இந்தோனேசியா மனுசீலா மலையில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தோனேசியா மனுசீலா மலையில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஜூலை 2020

இந்தோனேசியா மனுசீலா மலையில்

தமிழ் மலர் - 18.07.2020

மாலுக்கு என்பது இந்தோனேசியாவின் ஒரு மாநிலம். கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவுக் கூட்டம். இந்தத் தீவு கூட்டத்திற்கு அருகாமையில் சுலவாசி தீவு. சற்று தள்ளி பாப்புவா நியூகினி தீவு.



இந்த மாலுக்கு (Maluku) தீவுக் கூட்டத்தில் மனுசீலா மலைகள் (Manusela mountains) உள்ளன. இந்த மலையின் மலைக் காட்டுப் பகுதிகளில் மனுசீலம் (Manusela) எனும் ஓர் இனத்தவர் வாழ்கிறார்கள். இவர்களை வஹாய் (Wahai) இனத்தவர் என அழைப்பது உண்டு.

மக்கள் தொகை 10,000-க்கும் அதிகமானவர்கள். இவர்கள் அனைவருமே இந்து சமயம் சார்ந்தவர்கள். இவர்கள் பின்பற்றும் இந்து சமயத்தின் பெயர் மனுசீலா நாரஸ் (Manusela Naurus). கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். சற்றுப் புதுமையாக இருக்கலாம். தெரிந்து கொள்வோம்.



நாரஸ் நம்பிக்கை என்பது இந்து மதம் கலந்த ஆன்ம வாதம் (animism). அதாவது இந்து மதமும் ஆன்ம வாதமும் கலந்த ஒரு கலவை. ஆனால் அண்மைய ஆண்டுகளில் மனுசீலம் இனத்தவர்களில் சிலர் கத்தோலிக்க புராட்டஸ்டன்ட் கொள்கைகளையும் (Protestant) ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.

இந்தோனேசியாவின் தெற்கு சுலவாசி மாநிலத்தில் ஒரு வகையான பூர்வீக சமூகத்தவர் வாழ்கிறார்கள். அவர்களின் பெயர் தோராஜன் (Torajan). இவர்களிடமும் ஒரு வகையான வழிபாடு இருந்தது.

அதற்கு நாரஸ் வழிபாடு (Naurus syncretic faith) என்று பெயர். இந்து சமயமும் ஆன்மவாதமும் கலந்த வழிபாடு. அதற்கு அலுக் டோலோ (Aluk To Dolo) எனும் மற்றொரு பெயரும் உண்டு. அதன் பொருள் மூதாதையர்களின் வழி.



இருந்தாலும் இந்த தோராஜன் சமூகத்தவர் இப்போது இந்து சமயத்தையும் பின்பற்றவில்லை. அலுக் டோலோ மூதாதையர்களின் வழிபாட்டையும் பின்பற்றவில்லை. கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.

1900-ஆம் ஆண்டுகளில், தோராஜன் சமூகத்தவர் வெளி உலக மக்களால் அறியப் படாத சமூகத்தவர்களாக இருந்தார்கள். டச்சுக்காரர்கள் வந்தார்கள். இவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றம் செய்து விட்டார்கள்.

தோராஜன் மக்கள் முன்பு பின்பற்றி வந்த அந்த நாரஸ் வழிபாட்டைத்தான் மனுசீலா மலைக் காடுகளில் வாழும் மனுசீலம் சமூகத்தவர்கள் இப்போது பின்பற்றி வருகிறார்கள்.



இந்து சமயத் தெய்வங்களையும்; ஆன்ம வாதத் தெய்வங்களையும் ஒரு சேர வழிபடுவதைத் தான் நாரஸ் வழிபாடு என்கிறார்கள். இவற்றைத் தவிர மனுசீலம் சமூகத்தவர் பின்பற்றும் இந்து மதத்தைப் பற்றி அதிகம் ஆழமாகத் தெரியவில்லை.

மனுசீலம் சமூகத்தவர் அடர்ந்த காடுகளுக்குள் வாழ்வதால் இவர்களின் இருப்பிடங்களைத் தேடிச் செல்வதற்குப் பல நாட்கள் பிடிக்கும். தேடிப் பிடிப்பதும் சிரமமான காரியம்.

முன்பு காலத்தில் யாராவது புது ஆட்கள் போனால் அவர்களை அபேஸ் செய்து விடுவார்களாம். தலையை வெட்டி காவு கொடுத்து விடுவார்களாம். பெரிய கதையே இருந்தது. இப்போது எல்லாம் அப்படி இல்லை. ரொம்பவும் மாறி விட்டார்கள்.


