நாக தோசங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாக தோசங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 மார்ச் 2018

நாக தோசங்கள்

அது ஒரு நல்ல அழகான கோயில். சுமாரான பெரிசு. கோயிலின் ஓர் ஒதுக்குப் புறத்தில் ஓர் அரச மரம். அந்த மரத்தின் அடிப்பாகம் எப்போதும் மஞ்சள் துணியால் சுற்றப்பட்டு இருக்கும். 
 
மரத்தைச் சுற்றி அழகாக ஒரு மண் மேடை. அந்த மேடையில் சின்ன பெரிய முட்டைகள். விரல் விட்டு எண்ண முடியாத பால் போத்தல்கள். அவ்வளவும் காலை அபிசேகத்திற்கு வந்த அர்ச்சனைப் பொருள்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு அபிசேகங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு நாளைக்கு நானூறு முட்டைகள். அரை லிட்டர் பால் என்றால் ஒரு இருநூறு போத்தல்கள். பக்த கோடிகளின் பக்திப் பரவச நிலையின் ஆராதனைகள்.
தயவு செய்து திருப்பதியின் கோடான கோடிகளை இங்கே இழுத்துப் போட்டு கணக்குப் பார்க்க வேண்டாம். அப்புறம் உங்களுக்குத் தான் தலைவலி. மருந்து மாத்திரை தேட வேண்டி இருக்கும்.
 
சரி, எதற்காக இத்தனை முட்டைகள். எதற்காக இத்தனைப் பால் போத்தல்கள். அரச மரத்தில் குடியிருக்கும் நாக தெய்வத்திற்கு செய்யும் நெய்வேத்தியங்கள்.
அந்த நாகம்மாள் என்பது வேறு யாரும் இல்லை. ஒரு நாலடி நீளத்தில் ஒரு சின்னக் குட்டி நாகப் பாம்பு. அந்தப் பாம்பை இப்போதைக்கு யாரும் பார்த்தது இல்லை. பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை.
அந்தப் பாம்பு வெளியே வருவதும் இல்லை. நல்ல நாள், பெரிய நாள் பார்த்து வெளியே வந்து தரிசனம் செய்யுமா என்றால் அதுவும் இல்லை. மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. 
 
ஆனால் இருக்கிறது எனும் ஒரு பெரிய நம்பிக்கை மட்டும் இன்னும் இருக்கிறது.
கல்யாணமாகாத பெண்கள் அந்த அரச மரத்தைச் சுற்றி சுற்றி வருவார்கள். கீழே பால் முட்டை வைத்துச் சாமி கும்பிட்டால் சீக்கிரமாகக் கல்யாணம் நடக்கும் என்று ஓர் ஐதீகம். எந்தப் பெண்களுக்குக் கல்யாணம் நடந்தது என்று. தெரியவில்லை. மலேசியப் புள்ளிவிவர இலாகாவிடமும் புள்ளிவிவரங்கள் இல்லை.
இருந்தாலும் பாலும் முட்டையும் அங்கே ஒரு வாடிக்கை. நாகதோசம், கர்ப்ப தோசம், பிரேம தோசம் உள்ள பெண்களும் இந்தப் புனிதச் சடங்கில் ஐக்கியம். இதனால் ஜலதோசம் வந்து ஜன்னி பிடித்து தஞ்சோங் ரம்புத்தான் போனவர்களும் உண்டு. 
 
போன வருடம் இதைப் பற்றி எழுதப் போய் அடி வாங்கியது தான் மிச்சம். விடுங்கள். துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை. அந்த மாதிரி போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.
நம்பிக்கைதானே மனிதச் சாத்திரம். நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கும் அந்த நம்பிக்கையை நாம் குறைத்துச் சொல்லவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் முட்டைகளையும் பாலையும் கொடுத்து தர்ம சாந்தி தாக சாந்தி செய்து வருகிறார்கள்.
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு செய்யட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. விசயத்திற்கு வருகிறேன்.

