அமேசான் காட்டில் அதிசயம் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமேசான் காட்டில் அதிசயம் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 செப்டம்பர் 2019

அமேசான் காட்டில் அதிசயம் - 1

தமிழ் மலர் - 08.09.2019

அமேசான் காட்டில் இரண்டு மைல் உயரத்தில் ஒரு விமானம் வெடித்துச் சிதறுகிறது. ஒரே ஒரு பெண் உயிர் தப்புகிறாள். உலகமே ஆச்சரியப் படுகிறது. அதிர்ஷ்ட தேவதை எப்படி எல்லாம் வந்து போகிறாள். ஓர் அதிசயக் கதை. படித்துப் பாருங்கள். 


தென் அமெரிக்காவில் பெரு என்கிற நாடு. அமேசான் மழைக் காடுகள் அடர்ந்து கிடக்கும் பூமி. மேலே 10,000 அடி உயரத்தில் ஒரு விமானம் பறந்து கொண்டு இருக்கிறது. அதிலே 92 பேர். ஒரு மகிழ்ச்சியான பயணம்.

விடிந்தால் கிறிஸ்மஸ். விமானம் புறப்பட்ட முப்பது நிமிடங்களில் இடி மின்னல்கள். பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டது. மேலும் கீழுமாக இறங்கி ஏறி அலைமோதியது. ஒரு கட்டத்தில் படு பயங்கரமான மின்னல் வெட்டு. 

அந்த மின்னல் வெட்டு விமானத்தின் எண்ணெய்த் தாங்கியைத் தாக்கியது. அப்படியே வலது பக்க இறக்கையைக் கிழித்து வீசிப் போட்டது. இரண்டு மைல் உயரத்தில் பறந்த லான்சா 508 ரக விமானம் தலை கீழாகத் தரையை நோக்கி பாய்ந்து வந்தது. அவ்வளவுதான். இது 1971-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.


விமானம் விழுந்த வேகத்தில் 91 பேர்களின் உயிர்கள் நசுங்கி நார் நாராய்ச் சிதைந்து போயின. ஆனால் ஒரே ஓர் உயிர் மட்டும் தப்பித்துக் கொண்டது. அதிர்ஷ்ட தேவதையின் அதிர்ஷ்டக் காற்று வீசி இருக்கலாம்.

அந்த உயிரின் பெயர் ஜூலியன் கோபக்கே (Juliane Koepcke). பதினேழு வயது மாணவி. உட்கார்ந்து இருந்த இருக்கையோடு விழுந்து இருக்கிறாள். காட்டு மரத்தின் உச்சியில் சிக்கிக் கொண்டாள். அப்படியே தரையில் விழுந்து இருக்கிறாள்.

ஜூலியன் கீழே விழுவதை அமேசான் காட்டு மரங்களின் கிளைகள் அடுக்கடுக்காய் தடுத்து நிறுத்தி இருக்கின்றன. கடைசியில் தரையில் வந்து விழுந்தாள். அந்தப் பெண் உயிர் தப்பியது ஒன்றும் அதிசயம் இல்லை. 


பத்து நாட்கள் அமேசான் காட்டில் அலைந்து திரிந்து காட்டு மிருகங்களிடம் இருந்து உயிர் பிழைத்து வந்தது தான் அதிசயத்திலும் அதிசயம். உலகம் பார்த்த ஓர் அதிசயமான அதிசயம். அமேசான் காடுகளைப் பற்றி கொஞ்சம் சொல்லி விடுகிறேன்.

உண்மையிலேயே அமேசான் காடுகள் என்பது தனி ஓர் உலகம். மிக மிக ஆபத்தான உலகம். காடுகளுக்குள் எக்கச் சக்கமாக மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான். திரும்பி வர முடியும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. அப்படியே திரும்பி வந்தாலும் சித்தம் சிதறிய மனுசனாகத் தான் வர வேண்டும்.

