இந்தோனேசியா பணத்தாட்களில் சிவன் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தோனேசியா பணத்தாட்களில் சிவன் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 ஏப்ரல் 2020

இந்தோனேசியா பணத்தாட்களில் சிவன் கோயில்

இந்தோனேசியாவின் 50,000 ரூப்பியா பணத்தாட்களில் சிவன் கோயில் பதிக்கப்பட்டு உள்ளது. உலகத்தில் ஒரே ஒரு நாட்டில் மட்டும் தான் அதன் பணத்தாட்களில் இந்துக்களின் தெய்வமான சிவனின் கோயில் ஓவியமாகப் பதிக்கப்பட்டு உள்ளது. 
 
50,000 ரூப்பியா பணத்தாளில் சிவன் கோயில்
 
பணத்தாட்களின் முகப்பில் இராணுவத் தலைவர் குஸ்தி நுகுரா ராய் (Gusti Ngurah Rai) அவர்களின் படம். இந்தப் பணத்தாட்கள் 2011-ஆம் ஆண்டு வெளியிடப் பட்டன. 2016-ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்யப்பட்டன.

இந்தச் சிவன் கோயில் பாலித் தீவின் பிரத்தான் புரத்தில் (Pura Bratan) உள்ளது. 1633-ஆம் ஆண்டு கட்டப் பட்டது. சிவனுக்கும் பார்வதிக்கும் நினைவுச் சின்னமாகக் கட்டப்பட்டது. 



இராணுவத் தலைவர் குஸ்தி நுகுரா ராய்

பாலித் தீவின் தலை நகரம் டென்பசார். அங்கு இருந்து சிங்கராஜா செல்லும் வழியில் பெடுகுல் (Bedugul) எனும் இடத்தில் ஒரு மலை ஏரி உள்ளது. அதன் பெயர் புரத்தான் ஏரி (Lake Bratan). பாலித் தீவின் வடக்கே உள்ளது.

ஓர் எரிமலை வெடிப்பினால் இந்த மலைஏரி உருவானது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 4,900 அடி (1,500 மீட்டர்). இந்த ஏரியைச் சுற்றிலும் நிறையவே இந்துக் கோயில்கள். அனைத்தும் சிறியவை. அவற்றில் புரத்தான் சிவன் கோயில் மட்டுமே பெரியது. 

புரத்தான் சிவன் கோயில்

அந்தக் கோயிலின் படத்தைத் தான் இந்தோனேசியாவின் 50,000 ரூபாய் பணத்தாட்களில் பதிப்பு செய்து இருக்கிறார்கள். இந்தக் கோயில் தான் பாலித் தீவின் பெரிய ஒரு சிவன் கோயில். 


இதுதான் அது... அதுதான் இது...

ஜாவா, ஜோக் ஜகார்த்தாவிற்கு அருகில் இருக்கும் பிரம்பனான் சிவன் கோயில் தான் உலகிலேயே மிகப் பெரிய சிவன் கோயில் ஆகும் (World’s largest Hindu Temple, Prambanan temple. Temple Compounds consist of 240 temples located on a 17 square kilometers area). 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

600 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பாலித் தீவில் புரத்தான் சிவன் கோயில் கட்டப் பட்டது.


50,000 ரூபாய் பணத்தாட்களின் முகப்பில் இராணுவத் தலைவர் குஸ்தி நுகுரா ராய் (Gusti Ngurah Rai) அவர்களின் படம். இவர் இந்தோனேசியாவின் தேசிய விடுதலை வீரர். டச்சுக்காரர்களுக்கு எதிராகப் போராடியவர். 1946-ஆம் ஆண்டு தம்முடைய 29-ஆவது வயதில் வீர மரணம் அடைந்தார்.

அவரின் நினைவாக பாலித் தீவின் அனைத்துலக விமான நிலையத்திற்கு நுகுரா ராய் (Ngurah Rai International Airport) என்று பெயர் வைக்கப் பட்டது.

இந்தோனேசியாவில் இந்து மதம் பன்னெடுங் காலமாகப் பயணித்து வந்து உள்ளது. மற்ற மதங்கள் வருவதற்கு முன்னரே அங்கே இந்து மதம் முக்கியமான மதமாக விளங்கி உள்ளது. 


உலகத்திலேயே அதிகமாக இந்தியர்கள் வாழும் நாடு இந்தியா. தலையாய மதம் இந்து. இருப்பினும் அந்த நாட்டின் பணத் தாட்களில் கூட சிவன் அல்லது சிவன் கோயில் இடம் பெறவில்லை. இந்தக் கட்டத்தில் இந்து மதத்தை நினைவுகூரும் இந்தோனேசியாவிற்கு மதிப்புமிக வாழ்த்துகள்.

இந்தோனேசியாவின் மக்கட் தொகையில் 3 விழுக்காடு தான் இந்து மக்கள். இருப்பினும் இந்து மதத்திற்கு அந்த நாடு முறையான அங்கீகாரம் வழங்கி வருகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.04.2020