270 பில்லியன் ரிங்கிட் போர் நஷ்டயீடு உண்மையா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
270 பில்லியன் ரிங்கிட் போர் நஷ்டயீடு உண்மையா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 ஜூலை 2021

270 பில்லியன் ரிங்கிட் போர் இழப்பீடு உண்மையா?

தமிழ் மலர் - 08.07.2021

ஜப்பானியரின் மலாயா ஆக்கிரமிப்பு (1942 – 1945)
(கட்டுரைத் தொடரின் முதல் பாகம்)

1945 ஆகஸ்டு 15-ஆம் தேதி. ஜப்பான் நாட்டின் வெறியாட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. ஜப்பான் கைப்பற்றிய நாடுகளுக்கு இழப்பீடு தர வேண்டும் என முடிவு செய்யப் பட்டது. அந்த வகையில் அமெரிக்கா கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. அந்த மாநாட்டில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சான் பிரான்சிஸ்கோ ஒப்பந்தம் என்று பெயர். இதை ஜப்பான் சமாதான ஒப்பந்தம் என்றும் அழைப்பார்கள். இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 8, 1951-ஆம் தேதி, 48 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. 


இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஜப்பான், போர் இழப்பீடுகளை வழங்கத் தொடங்கியது. மலாயாவுக்கும் இழப்பீடு வழங்கப் பட்டது. ஏன் என்றால் ஜப்பானின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலாயாவும் ஒன்றாகும்.

(சான்று: The Treaty of San Francisco - Treaty of Peace with Japan. It was signed by 49 nations on 8 September 1951, in San Francisco, California, U.S. at the War Memorial Opera House.)

மலாயாவுக்குப் போர் இழப்பீடு வழங்குவதற்கு ஜப்பான் சம்மதிக்கும் போது என்ன என்ன நடந்தன என்பதைப் பார்ப்போம். பணம், பொருட்கள், நிலம் போன்ற பல்வேறு வடிவங்களில் மலாயாவுக்கு இழப்பீடு வழங்கப் பட்டது. 


1946-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், மலாயா, சிங்கப்பூர் நிலப் பகுதிகளை ஆட்சி செய்த  பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் ’போர் சேதக் கோரிக்கை ஆணையம்’ (War Damage Claims Commission) எனும் ஆணயத்தை அமைத்தது.

அந்த ஆணையம் ஜப்பானிய ஆக்கிரமிப்பினால் மலாயாவுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு எவ்வளவு என்பதற்கான தகவல்களைச் சேகரித்தது. மலாயா மக்கள் சார்ந்த இழப்பீட்டுக் கோரிக்கையில் அடங்கியவை:

1. போரினால் ஏற்படும் நேரடிச் சேதங்கள்.

2. மலாயாவில் இருந்த ஜப்பானியத் தொழிற்சாலைகள்; சுரங்கங்கள்; கட்டுமானப் பொருட்கள்; உபகரணங்கள் போன்ற தொழில் மற்றும் வணிகத் தளவாடங்கள்.

3. மலாயாவில் சீன மக்களிடம் திணிக்கப்பட்ட கட்டாயப் பங்களிப்புகள்; ஜப்பானிய இராணுவத்திற்கு வழங்கப்பட்ட கடன் நீட்டிப்பு; மற்றும் இரயில் கட்டுமானச் சேவைச் செலவு.

ஜப்பானிய இராணுவத்தினர் பயன்படுத்திய
கொரிய நாட்டுக் கேளிக்கைப் பெண்கள்

 
1947-ஆம் ஆண்டில் இருந்து 1950-ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளுக்குத் தகவல் சேகரிப்பு. கடைசியில் மொத்த நஷ்டயீடு 67.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என முடிவு செய்யப் பட்டது. இது மலாயா சிங்கப்பூர் போர் சேதக் கோரிக்கை ஆணையம் வழங்கிய நஷ்டயீடு கணக்கு.

