நிபோங் திபால் மர்ம மாளிகை - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிபோங் திபால் மர்ம மாளிகை - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஏப்ரல் 2020

நிபோங் திபால் மர்ம மாளிகை - 1

தமிழ் மலர் - 03.08.2019

ஒரு செம்பனைத் தோட்டம். வயதாகிப் போன மரங்கள். அங்கே ஒரு 150 ஆண்டு கால மர்ம மாளிகை. பாழடைந்த நிலையில் அனாதையாக நிற்கிறது. அந்த மாளிகையில் மழைக் குருவிகள், ஊர்க் குருவிகள், ஆந்தைகள், வௌவால்கள், குட்டிக் குட்டிப் பாம்புகள், சின்ன பெரிய பல்லிகள், ஜாவா மலைக்காட்டு அரணைகள் மாயா மச்சேந்திரா மாதிரி ஊர்க்கோலம் போகின்றன. 

 

கூடவே நாலு கால் பாய்ச்சலில் எட்டுகால் பூச்சிகள். ஊர்ந்து போகும் சின்னச் சின்ன ஆயிரம் கால் அட்டைகள். ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா. அந்த மாதிரி  அவை எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து நீண்ட காலம் கூட்டுக் குடும்பம் நடத்தி இருகிக்ன்றன. ஆயிரக் கணக்கான பேரன் பேத்திகள் எடுத்து விட்டன.

அந்தக் காலத்துத் தமிழக மன்னர்களின் அரண்மனைகள் நினைவுக்கு வருகின்றன. மாளிகைக்குப் பக்கத்திலே சின்ன ஒரு கோயில். மாரியம்மன் கோயிலா மதுரைவீரன் கோயிலா. தெரியவில்லை.

பைராம் செம்பனைத் தோட்டம் (Byram Estate). நிபோங் திபால் நகருக்கு அருகில் இருக்கிறது. அங்கே தான் இந்த மர்ம மாளிகை கம்பீரமாய்க் காட்சித் தருகிறது. எடுத்த எடுப்பிலேயே ஒரு மிடுக்கான தோற்றம். நெஞ்சத்தை லேசாகக் கிள்ளியும் பார்க்கிறது.




அந்த மிடுக்கில் மாளிகையைக் கட்டியவரின் செல்வச் செருக்கு நன்றாகவே தெரிகிறது. அந்தக் காலத்தில் இந்த மாளிகை எப்படி இருந்து இருக்கும். யோசித்துப் பார்க்கிறேன்.

மாளிகையின் உள்ளேயும் வெளியேயும் எந்தப் பரபரப்பும் இல்லை. மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. ரொம்பவும் அமைதி. பக்கத்தில் சின்ன ஓர் ஓடை சன்னமாய்ச் சலசலத்து ஓடுகிறது. வெளியே மிக அமைதியான சூழல். உள்ளே தான் பிரச்சினை.

அந்தக் காலத்து ஆங்கிலேய மன்னர்கள் கட்டிய மாளிகையைப் போன்ற கட்டமைப்பு. இந்த மர்ம மாளிகை ஒரு பெரிய வரலாற்றையே பின்னணியாகக் கொண்டு உள்ளது. அதைப் பற்றித் தான் சொல்லப் போகிறேன். அதிர்ச்சியான உண்மைகள் தெரிய வரும். பிறகு அந்த மாளிகையைக் கட்டியவரைப் பற்றி தெரிந்து கொள்வோம். பின்னர் அவருக்காகச் சற்று நேரம் அஞ்சலி செய்வோம். 




நிபோங் திபால் மர்ம மாளிகையில் ஆவிகள் உலவுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆசைகள் நிறைவேறாத ஆன்மாக்கள் நிம்மதி அடைவது இல்லையாம்.

அப்படி ஒரு நம்பிக்கை. பாழடைந்த மாளிகைகளில் பாழடைந்த ஜீவன்கள் வாழ்கின்றன என்பது காலா காலத்து ஐதீகம். மனித மனங்களில் அந்த ஐதீகங்கள் இன்றும் சலனங்களை ஏற்படுத்தி வருகின்றன. சரி. கதை சொல்ல நான் தயார். நீங்கள் ரெடியா.

