மலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஜூன் 2016

மலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள்

காக்கையில்லா சீமையிலே...
கோட்டுப் பால் உரிக்கையிலே...
வெட்கமெல்லாம் போகுதய்யா...
வயிறெல்லாம் வேகுதய்யா...

வாக்கப்பட்ட சீமைக்கு வயிறு காஞ்சிப் போறேன் என்று சொல்லிக் கைநாட்டுப் போட்டு… சத்தியம் பண்ணி... கிராமத்தை விட்டுப் புறப்படும் போதே கடனாளிகளாகத் தான் புறப்படுகிறார்கள்.



யார்... நெல்லை முல்லைச் சீமைகளின் மண்வாசனைகள் ான். அதாவது உங்களுடைய தாத்தா பாட்டிகள். அதாவது உங்களின் மூதாதையர் வழிச் சொந்த பந்தங்கள். அாவு உங்கள் உடில் ஓடும் சிவப்புக் கர் இரத்த்ின் சந்தக்காரர்கள்.

என்ன... ந்த உண்மையை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா... அல்லது கிரகித்துக் கொள்ளத் தான் முடியவில்லையா... பரவாயில்லை... உண்மை கசக்கத் தானே செய்யும். இருந்தாலும் எங்க தாத்தா ஒரு கைநாட்டு... ஆனால் அவர் சிங்கம்டா... என்று நெஞ்சைத் தட்டிக் கொள்ளுங்கள்.


கிராமத் தலைவரிடம் கைநீட்டி வாங்கியக் கடன்.
சொந்த பந்தங்களிடம் கைமாற்றுக் கடன்.
வயல்காட்டை அடகு வைத்ததில் வட்டிக் கடன்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பியதில் சமரசக் கடன்.
குடிசையின் மேல்தாரைக்கு ஒட்டுப் போட்டதில் கடன்.
காளைக்கு விதையடிக்கக் கொண்டு போனதில் கடன்.
ஐயனார் சாமிக்கு அரிவாள் கத்தி வாங்கியதில்
அஞ்சடிக் கடன்.

இப்படி எக்கச்சக்கமான கடன்கள். அந்தக் கடன்களின் வாரிசுகளாக வட்டிக் குட்டித்
தொல்லைகள். அந்தக் கடன்களுக்குக் கொஞ்சமாவது தண்ணீர் காட்ட வேண்டும். இல்லை என்றால் சொந்த பந்தங்கள் சும்மா இருக்காது. வெற்று வார்த்தைகளை அள்ளிக் கொட்டி மானத்தை வாங்கி விடுவார்கள்.

அடுத்து, கடல் கடந்து போகும் பிரயாணத்துக்கான தட்டு முட்டுச் செலவுகள். வேறுவழி இல்லாமல், வேலைக்கு ஆள் சேர்த்த கங்காணியிடமே கடன் வாங்க வேண்டி இருக்கும். இங்கேதான் ஆரம்பக் கடன்கள் அதிரடியாக ஆரம்பிக்கின்றன.

ஆக, தமிழகத்தை விட்டுப் புறப்படும் போதே ஒரு தொழிலாளி பெரிய கங்காணிக்குக் கடன்காரராகத் தான் புறப்படுகிறார். இந்த முதல் கடன் தான் பின்னர் காலத்தில் முதலைக் கடனாக விஸ்வரூபம் எடுக்கிறது. ஒரு சாமான்ய மனிதனை வெட்டி வீசப் போகும் ஒரு பயங்கரமான சதித் திட்டம். பெரிய கங்காணி பயன்படுத்தப் போகும் துருப்புச் சீட்டு. ஆக பிறந்த மண்ணிலேயே அந்தச் சாமன்ய மனிதன் கடனாளியாகப் புலம் பெயர்கிறான்.

இது அதோடு முடிந்து போவது இல்லை. மலாயாவில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அங்கேயும் பலப்பல சடங்குச் சம்பிராதயச் செலவுகள். கவுண்டமணிக்கு காதுகுத்து… தீத்தம்மாவுக்கு திருமணம்… ஈச்சப்பனுக்கு ஈமச்சடங்கு… நல்லம்மா வயசுக்கு வந்துட்டா என்று இப்படி வரிசையாக பலப்பல சடங்குச் சங்கதிகள். அதே கங்காணியிடம் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய கட்டாய நிலை. அதுவும் அதோடு நின்று போவது இல்லை. மலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்களின் அவலங்கள் தொடரும்.