இருப்பினும், உண்மையான மொத்த நஷ்டயீடு கோரிக்கை அதை விட அதிகமாக இருக்கலாம். ஏனெனில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு சமநிலையான அளவிற்கு மட்டுமே இழப்பீடு கோரிக்கையை முன்வைத்தது.

இதில் வட போர்னியோவின் இழப்பீட்டுக் கோரிக்கை இருக்கிறதே அது மலாயா இழப்பீட்டுக் கோரிக்கையை விட உயர்ந்து இருந்ததாகவும் சொல்லப் படுகிறது.

ஜப்பானிய அரசாங்கத்தைச் சும்மா சொல்லக் கூடாது. இழப்பீடு கோரிக்கையின்படி போர்க் கப்பல்கள், தொழிற்சாலைகள், இயந்திரங்கள்; தளவாட உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி ஈடு செய்தது. யாருக்கு? மலாயா அரசாங்கத்திற்கு!


ஆனால்... ஆனால்... அங்கே ஒரு பிடி இருந்தது. ஜப்பான் கொடுத்த எல்லாவற்றையும் அப்படியே எடுத்து அப்படியே மலாயாவுக்கு கொடுத்துவிட முடியாத நிலை. மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் நினைத்தாலும் நடக்காத காரியம். என்ன தெரியுங்களா?

இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளின் (Allied Powers) ஒரு பகுதியாக பிரிட்டன் இருந்தது.

நாஜி ஜெர்மனி, ஜப்பான்; இத்தாலி போன்ற நாடுகளைத் தோற்கடிக்க அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன்; சீனா ஆகிய நாடுகள் ஒரு கூட்டணி அமைப்பை உருவாக்கின.

ஆகவே, ஜப்பான் இழப்பீடாக வழங்கும் சொத்துக்களை அந்த நேசக் கூட்டணி நாடுகளிடையே பிரிட்டன் விவாதிக்க வேண்டி இருந்தது. அந்த நாடுகளைக் கேட்டுத்தான் முடிவு செய்ய முடியும்.

ஆக அந்த நேச நாடுகள் எல்லாம் ஒன்றுகூடி மலாயாவுக்கு ஒதுக்கிய இழப்பீடு என்ன தெரியுங்களா? வேதனையாக இருக்கிறது. 


மலாயாவுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு:

(1) அமெரிக்க டாலர் 85.7 மில்லியன் (350 மில்லியன் ரிங்கிட்).

(2) இயந்திரத் தளவாடங்கள் 809.

(3) ஒரு பெரிய போர்க் கப்பல்.

தவிர மேலே சொன்ன இயந்திரச் தளவாடங்கள்; போர்க் கப்பல்; இவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் விற்றால் கிடைக்கும் பணம் மலாயா அரசாங்கத்திற்குப் போய்ச் சேர வேண்டும். ஆனால் எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. மலாயாவுக்கு கிடைத்த இழப்பீடு:

1. ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிற்சாலை பொருட்கள்கள்; இயந்திரங்கள்; உபகரணங்கள்; தளவாடங்கள். (5 விழுக்காடு). 5 %. நூறு விழுக்காட்டில் ஐந்தே ஐந்து விழுக்காடுதான் வழங்கப் பட்டது.

2. ஜப்பானிய கடற்படையைச் சேர்ந்த 23 சின்னப் போர்க் கப்பல்கள். ஒரு பெரிய கப்பலைக் கேட்டு இருந்தார்கள். அமெரிக்கா ஒத்துக் கொள்ளவில்லை. சின்ன நாட்டிற்கு சின்ன கப்பல்கள் போதும் என்று சொல்லி விட்டது.

முறைப்படி இழப்பீடுப் பணம் எல்லாம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். ஜப்பானிய தொழிற்சாலைகள்; இயந்திரங்கள்; உபகரணங்கள்; தளவாடங்கள் போன்றவற்றை விற்ற பணம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். 23 போர்க் கப்பல்களை விற்ற பணம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும்.

