கருடா இந்தோனேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருடா இந்தோனேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 ஏப்ரல் 2020

கருடா இந்தோனேசியா

இந்தியப் புராணங்களில் விஷ்ணுவின் வாகனமாக குறிப்பிடப் படுவது கருடன்.  பறவைகளின் அரசன் என்றும் சொல்வார்கள். இந்தக் கருடனின் பெயரில் தான் இந்தோனேசியாவின் விமானச் சேவையும் இயங்கி வருகிறது. அதன் பெயர் கருடா இந்தோனேசியா (Garuda Indonesia). 



பல நூறாண்டுகளுக்கு முன்பு இருந்தே கருடா எனும் சொல் இந்தோனேசியாவில் பிரபலமாகி விட்டது. இந்தோனேசியாவிற்கு வணிகம் செய்ய வந்தவர்களும்; பேரரசுகளை உருவாக்கியவர்களும் மகாபாரதம்; இராமாயணம் போன்ற புராணை இலக்கியங்களை வேரூன்றச் செய்து விட்டார்கள்.

அந்த இலக்கியங்கள் வாயாங் கூலிட் எனும் நிழல் பொம்மலாட்டம்; மேடை நாடகங்கள்; கிராமப்புற கூத்துகள் வழியாக இந்தோனேசியாவில் பிரபலம் அடைந்து விட்டன.




இந்தோனேசிய விமானச் சேவைக்கு கருடா இந்தோனேசிய ஏர்வேஸ் (Garuda Indonesian Airways) என்று பெயர். இப்போதைக்கு ‘கருடா இந்தோனேசியா’. அப்படிப் பெயர் வைத்தது யார் தெரியுங்களா? ஆச்சரியப்பட வேண்டாம். முன்னாள் இந்தோனேசிய அதிபர் சுகார்னோ.

கருடா இந்தோனேசியா விமானச் சேவையின் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம். முன்பு காலத்தில் இந்தோனேசியா துணைக் கண்டம் டச்சு காலனித்துவ நாடாக இருந்தது. 




1928-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிற்கு என ஒரு விமானச் சேவை உருவாக்கப் பட்டது. அதன் பெயர் ராயல் டச்சு இண்டீஸ் ஏர்வேஸ் (Royal Dutch Indies Airways). சுருக்கமாக கே.என்.ஐ.எல்.எம். (KNILM).

1949 ஆகஸ்டு 23-ஆம் தேதி நெதர்லாந்து ஹேக் மாநகரில் டச்சு - இந்தோனேசிய உடன்படிக்கை மாநாடு நடந்தது. அப்போது இந்தோனேசியாவின் விமானச் சேவைக்கு என்ன பெயர் வைக்கலாம் எனும் விவாதம் நடந்தது.

அந்த மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் சுகார்னோ ஒரு கவிதையை மேற்கோள் காட்டினார்.




ஜாவானிய கவிஞர் ராதன் மாஸ் நோட்டோ சோரோட் (Raden Mas Noto Soerot) என்பவர் டச்சு மொழியில் எழுதிய கவிதை. டச்சு மொழியில் அந்தக் கவிதை: Ik ben Garuda, Vishnoe's vogel, die zijn vleugels uitslaat hoog boven uw eilanden.

தமிழில்: ’நான் கருடன். விஷ்ணுவின் பறவை. தீவுகளுக்கு மேலே இறக்கைகளைப் பரப்பி பறக்கிறேன்’.

அந்தக் கவிதையின் பொருளை அந்த மாநாட்டிற்கு வந்தவர்களிடம் அதிபர் சுகார்னோ விளக்கினார். ஆக இந்தோனேசியாவின் விமானச் சேவைக்கு கருடனின் பெயர் வைக்கலாம் என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது. 