சஞ்சிக் காலத்தில் எழுதப்படாத ஒரு சாசனங்கள்

தோட்டத்தில் கங்காணிக்குச் சொந்தமான மளிகைச் சாமான் கடை இருக்கும். அல்லது பெட்டிக் கடை இருக்கும். அல்லது இரண்டுமே இருக்கும். அந்தக் கடையில்தான் கங்காணி போட்ட விலையில் சாமான்களை வாங்க வேண்டும். அப்புறம் இந்தக் கடனும் ஏற்கனவே ஊரில் வாங்கிய பழைய கடனும் ஒன்று சேர்ந்து கைகுலுக்கி தொழிலாளியின் கழுத்தை நெரித்துவிடும்.

அடுத்து வருவது மகா பெரிய கைங்கரியம். தோட்டத்தின் துரையிடம் இருந்து தனக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் மொத்த சம்பளத்தையும் பெரிய கங்காணிதான் வாங்குவார். அது சஞ்சிக் காலத்தில் எழுதப்படாத ஒரு சாசனம். பொதுவாக படிப்பறிவு இல்லாதவர்களைத் தான் கூலி வேலைக்கு அழைத்துச் சென்று இருப்பார்கள்.

படித்தவன் ஏன் வருகிறான். கும்முனியில் மாடு மேய்க்கப் போய் இருப்பான். படிப்பு வாசனை இல்லாதர்களின் கல்வி அறிவின்மை கங்காணிகளுக்குச் சாதகமாய் அமைந்து போகிறது.

வேட்டிக்கு ஒட்டுப் போட்ட கணக்கு; முந்தானைக்கு முடிச்சுப் போட்டக் கணக்கு; கிழிஞ்ச கோவணத்தைப் பிழிஞ்சு போட்ட கணக்கு; இப்படி எக்கச்சக்கமாய் கணக்குகளை எழுதி அசலும் வட்டியுமாக வரவில் வைத்துக் கொள்ளுவார்.

எல்லாம் வேலைக்கு ஆள் சேர்த்த கங்காணியின் கைக்கணக்குதான். தொழிலாளியின் சம்பளப் பணம் முழுவதும் கங்காணியிடமே மாட்டிக் கொள்ளும். அதனால் சம்பளப் பணத்தைக் கண்ணால் பார்க்காமலேயே வேலை செய்ய வேண்டிய ஒரு கட்டாயம். சிலர் சம்பளப் பணத்தைப் பார்க்காமலேயே செத்துப் போனதும் உண்டு.

கொம்பு ஊதி தப்பு அடித்த ஒரு பிரட்டுக்களம்

கூலிகளின் வீடுகளைக் கூலி லயன்கள் என்று அழைத்தார்கள். Line எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து தான் லயம் எனும் சொல் உருவானது. குதிரை லாயங்களைப் போன்று வரிசையாகக் கட்டப்பட்டு இருந்தன. வீடுகள் என்று சொல்ல முடியாது. தகரக் குடிசை எனும் காலனித்துவ அப்பார்ட்மெண்டுகள்.

விடியல் காலையில் கொம்பு ஊதப்படும் அல்லது தப்பு அடிக்கப்படும். எல்லோரும் பிரட்டுக் களத்தில் கூடவேண்டும். பேரட் கிரவுங் Parade Ground என்று ஆங்கிலேயர்கள் அழைத்தார்கள். அதையே பிரட்டுக் களம் என்று நம்மவர்கள் குறிப்பிட்டனர். பேரட் என்பது பிரட்டு என்று மாறியது.

அங்கிருந்து அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். இலங்கையில் இருந்த மலையகத்தில் வேறு மாதிரியான வேலைகள். தேயிலைக் கொழுந்து எடுத்தல், காபிப் பழம் பறித்தல், செடிகளைக் கவாத்து செய்தல், களை எடுத்தல், புதிய தோட்டம் உருவாக்கக் காடுகளைத் திருத்துதல் போன்ற பணிகளைச் செய்தனர்.