1965-ஆம் ஆண்டுதான் ஆகக் கடைசியாக அந்த கருநாகத்தைப் பார்த்தார்களாம்.  மாதம் தேதி தெரியவில்லை. அந்த நாகம் ஒரு வாரம் வந்து போய்க் கொண்டு இருந்து இருக்கிறது. அதன் பிறகு அதை யாரும் பார்க்கவில்லை. அப்போது அது ஓர் அதிசய நிகழ்ச்சியாக இருந்தது.
அந்தச் சமயத்தில் அரச மரம் எதுவும் இல்லை. வேறு என்னவோ ஒரு மரம் இருந்து இருக்கிறது. அந்தக் கட்டத்தில், கோயில் இருந்த இடம், நகராண்மைக் கழகத்திற்குச் சாலை அமைக்கத் தேவைப்பட்டு இருக்கிறது. அதனால் 1971-ஆம் ஆண்டு வேறு இடத்திற்கு கோயிலை மாற்றிக் கொடுத்து இருக்கிறார்கள்.
புதிதாக வந்த இடத்தில் புதிதாக ஓர் அரச மரம் நடப்பட்டது. மஞ்சள் துணி கட்டப்பட்டது. சகல சடங்குகளும் செய்யப்பட்டன. அதில் இருந்து பால் அபிஷேகம் முட்டை அபிஷேகம் தொடர்ந்தன. 
 
இதில் ஒரு சிறப்புச் செய்தி  என்னவென்றால் பழைய கோயிலில் இருந்த பாம்பு மட்டும் புதிய கோயிலுக்கு வரவில்லை. இருந்தால் தானே வருவதற்கு! ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புதிய கோயிலுக்கு பக்தர்கள் எல்லாம் வந்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பழைய கோயிலில் இருந்த நாகத்தைப் பார்த்தும் 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அந்த நாகத்திற்கு வயது இருந்தால் எப்படியும் 50-ஐத் தாண்டி இருக்கும். ஒரு விசயம் தெரியுமா.
மனிதனுடைய சராசரி வயது 72 என்றால் ஒரு பாம்பின் சராசரி வயது 18 தான். அதற்கு மேல் ஒரு வருசமும் இல்லை. ஒன்பது வருசமும் இல்லை. நல்ல பாம்புகள் 20 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதும் இல்லை. 


அடுத்து பாம்புகளுக்கு முட்டை சாப்பிடுவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆனால் ஒன்று தெரியுமா. எந்தப் பாம்பும் எந்தப் பொருளையும் மனிதன் மாதிரி கடித்து மென்று அரைத்துச் சாப்பிடுவது இல்லை.
கோழி முட்டையாக இருந்தாலும் சரி; கோழிக் குஞ்சாக இருந்தாலும் சரி; அதை அப்படியே ஒரே லபக்! அம்புட்டுதான். உயிரோடு இருக்கிற பொருள்களைத் தான் பிடித்து விழுங்கும். செத்துப் போன எந்த ஒரு பொருளையும் பாம்பு சாப்பிடாது. ஆயிரம் பசியாக இருந்தாலும் தொட்டுகூட பார்க்காது. பத்து அடி தள்ளியே நிற்கும்.
அது மட்டும் இல்லை. மனிதன் மாதிரி மென்று சாப்பிட அதற்குப் பற்கள் அமையவில்லை. ரசித்து ருசித்துச் சாப்பிட நாக்கும் இல்லை. அவை ஆண்டவன் படைப்பின் ரகசியங்கள். 
 
