மேரி சாந்தி தைரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேரி சாந்தி தைரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 செப்டம்பர் 2019

மேரி சாந்தி தைரியம்

அற்புதமான மலேசியச் சமூகச் சேவகி. பெயர் மேரி சாந்தி தைரியம் (Mary Shanthi Dairiam). 


மலேசிய மனித உரிமை போராட்டவாதி. அனைத்துலகப் பெண்ணுரிமைப் போராளி. ஐக்கிய நாட்டுச் சபையின் மனித உரிமை அதிகாரி.

மலேசியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் இயற்றப் படுவதற்கு மூல காரணமாக இருந்தவர். மலேசியாவின் மகளிர் உதவி அமைப்பு (Women’s Aid Organisation (WAO) தோன்றுவதற்கும் முன்னோடியாக இருந்தவர்.

1980-ஆம் ஆண்டுகளில் மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பரப்புரைகள் செய்தார்.  குடும்ப வன்முறை மசோதாவைச் சட்டமாக்குவதற்கு (Domestic Violence Act) போராட்டம் செய்து வெற்றியும் கண்டவர் மேரி சாந்தி தைரியம். 



அவரின் தொடர் பரப்புரைகளினால் 1994-ஆம் ஆண்டு  குடும்ப வன்முறைச் சட்டம் மலேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. 2012-ஆம் ஆண்டில் அந்தச் சட்டம் மறுதிருத்தம் செய்யப் பட்டது.

ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரைச் சும்மா கையை நீட்டி ஓர் அடி அடித்தாலே போதும். மேரி சாந்தி கொண்டு வந்த அந்தச் சட்டம் கையில் விலங்குடன் ஓடி வந்து மாட்டி விட்டுப் போகும்.

இது பெண்களுக்கு மட்டும் உதவும் சட்டம் அல்ல. ஆண்களுக்கும் உதவுகிறது. கோபத்தில் மனைவி ஒரு கரண்டியை எடுத்து புருசன்காரன் மீது ஒரு வீசு வீசி... அது படாத இடத்தில் பட்டு...  ஒரு சின்ன சிராய்ப்புக் காயம் பட்டு... ரெண்டு சொட்டு இரத்தம் விட்டு... அது போதுங்க. 



‘வாராயோ தோழி வாராயோ’ என்று குடும்ப வன்முறைச் சட்டம் கதவைத் தட்டும். அப்புறம் அந்த ராணி லலிதாங்கி கம்பி எண்ண வேண்டி வரலாம்.

ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் மீது அல்லது ஓர் ஆணின் மீது வார்த்தைகளால் வன்முறை நிகழ்ந்தாலும் இந்தச் சட்டம் பாயும். சரிங்களா.

கணவன் மனைவி என்று இல்லை. குடும்ப அமைப்பில் உள்ள ஆண் பெண் எவராக இருந்தாலும் இந்தக் குடும்ப வன்முறைச் சட்டம் மூலமாக நீதி கேட்கலாம்.

ஆக மலேசிய வாழ் ஆண்மணிகளே பெண்மணிகளே... இப்படிப்பட்ட ஒரு சட்டம் கொண்டு வரப் படுவதற்கு அல்லும் பகலும் உழைத்த மேரி சாந்தி தைரியம் அம்மாவுக்குத் தாராளமாக ஒரு கைதட்டல் கொடுக்கலாமே. ஓரவஞ்சனை வேண்டாமே.




1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி பிறந்தவர். வயது 80. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸ் பட்டம் செய்தவர். (முன்பு University of Madras) ஆங்கில மொழி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இன்றும் அதே இளமைத் துடிப்புடன் மனித உரிமைப் போராட்டவாதியாகப் பயணித்துக் கொண்டு வருகிறார்.

ஐக்கிய நாட்டுச் சபையின் அறிவுரைஞராகவும் சேவை செய்கிறார். அவருடைய மனித உரிமைச் சேவைகள் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துவோம்.

ஐ. நா. சபையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழு (UN's Gender Equality Task Force); பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழு (Committee on Elimination of Discrimination against Women) போன்றவற்றில் பணியாற்றியவர்.

2010-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டு காசா போரைப் பற்றிய ஆய்வறிக்கை தயாரிக்க ஐக்கிய நாட்டுச் சபை மூன்று பேரை அனுப்பி வைத்தது. அந்த மூவரில் மேரி சாந்தி தைரியம் அவர்களும் ஒருவர்.



பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்க ஒரு காப்பகம் தோற்றுவிக்கப்பட்டது. அது அனைத்துலகப் பெண்ணுரிமை காப்பகம். அந்தக் காப்பகத்தின் ஆசியப் பிரிவின் நிறுவனர்; தற்போதைய இயக்குனரும் இவரே. (International Women's Rights Action Watch - Asia Pacific)

மேரி சாந்தி தைரியம் போன்ற இந்தியப் பெண்கள் நிறைய பேர் இங்கேயும் எங்கேயும் ஜொலிக்கின்றார்கள். இருந்தாலும் மேலாண்மையின் அதிகார ஆதிக்க அழுத்தங்களின் காரணமாகப் பலர் இன்னமும் இலை மறை காய்களாகவே மறைந்து போய் நிற்கின்றார்கள். இதையே காலத்தின் கொடுமை என்று பலரும் சொல்கின்றார்கள்.

சான்றுகள்:

1. https://www.star2.com/people/2015/01/01/fighting-for-equality/)

2. https://en.wikipedia.org/wiki/Mary_Shanthi_Dairiam

3. http://www.dtp.unsw.edu.au/mdm-mary-shanthi-dairiam