அமேசான் காடுகளில் உயிர் வாழும் விலங்குகள் ஒரு புறம் இருக்கட்டும். அந்தக் காட்டின் இயற்கைச் சூழல்களைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும். இருபத்து மனி நேரமும் இருண்டு போய் கிடக்கும் இருட்டான சூழ்நிலைகள். அதுவும் ஒரு முக்கியக் காரணம். ஒரு சின்ன எடுத்துக்காட்டு. 


மழை பெய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மழை நீர் தரையை வந்து தொடுவதற்கு 10 நிமிடங்கள் பிடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

உண்மையிலேயே அமேசான் காடுகள் அற்புதங்கள் நிறைந்த தனிமை உலகம். அனகோண்டா பாம்பில் இருந்து வனம் தாண்டா காட்டுக் கோட்டான்கள் வரை பேரன் பேத்திகள் பார்த்த உலகம். கலியுலகம் தோன்றுவதற்கு முன்னால் கால் பதித்த காட்டு உலகம்.

திரும்பிய திசை எல்லாம் காட்டு விலங்குகள். உரசிச் செல்வது எல்லாம் ஊசிமுனை காட்டுச் செடிகள். அங்கே ஒட்டி இருக்கும் கலர் கலரான அட்டைகள். மரத்திற்கு மரம் தாண்டிக் குதிக்கும் சிலந்திப் பூச்சிகளின் நர்த்தன நாடகங்கள். பேயாட்டம் போடும் பேய் வௌவால்கள். அடுக்கிக் கொண்டே போகலாம். சரி. ஜுலியன் கதைக்கு வருவோம்.


விழுந்த அதிர்ச்சியில் அந்தப் பெண்ணின் தோள் பட்டை உடைந்து போனது. கையிலே ஆழமான வெட்டு. அந்தக் காயத்தில் சலம் பிடித்து புழுக்கள் முட்டையிட்டு அழுகிப் போன நிலை. 33 புழுக்களைத் தோண்டி எடுத்து இருக்கிறார்கள். அது வேறு கதை. பின்னர் சொல்கிறேன்.

ஜூலியன் காயங்களை ஆற்ற அமேசான் காட்டில் மருந்து மாத்திரைகள் இல்லை. தாவரங்கள் இருக்கின்றன. பார்க்கும் இடம் எல்லாம் தாவரங்கள். ஆனால் எந்தத் தாவரம் எதற்குப் பயன்படும் என்று தெரியாமல் எப்படி பயன்படுத்துவது.

காடுகளில் சுற்றித் திரியாமல் ஆற்று ஓரத்திலேயே நடந்து போய் இருக்கிறாள்.

உயிர்க் கொல்லி பிரான்ஹா மீன்களிடம் இருந்து தப்பித்து இருக்கிறாள். எலிகேட்டர் (alligator) முதலைகளிடம் இருந்து தப்பித்து இருக்கிறாள். விஷப் பாம்புகளின் கடியில் இருந்து தப்பித்து இருக்கிறாள். 


அனகோண்டா மலைப்பாம்புகளிடம் இருந்து தப்பித்து இருக்கிறாள். சிறுத்தைப் புலிகளிடம் இருந்து தப்பித்து இருக்கிறாள்.  கொடும் விஷத் தாவரங்களைச் சாப்பிடாமல் தப்பித்துப் இருக்கிறாள். இப்படி அடுக்கிப் கொண்டே போகலாம்.

விமானத்தில் ஜூலியன் தன்னுடைய அம்மாவின் பக்கத்தில் தான் உட்கார்ந்து இருந்தாள். மூன்று பேர் அமரும் இருக்கைகள். ஜூலியனிற்கு ஜன்னல் ஓரத்தில் இருக்கை.

திடீரென்று விமானம் கறுத்த மேகக் கூட்டத்திற்குள் நுழைந்தது. தொடர்ந்தால் போல இடி மின்னல்கள். பத்து நிமிடங்கள் விமானம் தட்டுத் தடுமாறியவாறு பறந்தது.

மேலே செருகப்பட்டு இருந்த பயணப் பைகள் எல்லாம் கீழே விழுந்தன. கிறிஸ்மஸ் அன்பளிப்புகள், மலர்க் கொத்துகள், பலகாரப் பொட்டலங்கள் மூலைக்கு ஒன்றாய் அங்கேயும் எங்கேயும் சிதறிப் பறந்தன. 


