29 ஜூன் 2022

நீல உத்தமன்

ஸ்ரீ மகாராஜா உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா


நீல உத்தமன் அல்லது சாங் நீல உத்தமன் (Sang Nila Utama) என்பவர் ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசர். இவர் 1299-இல் சிங்கப்பூர் சிற்றரசைத் தோற்றுவித்தார். இவரை ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா என்றும் உயர் அரச மொழியில் அழைத்தார்கள்.

திரிபுவனா என்றால் மூன்று உலகங்கள். அந்த மூன்று உலகங்களின் கோமகன் என்பதே அவருக்கு வழங்கப்பட்ட ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா உயர் விருதின் பொருள் ஆகும்.

இவர் சீனா நாட்டுடன் நல்ல வலுவான உறவு முறைகளை ஏற்படுத்திக் கொண்டார். இவரைச் சிங்கப்பூரின் ஆளுநர் என்று 1366-இல் சீனா அங்கீகாரம் செய்தது. இவர் 1372-இல் காலமானார். இவருக்குப் பின்னர் இவருடைய மகன் *பராக்கிரம வீரா* சிங்கப்பூர் அரசப் பதவியை ஏற்றுக் கொண்டார்.

நீல உத்தமனுக்கு ஆண் வாரிசுகள் மூவர் இருந்தனர். அந்த மூவரும் ஒருவருக்கு அடுத்து ஒருவராகச் சிங்கப்பூரை ஆட்சி செய்தனர்.

-ஸ்ரீ பராக்கிரம வீரா ராஜா (1372–1386)

-ஸ்ரீ ராணா வீரா கர்மா (1386–1399)

-ஸ்ரீ மகாரா பரமேஸ்வரா (1399–1401)

1399-ஆம் ஆண்டு நீல உத்தமனின் கொள்ளுப் பேரனாகிய *பரமேசுவரா* அரச பதவி ஏற்றார். இருந்தாலும் அவருடைய ஆட்சி நீடிக்கவில்லை.

1401-இல் மஜாபாகித் அரசு சிங்கப்பூரைத் தாக்கியது. பரமேஸ்வரா ஒருவரை நம்பி முதல் அமைச்சர் பதவியைக் கொடுத்தார். அந்த முதல் அமைச்சர் அவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார்.

அந்த முதல் அமைச்சர் பரமேஸ்வராவுக்கு எதிராகவும் மஜாபாகித் அரசுக்கு உடந்தையாகவும் போனார். சிங்கப்பூரில் ஓர் ஆட்சி கவிழ்ப்பே நடந்தது. அதில் பரமேஸ்வராவின் படைக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

சிங்கப்பூரில் மேலும் இருந்தால் கொல்லப் படலாம் என்ற அச்சத்தில் பரமேஸ்வரா அங்கு இருந்து தப்பிச் சென்றார். மனம் நொந்து போன பரமேஸ்வரா எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மலாயாவின் வட திசையின் பக்கமாகத் தப்பித்துச் சென்றார்.

பெர்த்தாம் நதிக்கரை ஓரத்தில் ஒரு சருகு மான் நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. அதன் பின்னர் பரமேஸ்வரா 1402-இல் மலாக்காவை உருவாக்கினார் என்பது மற்றொரு வரலாறு.

(ஆக்கம்: மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.06.2022

சான்றுகள்:

1. Commonwealth Yearbook 2006|page=348|author=Commonwealth Secretariat|isbn=978-0-9549629-4-4|year= 2004

2. Pusat Rujukan Persuratan Melayu: Dewan Bahasa dan Pustaka

3. Cite web|url=http://www.royalark.net/Malaysia/malacca2.htm|title=Ruling House of Malacca-Johor|publisher=Christopher Buyers|date=October 2008

4. The History of Singapore -books.google.com/books?id=AHF59oExO80C - publisher  = ABC-CLIO;  isbn = 978-0-313-37743-3


28 ஜூன் 2022

சேது ரக்தமரிதிகா

மலையக மண்ணில் இந்திய மண்வாசனைகள்

மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் தானா மேரா எனும் நகரம்; தானா மேரா எனும்  மாவட்டம்; கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த இடத்திற்கு சேது ரக்தமரிதிகா அல்லது சேது இரக்த மரதிகா அல்லது சீது ரக்தமரிதிகா (ChiTu Raktamaritika) எனும் ஓர் இந்தியச் சிற்றரசு பெயர் வைத்து இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.[1]