முன்பு காலத்தில் மனுசீலம் சமூகத்தவரைப் பற்றி ஆய்வு செய்ய நினைத்தவர்கள், மனுசீலம் மொழியை நன்றாகப் படித்து தெரிந்து கொண்டு தான் காட்டுக்குள் போய் இருக்கிறார்கள். மொழி தெரியாமல் போனால் உடம்பு திரும்பி வராது என்பது அவர்களுக்கும் தெரியும். 

மனுசீலம் சமூகத்தவர் பின்பற்றும் இந்து சமயம், பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ தீவில் இருந்து வந்தது.

மிண்டானாவோ தீவும் மாலுக்கு தீவும் ஒன்றுக்கொன்று மிக அருகில் உள்ள தீவுகள். பாய்மரக் கப்பலில் அல்லது கட்டு மரங்களில் இரண்டு நாட்களில் போய்ச் சேர்ந்துவிட முடியும்.



முன்பு காலத்தில் மிண்டானாவோ தீவில் (Mindanao) வாழ்ந்த இந்து மக்கள் தான் இந்த மாலுக்கு தீவிற்கும் இந்து மதத்தைக் கொண்டு வந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிண்டானாவோ தீவில், முருகன், விநாயகர், சரஸ்வதி தெய்வச் சிலைகளைக் கண்டுபிடித்தார்கள்.

ஆகவே அங்கே இருந்து தான் மனுசீலம் இனத்தவர்கள் இடையே இந்து மதம் பரவி இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் முடிவு செய்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதம்; பௌத்த மதம்; இந்து பௌத்த மதங்களின் கலப்பு மதம் பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு வந்து இருக்கலாம்.



இந்தோனேசியாவில் ஸ்ரீவிஜய, மஜபாகித் அரசுகள் இந்து மதத்தையும் பௌத்த மதத்தையும் பின்பற்றி வந்தன. அவர்கள் ஆட்சி செய்த போது இந்தியா, தமிழ் நாட்டு வணிகர்கள் அங்கு போய் வணிகம் செய்து இருக்கிறார்கள். 

இந்தோனேசியாவிற்குப் போன தமிழ் நாட்டு வணிகர்கள் அப்படியே பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் போய் இருக்கிறார்கள். அங்கே ஆன்மீக கருத்துக்களையும் பரப்பி இருக்கிறார்கள். இதற்குத் தொல்பொருள் சான்றுகள் உள்ளன.

1917-ஆம் ஆண்டில் மிண்டானாவோ தீவில் பயங்கரமான ஒரு புயல் காற்று; பயங்கரமான வெள்ளம். அப்போது மண்ணுக்குள் பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்த ஒரு தங்கச் சிலை வெளியே தெரிய வந்தது.



அது தாரா தெய்வத்தின் சிலை. தாரா அல்லது ஆர்ய தாரா (Arya Tara) என்றும் சொல்லலாம். அதன் எடை 1.79 கிலோ கிராம். 21 காரட் தங்கத்தில் செய்யப் பட்டது. பௌத்த மதத்தின் சரஸ்வதி தேவி தாராவின் சிலை. 13 ஆம் நூற்றாண்டுக் காலச் சிலை.

இந்து சமயத்தில் இருந்துதான் சரஸ்வதி தேவியின் வழிபாடு பௌத்த மதத்திற்குள் சென்றது என்பதை நினைவில் கொள்வோம். வஜ்ரயான பௌத்தத்தின் ஒரு தந்திர தேவதையாக தாரா சரஸ்வதி தேவி வணங்கப் படுகிறார்.

இந்தச் சிலையைத் தங்கத் தாரா (Golden Tara) என்று அழைக்கிறார்கள். இப்போது இந்த சிலை அமெரிக்கா, சிகாகோ வரலாற்று அருங்காட்சியகத்தில் (Museum of Natural History in Chicago) உள்ளது. 



12-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவை ஸ்ரீவிஜய பேரரசு ஆட்சி செய்தது. அந்த ஆட்சியில் மாலுக்கு தீவுகளும் (Maluku Islands) அடங்கும். 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மஜபாகித் பேரரசு ஆட்சி செய்தது. தென்கிழக்கு ஆசியாவின் முழு கடல் பகுதியையும் அந்தப் பேரரசு ஆட்சி செய்தது.

மஜபாகித் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் மனுசீல இனத்தவர் மனுசீலா  மலைப் பகுதியில் வாழ்ந்து வந்தார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில், ஜாவாவைச் சேர்ந்த வர்த்தகர்கள் மாலுக்கு தீவில் வாசனைப் பொருட்கள் வர்த்தகத்தை ஏகபோகமாக நடத்தி வந்தார்கள்.