அதன் வாய்ப் பகுதியில் நிமிடத்திற்கு நிமிடம் நீட்டி நீட்டிப் பார்ப்பது எல்லாம் அதன் மூக்கு. அதன் மூலமாக வெளியே இருக்கும் பொருள்களின் வாசனை, வாடையைத் தெரிந்து கொள்கிறது. இது மனுசன், அது மாடு, இது குதிரை, அது கோழி என்று தெரிந்து கொள்கிறது. அம்புட்டுத்தான்.
இதற்கு நேர் மாறானது முதலை. அது செத்துப் போன பொருள்களையும், அழுகிப் போன பொருள்களையும் மட்டும் தான் விழுங்கும். ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். முதலை, பாம்பு எல்லாம் உணவுப் பொருள்களைச் சாப்பிடுவது இல்லை. அப்படியே முழுசாக விழுங்கி விடும்.
இவற்றுக்கு எல்லாம் அப்பால்பட்ட ஓர் இனம் இருக்கிறது என்றால் அதுதான் மனித இனம். மன்னிக்கவும். இந்த இனம் இருக்கிறதே சும்மா சொல்லக் கூடாது, 
 
செத்துப் போனதையும் சாப்பிடும். செத்துப் போகாததையும் சாப்பிடும். செத்துக் கொண்டிருப்பதையும் சாகடித்துச் சாப்பிடும்.
அவை எல்லாம் நாளும் புளித்துப் போன சங்கதிகள். அந்த வகையில் நல்ல ஓர் ஒசத்தியான மனித இனத்தின் வழித்தோன்றல் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
சரி. பாம்பு பால் குடிக்குமா? நல்ல ஒரு கேள்வி. இந்த உலகம் இருந்த வரையில் எந்தப் பாம்பும் தண்ணீர் குடித்தது இல்லை. பால் குடித்ததும் இல்லை. அப்படி ஒரு சரித்திரம் படைத்தச் சான்றுகள் எதுவும் இதுவரை கிடைத்ததும் இல்லை.
சில பாம்புகள் தண்ணீரிலே பிறந்து தண்ணீரிலேயே வாழும். தண்ணீரிலேயே செத்தும் போகும். ஆனால் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது. பாம்புகளினால் தண்ணீரைக் குடிக்க முடியாது என்பதுதான் ஓர் அறிவியல் உண்மை.
 
ஆக தண்ணீரே குடிக்க முடியாத பாம்பு இனம், இந்த உலகம் இருக்கும் வரையில் பால் குடிக்கப் போவதும் இல்லை. அது மட்டும் உண்மை. தயவு செய்து இந்த உண்மையை மட்டும் மறந்துவிட வேண்டாம்.
பிள்ளையார்ச் சிலை பால் குடிக்கும் போது பாம்பு மட்டும் பால் குடிக்காதா என்று சிலர் கேட்கலாம். பிள்ளையார்ச் சிலை பால் குடிக்கும் விசயத்தில் இயற்பியலும் வேதியலும் இருக்கின்றன.
சிலைதான் பால் குடித்தது. பிள்ளையார் பால் குடிக்கவில்லை. ஆக இந்தப் பிள்ளையார்ச் சிலை பால் குடிப்பதைப் பற்றி பிறகு வேறு ஒரு கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.
பாம்புக்கு நாக்கு என்பதே இல்லை. சரி. தண்ணீர் குடிக்க முடியாத பாம்பு எப்படி ஐயா பால் குடிக்கும். சொல்லுங்கள். கொஞ்சம் ‘லோஜிக்’காக யோசித்துப் பாருங்கள். முடிந்தால் பாயாசம் கேட்கிறது.  தயிர்ச் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாய் கேட்கிறது என்று சொன்னாலும் சொல்வார்கள்.
நடக்கக் கூடிய விசயம்தான். அதனால் ஊறுகாய் பாட்டில்களுக்குக் கிராக்கி ஏற்பட்டு ஊறுகாய் பாட்டில்கள் அடுக்கடுக்காய் வந்து குவியலாம். மறுநாள் அவையும் மறைந்து போகலாம்.
கேட்டால் சர்ப்பம் பாட்டில்களை விழுங்கி விட்டது என்று ஆவணப் படங்கள் தயாரிக்கப் படலாம். ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அதற்கு அப்புறம்  வேண்டாங்க சாமி… கை எடுத்துக் கும்பிடுகிறேன். ஆளை விடுங்கள்.
 
