விண்ணிலே குப்பைத் தொட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விண்ணிலே குப்பைத் தொட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 ஜூன் 2014

விண்ணிலே குப்பைத் தொட்டிகள்

 மலேசியா தினக்குரல் நாளிதழில் 11.07.2012 பிரசுரிக்கப் பட்டது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, கடைசியில் மனுசனைக் கடிக்கிற கதை தெரியும் தானே. அந்த மாதிரி ஒரு கதை வருகிறது. முன்பு காலத்தில் கீழே குப்பைகள் கிடந்தால், குனிந்து எடுப்பார்கள். குப்பைத் தொட்டிகளைத் தேடிப் போவார்கள். சமயங்களில் புதைத்து அப்புறம் அதையே எடுத்து, காய்கறிச் செடிகளுக்கு உரமாகப் போடுவார்கள். அப்போது அதில் மனிதம் தெரிந்தது. அதிலே ஓர் அழகிய கலாசாரமும் தெரிந்தது.  


சீனாவில் விழுந்த விண்கலம்

இப்போது அந்தக் கலாசாரம் ரொம்பவும் பழசாகி விட்டது.  சில இடங்களில் மிஞ்சிப் போகிறது. குப்பையா... கொண்டு போய் பக்கத்து வீட்டில் கொட்டு. அதை அவன் எடுத்துக் கொண்டு போய் அடுத்த வீட்டில் கொட்டுவான். அடுத்தவன் அதைக் கொண்டு போய் முன்னுக்கு வீட்டில் கொட்டுவான். அப்புறம் அப்படியே குப்பையும் காம்போதி ராகம் பாடிக் கொண்டே கப்பலேறிப் போய் விடும். இது இப்போதைய நசிந்து மெலிந்து போகும் மனிதப் பண்புகள். 



இந்தக் குப்பைக் கலாசாரம் இருக்கிறதே, இது இன்றைய காலத்தில் மண்ணில் இருந்து விண்ணிற்கும் பாய்ந்துவிட்டது. சும்மா சொல்லக்கூடாது. பூமியை விட பூமிக்கு மேலே தான் நிறைய குப்பைக் கூளங்கள், கக்கல் கழிசல்கள் குவிந்து போய்க் கிடக்கின்றன.

விண்வெளிக் குப்பைகள்

என்ன யோசிக்கிறீர்கள். எங்கே இருந்து விண்வெளியில் இந்தக் குப்பைகள் வந்து சேருகின்றன என்று கேட்கலாம். பறக்கும் தட்டுகளில் வேற்றுவாசிகள் யாரும் வந்து கொட்டவில்லை. எல்லாமே நாம் பார்சல் பண்ணி அனுப்பி வைத்தவைதான்.



1957ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி ஸ்புட்னிக் என்ற சின்னஞ் சிறிய செயற்கைக் கோளை, ரஷ்யா விண்வெளிக்கு பிள்ளையார் சுழி போட்டு அனுப்பி வைத்தது. அன்றைக்குப் பிடித்தது ஏழரை நாட்டுக் குப்பை பகவானின் கலாசார நடனம்.

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா. ஸ்புட்னிக் செயற்கைக் கோளின் கடைசிக் கட்ட ராக்கெட், இன்றைக்கும் மேலே சுற்றிக் கொண்டு இருக்கிறது. பாவம்... 55 ஆண்டுகளாக ஓய்வு ஒளிச்சல் இல்லாமல் இன்னும் மேலே சுற்றிக் கொண்டு இருக்கிறது. அன்றைக்குப் போட்ட பூசை புனர்ஸ்காரம் தான். ஓய்ந்தபாடில்லை. 




2010 ஆண்டுவரையில் 50 மில்லியன் குப்பைத் துண்டுகள் விண்வெளியிலே அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்றன என்று கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்கள்.. பெரும்பாலானவை ஒரு சென்டிமீட்டருக்கும் சின்னதான துண்டுகள். (சான்று: http://en.wikipedia.org/wiki/Space_debris)

அமெரிக்காவும் ரஷ்யாவும்

செயற்கை கோள்களை அனுப்புவதில் 1960களில் அமெரிக்காவும் ரஷ்யாவும் ’நீயா நானா’ போட்டியில் களம் இறங்கின. இப்போது உலகின் பல நாடுகள் செயற்கைக் கோள்களை அனுப்புகின்றன. சொந்தமாக அனுப்ப முடியாத நாடுகளுக்கு பல தனிப்பட்ட நிறுவனங்கள், பணத்தை வாங்கிக் கொண்டு பக்குவமாக அனுப்பியும் வைக்கின்றன. 