நிபோங் திபால் மர்ம மாளிகை 99 வாசல் கதவுகளைக் கொண்ட மாளிகை. அதனால் அதற்கு ’99 வாசல்கதவு மாளிகை’ என்ற பட்டப் பெயரும் உண்டு.

1860-ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ராம்ஸ்டன் (Ramsden) எனும் ஆங்கிலேயர் அந்த மாளிகையைக் கட்டினார் என்று வரலாறு சொல்கிறது.




இந்த மாளிகையில் பத்து அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையிலும் ஐந்து அல்லது ஆறு கதவுகள். மேல்மாடம், நடன அறை, சமையல் சரக்கு அறைகளில் ஏறக்குறைய 40 கதவுகள் உள்ளன.

ஒரு கதவில் நுழைந்து இன்னொரு கதவின் வழியாக அடுத்த அறைக்குப் போய் விடலாம். கதவுகள் போடும் சத்தத்தில் அங்கே சந்திரமுகியின் கால் கொலுசுகளின் சத்தம் கேட்கிறது. பேய் பங்களா என்று சொல்வார்களே... அதே அதே… அந்த மாதிரிதான் அங்கேயும் மர்மத்தின் உரசல்கள்.

ஈப்போ மாநகருக்கு அருகில் இருக்கும் பத்துகாஜாவில் ’கெல்லி காசல் பேய் பங்களா’ இருக்கிரது. அந்தப் பங்களா பரவாயில்லை போலத் தெரிகிறது. இங்கே இந்தப் பங்களாவிற்குள் உடலை உறைய வைக்கும் அமைதி. உள்ளத்தை உரசிப் பார்க்கும் நிசப்த ஜாலங்கள். 

 


எங்கோ தூரத்தில் ஆந்தைகள் கத்துகின்றன. அந்தச் சமயம் பார்த்து திடீரென்று ஜன்னல் கதவுகள் ‘படார்’ ‘படார்’ என்று அடித்துக் கொள்கின்றன. சமயங்களில் ’ஊய் ஊய்’ எனும் விசில் ஒலி வேறு. எங்கே இருந்து வருகிறது என்றே தெரியவில்லை.

கீழ் வராந்தாவில் நடந்து கொண்டு இருக்கின்றேன். என்னுடன் வந்த இரு நண்பர்களும் மாளிகைக்கு வெளியே நிற்கிறார்கள். நான் மட்டும் உள்ளே போனேன்.

பக்கத்தில் யாரோ பின்னால் நின்று மூச்சு விடுகிற மாதிரி பிரமை. கொஞ்சம் தள்ளிப் போனால் யாரோ தோளில் கையைப் போடுகிற மாதிரி உணர்வு. திரும்பிப் பார்த்தால் சுவரில் வரைந்த டிராகுலா படங்கள் பல்லைக் காட்டிச் சிரிக்கின்றன. எப்படி இருக்கும்.




துணிச்சலைத் திணித்துக் கொண்டு உள்ளே போனால் காற்று இல்லாமலேயே முன்னாடி இருக்கின்ற கதவுகள் ஆடுகின்றன. வேண்டாங்க… லக லக லக… சத்தம் கேட்கிற மாதிரி இருக்கிறது.

நல்லவேளை எனக்கு நெஞ்சுவலி இல்லை. இருந்து இருந்தால் கதையே வேறு. ஆக உங்களுக்கு நெஞ்சுவலி இருந்தால் பத்திரம். சந்திரமுகி சத்தம் போடலாம். சொர்ணமுகி கட்டிப் பிடிக்கலாம்.

சுற்றிப் பார்க்க வேண்டுமா. துணைக்கு கண்டிப்பாக ஓர் ஆள் வேண்டும். இல்லை என்றால் வடிவேலுவிற்கு ஏற்பட்ட நிலைமை வரலாம். தனியாகப் போக வேண்டாங்க பிளீஸ்.

இந்த மாளிகையில் மூலைக்கு மூலை கதவுகள். அதனால்தான் இதற்கு 99 மர்ம மாளிகை என்று பெயர் வைத்தார்களோ. தெரியவில்லை. மாளிகையைச் சுற்றி மேலேயும் கீழேயும் தாழ்வாரங்களைக் கொண்ட நடைபாதைகள். எந்த நேரமும் ‘ஜிலு ஜிலு’ செம்பனைக் காற்று. மனசுக்கும் ஜிலுஜிலுப்பு. 