பயணிகள் சத்தம் போட்டுக் கத்தினார்கள். திடீரென்று ஒரு படு பயங்கரமான மின்னல் வெட்டு. விமானத்தின் எண்ணெய்த் தாங்கியைத் தாக்கி வலது பக்க இறக்கையைக் கிழித்து எறிந்தது.

ஒரு சில விநாடிகளில் பக்கத்தில் இருந்த தாயார் காணாமல் போய் விட்டார். ஒரே வார்த்தையில் இப்படிச் சொல்லலாம்.

‘ஜூலியன் கோபக்கே விமானத்தில் இருந்து வெளியே போகவில்லை. விமானம் தான் அவளை விட்டு வெளியே போனது’. 

மின்னல் தாக்கியதும், பயங்கரமான சத்தத்துடன் விமானம் தலைகீழாகப் பாய்ந்தது. ஜூலியன் அந்தரத்தில் பறந்து போனாள். அப்போது அவளுடைய உடல் இருக்கையோடு நன்றாக இறுக்கமாகப் பிணைக்கப் பட்டு இருந்து இருக்கிறது. அந்த விமானத்தின் இருக்கைதான் அவளுடைய உயிரையும் காப்பாற்றி இருக்கிறது.

இங்கே ஒரு விசயத்தை விளக்க வேண்டும். பொதுவாகப் பயணிகள் விமானங்கள் பத்தாயிரம் அடி உயரத்தில் பறப்பது இல்லை. அதற்கும் மேலாகத் தான் பறக்க வேண்டும். 30 ஆயிரம் அடி உயரம் என்பது பாதுகாப்பானது. 


ஏன் தெரியுமா. பத்துப் பதினைந்தாயிரம் அடி உயரம் வரையில் தான் மேகங்கள் இருக்கும். 30 ஆயிரம் அடி உயரத்தில் மேகங்கள் இருக்கா. இடி மின்னல்களும் இருக்கா.

இடி மின்னல்களைத் தவிர்ப்பதற்காகத் தான் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறப்பார்கள். அந்த உயரத்தில் பறந்தால் விமானத்தின் எண்ணெயும் மிச்சப் படும்.

ஆனால் அந்த லான்சா 508 ரக விமானம் பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்து இடி மின்னல்களில் சிக்கிக் கொண்டது தான் ஆச்சரியமான விசயம். கடைசியில் அதற்கும் விடை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

விமானம் தரை இறங்குவதற்கு இன்னும் 15 நிமிடங்கள் தான் இருந்தன. அதனால் விமானம் பறக்கும் உயரத்தைப் பத்தாயிரம் அடிகளுக்கு கீழே கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆக அதை விமானிகளின் தவறு என்று சொல்ல முடியாது.

ஜூலியன் கோபக்கே 2011-ஆம் ஆண்டு, தன் அனுபவங்களை ஒரு நூலாக வெளியிட்டு இருக்கிறார். ‘வானத்தில் இருந்து நான் விழுந்த போது’ (When I Fell From The Sky) எனும் நூல். படித்து இருக்கிறேன்.

அதில் உள்ள தகவல்களைக் கொண்டுதான் இந்தக் கட்டுரையும் எழுதப் படுகிறது. சரி. வினாமத்தை மின்னல் தாக்கியதும் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.



விமானம் சிதறியதும் ஜூலியன் வானத்தில் இருந்து தலைகீழாக விழுந்து இருக்கிறார். படு வேகமாக விழுந்ததால் மூச்சுத் திணறி மயக்கம் அடைந்தார். கண் விழித்துப் பார்க்கும் போது, காட்டுக் கறுப்புத் தரையில் கிடப்பது தெரிய வந்தது.

அவள் விழும் போது மரக் கிளைகளில் சிக்கி மரக் கிளைகளால் தடுக்கப்பட்டு மெதுவாக விழுந்து இருக்கிறாள். அந்தச் சமயத்தில் இருக்கையோடு பிணைக்கப் பட்டு இருந்து இருக்கிறாள். அந்த இருக்கைதான் அவளுடைய உயிரையும் காப்பாற்றி இருக்கிறது.

