தேவதாஸ் காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவதாஸ் காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 ஜூலை 2019

தேவதாஸ் காந்தி

தேவதாஸ் காந்தி (Devdas Mohandas Gandhi) என்பவர் மகாத்மா காந்தியின் நான்காவது கடைசி மகன். தென்னாப்பிரிக்காவில் 1900 மே மாதம் 22-ஆம் தேதி பிறந்தவர். தென்னாப்பிரிக்காவில் இருந்து குடும்பத்துடன் மிக இளைய வயதில் இந்தியாவிற்கு திரும்பி வந்தவர். 


இந்தியா திரும்பியதும் காந்தியின் இயக்கத்தில் கலந்து கொண்டார். வாழ்நாளில் பல ஆண்டுகள் சிறையில் கழித்தார். இவர் ஒரு பத்திரிக்கையாளர். இந்துஸ்தான் டைம்ஸ் (Hindustan Times) இதழின் ஆசிரியராக இருந்தவர்.

காந்தியின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் இராஜாஜி (C. Rajagopalachari). இவர் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் (Governor-General of India); சென்னை மாநிலத்தின் பிரதம மந்திரி (Chief Minister of Madras state). இவரின் மகள் லட்சுமி. இவரைத் தான் காந்தியின் மகன் தேவதாஸ் திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது லட்சுமியின் வயது 15. இவருக்கு 28. கொஞ்சல் சிக்கல்.

காந்தி - ராஜாஜி எனும் இரு பெரும் தலைவர்களின் பிள்ளைகளுக்கு இடையே காதல் கனிந்தது எப்படி... கல்யாணம் கைக்கூடியது எப்படி... அதுவும் ஒரு வரலாறு தான். 1920-களில் நடந்த நிகழ்ச்சி. ராஜாஜியின் கதையில் தொடங்குவோம்.


Lakshmi Gandhi, daughter-in-law of ldr. Mohandas Gandhi, feeding her young son Gopu

காந்தியின் அகிம்சை ஆயுதமே பிரிட்டிஷாரை விரட்டும் ஆயுதமாக மாறும் என ராஜாஜி பெரிதும் நம்பினார். காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார்.

ராஜாஜியின் விவேகமான நடவடிக்கைகள் காந்தியைப் பெரிதும் கவர்ந்தன. காந்தியின் பணிகளை ஏற்று நடத்தும் தளபதிகளில் ஒருவராக ராஜாஜி தன்னை உருவாக்கிக் கொண்டார்.

1919-ஆம் ஆண்டில் ரவுலட் சட்டம் அரங்கேறியது. அந்தச் சட்டதிற்கு எதிராக நாடு தழுவிய நிலையில் பொது வேலை நிறுத்தம். அதுவே இந்தியாவில் காந்தியின் தலைமையின் கீழ் நடந்த முதல் முழுமையான போராட்டம்.

சென்னையில் ராஜாஜியின் இல்லத்தில் காந்தி வந்து தங்கி இருந்த சமயத்தில் தான் இந்த போராட்டத்தின் வியூகங்கள் வகுக்கப் பட்டன. அப்போது காந்தியுடன் அவரின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியும் ராஜாஜி வீட்டுக்கு வந்து இருந்தார். 


Devadas Gandhi and Letchumy

காந்தி டில்லி திரும்பிய போது தேவதாஸ் காந்தி அவருடன் செல்லவில்லை. சில பணிகளுக்காகச் சென்னையில் தேவதாஸ் காந்தி தொடர்ந்து தங்கினார்.

இந்தக் கட்டத்தில் தேவதாஸ் காந்தியிடம் ராஜாஜி இந்தி மொழியைக் கற்றார். இந்தி வகுப்புகளை நடத்தி தன்னுடைய நண்பர்களுக்கும் ராஜாஜி இந்திமொழிப் பயிற்சி அளித்தார்.

அதற்கு உறுதுணையாக இருந்தவர் தேவதாஸ் காந்தி. இந்தக் காலக் கட்டத்தில் தேவதாஸ் காந்திக்கும் ராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் ஒருவித ஈர்ப்பு உண்டானது.

தேவதாஸ் காந்தி படித்தவர். நல்ல விமர்சனப் பார்வை கொண்டவர். பல விசயங்களில் சாணக்கியம் பெற்றவர். அவர் மீது லட்சுமி காதல் வயப் பட்டார். இருவரும் துணிந்து தங்கள் காதலைச் சொல்லித் திருமணத்திற்குச் சம்மதம் கேட்டார்கள்.

செய்தி கேட்டு ராஜாஜி, காந்தி இருவருக்குமே அதிர்ச்சி. தேசச் சேவையில் ஒன்றாக இணைந்து போகும் தங்களின் நட்புக்கு வந்த சோதனையாகவே நினைத்தார்கள்.

Mahatma Gandhi with Devdas Gandhi at railway station

மகனின் மனதை மாற்ற முடியுமா என காந்தி முயற்சி செய்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. தேவதாஸ் உறுதியாக இருந்தார். அதே போல ராஜாஜி வீட்டிலும் லட்சுமியும் பிடிவாதமாக இருந்தார்.

காந்தி - ராஜாஜி இருவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். தங்கள் பிள்ளைகளை அழைத்தார்கள்.

