கம்போங் கச்சான் பூத்தே - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்போங் கச்சான் பூத்தே - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஜூன் 2020

கம்போங் கச்சான் பூத்தே - 2

தமிழ் மலர் - 29.06.2020

அன்றைய காலக் கட்டத்தில் கடல் தாண்டி மலையகத்திற்கு வந்தவர்கள், கடலை வணிகத்தைத் தொடங்கினார்கள். ஆனால் இன்று அவர்களே கடல் தாண்டிப் போய் கடலை வணிகம் பார்க்கிறார்கள். எப்பேர்ப்பட்ட வளர்ச்சி. எப்பேர்ப்பட்ட வணிக மறுமலர்ச்சி. 



ஒரு காலத்தில் தலையில் கூடைகளை ஏந்திக் கடலை வியாபாரம் செய்த அதே அந்தத் தமிழர்கள் தான். வேறு யாரும் அல்ல. அதே அவர்களின் அடுத்த தலைமுறையினர் தான் இப்போது விமானம் ஏறிப் போய் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் வணிகம் பார்த்துவிட்டு வருகிறார்கள். பெருமையாக இருக்கிறது.

வணிக விரும்பிகளுக்கு இதுவே ஓர் அழகிய அனுபவப் பாடம். இந்தக் கம்போங் கச்சான் பூத்தே வணிகர்களைப் பார்த்து மலேசியாவில் உள்ள மற்ற மற்ற இந்தியர்களும் வணிகத் துறையில் ஈடுபட வேண்டும். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.



வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் இதைச் செய்யவில்லை; அதைச் செய்யவில்லை; எதையும் செய்து கொடுக்கவில்லை என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும். அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை உரிமையுடன் போய் கேட்க வேண்டும். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். வாய்ப்புகளைத் தேடி நாம்தான் போக வேண்டும்.

இப்படிச் சொல்பவர் சமூக ஆர்வலர் ஈப்போ புந்தோங் பி.கே.குமார். அவர் வழங்கிய பல தகவல்களினால் தான் இந்தக் கட்டுரையையே எழுத முடிந்தது. நன்றி சொல்லிக் கொள்கிறேன்.



உலகின் பல நாடுகளில் கம்போங் கச்சான் பூத்தே அறியப் படுகிறது. கம்போங் கச்சான் பூத்தே எனும் கடலை வணிக மையம் புந்தோங்கில் இருக்கிறது. இது பலருக்குத் தெரியும். சிலருக்குத் தெரியாமல்கூட இருக்கலாம். ஆக புந்தோங் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் புந்தோங் முதலிடம் வகிக்கின்றது என்றுகூட சொல்லலாம். 2018-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் 42 விழுக்காட்டினர் இந்தியர்கள்.

புந்தோங்கில் நுழைந்ததும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் நுழைந்தது போல ஒரு பிரமை ஏற்படும். அனைத்தும் இந்திய மயமாகக் காட்சி அளிக்கும். புந்தோங்கின் பழைய பெயர் குந்தோங்.



20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஈயச் சுரங்கத் தொழிலுக்கு புந்தோங் புகழ் பெற்று விளங்கியது. சீனாவில் இருந்து ஆயிரக் கணக்கான சீனர்கள் ஈப்போவின் சுற்று வட்டாரப் பகுதிகளில் குடியேறினார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழர்கள் ஈப்போவில் சிறு வணிகத் துறை, துணிமணிகள், ஆடை ஆபரணங்கள் விற்பனைத் துறைகளில் ஈடுபட்டனர்.

தமிழர்கள் பெரும்பாலும் சுங்கை பாரி (Sungai Pari), சிலிபின் (Silibin), குந்தோங் (Guntong) பகுதிகளில் குடியேறினார்கள். முதன்முதலாகச் சுங்கை பாரியில் தான் தமிழர்கள் குடி பெயர்ந்தார்கள். பெரும்பாலும் இரயில்வே சாலைக்கு அருகில் வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள். 



1906-ஆம் ஆண்டு தமிழர்களுக்காக மேடான் கிட் (Medan Kidd) எனும் இடத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி உருவாக்கப் பட்டது. அந்தப் பகுதி இப்போதைய பேராக் போலீஸ் தலைமையகத்திற்கு அருகில் இருக்கிறது. 150 குடும்பங்கள் அங்கு குடியேற்றம் செய்யப் பட்டன.

பத்து ஆண்டுகளில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் ஒரு மாற்று இடம் தேவைப் பட்டது. ஆகவே தமிழர்களுக்கு என புந்தோங் குடியேற்றப் பகுதி புதிதாகத் தோற்றுவிக்கப் பட்டது.

இந்துக்களின் நலனை ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா கவனித்துக் கொண்டது. அந்தக் காலக் கட்டத்தில் கோலாலம்பூரில் ஆண்டுதோறும் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. அதைப் போல ஈப்போவிலும் கொண்டாட விருப்பப் பட்டார்கள். 