சேது ரக்தமரிதிகா எனும் அரசு பண்டைய காலத்தில் மலாயா, கிளாந்தான்; தாய்லாந்து தென் பகுதிகள்; ஆகியவற்றை ஆட்சி செய்த சிற்றரசு ஆகும். இந்து, பௌத்த மதங்கள் சார்ந்த அரசு. கி.மு. 100-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சி செய்த அரசு.[2]

தெற்கு தாய்லாந்தின் சொங்கலா (Songkhla) மற்றும் பட்டாணி (Pattani) மாநிலங்களில் சில பகுதிகளை உள்ளடக்கிய அரசு. சிங்கோரா (Singgora) எனும் சொல்தான் சொங்கலா என்று மாறிப் போனது.[3]


சேது ரக்தமரிதிகா சிற்றரசு முன்னர் காலத்தில் சீனா, சாம்பா, பூனான், ஜாவா, சுமத்திரா, மியன்மார், தென்னிந்தியா போன்ற நாடுகளுடன் வணிகம் செய்த அரசு.

சேது ரக்தமரிதிகா சிற்றரசிற்குச் சிவந்த மண் சிற்றரசு (Red Earth Kingdom) என்று மற்றொரு பெயரும் உள்ளது. அதனால் அந்தச் சிற்றரசை மலாய் மொழியில் தானா மேரா (Tanah Merah) என்று அழைத்தார்கள்.[4]

கிளாந்தான் தானா மேரா மாவட்டத்திற்கு சேது ரக்தமரிதிகா சிற்றரசில் இருந்து தான் பெயர் வைக்கப்பட்டது. கி.மு. 100 தொடங்கி கி.பி. 700 வரையில், இலங்காசுகம்; கடாரம் போன்ற ஆளுமைகளுக்கு மிக முக்கியமான வர்த்தக மையமாக சேது ரக்தமரிதிகா சிற்றரசு விளங்கி உள்ளது.


1834-ஆம் ஆண்டில், கெடாவில் ஒரு கல்வெட்டைக் கண்டு எடுத்தார்கள். அதன் பெயர் *புத்த குப்தா கல் வெட்டு* (Buddhagupta Stone found in Kedah). நான்காம் நூற்றாண்டுக் கல்வெட்டு.[7]

இந்தக் கல்வெட்டில் சேது ரக்தமரிதிகாவைப் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. *சிவப்பு பூமி நிலம்* எனும் வாசகம் வருகிறது. இந்த வாசகம் கிளாந்தான் தானா மேரா எனும் இடத்தைச் சுட்டிக் காட்டுவதாகும்.

தாயலாந்து நாட்டில், சொங்கலா மாவட்டத்தில் சொங்கலா (Songkhla) எனும் நகரம் உள்ளது. அந்த நகருக்கு அருகாமையில் சொங்கலா ஏரி உள்ளது இந்த ஏரிக்கு மிக அருகில் பேங் கியோ (Bang Kaeo); சாதிங் பிரா (Sathing Phra) எனும் பழங்காலத்து நகரங்களின் மையம் உள்ளது.[5]

இந்த நகரங்களில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சிவாலயங்களின் இடிபாடுகளைக் கண்டு எடுத்து இருக்கிறார்கள்.


ஜே.எல். மியோன் (J.L. Meons) என்பவர் பிரபலமான வரலாற்று ஆசிரியர். அவர் அவ்வாறு சொல்கிறார்: இந்தோனேசியாவை ஆட்சி செய்த ஸ்ரீ விஜயப் பேரரசு என்பது இந்த கிளாந்தான் சிற்றரசில் இருந்து தோன்றி இருக்கலாம் என்று சொல்கிறார். அதையே அறிஞர் நீலகண்ட சாஸ்திரி அவர்களும் வலியுறுத்துகிறார்.[6]

7-ஆம் நூற்றாண்டில் சீனாவை சூய் வம்சாவழியினர் (Sui Dynasty) ஆட்சி செய்தனர். அவர்களும் தங்கள் காலத்தில் என்னென்ன நடந்தன என்பதைப் பற்றி எழுதி வைத்து இருக்கிறார்கள்.

