கறுப்பு தாஜ்மகால் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறுப்பு தாஜ்மகால் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 2

தமிழ் மலர் - 12.05.2019

ஷா ஜகான் தன் மனைவி மும்தாஜிற்கு ஒரு தாஜ்மகாலை ஏற்கனவே கட்டி விட்டார். அது பளிங்கு வெள்ளை நிறத்திலான ஓர் உலக அதிசயம். தாஜ்மகால் கட்டி முடிக்கப் பட்டதும் ஷா ஜகானின் மனதில் வேறு மாதிரியான ஒரு புது ஐடியா தோன்றியது.



தனக்கும் ஒரு தாஜ் மகால் கட்ட வேண்டும். அதற்குக் கறுப்பு தாஜ் மகால் என்று பெயர் வைக்க  வேண்டும் எனும் திடீர் ஆசை. திடீர் ஐடியா. அதோடு அவர் நிற்கவில்லை. மள மளவென்று செயல்படவும் ஆரம்பித்தார். கறுப்பு தாஜ் மகால் கட்டுவதற்கான நிர்மாணிப்பு வேலைகளும் தொடங்கி விட்டன.

யமுனை நதியில் ஒரு புறம் தாஜ் மகால். அதற்கு எதிர்ப் புறம் கறுப்பு தாஜ் மகால். இரண்டு தாஜ் மகால்களையும் இணைப்பதற்கு ஒரு பாலம். இதுதான் ஷா ஜகானின் திட்டம். கறுப்பு தாஜ் மகாலுக்கு அஸ்திவாரம் போடப்பட்டு பெரும் குழிகள் தோண்டப்பட்டு விட்டன. 




இந்தக் கட்டத்தில்தான் ஔரங்கசிப் தன் தந்தை ஷா ஜகானின் மீது படை எடுத்தார். ஷா ஜகானின் ஆசைப்படி விட்டால் மொகலாய சாம்ராஜ்யம் திவாலாகி விடும் என்பதை ஔரங்கசிப் நன்றாகவே உணர்ந்து இருந்தார்.

ஏற்கனவே கஜானா காலியாகி விட்டது. ஷா ஜகான் தன் மக்களிடம் வரிப் பணம் வசூலித்து ஓரளவிற்கு அவர்களை இரத்தக் கண்ணீர் வடிக்கவும் செய்து விட்டார்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் இன்னும் ஒரு கறுப்பு தாஜ் மகாலா? அப்படி ஒரு பிருமாண்டமானக் கட்டடம் கட்டப் படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அடுத்து அரசாங்க நிர்வாகத்தைக் கைப்பற்ற வேண்டும். இதுதான் ஔரங்கசிப்பின் திட்டம்.  




ஷா ஜகான் இருந்த ஆக்ரா கோட்டையில் ஔரங்கசிப்பின் முற்றுகை. கோட்டைக்குள் சென்ற நீர் வசதிகளைத் துண்டித்தார். ஷா ஜகான் சமரசப் பேச்சிற்கு இணங்கினார். மூத்த மகள் ஜகனாராவைத் தூது அனுப்பினார். ஔரங்கசிப்பின் மூத்த அக்கா தான் ஜகனாரா.

இடையில் ஔரங்கசிப்பின் சின்ன அக்கா ரோஷனாரா தலையிட்டு ஔரங்கசிப்பைப் பயமுறுத்தி விட்டார். கோபம் அடைந்த ஔரங்கசிப் தன் தந்தை ஷா ஜகானை ஆக்ரா கோட்டையிலேயே சிறை வைத்தார். 




இந்த இடத்தில் ஷா ஜகானின் மனைவி பிள்ளைகளைப் பற்றி சொல்லி விடுகிறேன். ஷாஜஹானுக்கு மொத்தம் பத்து மனைவி மார்கள். அவர்களில் ஏழு பேர்களின் பெயர்கள்.

1. பானு பேகம்.

