மனிதன் தோன்றிய கதை - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதன் தோன்றிய கதை - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஜூன் 2020

மனிதன் தோன்றிய கதை - 1

உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களும் இறைவனால் படைக்கப் பட்டவை. இது ஆன்மீகவாதிகளின் கருத்தாக இருந்தாலும் அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அந்தக் கருத்துகளை எவரும் மறுக்கவில்லை. மறுக்கவும் இயலாது.

இருந்தாலும் இந்த உயிரினங்கள் இந்தப் பூமியில் எவ்வாறு தோன்றின. அதுவே ஒரு சர்ச்சைக்குரிய ஓர் அறிவியல் பார்வையாக அமையலாம்.

அதற்கு முன்னர் ஒரு சின்னச் சுருக்கம். பல கோடிக் கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் இரசாயனக் கலவை மாற்றங்கள் ஏற்பட்டன. அதில் இருந்து மிக மிக நுண் உயிரிகள் தோன்றின. உயிர்கள் அல்ல. உயிரிகள் (micro organism).

அங்கே இருந்துதான் மனித இனம் தோன்றியது என்று அறிவியலாளர்கள் அறிவியல் பார்வையில் உறுதியாகச் சொல்கின்றனர். அந்தக் கருத்துகளையும் நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம். நல்லது தானே.

அறிவியலாளர்களின் கருத்துகள் நாத்திகத் தன்மை வாய்ந்தவை. அவற்றை அப்படியே தூக்கி எறிந்து விடவும் கூடாது. அவர்களுடைய அறிவு ஆராய்ச்சிகளினால் தான் நாம் இப்போது இப்படி சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சரிங்களா.

வானொலி, தொலைக்காட்சி, சீருந்து, பேருந்து, கணினி, கைப்பேசி, உதட்டுச் சாயம், உள்ளங்கால் சாயம், வயாகரா, உயகரா, லொட்டு லொசுக்கு என்று ஏகப்பட்ட நவீன சாதனங்கள். அவற்றின் மூலம் ஏக போகமான நவீன வாழ்க்கை.

இவற்றுக்கு எல்லாம் மூல காரணமாக விளங்கும் மூத்த அறிவியல் ஆசான்களின் உயிரியல் கூற்றுகளைத் தர்க்க ரீதியில் அணுகிப் பார்க்கலாம். தப்பு இல்லீங்களே.

உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக ஒரே ஒரு வகையான மூதாதையர்தான்.

அந்த உயிரினம் கத்தரிச் செடியாக இருக்கலாம் இல்லை ஒரு கறுப்புக் கலர் கழுதையாக இருக்கலாம். கரப்பான் பூச்சியாக இருக்கலாம். காட்டு நரியாக இருக்கலாம். கொட்டும் தேளாக இருக்கலாம்; இல்லை விட்டுப் போன உயிர் உறவுகளாகவும் இருக்கலாம்.

அனைத்திற்கும் ஒரே ஒரு பொதுவான மூதாதையர். ஒரே ஒரு வகையான அணு மூலக்கூறுகள். அதாவது உயிர் உள்ள எல்லா பொருட்களுக்கும் ஒரே வகையான அணு மூலக்கூறுகள்தான் என்று சொல்ல வருகிறேன்

நம்முடைய பிரபஞ்சம் எப்படி தோன்றியது. பிரபஞ்சம் என்பதை அண்டம், பேரண்டம், பவஞ்சம், விண்வெளி, வளிமச்சூழ், அண்ட வெளி என்று எப்படி வேண்டும் என்றாலும் அழைக்கலாம்.

அதற்கு முன்னர் அணு மூலக்கூறுகள் எப்படி தோன்றின. கொஞ்சம் தெரிந்து கொள்வோம். இன்றைக்கு இதுதான் நம்முடைய அறிவியல் அலசல்.

600 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் அண்ட வெளியில் இருந்த வாயு மேகங்கள் இறுக்கம் அடைந்தன. ஒரே ஒரு பந்துக் குவளை அளவிற்கு உருவம் எடுத்தன. அந்த வாயுக்கள் சனனம் சன்னமாய் இறுகத் தொடங்கின.

ஒரு கட்டத்திற்கு மேல் அவற்றால் இறுக முடியவில்லை. அந்த இறுக்கத்தில் இருந்து திடீரென்று வெடித்தன. அப்படி ஒரு கற்பனை செய்து பாருங்களேன். சரிங்க.