மேல்மாடிச் சுவர்களில் காதல் கிறுக்கன்களின் கைவந்த சுவரெழுத்துகள். ஆங்கில மொழியிலும் சுடச்சுட காதல் ரசனைச் சொற்கள். அதில் ஒரு கிறுக்கல் இந்த மாதிரி தமிழில் வருகிறது.

’மைனா நன் உனைக் கதலிக்கிரன். நீ எனை கதலிக்கிரயா?’ மொழியில் பிழை இருந்தாலும் பரவாயில்லை. மனசில் உள்ளதைக் காதலன் கொட்டித் தீர்த்து இருக்கிறான். அவளிடம் போய்ச் சொல்லி இருக்க வேண்டியது தானே.

அதற்கு அவள் என்ன சொல்லி இருப்பாளோ தெரியவில்லை. ‘தமிழைச் சரியாக எழுதத் தெரியாத உனக்கு, காதல் ஒரு கேடா’ என்று சொல்லி இருக்கலாம். அப்படியும் நினைக்கத் தோன்றுகிறது.

இன்னும் ஒரு காதல் கிறுக்கு. ‘அன்பே இந்த அரண்மனையை உனக்காக வாங்கித் தருகிறேன். என்னைத் தவிக்க விடாதே’. வார்த்தைகள் நெஞ்சைத் தொடுகின்றன. இந்த வசனம் மேல்மாடியில் ஓர் ஓரமான அறையில் பரிதாபமாய்க் காட்சி தருகின்றது.




இந்தப் பங்களா பல மாமாங்கங்களாகப் பாழ் அடைந்து போய்க் கிடக்கிறது. இதையா காதலிக்கு வாங்கிக் கொடுப்பது. புதுசா ஒரு தாஜ்மகாலைக் கட்டிக் கொடுக்க வேண்டியது தானே.

ஆக இந்த மாதிரி நிறைய வாசகங்கள். சீன மொழியிலும் காதல் ஓவியங்கள் சிரிக்கின்றன. அங்கே உடும்புகள் நடந்து போன சுவடுகளும் தெரிகின்றன.

சொந்தக்காரரைப் போல பெரிய பெரிய பெருச்சாளிகளும் சாகவாசமாய் ஊர்வலம் போகின்றன. பேரன் பேத்திகள் எடுத்து விட்ட நினைப்பில் ஓடிப் பிடித்து கண்ணாமூச்சி விளையாடுகின்றன. மாமன் மச்சான் பெருச்சாளிகளாக இருக்கலாம். ரொம்ப சந்தோஷமாக குடும்பம் நடத்துகின்றன.

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது உண்மையிலேயே அதற்குப் பேய் பங்களா என்று ஒரு நல்ல சான்றிதழ் கொடுக்கலாம். இருந்தாலும் புனரமைப்புச் செய்தால் ஒரு சுற்றுலாத் தளமாக அமையும். பேய் பங்களா எனும் அடைமொழி மறைந்து போகலாம்.




இந்த மாளிகையைப் பினாங்கு பாரம்பரிய பாதுகாப்பு அறவாரியம், தத்து எடுத்து புனரமைப்புகள் செய்து வருகிறது.

முன்பு பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த கவிஞர் வாசு குப்புசாமி அதைப் பற்றிய தகவல்களைக் கூறினார். வாசு குப்புசாமி என்னுடைய நெருங்கிய நண்பர். என்னுடன் இந்தப் பேய் மாளிகைக்கு வந்தவர்.

பினாங்குத் தீவையும் பெருநிலத்தையும் இணைக்கும் இரண்டாவது பினாங்கு பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில் இந்த மாளிகைக்கு விடிவுகாலம் பிறந்து இருக்கிறது.

இரண்டாவது பாலத்திற்கு இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் தள்ளி இந்த மாளிகை இருக்கிறது. இப்போது இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம். வாகனப் போக்குவரத்துகளும் அதிகமாகி வருகின்றன. 




இந்த மாளிகை பொதுமக்களின் வெளிச்சத்திற்கு வந்து விட்டது. விரைவில் மேலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று வாசு குப்புசாமி சொல்கிறார்.