2. நவாப் பாய் பேகம்.

3. அர்ஜுமான் பானு பேகம் (மும்தாஜ் மகால்).

4. நிசா பேகம்.

5. உதயபுரி மகால்.

6. ஜைனாபாடி மகால்.

7. டவுலாத்தா பாடி மகால்.

இவர்களில், மூன்றாவது மனைவிதான் மும்தாஜ் மஹால் பேகம். மற்ற மனைவிமார்களைவிட மும்தாஜின் மீது மட்டும் ஷா ஜஹானுக்கு விருப்பம் அதிகம். 



ஷா ஜஹான் - மும்தாஜ் மஹால் இணையருக்கு மொத்தம் ஏழு குழந்தைகள்.

1. மகள் ஜகனாரா பேகம்.

2. மகன் தாரா ஷீகோ.

3. மகன் ஷா ஷூஜா.

4. மகள் ரோஷனாரா பேகம்.

5. மகன் ஒளரங்கசிப்.

6. மகன் முராட் பக்ஷ்.

7. மகள் கௌஹாரா பேகம்.

பொதுவாகச் சொன்னால் மொகலாய மன்னர்களுக்கும் அப்போதைய இந்திய மன்னர்களுக்கும் பல மனைவிமார்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு அரச மரியாதைகள் கிடைத்தன. 




அதே சமயத்தில் அந்த மன்னர்களுக்கு அந்தர்புரத்தில் நூற்றுக் கணக்கான வைப்பாட்டிகள் இருந்தார்கள். அந்த வைப்பாட்டிகளுக்கும் குழந்தைகள் இருந்தன.

ஆனால் வைப்பாட்டிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு அரச மரியாதை கிடைக்காது. மன்னர்களின் அதிகாரப் பூர்வமான மனைவிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே அரசு உரிமைகளும்  அரசச் செல்வாக்குகளும் கிடைத்தன.

ஔரங்சிப் - மும்தாஜ் மகாலுக்குப் பிறந்த  பிள்ளைகளில் மூத்தவர் ஜகனாரா. அதாவது ஔரங்சிப்பின் மூத்த அக்கா. அவர் தான் சமரசம் செய்ய முயற்சி செய்தவர். அதில் நெருப்பை அள்ளிக் கொட்டியவர் ஔரங்சிப்பின் சின்ன அக்கா ரோஷனாரா.


ஆக்ரா கோட்டையில் ஷா ஜஹான் காவலில் வைக்கப்பட்டதும் அவர் தன் இறுதி நாட்களில் ஓர் அரண்மனைக் கைதியாகவே வாழ்ந்தார்.  எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1666-ஆம் ஆண்டில் இறந்து போனார்.

ஷா ஜஹான் இறக்கும் போது ஒளரங்கசீப் ஆக்ராவில் இல்லை. குஜராத் அல்லது மகாராஷ்டிராவில் இருந்து இருக்கலாம். தன் தந்தையின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்பதை அறிந்ததும் உடனே ஒளரங்கசீப் தன் மகன்களை ஆக்ராவுக்கு அனுப்பி வைத்தார்.

ஷா ஜகானுக்கு முறைப்படி சகல மரியாதைகள் செய்யப் பட்டன. அவரின் உடல் சந்தன மரப் பெட்டியில் வைக்கப் பட்டது. ஒரு படகில் ஏற்றப் பட்டு யமுனை நதி வழியாகக் கொண்டு செல்லப் பட்டது. அப்படியே தாஜ்மஹாலை அடைந்தது. 