ஆனால் மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் அப்படிச் செய்யவே இல்லை. பெரும் தொகையைத் தன்னுடைய காலனித்து நிர்வாகச் செயல்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது.

ஒன்றே ஒன்று உருப்படியாகச் செய்தது. அந்தக் காலக் கட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட அரச மலாயா தொண்டர் கடற்படைக்கு (Malayan Royal Naval Volunteer Reserve) ஒரே ஒரு போர்க் கப்பலை வழங்கியது தான் உலக மகா சாதனைச் சேவை.

ஜப்பான் வழங்கிய இழப்பீட்டில் பெரும் தொகை மலாயாவில் இருந்த ரப்பர் தோட்டங்களைச் சீர் செய்யவும்; மலாயாவில் இருந்த ஈயச் சுரங்கங்களைச் செப்பனிடவும் பயன்படுத்தப் பட்டன.

ஜப்பானியர் காலத்தில் ஆங்கிலேய ரப்பர் தோட்டங்கள் பெரிதும் சேதம் அடைந்து விட்டதாகவும் அந்தத் தோட்டங்களை மறுபடியும் சீர் செய்ய வேண்டும் என்று சொல்லி பெருவாரியான பணம் செலவு செய்யப் பட்டது.

இந்த விசயம் துங்கு அவர்களுக்கும் தெரியும். ஜப்பான் வழங்கிய நஷடயீட்டுத் தொகை எப்படிச் செலவாகி இருக்கிறது கவனித்தீர்களா?

ஜப்பானின் இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு முன்னதாகவே பிரிட்டிஷார்; மலாயா கூட்டாட்சி சட்டமன்றம், சிங்கப்பூர் சட்டமன்றம் ஆகியவற்றில் ஒரு சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு வந்தார்கள்.

அந்தச் சட்டத்தின்படி பிரிட்டிஷார் தங்கள் விருப்பபடி இழப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு செருகல்.

மலாயா வரலாற்றில் ஜப்பானியரின் மலாயா ஆக்கிரமிப்பு என்பது மறக்க முடியாத ஓர் இருண்ட இதிகாசம். மலாயாத் தமிழர்களின் நெஞ்சங்களைக் கீறிப் பார்த்த வேதனைச் சித்தாந்தம். மலாயா தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து பார்த்த மரணத்தின் வேதாந்தம். இதிகாசம்; சித்தாந்தம்; வேதாந்தம்; இந்த மூன்றுமே மௌன மொழிகளின் வக்கர ராகங்கள்.

மலாயாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பினால் கொடூரமான சித்திரவதைகள். அதனால் நூறாயிரக் கணக்கான மரணங்கள். கால் போய் கண்கள் போய் உயிர் பிழைத்தவர்கள் பல இலட்சங்கள். அந்தக் காயங்களும்; அந்தக் காயங்களின் வடுக்களும் காலா காலத்திற்கு மறக்க முடியாத மரண ஓலங்கள்.

ஆசிய நாடுகளின் மீது ஜப்பானியர் நடத்திய ஆக்கிரமிப்பினால் இருபது முப்பது நாடுகள் பாதிப்பு அடைந்து உள்ளன. அந்த நாடுகளில் மலாயா நாடும் ஒன்றாகும். அதில் சயாம் மரண இரயில் பாதை உருவாக்கப் பட்டதும் ஓர் அத்தியாயம்.  

அந்த அத்தியாயத்தில் மலாயாவைச் சேர்ந்த பல்லாயிரம் தமிழர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள், இதர இனத்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் 270 பில்லியன் போர் நஷ்டயீடு வழங்கியதாகவும்; அந்தத் தொகை மர்மமாய்க் காணாமல் போய் விட்டதாகவும், ஊடகங்களில் பற்பல பதிவுகள்.