முக்கால்வாசி செயற்கைக் கோள்களின் ஆயுள் மிஞ்சி மிஞ்சிப் போனால் 10 ஆண்டுகள்தான். அதற்குப் பிறகு அவை செயலற்றுப் போகும். அதன் பின்னர், அவை சின்னச் சின்ன அருவங்களாக மாறி மேலே சுற்றிக் கொண்டே இருக்கும். 

தவிர, அந்தச் செயற்கைக் கோள்களில் இருந்து கழன்று போன திருகுகள், திருகாணிகள், உறைகள், குறடுகள், பிலாஸ்டிக் வகையறாக்கள், வண்ணத் துணுக்குகள், ராக்கெட்டுகளின் கடைசிப் பகுதிகள், சிதறிப் போன மின்கலன்கள் போன்றவையும் அந்தப் பட்டியலில் சேரும். சில செயற்கைக் கோள்கள் அல்ப ஆயுசில் செத்துப் போவதும் உண்டு.


 



காலப்போக்கில் இந்தத் துண்டு உடைசல்களின் வேகம் குறையும். இந்தக் கட்டத்தில் பூமியின் ஈர்ப்பு சக்தி அதிகமாகும்.  அப்போது அவை மெல்ல மெல்ல பூமிக்குள் இறங்கப் பார்க்கின்றன. அப்படி அவை கீழே இறங்குகையில் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைகின்றன. 

 அமெரிக்காவின் ஷட்டல் வான் வாகனம்

காற்று மண்டல உராய்வின் காரணமாக பயங்கரமான அளவிற்குச் சூடேறி, தீப்பிடித்து சாம்பலாக பூமியில் வந்து கொட்டுகின்றன. ஆனால், இந்த மாதிரித் துண்டுகள் மண்ணில்  வந்து விழுவதைவிட மனிதர்கள் மேலே பார்சல் செய்து அனுப்புவதுதான் அதிகமாக இருக்கிறது.



இதுவரையில் அமெரிக்காவின் ஷட்டல் வான் வாகனம்,  ரஷ்யாவின் சோயுஸ் வான் வாகனம் போன்றவற்றின் மீது ஆபத்தான வகைகளில் இந்தத் துண்டுகள் மோதல்கள் நடத்தவில்லை. 

இருப்பினும் சின்னச் சின்ன துண்டுகள் மோதியுள்ளன. 2008ஆம் ஆண்டு வரை விண்ணுக்குப் போன வான்கலங்களில் 100 வான்கல சன்னல்கள் மாற்றப்பட்டுள்ளன.

மூன்று இலட்சம் துண்டுகள்

எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம். 1996இல் பெகாசஸ் எனும் ராக்கெட் விண்வெளியில் வெடித்துச் சிதறியது. அந்த வெடிப்பில் மூன்று இலட்சம் துண்டுகள் சிதறிப் போயின. அந்தத் துண்டுகள் இன்னும் பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.

மேலே சுற்றித் திரியும் இந்த இரும்புத் துண்டுகளைப் பூமியில் இருந்தவாறு அழிப்பதற்கான வழி முறைகள் உள்ளன. லேசர் கதிர்களைப் பாய்ச்சி அழிக்க முடியும். ஆனால், மிக மிகச் சிறியதை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

 

இந்தத் துண்டுகள் ஏதோ வானத்தில் அந்தரத்தில் மிதக்கின்றன என்று தப்பாக நினைக்க வேண்டாம். அப்படி இருந்தாலும் பரவாயில்லையே. ஆனால், அவை மணிக்கு 28,000 கி.மீ அசுர வேகத்தில் பறந்து கொண்டு இருக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா. 

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லலாம். ஒரு விநாடிக்கு பத்து கி.மீ வேகம். கண்ணை மூடி திறப்பதற்குள் அவை 20 கி.மீ தூரம் போய்விடும். அத்தனை வேகம்.  (சான்று: http://en.wikipedia.org/wiki/Pegasus_(satellite)

ஒரே ஒரு செண்டிமீட்டர் நீளம் கொண்ட ஓர் இரும்புத் துண்டை எடுத்துக் கொள்வோம். அது வந்து மோதும் வேகத்தை இப்படி கணக்கு பண்ணிச் சொல்லலாம். ஒரு பெரிய மோட்டார் சைக்கிள் 100 கி.மீ வேகத்தில் வந்து மோதினால் என்ன சேத விளைவுகளை ஏற்படுத்தும். அதுதான் மேலேயும் நடக்கும். இதை ஆங்கிலத்தில் Hyper Velocity Impacts என்று சொல்வார்கள்.

சூரியனின் சுற்றுப் பாதையில்

 வான்வெளியில் சுற்றித் திரியும் பொருள்களின் பயண வேகத்தை இயற்பியல் நியதியின்படி கணக்கிடுகிறார்கள். அந்தப் பொருளைச் சுற்றியுள்ள ஈர்ப்புமண்டலத்தையும் வைத்துக் கணக்கிடுகிறார்கள். ஒரு பொருள், பூமியின் வேகத்துடன் சரி சமமாகச் சுற்றி வர வேண்டும் என்றால் அந்தப் பொருள் ஒரு விநாடிக்கு 7 கி.மீ வேகத்தில் பயணம் செய்ய வேண்டும். 