புந்தோங் சுங்கை பாரி சாலையில் ஏற்கனவே மாரியம்மன் ஆலயம் இருந்தது. ஆகவே அங்கு இருந்து குனோங் சிரோ (Gunung Cheroh) பகுதியில் இருக்கும் கல்லுமலைக் கோயிலுக்குத் தைப்பூச ரத ஊர்வலம் சென்று அடைவது என முடிவு செய்யப் பட்டது. 1912-ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை அந்த ரத ஊர்வலம் ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்று வருகிறது.

புந்தோங் வாழ் இந்தியர்களுக்காக ஓர் உல்லாச மையம் தேவைப் பட்டது. தங்களுடைய பொழுதை நல்ல முறையில் பயன்படுத்த அந்த மையம் உதவும் என்று எதிர்பார்த்தார்கள். அந்த வகையில் 1915-ஆம் ஆண்டு ‘இந்திய பொழுது போக்கு மன்றம்’ உருவானது. அதனை இந்தியன் ரிகிரியேசன் கிளப் (Indian Recreation Club) என்று இப்போது அழைக்கின்றார்கள்.

நகரத்தார்கள் எனப்படும் செட்டியார்கள் ஈப்போ வாணிபத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள். அவர்கள் இரும்பு சாமான் வியாபாரத்திலும் ஈடுபட்டார்கள். பேராக் மாநிலத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களே நகரத்தார்களிடம் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.



இந்திய முஸ்லீம் வர்த்தகர்கள் மளிகைக் கடைகள், சாப்பாட்டுக் கடைகள், புத்தகக் கடைகள் நடத்தினார்கள். சுருட்டு, பீடி, புகையிலை வியாபாரத்திலும் ஈடுபட்டார்கள். அவர்களில் ஏ.எம்.ஏ நைனா முகமது (A.M.A. Naina Mohammed); கே.என். முகமது (K.N. Mohammad) நிறுவனங்கள் பிரபலமானவை.

1887-ஆம் ஆண்டு தைப்பிங்கைச் சேர்ந்த சையது புர்ஹான் (Syed Burhan) என்பவர் பேராக் - பினாங்கு குளிர்பான நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அதே காலக் கட்டத்தில் தைப்பிங் - கம்பார் - ஈப்போ குளிர்பான நிறுவனத்தை ஷேக் அடாம் என்பவர் உருவாக்கினார். ஷேக் அடாம் (Shaykh Adam) 1895-ஆம் ஆண்டு மெட்ராஸில் இருந்து மலாயா வந்தவர்.



ஒரு கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கின் பணச் சுழற்சியே செட்டியார்களின் கைகளில் தான் இருந்தது. இவர்கள் கட்டிய தமிழ்ப்பள்ளியின் பெயர் செட்டியார் தமிழ்ப்பள்ளி (Chettiar Tamil School). அந்தப் பள்ளி லகாட் சாலையில் இருக்கிறது. அதே சாலையில் தண்டாயுதபாணி கோயிலையும் கட்டினார்கள். அந்தக் கோயிலைச் செட்டியார் கோயில் என்று அழைக்கின்றார்கள்.

1940-ஆம் ஆண்டுகளில் ஈப்போவில் எம்.எஸ்.எம்.எம். எனும் பெயரில் ஒரு வங்கி செயல் பட்டு வந்தது. அதன் கிளை புந்தோங் சேற்றுக் கம்பத்தில் இருந்தது. அதை எம்.எஸ்.மெய்யப்பச் செட்டியார்கள் (MS Maiyappa Chettiars) என்று அண்ணன் தம்பிகள் இருவர் நடத்தி வந்தனர். அந்த வங்கியின் தலைமையகம் அப்போது காரைக்குடியில் இருந்தது.

1950-ஆம் ஆண்டுகளில் சீனர்களின் ஆதிக்கம் ஈப்போவில் வலுப் பெறத் தொடங்கியது. பொருளாதாரத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்கள். அதனால் அதுவரை அங்கு வாழ்ந்த தமிழர்கள் பலர் தாயகம் திரும்பினார்கள். வேறு சிலர் அருகில் இருந்த மற்ற மற்ற ஊர்களுக்கும் புலம் பெயர்ந்தார்கள். 



1950-ஆம் ஆண்டில் ’பிரிக்ஸ்’ திட்டத்தின் (Briggs Plan) கீழ் புந்தோங் புதுக் கிராமம் உருவானது. ஈப்போவில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அந்தப் புதிய குடியிருப்புப் பகுதி உருவாக்கப் பட்டது. ’பிரிக்ஸ்’ திட்டத்தின் கீழ் மலாயா முழுமையும் 450 புதுக்கிராமங்கள் உருவாக்கப் பட்டன.

மலாயாக் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக பிரிட்டிஷ் ஜெனரலாக இருந்த சர் ஹரோல்டு பிரிக்ஸ் (Sir Harold Briggs) என்பவரால் உருவாக்கப் பட்டதே ’பிரிக்ஸ்’ திட்டம்.