மனுசீலம் இனத்தவர் பேசும் மொழியின் பெயர் சோ உப்பா (Sou Upaa). ஏறக்குறைய 11 ஆயிரம் பேர். இவர்களில் 3 விழுக்காடினர் கிறிஸ்தவர்கள்.



மனுசீலம் இனத்தவர் பெரும்பாலோர் மனுசீலா தேசிய பூங்காவில் (Manusela National Park) வாழ்கிறார்கள். பூங்காவில் நான்கு கிராமங்கள் உள்ளன: மனுசீலா (Manusela); இலியானா மரினா (Ilena Maraina); செலுமேனா (Selumena) மற்றும் கனேகி (Kanike). இந்த நான்கு கிராமங்களிலும் மனுசீலம் மக்களைக் காண முடியும்.

இந்தப் பூங்காவில் 3,027 மீட்டர் உயரத்தில் பினையா மலை (Mount Binaiya) உள்ளது. இந்த மலையை அவர்களின் தெய்வச் சின்னமாகப் போற்றுகிறார்கள்.

கி.பி.100-ஆம் ஆண்டில் வர்த்தகர்கள், மாலுமிகள், அறிஞர்கள், அர்ச்சகர்கள் மூலம் இந்து மதம் இந்தோனேசியாவுக்குள் வந்தது. இந்தோனேசியாவின் ஆறு அதிகாரப்பூ ர்வமான மதங்களில் இந்து மதமும் ஒன்றாகும்.



2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் சுமார் 1.7% விழுக்காட்டினர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். பாலி தீவில் 83% விழுக்காட்டினர் பின்பற்றுகின்றனர்.

6-ஆம் நூற்றாண்டில் இருந்து இந்துமதச் சிந்தனைகளை ஒருங்கிணைத்து, இந்து மதத்தின் இந்தோனேசியப் பதிப்பாக இந்தோனேசிய இந்து மதம் உருவானது.

ஏற்கனவே இந்தோனேசியாவில் ஜாவானிய கலாசாரம் இருந்தது. அந்தக் கலாசாரத்துடன் இந்து மதச் சிந்தனைகளும்; இந்து மதக் கருத்துக்களும் இணைந்தன. அந்தப் பாவனையில் இந்தோனேசியாவில் ஒரு புதிய இந்து மதப் பதிப்பு உருவெடுத்தது. அதனால் தான் பாலித் தீவில் உள்ள இந்து மதமும் வேறு இடங்களில் உள்ள இந்து மதமும் மாறுபட்டு உள்ளன.



ஸ்ரீ விஜய, மஜபாகித் பேரரசுகளின் காலத்தில் அங்கே ஜாவானிய இந்து மதக் கலவைகள் தொடர்ந்தன. கி.பி. 1400-ஆம் ஆண்டுகளில் இந்தப் பேரரசுகளில் இஸ்லாத்தின் தாக்கங்கள். அதன் பின்னர் இந்தோனேசியாவின் பெரும்பாலான இடங்களில் இருந்து இந்து மதம் மறைந்து விட்டது.

2010-ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் மத விவகார அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டது. இந்தோனேசியத் தீவுகளில் சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) இந்துக்கள் வாழ்வதாக ஒரு மதிப்பீடு.

அதை இந்தோனேசியாவின் பாரிசாத இந்து தர்மம் (Parisada Hindu Dharma Indonesia) மறுத்தது. 2005-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் 18 மில்லியன் இந்துக்கள் வாழ்ந்ததாக மதிப்பீடு வழங்கியது.



உலகின் பல இடங்களில் இந்து மதம் சார்ந்த மக்கள் அன்றும் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கின்றார்கள். அவர்களில் ஒரு சாரார் இந்தோனேசிய மாலுக்கு தீவில் மனுசீலம் எனும் பெயரில் வாழ்கிறார்கள். அதிகம் பேர் இல்லை. 11 ஆயிரம் பேர் தான்.

அவர்களுக்கு என்று தனி மொழி. தனி வாழ்க்கை. தனி கலாசாரம். தனி பாரம்பரியப் பண்புகள். அவையே அவர்களுக்குத் தனி உலகம். வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவோம்.

சான்றுகள்:

1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Manusela". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.

2. Mark Juergensmeyer and Wade Clark Roof, 2012, Encyclopedia of Global Religion, Volume 1, pages 557 – 558.

3.  Indonesia International Religious Freedom Report 2005 – US State Department, Quote: "Parishada Hindu Dharma Indonesia (PHDI) estimates that 18 million Hindus live in the country".

4. Jan Gonda, The Indian Religions in Pre-Islamic Indonesia and their survival in Bali.