ஒரு விநாடிக்கு 7 கி.மீ வேகம் என்றால் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். சூரியனைச் சுற்றி வரும் Meteoroids எனும் குறுஎரிமீன்கள், விண்கல்கள், பூமியைப் போன்ற கோள்கள் இன்னும் படுபயங்கரமான வேகத்தில் பயணம் செய்கின்றன.

ஆக, சூரியனின் சுற்றுப் பாதையில், சூரியனை நம்முடைய பூமி நிலையாகச் சுற்றி வர வேண்டும் என்றால் அது எவ்வளவு வேகத்தில் சுற்றி வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள். சும்மா ஒரு கற்பனை செய்து பாருங்கள். மயக்கம் போட்டு விழ வேண்டாம். விநாடிக்கு 30 கி.மீ வேகம்.

பூமியின் ஆயுசு கெட்டி

சூரியனின் சுற்றுவட்டப் பாதையில் பூமி அந்த வேகத்தில் சுற்றி வரவில்லை என்றால் இயற்பியலின் நியதிப்படி பூமி சுக்கு நூறாகச் சிதறிப் போகும். கடந்த 400 கோடி ஆண்டுகளாக, பூமி விநாடிக்கு 30 கி.மீ வேகத்தில் சூரியனின் சுழற்சி வேகத்திற்குத் தாக்கு பிடித்து வருகிறது.

இன்னும் சில ஆண்டுகளில், இந்த உலகம் அழிந்து போகும் என்று வேறு புதிய புரளி. கவலைப்பட வேண்டாம். அது எல்லாம் சும்மா பேச்சு. பூமியின் புவியியல் பஞ்சாங்கத்தைப் படித்துப் பார்த்தேன். இன்னும் ஒரு 400 கோடி ஆண்டுகளுக்கு பூமியின் ஆயுசு கெட்டியாக இருக்கிறது என்று ஜாதகம் சொல்கிறது.




சரி. இன்னும் ஒரு விசயத்தைச் சொல்கிறேன். எந்த ஒரு விண்கல்லும் பூமியின் ஈர்ப்புமண்டலத்தைத் தாண்டி பூமிக்குள் நுழைய வேண்டும் என்றால், அந்த விண்கல்லின் பயண வேகம் விநாடிக்கு 30 கி.மீ வேகத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் பூமியின் ஈர்ப்புமண்டலத்திலேயே அது எரிந்து சாம்பலாகிவிடும். 

ஒரு கி.மீ. அகலம் உள்ள விண்கற்கள் 500,000 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 5 கி.மீ. அகலம் உள்ள விண்கற்கள் பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறையும் வந்து பூமியைத் தாக்குகின்றன. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு 10 கி.மீ. அகலம் உள்ள ஒரு விண்கல் பூமியில் பாய்ந்து டைனோசார் இனத்தையே அழித்துவிட்டது. 


விண்வெளி தொழில்நுட்பத்தின் இடுகாடு 

அடுத்து, எந்த ஒரு விண்கல்லும் பெரிதாக இருக்க வேண்டும் எனும் அவசியமே இல்லை. ஓர் ஐந்து மீட்டர் அகலம் உள்ள விண்கல் பூமிக்குள் நுழைந்தால் போதும். ஹீரோஷிமா, நாகாசாக்கியில் அணுகுண்டு போட்டார்களே அந்த மாதிரியான ஒரு நாசத்தை அந்த ஐந்து மீட்டர் விண்கல் செய்துவிடும். 



இந்த விண்கல்களையாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். பரவாயில்லை. ஏதோ ஒரு சில மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாமியார் வீட்டுக்கு வந்து போவது போல, வருகின்றன போகின்றன.

ஆனால், வான்வெளிக்கு மனிதன் அனுப்பி வைக்கும் விண்குப்பைகள் இருக்கின்றனவே அவற்றை  எதில் கொண்டு போய் சேர்ப்பதாம். விண்வெளியை ஒரு தொழில்நுட்ப இடுகாடாக மாற்றிக் கொண்டு இருக்கிறானே. சொல்லுங்கள்.

இன்றைய காலத்தில் மனித ஒற்றுமை, மனிதச் சகோதரத்துவம், மனிதப் புரிந்துணர்வு, அண்டை வீட்டு அரவணைப்புகள் எல்லாம் எங்கே போய்விட்டன? பௌர்ணமி வெளிச்சத்தில் விளக்கு போட்டு இருக்கிறேன். பதில் கிடைத்ததும் சொல்கிறேன். (முற்றும்)