புந்தோங் புறப் பகுதியில் தமிழர்கள் குடியேற்றப் படுவதற்கு முன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தில் ஈயம் தோண்டி எடுக்கப் பட்டு வந்தது. நூற்றுக் கணக்கான ஈய வயல்கள் அங்கே இருந்தன. தூர்ந்து போன ஈய வயல்களை ஈய லம்பங்கள் என்று அழைக்கின்றனர். 



புந்தோங் சட்டமன்ற உறுப்பினராக மதிப்புமிகு சிவ சுப்பிரமணியம் ஆதி நாராயணன் (Siva Subramaniam) அவர்கள் இருந்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார்.

புந்தோங் வரலாறு சற்று நீண்டு போய்விட்டது. சரி. இந்தப் புந்தோங்கில் தான் கம்போங் கச்சான் பூத்தே இருக்கிறது. இந்த ஆண்டு பேராக் மாநில அரசின் தீபாவளி விழா இந்தக் கம்போங் கச்சான் பூத்தே வளாகத்தில் கொண்டாடப் படுகிறது.

நேற்றைய கட்டுரையில் பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் அமாட் பைசால் அஸ்மு; ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குலசேகரன்; புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி சிவசுப்பிரமணியம்; மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதில் ஒரு சின்ன திருத்தம். சிவநேசன் அவர்கள் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்.

புதிய பேராக் மாநில ஆட்சிக் குழுவில் டத்தோ நோலி அஷ்லின் (Datuk Nolee Ashilin Mohammed Radzi) வீட்டுவசதி, உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா துறையின் ஆட்சிக்குழு உறுப்பினராக உள்ளார்.



கம்போங் கச்சான் பூத்தே வளாகத்தில் ஆண்டு தோறும் தீபாவளி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அந்தத் தீபாவளி நிகழ்ச்சிக்கு டத்தோ நோலி அவர்களும் வருகை தரலாம். மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. இருப்பினும் இப்போதைய கொரோனா நெருக்கடியில் அந்த நிகழ்ச்சி ஒரு கேள்விக் குறியாகவே அமைகின்றது. நல்லதை எதிர்ப்பார்ப்போம்.

கம்போங் கச்சான் பூத்தே வளாகத்தை ஒரு சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என்றும் டத்தோ நோலி அஷ்லின் ஒரு வியூகம் வைத்து உள்ளார்.

இந்த வியூகம் இந்தப் பகுதியில் வாழும் இந்தியர்களிடையே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தலாம். ஒரு மாற்றத்தையும் கொண்டு வரலாம். புந்தோங் புறநகர்ப் பகுதி மலேசிய இந்தியர்களின் வணிக நகரமாக உருமாற்றம் காண்பதற்கு அரசியல் பிரபலங்களின் வருகை ஓர் அடித்தளமாக அமையும் என்றும் நம்பலாம்.

ஆனால் என்ன. அரசாங்கத்தின் கடைக்கண் பார்வை மட்டுமே இப்போதைய அவசியமான அவசரமான தேவையாக அமைகின்றது.

அப்படிப்பட்ட ஓர் உருவாக்கத்திற்குத் தேவைப்படும் மனித வளமும் மன வளமும் இங்குள்ள இந்தியர்களிடம் மிகையாகவே உள்ளன. அதற்கான நவீன கட்டமைப்பும் வசதிகளும் அவர்களிடம் உள்ளன.

கடலை வணிகத்தையும் தாண்டிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட நொறுக்குத் தீனி வகையறாக்கள் உள்ளன. பட்டியல் வேண்டாமே. நீண்டு போகும்.

அவற்றை எல்லாம் குடிசைத் தொழிலாக மாற்றம் செய்ய முடியும். சந்தைப் படுத்த முடியும். புந்தோங் நகரத்தை ஓர் இந்தியப் பாரம்பரிய உணவுக் கேந்திரமாக உயர்த்திக் காட்டவும் முடியும்.

வணிகர்களாக மாறிக் காட்ட விரும்பும் இளைஞர்களுக்குச் சரியான ஊக்குவிப்பு வேண்டும். அதே சமயத்தில் சரியான வழிகாட்டுதலும் பயிற்சியும் அவசியம். எல்லாம் சரியாக அமைந்தால் நிச்சயமாக வெற்ற பெற முடியும். இதையே தான் பி.கே.குமார் அவர்களும் வலியுறுத்துகிறார்.

(முற்றும்)

சான்றுகள்:

1. https://www.malaymail.com/news/malaysia/2018/05/14/new-perak-mb-keeps-it-in-the-family/1630456

2. https://en.wikipedia.org/wiki/Perak_State_Legislative_Assembly

3. https://www.malaymail.com/news/malaysia/2020/04/28/perak-to-rebuild-states-tourism-sector-with-industry-players-after-mco-says/1860983

4. http://ctskacangputeh.com/ - Our history in Kacang Putih business turns back to the day when our Indian ancestors were brought in to Malaysia by British colony.