அவர்களின் காலக் குறிப்புகளில் இருந்து: கிளாந்தானில் சேது ரக்தமரிதிகா எனும் ஒரு சிற்றரசு இருந்தது. அந்த அரசு நன்கு வளர்ச்சி அடைந்த அரசாக விளங்கியது என்று சூய் வம்சாவழி காலச் சுவடுகளில் (Chinese Sui Dynasty Annals) எழுதப்பட்டு உள்ளன.[7]

இந்தச் சிற்றரசுதான் பின்னர் காலத்தில் ஸ்ரீ விஜய பேரரசாக உருமாற்றம் பெற்று இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

சேது ரக்தமரிதிகா எனும் பெயர் பின்னர் ஸ்ரீ விஜயா மாலா (Sri Wijaya Mala) என்று மாற்றப்பட்டு இருக்கலாம். ஸ்ரீ விஜயா மாலா உருவான ஆண்டு கி.மு. 667. அதன் தலைநகரத்தை வலாய் (Valai) என்று அழைத்து இருக்கிறார்கள்.[8]

(ஆய்வு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்றுகள்:

1. Museums, History and Culture in Malaysia|year=2014|publisher=NUS Press|isbn=99-716-9819-6|pages=61-62

2. Dougald J. W. O'Reilly; Early Civilizations of Southeast Asia|year=2007|publisher=Rowman Altamira|isbn=0-7591-0279-1

3. The Emporium of the World: Maritime Quanzhou, 1000-1400|publisher=Brill|date=2001| pages=309–393| chapter=Behind the Shadows: Archaeological Data on Two-Way Sea Trade Between Quanzhou and Satingpra, South Thailand, 10th-14th century| series=Volume 49 of ''Sinica Leidensia''|isbn=90-04-11773-3

4. The Malay Peninsula: Crossroads of the Maritime Silk-Road (100 Bc-1300 Ad) |author= Michel Jacq-Hergoualc'h |translator= Victoria Hobson |editor= BRILL |pages= 411–416 |year= 2002 |isbn=90-04-11973-6

5. Southeast Asia-China interactions: reprint of articles from the Journal of the Malaysian Branch, Royal Asiatic Society|year=2007|publisher=Malaysian Branch of the Royal Asiatic Society|isbn=967-9948-38-2

6. The Indianized States of Southeast Asia|year= 1968|publisher= University of Hawaii Press|isbn= 978-0-8248-0368-1

7. J.L. Moens; Srivijaya Java en Kataha|year=1937|publisher=TBG

8. Keturunan raja-raja Kelantan dan peristiwa-peristiwa bersejarah|year=1981|publisher=Perbadanan Muzium Negeri Kelantan|oclc=19245376


04 மே 2022

மலாக்கா எம்.ஜி.ஆர். இரயில் பாதை - 1903

மலாக்காவில் 1905-ஆம் ஆண்டில் முதன்முதலாக ஓர் இரயில் பாதையை அமைத்தார்கள். அந்தப் பாதையின் பெயர் எம்.ஜி.ஆர். இரயில் பாதை. அந்தப் பாதையில் ஓடிய இரயிலின் பெயரும் எம்.ஜி.ஆர். தான்.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். பிறப்பதற்கு முன்னதாகவே அவருடைய பெயரில் இரயில் ஓடி இருக்கிறது. அதுவும் வரலாற்றுப் புகழ் மலாக்காவில் ஓடி இருக்கிறது. ஆச்சரியப்பட வேண்டாம். உண்மை. தொடர்ந்து படியுங்கள்.

மலாயாவின் முதல் இரயில் பாதை தைப்பிங் - போர்ட் வெல்ட் இரயில் பாதை (Taiping – Port Weld railway). 137 ஆண்டுகளுக்கு முன்னால் 1885-ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.

மலாக்கா இரயில் நிலையம் - 1910.
(நன்றி: சிங்கப்பூர் தேசிய நூல்நிலையம்)


அதன் பின்னர் ஏழு ஆண்டுகள் கழித்து, 1903-ஆம் ஆண்டில், தம்பின், புலாவ் செபாங் நகரத்தில் இருந்து மலாக்காவுக்கு 32 கி.மீ. (21 மைல்கள்) தொலைவிற்கு ஓர் இரயில் பாதை போடப் பட்டது.

1900-ஆம் ஆண்டில், அப்போதைய மலாக்கா அரசாங்கத்திற்கு அந்த இரயில் பாதை அமைப்பதற்கான குத்தகை கிடைத்தது. அதற்கு மலாக்கா அரசாங்க இரயில் பாதை (Malacca Government Railway) என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த மலாக்கா அரசாங்க இரயில் பாதையின் சுருக்கம் M.G.R.

