தமிழருக்கு நாடு இல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழருக்கு நாடு இல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 ஜூன் 2020

தமிழருக்கு நாடு இல்லை

தமிழ் மொழி தமிழ் நாட்டில் இருந்து வந்தது. சரி. தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்தார்கள். சரி. ஆனால் தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்கிறார்களா? சொல்லுங்கள்.

தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால் அந்தத் தமிழனுக்குச் சொந்தமாக ஒரு நாடு இல்லை. அதுவே தமிழர்களுக்கு வரலாறு எழுதிக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம். 




தமிழ் நாடு இருக்கிறதே என்று கை நீட்டிக் காட்டலாம். ஏன் காட்ட வேண்டும்? எதற்காகக் காட்ட வேண்டும்?

தமிழ் நாடு என்பது தமிழரின் பெயரைச் சொல்லத் தான் பெயரளவில் இருக்கிறது. அது ஒரு மாநிலம். அவ்வளவு தான். மற்றபடி தமிழர்கள் ஆட்சி அதிகாரம் செய்யும் ஒரு நாடு அல்ல. மன்னிக்கவும்.

அப்போது அந்தக் காலத்தில் உலகத்தின் கால்வாசியைத் தமிழர்கள் கட்டி ஆண்டார்கள். உண்மை தான். இல்லை என்று சொல்லவில்லை. அதைப் பற்றி அந்தர்ப்புரங்களில் கதை கதையாகப் பேசினார்கள். உண்மை.

வந்தாரை வாழ வைக்கும் இனம் என்று சொல்லி வாய் வலிக்கப் புகழ்மாலை சூட்டினார்கள். உண்மை. கைகள் கழன்று விழும் அளவிற்கு வண்டி வண்டியாய்க் கவிதைகள் எழுதிக் குவித்தார்கள். உண்மை.

பாடியவர்களுக்கும் சரி; புகழ்ந்தவர்களுக்கும் சரி; குடம் குடமாய்ப் பரிசுகளைக் கொட்டிக் கொடுத்தார்கள். உண்மை. அது எல்லாம் அப்போதைய கதைகள்.
ஆறிப் போன பழைய கஞ்சிக் கதைகள். இப்போது எல்லாம் அப்படிப் பாடினால் சோற்றுக்கு சுண்ணாம்பு கிடைக்காது.

ஆக தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இந்த உலகில் எங்கேயும் இல்லை. தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்யும் வரையில் தமிழ் நாடு என்பது தமிழர்களின் நாடு அல்ல. இது வார்த்தை ஜாலம் அல்ல. இது என் மனதில் இறுகிப் போன ஒரு மௌனப் புயல்.

தமிழ் மொழி பிறந்த தமிழ்நாட்டில் தமிழர்களின் ஆட்சியை உருவாக்க முடியவில்லை. அப்புறம் ஏன் பெருமைப் பேச்சு?