19-ஆம் நூற்றாண்டில், ஆப்ரிக்காவில் இருந்த ஆங்கிலேய காலனி நாடுகளுக்கு அனுப்பப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் விவரங்கள்:

•    மவுரிசியஸ் - 453,063
•    பிரிட்டிஷ் குயானா - 238,909
•    டிரினிடாட் - 143,939
•    ஜமாய்க்கா - 36,412
•    கிரேனடா - 3,200
•    செயிண்ட் லூசியா - 4,350
•    நாட்டால் - 152,184
•    செயிண்ட் கீட்ஸ் - 337
•    செயிண்ட் வின்செண்ட் - 2,472
•    ரியூனியன் தீவுகள்- 26,507
•    சுரிநாம் - 34,304
•    பீஜி - 60,965
•    தென்னாப்பிரிக்கா - 32,000
•    செய்சீல்ஸ் - 6,315
•    மொத்தம் - 1,194,957

ஓர் இழிவான வாழ்க்கையில் இனம் தெரியாத ஜடப் பொருளாகிப் போன சஞ்சிக்கூலிகளின்  பரிதாப நிலையைப் பார்க்கும் போது மனம் பதைக்கிறது.

வேலைச் சுமை. வாழ்க்கைச் சுமை. மனசுச் சுமை. இவற்றை மறக்க மதுபானத்தில் ஐக்கியமாகிறார்கள். அந்த வேதனையில் மனதை நெகிழ வைக்கும் பாட்டுக் கச்சேரிகள். ஆக வேறுவழி இல்லாமல் முன்வினைப் பயன் என்று மனசைத் தேற்றிக் கொள்கிறார்கள்.

கொத்து கொத்தான வன்னுகர்வுகளைத் தாங்க முடியாமல்

இந்தத் துயரங்களில் இருந்து விடுபட்டு தப்பிக்க விரும்பினாலும் அது நடக்காத காரியம். இந்தியாவிற்குத் திரும்பிச் செல்ல நினைத்தாலும் அதுவும் நடக்காத காரியம். சட்டம் பேசினாலும் அது சரிபட்டு வராது. கங்காணியும் சரி துரையும் சரி... சிரித்துக் கொண்டே கழுத்தை நெரித்து விடுவார்கள். அறுக்க மாட்டார்கள்.

பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வது என்பது அப்போதைக்குப் பெரிய இடத்து வாடிக்கை. அதில் துரைக்கும் முக்கிய பங்கு இருக்கும். புருசன்காரன் ஒன்றுமே செய்ய முடியாது. தன்னுடைய பொருளை அடுத்தவனுக்குத் தாரை வார்க்க வேண்டிய நிலை. இதை எல்லாம் பெண்களும் சகித்துக் கொள்ள வேண்டும். மறுத்தால் ஏதாவது காரணம் காட்டி அலைக்கழிப்பார்கள்.

வெள்ளைக்காரத் துரைக்கு இணங்கி ஒத்துப் போனால் சில பல சலுகைகள் கிடைக்கும். அதற்காகவே ஒரு சில பெண்கள் இணங்கிப் போவதும் உண்டு. என்ன செய்வது. இருக்கிற உடம்பைக் காட்டியாவது இல்லாததைத் தேடிக் கொள்வோம் என்று முடிவு எடுத்து இருக்கலாம். பாவப்பட்ட ஜீவன்கள்.

இதில் கணவன்மார்கள் சிலர் துணை போனதும் உண்டு. மேலிடத்துப் வன்முறைகளைத் தாங்க முடியாமல்… அவர்களின் கொத்து கொத்தான வன்னுகர்வுகளைத் தாங்க முடியாமல்… சில பெண்கள் தூக்குப் போட்டுச் செத்துப் போனார்கள். சொல்லுவது எல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறு எதுவும் இங்கே எழுதப்படவும் இல்லை.

கங்காணிக்கு தனியாக ஒரு செக்ரோல்

கராராக வேலை வாங்குவது; விசுவாசமாக இருப்பது.  இந்த இரண்டும்தான் வெள்ளைத் தோல்களுக்கு ரொம்பவும் பிடித்தமான விஷயம். அதற்காகக் கங்காணிக்குச் சன்மானம் வழங்க வேண்டும் இல்லையா. அதற்கும் ஒரு வழி இருந்தது. கூலியாட்களின் கூலியில் இருந்து ஒரு பகுதி பிடித்தம் செய்வார்கள். 