உடலில் சில பல காயங்கள். தோள் பட்டை உடைந்து நகர்ந்து போனது. கையிலும் கால்களிலும் சின்னச் சின்னக் காயங்கள். காலில் ஓர் ஆழமான வெட்டு. வலது புஜத்திலே அழமான ஒரு கிழியல். 


வானத்தில் இருந்து விழுந்ததுகூட பெரிய விசயம் இல்லை. விழுந்த பிறகு உயிர் வாழப் போராடியது தான் பெரிய விஷயம். உயிர் பிழைத்த பிறகுதான் அவளுக்குப் பிரச்சினையே ஆரம்பமானது.

அவளுடைய உயிரைக் காப்பாற்றிய அதே மழைக் காடுகள் தான் கடைசியில் அவளுக்கே ஒரு சிறைச்சாலையாகவும் மாறியது. வெளியுலக மனிதர்கள் போகாத ஓர் இடத்தில் மாட்டிக் கொண்டாள். காட்டில் இருந்த ஒவ்வொரு புதரிலும் ஒவ்வோர் அபாயம் காத்து நின்றது.

சிறுத்தைப் புலிகள், கொடும் தேள்கள், விஷப் பாம்புகள் போன்றவை பாய்ச்சல் காட்டும் பச்சைக் காடு. நெளிந்து ஓடும் ஆறுகளில் ஆள்கொல்லி பிரான்ஹா மீன்கள். பொலி போடும் எலிகேட்டர் முதலைகள்.

விபத்து நடந்த போது அமேசான் காடுகளில் மழைக் காலம். அவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் டிசம்பர் மாதக் கடுங்குளிர். பற்றாக்குறைக்கு ஜூலியனின் கண் கண்ணாடியும் காணாமல் போனது. அடிபட்டதில் கத்தரிகாய் மாதிரி வீங்கிப் போன கண்கள்.

உயிர் வாழ்வதற்கு உதவியாக எந்த ஒரு கருவியும் இல்லை. ஒரு சின்ன கத்திகூட இல்லை. பிலாஸ்டிக் பொருட்கள் எதுவும் இல்லை. அவள் அணிந்து இருந்த சாதாரண மினி ஸ்கர்ட் மட்டும் உடலோடு ஒட்டி இருந்தது. அவ்வளவுதான். 


சிலிப்பர்களில் ஒரு சிலிப்பர் தொலைந்து விட்டது. சாப்பிடுவதற்கு ஒரே ஒரு மிட்டாய் பொட்டலம். அதுவும் நான்கு நாட்களில் தீர்ந்து போனது. விமானம் விழுந்ததில் இருந்து பத்து நாட்கள் காட்டில் உயிர் வாழ்ந்து இருக்கிறாள். 1972 ஜனவரி 3-ஆம் தேதி காட்டு மரங்களை வெட்டும் தொழிலாளர்களால் மீட்கப் பட்டாள்.

இந்தப் பெண்ணின் கதை உலக மக்களையே உறைய வைத்த கதை. அதிர்ஷ்டத்தின் உச்சக் கட்டத்தையும் தாண்டிய நிலையில் உயிர் வாழ வேண்டும் என்கிற ஒரு மனிதப் பிடிவாதம் தான் அவளைக் காப்பாற்றி இருக்கின்றது.

அவள் அப்படியே அந்தக் காட்டிலேயே காணாமல் கரைந்து போய் இருக்கலாம். விசயம் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே மறைந்து போய் இருக்கலாம். நமக்கும் இந்தக் கட்டுரை கிடைக்காமலும் போய் இருக்கலாம். என்ன சொல்கிறீர்கள்.

உயிர் வாழ்வதற்காக அவள் கதறிய கதறல்கள்; அனுபவித்தச் சித்ரவதைகள் அத்தனையும் அச்சத்தின் உச்சங்கள். அப்போது அவளுக்கு வெறும் 17 வயது.

(தொடரும்)