270 பில்லியன் நஷ்டயீடு வழங்கப் பட்டதாக முதன்முதலில் சொன்னவர் முன்னாள் பேராக் மந்திரி பெசார் நிஜார் ஜமாலுடீன். 1967-ஆம் ஆண்டில் ஜப்பானும் மலேசியாவும் ஒரு போர் நஷ்டயீட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதில் மலேசியாவுக்கு 270 பில்லியன் ரிங்கிட் போர் நஷ்டயீடு வழங்கப் பட்டதாக 2013-ஆம் ஆண்டில் நிஜார் ஜமாலுடீன் அறிவித்தார்.

அவரின் கணக்குப்படி அப்படி அந்த நிதி வழங்கப்பட்டு இருந்தால் ஜப்பான் நாடு இந்நேரம் திவாலாகி இருக்கலாம் என்பது சிலரின் கருத்து. ஏன் என்றால் 270 பில்லியன் ரிங்கிட் என்பது சாதாரண காசு அல்ல. மலேசிய நாட்டின் ஆறு மாத கால மொத்த வருமானம்.

(The sum of RM207 billion as compensation agreed upon in 1967 between Japan and Malaysia would have bankrupted Japan. At the historical exchange rate the RM207 billion would have worth 24 billion Pound Sterling. At current exchange rate it is worth 42 billion Pound. A mind boggling figure.)

ஜப்பான் நாட்டைப் பொருத்த வரையில் போர் இழப்பீடுகள் வழங்க வேண்டிய நாடுகளில் மலேசியா (மலாயா) மட்டும் அல்ல. மேலும் பல நாடுகள் இருந்தன. ஏறக்குறைய 30 நாடுகள். 20,700 கோடி ரிங்கிட் தொகையை மலாயாவுக்கு மட்டும் வழங்க ஜப்பான் ஏற்றுக் கொண்டு இருக்குமா?

உண்மைத் தகவல் தெரியாமல் நாம் ஒரு முடிவிற்கு வரக் கூடாது. வாட்ஸ் அப் ஊடகத்திலும் பேஸ்புக் ஊடகத்திலும் வரும் தகவல்கள் எல்லாம் உண்மையும் அல்ல. பொய்யும் அல்ல.

(According to Article 14 of the Treaty of Peace with Japan (1951): "Japan should pay reparations to the Allied Powers for the damage and suffering caused by it during the war.)

1950-ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் ஜப்பானிடம் 67.25 மில்லியன் போர் நஷ்டயீடு கேட்டது. ஆனால் 1950-ஆம் ஆண்டில் கிடைத்த நஷ்டயீடு இவைதான்:

1. ஜப்பானின் தொழிற்சாலை ஆலைகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் 5% விழுக்காடு (5% of Japan’s factory plants, machinery, and equipment)

2. ஜப்பானிய கடல் படையைச் சேர்ந்த 23 போர்க் கப்பல்கள் (23 fleets of Japanese warships)

மலாயாவை ஆட்சி செய்த அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து எப்போது எவ்வளவு நஷ்டயீடு பெற்றது என்பதும் ஒரு வரலாறு. அதைப் பார்ப்பதற்கு முன்னர் ஒரு சின்ன தகவலைப் பார்ப்போம்.

மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஜப்பான் வழங்கிய போர் இழப்பீடுகளின் விளக்கம். அப்போதைய யென் நாணயத்தில் (in yen, at the time of payment) இழப்பீடு வழங்கப்பட்ட போது எவ்வளவு தொகை; எவ்வளவு தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டன என்பதையும் பார்ப்போம்.