(The name Garuda, the name of Lord Vishnu's mount (vahana) was introduced in 1949, during the Dutch – Indonesian Round Table Conference at The Hague on 23 August 1949 by Indonesian President Sukarno)

அந்த வகையில் ‘கருடா இந்தோனேசிய விமானச் சேவை’ என பெயர் வைக்கப் பட்டது. அதுவே ’கருடா இந்தோனேசியா’ என்று இப்போது மாற்றம் கண்டு உள்ளது. அந்தப் பெயர் நிலைத்து நிற்பதற்கு வழி வகுத்தவர் முன்னாள் அதிபர் சுகார்னோ.




இந்தோனேசியா சுதந்திரம் பெற்ற போது அதன் தலைநகரம் ஜொக்ஜகார்த்தாவில் (Yogyakarta) இருந்தது. அங்கே இருந்து அதிபர் சுகார்னோவை ஜகார்த்தாவிற்கு அழைத்து வர இந்தோனேசிய விமானச் சேவையின் முதல் விமானம் பயன்படுத்தப் பட்டது.

இது நடந்தது 1949 டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி. இந்தோனேசியாவின் சொந்த விமானத்தில் சொந்த மண்ணில் முதல் விமானப் பயணம்.

(One day after the Netherlands acknowledged the sovereignty of Indonesian Republic on December 28th, 1949, two airplanes Dakota (DC-3) flew from Kemayoran airport, from Jakarta to Yogyakarta to pick up Soekarno.)




”கருடா இந்தோனேசியா”வின் பழைய சுலோகங்கள்:

1. கருடா இந்தோனேசியா, இப்போது சிறந்தது (Garuda Indonesia, Kini Lebih Baik - Now Better)

2. கருடா இந்தோனேசியா, ஒன்றாகப் பெருமிதம் கொள்கிறோம் (Garuda Indonesia, Bangga Bersamanya - Proud of You Together)

இப்போதைய சுலோகம்: கருடா இந்தோனேசியா, இந்தோனேசியாவின் விமான நிறுவனம் (Garuda Indonesia, The Airline of Indonesia)




கருடா இந்தோனேசியா விமான நிறுவனத்திற்கு இப்போது 202 விமானங்கள் உள்ளன. உலகளவில் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் சேவை வழங்குகிறது. உலகில் மிகச் சிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாகப் புகழ் பெற்று உள்ளது (World's Best Cabin Crew).

கருடா இந்தோனேசியா விமானச் சேவையை 5 நட்சத்திர விமானச் சேவையாக அனைத்துலக விமான ஆய்வு நிறுவனமான ஸ்கை டிராக்ஸ் (Skytrax) மதிப்பிடுகிறது.




இந்தோனேசியாவில் பலரின் பெயர்கள் இந்திரா, கிருஷ்ணா, குணவான், சத்தியவான், தர்மவான், குபேரன், சித்தார்த்தா (Sudarto), சூரியா, தேவி, பிரிதிவி, ஸ்ரீ, சிந்தா, ரத்னா, பரமிதா, குமலா, இந்திரா, ராதா, பிரியா, மேகவதி என்று முடியும். பார்த்து இருக்கலாம். கேட்டும் இருக்கலாம்.

ஒருமுறை ஜப்பானிய செய்தியாளர் கருடா விமானத்தில் தோக்கியோவில் இருந்து பயணிக்கும் போது இந்திராவதி எனும் பணிப்பெண்ணைப் பார்த்து, “நீங்கள் ஏன் இப்படிப் பெயர் வைத்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டாராம்.

அதற்கு அவர், “நாங்கள் எங்கள் மதத்தை மட்டும்தான் மாற்றிக் கொண்டோம். எங்கள் முன்னோர்களை அல்ல. அவர்களை எங்களால் மாற்றிக் கொள்ள இயலாது” என்று பதில் சொன்னாராம். நெஞ்சம் கனக்கிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.04.2020

சான்றுகள்:
https://www.garuda-indonesia.com/id/en/corporate-partners/company-profile/about/index