மறக்கப்பட்ட ஜாவா ஓசிங் இந்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறக்கப்பட்ட ஜாவா ஓசிங் இந்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 ஏப்ரல் 2020

மறக்கப்பட்ட ஜாவா ஓசிங் இந்துக்கள்

இந்தோனேசியா கிழக்கு ஜாவாவில் மறக்கப்பட்ட ஒரு சமூகத்திற்குப் பெயர் ஓசிங் (Osing). பலரும் கேள்விப்படாத பெயர். இந்தச் சமூகத்தினர் பெரும்பாலோர் மஜபாகித் (Majapahit) காலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள். பின்னர் மதம் மாறியவர்கள். 


இந்தச் சமூகத்தினர் மறக்கப்பட்ட ஒரு சமூகத்தினராகவே இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

ஓசிங் மக்களின் வரலாறு மிக மிக ஆழமானது. மிக மிக வேதனையானது. இந்துக்களாக இருந்த இவர்களை 1770-ஆம் ஆண்டுகளில் மதம் மாற்றுவதற்கு டச்சுக்காரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். 



இந்தோனேசியாவில் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி (Dutch East India Company) உச்சம் பார்த்த காலக் கட்டம். ஓசிங் மக்கள் டச்சுக்காரர்களை எதிர்த்துப் போராடியதால் மேலும் மேலும் அழுத்தப் பட்டார்கள்.

டச்சுக்காரர்களையும் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியையும் எதிர்த்து ஓசிங் மக்கள் 100 ஆண்டுகள் வரை போராடி இருக்கிறார்கள். இருப்பினும் பல ஆயிரம் பேர் மதம் மாற்றத்தில் சிக்கிக் கொண்டார்கள். அதிபர் சுகர்னோ காலத்தில் மதமாற்றம் சற்றே தளர்ந்தது.



ஆனால் அதிபர் சுகர்த்தோ காலத்தில் மறுபடியும் அழுத்தங்கள். ஓசிங் மக்கள் மீது பற்பல வற்புறுத்தல்கள். பற்பல புறக்கட்டுப்பாடுகள். பற்பல நெருக்குதல்கள். ஒரு பக்கம் வெற்றி. ஒரு பக்கம் தோல்வி.

ஓசிங் மக்களில் சிலர் பயந்து கொண்டு தங்களை மாற்றிக் கொண்டார்கள். இருந்தாலும் பலர் மாற்றங்களைத் தவிர்ப்பதற்கு மலை அடிவாரங்களுக்குத் தப்பித்துச் சென்றார்கள். இன்றும் பலர் அங்கே உள்ள மலைக் காடுகளில் குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
 

‘எங்களை நாங்கள் மறந்தாலும், எங்களின் மூதாதையர்களை எங்களால் மறக்க முடியாது’ என்று சொல்லும் ஓசிங் மக்கள் இன்னும் கிழக்கு ஜாவாவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மேல்மட்டப் புறக்கணிப்புகளையும் சமாளித்து வருகிறார்கள்.

கிழக்கு ஜாவாவில் பஞ்சுவாங்கி மாவட்டத்தில் (Banyuwangi Regency) ஏறக்குறைய 400,000 ஓசிங் மக்கள் இன்றும் வாழ்கிறார்கள். ஓசிங் மக்களை ஓராங் ஓசிங் என்றும் அழைக்கிறார்கள் (Wong Osing Blambangan Banyuwangi). 



13-ஆம் நூற்றாண்டில் இருந்து 18-ஆம் நூற்றாண்டு வரை கிழக்கு ஜாவாவில் பிளம்பாங்கன் எனும் பெயரில் (Blambangan Kingdom) ஒரு சிற்றரசு இயங்கி வந்தது. அந்தப் பிளம்பாங்கன் அரசு ஓர் இந்து அரசு. அதன் தலைநகரம் பஞ்சுவாகம் அல்லது பஞ்சுவாங்கி (Banyuwangi).

அந்தக் காலக் கட்டத்தில், அதாவது 13-ஆம், 14-ஆம், 15-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் பல சிற்றரசுகளும் பல பேரரசுகளும் இயங்கி வந்தன. இருந்தாலும் பிளம்பாங்கன் அரசு வேறு எந்த பேரரசுகடன் இணையவில்லை.  தன்னிச்சையாகவே இயங்கி வந்தது. 



பிளம்பாங்கன் அரசுடன் மஜபாகித் பேரரசும் இணக்கப் போக்கையே மேற்கொண்டு வந்தது. மஜபாகித் பேரரசு 1293–ஆம் ஆண்டில் இருந்து 1527-ஆம் ஆண்டு வரை இந்தோனேசியாவில் ஆட்சி செய்த மாபெரும் அரசு.

பிளம்பாங்கன் சிற்றரசு உருவான கதை நீண்ட நெடிய கதை. பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.04.2020

சான்றுகள்:

1. https://www.youtube.com/watch?v=_dF-Age10KI

2.  Bernhard Platzdasch & Johan Saravanamuttu, ed. (2014). Religious Diversity in Muslim-majority States in Southeast Asia: Areas of Toleration and Conflict. Institute of Southeast Asian Studies. p. 199.

3. https://en.wikipedia.org/wiki/Osing_people#History