அதற்கு மலாக்கா அரசாங்கம், எம்.ஜி.ஆர். இரயில் பாதை என்று முதலில் பெயர் வைத்தது. அந்தப் பாதையில் முதன்முதலில் ஓடிய இரயிலின் பெயரும் எம்.ஜி.ஆர். தான். இரயிலின் செல்லப் பெயர் ”லேடி கிளார்க்” (Lady Clarke).

மலாக்கா எம்.ஜி.ஆர். இரயில் 2 .  Steam engine used by M.G.R.
The Malacca Government Railway had 4 steam locomotives. 
(நன்றி: மலாயா இரயில்வே)

பின்னர் 1905-ஆம் ஆண்டு அந்த எம்.ஜி.ஆர். இரயில் பாதை, (Federated Malay States Railway - FMSR) எனும் மலாயா கூட்டரசு இரயில் சேவையுடன் இணைக்கப் பட்டது.

பழைய சரக்கு வண்டி, மாட்டு வண்டி, குதிரை வண்டிப் பாதைகளுக்குப் பதிலாக தம்பின் - மலாக்கா இரயில் பாதை அமைக்கப் பட்டது. மலாக்கா எம்.ஜி.ஆர். இரயில் பாதையில் இருந்த இரயில் நிலையங்கள்:

தம்பின் - 0.0 கி.மீ.
தஞ்சோங் ரிமாவ் -  6.4 கி.மீ.
காடேக் - 8.1 கி.மீ.
அலோர் காஜா  - 12.9 கி.மீ.
மலாக்கா பீண்டா - 14.5 கி.மீ.
பெலிம்பிங் - 19.3 கி.மீ.
பெலிம்பிங் டாலாம் - 20.9 கி.மீ.
டுரியான் துங்கல் - 24.1 கி.மீ.
பத்து பெரண்டாம் - 29.0 கி.மீ.
மலாக்கா - 35.4 கி.மீ.

அனாதையாய் நிற்கும் அலோர் காஜா அறிவிப்புத் தூண்

இந்த இரயில் பாதை கட்டுமானத்தின் தலைமைப் பொறியியலாளர் ஜி. பிரேயர் (G. W. Fryer, Chief Resident-Engineer). கட்டுமானச் செலவு $1,349,505. அப்போதைய 1900-ஆண்டுகளின் மலாயா டாலர் கணக்கு. 1905 டிசம்பர் 4-ஆம் தேதி திறப்புவிழா.

இந்தப் பாதை அமைப்பதற்கு முன்னர் மலாக்காவில் இருந்து பினாங்கிற்கு நீராவிக் கப்பல்கள் மூலமாகச் சென்றார்கள். மூன்று நாட்கள் பிடித்தன.

இந்த இரயில் பாதை அமைத்த பின்னர் முதல் நாள் பிற்பகல் 1 மணிக்கு மலாக்காவில் இரயில் ஏறினால் மறுநாள் காலை 6.20-க்கு பினாங்கைப் பிடித்து விடலாம். 17 மணி நேர இரயில் பயணம்.

1890-ஆம் ஆண்டுகளில் சுங்கை பூலோ அருகில்
இரயில் பாதையைக் கட்டி முடித்த மலாயா தமிழர்கள்.
(நன்றி: மலாயா இரயில்வே)

இப்போது ஒன்றும் சொல்ல வேண்டாம். மலாக்கா பத்து பிரண்டாம் விமான நிலையத்தில் விமானம் ஏறினால் 50 நிமிடங்களில் பினாங்கில் இறங்கி விடலாம்.

அப்போது மலாக்காவிற்கும் பினாங்கிற்கும் 4 இரயில்கள் ஓடி இருக்கின்றன.

1. அன்சலெட் (Hunslet 850; FMSR Class A) - 1904 - 1924 வரையில்

2. அன்சலெட் (Hunslet 851; FMSR Class A) - 1925 - 1930-ஆம் ஆண்டு சயாம் நிலக்கரி சுரங்கத்திற்கு விற்கப்பட்டது.

3. கிட்சன் (Kitson 4289; FMSR Class G) - 1930 - 1931-ஆம் ஆண்டு வரையில்

4. கிட்சன் (Kitson 4290; FMSR Class G) - 1930 - 1934-ஆம் ஆண்டு வரையில்

மலாக்கா இரயில் நிலையம் - 1903
(நன்றி:
FMSR
)

இதற்குப் பின்னர் 8 ஆண்டுகளுக்கு இரயில்கள் ஓடி இருக்கின்றன. அது ஒரு நீண்ட பட்டியல். ஜப்பான்காரர்கள் வந்தார்கள். மலாக்கா எம்.ஜி.ஆர். இரயில் சேவைக்கு ஒரு வழியும் பண்ணி விட்டார்கள்.