உயிரியல் கூற்றுப்படி நாக்கு இருக்கும் ஒரு ஜீவராசி மட்டுமே நீரைப் பருக முடியும். அப்படி இருக்கும் போது மில்லியன் மில்லியன் ஆண்டுகளாக நாக்கு இல்லாமல் பச்சைத் தண்ணியே குடிக்க முடியாமல் இருந்த பாம்பு இப்ப மட்டும் எப்படிங்க ஐயா, லிட்டர் லிட்டராகப் பால் குடிக்குது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இது உங்களுக்கு முரண்பாடாகத் தெரியவில்லை.
பாம்பு தனக்கு வேண்டிய நீர்த் தன்மையை அது விழுங்கும் உயிர்ப் பொருள்களில் இருந்து தன் உடலுக்குள் கிரகித்துக் கொள்கிறது. இதுதான் அறிவியல் சொல்லும் உண்மைகள்.
Having a narrow body and small head, and no limbs and chewing teeth, snakes have to swallow their prey whole. Snakes get water from the food they swallow. Food includes: small frogs, lizard, small birds, mice and rats.
சில வகையான பாம்புகளுக்கு அரை செண்டிமீட்டர் அகலத்திற்குச் சின்ன லேசான நாக்கு, வாயின் வெளிப்புற உதடுகளில் ஒட்டிக் கொண்டு இருக்கும். ஆனால் நாகப் பாம்புகளுக்கு அந்த மாதிரியான ஒட்டு நாக்குகள் இல்லவே இல்லை.
Snakes may drink through the tongue groove in the lip.
ஒரு நாளைக்கு ஒரு முட்டை அல்லது இரண்டு முட்டைகளை விழுங்கும் ஒரு பாம்பு அப்புறம் மூன்று நாளைக்கு ஒன்றுமே சாப்பிடாது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.
விழுங்கிய முட்டை செரிக்க வேண்டும். முட்டையின் ஓடு செரிக்க வேண்டும். அதற்காக அது எங்கேயாவது ஒரு சந்து பொந்தில் அமைதியாகப் படுத்தே கிடக்கும். ஏதாவது தொந்தரவு என்றால்தான் இடத்தை விட்டு நகரும்.
அப்புறம் எப்படி, வேண்டுதலுக்காக வைக்கப்படும் நூற்றுக் கணக்கான முட்டைகள் ஒரே நாளில் காணாமல் போகின்றன. அவ்வளவு முட்டைகளையுமா ஒரே ஒரு பாம்பு முழுங்கி விடுகிறது.
இல்லை என்றால் பக்கத்து காடு மலைகளில் இருக்கும் பாம்புகள் எல்லாம் படை எடுத்து வந்து அந்த முட்டைகளைச் சாப்பிட்டு விட்டுப் போகின்றனவா? சொல்லுங்கள்.
அப்படிச் சாப்பிட்டுவிட்டுப் போய் இருந்தாலும் பரவாயில்லைங்க. பல உயிர்களின் பசியைப் போக்கிய புண்ணியமாவது நமக்கு வந்து சேருமே. அதுவும் இல்லையே.
ஒரே ஒரு நாகம் ஒரே ஒரு நாளில் அத்தனை நூற்றுக் கணக்கான முட்டைகளையும் சாப்பிட்டு விட்டுப் போகிறது என்றால் நம்பிக்கை அடிபட்டுப் போகிறது. ஒரே ஒரு நாகம் ஒரே ஒரு நாளில் அத்தனை லிட்டர் பாலையும் குடித்துவிட்டுப் போகிறது என்றால் நம்பிக்கை துண்டு பட்டுப் போகிறது.
பரவாயில்லை. இனிமேல் யாராவது பாம்பு பால் குடிக்குமா என்று கேட்டால் குடிக்கும் என்று சொல்லுங்கள். எப்படி குடிக்கும் என்று கேட்டால் இந்தக் கதையைச் சொல்லுங்கள்.
நம்பவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது பிள்ளையார் பால் குடித்த கதை. மனிதர் அடங்கி விடுவார். அதையும் மீறினால் ஒரே வழிதான்… விவேக் மாதிரி ‘எஸ்கேப்” ஆகி விடுங்கள்.