இந்தப் பூமியை நீங்கள் உங்களின் இரண்டு கைகளாலும் தூக்கி அப்படியே அமுக்கி இறுக்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள். பலம் கொண்ட மட்டும் இறுக்கி அமுக்குகிறீர்கள்.

அப்படி இறுக்கி அமுக்கி கடைசியில் பூமியின் அளவை ஒரு கால்பந்து அளவிற்கு நசுக்கி விடுகிறீர்கள். அது பற்றாது என்று மேலும் மேலும் நசுக்குகிறீர்கள்.

பூமியின் அளவு ஒரு கிரிக்கெட் பந்து அளவிற்கு வந்து விடுகிறது. அதுவும் போதவில்லை. இன்னும் அமுக்குகிறீர்கள். கடைசியில் ஒரு கோலிக் குண்டு அளவிற்கு வருகிறது.

அதற்கு மேலும் நசுக்க முடியுமா. முடியவில்லை. பயங்கரமான வெடிப்புடன் அந்தப் பந்து வெடிக்கிறது. அது என்ன மாதிரியான வெடிப்பாக இருக்கும். சொல்லுங்கள். கற்பனைக்கு அப்பால் பட்ட ஒரு வெடிப்பு.

அதே போலத்தான் பிரபஞ்சத்தில் நடந்தது. நடந்து இருக்கிறது. அண்டத்தில் இருந்த எல்லா வாயு மேகங்களும் ஒரு கட்டத்தில் இறுக்கம் அடைந்தன. இறுதியில் ஒரு சூரியன் அளவுக்கு வந்தன. மேலும் மேலும் இறுக முடியாமல் ஒரு கட்டத்திற்கு வந்ததும் வெடித்து விட்டன. புரியுதுங்களா.

அதற்குப் பெயர்தான் பெரு வெடிப்புக் கொள்கை. ஆங்கிலத்தில் பிக் பேங் (Big Bang). இந்தக் கொள்கையைக் கண்டுபிடித்தவர் அல்பர்ட் ஐன்ஸ்டீன். சரிங்களா.

இவர் சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த இயற்பியல் அறிஞர், மாமேதை. அவர் கண்டுபிடித்த இ=எம்சி2 (E=MC2) எனும் இயற்பியல் விதியைக் கொண்டுதான் அணுகுண்டு தயாரிக்கப் படுகிறது. அணுவை உடைத்தால் என்னவாகும் என்று இந்த விதி விளக்குகிறது.

இது ஒரு வகையான சார்புக் கொள்கை (Theory of Relativity). அதையும் அவர்தான் கண்டுபிடித்தார். இதில் இருந்து தான் துளிமக் கொள்கை (Quantum Theory) எனும் மற்றொரு கொள்கையும் தோற்றுவிக்கப் பட்டது.

பெருவெடிப்பு (Big Bang Theory) கொள்கையைக் கண்டுபிடித்து பிரபஞ்சம் எப்படி உருவாகி இருக்கும் என்று ஐன்ஸ்டீன் சொன்னார். அப்போது ‘என்ன அழகு… என்னே குசும்பு’ என்று அவருடைய கூற்றை எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒரு கட்டத்தில் அவரைச் சுத்தமான நாத்திகவாதி என்று சொல்லி ஒரு பட்டம் கட்டி விரட்டி அடித்தார்கள். சமயத் துச்சமாக அவரை ஒதுக்கியும் வைத்தார்கள். பாவம் அவர். மனசிற்குக் கஷ்டமா இருக்குங்க.

ஆனால் இப்போது அதுதான் உண்மை. இப்போது அந்த அறிஞரைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். அவர் இறந்ததும் அவருடைய மூளையைத் தனியாகப் பிரித்து எடுத்துக் கொண்டு போய் ஐம்பது ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்கிறார்கள். செய்யட்டுமே. அந்த மாதிரி அறிவு மறுபடியும் கிடைக்குமா.

இதுவரையில் மண்ணில் தோன்றிய மனிதர்களில் இந்த ஐன்ஸ்டீன் என்கிற மனித மூளை மட்டும் ரொம்பவே வேறுபட்டது. ஆக இந்த மூளை மட்டும் எப்படி இவ்வளவு அறிவாற்றலைப் பெற்று இருக்க முடியும் என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு விசயம். ’பிக் பேங் தியரி’ என்று அமெரிக்காவில் ஒரு மெகா சீரியல் ஆறு  வருடங்களாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இன்னும் ஓடுகிறது. பார்த்தேன். அதைவிட நம்ப ஊர் மெகா சீரியல்கள் எவ்வளவோ பரவாயில்லீங்க.