இரண்டாவது உலகப் போரின் போது, ஜப்பானியர்கள் இந்த மாளிகையை ’கலிடோனியா மாளிகை’ என பெயர் வைத்து அழைத்தனர். இராணுவத்தின் தலைமை அலுவலகமாக அதைப்  பயன்படுத்தினார்கள். அப்போது பலரைச் சிரச் சேதம் செய்து இருக்கிறார்கள். அது தானே அவர்களின் கை வந்த கலை.

அதனால் ஆவிகள் உலாவுவதாகச் சொல்கிறார்கள். இருக்கலாம். ஈப்போவில் சிபில் கார்த்திகேசுவை அடைத்து வைத்த ஒரு பள்ளியில் ஆவிகள் உலாவுவதாக மக்கள் சொல்லவில்லையா. அந்த மாதிரிதான் இங்கேயும் இருக்கலாம்.

கீழே ஓர் ஒதுக்குப் புறமான இடத்தில் ஒரு தமிழ் மூதாட்டி வாழ்ந்து வருகிறார். பெயர் முனியம்மா. 80 வயது. 2005-ஆம் ஆண்டில் அவருடைய கணவர் 91-வது வயதில் இறந்து போனார். 




அதில் இருந்து அந்த மூதாட்டி மட்டும் தனியாக அந்த மாளிகையைப் பார்த்து வருகிறார். 2016-ஆம் ஆண்டில் நான் அங்கே போன போது அந்த மூதாட்டி இருந்தார். அவரைப் பற்றிய அண்மைய விவரங்கள் கிடைக்கவில்லை.

இந்த மாளிகையில் பேய் இருக்கிறதாகப் பலர் சொல்கிறார்கள் என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் ’அது எல்லாம் பொய்... பேயும் இல்லை பிசாசும் இல்லை… எல்லாம் பொய்... இருந்தால் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று ரொம்பவும் அசத்தலாகப் பதில் சொன்னார். அவருடைய துணிச்சலைப் பார்த்து நானே அசந்து போனேன்.

அதற்கு முன்னர் அவரும் அவருடைய கணவரும் அந்த மாளிகையைப் பராமரித்து வந்தார்கள். ஒரு சீனர் முதலாளியாக இருந்தார். இப்போது அவர் வருவது இல்லையாம். அவருடைய பேரப் பிள்ளைகள் மட்டும் வந்து இவரிடம் காசு கொடுத்துவிட்டுப் போவதாக முனியம்மா சொல்கிறார். 




அவருக்குத் துணையாக அவருடைய பேரன் வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போகிறார். ஆனால் தங்குவது இல்லை. முனியம்மா மட்டும் இரவில் தனியாகத் தங்கி இருக்கிறார்.

இந்த மாதிரி துணிச்சலான பெண்ணைப் பார்த்த பிறகு, நமக்கும் ஒரு வரட்டுத் துணிச்சல் வந்து விடுகிறது. இருந்தாலும் மாளிகையின்  மிக அமைதியானச் சூழ்நிலை இருக்கிறதே, அதுதான் லேசாகக் காய்ச்சலை வரவழைத்து உதறல் எடுக்க வைக்கிறது.

மாளிகையைப் பார்க்கும் போதே ஆங்கிலேயர்களின் வரலாற்றுச் சுவடுகள் நன்றாகத் தெரிகின்றன. பினாங்கில் இருக்கும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட்டிட வடிவமைப்பு போல இந்த மாளிகையின் கட்டமைப்பும் உள்ளது.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அரச பிரிட்டிஷ் படையினர் தங்கும் மனைவீடுகள் இப்போதைய மலேசிய அறிவியல் பல்கலைக்கழகப் பகுதியில் இருந்தன. அதையும் நினைவு படுத்தி விடுகிறேன். 

இந்த மாளிகையில் ஓர் அதிசயம் என்ன தெரியுமா. இது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் ஆற்றலைக் கொண்டது. அதாவது 24 மணி நேரத்திற்கு ஒரு முறை சுற்றி வருமாம். அப்படிப் பட்ட தொழில்நுட்பத்தில் மாளிகையின் அடிப்பாகத்தில் ஒரு பெரிய சுழல் அச்சு இருந்தது. 




எப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது அந்த மாளிகை சுற்றுவது எல்லாம் இல்லை. நாம் தான் அதைச் சுற்றி வரவேண்டும்.

