருக்க வேண்டும்.

இரண்டு வாரங்கள் கழித்து இரண்டாவது தாக்குதல். அதில் மலாக்கா பாலத்தைப் போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றினர். அவர்களிடம் துப்பாக்கிகள், பீரங்கிகள் நிறையவே இருந்தன. வெடிகுண்டுகளும் இருந்தன. இருப்பினும், மலாக்காவை முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை.

தாக்குப் பிடிக்க முடியாமல் போர்த்துக்கீசியர்கள் பின் வாங்கினர். முகமட் ஷாவின் வீரர்களும் உயிரைக் கொடுத்துப் போராடி இருக்கின்றனர். இரு தரப்பிலும் பெருத்த சேதங்கள்.

போர்த்துக்கீசியர்கள் தங்களின் முதல் தாக்குதலில், மலாக்காவின் வடக்குப் பகுதியை நெருப்பு வைத்துக் கொளுத்தினர். இதுவும் வரலாறு.

[சான்று: http://www.malaccaguide.com/the_portuguese_conquest_of_malacca.html] 

இந்தத் தாக்குதலுக்குப் பிறகுதான், முகமட் ஷா தன்னுடைய செல்வங்களை எல்லாம் இடம் மாற்றி இருக்கிறார். இந்த மலாக்கா போரில் முகமட் ஷாவின் மகன் அலாவுதீன் என்பவரும் மிகச் சிறப்பான பங்கு வகித்து இருக்கிறார்.


போர்த்துகீசியர்களின் மூன்றாவது தாக்குதலில் தோல்வி கண்ட முகமட் ஷா, தன் பரிவாரங்களுடன், ஜொகூரில் இருக்கும் பாகோ எனும் இடத்திற்குத் தப்பித்துச் சென்றார். ஆனால் அங்கே இருந்த ஜாவா மக்களுக்கு இவர்களைப் பிடிக்கவில்லை. வர வேண்டாம் என்று துரத்தி அடித்தார்கள்.

அதன் பின்னர் முகமட் ஷா, அப்போதைய பகாங் சுல்தானிடம் புகலிடம் கேட்டார். அவர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டார்.

கொஞ்ச காலம் முகமட் ஷா அங்கு தங்கி இருந்தார். பின்னர், ஜொகூருக்கு வந்து ஜொகூர் ஆற்றோரத்தில் ஒரு புதிய அரசை உருவாக்கினார். அங்கே ஓர் அரசு உருவாக்கப் பட்டது என்பது வேறு கதை.

புலாவ் பெசார், மலாக்கா வரலாற்றில் மறைக்க முடியாத ஒரு காலச் சுவடி. அங்கே பல மர்மமான நிகழ்ச்சிகள், பல அதிசயமான நிகழ்ச்சிகள் நடந்து இருக்கின்றன. ஆச்சரியம், அதிசயம், ஆனால் உண்மை. அத்தனையும் நம்ப முடியாத நிகழ்வுகள். மானுடத்தில் சில பல துணுக்குகள்.

புலாவ் பெசார் தீவில் கால் பதித்ததும், ஒருவிதமான அதிர்வுகளை (Vibration) உணர முடியும். சொல்லி இருக்கிறேன்.

எல்லோருக்கும் அந்த உணர்வுகள் ஏற்படுமா என்று தெரியவில்லை. இறந்தும் இறவாமல் அங்கே உறைவிடம் கொண்டுள்ள துறவி மகான்களை மனதார நினைத்தாலே போதும், அந்த அதிர்வுகள் தானாக வந்து சேரும். 


பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்கள் சொன்ன வார்த்தைகள், சாதி சமயம் சம்பிரதாயங்களைத் தாண்டிய வாக்குமூலங்கள்.

துறவி மகான்கள் என்பவர்கள் சித்தர்களைப் போன்றவர்கள். உடலை விட்டு வாழும் வல்லமை பெற்றவர்கள். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு வகையான பெருஞ் சித்திகளைப் பெற்றவர்கள்.

துறவி மகான்கள், பொது வாழ்க்கை நெறிகளுக்கு உடன் படாதவர்கள். வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கியவர்கள். நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.

உடல் சுத்தம், மனச் சுத்தம், சொல் சுத்தம், நடைச் சுத்தம். இந்த நான்கு சுத்தங்கள் இருந்தால் போதும். அலை அலையான  அதிர்வுகளை உணர முடியும் என்றும் சொல்கிறார்கள். 


அங்கு போய் பிரார்த்தனை செய்ய வேண்டும், பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்பது எல்லாம் அவசியம் இல்லை. கொண்டு போகும் காணிக்கைகளுக்காக, அந்தத் தெய்வங்கள் இறங்கி வந்து வாழ்த்தப் போவதும் இல்லை.

ஆக, தெய்வங்களை மனதார நினைத்தாலே போதும். கண்களை மூடி மௌனமாக நின்றாலே போதும். ஒருவிதமான ஆழ் உணர்வுத் துடிப்புகள் ஏற்படும். அதைத் தான் புலாவ் பெசார் அதிர்வு அலைகள் என்று சொல்கிறார்கள்.

இன்னும் ஒரு செய்தி. அங்குள்ள புனிதத் தளங்களிலும் சரி; சமாதிகளிலும் சரி; மறைந்தும் மறையாமல் பல பெருமகன்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களைக் கிண்டல் செய்வது வேதனைக்குரிய விஷயமாகும். அப்படிக் கேலி செய்தவர்களும் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. சாட்சிகளாக ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றித்தான் சொல்ல வருகிறேன்.

அப்படி நையாண்டி செய்தவர்களில் சிலர், இப்போது பித்து பிடித்து வானத்தைப் பார்த்தவாறு திரிகிறார்கள். சிலர் வீடு வாசல்களை இழந்து தெருவோரங்களில் உறைந்து போய்க் கிடக்கிறார்கள். இன்னும் சிலர் மனைவி மக்களைப் பிரிந்து, அனாதைப் பிசிறுகளாய் அல்லாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களில் சிலர் `புலாவ் பெசார் ஆண்டவரைக் குறை சொன்னேன். தண்டனையை அனுபவிக்கிறேன்` என்றும் வாயாரச் சொல்கிறார்கள். தெய்வம் எங்கே இருந்தாலும் அது தெய்வம் தான். தெய்வத்தை இழுக்குப் படுத்துவது என்பது மகா பெரிய ஒரு குற்றம். மன்னிக்க முடியாத பாவம்.

(தொடரும்)