மனைவி மும்தாஜின் நினைவிடத்திற்குப் பக்கத்திலேயே ஷா ஜஹானின் உடலும் அடக்கம் செய்யப் பட்டது. தாஜ் மகாலுக்குப் போனால் இருவரின் நினைவிடங்களும் பக்கத்து பக்கத்திலேயே இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

சரி. ஷாஜகானை ஒளரங்கசிப் வெறுத்ததற்கு என்ன காரணம். தன் தந்தையின் மீதே ஒளரங்கசிப் படை எடுத்ததற்கு என்ன காரணம். தன் சகோதரர்களை எல்லாம் கொன்று போடுவிட்டு, தான் மட்டும் ஒரு பேரரசராகப் பதவி ஏற்றதற்கு என்ன காரணம். வாழ்க்கை முழுமைக்கும் மன இறுக்கத்துடன் வாழ்ந்ததற்கு என்ன காரணம். இனிமேல் தான் கதையே சூடு பிடிக்கிறது.

மொகலாயர்களின் முதல் பேரரசர் பாபர். அவர் இறந்த பிறகு அவரின் மகன் ஹூமாயூன் அரியாசனம் ஏறினார். எந்தப் பிரச்சினையும் இல்லை. ஹூமாயூன் ஒரு விபத்தில் இறந்து போனார். என்ன விபத்து என்று கேட்கலாம். மாடிப் படிகளில் இருந்து இடறி விழுந்து இறந்து போனார். தலையில் பலமாக அடிபட்டுப் போனது. 




மூன்று நாட்கள் சுயநினைவு இல்லாமல் இருந்து கடைசியில் இறந்து போனார். அப்போது அவருக்கு வயது 47. இவருடைய வாழ்க்கையிலும் பெரிய பெரிய சோதனைகள். பெரிய பெரிய திருப்பு முனைகள். ரொம்பவும் கஷ்டப் பட்டவர். இவர்களுக்குப் பிறந்தவர்தான் அக்பர். மிகச் சிறிய வயதிலேயே அக்பர் பதவிக்கு வந்தார்.

அக்பருக்குப் பின் அவருடைய மகன் ஜஹாங்கீர் பதவிக்கு வந்தார். பதவிக்கு வந்த பிறகு ஜஹாங்கீருக்கும் அவருடைய மகன் ஷா ஜகானுக்கும் ஒத்துப் போகவில்லை. தனக்குப் பின் ஷா ஜகானை மொகலாயப் பேரரசராக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் ஜஹாங்கீருக்குக் கொஞ்சமும் இல்லை.

அதற்குக் காரணம் ஷா ஜகான் என்பவர் ஜஹாங்கீரின் மூன்றாவது மகன். ஆனால் எதிர்காலத்தில் மொகலாயத்தின் ஷா-இன்-ஷா ஆக வேண்டும் என்கிற ஆசை ஷா ஜகானுக்கு இருந்தது.

எப்படியாவது பேரரசராக ஆகிவிட வேண்டும் என்கிற பொல்லாத ஆசை. ஷா-இன்-ஷா என்றால் மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் என்று பொருள்.




ஜஹாங்கீரின் ஆட்சிக் காலத்தில் மொகலாயப் படைகளின் தளபதியாக இருந்தவர் ஷா ஜகான். அந்த வகையில் அதுவே அவருக்கு நல்ல ஒரு வாய்ப்பாகவும் அமைந்து போனது. மொகலாய ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

மொகலாயப் பேரரசின் கீழ் இருந்த பகுதிகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு வந்தார். செய்தி அறிந்த தந்தை ஜஹாங்கீருக்கு ஷா ஜகான் மீது கடும் கோபம். ஒரு கட்டத்தில் தன் பிருமாண்டமான படைகளை அனுப்பி ஷா ஜகானை அடக்கி ஒடுக்கி வைத்தார். கூடவே ஒரு தகவலையும் அனுப்பியும் வைத்தார்.

'நான் உன்னை இப்போதே கைது செய்து விடலாம். வேண்டாம். நான் அப்படி செய்ய விரும்பவில்லை. இனியாவது ஒழுங்காக இரு. உனக்குப் பதிலாக உன் மகனை என்னிடம் பணயக் கைதியாக அனுப்பி வை. இல்லை என்றால் உனக்கு பயம் வராது. மீண்டும் மீண்டும் தவறுகள் செய்வாய். உன் பிள்ளை என்னிடம் இருக்கும் வரையில் உனக்கு அதிகார ஆசை வராது. பயம் இருக்கும்’ இப்படி ஒரு கட்டளையை ஷா ஜகானுக்கு ஜஹாங்கீர் அனுப்பி வைத்தார்.