உங்கள் காதல் உண்மையானது என்றால் இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் சந்திக்கவோ கடிதப் போக்குவரத்தோ வைத்துக் கொள்ளக் கூடாது. நேர்மையுடன் இதைக் கடைபிடித்தால் உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறோம் என்றார்கள்.

நிபந்தனை ஏற்றுக் கொள்ளப் பட்டது. உண்மையில் அப்படி ஒரு பிரிவு இருவரின் மனதையும் மாற்றிவிடும் என ராஜாஜியும் காந்தியும் எதிர்பார்த்தார்கள். ஆனால் பிள்ளைகளின் உறுதி மனப்பான்மை பெற்றோரின் மனதைக் கரைத்து விட்டது. திருமணத்துக்குச் சம்மதித்தார்கள். 


Devdas Mohandas Gandhi

1933-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் இருந்து வெளியாகி பர்ணகுடி எனும் இடத்தில் காந்தி தங்கி இருந்தார். பல மாத சிறைவாசம். அவரின் உடல் மெலிந்து இருந்தது.

சுதந்திரப் போராட்டக் களத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டியது அவசியம் என ராஜாஜி நினைத்தார்.

காந்தி சம்மதம் தெரிவித்தால்  தன் மகளை அழைத்து வர முடியும். பர்ணகுடியிலேயே திருமணம் செய்து வைக்கலாம் என்று கஸ்துாரி பாய்க்கு ராஜாஜி ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.  சில நாட்களில் நல்ல பதில் வந்தது.

பர்ணகுடியில் 1933-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி லட்சுமி - தேவதாஸ் காந்தி திருமணம் நடைபெற்றது. திருமணம் மிக எளிமையாக நடக்க வேண்டும் என்பதில் காந்தி உறுதியாக இருந்தார்.

மருமகளுக்காகக் கஸ்துாரிபாய் இரு தங்க வளையல்களையும் நான்கு கதர்ப் புடவைகளையும் வாங்கி வைத்து இருந்தார். அதற்குகூட காந்தி முதலில் மறுப்பு தெரிவித்தார்.


Chakravarthi Rajagopalachari sitting affectionately with his grandchildren,
Ramchandra (L),9, & Tara, 13, the children of his son-in-law Devadas Gandhi

திருமணத்தில் கூட்டம் அதிகம் இருக்கக் கூடாது என்று காந்தி விரும்பினார். தன் உறவினர்களுக்குக் கூட தகவல் சொல்லவில்லை. ஆனாலும் சீனிவாச சாஸ்திரி, தொழிலதிபர் ஜி.டி.பிர்லா, சரோஜினிதேவி ஆகியோர் வந்து இருந்தனர்.

கலப்புத் திருமணம் என்றாலும் சாஸ்திரிய முறைப்படி திருமணம் நடந்தது. மணமக்கள் மாலைகளுக்குப் பதிலாக நுால் மாலைகளை மாற்றிக் கொண்டார்கள். பரிசு எதையும் வாங்கக் கூடாது என காந்தி கண்டிப்பாகக் கூறி இருந்தார்.

பிர்லா அளித்த நான்கு பட்டுப் புடவைகளில் சாதாரணமான ஒன்றை காந்தி ஏற்றுக் கொண்டார்.

நேருவும் பட்டேலும் திருமணத்துக்கு வர இயலவில்லை. அவர்கள் சிறையில் இருந்ததார்கள். சிறையில் இருந்த படியே வாழ்த்துத் தந்தி அனுப்பி இருந்தார்கள்.

தம்பதிகளுக்குக் காந்தி தன் கையால் நெய்த நுால் மாலையையும் பகவத் கீதை புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்தார்.

காந்தியின் கால்களில் விழுந்து வணங்கிய பிள்ளைகளிடம் காந்தி சில அறிவுரைகளைக் கூறினார்.

தர்மத்துக்கு விரோதமான எந்தக் காரியமும் இந்தத் திருமணத்தில் நடக்கவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தவத்தைப் போன்ற உங்களின் உறுதியினால் எங்களின் சம்மதத்தைப் பெற்று இருக்கிறீர்கள். கடவுளுக்கு அஞ்சி பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். எனக்கும் என் நண்பர் ராஜாஜிக்கும் இடையிலான நட்பு இதன் மூலம் இன்னும் சிறப்பாக அமைவதாக உங்கள் வாழ்க்கை இருக்க வேண்டும் என்றார்.  இப்படித்தான் தேவதாஸ் - இலட்சுமி திருமணம் நடைபெற்றது.

தேவதாஸ் காந்திக்கு இராஜ மோகன் காந்தி, கோபால கிருஷ்ண காந்தி, இராமச்சந்திர காந்தி, தாரா காந்தி என நான்கு குழந்தைகள்.

அவர்களில் கோபாலகிருஷ்ண காந்தி தமிழில் நன்கு பேசும் ஆற்றல் கொண்டவர். இவர் தான் 2017-ஆம் ஆண்டு இந்தியத் துணை அதிபர் தேர்தலில் நின்று தோல்வி அடைந்தவர்.

மகாத்மா காந்தியின் பேரனை இந்திய மக்கள் மறந்து விட்டார்கள் என்று பலரும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்... என்னையும் சேர்த்துத் தான்...

மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தி 1957 ஆகஸ்டு 3-ஆம் தேதி 57-ஆவது வயதில் காலமானார்.