இப்போது அந்தச் சுழல் அச்சு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏன் என்றால் மாளிகையின் அடிப் பாகத்திற்குச் செல்ல வழி இருப்பதாகவும் தெரியவில்லை. மேலே வெளிச்சம் இருக்கும் இடத்தில் நடப்பதற்கே பயமாக இருக்கிறது. இதில் மாளிகையின் அடிப்பாகத்தில் இறங்கிப் பார்ப்பதா. வேண்டாங்க சாமி. 

இந்த மாளிகையின் சுவரில் உங்களுக்குப் பிடிக்காதவரின் பெயரை எழுதி வைத்துவிட்டு வந்தால் அந்தப் பெயரைக் கொண்டவருக்குப் பைத்தியம் பிடித்து விடுமாம். பக்கத்து கிராமத்தில் உள்ளவர்கள் பேசிக் கொள்கிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை. அதைப் பற்றிய மேல் விவரங்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

03.08.2019



பேஸ்புக் பதிவுகள்

Don Samsa: இது எனது பால்ய நண்பனின் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். அவன் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறான்.

பினாங்கு மாநில போதைப் பொருள் ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வந்த போது... ஒரு நாள் அந்த மாளிகையில் போதைப் பித்தர்களைப் பிடிக்க சென்றிருந்த போது... ஒரு போதை பித்தரை மேல் மாடி வரை துரத்திக் கொண்டு சென்ற போது...

எதிர்ச்சையாக அந்த மாளிகை மேல்மாடி அறை ஒன்றில் அழகிய இந்தியப் பெண்மணி ஒருத்தி சேலை அணிந்து கொண்டு நாற்காலியில் அமர்ந்து இருந்ததை கண்டு அதிர்ந்துப் போனதாக என்னிடம் கூறினான்.

பின்னர் சக காவல்துறை நண்பரோடு மீண்டும் அந்த அறைக்குச் சென்று பார்த்தப் போது அந்தப் பெண் அங்கு காணவில்லை என மேலும் கூறினான். அன்று இரவு துக்கத்தில் இருந்த போது நண்பரின் கனவில் அதே பெண்மணி தோன்றி என்னை எங்கு கண்டீர்களோ அதே அறைக்கு மீண்டும் நீங்கள் வாருங்கள். தனியாக வாருங்கள். உடன் யாரையும் அழைத்து வர வேண்டாம் எனக் கூறி மறைந்தாளாம் அந்தப் பெண்.

ஆனால் நண்பர் ஏதேனும் விபரிதமாக ஆகிவிடும் என முடிவு செய்து அந்த மாளிகை பக்கமே போகவில்லையாம். ஆனால் அந்தப் பெண் மட்டும் ஒவ்வொரு நாளும் கனவில் வந்து... வந்து அழைத்துக் கொண்டு இருந்தாளாம்.

பிறகு நண்பனின் அண்ணன் அவனை அழைத்துக் கொண்டு தாய்லாந்து சென்று வழிபாட்டு செய்த பிறகே அந்தப் பிரச்சனை தீர்ந்தது என கூறி முடித்தான்.

இந்தச் சம்பவம் நடந்தது 2000-ஆம் ஆண்டில். நானும் அந்த மாளிகைக்குச் செல்ல பலமுறை நினைத்து உள்ளேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் மனம் அங்கு செல்ல வேண்டாம் என தடுக்கிறது.

எனக்கும் அந்த மாளிகைக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு உள்ளது போல் ஓர் உணர்வு. பகிர்ந்து கொள்ள எண்ணம் வந்தது எழுத்துக்கள் மூலமாக இங்கு எழுதி விட்டேன். திருப்தி. நன்றி

Ganesan Pachappan >>> Don Samsa அது பாழடைந்த பங்களா. நாம் அங்கு போகும் போதே மனதில் ஒருவித பய உணர்வு வந்து விடுகிறது. அதுவே நம் உடலைச் சிலிர்க்க வைத்துவிடும். அது போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் இரண்டு மூன்று நண்பர்களுடன் செல்வது நல்லது.

Parimala Muniyandy வணக்கம் ஐயா. இது போன்ற திகில் தகவல்களை அதிகம் பகிரவும். மர்ம மேடை கதை கேட்பது போல இருந்தது. அருமை... நன்றி.

Muthukrishnan Ipoh 😆😆 சந்திரமுகி படத்தின் தாக்கங்கள் தான்...