இங்கே சில மெகா சீரியல்களை இரண்டு வருடங்களில் முடித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் சில சீரியல்கள் கித்தா மரத்துப் பாலைப் போல இழுத்து அடித்து இஞ்சி இடிப்பழகி மாதிரி இழுவையோ இழுவை. ஆனாலும் அமெரிக்காவின் மெகா சீரியல் ஒரு 25 வருடங்களாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

அந்தப் பெரு வெடிப்பில் இருந்துதான் கோடிக் கோடியான சூரியன்கள் வெடித்துச் சிதறி வெளியாகின. வெடித்துத் தெறித்து மூலைக்கு மூலையாய்ச் சிதறியும் ஓடின.

அதில் ஒன்றுதான் நம்முடைய சூரியன். இந்தச் சூரியனில் இருந்து உடைந்து வந்தவைதான் பூமி, புதன், வியாழன், வெள்ளி, சனி என்கிற எல்லாக் கிரகங்களும். இந்த வெடிப்பு ஏற்பட்டது 350 லிருந்து 550 கோடி ஆண்டுகளுக்கு முன்னால்… சரி! இதை எப்படி கணக்கிட்டார்கள்.

பூமியின் வயதைக் கண்டுபிடிக்க மூன்று வழிகள் இருக்கின்றன. அதில் முதலாவது, ஆற்று முகத்துவாரத்தில் எவ்வளவு அடிமண் சேர்ந்து உள்ளது என்பதைக் கணக்கிட்டுப் பார்ப்பது.

இரண்டாவது, கடல் நீரில் எவ்வளவு உப்பு சேர்ந்து இருக்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்ப்பது. பூமி உருவாகிய நிலையில் கடல் நீரில் உப்புச் சத்து எதுவுமே இல்லை.

ஆற்று நீரில் இருந்து கடலுக்குள் சேர்க்கப்படும் உப்பின் அளவைக் கணக்கிட்டுப் பார்ப்பதன் மூலம், பூமியின் வயதை ஓரளவுக்கு அனுமானிக்க முடியும். உறுதியாகச் சொல்ல முடியாது.

மூன்றாவதாக, ஒரு வழி இருக்கிறது. அதுதான் மிக மிகச் சரியான வழி. யுரேனியம் – 238 எனும் அணு. அந்த அணு சிதைந்து போய் இருக்கும் தன்மையைக் கொண்டு துல்லிதமாகக் கணக்கிடுகிறார்கள். இதுதான் இன்றைய கணக்கெடுப்பின் இறுதி முடிவு.

யுரேனியம் – 238 என்பது ஒரு வகையான தனிமம். அணுவின் மூலக்கூறைத்தான் தனிமம் என்கிறோம். சுருக்கமாக அணு என்று சொன்னால் எல்லோருக்கும் புரியும்.

இந்த யுரேனியம் – 238 அணுவின் அரைவாழ்வுக் காலம் 4.5 பில்லியன் ஆண்டுகள். அரைவாழ்வுக் காலம் என்பதை ஆங்கிலத்தில் ஹால்ப் லைவ் சைக்கிள் (Halif-life Cycle) என்று சொல்வார்கள்.

அதாவது 450 கோடி ஆண்டுகள். அந்தக் காலக் கெடுவில் யுரேனியம் – 238 அழுகிச் சிதைகிறது. காரீயம் – 206 எனும் வேறு ஓர் அணுவாக மாறுகிறது. சரியா. இது வேதியல் இயற்பியல் விதி.

இந்த விதியின் அடிப்படையில் பூமியின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் பதிந்து இருக்கும் யுரேனியச் சிதைவுகளைக் கணக்கிட்டு, பூமியின் வயதைச் சரியாகச் சொல்லி விடுகிறார்கள். இது உங்களுக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கும். சமாளித்துக் கொள்ளுங்கள்.

இந்தத் தொடர் இரு பாகங்களைக் கொண்டது. இதன் தொடர்ச்சியை நாளைய பத்திரிகையில் பார்ப்போம்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.06.2020

சான்றுகள்:

1. http://en.wikipedia.org/wiki/Uranium-238

2. http://en.wikipedia.org/wiki/Human_evolution

3. http://www.allaboutscience.org/theory-of-relativity.htm

4. https://www.britannica.com/science/human-evolution