முதலில் மைக்ரோனேசியா நாடுகள். பசிபிக் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கிய பகுதிக்கு மைக்ரோனேசியா என்று பெயர்.
குவாம் தீவு;

கிரிபட்டி தீவு;

மார்சல் தீவுகள்;

கரோலின் தீவுகள்;

கில்பர்ட் தீவுகள்;

மரியானா தீவுகள்;

மார்ஷல் தீவுகள்;

நவூரு தீவு;

வேக் தீவு;

(1960-ஆம் ஆண்டுகளில் ஜப்பானிய யென் கணக்கில் மலேசிய ரிங்கிட் நாணய மாற்றம்: 1 பில்லியன் யென் = 30 மில்லியன் ரிங்கிட்). போர் நஷ்டயீடு பட்டியல்:

1. மைக்ரோனேசியா (Micronesia) - (ஆண்டு 1950) - 18 பில்லியன் யென் - (540 மில்லியன் ரிங்கிட்)

2. மியன்மார் - (ஆண்டு 1954 - 1963) - 50.4 பில்லியன் யென் - (1500 மில்லியன் ரிங்கிட்)

3. பிலிப்பைன்ஸ் - (ஆண்டு 1956; 1967) - 53 பில்லியன் யென் - (1590 மில்லியன் ரிங்கிட்)

4. இந்தோனேசியா - (ஆண்டு 1958) - 63.7 பில்லியன் யென் (1910 மில்லியன் ரிங்கிட்)

5. லாவோஸ் (ஆண்டு 1958) - 1 பில்லியன் யென் - (30 மில்லியன் ரிங்கிட்)

6. கம்போடியா (ஆண்டு 1959) - (1 பில்லியன் யென் - (30 மில்லியன் ரிங்கிட்)

7. வியட்நாம் (ஆண்டு 1960) - (14.04 பில்லியன் யென் - (420 மில்லியன் ரிங்கிட்)

8. கொரியா (ஆண்டு 1965) - (72 பில்லியன் யென் - (2160 மில்லியன் ரிங்கிட்)

9. மலேசியா (ஆண்டு 1967) - (2.94 பில்லியன் யென் - (90 மில்லியன் ரிங்கிட்)

10. தாய்லாந்து (ஆண்டு 1967) - (5.4 பில்லியன் யென் - (165 மில்லியன் ரிங்கிட்)

11. தைவான் (ஆண்டு 1967) - (58 பில்லியன் யென் - (175 மில்லியன் ரிங்கிட்)

12. சிங்கப்பூர் (ஆண்டு 1967) - (2.9 பில்லியன் யென் - (87 மில்லியன் ரிங்கிட்)

13. ஹாலந்து (ஆண்டு 1956) - (3.6 பில்லியன் யென் - (110 மில்லியன் ரிங்கிட்)

14. சுவிட்சர்லாந்து - Switzerland - (ஆண்டு 1955) - (33 மில்லியன் ரிங்கிட்)   

15. டென்மார்க் - (ஆண்டு 1955) - (215 மில்லியன் ரிங்கிட்)

16. சுவீடன் - (ஆண்டு 1958) - (150 மில்லியன் ரிங்கிட்)   

17. ஸ்பெயின் - (ஆண்டு 1957) - (155 மில்லியன் ரிங்கிட்)

இழப்பீடுகளுக்கான கொடுப்பனவுகள் 1955-இல் தொடங்கி 23 ஆண்டுகள் நீடித்தது. 1977-ஆம் ஆண்டு வரையில் சன்னம் சன்னமாகக் கொடுக்கப் பட்டது. மலேசியாவிற்கு எவ்வளவு பணம் எந்த ஆண்டில் கொடுக்கப்பட்டது என்பதைக் கவனியுங்கள்.

நாளைய கட்டுரையில் இன்னும் சில அதிர்ச்சியான தகவல்கள் வருகின்றன. படிக்கத் தவற வேண்டாம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.07.2021

(பின்குறிப்பு)

இந்தக் கட்டுரையில் உள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்டுரையாளரின் பெயரைக் குறிப்பிடுங்கள். அதுதான் நீங்கள் காட்டும் ஒரு நன்றிக்கடன். மிகவும் சிரமப்பட்டு எழுதப்பட்ட கட்டுரை.