அந்த நிபந்தனையை ஷா ஜகான் ஏற்றுக் கொண்டார். சரி. எந்த மகனை அனுப்பி வைப்பது என்று யோசிக்கத் தொடங்கினார் ஷா ஜகான். பிரச்சினை இங்கேதான் ஆரம்பம் ஆனது.




ஷா ஜகானுக்கு அப்போது மொத்தம் பத்து மனைவிமார்கள். சொல்லி இருக்கிறேன். மும்தாஜ் மஹால் பேகம் அவருடைய மூன்றாவது மனைவி. மற்ற மனைவிகளை விட மும்தாஜின் மீது மட்டும் ஷா ஜகானுக்கு ரொம்பவும் மதிப்பு மரியாதை. மும்தாஜுக்குப் பிறந்தவர்கள் மொத்தம் ஏழு குழந்தைகள்.

மறுபடியும் அவர்களுடைய பெயர்களைச் சொல்கிறேன். மூத்த மகள் ஜகனாரா பேகம். அடுத்து மூத்த மகன் தாரா ஷீகோ. மூன்றாவது மகன் ஷா ஷூஜா. நான்காவது மகள் ரோஷனாரா பேகம். ஐந்தாவது மகன் ஒளரங்கசிப். ஆறாவது மகன் முராட் பக்ஷ். கடைசி மகள் கௌஹாரா பேகம்.

இந்தப் பிள்ளைகளில் மூத்த மகன் தாரா மீது ஷா ஜகானுக்கு அளவு கடந்த பாசம். முதல் ஆண் வாரிசு இல்லையா. அதனால் தனக்குப் பின் தாரா தான் மொகலாய அரசை ஆள வேண்டும் என்கிற எண்ணமும் ஷா ஜகானுக்கு இருந்தது.

அதேபோல மூத்த மகள் ஜகனாரா மீதும் ஷா ஜகானுக்குக் கொள்ளை ஆசை. அதற்குக் காரணம் முகத் தோற்றத்தில் தன் தாயார் மும்தாஜைப் போலவே ஜகனாரா இருந்தார்.

இந்தக் கட்டத்தில் ஷா ஜகானுக்கு வேறு மாதிரியாகச் சிந்தனை ஓடியது. ’பணயக் கைதியாக உன் மகனை அனுப்பி வை’ என்று தானே அப்பா சொல்லி இருக்கிறார். மற்றபடி எந்த மகனை என்று அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லவில்லையே. 





முதல் மகன் தாரா எனக்கு மிகவும் முக்கியமானவன். வேண்டும் என்றால் மூன்றாவது மகன் ஒளரங்கசீப்பை அனுப்பி வைக்கலாம். இப்படித் தான் ஷா ஜகான் முடிவு எடுத்தார். இந்த முடிவுதான் பிறகு காலத்தில் அப்பனுக்கும் மகனுக்கும் பெரிய விரிசலையே உண்டாக்கி விட்டது. இதை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்.

ஒளரங்கசீப்பை அவசரமாக வரச் சொன்னார். ஒளரங்கசீப் ஓடோடி வந்தார். அவரை அணைத்தவாறு 'மகனே ஒளரங்கசீப், நீ கொஞ்ச காலம் உன் தாத்தாவின் அரண்மனையில் இருந்து விட்டு வா. அங்கேயே நீ படிக்கலாம். சுதந்திரமாகப் போகலாம் வரலாம். உனக்கு எந்தக் குறையும் இருக்காது. போய் வா மகனே போய் வா’ என்று அனுப்பி வைத்தார். ஆனால் எதற்காக அனுப்பி வைக்கிறார் எனும் உண்மையை மட்டும் ஒளரங்கசீப்பிடம் சொல்லவில்லை.