அதற்குப் பெயர் தலைக்காசு அல்லது கங்காணிக் காசு. பிடித்தம் செய்த அந்தத் தொகையை வெள்ளைக்காரத் துரையே கங்காணிக்குச் செக்ரோல் போட்டுக் கொடுப்பார். கடல் பயணத்திற்குச் செலவானத் தொகை இருக்கிறதே. அது வேறு கணக்கு. அது கூலிகளின் ஊதியத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிடித்தம் செய்யப்படும். அது கம்பெனிக்குப் போய்ச் சேரும்.

பதிவுகாசு என்று இன்னும் ஒரு வகை பிடித்தம் இருந்தது. ஒரு கங்காணி தன்னோடு அழைத்து வந்தவர்களின் பெயர்களைத் தன் கணக்கில் பதிவு செய்து இருப்பார். அவ்வாறு பேர் பதியப்படும் ஒவ்வொரு தொழிலாளியின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு நாளைக்கும் மூன்று விழுக்காட்டுப் பணம் கங்காணியின் கணக்கில் சேர்க்கப்படும். அந்த வகையில் ஒரு கங்காணி தன் சம்பளத்தைவிட அதிகமாகவே சம்பாதித்தார். பற்றாக்குறைக்கு கலிகுலா பெண் சகவாசம்.

பெரும்பாலான கங்காணிகளுக்கு இரண்டு மூன்று மனைவிகள் இருப்பார்கள். இருக்க வேண்டும். அது கங்காணியின் கௌரவப் பிரச்சினை. ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போய் ஆட்களைப் பிடித்துக் கொண்டு வரும் போது கூடவே ஒரு பெண்ணையும் கல்யாணம் பண்ணிக் கொண்டு வருவார். இந்த வயது இந்த வாக்கு என்று வித்தியாசம் எதுவும் இல்லை. இதில் வயசுக்கு வராத பிள்ளைகளுக்குத் தாலி கட்டி அவர்களைத் தோளில் தூக்கி வந்த கதைகளும் உள்ளன.

அடுத்து இலங்கை மலையகத்தில் நடக்கின்ற விஷயம். தேயிலை அல்லது காபிப் பழம் சேகரித்து முடிந்த பிறகு, சேகரித்தவை எடை போடப் படும். இது கணக்கர்களின் வேலை. நிர்ணயம் செய்யப்பட்ட அளவுக்கும் குறைவாக அன்றைய சேகரிப்பு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் ஒரு தொழிலாளியின் ஒரு நாள் ஊதியத்தில் பாதி சம்பளம் வெட்டப்படும். இதற்கு அரைப்பேர் போடுதல் என்று பெயர்.

கூலியாளுக்குக் கிடைக்கும் கூலி குறைந்து விட்டால் கங்காணிக்குக் கிடைக்கும் தலைக் காசும் குறையும் இல்லையா. அதனால் கங்காணி கோபப்படுவார் இல்லையா. அதனைத் தொழிலாளர்கள் வேதனையுடன் பாடினார்கள்.

அரைப் பேராலே - ஏலேலோ - கங்காணிக்கு - ஐலசா
தலைக்காசு - ஏலேலோ தவறிப்போச்சு - ஐலசா
கோபத்தோடே - ஏலேலோ கங்காணியும் - ஐலசா
குதிக்கிறானே - ஏலேலோ கூச்சல் போட்டு - ஐலசா
ஆண்கள் பெண்கள் - ஏலேலோ அடங்கலுமே - ஐலசா
அவனைப் பார்த்து - ஏலேலோ அரளுமே – ஐலசா


இலங்கை மலையகத் தோட்டப் புறங்களில் கங்காணிமார்களின் அதிகாரம் அளவு கடந்து போனது. இந்தியாவின் கிராமத்து ஜமீன்தாரின் நிலைமையை மிஞ்சிப் போய் இருந்ததாகவும் சொல்லப் படுகிறது. கங்காணிகள் ஈவு இரக்கமின்றி வேலை வாங்குவதை மேற்காணும் மலையகப் பாடல் வழியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.