Sri Ram Krishnan ஐயா என்னையும் உங்களுடன் அழைத்துச் சென்றது போல உணர்கிறேன்... லக லக வசனம் சூப்பர்... எழுத்துகளுக்கு உயிர் கொடுப்பதில் நீங்கள் பலே ஐயா... அடுத்தச் சுற்றுப் பயணத்தில் என்னை மறந்து விடாதீர்கள்...

Muthukrishnan Ipoh லக லக வசனம் சூப்பர்.... கருத்துகளுக்கு நன்றி... நன்றி 😆

Prema Rajaram Prema Rajaram வணக்கம். தங்களுடைய கட்டுரை அருமை ஐயா... அந்த மாளிகையின் தோற்றத்தை... மிகவும் அற்புதமாக... தங்கள் எழுத்துக்கள் கூறுகின்றன...

ஐந்தாண்டுகளுக்கு முன்பு... நானும் ஒரு முறை... அந்த மர்ம மாளிகையை... சென்று கண்டது உண்டு... ஆனாலும்... அங்கே புதைந்து கிடக்கும் உண்மைகள் தான் என்ன... என்பதுதான்... இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது ஐயா...!!

Muthukrishnan Ipoh மலேசியாவில் மர்மங்கள் புதைந்த மாளிகைகள் 10 இருக்கலாம்.. அவற்றில் இதுவும் ஒன்று

Thennarasu Sinniah மாளிகையை விட நீங்கள் சொல்வதில் தான் அதி பயங்கரமாக உள்ளது... நானும் வரேன்.. நீங்களும் வாங்க.. சேர்ந்தே போவோம்..

Muthukrishnan Ipoh அப்படீங்களா தம்பி... நேராக போய்ப் பாருங்கள்... உடலில் உரசல்கள் இருக்கும்... 😆😆

Joseph Sebastian  அந்த மாளிகைக்கு நான் சென்று சுற்றிப் பார்த்து வந்துள்ளேன். நிறைய அறைகள் இருக்க அதைச் சுற்றிப் பார்க்க நேரமின்மையால் திரும்பி விட்டேன். அடுத்த முறை பார்ப்போம்

Muthukrishnan Ipoh அறைக்குள் சென்று பார்க்க வேண்டும்... உச்சக் கட்டமே அங்கேதான் இருக்கிறது...

Joseph Sebastian நன்றி அடுத்த முறை பார்ப்போம்

Sivalingam Muniyandi: நல்லதொரு * screen writing style*.

Muthukrishnan Ipoh கருத்திற்கு நன்றிங்க...

Santhakumari Krishnan அழகான மாளிகை. ம்ம்ம்... ஆபத்துகள் நிறைந்த அமைதியான மாளிகை. தகவல் தந்தமைக்கு நன்றிகள் அண்ணா.

Muthukrishnan Ipoh வாய்ப்பு கிடைத்தால் போய்ப் பாருங்கள்...

Santhakumari Krishnan "ஐயோ வேண்டாம் அண்ணா" நான் வரவில்லை இந்த விபரீத விளையாட்டுக்கு!"

Muniandy Yellai சுற்றுலா தளமாக உருவாக்கினால் நாம் பேய்களைச் சந்திக்கலாம்

Muthukrishnan Ipoh பேய்களைப் பார்க்க அவ்வளவு விருப்பமா... 😆

Santhanam Baskaran அரிய தகவல்கள். நன்றி. அனைவருக்கும் இனிய அன்பு வணக்கங்களுடன் வார இறுதி நாள் இனிதாக அமைய வேண்டுகிறேன்.

Muthukrishnan Ipoh நன்றிங்க...

Viji Nijtha அருமையான பதிவு... அந்த மாளிகையை பார்க்க ஆவலாய் இருக்கிறது.


Viji Nijtha >>> Muthukrishnan Ipoh: Ungalai than udan alaithu sellanum 😀😀 (உங்களைத் தான் அழைத்துச் செல்லணும்)

Muthukrishnan Ipoh >>> Viji Nijtha: பிரச்சினையே இல்லை... பேய் பிசாசு கண்ணில் பட்டால் நான் முதலில் ஓடுகிறேன்... என் வேகத்திற்குப் பின்னால் ஓடி வர முடிந்தால் சரி...