சான்றுகள்:

1. PRESS RELEASE UNITED NATIONS COMPENSATION COMMISSION PAYS OUT US$270 MILLION" (PDF). United Nations Compensation Commission. 23 July 2019.

2. RESOLUTION 687 (1991)" (PDF). U.S. Department of the Treasury. 9 April 1991. Archived (PDF)

3. San Francisco Peace Conference 8 Sep 1951

4. Japan's Records on War Reparations, The Association for Advancement of Unbiased View of History

5. War Responsibility, Postwar Compensation, and Peace Movements and Education in Japan

பின்னூட்டங்கள்

மகாலிங்கம் படவேட்டான் பினாங்கு: நன்றி வாழ்த்துகள் ஐயா.. விரிவான கட்டுரை.. சிரமம் எடுத்து தயார் செய்து பதிவு செய்ததற்கு.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. ஆனால், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் ஏறக்குறைய ஒரே தொகையாக உள்ளதே ஐயா..
ஏன்?

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சிங்கப்பூர் துறைமுகத்தை விரிவுபடுத்த பணம் தேவைபட்டது. மேஜிக் வேலை..

குமரன் மாரிமுத்து: அருமை ஐயா. தகவல்களைத் தேடி எடுப்பதில் நீங்கள் பலே பாண்டியா சார்...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மாணவர் ஒருவர் தன் ஆசிரியருக்கு வழங்கும் பாராட்டு... நன்றி தம்பி.

டாக்டர் சுபாஷினி: அருமை. மிக விரிவான தகவல் தொகுப்பு. தமிழ் மரபு அறக்கட்டளை காலாண்டிதழில் இணைக்கின்றோம்.

கரு. ராஜா: கட்டுரையைப் படித்தேன். ஜப்பானில் இருந்து கிடைத்த நஷ்டயீட்டை நான் ஒரு பைசா கூட சாப்பிட்டுப் பார்க்கவில்லை. சயாமுக்கு கம்பி சடக்குப் போடப் போன என் தந்தை சயாமில் மரணம் அடைந்தார். இதனால் நான் சிறு வயதில் தந்தையை இழந்தேன்.

இராதா பச்சையப்பன்: வேதனையாக தான் இருக்கு. கட்டுரையை நானும் படித்து வேதனை பட்டேன். பணம் எத்தனைப் பேர்களின் கையில் போனது என்று தெரியவில்லை. என் குடும்பத்தில் இருவர் பிறந்து அப்பாவை பார்க்கவே இல்லையே 😭.

செல்லையா செல்லம்: அருமையான கட்டுரை  நான் அதிகமாக. வாசிப்பது உங்கள் கட்டுரைகளே  நன்றி   நன்றி நன்றி

கணேசன் சண்முகம்: அருமையான கட்டுரை. சரியான விளக்கம். வாழ்த்துகள் ஐயா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
எழுதிய கட்டுரைகளில் சற்று சிரமத்தைக் கொடுத்தது. ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கொண்டு வர... சமாளித்து விட்டேன்.

இராதா பச்சையப்பன்: இன்றைய கட்டுரையை படித்தேன். சயாமுக்கு  மனைவி, பிள்ளைகளை, பெற்றோரை, உடன் பிறந்தோரை, குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் பலர் தன் நாட்டுக்கு திரும்பாது...  ஜப்பானிலேயே  இறந்தவர்களும் உண்டு. 
 
உடல் ஊனமுற்று திரும்பியவர்களும் உண்டு.  இவர்களுக்கான  இழைப்பீட்டுப் பணத்தை, பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுக்காமல், அப்போது ஜப்பான் காலத்தில் அழிந்த தோட்டம் மற்றும் சில இடங்களைப் புதிப்பித்ததாகக் கூறுபவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா, 
 
உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு  இதுதான் பதிலாக, பெட்டி சாக்கு போக்கு சொல்வதில் நம் அரசாங்க அதிகாரிகள் கைதேர்ந்தவர்கள்.  
 