என்னதான் அப்பனுக்கும் மகனுக்கும் சண்டையாக இருந்தாலும் தாத்தாமார்கள் பேரப் பிள்ளைகளை ஒதுக்கி வைக்க மாட்டார்கள். பழி வாங்க மாட்டார்கள். இது உலகம் அறிந்த உண்மை.  எல்லோருக்கும் தெரிந்த உண்மையுங்கூட.

அந்த வகையில் ஜஹாங்கீர் தன் பேரனை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தன் அரண்மனையைச் சுற்றிக் காட்டினார். விளையாடுவதற்குப் பத்து செவிலியர்களை நியமித்தார். மொகலாய சாம்ராஜ்யத்தின் வாரிசு என்றால் சும்மாவா. அப்போது ஒளரங்கசீப்பிற்கு எட்டு வயது.  

இருந்தாலும் ஷா ஜகானுக்கு கூடவே இன்னும் ஒரு செய்தியைத் தந்தையார் ஜஹாங்கீர் அனுப்பி வைத்தார். 'என்னை ஏமாற்ற நினைக்க வேண்டாம். உன்னுடைய மூத்த மகன் தாராவைத் தான் அனுப்பச் சொன்னேன். இவனை அல்ல. பரவாயில்லை. இவனை எனக்குப் பிடித்துப் போய் விட்டது. ஆக அவனையும் உடனடியாக அனுப்பி வை. அப்போதுதான் உன்னை மன்னிக்க முடியும்' என்கிற செய்தி.

ஷாஜகானுக்கு வேறு வழி இல்லை. தன் செல்ல மகன் தாராவை ஜஹாங்கீரிடம் அனுப்பி வைத்தார். இருவரும் தங்கள் தாத்தாவின் அரண்மனையிலேயே வளர்ந்தனர். படித்தனர். 




ஓராண்டு கழித்து 1627-ஆம் ஆண்டில் ஜஹாங்கீர் இறந்து போனார். தாராவும் ஒளரங்கசீப்பும் தங்கள் பெற்றோர்களிடம் திரும்பி வந்து சேர்ந்தார்கள். இந்தச் சமயத்தில் தான் ஒளரங்கசீப் ஒரு முடிவு எடுத்தார்.

'என் தந்தை ஷா ஜகான் என்னிடம் ரொம்பவும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். என்னை விட அவருக்கு அவருடைய மூத்த மகன் தாராதான் முக்கியமானவனாகத் தெரிகின்றான். நான் இனி என் தந்தையின் மீது பாசம் வைக்கப் போவது இல்லை' என்று ஒளரங்கசீப் முடிவு எடுத்தார்.

தன் தாத்தாவிடம் இருந்து திரும்பி வந்த பிறகும் ஒளரங்கசீப்பின் கோபம் அடங்கவில்லை. வளர்ந்து கொண்டே போனது. ஷாஜகானுக்குப் பிரியமான மகன் என்பதால் அண்ணன் தாராவின் மீதும் வெறுப்புணர்வுகள் தலைகால் தெரியாமல் தெறித்து ஓடின.

(தொடரும்)

சான்றுகள்

1. Taj Mahal: Legends: Black Taj Mahal Myth - https://www.tajmahal.org.uk/legends/black-taj.html

2. White Taj Mahal and Black Taj Mahal Story - https://travel.thecreatology.com/stories/white-taj-mahal-and-black-taj-mahal-story/

3. Black TajMahal: It's Reality, The Story of a Second Taj - http://www.liveindia.com/tajmahal/details.html

4. Hansen, Waldemar (1986) [1972 (Holt, Rinehart, Winston)]. The Peacock Throne: The Drama of Mogul India (Second ed.). Motilal Banarsidass. ISBN 9788120802254.