Arul Jsr மறுபடியும் கிடைக்காத வாழ்க்கை...

Muthukrishnan Ipoh 😆😆

Tamil Zakir பேய்படம் பார்த்தது போல் இருக்கு

Muthukrishnan Ipoh 😆 அப்படீங்களா

Baakialetchumy Subramaniam காலை வணக்கம் சகோதரரே அருமையான தகவல். ஒரு முறையேனும் சென்று பார்த்திட வேண்டும்

Muthukrishnan Ipoh வணக்கம்... கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம்...

Baakialetchumy Subramaniam >>> Muthukrishnan Ipoh நன்றி

Jayanthi Bala படிக்கும் போதே பயமா இருக்கு சார்!!!!

Muthukrishnan Ipoh நேராகப் பார்க்கும் போது கொஞ்சம் பய்மாக இருக்கவே செய்யும்

Kumar Murugiah Kumar's: Wonderful story ❤️

Muthukrishnan Ipoh நன்றிங்க

Sambasivam Chinniah: Arumai ayyah.

Muthukrishnan Ipoh நன்றிங்க

Nagoor Bhanu: Aarvattai thundividdathu ayya.... Itupole butterworth oru periye vedu ullathu... Ipoluthu konja naadkalai aal madamaddam undu... Iraivil paarke konjam bayamagethan irukum... 🤐

(ஆர்வத்தைத் தூண்டி விட்டது ஐயா... இது போல் பட்டர்வர்த்தில் ஒரு பெரிய வீடு உள்ளது... கொஞ்ச நாட்களாய் ஆள் நடமாட்டம் உண்டு... இரவில் பார்க்க கொஞ்சம் பயமாகத் தான் இருக்கும்...)

Muthukrishnan Ipoh தகவலுக்கு நன்றிங்க ஐயா

Rajendran Perumal அருமை...

Muthukrishnan Ipoh நன்றிங்க

Malathi Nair 1st time hearing.

Sathya Raman இந்த கட்டுரையைப் படிக்கும் போது மெய்யாலுமே சந்திரமுகி படத்தை மீண்டும் பார்த்த உணர்வு தான் தோன்றியது. ஆரம்பத்தில் மாளிகை மகத்தானதாகத் தான் இருந்திருக்க வேண்டும். இடையில் இந்த மந்திர வாதியின் சூனிய வேலைகளால் வெறிப் பிடித்த மாளிகையாக மாறி இருக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் இந்த மாளிகையை பார்க்கவே விரும்புகிறேன். நல்ல தகவல் மிக்க விவரத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க சார் 🙏

Tana Letchumy: Nantri iyah

Don Samsa வணக்கம் தலைவரே... கட்டுரை அருமை. தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளது. உங்களுக்கு ஒரு தகவல்.

இந்த மாளிகையை பற்றி எழுதப் போகிறேன் என நீங்கள் நம் புலனத்தில் குறிப்பிட்டீர்கள். 2016-ஆம் ஆண்டில்.இன்னும் என் நினைவில் உள்ளது. அப்போது நீங்கள், நான் மற்றும் டொல்பின் மூவரும் இந்த மாளிகையைப் பற்றி புலனத்தில் எழுத்துக்கள் மூலமாகப் பகிர்ந்த போது... இப்போது அதனை மெய்யாக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி தலைவரே. இன்னொரு சம்பவம் கூறுகிறேன்.

Jothy Subramaniam நிபோங் திபாலின் மர்ம மாளிகை. இந்த மாளிகையைப் பற்றி அந்தக் காலத்து மனிதர்கள் பல பல கதைகளைச் சொல்லிக் கேட்டு இருக்கிறேன். இங்கே ரொம்ப பக்கத்தில் தான். ஆனால் இன்னமும் போனதில்லை. பயம் தான். ஆனால் தூரத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன்.

Muthukrishnan Ipoh பயப்பட வேண்டாம்... பேய் வந்தால் நீங்களும் லக லக என்று சத்தமாக சத்தம் போடுங்கள்... எனக்குப் போட்டியா என்று பேய் ஓடி விடும்...

Jothy Subramaniam >>> Muthukrishnan Ipoh: சரி சரி.. அடுத்த முறை நீங்கள் சொன்ன மாதிரியே செய்து விடுகிறேன்..