ஜப்பானில் உயிர் விட்டவர்கள் வந்து கேட்க மாட்டார்கள் என்ற நினைப்போ'? அரசன் அன்று கொள்வான். தெய்வம் நின்றுதான் கொள்ளுமாம். காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சயாம் மரண பாதை இழப்பீட்டு நிதி... போர் இழப்பீட்டு நிதியில் ஒரு பகுதியாக வழங்கப்பட்டு விட்டது. மூன்று கட்டங்களாக ஏறக்குறைய 150 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டு உள்ளது

கரு. ராஜா: ஜப்பானிலேயே இறந்தவர்கள் உண்டு என்று எழுதி இருப்பதற்கு என்ன காரணம்??? ஜப்பானில் உயிர் விட்டவர்கள் வந்து கேட்க மாட்டார்கள் என்ற நினைப்போ என்ற வாசகம் மீண்டும் வருவதற்கான காரணம் புரியவில்லை???

தனசேகரன் தேவநாதன்: சயாம் என்பதை ஜப்பான் என தவறாக பதிவிட்டுள்ளார்

இராதா பச்சையப்பன்: 🙏 தவறுக்கு வருந்துகிறேன். சயாம்  மரண பாதை இழப்பபீட்டு நிதி.  ஜப்பான் காலத்தில் என்று சொல்ல கேட்டது உண்டு. உண்மைதான்.  தவற்றைச் சுட்டிக் காட்டியதில் நன்றி🙏🌻 ஜப்பான்  என்பது தவறு.
 
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஜப்பானில் உயிர் விட்டவர்கள் என்று சகோதரி பதிவிட்டதை இப்போதுதான் பார்க்கிறேன். உண்மையில் அவர் சொல்வதிலும் ஒரு குட்டி வரலாறு உள்ளது. பலருக்கும் தெரியாத ஒரு வரலாறு. எப்படி தெரியுங்களா?

1943 அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி சயாம் மரண இரயில் பாதை கட்டி முடிக்கப் பட்டது. கட்டி முடிந்ததும் ஆண்களில் (நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்) 1500 பேர் ஜப்பான் நாட்டின் தொழிற்சாலைகள் கட்டுமானத்திற்கு அனுப்பப் பட்டார்கள். அவர்களில் தமிழர்கள் ஏறக்குறைய 250 - 300 பேர் இருக்கலாம். எஞ்சியவர்கள் இராணுவக் கைதிகள்.

அப்படி ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட தமிழர்களில் பாதி பேர் இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் திரும்பி வராமல் அங்கேயே தங்கி விட்டார்கள்.

சிலர் வியட்நாம்; கம்போடியா; தாய்லாந்து நாடுகளுக்குச் சென்று தங்கி விட்டார்கள். சிலர் அங்குள்ள பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கு தனித்தனி  தமிழர்ச் சமுதாயங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஜப்பானில் தங்கியவர்களில் பலர் திரும்பி வராமல் அங்கேயே இறந்து விட்டார்கள். தமிழர்கள் சிலரை ஜப்பானியப் பெண்கள் திருமணம் செய்து இருக்கிறார்கள். அந்த வகையில் அங்கேயும் ஒரு தமிழர்ச் சமுதாயம் உருவாகி உள்ளது.

இதைப் பற்றிய மேல் விவரங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறோம். கிடைத்ததும் ஒரு கட்டுரையாகப் பதிவு செய்வோம்.

ஆங்கிலத்தில் Blessings in Disguise என்று சொல்வது போல சகோதரி தெரியாமல் எழுதி இருந்தாலும் அதிலும் ஒரு நன்மை இருக்கவே செய்கிறது. அவர் தவறாக எழுதவில்லை என்றுகூட சொல்லலாம்.