அப்போது இருந்த இரயில் வண்டிகள் நீராவி இயந்திரங்கள் மூலமாக இயங்கின. நிலக்கரி அல்லது கட்டைகளைப் போட்டு எரிய வைத்து நீராவியை உண்டாக்கி இரயிலை ஓட வைத்தார்கள். அந்த நீராவி இயந்திரங்களைத் தமிழர்கள் தான் பராமரித்தார்கள்.
F.M.S.R - Tampin - Melaka Railway Line.
(நன்றி: மலாயா இரயில்வே)

இரயிலுக்கான நீராவிப் பெட்டிகள் இரயிலின் முன்பகுதியில் இருக்கும். அதில் வேலை செய்த தமிழர்கள் சிலர் கட்டைகளால் நசுக்கப்பட்டு இறந்து இருக்கிறார்கள். அப்போதே தமிழர்கள் இந்த நாட்டிற்காக உயிரைப் பணயம் வைத்து விட்டார்கள்.

மலாக்கா பீண்டா பகுதியில் பழைய இரயில் பாலம்.
(நன்றி: மலாக்கா கினி)


மலாயாவின் முதல் இரயில் பாதையை உருவாக்கிக் கொடுத்தவர்கள் மலாயாவின் மூத்த தமிழர்கள். உதிர்ந்து போன மூத்த முன்னோர்கள்.

பழைய அலோர் காஜா இரயில் நிலையத்தின் இன்றைய நிலைமை.

1942-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் வந்தது. ஜப்பானியர்கள் மலாயாவுக்கு வந்தார்கள். மலாக்கா இரயில் பாதைகளில் இருந்த இரயில் தண்டவாளங்களை எல்லாம் பெயர்த்து எடுத்தார்கள். அப்படியே மூட்டைக் கட்டி சயாம் மரண இரயில் பாதை கட்டுவதற்கு ’பார்சல்’ பண்ணி விட்டார்கள்.

ஒரு சில தண்டவாளங்களே நினைவுச் சின்னங்களாக இன்னும் இருக்கின்றன. சிதைந்து போன தண்டவாளங்கள் அலோர் காஜா; பெலிம்பிங் டாலாம்; டுரியான் துங்கல்; பத்து பெராண்டாம்; பாச்சாங் போன்ற இடங்களில் இன்றும் உள்ளன. 
 
டுரியான் துங்கல் பகுதிகளில் பழைய இரயில் தண்டவாளங்கள் இன்னும் உள்ளன.
மலாக்கா இரயில் நிலையத்தில் உள்நாட்டுச் சேவையாளர்கள் - 1920.
(நன்றி: மலாயா இரயில்வே)

மலாக்கா இரயில் நிலையம் இப்போது இல்லை. காலத்தின் கோலத்தில் கரைந்து விட்டது. அந்த நிலையம் பழைய போனா விஸ்டா (Bona Vista Road) சாலையில் இருந்தது. இந்தச் சாலை இப்போது ஜாலான் அங் துவா (Jalan Hang Tuah) என்று அழைக்கப் படுகிறது.

மீண்டும் புதிதாக ஓர் இரயில் பாதையை அமைப்பதற்கு மலேசிய இரயில் சேவை நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. இருப்பினும் மிகுதியாகச் செலவினங்கள் ஏற்படலாம் என்பதால் அந்தத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

108 ஆண்டுகள் பழமை வாய்ந்த புலாவ் செபாங் இரயில் நிலையமும் கடந்த 06.02.2013-ஆம் தேதி உடைக்கப் பட்டது. மலாக்காவிற்கு மறுபடியும் இரயில் சேவை கிடைக்கும் என்பது நிறைவேறாத ஒரு கனவு.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.05.2022


சான்றுகள்:

1. http://www.malayarailway.com/2009/01/fmsr-tampin-melaka-line.html

2. https://great-railway-journeys-malaysia.weebly.com/malacca.html

3. https://www.thestar.com.my/metro/metro-news/2020/09/01/old-railway-line-in-melaka-to-become-new-attraction

4. https://babanyonyamuseum.com/inter-war-years/